A series of poems explaining how, when and why our karma affects us.
ஜனமேஜயனின் ஐயங்கள்
“எல்லாம் அறிந்த வியாச முனிவரே! எனக்குச்
சொல்ல வேண்டும் சில அற்புத சரித்திரங்களை.
சிறந்த வசுதேவனையும், தேவகியையும்
சிறைப்படுத்தினான் கம்சன் எனும் கயவன்.
கொன்று தீர்த்தான் பிறந்த சிசுக்கள் அறுவரை!
சென்றாள் ஏழாவது குழந்தை வானில் பறந்து!
அஷ்ட புஜங்களுடன் ஒரு தெய்வீகக் கன்னியாகி
இஷ்ட தெய்வமாகிக் குடியேறினாள் கோவிலில்.
எட்டாவதாகப் பிறந்தவர் ஸ்ரீமன் மகாவிஷ்ணு;
விட்டுப் பிரிந்தார் தாயைப் பிறந்தவுடனேயே!
யாதவ குலத்தில் வளர்ந்தார் கண்ணனாக;
மாதவனாகப் புரிந்தான் லீலைகள் அநேகம்.
கர்ப்ப வாசம் செய்யும் அவலநிலை எப்படி
அற்பனைப் போல ஏற்பட்டது கண்ணனுக்கு?
தர்ம தேவதையின் இரு புத்திரர்கள் இவர்கள்;
தர்மத்தைக் காக்கும் விஷ்ணுவின் அம்சங்கள்.
நர, நாராயணர் என்னும் அற்புதத் தபஸ்விகள்;
பிறந்தனர் பார்த்தன், கிருஷ்ணனாக அடுத்து.
தன் குலஆசாரம் தவறாமல் வாழ்பவர்
தன் குலத்திலும் உயர்ந்ததில் ஜனிப்பர்.
பிராமணர்கள் ஆகிய நர, நாராயணர்கள்
பிறந்தது ஏன் க்ஷத்ரிய குலத்தில் சென்று?
யாதவ குலம் ஏன் நசித்தது சாபத்தால்?
மாதவன் ஏன் மாண்டான் சாபத்தால்?
கண்ணன் மீண்டும் வைகுண்டம் சென்றதும்
கண்ணன் மனைவியர் துயருற்றதும் ஏன்?
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி