• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

வண்ண வண்ண மனிதர்கள்!

அமைதியான பேராசிரியர்.

பேராசிரியர் ஹனுமந்த ராவ். எளிமையான தோற்றம்; சிறிய வடிவம்; அவரின்

கண்ணாடியே சொல்லும், அவர் கணக்கில் புலி என்று! பொறுமையாகப் பாடம் சொல்லிக்

கொடுப்பார். எல்லோரும் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதில் மிக்க ஆர்வம் கொண்டவர்.

பெண்களிடம் மிகுந்த மரியாதையாகப் பழகுவார்.


முதுகலைப் பட்டத்தை நான் கல்லூரியிலேயே வாங்கிக்கொண்டேன். சிலர் 'மெட்ராஸ்'

சென்று வாங்கினார்கள்! பரீட்சை முடிந்தவுடனே, என் வீணைப் பயிற்சியை மும்மரமாக

ஆரம்பித்தேன். அம்மா என்னை Typing institute இல் சேர்த்துவிட்டார். எல்லாக்

கலைகளும் கற்பிக்கும் ஆவல் அவருக்கு! பேராசிரியர் ராவ் அவர்களிடம் சென்று விடை

பெற்றபோது, மேற்கொண்டு என்ன செய்வதாக உத்தேசமெனக் கேட்டார். என் வீணை

பற்றியும், தட்டெழுத்து வகுப்பு பற்றியும் சொன்னவுடன், அந்த அமைதியான மனிதருக்குக்

கோபம் வந்துவிட்டது! 'இத்தனை நன்றாகப் படித்துவிட்டு, PhD படிக்காமல் என்ன

செய்கிறீர்கள் அம்மா?' என்று கேட்டார். ஒரு புன்னகையை பதிலாகத் தந்துவிட்டு விடை

பெற்றேன்! எனக்கோ சங்கீதத்தில்தான் ஈடுபாடு. என்ன செய்வேன்? அவரிடம் பேசியதன்

விளைவு என்னவென்றால், High speed test எடுத்துக்கொள்ள என் தட்டெழுத்து ஆசிரியர்

சொன்னதை, மறுத்தேன்! ஆனால், இத்தனை ஆண்டுகள் கழித்தும், என் தட்டெழுத்துப்

பயிற்சிதான் என் கணினி வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கிறது! எந்தக் கலை கற்றாலும்,

என்றேனும் கட்டாயம் உபயோகமாகும்!

வாழ்க கலைகள் யாவும்! :hail: . . . :angel:
 
கணிதமும், சங்கீதமும்!

கணிதம் ... ஏன் கணிதம், சங்கீதத்தில் வண்டி ஆசையை வைத்துக்கொண்டு?

சொல்லுகிறேன். எனக்கு தைரிய லக்ஷ்மி கொஞ்சம் Weak . கணக்கு கொஞ்சம் Strong.

பட்டப் படிப்பில் சேர, சங்கீதக் கல்லூரியில் நுழைந்தால், சரித்திரம் மீண்டும் துரத்துமே!

நானோ, எப்போது பள்ளிப் படிப்பை முடித்து, 'அதற்கு' ஒரு கும்பிடு போடுவோம் என்று

எதிர்பார்த்தவள் ஆயிற்றே! மீண்டும், தமிழில் படித்த பாடங்களின் தொடர்ச்சியை,

ஆங்கிலத்தில் படிக்க வேண்டும் என்றால், யாரால் முடியுமாம்? சரித்திரம் படிக்குமளவு,

தைரிய லக்ஷ்மி ஊக்கம் கொடுக்கவில்லை! தவளை, எலி இன்னபிற அறுக்கும் அளவும்

'தை - ல' கிடையாது! அப்போதைக்குக் கணக்கும், அதன் சகோதரிகளும், நன்கு

ஒத்துழைத்ததால், கணிதத்தில் நுழைந்தேன்! ஏதோ ஒரு சின்ன சாதனை செய்ததுடன்

முடித்ததில், ஆனந்தம்தான்! பிறகென்ன; சங்கீத உலகிலே நுழைந்துவிட்டேன்!


பட்டிக்காட்டில், எந்த ஆசிரியர் வருவார்? எங்கள் மிலிடரி மாமா, சென்னையில் இருந்த

தன் Apartment - இல் குடியேறிக்கொண்டு, இசை பயில ஊக்குவிக்க, பெற்றோர்

மறுத்தனர்! அப்பாவின் தெய்வம் போன்ற தொழிலை, விடமுடியுமா? எங்கள் ஊருக்கு

வந்த, வயலின் வெங்கட்ராம ஐயரிடம் கொஞ்சம் பயிற்சி எடுத்தேன். 'மோட்டார் மூஞ்சி'

வைக்காமல் இருக்கவும் கற்றேன்! பிறகு, திரு சிட்டிபாபு அவர்களின் சந்திப்பும்,

சான்றிதழும்! வாரியார் ஸ்வாமிகள் ஒரு சொற்பொழிவு செய்ய எங்கள் ஊருக்கு வர,

அவரின் ஆசி பெற, ஒரு வீணை நிகழ்ச்சி, அவர் முன்னிலையில் வாசித்து, அவரின்

ஆசியுடன் சான்றிதழும் பெற்றேன். அந்தச் சான்றிதழ்கள்தான், நான் AIR

திருவனந்தபுரத்தில் தேர்வு பெறவும், தமிழ் நாடு இயல் இசை நாடக மன்றத்தின் இளம்

கலைஞராகத் தேர்வு பெறவும் உதவின. ஏறக்குறைய ஒரே சமயத்தில் வந்த இந்தத்

தேர்ச்சிகள், நான் மூன்றாவது முறை சாதித்து மகிழ்ந்த தருணம்!


திருமணம் ஆன பின், விசாகை AIR - இல் ஆறு ஆண்டுகள் வீணை நிகழ்ச்சிகள்

தொடர்ந்தன. சிங்காரச் சென்னைக்கு வந்த பின், இசை ஆசிரியையாகவே மாறிவிட்டேன்!

எனக்கு எத்தனை குழந்தைகள் வந்துவிட்டனர், இத்தனை ஆண்டுகளில்! 'பாட்டு மிஸ்'

என்றும் Music Mam என்றும் அவர்கள் அன்புடன் அழைப்பதில்தான், பேரின்பம் கிடைக்கிறது!


இசையே, இறையை அடையும் எளிய மார்க்கம் அல்லவா? வாழ்க இசைக் கலை!

:hail: . . . :thumb: . . . :hail:
 
மடி, ஆசாரம்!

அப்பாவின் மருத்துவத் தொழிலால், எங்கள் வீட்டில் அத்தனை மடி ஆசாரம் கிடையாது!

தினம் இரு வேளை குளியல்; இறை வழிபாடு போன்றவை உண்டே தவிர, ஈரத்

துணியுடன், கொடியில் முந்தின நாள் துவைத்து உலர்த்திய 'மடி'யைக் குச்சியால்

எடுத்துச் செல்லுவது, போன்ற விஷயங்கள் தெரியாது. நான் 'வாக்குப் பட்ட' வீட்டிலோ

எதிர்மறை. ஒரு டம்ளர் தண்ணீரை பக்கத்தில் வைத்துக் கொண்டு, அதில் இடது கையை

அடிக்கடி நனைத்துகொண்டேதான், 'சுய பரிமாறல்' நடக்கும். (அதே தண்ணிரை அவர்கள்

குடிக்கும்போதுதான், எனக்கு என்னவோ செய்யும்!) ஊறுகாய் பாட்டில் ஸ்பூனைத்

தண்ணிக் கையால் தொட்டால், ஊறுகாய் கெட்டுப் போகுமோ என்று எனக்கு 'டென்ஷன்'

ஏறும்! அவர்களின் பழக்க வழக்கம் தெரிந்துகொள்ளுமுன், நான் அடித்த லூட்டிகள் பற்பல!


அங்கு சென்ற பின், மறு நாள் காலை எழுந்து, பல் துலக்கி, முகம் கழுவி வந்தவுடன்,

சூடான காபி; 'தூக்கிச் சாப்பிடு அம்மா!' என்ற instruction - னுடன் கிடைத்தது! பின்,

'குளித்துவிட்டு இட்லி சாப்பிடறேன்', என்று சொல்லிச் சென்றுவிட்டேன். குளித்துவிட்டு

வந்ததும், ரொம்ப சுத்தக்காரி என்று என் நினைப்பு! அவர்களுக்கோ நான் 'விழுப்பு'!

கொடியில் கிடந்த 'மடி'யைக் கட்டவில்லையே, நான்! இட்லி வார்க்க ஒரு துணி வேண்டும்

என்று அவரின் அம்மா கேட்க, நான் அலமாரியில் இருந்த வேஷ்டியிலிருந்து ஒரு சதுரத்

துண்டு கிழித்து வருமாறு பணிக்கப் பட்டேன், அவரின் தங்கையால். நான் அப்படி ஒரு

துண்டை எடுத்து வந்து, அம்மாவிடம் நீட்டினேன்! அவரோ ஒரு அடி பின்னால்

போய்விட்டு, அதை நீரில் நனைத்துக் கொடுக்கும்படிக் கேட்டார். அவ்வாறே செய்தபின்,

மீண்டும் அவரிடம் கொடுத்தேன். அதைத் தரையில் போடும்படிச் சொல்லிவிட்டு, கீழே

போட்டதும் அதன்மேல் ஒரு சொம்பு நீரை விட்டு அலசி, பின் எடுத்துக் கொண்டார்!

'ஓஹோ! இதுதான் மடியோ?' என்று ஆச்சரியித்தேன்!


மதியம் சாப்பிடும் நேரம்; நானே பரிமாறுகிறேன் என்று அம்மா சொன்னதும், நிம்மதிப்

பெருமூச்சு விட்டு அமர்ந்தேன். 'அப்பளம் வாட்டிப் போடவா', என்று கேட்டதும், சரி என்று

ஒத்துக் கொண்டேன்; புது நாட்டுப் பெண், 'வேண்டாம்' என்று சொல்லக் கூடாதோ,

என்னமோ, என்று எண்ணி! 'கும்முட்டி' அடுப்புக் கனலில் சுட்டு, அதை எடுத்து வீசினார்.

(எங்கள் இருவருக்கும் இடைவெளி ஐந்து அடி இருக்கும்; பெரிய்ய்ய சமையலறை

அல்லவா, பண்ணையார் வீட்டில்!) இருவருக்கும் இடையில் அப்பளம் விழுந்தது என்

இடப் புறமாக! நான் இடது கையால் எடுக்கப் போனதும், 'இடக் கையில் எடுக்காதேம்மா'

என்றார். வலக் கையால் எடுக்க வேண்டுமோ என்று வளைந்து திரும்ப, 'அந்தக் கை

எச்சில் அல்லவோ?' என்றார்! நான் சிலைபோல் அமர்ந்தேன், அவர் எழுந்து வந்து, அதை

எடுத்துப் போடும் வரை!


தொடரும்............. மடி!! :ballchain:
 
மடி, ஆசாரம் ..... (தொடர்ச்சி)

ஒரு வழியாகச் சாப்பாட்டுக் கடை முடிய, அடுத்த பிரச்சனை ஆரம்பம்! சாப்பிட்ட இடம்

துடைக்கும் வேலைதான் அது! ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டுவந்து சாப்பிட்ட

இடத்தில் ஊற்றிக் கையால் 'எச்சில் இட' ஆரம்பித்தேன். 'அம்மா! கொஞ்சம் சாணம்

கொண்டு வந்தியா?' என்று கேள்விக் கணை வந்து விழுந்தது! அடக் கடவுளே! அதை

வேறு கையால் எடுக்க வேண்டுமா? பின் கட்டில், ஒரு கல்லின் மீது ஒரு உருண்டை fresh

சாணம் மணத்தது! எங்கள் தொழுவத்தில் இரண்டு பசுமாடுகள் உண்டு! இரண்டாம்

பின்கட்டுக்குச் சென்று, செம்பருத்திச் செடியின் ஒரு சின்ன இலையைப் பறித்து, அதை

மடித்துச் சாணம் எடுத்து, கைக்கும் சாணத்துக்கும் இடையில் இலை வருமாறு பிடித்து,

என் பணியைச் செவ்வனே செய்து முடித்தேன்! பின் நாலு தடவை dettol சோப்பு இட்டுக்

கையைக் கழுவி வந்தேன்! ஒரு பெரிய ordeal முடிந்தது!


மாலை வேளையில், புதுச் சாதம் தன் பிள்ளைக்கு மட்டும் வேண்டும் (எப்போதுமே fresh

சாப்பாடுதான் ஐயாவுக்கு வேண்டும்.... இன்று வரை சமாளித்துவிட்டேன்!) என்று

சொல்லிவிட்டு, கும்முட்டி அடுப்பில் தணல் இட்டு, அரை ஆழாக்கு அரிசியை வெண்கலப்

பானையில் வேகவைத்துவிட்டு, அம்மா தன் பெண்ணுடன் கோவிலுக்குச்

சென்றுவிட்டார்; போகும்போது, சாதம் வெந்ததும் இறக்கி வைக்குமாறு, என்னிடம்

வேண்டுதல்! ரொம்பப் பெருமையாகச் சரியென்று சொன்னேன். இதற்கு இடையில்,

ஆண்டாள் என்று ஒரு பெண் வந்து அடுப்புத் திட்டு முழுதும் சாணம் இட்டுத் துடைத்து,

கோலம் போட்டுவிட்டுச் சென்றாள். அவள் போன சில நொடிகளில், சாதம் வெந்து

வாசனை வர, நான் அதை மெதுவாக இறக்கி, துடைத்த அடுப்பு மேடை மேல் வைத்தேன்!

கோவிலிலிருந்து அம்மா வந்ததும் அதிர்ந்து போய்விட்டார், நான் செய்த காரியத்தைப்

பார்த்து. 'அம்மாடி! அடுப்பை பூராவும் 'பத்து' ஆக்கிட்டியே! மறுபடியும் சாணம் இட்டுத்

துடைக்கணுமே!' என்றார். எனக்கு கிலி பிடித்தது! எப்படியோ இலை சகிதம் மத்தியானம்

துடைக்கும்போது சமாளித்தேன். இப்போது அடுப்பு மேடை முழுதும் (ஏழு அடி நீளம்

இருக்கும்!) துடைக்க என்ன செய்வேன்! ஓடினேன், ஆண்டாளிடம் அபயம் கேட்டு! நல்ல

வேளை, அந்தப் பெண் சிரித்துக் கொண்டே வந்து என்னைக் காப்பற்றினாள்; பிழைத்தேன்!


தொடரும்......
 

மடி, ஆசாரம் ..... (தொடர்ச்சி)


அடுத்த நாள்தான் அம்மா குளிக்கப் போனதைப் பார்த்தேன்! ஒரு 'கட்டிக்கொண்டு

குளிக்கும்' புடவைத் துண்டு; அதை எடுத்துச் சுற்றிக் கொண்டு, கிணற்றடியில் போய்

இரண்டு வாளித் தண்ணீர் இறைத்து, மேலே ஊற்றிக் கொண்டார்; சோப்பு, மஞ்சள்

இன்னபிற தேய்த்தபின், மீண்டும் இரண்டு வாளி நீர் அபிஷேகம். குளியல் முடிந்தது.

நனைத்து வைத்திருந்த ஒன்பது கெஜப் புடவையையும், ஜாக்கெட்டையும், ஈரிழைத்

துண்டையும் துவைத்துப் பிழிந்து எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு, உள்ளே கொடி

கட்டிய இடத்திற்கு வந்தார்; ஒரு குச்சியால் காய்ந்த 'மடியை' எடுத்துக் கீழே வைத்துக்

கொண்டபின், ஈர மடியை மடித்து உலர்த்தினார்; பின் தழையத் தழைய மடிசார் உடுத்தி,

தலையில் காய்ந்த மடித் துண்டைக் கட்டிக் கொண்டு சமையல் அறையில் புகுந்தார்.

இதையெல்லாம் நான் எங்கே செய்தேன், சுத்தம் என்று சொல்லிக்கொள்ள? அதனால்தான்,

அவர்கள் மடி; நான் விழுப்பு; இப்போது புரிந்தது!


இப்போதைக்கு இதெல்லாம் பழகவே முடியாது என்று தோன்றியதால், நான் சுவாமி

அறைக்கு வெளியே நின்றே நமஸ்காரம் செய்து வந்தேன்! அன்று பழநிக்குச் சென்று

தரிசனம் செய்து வரலாமென தீர்மானம் செய்ததால், காலை சிற்றுண்டிக்குப் பின்

புறப்பட்டேன் என்னவருடன். விரைவு பஸ் கிடைத்ததால், தரிசனமும் உச்சி வெய்யிலுக்கு

முன்னே முடிந்தது. மலையிலிருந்து இறங்கியபின், வீட்டுக்குப் போய்ச் சாப்பிடலாமென

எண்ணி, பஸ் ஏற வந்தோம். ஆனால் வாடிப்பட்டி வரை போகும் பஸ் தான் இருந்தது;

சோழவந்தானுக்கு இல்லை! நேரம் வீணாக்க வேண்டாம் என்று, அதில் ஏறினோம்.

