• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

#1200 to #1204

#1200. சேவடி சிந்தை வைத்தாள்
ஆரே திருவின் திருவடி காண்பார்கள்?
நேரே நின்று ஓதி நினையவும் வல்லார்க்குக்
கார் ஏர் குழலி கமல மலர் அன்ன
சீர் ஏயும் சேவடி சிந்தை வைத்தாளே.

திருவின் திருவடிகளை யார் காண்பார்கள்?
சக்தி தேவியின் நேரே நின்று, ஒளியில் அவளைத் தியானம் செய்பவர்களின் சிந்தையில், அவள்தான் சிவந்த தாமரை போன்ற மலரடிகளைப் பதித்து அருள்வாள்.


#1201. சிந்தனையில் பதித்து சமாதி செய்வீர்


சிந்தையில் வைத்துச் சிராதியி லேவைத்து
முந்தையில் வைத்துத்தம் மூலத்தி லேவைத்து
நிந்தையில் வையா நினைவதிலே வைத்துச்
சந்தையில் வைத்துச் சமாதிசெய் வீரே.

சக்தியைக் குறித்து இடைவிடாது சிந்திக்க வேண்டும். புருவ மத்தியில் அவளைத் தியானிக்க வேண்டும். ஒளிமுகமாக அவளை முன்னிலைப் படுத்த வேண்டும். கீழ் முகமாக உள்ள குண்டலினி சக்தியின் திசையை மாற்றி மேல் முகமாக ஆக்க வேண்டும். உலக நிகழ்வுகளில் கவனம் வைக்காமல் அவளையே நினைக்க வேண்டும். ஐம்பொறிகள் கூடும் இடத்தில் அவளை நிறுத்திச் சமாதி மேற்கொள்ள வேண்டும்.


#1202. சந்திரக்கலையில் சக்தி தேவி


சமாதி செய்வார்கட்குத் தான் முதல் ஆகிச்
சிவஆதியில் ஆரும் சிலை நுத லாளை
நவாதியில் ஆக நயந்து ஓதில்
உவாதி அவளுக்கு உரைவிலது ஆமே.


சமாதி செய்பவர்களுக்குச் சக்தி முதன்மையானவள் ஆகி விடுவாள். அவளைச் ‘சிவாயநம’ என்னும் சிவாதி மந்திரத்தால் நன்கு அனுபவிக்கலாம். அவளே ஒன்பது வடிவங்களில் பேதமாகக் காட்சி தருவாள். அவளே தலை உச்சியைத் தன் இருப்பிடமாகக் கொண்டு சந்திர கலையில் விளங்குவாள்.

சிவசக்தியர் சம நிலையில் இருக்கும்போது சக்தி ஒன்பது வடிவங்களில் விளங்குவாள்.
அவை : சிவம், சக்தி, நாதம், பிந்து, சதாசிவன், மகேசுரன், உருத்திரன், திருமால், நான்முகன்.


#1203. தினைப் பொழுதில் எய்தலாம்


உறைபதி தோறும் முறைமுறை மேவி,
நறைகமழ் கோதையை நாடொறும் நண்ணி,
மறையுடனே நிற்கும் மற்றஉள்ள நான்கும்
இறைதினைப் போதினில் எய்திட லாமே.


சக்தி தேவி உடலில் மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களிலும் விளங்குகின்றாள். அவளை நாள் தோறும் இடையறாது சிந்திக்க வேண்டும். அப்போது மூலாதாரத்தில் இருந்து மற்ற நான்கு ஆதாரங்களை விரைந்து கடந்து புருவ மத்தியில் உள்ள அவளை எளிதில் அடைந்து விடலாம்.


#1204. எளிதில் எய்திடலாம்


எய்திடலாகும் இருவினைப் பயன்
கொய்தளிர் மேனிக் குமரி குலாம் கன்னி,
மைதவழ் கண்ணி நன் மாதுரி கையொடு
கைதவம் இன்றிக் கருத்து உறும் வாறே.


அன்னையை வழிபடாதவர்கள் இரு வினைப் பயன்களை அடைந்திடலாம். ஆனால் இருவினைப் பயன்களைக் கொய்ய வல்லவள் இளந் தளிர் மேனியும், மாறத குமரிப் பருவமும், மை வழியும் கருங்குவளைக் கண்களும் கொண்ட அம்மை! ஆதலால் அவளை நெஞ்சில் வஞ்சனை இன்றிப் போற்றிப் புகழ்ந்து வழிபடுவீர்.

 
#1205 to #1209

#1205. எண் குணங்கள் உண்டாகும்!

கருத்து உறும் காலம் கருது மனமும்
திருத்தி இருந்து, அவை சேரும் நிலத்து
ஒருத்தியை உன்னி உணர்ந்திடு; மண் மேல்
இருத்திடும், எண் குணம் எய்தலும் ஆமே.


இன்பம் பொங்கும் நேரத்திலும் அன்னையை மறவாமல் வழிபடு. மனதைத் திருத்தியமை. அவளை அங்கு அமர்த்தி நன்கு வழிபடு. அது நீண்ட ஆயுளைத் தரும். அதன் பின்னர் இறைவனின் எண்குணங்களும் தாமே வந்து சேரும்.

#1206. திங்கள் மண்டலத்தில் திகழ்வாள்


ஆமை ஒன்று ஏறி, அகம்படி யான்என
ஓம் என்ற ஓதி, எம் உள்ளொளியாய் நிற்கும்
தாம நறுமலர் தையலைக் கண்ட பின்
சோம நறுமலர் சூழ நின்றாளே.


ஆமை தன் ஐந்து உறுப்புக்களை அடக்கிக் கொள்வது போல ஐம்பொறிகளையும் அடக்க வேண்டும்.
“நான் செருக்கு இல்லாதவன்!” என்ற பொருள்படும் ஓங்காரத்தில் உள்ள மகாரதைத் தொண்டைப் பகுதிக்கு மேலே நினைக்க வேண்டும். அப்போது மூலாதாரத்தில் உள்ள சோதியாகிய சக்தியைத் திங்கள் மண்டலத்தில் காண முடியும்.

#1207. பொன்னம்பலத்தில் பொற்கொடி


சூடிடும் அங்குசத் பாசத் துளைவழி,
கூடும் இருவளைக் கோலக்கை, குண்டிகை
நாடும் இருபதம் நன்னெடு உருத்திரம்,
ஆடிடும் சீர்புனை ஆடகம் ஆமே.


மூலாதாரம் முதல் பிரமரந்திரம் என்னும் உச்சித் தொளை வரை செல்லும் சித்திரணி என்னும் நாடி. அதில் தேவி அங்குச, பாசத்துடன் விளங்குவாள். அவற்றுடன் இரு கரங்களில் பெரிய சங்கமும், அமுதக் கலசமும் இருக்கும். அன்பர்கள் நாடும் அழகிய இரு பாதங்களுடன், சிவனின் மந்திரமாகிய ஐந்தெழுத்தை விரும்பிப் பொன்னம்பலத்தில் அன்னை நடனம் புரிவாள்.

விளக்கம்

பாசம் = தேவையற்ற தத்துவங்களைக் கட்டுப்படுத்துவது.
அங்குசம் = தேவையான தத்துவங்களைத் தூண்டி விடுவது.


#1208. உடலில் பேரொளி ஆவாள்


ஆமயன், மால், அரன், ஈசன், சதாசிவன்,
தாம் அடி சூழநின்று எய்தினர் தம்பதம்
காமனும், சாமன், இரவி, கனலுடன்
சோமனும் வந்து அடிசூட நின்றாளே.

நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன் என்னும் ஐவரும் சக்தி தேவியின் அடிகளைத் தம் முடி மேல் சூடித் தம் பதவிகளைப் பெற்றனர். காமன், அவன் இளையவன் சாமன், சூரியன், சந்திரன், அக்கினி இவர்களும் வந்து தேவியின் திருவடியில் பொருந்திட, அவள் ஒரே பேரொளியாக நின்றாள்.

#1209. அண்ட முதல்வி ஆடுவாள்


சூடும் இளம்பிறை சூலி கபாலினி
நீடும் இளங்கொடி, நின்மலி, நேரிழை,
நாடி நடு இடை ஞானம் உருவ நின்று
ஆடும் அதன்வழி அண்ட முதல்வியே.


சக்தி தேவி இளம் பிறையைச் சூடுபவள்; சுழுமுனை நாடியில் பொருந்திச் சூரியன் , சந்திரன் , அக்கினி தோற்றுவிக்கும் சூலத்தைத் தன் வடிவாகக் கொண்டவள்; கபாலினி, மூலாதாரம் முதல் பிரமரந்திரம் வரை நீண்டு செல்லும் கொடி போன்ற சித்திரணி நாடியில் செல்பவள்; நிர்மலமனவள். அழகிய பெண், இவள் நடுநாடியாகிய சுழுமுனையில் ஞானம் விளங்குமாறு நடனம் புரிவதால் அண்டத்தில் தலைவி ஆனாள்.
 
#1210 to #1214

#1210. எல்லாம் சக்தி மயம்.

அண்டம் முதல் அவனி பரியந்தம்
கண்டது ஒன்று இல்லைக் கனங்குழை அல்லது
கண்டனும் கண்டியும் ஆகிய காரணம்
குண்டிகை,கோளிகை கண்டத னாலே.


விண் முதல் மண் வரை பரவியும், விரவியும், நிலையாக இருப்பது பொற்குழை அணிந்த காதுகளை உடைய பராசக்தியே ஆவாள். அவளைத் தவிர வேறு எவரும் இல்லை, வேறு எதுவும் இல்லை. அவள் சிவனும் சக்தியுமாக இரண்டு உருவங்கள் ஆனதன் காரணம் ஆண் பெண் கூட்டுறவால் உயிர்களைப் படைப்பதற்காகவே.

#1211. நஞ்சை அமுதாக்கும் நாயகி


ஆலம் உண்டான் அமுது ஆங்கு அவர் தம்பதம்
சால வந்து எய்தும், தவத்து இன்பம் தான் வரும்,
கோலி வந்து எய்தும் குவிந்த பதவையோடு
ஏல வந்து ஈண்டி, இருந்தனள் மேலே.


பராசக்தி நஞ்சை உண்ட தன் நாயகனுக்கு அமுதம் ஆனவள்; அவன் அடைந்த பதவியும் அவள் தந்தது; கடின தவம் தரும் சீரிய இன்பமும் அவளே ஆவாள்; அவள் எல்லா ஆதாரங்களின் வழியே சென்றடையும் குவிந்த சுழுமுனையில் பொருந்தி, தலை உச்சியில் சிறந்து விளங்குகின்றாள்.

#1212. வழிபடாது இருந்து அழிந்து விடாதீர்


மேலாம் அருந்தவம் மேன்மேலும் வந்துஎய்தக்
காலால் வருந்திக் கழிவர் கணத்திடை
நாலாம் நளினம் நின்று ஏத்திநட் டுச்சிதன்
மேலாம் எழுதினள் ஆமத்தி னாளே.


தேவியை வழிபட்டால் மேன்மேலும் பெருகும் நம் செய்யும் மேலான அருந்ததவம். காற்றின் இயக்கத்தால் வாழ்ந்து அழிந்து படும் மக்கள் இதனை அறிந்து கொள்வதில்லை. அவர்கள் கண நேரத்தில் அழிந்து போய்விடுவார்கள். தூல உடலில் நான்கு இதழ் தாமரையாகிய மூலாதாரத்தில் நாம் வழிபடும் தேவியே பிறகு தலை உச்சியில் பிரணவமாகத் தோன்றுவாள்.

#1213. நேமத் துணைவி நன்மை செய்வாள்


ஆமத் தினிதிருந் தன்ன மயத்தினள்
ஓமத்தி லேயும் ஒருத்தி பொருந்தினள்
நாம நமசிவ என்றிருப் பார்க்கு
நேமத் துணைவி நிலாவிநின் றாளே.


அன்னமய கோசத்துக்குச் சக்தி உணவுப் பொருளாக இருப்பாள்; ஓம குண்டத்தில் சிவார்ப்பணம் செய்பவருக்கு அங்கே சோதியாக விளங்குவாள். “நான் சிவன் அடிமை” என்று இருப்பவரின் மூலாதாரத்தில் தேவி பொருந்தி விளங்குவாள்.

#1214. கலா மயமாகக் கலந்து நிற்பாள்


நிலாமயம் ஆகிய நீள்படி கத்தின்
சிலாமயம் ஆகும் செழுந்த ரளத்தின்
கலாமயம் ஆகும் கரிகுழல் கோதை
கலாமய மாகக் கலந்து நின்றாளே.


நிலவை ஒத்த வெண்பளிங்கின் நிறத்தினள்; செழுமையான முத்துச் சிலை போன்றவள்; சுருண்ட குழல் போன்ற நடு நாடியில் ஒளிர்பவள். அவள் ஐந்து கலைகளாக அனைத்திலும் கலந்து நிற்பாள்.

ஐந்து கலைகள்:

(1). நீக்கல், (2). நிலை பெறுத்தல், (3). நுகரச் செய்தல், (4) அமைதி ஆக்கல், (5) அப்பால் ஆக்கல்.

 
#1215 to #1219

#1215. கற்பனைக்கு எட்டாதவள்

கலந்துநின் றாள் கன்னி காதல னோடும்
கலந்துநின் றாளுயிர் கற்பனை யெல்லாம்
கலந்துநின் றாள்கலை ஞானங்க ளெல்லாம்
கலந்துநின் றாள்கன்னி காலமு மாமே.

மூலாதாரத்தில் உருத்திரனுடன் குண்டலினி சக்தியாகப் பொருந்தி நிற்பாள். சீவராசிகளின் கற்பனைகளுக்கு எல்லாம் அவளே காரணமாக நிற்பாள். கலைகளிலும், கலை ஞானங்களிலும் அவளே கலந்து நிற்பாள்.
காலத் தத்துவத்துடன் அவள் பிரியாமல் கலந்து நிற்பாள்.


#1216. மாலினி என்னும் பாலினி


காலவி எங்கும் கருத்தும் அருத்தியும்
கூலவி ஒன்றாகும் கூடல் இழைத்தனள்,
மாலினி, மாகுலி, மந்திர சண்டிகை,
பாலினி, பாலவன் பாகம்அது ஆமே.

காலத் தத்துவமாக இருப்பவள்; சீவர்களுக்கு அனேக அனுபவங்களைத் தருபவள்; அன்பர்களுக்கு அவர்கள் விரும்பும் பொருளைத் தந்து அனுகூலம் செய்பவள்; பிரிவில்லாத கூட்டணி அமைப்பவள். மாலின் தங்கையாகிய மாலினி, மூலாதாரத்தில் இவள் குண்டலினி; சண்டிகை மந்திரத்தில் விளங்குபவள்; சீவர்களைக் காக்கும் பாலினி. அவள் பால் வண்ணச் சிவபெருமானின் ஒரு பாகம் ஆவாள்.


#1217. சக்தியின் அழகிய வடிவம்


பாகம் பராசத்தி, பைம் பொன் சடைமுடி,
ஏகம் இருதயம் ஈரைந்து திண்புயம்
மோகமுகம் ஐந்து, முக்கண் முகந்தொறும்,
நாகம் உரித்து நடம் செய்யும் நாதர்க்கே.

சிவபெருமானின் உடலில் ஒரு பாகம் ஆவாள் பராசக்தி. பொன்னிறக் கதிர்களே இவள் தலை முடி. உடல் ஒன்று எனினும் திண்ணிய புஜங்கள் பத்து, அழகிய முகங்கள் ஐந்து, ஒவ்வொரு முகத்திலும் கண்கள் மூன்று. இருட்டைப் பிளந்து கொண்டு பிரணவத்தில் ஒளிரும் சிவபெருமானுக்கு இவள் இடப்பாகம்.


#1218. ஆதியும் அவளே அந்தமும் அவளே


நாதனும் நால்ஒன் பதின்மரும் கூடி நின்று
ஓதிடும் கூட்டங்கள் ஓர் ஐந்து உள; அவை
வேதனும் ஈர் ஒன்பதின்மரும் மேவி நின்று
ஆதியும் அந்தமும் ஆகி நின் றாளே.

ஆன்மாவும் முப்பத்தாறு தத்துவங்களும் ஒன்றாகக் கூடி நின்று செயல்படுகின்றன. அந்தக் கூட்டம் ஐந்து ஐந்தாக சேர்ந்து கொண்டு ஐந்து கூட்டங்களாக விளங்கும். வேதனும் பதினெட்டு கணத்தவரும் மேவி நின்றிடத் தேவி ஆதியும் ஆனாள்! அவளே அந்தமும் ஆனாள்!


ஐந்து கூட்டங்கள் :

1. பஞ்ச பூதங்கள்

2. பஞ்ச கர்மேந்திரியங்கள்

3. பஞ்ச ஞானேந்திரியங்கள்

4. ஐந்து தன்மாத்திரைகள்

5. கலை, காலம், நியதி, மாயை புருடன் என்னும் ஐந்து.


#1219. ஆயிழையுடன் ஆகி நின்றான்


ஆகின்ற நாள் கலை ஐம்பத் தொருவர்கள்
ஆகிநின் றார்களில், ஆருயிராம் அவள்;
ஆகிநின் றாளுடன் ஆகிய சக்கரத்து
ஆகிநின் றான்அவன் ஆயிழை பாடே.


ஆறு ஆதாரச் சக்கரங்களில் உள்ள ஐம்பத்தொரு எழுத்துக்களிலும் பராசக்தியின் சக்தி பொருந்தி உள்ளது. அந்த எழுத்துக்களின் உயிராக உள்ளவள் சக்தி. இங்ஙனம் எழுத்துக்களுடன் கலந்து நிற்பவளுடன் கலந்து பொருந்தி நின்றான் சிவபெருமான்.



 
#1220 to #1224

#1220. வார் குழலி இனிது நிற்பாள்

ஆயிழை யாளொடும் ஆதி பரமிடம்
ஆயதோ ரண்டவை யாறு மிரண்டுள
வாய மனந் தோ றறுமுக மவைதனில்
ஏயவார் குழலி யினிதுநின் றாளே.

ஆயிழையும், ஆதிப் பிரானும் சேர்ந்து உறைவது எட்டு இதழ்களைக் கொண்ட அண்டவை என்னும் சக்கரத்தில். உடலின் உள்ள ஆறு ஆதாரங்களிலும் பொருந்தி நிற்கும் அன்னை, சாதகனின் உள்ளம் எந்த எந்தக் குறிக்கோளைப் பற்றிக் கொண்டு நிற்கின்றதோ அதற்கு ஏற்ப அருள் புரிவாள்.

#1221. ஓதி உணர்ந்து நிற்பாள்

நின்றனள் நேரிழையோடு உடன் நேர்பட,
இன்றுஎன் அகம்படி ஏழும் உயிர்ப்பு எய்தும்,
துன்றிய ஓர்ஒன் பதின்மரும் சூழலுள்
ஒன்றுஉயர்வு ஓதி, உணர்ந்து நின்றாளே.


சுழுமுனையுடன் நேர்பட்டுச் சக்தி அன்னை என்னுள் மேல் நோக்கியபடி நின்றாள். அதனால் உயிர் மூச்சு ஏழு ஆதாரச் சக்கரங்களின் வழியே உந்தப்பட்டு மேல் நோக்கிச் சென்றது. அதனால் சகசிரதளம் நன்கு விளங்கியது. ஒன்பது வாயுக்கள் மேல் நோக்கிச் செல்வது உயர்ந்தது என்று எனக்கு அன்னை அறிவித்தாள். தானும் அவற்றோடு பொருந்தி நின்று மேல் நோக்கிச் சென்றாள்.


#1222. ஊர்த்துவ உயிர்வளி சிவனின் காதலி!


உணர்ந்து எழு மந்திரம் ‘ஓம்’ எனும் உள்ளே
மணந்து எழுமாம் கதி ஆகியது ஆகும்;
குணர்ந்து ஏழு சூதனும் சூதியும் கூடிக்
கணந்து எழும், காணும் அக் காமுகை யாமே.

மேல் நோக்கி எழும் உயிர் மூச்சு, ‘ஓம்’ என்னும் பிரணவத்துடன் சேர்ந்து எழுவது வீடுபேறு அடைகின்ற நெறியாகும். அப்போது சிவத்தை நோக்கிச் செல்லும் சக்தி, சீவனுடன் சேர்ந்து மேலே எழும்பும். இந்த நிலை ஒரு காதலனைத் தேடி ஒரு காதலி செல்வதற்கு சமமாகும்.


#1223. கோதை கோதண்டம் ஆவாள்


ஆம் அது அங்கியும் ஆதியும் ஈசனும்,
மாமது மண்டலம் மாருதம் ஆதியும்
ஏமது சீவன்; சிகை அங்கு இருண்ட இடம்
கோமலர்க் கோதையும் கோதண்டம் ஆகுமே.


மேல் நோக்கிய சகசிரதளத்தில் ஆதி சக்தி, மகேசுரன், வாயு, கதிரவன், சந்திரன் அக்கினி என்பவை திகழும் இடம். சிகை என்னும் மந்திரம் உடலறிவைக் கடந்து செல்லும் போது இருண்டு போய்விடும். அப்போது பராசக்தியும் இறைவன் உறையும் வீணாத் தண்டினில் விளங்குவாள்.


சிகை எனும் அங்க மந்திரம் கவிழ்ந்த நிலையில் உள்ள சகசிரதளத்துக்கு உரியது. நிமிர்ந்த விட்ட சகசிரதளத்தில் சிகை என்னும் அறிவு இருண்டு போய் விடும்.


#1224. ஐந்தொழில் புரிபவள்


ஆகிய கோதண்டத்து ஆகும் மனோன்மணி
ஆகிய ஐம்பது உடனே அடங்கிவிடும்;
ஆகும் பராபரை யோடுஅப் பரைஅவள்
ஆகும் அவள் ஐங்கருமத்தன் தானே.


மனோன்மணி நடுநாடியாகிய சுழுமுனையில் விளங்குபவள். ஐம்பத்தொரு எழுத்துக்களிலும் அவள் அடங்குபவள்; பெரிய அறிவும், பெரிய ஆற்றலும் கொண்ட சக்தி தேவியே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களையும் புரிகின்றாள்.




 
#1225 to #1229

#1225. சீவனில் விளங்குவான் சிவன்

தான் நிகழ் மோகினி, சார்வான யோகினி
போன மயம் உடை யார்அடி போற்றுவர்
ஆனவர் ஆவியின் ஆகிய அச்சிவம்
தான்ஆம் பரசிவ மேலது தானே.


