வண்ண வண்ண மனிதர்கள்!

இசையில் மூழ்கியதால் நாட்கள் பறந்தது தெரியவில்லை!

விரைவில் தொடரும்.....
 
நவராத்திரி 2020.

நவராத்திரி வரும் முன்னே, எல்லோரது இல்லங்களிலும் பலவித ஏற்பாடுகள் ஆரம்பமாகிவிடும். வீட்டைச் சுத்தம் செய்வதும், பொம்மைகளை எடுத்துத் துடைப்பதும், புதிய பொம்மை செட் தேடி வாங்குவதும், ரவிக்கைத் துண்டுகள், கண்ணாடி, வளையல், சீப்பு, மஞ்சள், குங்குமம், மஞ்சள் சரடு ஆகியவை ஒன்றாக வைத்த கவர்கள், எவர்சில்வர் டப்பாக்கள் என்று பரிசுப் பொருட்கள் நண்பிகளுக்கு வாங்குவதும், ஒன்பது வகைச் சுண்டல்களுக்குத் தக்கவாறு தானியங்கள் வாங்குவதும், பட்டுப் புடவைகளை இஸ்திரி செய்து அடுக்குவதும், கலர் கோலப் பொடிகள் வாங்குவதும் என்று வீடே திமிலோகப்படும்!

இரண்டு நாட்களைத் தேர்ந்தெடுத்து, ஏதாவது ஒரு நாளில் வருமாறு அழைப்புகள் விடுக்கப்படும். பணக்கார இல்லங்களில் நவாவரண பூஜை செய்யவோ, நவாவரணக் க்ருதிகளைப் பாடவோ நண்பிகள் குழுக்கள் அழைக்கப்படும். சிலர் புடவை - ரவிக்கைகள் பரிசாகத் தருவர். சின்னக் குட்டிகளும், மாமிகளும் கொலுவில் பாடப் பாட்டுக்கள் தயார் செய்வார்கள். கொலுப் படிகள் அமைத்து, அவற்றின் மீது விரிக்க மாமாக்களின் வேஷ்டிகள் மாயமாகும்! மண்ணை அள்ளி வந்து, பரப்பி வைத்து, திடீர் பூங்காக்கள் உருவாக்கப்படும். மின்னும் வண்ண விளக்குகள் பொருத்தப்படும்!

இந்த ஆண்டு, பெருந்தொற்று என்ற ஒன்று உலகையே உலுக்குவதால், எல்லாமே டிஜிடல் மயமாகியது. ZOOM மீட்டிங்கில் பாடல்கள் ஒலிக்கின்றன. அவரவர் வீட்டுச் சுண்டல் மட்டுமே ருசிக்கக் கிடைக்கிறது! கோவில்களின் அன்னையின் அலங்காரங்கள், தரிசிக்க பக்தர் கூட்டம் இன்றி அமைதியாய் நடக்கிறது! எதையோ இழந்தது போல மனம் சஞ்சலிக்கிறது!

அன்னையின் அருளால், அடுத்த ஆண்டு உற்சாக நவராத்திரி அமையட்டும்; வேண்டிக்கொள்வோம்!

🙏
 
இசையுடன் நட்பை வளர்த்த நவராத்திரி.

கொலு வைத்தவுடனே, முதல் மரியாதையுடன் அழைப்பவர்கள் என் மாணவிகளும், நண்பிகளும்தான்! நன்கு பாடத் தெரிந்தவர் பாடு கொண்டாட்டம்தான். என் குரு திரு. டாக்டர் S. ராமனாதன் அவர்களிடம் நவாவரணக் க்ருதிகளைக் கற்றுக்கொண்டதால், அந்த நாளுக்கு உரிய பாடலை, நான் செல்லும் இல்லங்களில் பாடுவது வழக்கம். இந்த ஆண்டு, பலர் தொலைபேசியில் அழைத்து, என் பாடல்களைக் கேட்க இயலாதே என்று சொல்ல, எனக்கு உதித்தது ஒரு யோசனை. ஒரு க்ருதி என்ன, இந்த முறை தியானம் மற்றும் மங்களம் பாடல்களையும் சேர்த்து, பதினோரு பாடல்களையும் ஒலிப்பதிவு செய்து, அலைபேசி வழியே அனுப்பலாமென முடிவு செய்தேன். அடிக்கடி பாடாதவற்றை, சில முறை பாடித் தயாரான பின், ஒலிப்பதிவைத் துவங்கினேன். அன்னை அருளாலும், என் ஆசிரியர்களின் ஆசிகளாலும், ஆறு நாட்களில் பணியை முடித்தேன்.

அந்த அந்த நாட்களுக்கு உரிய பாடலை, என் சுற்றம், நட்பு மற்றும் மாணவிகளுக்கு அனுப்பினேன். அன்போடு அனைவரும் தம் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். பாடலைக் கற்ற மாணவியர், என்னுடன் சேர்ந்து பாடிப் பரவசம் எய்தினர். இசையுடன், நட்பையும் வளர்த்த இந்த நவராத்திரி, எனக்கு மிகுந்த மன நிறைவை அளித்தது நிஜம்!
 

தீபாவளி நினைவுகள்!

சிறுவயதில் நாங்கள் கொண்டாடிய தீபாவளி நினைவில் நிழலாடுகிறது!

ஒரு மாதம் முன்பே அம்மா எங்கள் புத்தாடைகளைத் தயார் செய்துவிடுவார். தினமும் அதைத் தடவிப் பார்த்து மகிழ்வோம்! பட்டாசு, மத்தாப்பு என்னென்ன வாங்குவது என்ற 'லிஸ்ட்' தயாராகிவிடும். 25 ரூபாய்க்கு, பெரிய பை நிறைய,
ஒரு வாரத்திற்கு முன்பே வாங்கி வந்து, தினமும் மொட்டை மாடியில் வெயிலில்
காய வைத்து, மாலையில் அடுக்கி உள்ளே வைப்போம்!

தீபாவளிப் பலகாரங்களை அம்மா இரண்டு நாட்களுக்கு முன்பு ஆரம்பித்துவிடுவார். வரிவரியாக இட்ட ஒரு மரப் பலகையில், சின்னச் சின்ன உருண்டை மாவைத் தேய்த்து, சங்கு மிட்டாய் செய்வது அம்மாவின் ஸ்பெஷல். ஏழெட்டு வகை இனிப்புக்கள், நான்கைந்து வகைக் காரங்கள் தயாராகும். ஓரிரண்டு வகைகள் ருசிபார்க்கக் கிடைக்கும்! மற்றவை பண்டிகையன்று நிவேதனம் செய்த பின்தான் கிடைக்கும்!

தீபாவளிக்கு முதல் நாள் இரவு, நாங்கள் மத்தாப்பு, பட்டாசு வைத்து மகிழ்வோம். அம்மா நல்லெண்ணெயைக் குறுமிளகு இட்டுக் காய வைத்து, லேகியமும் கிளறி வைப்பார். புத்தாடைகளுக்கு மஞ்சள் தேய்த்து, ஒரு பலகையில் சுவாமி முன்பு அடுக்குவார்.

தீபாவளி விடியலில், எங்கள் உச்சந் தலையில் எண்ணெய் தேய்த்துவிட்டு, ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் தந்து, உடம்புக்குத் தேய்த்துக் குளிக்கச் சொல்லுவார். குளித்த பின், பெரிய துண்டைச் சுற்றிக்கொண்டு வந்து, ஸ்வாமி நமஸ்காரம் செய்து, அப்பாவிடம் புத்தாடையை வாங்கி உடுத்துவோம். சின்ன உருண்டை லேகியம்,பின்ப ஒரு ஸ்வீட் வாயில் போட்டுக்கொண்டு, பட்டாசு, மத்தாப்பு ஏற்ற ஓடுவோம். அம்மா எப்போதும் போல அடுப்படி வேலையில் மூழ்குவார்.

இதனிடையில், எங்கள் கோவில் நாதஸ்வர வித்வான், தன் மேளக்காரர் உடன் வாசிக்க, வீடு வீடாக வருவார். தோடி ராகத்தில் "கா ரி ஸ ரி கா ரி ரீ ... ஸா" என்ற ஸ்வரங்களைத் திரும்பத் திரும்ப வாசிப்பார். அதனால், எங்கள் அண்ணன் அவருக்கு "காரிஸரிகாரி" என்று நாமகரணம் செய்துவிட்டான்! அப்பா, ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, பழத்துடன், பலகாரங்களும், கொஞ்சம் பட்டாசுகளும், பணமும் வைத்து அவர்களுக்குத் தருவார்.

எங்கள் தாத்தாவிற்கு பெண் குழந்தைகள் மீது அளவு கடந்த கரிசனை. மத்தாப்புக்களை ஒரு நுனி பிளந்து வைத்த மூங்கில் குச்சியில் சொருகிக் கொடுத்து, ஏற்றச் சொல்லுவார். படபடவென்று வெடிக்கும் கம்பி மத்தாப்புகளைப் பார்க்க விடமாட்டார். சுவற்றின் மேல் விழும் அதன் வெளிச்சத்தை மட்டுமே பார்க்க வேண்டும்; கண்களைப் பாதுகாக்கும் வழியாம்! பெரிய வெடிகள் வெடிக்கும்போது, காதை மூடிக்கொள்ளச் சொல்லுவார்.