வாடிப்பட்டி வந்து சேர்வதற்குள், பசித்துப் பிராணன் போய்விட்டது! இனிமேல் என்னால்

பசி தாங்கவே முடியாது என்று சொன்னேன்; ஒரு ஹோட்டலுக்குச் சென்று மசால்

தோசைகள் வாங்கிப் பசியாறினோம்! வீடு வந்து சேர மாலை ஏழு மணி. வந்தவுடன், கை

கால் முகம் கழுவி வர, அம்மா என்னிடம், 'காலைலே சாப்பிட்டது! பயங்கரப்

பசியாயிருக்கும் ரெண்டு பேருக்கும். இலையைப் போட்டா, சாதம் பரிமாறறேன்',

என்றார். நான் உடனே, 'பசியே இல்லை அம்மா! நாங்க வாடிப்பட்டியிலே மசால் தோசை

சாப்பிட்டோமே!' என்றேன். அருகில் இருந்த என்னவர் முறைத்தார்! கொஞ்ச நேரம்

சென்றபின், 'ஏன் சாப்பிட்ட விஷயத்தோட நிறுத்தினம்மா? ஹோட்டல் பேரும், அட்ரஸும்

சொல்லறதுதானே!' என்று கிண்டல் அடித்தார்! என்னடா இது! ஹோட்டல்லே

சாப்பிட்டதைச் சொல்லக் கூடாதோ? விசித்திரம்தான் இவர்கள் வீடு!


தொடரும்......... :peep:
 

'நான் ரெடி! நீங்க ரெடியா?' என்று சென்னை T V நிகழ்ச்சிகளில் கேட்பார்கள்!

நான் கேட்கிறேன்,'நீங்கள் ரெடி! நான் ரெடியா?' :bolt:
 
மடி, ஆசாரம் .... (தொடர்ச்சி)

மறுநாள் ஒரு தீர்மானத்துடன் எழுந்தேன், அன்று ஒரு லூட்டியுமே செய்யக் கூடாது என்று

எண்ணியபடி! விதி யாரை விட்டது? ஒரு எதிர் வீட்டு மாமி உருவில் வந்தது! அந்த மாமி

அம்மாவிடம் வந்து ஏதோ 'காதைக் கடித்தார்'. 'அதுக்கென்ன! நாட்டுப் பொண்ணே

செய்வாளே!' என்று சொல்லியபடி, அம்மா என்னை நோக்கி வர, கொஞ்சம் நடுக்கம்

வந்தது. நடுக்கத்தை மறைக்க, ரொம்ப சகஜமாகச் சிரித்தபடி, என்னவென்று கேட்டேன்.

அந்த மாமி கையிலிருந்த சின்னச் சொம்பை வாங்கி என்னிடம் கொடுத்து, 'அம்மாடி!

கொஞ்சம் கோமியம் கொண்டு வரியா?' என்று கேட்டார். அது என்னவென்று என் grey

matter இல் எட்டவில்லை! ரொம்ப வெகுளியாக முகத்தை வைத்துக் கொண்டு, அதன்

அர்த்தம் என்னவென்று கேட்டேன். அதுதான் மாட்டின் No 1 என்று அறிந்ததும், நடுக்கம்

அதிகம் ஆனது! மாடு பெருமூச்சு விட்டாலே நான் நடுங்குவேன். அது 1 போகும்வரை

அருகில் நின்று............ இதெல்லாம் முடியவே முடியாது! 'அம்மா! எனக்கு மாட்டைக்

கண்டாலே பயம்!' என்று சொல்லி மறுத்தேன். 'இதுக்கெல்லாம் பயமா?' என்று கேட்டுச்

சிரித்தபடி, தானே கொல்லைப் புறம் சென்றார். இன்னும் இரண்டு நாளில் விசாகைக்குப்

புறப்பட வேண்டும். பழக்கம் இல்லாத மாட்டிடம் (இதுவரை ஒரு மாட்டிடமும் பழக்கம்

இல்லை என்பது வேறு விஷயம்) உதை வாங்கி விழுந்தால், என்ன ஆவது!


நான் திணறும் திணறலைக் கண்டு, என்னவரின் தங்கைக்கே பாவமாகத் தோன்றி

இருக்குமோ, என்னமோ! அன்று மாலை, சினிமாவுக்குப் போகலாம் என்று என்னை

அழைத்தாள், 'நான் நேராப் போவேன்; என் பின்னாலே சமத்தா வாங்கோ' என்று

எச்சரிக்கை விடுத்தபடி! நான் சந்தோஷமாக அவளுடன் ஆவலுடன் புறப்பட, திண்ணை

'பென்ச்'சில் அப்பா அமர்ந்து, வெத்தலை இடித்துக்கொண்டு இருந்தார். தங்கையின்

எச்சரிக்கையை மீறி, நானே சென்று அவரிடம், 'அப்பா! அவ கூட நான் சினிமாவுக்குப்

போறேன்!' என்று சொல்லிச் சிரித்தேன்! அவர் மெளனமாக ஒரு பார்வையை வீசிவிட்டு,

மீண்டும் தன் பணியைத் தொடர்ந்தார். அவ்வளவுதான்! தங்கை சினிமா தியேட்டருக்குச்

செல்லும் வரை என்னைப் படுத்திவிட்டாள், சொன்னதைக் கேட்காமல் 'அதிகப் பிரசங்கம்'

செய்ததற்கு! சினிமா முடிந்து வந்ததும், ஓசைப் படாமல் பூனைபோலச் சென்று, உணவு

முடித்து உறங்கச் சென்றேன்!


முப்பது ஆண்டுகளுக்கே மேல் அடிக்கடி ஊருக்குச் சென்று பழகியதால், இப்போதெல்லாம்

எனக்கு பயமே கிடையாது. என்னால் முடியாத வேலைகளுக்கெல்லாம், சில பெண்களைத்

தயார் நிலையில் வைத்துள்ளேன், சின்னப் பரிசுப் பொருட்கள் (லஞ்சம் என்று

எண்ணாதீர்கள்!) கொடுத்து! என்ன கேட்டாலும் 'ஓகே மன்னி!' என்றபடி, அவர்கள்

ஓடிவந்து செய்வார்கள். ஆனால், இப்பொழுது மாட்டுத் தொழுவம் காலிதான்!


:becky: . . . :dance:
 
post #111 (naamam)

raji,

another hilarious post. fell down laughing and hurt myself :)

we used to have a மொட்டைப்பாட்டி next door, who used to rush out when she saw the பால் காரன் cows did #1, cup her hands and drink the liquid, and undo her head cover, and rub her wet hand over the shaved hand.

in a way, now when i look back, i weep. during those times, we used to mock and laugh. in groups. :(
 
தமிழில் காமெடி நன்றாக வருவதால், மீண்டும் தமிழ்த் தாய்!

எங்கள் ஊரில், ஒரு ஹோமத்திற்கு வேண்டிய 'பஞ்சகவ்ய' சாமான்களை ( பால், தயிர்,

நெய், கோமியம், சாணம்) கொண்டுவர ஒரு சிஷ்யனிடம் சாஸ்திரிகள் சொல்ல, அந்த

ப்ரஹஸ்பதி, ஒரு லிட்டர் பாட்டிலில் கோமியமும், ஒரு கிலோ சாணத்தையும் கொண்டு

வந்துவிட்டான்! (மற்றவை வீட்டிலே மாமிகளிடம் கேட்கலாமே என்று!) அந்த

பாட்டிலையும், பொட்டலத்தையும் பார்த்த சாஸ்திரி மாமா, ஆகாசத்துக்கும் பூமிக்கும்

குதிக்க ஆரம்பித்தார்! 'ஏண்டா! *#***#***#* ! ஒரு பஞ்சபாத்திரத்திலே கரைக்கற

பஞ்சகவ்யத்துக்கு, எந்துக்குடா இத்தனை கொண்டு வந்தே? இத வச்சு குளிச்சுட்டு

அப்பறம் வறட்டியா தட்டப் போறோம்?' என்று கத்த ஆரம்பித்தார்!


இன்னொருமுறைஊரில் இருக்கும்போது, என்னவரின் தங்கை மகனுக்கு (இரண்டு

வயது) உடம்பு 'வீக்'காக இருக்க, யாரோ ஒரு மாமி, கோமியம் ஒரு வாரம் குழந்தைக்குக்

கொடுத்தால் பலசாலி ஆவான் என்று ஐடியா கொடுக்க, தங்கையின் கணவர், தினம் காலை

'அதை' வெள்ளி டம்ளரில் பிடித்துக் கொண்டுவந்து மகனிடம் குடிக்கச்சொல்ல, அவன்

வீட்டு ஹாலின் ஆறு தூண்களையும் சுற்றிச் சுற்றி ஓட, இவர் விரட்ட, பயங்கர

கலாட்டாவாகவே பொழுது விடியும்! இப்பொழுது நினைத்தாலும், அந்தக் குழந்தையின்

பயந்து வெளிறின முகம் நினைவில் வருகிறது!


பின் குறிப்பு: திரு மொரார்ஜி அவர்களின் 'பானம்' பற்றி எல்லோருமே அறிவோமே!
எங்கள் வீட்டில் 'அதற்கு'ப் பெயர் "மொரார்ஜின்".... நாமகரணம் செய்தவர் V R mam !!:bounce:

 
dear raji,

please give us a warning before such posts - guaranteed to generate laugh, burst your stomach and lose your consciousness. buyers beware. caveat emptor. :) :)
 
Dear Sir,

I can not tell you how much we laughed soon after the 'NaamakaraNam' of Sri. Morarji's drink!!

Raji Ram :bump2: . . . :pound:
 

ஒரு திகில் அனுபவம்!!


திருமணம் முடிந்து விசாகப்பட்டணத்தில் குடித்தனம் ஆரம்பம். V R Mam அதே

காலனியில் இருந்ததால், அத்தனை home sick ஆகவில்லை! சின்னவன் அப்போது

பள்ளிக்குப் போக ஆரம்பிக்கவில்லை. தினம் மாலை வேளைகளில் விளையாட

வந்துவிடுவான். அவன் மழலைப் பேச்சும், குறும்பும் இருந்தால், நேரம் போவதே

தெரியாது!


என்னதான் இருந்தாலும், என்னவருக்கு ஒரு ஸ்பெஷல் பயணம் கூட்டிச் செல்ல ஆசை!

பக்கத்திலிருக்கும் மலைப் பிரதேசம் Araku valley போய்வரத் திட்டம் போட்டார்.

araku5.JPG


தெரிந்தவர் மூலம் guest house ஏற்பாடு ஆயிற்று! 120 கிலோ மீட்டர் பயணம் செய்து,

அங்கு போய்ச் சேர்ந்தோம். தங்கும் இடம் மிக வசதிதான். நல்ல சூழ்நிலையும்

தட்பவெப்பமும் நிலவ, பெரிய வட்டம் நடந்து வந்தோம். சாப்பாட்டு நேரத்தில்

பணியாளிடம் பேசத் தெரியவில்லை! இப்பொழுது களி தெலுங்கில் பிளந்து கட்டுவேன்;

அப்போது தெரியாது! நல்ல ஆந்திர கோங்கூரா சட்டினியும், ஆவக்காயும், கோவைக்காய்

கறியும் கொண்டுவந்து, சாதத்துடன் வைத்தான் பணியாள்! படு காரமாக இருந்ததால்,

ஒன்றும் சாப்பிட முடியவில்லை. தயிர் கேட்கலாமென்றால், தெலுங்கில் சொல்லத்

தெரியவில்லை. திரு. சிட்டிபாபு வீட்டில் 'காபி வேண்டுமா' எனக் கேட்டபோது, அப்பா

மோர் கேட்க, 'மஜ்ஜிக காவல' என்று சிட்டிபாபு சொன்னது நினைவில் வர, 'கெட்டி மஜ்ஜிக'

என்று ஒரு போடு போட்டேன்! அவன் உடனே, புளித்த கெட்டி மோரைக் கொண்டுவந்து

வைக்க, என்னவர் எழுந்து ஓடியே போய்விட்டார்!


மறுநாள் அங்கு சுற்றிப் பார்த்த பின், மீண்டும் ஊருக்குத் திரும்ப ஆயத்தம் செய்தோம்.

வளைவுப் பாதைகளில் கீழே வரும்போது, ஏதோ 'டொடக்' என்று சத்தம் கேட்டபடி இருக்க,

நான் பயந்தேன்! என்னவர் cool! ஒரு சலனமும் இல்லாமல் ஓட்டியபடி வந்தார். இன்னும்

கொஞ்ச நேரத்தில் 'டொடக்'கின் வேகம் இரண்டாம், மூன்றாம் காலமாக மாறி, ஜதி

வேகமாக, என் இதயத் துடிப்பும் வேகமாக, திடீரென ஒரு டயர் முன்னால் உருண்டு

ஓடுவது கண்ணில் பட, அதே நொடியில், எங்கள் கார் குடை சாய்ந்த மாட்டுவண்டிபோல

வலப்புறமாகச் சாய்ந்து உராய்வுச் சத்தம் கேட்க, அப்போதுதான் புரிந்தது, முன்னால் ஓடுவது

எங்கள் கார் டயர் என்று! பின் என்ன! வண்டியை ஓரம் கட்டி நிறுத்தி, ஓடிய டயரைத் தேடி

எடுத்துவந்து, காரின் அருகில் வைத்துவிட்டு, காத்திருந்தோம். ஒரு ஈ காக்காய் இல்லை

என்பதுபோல அமைதி நிலவ, மாலை மணி ஆறை நெருங்கியது! மெதுவாக ஒரு குரங்குக்

கூட்டம் எங்களைப் பார்த்தபடி மரங்களில் தெரிந்தது! சாப்பிட ஒன்றும் கிடையாது; இருந்த

தண்ணீர் பாட்டிலும் காலி! என்ன செய்வது என்று தவித்தபோது மூன்று இளைஞர்கள்,

ஒரு ஜீப்பை ஓட்டியபடி, இறங்கும் பாதையில் வந்து, எங்களைக் கண்டதும் நிறுத்தினர்.

எங்கள் பிரச்சனையைக் கேட்டதும், ஒருவன் இறங்கி காரின் அடியில் ஒரு கல்லை

வைத்து சாய்ந்து நின்ற காரை, சம நிலைக்குக் கொண்டுவந்து, டயரை டிக்கியில் வைத்துப்

பூட்டினான்; பின், அவர்கள் எங்களையும் எங்கள் பெட்டியையும் ஏற்றிக் கொண்டு,

விசாகை நோக்கி விரைந்தனர். இத்துடன் பிரச்சனை முடியவில்லை! வழியில் ஒரு

பெண் lift கேட்க, பரிதாபப்பட்டு அவளையும் ஏற்றிக்கொள்ள, பத்தே நிமிடங்களில் ஒரு

பெரிய கார் எங்களைத் துரத்திவந்து, வழி மறித்து நிறுத்தியது! கொள்ளைக்காரக்

கும்பலோ என்று நடுநடுங்கினேன்! அவர்களில் ஒரு கொடுவாள் மீசைக்காரன், அந்தப்

பெண் அவனின் சொந்தம் என்றும், அவளை வெளியே விடுமாறும் அதட்டினான்! அந்தப்

பெண்ணோ அழுதாள்! அந்த இளைஞர்கள் நல்ல வார்த்தை சொல்லி (தெலுங்கில்தான்!)

அவளை வழியனுப்பினர். என் மூச்சு திரும்பியது!


எங்களை பஸ் நிலையத்தில் இறக்கிவிட்டனர்; நாங்கள் ஒரு டாக்சியில் ஏறி வீடு

திரும்பினோம்! மறுநாள் ஒரு மெகானிக் எங்கள் காரை சரி செய்து, இரவில்

கொண்டுவந்து தந்தான். ஒரு மறக்க முடியாத திகில் அனுபவம் இது!

:fear: . . . :twitch:
 
களி தெலுங்கு ...

விசாகைக்குப் போன புதிதில், தெலுங்கு அதிகம் தெரியாது! எங்கள் ஆனைமலைத்

தெலுங்கில், (நிறையப்பேர் பேசுவார்கள்) பாதி தமிழ்தான் இருக்கும்! மௌலி நாடகத்தில்

சொல்லுவதுபோல 'லு' வைச் சேர்த்துத் தமிழ் பேசினால் தெலுங்கு! ரேடியோ இசை

நிகழ்ச்சிகளை ஆவலுடன் கேட்பேன். ஒவ்வொரு நாளும் மூன்று நான்கு தடவைகள்

ஒலிபரப்பாகும். ஒவ்வொரு முறையும் 'தெரவாத்த கார்யக்ரமா வென்டனே வின்டாரு'

(ventane vintaaaru ) என்று அறிவிப்பார்கள். எனக்கு 'தெரவாத்த கார்யக்ரமா' என்றால்

அடுத்த நிகழ்ச்சி என்பது புரிந்தது. 'வென்டனே வின்டாரு' என்பதே ஒரு நிகழ்ச்சி என்று

எண்ணிக்கொண்டு, ஒரு நாளைக்கு எத்தனை தடவை இதே நிகழ்ச்சி வரும் என்று

வியந்தேன்! பிறகு தெரிந்தது, அதன் அர்த்தம் 'சீக்கிரமே கேட்பீர்கள்' என்று!!

:biggrin1:
 
raji,

re your post #117: do you ever wonder what happened to that girl? was she running away from an abused husband? an unwanted marriage? an overbearing father?

whatever it was, each of us, have such sad vignettes of experience in our lifetime.

hope the girl was ok.
 
.........do you ever wonder what happened to that girl? was she running away from an abused husband? an unwanted marriage? an overbearing father?
..........

Yes Sir! I think of that girl once in a while. But at that point of time, I was nearly scared to

death! No bus service in those winding roads and we had come only half way down hill! We did

not know who those three youngsters were. We did not know whether they will drop us safe at

Vizag bus stand. They seemed to me 'God sent', only after we reached home, around midnight!

Still wonder how that girl came to that spot! She did not appear tired of a long walk too!

Many questions in life go unanswered! :noidea:
 
ஒரு வேடிக்கை அனுபவம்!

'Basket ball அம்பி - ன்னு யாரை வேணாக் கேளு, கல்கத்தாவிலே!' என்பது திருமணமான

புதிதில், அடிக்கடி நான் கேட்ட 'டயலாக்'! என்னவரின் அலமாரியில், 4 என முதுகுப் பக்கம்

அச்சிட்ட கலர் பனியன்கள் பல இருக்கும். அவையெல்லாம் souvenir என்று பத்திரப்படுத்தி

வைத்திருப்பார். ஒவ்வொரு கலரும், ஒவ்வொரு விளையாட்டில் கொடுத்தது! Sole

எல்லாம் hole ஆகிப்போன ஷூக்களை, ஒருநாள் நான் தூக்கிப் போட்டுவிட்டேன்,

அவருக்குத் தெரியாமல்! அவையும் souvenir தான்! கொஞ்சம் கோபித்து, பின் cool ஆனார்!


தன் விளையாட்டுச் சாதனையை நிரூபிக்க, என்னவருக்கு ஒரு சந்தப்பம் கிடைத்தது!

இவரையும், இவரது நண்பனையும் ஒரு game விளையாட ஸ்ரீகாகுளம் என்ற ஊரிலிருந்து

அழைப்பு வந்தது. என்னையும், நண்பனின் மனைவியையும் (அவளும் என் நல்ல நண்பி

ஆகிவிட்டாள்) அழைத்துக்கொண்டு இருவரும் புறப்பட்டனர். காரை இவர் ஓட்ட, இரண்டு

மணி நேரத்தில் அந்த ஊர் போய்ச் சேர்ந்தோம்! மிக அன்பான வரவேற்பு; சாப்பாடு;

இன்னபிற விமரிசையாக நடந்தன.


கொஞ்ச நேர ஓய்வுக்குப்பின், பெண்கள் இருவரும் உடை மாற்றிக்கொண்டு, V I P

இருக்கைகளில் பெருமையாக அமர்ந்தோம்! (விளையாட்டு வீரர்கள் அல்லவா, எங்கள்

துணைவர்கள்!) தூரத்தில் புள்ளிகளாக ஒரு வரிசைப் பையன்கள் தெரிய, 'ஓ! warm up

செய்ய வருகிறார்கள்' என்று புரிந்துகொண்டோம். முதலில் பந்தை dribble செய்து வரும்

பையனைப் பார்த்தால், தெரிந்தவன் மாதிரி இருந்தது! 'யார் இந்தப் பையன்?', என்று

யோசிக்கும்போதே, என் நண்பி என்னை இடித்து,' அதோ பார்! உன்னோட ஆளு எத்தனை

சின்னப் பையன் மாதிரி இருக்கு!' என்று கூறிச் சிரித்தாள்! 'அடடா! என் ஆளு, அரைப்

'பான்ட்'டும் 'பனியனும்' போட்டதாலே, அடையாளமே தெரியலை', என்று சொல்லி, அசடு

வழிந்தேன்! வரிசையில் வந்தவர்கள், வளைந்து ரயில் வண்டிபோலத் திரும்பும்போது,

கண்டேன் அந்த 4 - ம் நம்பரை, என்னவரது பனியனில்!!

:decision: . . . :becky:
 
யாரோ இவர் யாரோ?

அடையாளம் தெரியாது அசடு வழிந்த என் அனுபவம் போலவே அம்மாவின் வாழ்விலும்

நடந்துள்ளது! இரண்டாம் உலக யுத்த சமயத்தில், பர்மாவில் குடியிருந்த இந்தியர்கள் தாய்

நாடு திரும்பிவிட்டனர். அம்மா தன் பாட்டி மற்றும் சகோதரர்களுடன், ஆகாய மார்க்கமாக

வந்து சேர, அப்பா மருத்துவரானதால், ராணுவ வீரர்கள் சிலருடன் நடந்து, மலைப் பாதை

வழியே வந்தார். பல நாட்கள் கடுமையான பயணம்; அன்ன ஆகாரம் சரியாக இல்லை;

எங்கோ 'டென்ட்' அடித்து உறங்கி, கிடைத்த தண்ணீரைக் குடித்து, மூங்கில் அரிசியை அரை

வேக்காட்டில் சாப்பிட்டு, பல கஷ்டங்களை அனுபவித்து, உடல் இளைத்து, தலை முடி

அலைபாயும் கேசமாக நீண்டு வளர, தாடியும் முகத்தில் அடர்ந்திருக்க, இந்தியா வந்த பின்,

ஒரு வழியாக அம்மா தங்கி இருந்த இடத்தை அறிந்தாராம். பாட்டியின் துணையுடன்

இருந்த அம்மா, வாசலில் கதவை யாரோ தட்டியதும் போய்ப் பார்த்துவிட்டு, அப்பா

சிரித்தவுடன், கொஞ்சம் அதிர்ச்சி அடைந்து, 'பாட்டி! யாரோ வாசலில் வந்து என்னைப்

பார்த்துச் சிரிக்கறா!' என்றாராம்! பாட்டி உடனே ஓடிப் போய்ப் பார்த்துவிட்டு, 'ஏண்டிம்மா!

உன்னோட ஆத்துக்காரரையே உனக்கு அடையாளம் தெரிலையா?' என்று கிண்டலாகச்

சிரித்தாராம்!

:pound:
 
தஞ்சாவூர் மகிமை!

தஞ்சாவூரில் பிறந்தவர்கள் அதி சாமர்த்தியமாக இருப்பார்கள் என்று ஒரு பரவலான

கருத்து உண்டு! எங்கள் ஊரில் அவர்களுக்கு SKP என்று செல்லப் பெயர்! என்ன தெரியுமா?

'சுய காரியப் புலி' என்பதன் சுருக்கம்! எங்கள் தந்தையின் நண்பர் ஒருவர் அந்த விதம்;

தஞ்சாவூர்க்காரர் அவரும். அப்பா, மருத்துவர்களின் மீட்டிங் - கில் பங்குபெற

பொள்ளாச்சிக்குப் போகும்போது, தானும் காரில் ஏறிக்கொள்வார். அங்கு எந்த எந்தக்

கடையில், எந்த எந்த பொருள் குறைவான விலைக்குக் கிடைக்கும் என்பது அத்துப்படி.

அப்பாவை மீட்டிங் - கில் இறக்கிவிட்டு, டிரைவருடன் ஊரெல்லாம் சுற்றி, தனக்கு

வேண்டிய எல்லாமே வாங்குவார்! சாமர்த்தியமாகப் பேசுவதில் வல்லவர். அரசாங்கக்

கடைகளில், சோப்புக்களை டஜனாக வாங்கினால், குறைந்த விலையில் கிடைக்கும்.

அங்கு சென்று, ஒரு டஜனுக்கு விலை கேட்பார்; அவன் முப்பது ரூபாய் என்பான்;

தொடர்ந்து, ஒரு சோப்பு என்றால் மூன்று ரூபாய் என்பான். உடனே இவர் 'எனக்கு கால்

டஜன் கொடுப்பா!' என்று சொல்லி ஏழு ரூபாய் ஐம்பது பைசாவுக்கு மூன்று சோப்பு

வாங்கிவிடுவார்! அவனும் ஒன்றும் புரியாமல் கொடுத்துவிடுவான்! லாபம் லாபம்தானே!


வைரம் பார்ப்பதில் வல்லவர் அவர். தோஷமே இல்லாத கற்களாய் எடுக்கத் தெரியும்.

எனக்கும், என் தங்கைக்கும், அவரே கற்களைத் தேர்வு செய்து கொடுத்தார்; நன்றாகத்

தோடு கட்டும் ஆளையும் அறிமுகம் செய்தார். இரண்டு தோடுகளும் என்னமாக

மின்னுகின்றன! இதுபோல உதவிகள் செய்யததால், எங்கள் குடும்ப நண்பராகவே

கடைசிவரை இருந்தார்! :grouphug:


பின் குறிப்பு: எங்கள் மகனின் ஜாதகம் 'ரெஜிஸ்டர்' செய்ய, ஒரு பிரபலமான

கோவிலுக்குச் சென்றபோது, ஒரு பெரியவர் உரத்த குரலில் சண்டை போடுவதுபோலப்

பேசிக்கொண்டு இருந்தார். விஷயம் இதுதான். அவரது பூர்வீகம் தஞ்சாவூர் என்று

கொடுத்ததால், அவரின் மகனுக்கு யாரும் பெண் தருவது இல்லையாம்! (தஞ்சாவூரா!!

என்று அதிர்ச்சி அடைகின்றாராம்!) அவர் சென்னைக்குக் குடி பெயர்ந்து நாற்பது

ஆண்டுகள் ஆகிவிட்டதால், தஞ்சாவூரை, சென்னை என்று மாற்றச் சொல்ல, அதை அந்த

ஆபீசில் உள்ளவர் செய்ய முடியாது என்று மறுத்ததால்தான் அந்தச் சண்டையே!

:argue:
 
பெண் வேடம்!

dancing%252520girl.jpg


எங்கள் கிராமத்துப் பள்ளியில், ஒரு 'கொழுக் மொழுக்' பையன் இருப்பான், Glaxo baby போல!

பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் நாட்டியம் ஆட அவன் மிகவும் விரும்பினான்; அதிலும்

பெண் வேடம் போட, மிகவும் ஆவல்! எங்கள் டீச்சரிடம் அனுமதி வாங்கி, பெண்

வேடத்தில் ஒரு சினிமாப் பாடலுக்கு, அதி வேக ஆட்டம் ஆடப் பிரயத்தனம் செய்தான்.

அந்தக் காலத்தில், எங்கள் ஊர் கடைகளில் ரெடிமேட் உள்ளாடை சமாச்சாரங்கள்,

பெண்களுக்கென்று கிடையாது! 'மேக் அப்' போட்டுவிட பள்ளியில் யாரையும் அழைக்கவும்

மாட்டார்கள்! இவனுக்கு உதித்த ஐடியா, மிக விநோதமானது! தன் அக்காவின் ஜாக்கெட்,

பாவாடை தாவணி இத்யாதிகளை 'ஓசி' வாங்கிக்கொண்டு, பெண்ணாகத் தோற்றம் தர

இரண்டு எலுமிச்சம்பழங்களின் உதவியை நாடினான்!! ஆரம்பத்தில் மித வேகத்தில் பாட்டு

இருந்தபோது எல்லாமே ஓகே தான்! பாட்டின் பிற்பகுதியில் வேகம் பிடிக்க, இவனும்

சுழன்று சுழன்று ஆடிச் செல்ல, அக்காவின் ஜாக்கட் கொஞ்சம் லூசாக இருக்க,

எலுமிச்சம்பழங்கள் இறங்கி இடம் மாறிவிட, இவனும் ஆட்டத்தை நிறுத்தாமல் தொடர,

கூட்டத்தில் இருந்தவர்கள் சிரித்து ஆர்ப்பரிக்க, இவனது ஆட்டம் இன்னும் வேகம் பிடிக்க,

கைதட்டல் சத்தத்தால், அரங்கமே அதிர்ந்தது அன்று!!

:rofl: :bounce:
 

Latest ads

Back
Top