தானாக வந்து விருப்பத்தை ஏற்படுத்துபவள் மோகினி. விருப்பத்தின் பயனை அளிப்பவள் யோகினி. பராசக்தியின் மீது அன்பு கொண்டவர், மோகினியையும் யோகினியையும் கடந்து சென்று விடுவார். அவர் சக்தியின் வயப்பட்டு அவள் மயமாகவே மாறி அவள் திருவடிகளைப் போற்றுவார். அவர் சீவனில் சிவன் விளங்குவான். அவனே பரமசிவன் என்று அறியப்படுபவன்.

#1226. பிரணவ நெறி என்பது எது?


தான்அந்தம் மேலே தரும் சிகை தன்னுடன்
ஆனந்த மோகினி அம்பொன் திருவொடு
மோனையில் வைத்து மொழிதரு கூறுஅது
ஆனவை ஓம்எனும் இவ்வுயிர் மார்க்கமே.


மோகினியாகிய பராசக்தி, உடலில் தலை உச்சியில் உள்ள சகசிரதளத்தில், பொன்னொளியில் விளங்கும் சிவத்துடன் தானும் விளங்குவாள். மோன நிலையில் அவள் நமக்கு கூறுவது சீவன் சென்று அடைய வேண்டிய ‘அ’கர,’ உ’கர, ‘ம’கர, விந்து, நாதங்கள் பொருந்திய பிரணவ வழிபாடு ஆகும்.

#1227. வாக்கும் மனமும் ஒன்றிட வேண்டும்


மார்க்கங்கள் ஈன்ற மனோன்மணி, மங்கலி,
யார்க்கும் அறிய அரியாள் அவள் ஆகும்;
வாக்கும், மனமும் மருவி ஒன்றாய்விட,
நோக்கும் பெருமைக்கு நுண்ணறிவு ஆமே


உலகத்தோரை உய்விப்பதற்காகச் சமய நெறிகளை வகுத்துத் தந்தவள் சக்தி தேவி. அவள் தன் கணவனை விட்டுப் பிரியாமல் இருக்கும் மங்கலி. அவள் எவராலும் அறிந்து கொள்வதற்கு அரியவள் ஆவாள். வாக்கும், மனமும் மருவி ஒன்றாகி விட்டச் சீரிய மனிதரின் சிறந்த நுண்ணறிவில் அவள் விளங்குவாள்.

#1228. சன்மார்க்கம் சிவகதி தரும்


நுண்ணறிவு ஆகும் நுழை புலன் மாந்தர்க்குப்
பின்அறிவு ஆகும் பிரான் அரிவத் தடம்
செல்நெறி ஆகும் சிவகதி சேர்வார்க்குத்
தன்நெறி ஆவது சன்மார்க்கம் ஆமே.


கூர்மையான புலன்களின் உதவியுடன் நாம் பெறும் நுண்ணிய
அறிவுக்குக் காரணம் சிவன் அந்தக் கருவிகளுடன் பொருந்தி இருப்பதே ஆகும். இது பின் அறிவு என்று கூறப்படும். கருவிகளைத் துறந்துவிட்டு, அவற்றிம் உதவி இன்றிச் சிவனுடன் பொருந்தி நாம் பெறும் அறிவே செந்நெறி எனப்படும். சிவகதி அடைவதே ஆத்மா பெறவேண்டிய சிறந்த நெறியாகும். அதை அடைவதற்கு உதவுவதே சன்மார்க்க நெறியாகும்.

#1229. சக்தியே சன்மார்க்க தேவி


சன்மார்க்கம் ஆகும் சமைதரும் மார்க்கமும்;
துன்மார்க்க மானவை எல்லாம் துரந்திடும்;
நன்மார்க்கத் தேவரும் நன்னெறி ஆவதும்
சன்மார்க்கத் தேவியும் சத்தி என்பாளே.

உயர்ந்த குறிக்கோளில் பொருந்திய நெறி சன்மார்க்கம். இது துர்மார்க்கத்தைத் துரத்திவிடும். நல்ல நெறி வழி நடக்கும் போது நல்ல ஒழுக்கம் வளரும். அத்தகைய நல்ல நெறிகளை நமக்குக் காட்டுபவள் சக்தி தேவியே ஆவாள்.
 
#1230 to #1234

#1230. சிவசக்தியர் நடுவில் இருக்க வழி

சத்தியம் நானும் சயம்புவு மல்லது
முத்தியை யாரு முதலறி வாரில்லை
அத்திமேல் வித்திடி லத்தி பழுத்தக்கான்
மத்தியி லேற வழியது வாமே.


சிவனும், சக்தியும், ஆன்மாவும் அறியாத வண்ணம் ஒரு சீவன் முத்திடைவது என்பது சாத்தியமே இல்லை. சீவன் பிரணவத்தின் மேல் அரை மாத்திரை ஸ்வரமாகிய ‘ம’கரத்தை இட்டு ஓத வேண்டும். அது கனிந்து பக்குவம் அடைந்தால், அந்த சீவனுக்குச் சிவசக்தியரின் நடுவில் இருக்க வழி கிடைக்கும்.

#1231. விதியை வெல்லலாம்


அது இது என்று அவமே கழியாதே
மது விரி பூங்குழல் மங்கை நல்லாளைப்
பதி அது மேவிப் பணிய வல்லார்க்கு
விதி வழி தன்னையும் வென்றிடல் ஆமே.


“அது சிறந்து, இது சிறந்தது” என்று மயங்கி ஒரே நெறியில் நில்லாமல் காலத்தை வீணே கழியாதீர். இன்பம் தரும் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியைச் சிரசில் இருக்கும் சிவத்துடன் பொருத்துங்கள். அங்கு சந்திர மண்டலத்தில் பெருகும் அமுதத்தைப் பருகும் திறனை அடையுங்கள். அப்போது அருள் வழியில் நிற்கும் நீங்கள் விதியையும் வெல்லும் வல்லமை பெறுவீர்கள்.

#1232. வென்று விட முடியும்


வென்றிட லாகும் விதிவழி தன்னையும்
வென்றிட லாகும் வினைப்பெரும் பாசத்தை
வென்றிட லாகும் விழைபுலன் தன்னையும்
வென்றிடு மங்கைதான் மெய்யுணர் வோர்க்கே.

வெற்றியின் மங்கையாகிய சக்தி தேவியை மெய்யாக உணர்ந்து கொண்ட ஒருவரால் விதியை வெல்ல முடியும்; இரு வினைகளையும், வினைப் பயன்களையும் வெல்ல முடியும்; சீவனை அல்லற்படுத்தி ஆட்டிப் படைக்கும் ஐம் புலன்களையும் வெல்ல முடியும்.

#1233. பரம் பொருள் இதுவே


ஓர்ஐம் பதின்மருள் தோன்றியே நின்றது
பாரம்பரியத்து வந்த பரம் இது;
மாரன் குழலாளும் அப்பதி தானும்முன்
சாரும் பதம் இது; சத்தியம் ஆமே.

பாரம்பரியமாக வந்த பரம்பொருள் ஐம்பத்தொரு எழுத்துக்களிலும் தோன்றி நின்றது. காமச் சுவையைத் தந்து விந்து நீக்கத்தைச் செய்யும் குண்டலினியும் அவள் பதியகிய சிவனும் சாருமிடம் இது என்பது சத்தியம்.

#1234. வித்து இன்றியே விளையும்


சத்தியினோடு சயம்புவும் நேர்படில்
வித்துஅது இன்றியே எல்லாம் விளைந்தன
அத்தகை ஆகிய ஐம்பத்தொருவரும்
சித்து – அது மேவித் திரிந்திடுவாரே.

சக்தியுடன் சிவன் சேரும் போது மூலப் பொருட்களின் தேவையில்லை. வெறும் சங்கற்பதாலேயே எல்லாப் பொருட்களும் தோன்றிவிடும். அத்தகைய ஐம்பத்தொரு எழுத்துக்களும் சீவனின் அறிவில் பொருந்தும் போது அந்த சீவனின் கருத்துக்கு ஏற்ற பிரபஞ்சம் ஒன்று உருவாகும்.


 
#1235 to #1239

#1235. அமுதூற அமைவாள்

திருந்து சிவனும் சிலைநுத லாளும்
பொருந்திய வானவர் போற்றிசெய்து ஏத்த,
அருந்திட அவ்இடம் ஆரமுது ஆக
இருந்தனள் தான்அங்கு இளம்பிறை என்றே.


சிவனும், சக்தியும் வானவர்கள் வந்து வழிபட்டுப் போற்றிடும் வண்ணம் சந்திர மண்டலத்தில் அமைவர். அவர்கள் இருக்குமிடம் ஓர் அரிய அமுத ஊற்றாகும். இளம் பிறை போல இருப்பாள் தேவி அங்கே.


#1236. சோதி நிற்பாள்


என்றும் எழுகின்ற ஏரினை எய்தினார்
அன்றது ஆகுவர் தார்குழ லாளொடு,
மன் தரு கங்கை, மதியொடு, மாதவர்
துன்றிய தாரகை சோதி நின்றாளே.


மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கிச் செல்லும் எழுச்சியை உடையவர்கள் சக்தி தேவியின் தன்மையைப் பெறுவார்கள். ஒளி குறையாத சந்திர மண்டலத்தில் மாதவம் செய்யும் முனிவர்களின், ஆன்ம ஒளியான சோதியாகவும் சக்தி நிற்பாள்.

1237. ஞானங்கள் தோன்றிடும்


நின்றனள் நேரிழை யாளொடு நேர்பட
ஒன்றிய உள்ளொளி யாலே உணர்ந்தது
சென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டிய
துன்றிடும், ஞானங்கள் தோன்றிடும் தானே.

அங்ஙனம் நிற்கின்ற சக்தியுடன் சந்திர மண்டலத்தின் ஒளியில் பொருந்தி இருந்தால், அந்த உயிர்களின் சிந்தையில் அதுவரையில் மறைந்திருந்த, அவர்களுக்குத் தேவையான ஞானங்கள் தாமே வெளிப்படும்.


#1238. ஆன்மா சக்திதேவியை அறியும்


தோன்றிடும் வேண்டு உருஆகிய தூய்நெறி,
ஈன்றிடும் ஆங்கு அவள் எய்திய பல்கலை,
மான்தரு கண்ணியம் மாரனும் வந்து எதிர்
சான்று அது ஆகுவர் தாம்அவள் ஆயுமே.

விரும்பிய உருவத்தை அடைவதற்கான ஒரு நல்ல வழி தோன்றும். பல கலைஞானங்கள் பராசக்தியின் அருளால் கிடைக்கும். மான் விழி கொண்ட சக்தி தேவியும், மன்மதனை நிகர்த்த பரமசிவனும் ஆன்மாவுக்கு எதிரில் தோன்றுவர். ஆன்மாவிடம் சிறிதும் பேதம் இன்றித் தாம் இருப்பதை உணர்த்துவர்.


#1239. அடையும் பொருளும், அடையும் வழியும் அவளே.


ஆயும் அறிவும் கடந்தஅணு வாரணி
மாயம் அது ஆகி, மதோமதி ஆயிடும்
சேய அரிவை, சிவானந்த சுந்தரி,
நேயமதா நெறியாகி நின்றாளே.


அவள் தன்னை ஆராய்கின்ற அறிவின் திறனைக் கடந்தவள்; அவள் அணுவுக்கு அணுவானவள். அவள் சீவனை மயக்கும் மாயையாக இருந்து மிகுந்த களிப்பினை எய்துபவள்; அவள் சிவந்த ஒளியில் விளங்கும் தேவி; அவள் சிவனுக்கு ஆனந்தம் தரும் அழகிய பெண்மணி. ஆன்மா அடைய வேண்டிய பொருள் அவளாகி, அதை அடைவிக்கும் வழியாகவும் அவளே ஆகி நின்றாள்.

 
#1240 to #1244

#1240. அறிவு செறிந்த சமாதி

நெறியது வாய்நின்ற நேரிழை யாளைப்
பிறிவது செய்யாது பிஞ்ஞக னோடும்
குறியது கூடிப் குறிக்கொண்டு நோக்கும்
அறிவொடும் ஆங்கே அடங்கிட லாமே.


நெறியாக நிற்கும் பராசக்தியைப பிரிவின்றிச் சிவனோடு வழிபடுபவருக்கு அறிவு குன்றாத உயர்ந்த சமாதி நிலை கிடைக்கும்.

#1241. மாமயம் எய்தலாம்

ஆம் அயன் மால் அரன் ஈசன் மாலாங்கதி
‘ஓம்’ மயம் ஆகிய ஒன்பதும் ஒன்றிடத்
தேம்மயன் நாளும் ‘தெனாதென’ என்றிடும்
மாமய மானது வந்து எய்தலாமே
.

நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுரன் ஆன்மாவுக்கு மயக்கத்தைத் தரும் நிலையில் உள்ளனர். பிரணவ வடிவான சிவத்தில் நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன், சூரியன், சந்திரன், அக்கினி, விண்மீன் என்ற ஒன்பதின்மரையும் ஒடுக்கி விட்டால், அதன் பின்னர் தேனை அருந்திக் களிக்கும் வண்டைப் போல நாமும் சிவசக்தியின் உருவமாகும் மாமயத்தை அடையலாம்.

#1242. வந்தனை செய்யும் வழி

வந்துஅடி போற்றுவர் வானவர் தானவர்,
இந்து முதலாக எண்திசை யோர்களும்
கொந்துஅணி யும்குழ லாளொடு கோனையும்
வந்தனை செய்யும் வழி நவில் வீரே.


பூங்கொத்தினைக் குழலில் அணியும் சக்தி தேவியையும், அவள் கோனாகிய சிவபெருமானையும் சகசிரதளத்தில் இருத்தி வழிபடும் நெறியை உலகுக்கு உரைப்பீர். அங்ஙனம் உரைத்தால் இந்திரன் முதலான எட்டு திசைக் காவலர்களும் பிற வானவர்களும் தானவர்களும் வந்து உங்களை வணங்கி நிற்பர்.

#1243. சக்தி வழிபாடு சிவத்தையும் சென்று சேரும்

நவிற்றும் நல் மந்திரம், நன் மலர், தூபம்
கவற்றிய கந்தம், கவர்ந்து எரி தீபம்,
பயிற்றும் உலகினில் பார்ப்பதி பூசை
அவிக்கொண்ட சோதிக்கு ஓர் அர்ச்சனை தானே
.

நவில்கின்ற நல்ல மந்திரங்களும், நல்ல மணமலர்களும், மணம் கமழும் தூபமும், பிற நறுமணப் பொருட்களும், இருளை அகற்றும் தீபமும் கொண்டு செய்கின்ற தேவியின் பூசை வேள்வியில் இடும் அவியை ஏற்கும் அண்ணலுக்கும் ஓர் அர்ச்சனையாக அமையும்.

#1244. பராசக்தியைப் போற்றுக

தாங்கி உலகில் தரித்த பராபரன்,
ஓங்கிய காலத்து ஒருவன், உலப்பு இலி,
பூங்கிளி தங்கும் புரிகுழலாள் அன்று
பாங்குடன் ஏற்பப் பராசத்தி போற்றே.


சக்தியைத் தன் உடலின் ஒரு பக்கத்தில் தாங்குகின்றான் சிவன். அத்துடன் அவன் உலகத்தையும் தாங்குகின்றான். ஆயினும் அவள் தரும் மேன்மையால் அவன் நிகரற்றவனாகவும் அழிவற்றவனாகவும் இருக்கின்றான். சுருண்ட கூந்தலை உடைய சக்தி அழகிய கிளியை ஏந்தியுள்ளாள். சிவனைத் தன் உடலில் ஒரு பக்கத்தில் கொண்டதால் அவளை நன்கு வழிபடுக.

 
#1245 to #1249

#1245. சக்தியைத் தொழுபவரைப் பிறர் தொழுவர்

பொற்கொடி மாதர் புனை கழல் ஏத்துவர்
அற்கொடி மாதுமை ஆர்வத் தலைமகள்,
நற்கொடி மாதை, நயனங்கள் மூன்றுடை
விற்கொடி மாதை விரும்பி விளங்கே.


உமை ஒரு கரிய கொடி போன்றவள்; அன்பர்களுக்கு உதவுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவள்; முக்கண்களை உடைய நல்ல மாது, வில் போன்ற புருவங்கலின் நடுவில் உள்ள ஆக்ஞை சக்கரத்தில் விளங்கும் அவளை மாறாத அன்புடன் வழிபடுபவர்களை, உலகத்தில் உள்ள பிற அழகிய பெண்கள் வந்து தொழுது நிற்பர்.


#1246. முயன்றால் ஆற்றலை மாற்றலாம்


விளங்கு ஒளி ஆய விரிசுடர் மாலை
துளங்கு பராசக்தி துங்கு இருள் நீங்கக்
களம் கொள் மணியுடன் காம வினோதம்
உளம் கொள் இலம்பியம், ஒன்று தொடரே.


ஒளி வீசும் மூலாதாரச் சக்கரத்தின் அசைவு கீழ் நோக்கிச் செல்லாமல், மாலையைப் போலப் பின்னிப் பிணைந்துள்ள சக்கரங்களின் வழியே மேல் நோக்கிச் செல்ல வேண்டும். இதற்கு மூலாதாரத்தில் ஏற்படும் அசைவினை வாய் வழியாகப் பேசாமல் கழுத்தில் உள்ள உண்ணாக்கின் வழியாக மூளைக்கு அனுப்ப வேண்டும். அங்கு அது தன் அதிர்வினை ஏற்படுத்தும். இவ்வாறு முயன்று நம் ஆற்றலை நம்மால் மாற்றி அமைக்க முடியும்.


மூலாதாரத்திலிருந்து மேலே எழும் அசைவு தொண்டையில் வாய்ச் சொற்களாக மாறும். சொற்களைப் பேசாமல் மனதில் நினைத்தால் அவை சிரசுக்குச் சென்று அங்கு சிறு அதிர்வை ஏற்படுத்தும். இதுவே நுண்மையாகச் சிரசைக் கடந்து செல்வது எனப்படும்.


#1247. ஓர் உரு ஆவர்


தொடங்கி உலகினில், சோதி மணாளன்
அடங்கி இருப்பது என் அன்பின் பெருமை ;
விடம் கொள் பெருஞ்சடைமேல் வருகங்கை
ஒடுங்கி, உமையொடும் ஓர் உரு ஆமே.


சோதி மாயமான சக்தியின் மணாளன் ஏன் எனக்குள் அடங்கி இருகின்றான்? அது என் அன்பின் பெருமையால் மட்டுமே. விந்துவைக் காமக் கழிவுகளைச் செய்து வீணாக்காமல் மேலே கொண்டு சென்று சிரசை அடைந்தால், அங்கு பொங்கி வரும் கங்கை போன்ற ஒளி வெள்ளத்தில் சிவசத்தியர் பிரிவின்றி ஓர் உரு ஆவர்.


#1248. புரிவளைக் கைச்சி


உருவம் பல உயிராய் வல்ல நந்தி
தெருவம் புகுந்தமை தேர்வுற நாடிற்
புரிவளைக் கைச்சி எம் பொன் அணி மாதை
மருவி இறைவன் மகிழ்வன மாயமே.


இறைவன் எல்லா உயிர்களையும் தன் வடிவாகக் கொண்டவன். இவ்வாறு அவன் எல்லா சீவன்களிலும் பொருந்தி வெளிப்படுவது ஏன்? உண்மையை ஆராய்ந்தால், ஒலிக்கின்ற வளையல்களை அணிந்த சக்தி தேவியைச் சிவன் மகிழ்வுடன் பொருந்தி இந்த உலகைப் படைத்தான் என்று கூறுவது வெறும் உபசார வார்த்தைகளே.


#1249. உடலில் உறைபவன் சிவன்


மாயம் புணர்க்கும் வளர்சடையான் அடித்
தாயம் புணர்க்கும் சலம் தீ அமலனைக்
காயம் புணர்க்கும் கலவியுள் மா சத்தி
ஆயம் புணர்க்கும் அவ் யோனியும் ஆமே.


மாயை ஆகிய சக்தியைப் பொருந்துபவன் சிவன். ஒளிமண்டலத்தில் அவன் திருவடிகளுடன் தொடர்பு கொண்ட சீவன்கள் உள்ளன. அவனே தன் கலப்பினால் அந்த சீவன்களின் மேனியைப் படைப்பான். அவனே அவற்றில் பொருந்தி அவற்றைச் சக்திக் கூட்டத்துடன் இணைத்து வைப்பான்.




 
#1250 to #1254

#1250. அருளைப் பெறலாம்
உணர்ந்து ஒழிந்தேன் அவனாம் எங்கள் ஈசனைப்
புணர்ந்து ஒழிந்தேன் புவனபதியாரை;
அணைந்து ஒழிந்தேன் எங்கள் ஆதி தன் பாதம்
பிணைந்து ஒழிந்தேன் தன் அருள் பெற்றவாறே.

“நான் சிவனிலிருந்து வேறுபட்டவன் அல்லன்” என்பதை நான் உணர்ந்து அறிந்தேன். என் தனித்துவத்தை விட்டு விட்டுச் சிவனுடன் நான் ஒன்றியபோது நான் பரந்த நிலையை அடைந்தேன். சிவனின் தொடர்பினைப் பெற்ற பின்னர் கீழே உள்ள உலகத் தொடர்புகளை நீக்கினேன். ஆதி சக்தியின் அடிகளைப் பற்றி அவள் அருளைப் பெற்று உலக பந்தம் நீங்கி இறைவனுடன் கூடினேன்.


#1251. கற்றதன் பயன் இறைவனைப் பற்றுவதே


பெற்றாள் பெருமை, பெரிய மனோன்மணி
நற்றாள், இறைவனே நற்பயன் என்பர்,
கற்றான் அறியும் கருத்து அறிவார்கட்குப்
பொற்றாள் உலகம் புகழ் தனி ஆமே.

நவ சக்தியரில் முதன்மையானவள் மனோன்மணி. அவள் அடிகளைப் பற்றியவர் கூறுவர் இறைவனின் அடிகள் அழிவற்ற நல்ல பயனைத் தரும் என்னும் உண்மையை. ஒருவர் கற்ற கல்வியின் பெரும் பயன் சிவன் திருவடியாகிய பொன்னுலகத்தில் சென்று புகுவதே.


#1252. கனியாய் நினைவது எதனால் அம்மையே?


தனி நாயகன் தனோடு என் நெஞ்சம் நாடி
இனியார் இருப்பிடம் ஏழ் உலகு என்பர்
பனியால் மலர்ந்தவை போதுகை ஏந்திக்
கனியாய் நினைவது என் காரணம் அம்மையே ?

தனித் தன்மை வாய்ந்த தன் தலைவன் சிவனோடு என் உள்ளாத்தில் விரும்பி உறையும் இனிய சக்தியின் தேவியின் இருப்பிடங்கள் ஏழு உலகங்கள் என்பர். பனி மண்டலத்தைப் போன்ற சகசிர தளத்தில் இருக்கும் என் அம்மையே! நீ என்னைக் கனிவுடன் நினைப்பதற்கு என்ன காரணம் என்று எனக்குக் கூறுவாய்!


#1253. மனோன்மணியும், குண்டலினியும்


அம்மனை அம்மை அரிவை மனோன்மணி
செம்மனை செய்து, திரு மங்கை யாய்நிற்கும்
இம்மனை செய்த இன்னில மங்கையும்
அம்மனை ஆகி அமர்ந்து நின்றாளே.

ஏழாவது உலகமாகிய சகசிர தளத்தில், நல்ல வீட்டுலகை உருவாக்கி, அங்கு நல்ல ஞானச் செல்வியாக உறைந்து இருப்பாள் மனோன்மணி. இந்த உலகில் நாம் எடுத் உடலைப் பக்குவப் படுத்தி மேலே சகசிரதளத்துக்குக் கொண்டு சென்ற குண்டலினி சக்தியும் அங்கே அவளுடன் இருப்பாள்.


#1254. அம்மையும் அத்தனும்


அம்மையும் அத்தனும் அன்பு உற்றது அல்லது
அம்மையும் அத்தனும் ஆர் அறிவார் என்னை;
அம்மையோடும் அத்தனும் யானும் உடன் இருந்து
அம்மையோடு அத்தனை யான் புரிந் தேனே.


என்னை பெற்ற தாயும் தந்தையும் தாம் கொண்ட காதலால் உறவு கொண்டனர். அவர்கள் என்னைப் பெற்றவர்கள் ஆயினும் அவர்கள் என்னை அறிந்ததில்லை. சிவனும், சக்தியும் எப்போதும் என் ஆன்மாவுடன் ஒன்றி இருந்து என்னை நன்கு அறிந்து கொண்டவர்கள். என்னை விட்டு எப்போதுமே பிரியாத அந்த அம்மையையும் அத்தனையும் வணங்கி நான் உய்வடைந்தேன்.

 
9. ஏரொளிச் சக்கரம்

9. ஏரொளிச் சக்கரம்

ஏர் ஒளிச் சக்கரம் = எழுச்சி கொண்டு உடலில் மேல் முகமாக நோக்கும் ஒளி வடிவான சக்கரம்.


மூலாதாரத்தில் உள்ள அக்கினி எலாவற்றையும் தனக்குள் அடக்கிக் கொண்டு பரந்து ஒன்றாகி நிற்பது.


#1255 to #1259

#1255. மையத்தில் தீ மயமான சிவன்

ஏர் ஒளி உள் எழு தாமரை நால் இதழ்;
ஏர் ஒளி விந்துவினால் எழுநாதமாம்;
ஏர் ஒளி அக்கலையெங்கும் நிறைந்தபின்
ஏர் ஒளிச் சக்கர அந்நடு வன்னியே.


மூலாதாரத்தில் தோன்றி எழும் ஒரு நான்கு இதழ்த் தாமரை. அது ஒளி மிகுந்தது. தூல விந்து மாற்றம் அடைந்து மேலே எழுந்து சிரசை அடையும் போது அதன் ஒளி சிரசில் நாதமாக மாறிவிடும். அதன் கலை முழுவதுமாக எழுந்த பிறகு அதன் மையத்தில் தீ வடிவாகச் சிவம் விளங்கும்.


#1256. சிரசில் அமையும் சக்கரம்


வன்னி எழுத்து அவை மாபலம் உள்ளன;
வன்னி எழுத்து அவை வான் உற ஓங்கின;
வன்னி எழுது அவை மாபெருஞ் சக்கரம்,
வன்னி எழுத்து இடுவாறு அது சொல்லுமே.


மூலாதாரத்தில் உள்ள நான்கு இதழ்த் தாமரையில் உள்ள நான்கு எழுத்துகள் ‘வ’, ‘ச’, ‘ஷ’, ‘ஸ’. அவை வானளாவி ஓங்கி நிற்பவை. அவை
அங்கு வலிமை வாய்ந்த சக்கரமாக அமைகின்றன. அதை நான் இப்போது கூறுவேன்.


#1257. நூற்று நாற்பத்து நான்கு சக்திகள்


சொல்லிய விந்துவும் ஈராறு நாதமாம்;
சொல்லிடும் அப்பதி அவ்வெழுத்து ஆவன
சொல்லிடும் நூறொடு நாற்பத்து நால் உரு
சொல்லிடு சக்கரமாய் வரும் மேலதே.


வீரியமாகக் கீழே இருந்த விந்து மாற்றி அமைக்கப்படும் போது பன்னிரண்டு கலைகளைக் கொண்ட கதிரவனாகச் சிரசில் விளங்கும். மூலாதாரத்தில் இருந்த அக்கினியாகிய ‘வ’, ‘ச’, ‘ஷ’, ‘ஸ’ என்னும் நான்கும் மூலாதாரத்தில் இருந்து இடைகலை , பிங்கலை, சுழுமுனை என்னும் மூன்று நாடிகளின் வழியே மேலே செல்லும். அவை அங்கு நூற்று நாற்பத்து நான்கு சக்திகளாக மாறித் தலையின் வட்ட வடிவத்தில் அமையும்.


#1258. பூமித் தத்துவம்


மேல்வரும் விந்துவும் அவ்வெழுத்து ஆய்விடும்
மேல்வரும் நாதமும் ஓங்கும் எழுத்துடன்
மேல்வரும் அப்பதி அவ்வெழுத்தே வரின்
மேல்வரும் சக்கர மாய்வரும் ஞாலமே.


மேல் நோக்கி வரும் விந்துவும் ‘அம்’ என்ற அந்த எழுத்து ஆகிவிடும். அதை விளக்கச் சந்திர மண்டலம் தலை மேல் அமையும். அதன் ஒளியுடன் அங்கு நாதமும் ஓங்கி நிற்கும். தலயின் மேல் சந்திர மண்டலம் சிறப்பாக அமைந்து விட்டால் அங்கு பூமித் தத்துவம் நுண்மையாக அமையும்.


#1259. நுண்மையே பருமையாக மாறிவிடும்


ஞாலம் அது ஆக விரிந்தது சக்கரம்;
ஞாலம் அது ஆயிடும் விந்துவும் நாதமும்;
ஞாலம் அது ஆயிடும் அப்பதி யோசனை;
ஞாலம் அது ஆக விரிந்தது எழுத்தே.


மேலே விளங்குகின்ற நூற்று நாற்பத்து நான்கு அறைகளையுடைய மண்டலமே உலகமாக விரிவடையும். அதில் விளங்குகின்ற நாதமே உலகமாக விரிவடையும். அது இறைவனின் சங்கற்பத்தால் உலகமாக விரிவடையும். சூரிய சந்திர மண்டலங்களில் உள்ள நுட்பமான ஒலியே இந்தப் பருவுலகமாக விரிவடையும்.


 
#1260 to #1264

#1260. நிலமும், நீரும் தோன்றும்

விரிந்த எழுத்து அது விந்துவும் நாதமும்;
விரிந்த எழுத்து அது சக்கரமாக;
விரிந்த எழுத்து அது மேல் வரும் பூமி
விரிந்த எழுத்தில் அப்புறம் அப்பே.


அகரக் கலை முதலில் விரிவடைந்து விந்துவாகவும், நாதமாகவும் விளங்கும். அதில் உள்ள சக்கரம் விரிவடையும் போது நிலத் தத்துவம் தோன்றும். அதன் பின்னர் அது மேலும் விரிவடையும் போது நீர்த் தத்துவம் தோன்றும்.