காலை உணவிற்கு அம்மாவின் அழைப்பு வரும்! எல்லா வகை இனிப்புக்களும், காரங்களும், அவற்றுடன் இட்லி, சட்னியும் கிடைக்கும். மீண்டும் சிறிது நேரம் பட்டாசு வெடிப்போம். 56 பட்டாசுகள் இருக்கும் கட்டு பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றாக வெடிக்கப்படும்! நீண்ட நேரம் வெடிக்கலாமல்லவா? வாலுள்ள ஓலைப் பட்டாசுகளை ஏற்றியபின் வீசுவோம். சுவற்றில் அடித்தால் வெடிக்கும் வெங்காய பட்டாசு உண்டு. அவற்றில் வெடிக்காத பட்டாசுகளை எடுத்துத் தனியே வைப்போம். மாலையில் அப்பா வந்து, ஒரு கல்லை வைத்து, அதன்மீது வெடிக்காத பட்டாசை வைத்து, இன்னொரு கல்லை அதன்மீது போடுவார். சத்தம் காதைப் பிளக்கும்! வெடிக்காத மற்ற ஊசிப் பட்டாசுகள், இரண்டாக உடைக்கப்பட்டு புஸ்வாணமாக மாறும்.

இதனிடையில், சில நண்பர்கள் வீட்டிற்கு வருவார்கள். வந்த எல்லோருக்கும் இனிப்பு, காரம் பாக்கெட்டுகள் கிடைக்கும். வேலைக்காரி தாயம்மாவுக்கும் புதுப் புடவை கிடைக்கும். அவளுக்கு ஜாக்கெட் ஏது?

இப்போது நினைத்தால் மனதை நெகிழ வைக்கும் நிகழ்வும் உண்டு. எங்கள் அடுத்த தலைமுறைக் குழந்தைகள் அறியாத ஒரு விஷயமாகும். ஆம்! மனிதக் கழிவுகளை அகற்றும் பணியாளரைப் பற்றியது; நாலணா மாதச் சம்பளம்தான் 1960 களில். அதே காசுதான் தீபாவளி போனஸ்! இப்போது நாம் அள்ளித்தரும் வேலைக்காரி சம்பளத்துடன் ஒப்பிட்டால்.......

இன்று இதுபோன்ற வேலைகள் இல்லாது போனதில் மகிழ்ச்சி எய்துவோம்!

வாழ்க வளமுடன்; நலமுடன்!
 
hi

இன்றேய சூழலில் தீபாவளி பண்டிகை என்பது ஒரு வரலாறு மாதிரி......அந்த காலத்தில் பணம் குறைவு....

நிம்மதி அதிகம்...அன்பு அதிகம்.....இந்த காலத்தில் பண்டிகை என்பது வெறும் commercial மாதிரி.....இப்போது

வசதி அதிகம்......நிம்மதி குறைவு.....தீபாவளி உறவுகள் சேர்ந்து கோவில் செல்வது வழக்கம் .....இன்று

வாழ்க்கை என்பது வெறும் material மட்டும் என்று ஆகிவிட்டது ....பழைய தீபாவளி பண்டிகை வெறும்

ஒரு கடந்த காலத்து கதை மாதிரி ஆகிவிட்டது...l
எனக்கு பிடித்த விஷயம்......சில நல்ல நம்பர்கள் சேர்ந்து தீபாவளிக்கு அடுத்த நாள் வெடிக்காத பட்டாசுகளை

பொருக்கி சேர்த்து வெடிக்க வெப்போம்....அது ரொம்ப நல்ல இருக்கும்....

life is like that.....just sweet memories only...
 
Last edited:

சுஜாதா சொன்ன சுவாரஸ்யமான
சினிமாவில் மாறாதவைகள்.

+ ( என் 'கமென்ட்'கள் )

1. இரட்டை வேடத்தில் எப்போதுமே ஒருவர் கெட்டவர்.
( அப்போதான் திருத்த ஒரு சான்ஸ்!)

2. பாம் வெடிப்பதைத் தடுக்க ஹீரோ எந்த ஒயரை வேண்டுமானாலும் கட் பண்ணலாம் வெடிக்காது.
( அப்போதானே ஹீரோ!!?)

3. எத்தனை பேர் ஹீரோவைத் தாக்க வந்தாலும், ஒரு ஒருவராக வந்துதான் உதைபடுவார்கள்.
( ஹீரோவுக்கும் ரெண்டு கைகள்தானப்பா! )

4. இரவு நேரத்தில் எல்லா விளக்குகளையும் அணைத்த பின்பும் வீடு முழுதும் ஊதா கலரில் தெரியும்.
( நடப்பது நமக்குத் தெரியணுமே? )

5. நேர்மையான போலீஸ் அதிகாரியைக் காட்டினால் நிச்சயமாக அவர் கொல்லப்படுவார்.
( நல்லதுக்கு காலமில்லை!)

6. வில்லன் ஹீரோவை நேராக சுட்டோ, கத்தியால் குத்தியோ கொல்ல மாட்டார். ஹீரோ தப்பிக்க முப்பது நிமிடமாவது இருக்கும்படி சுற்றி வளைத்துதான் கொல்ல முயற்சிப்பான்.
( கொடுக்கற காசுக்கு ஓட விட வேண்டாமா?)

7. ஹீரோ வில்லனிடம் செமயாக அடி வாங்கும் போது வலிக்கவே வலிக்காது. ஆனால் ஹீரோயின் பஞ்சு ஒத்தடம் கொடுக்கும் போது மட்டும் ஸ்.... ஸ்..ஆ என்பான்.
( காதல் படுத்தும் பாடு! )

8. ஒரு பெரிய கட்டடத்தின் ஜன்னல் கண்ணாடியைக் காட்டினால் அதை உடைத்துக் கொண்டு யாராவது விழுவார்.
( கண்ணாடி வைப்பதே உடைக்கத்தான்!)

9. ஹீரோவோ ஹீரோயினோ ரோட்டில் நடனமாடத் துவங்கினால் தெருவில் போகும் அனைவரும் அதே தாளத்தில் ஒரேமாதிரி நடனமாடுவார்கள்.
( பொதுமக்களுக்கு அவ்வளவு தாள ஞானம்!!)

10. போலீஸ் உயர் அதிகாரி நல்லவர் என்றால் கீழே இருக்கும் போலீஸ்காரர்கள் கெட்டவர்களாக இருப்பர். உயர் அதிகாரி கெட்டவர் என்றால் இவர்கள் நல்லவர்கள்.
( நல்லதும் கேட்டதும் இணைவது சகஜமப்பா!)

11. உணர்ச்சி வசப்படும் காட்சிகளில் திடீரென மின்னல் வெட்டி மழை வந்தே ஆகவேண்டும்.
( ஈர உடைகளுக்கு மதிப்பு அதிகம்! )

12. பாடல் காட்சிகளில் ஒருவரி மயிலாப்பூரிலும், அடுத்த வரி ஐரோப்பாவிலும், அடுத்தவரி மலேசியாவிலும் பாடப்படும்.
( இது நிஜமல்லன்னு தெரியத்தான்!)

13. ஒரே பாட்டு பாடிக்கொண்டிருக்கையில் உடை மாறும், உடையின் நிறம் மாறும்.
( 12 இன் காரணமே!)

14. சட்டென்று எல்லா மியூசிக்கும் நின்று விட்டால் யாரோ செத்துப் போய்விட்டார்கள் என்று அர்த்தம்.
( மெளன அஞ்சலி!)

15. கோர்ட்டில் யார் வேண்டுமானாலும் வழக்கின் எந்தக் கட்டத்திலும் நுழைந்து, உடனே சாட்சி சொல்லலாம். கோர்ட் வாசற்படியில் நின்றுகூட சாட்சி சொல்லலாம்.
( இங்காவது நடக்கிறதே! மகிழ்ச்சி!)

16. "முகூர்த்ததுக்கு நேரமாறது பொண்ண வரச்சொல்லுங்கோ" என சாஸ்திரிகள் அவசரப்படுத்தினால் பெண் காணாமல் போய் விட்டாள் என எதிர்பார்க்கலாம்.
( நல்ல நேரத்துலதானே ஓடணும்!)

17. கல்யாண காட்சியில் தாலியைக் கட்டப்போகும் சமயம் "நிறுத்துங்க" என்ற குரல் எப்படியும் ஒலித்தே தீரும்.
( கதைக்கு ஃபிளாஷ்பாக் வேணுமே!)

18. ஹீரோ ஏழை என்றால் பணக்கார பெண்ணையும், பணக்காரன் என்றால் ஏழைப் பெண்ணையுமே காதலிப்பான்.
( காதலுக்குக் கண்ணில்லையே!)

19. வில்லன் என்றாலே நிச்சயம் ஏதாவது கள்ளக்கடத்தல் செய்வான்.
( ஹீரோ செய்ய முடியாதே!!)

20. ஹீரோ முதல் பாதி கிராமத்திலிருந்தால் இரண்டாம் பாதி நகரத்திற்கு வருவார்!
( நாகரீக உடைகள் வேண்டாமோ?)

வாழ்க வளமுடன்; நலமுடன்!

ராஜி ராம்
 
Back
Top