#1261. தீயும், வளியும், வெளியும் தோன்றும்


அப்புஅது வாக விரிந்தது சக்கரம்,
அப்பினில் அப்புறம் அவ்வனல் ஆயிடும்,
அப்பினில் அப்புறம் மாருத மாய்எழ,
அப்பினில் அப்புறம் ஆகாசம் ஆமே.

அந்தச் சக்கரம் நீராக விரிவடைந்தது. அந்த நீர்த் தத்துவத்தில் இருந்து அதன் பிறகு தீயின் தத்துவம் தோன்றியது. தீயின் தத்துவத்தில் இருந்து காற்றுத் தத்துவமும், காற்றுத் தத்துவத்தில் இருந்து வான் தத்துவமும் தோன்றின.

#1262. சிவானந்தம் தரும்


ஆகாச அக்கரம் ஆவது சொல்லிடில்,
ஆகாச அக்கரத் துள்ளே எழுத்து அவை
ஆகாச அவ்எழுத்து ஆகிச் சிவானந்தம்
ஆகாச சக்கரம் ஆவது அறிமினே.


வானத் தத்துவத்துக்கு உரிய எழுத்துப் பற்றி சொல்ல வேன்டும்மென்றால், வானத் தத்துவத்தின் பீஜ எழுத்து அகரக் கலையாகும். அது மாறாத சிவானந்தத்தைத் தரும் என்று அறிவீர்!

விளக்கம்


நிலத் தத்துவத்துக்கு உரிய எழுத்து ……..ல

நீர்த் தத்துவத்துக்கு உரிய எழுத்து……….வ

தீத் தத்துவத்துக்கு உரிய எழுத்து………..ர

காற்றுத் தத்துவத்துக்கு உரிய எழுத்து….. ய

வானத் தத்துவத்துக்கு உரிய எழுத்து……..அ


#1263. எப்போது சிவம் விளங்கும்?


அறிந்திடும் சக்கரம் ஐ யஞ்சு விந்து;
அறிந்திடும் சக்கரம் நாதம் முதலா;
அறிந்திடும் அவ்வெழுத்து அப்பதி யோர்க்கும்;
அறிந்திடும் அப்பகலோன் நிலையாமே.


இந்தச் சக்கரத்தில் பத்து ஒளி வட்டங்கள் அமைந்துள்ளன. இதை நாதத்தை முதலகக் கொண்டு அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மண்டலத்திலும் அதன் தலைவன் அமைந்திருப்பான். இவை அனைத்தையும் கடந்து சென்றால் அங்கே சிவ சூரியனைக் காணலாம்.

பத்து ஒளி வட்டங்கள் இவை:


(1). மூலாதாரம், (2). சுவாதிஷ்டானம், (3). மணிபூரகம்,
(4). அநாஹதம், (5). விசுத்தி, (6). ஆக்ஞை, (7) கதிரவன்,
(8). திங்கள், (9). தீ, (10). நாள்மீன்


#1264. ஆத்ம சோதி மண்டலம்


அம்முத லாறுமவ் வாதி எழுத்தாகும்
அம்முத லாறுமவ் வம்மை யெழுத்தாகும்
இம்முதல் நாலு மிருந்திடு வன்னியே
இம்முத லாகும் எழுத்தவை யெல்லாம்.


முதல் ஆறு சக்கரங்களில் இருப்பது ஆதி எழுத்தாகிய பிரணவம். இது சக்தி தேவிக்கு உரியது. இவற்றுக்கு மேலே அமைந்துள்ள நான்கு சக்கரங்களில் கதிரவனும், திங்களும், தீயும், நாள்மீனும் சேருவதால் அவை அமைப்பது ஆத்ம சோதி மண்டலம் ஆகும். எழுத்து வடிவானவை அனைத்தும் இந்த ஆத்மசோதி மண்டலத்தில் இருந்து தோன்றுகின்றன.

 
#1265 to #1269

#1265. முதலும் முடிவும் ஆனவை

எழுத்து அவை நூறொடு நாற்பத்து நாலும்
எழுத்து அவை ஆறு அது, அந்நடு வன்னி
எழுத்து அவை அந்நடு, அச்சுடர் ஆகி,
எழுத்து அவை தான் முதல், அந்தமும் ஆமே.


மூலாதாரம் முதலான சக்கரங்கள் நூற்று நாற்பது நான்கு கலைகளாக விரிவடையும். ஆறு ஆதாரங்களிலும் தோன்றி எழுவது அக்கினி நாடி. அதனால் அக்கினி எழுத்துக்கள் ஆறு ஆதாரங்களின் முதலாகவும் விளங்கும். அவையே மேலே சென்று சிரசைக் கடந்து செல்லும் போது முடிவானவையாகவும் அமையும்.


#1266. நாதத்தைக் கடந்தால் சிவத்தை அடையலாம்


அந்தமும் ஈறு முதலா னவை அற,
அந்தமும் அப்பதி னெட்டுடன் ஆதலால்
அந்தமும் அப்பதின் மூன்றில் அமர்ந்த பின்
அந்தமும் இந்துகை ஆருடம் ஆனதே.


அந்தத்தில் உள்ள எழுத்துக்களும், முதலாகிய தூலமும், முடிவாகிய சூக்குமமும் நீங்கும் இடத்தில் விசுத்திச் சக்கரமும் ஆக்ஞை சக்கரமும் முடிவடைகின்றன. விசுத்தியில் உள்ள பதினாறு எழுத்துக்களையும், ஆக்ஞையில் உள்ள இரண்டு எழுத்துக்களையும் கடந்து செல்ல வேண்டும். பதின்மூன்றவதுஎழுத்தாகிய ‘ஓ’ காரத்தில் அமைந்த பின்னர் அதற்கு மேல் உள்ள மண்டலத்தைக் கடப்பதே முடிவு எனப்படும். எனவே நாதத்தைக் கடந்து மேலே சென்றால் சிவத்தைக் காணலாம்.


#1267. கதிரவன் வருகையால் நாட்கள் உண்டாகும்


ஆ இனம் ஆனவை முந்நூற்றறுபதும்
ஆ இனம் அப்பதினைந்து இன மாய்உறும்;
ஆ இனம் அப்பதினெட்டுடனாய் உறும்;
ஆ இனம் அக்கதி ரோன்வர வந்ததே.


முன்னூற்று அறுபது நாட்கள் ஒரு ஆண்டு ஆகவும்; பதினைந்து நாட்கள் ஒரு பட்சம் ஆகவும்; ருதுக்கள் ஆறு ஆகவும், மாதங்கள் பன்னிரண்டாகவும் அமையும். இவை அனைத்தும் தோன்றுவது சிவக் கதிரவன் உதிப்பதால் தான்.


#1268. ஓரைகள் அமையும் விதம்


வந்திடும் ஆகாசம் ஆறுஅது நாழிகை,
வந்திடும் அக்கரம் முப்பது இராசியும்
வந்திடும் நாள் அது முன்னூற் றறுபதும்
வந்திடும் ஆண்டு, வகுத்துரை அவ்வியே.


பகல், இரவு காலங்களில் ஐம்பெரும் பூதங்கள் முறையே ஆறு ஆறு நாழிகைகள் நீளும். ஓரை என்னும் ராசியும் முப்பது கலைகளாக அமையும். முந்நூற்றறுபது கலைகள் ஓராண்டில் அமையும். இதிலிருந்து கதிரவனின் பன்னிரண்டு ராசிகளைக் கணக்கிட முடியும்.


#1269. கதிரவனின் வீதிகள் மூன்று


அவ்இனம் மூன்றும் அவ்ஆடு அதுவாய் வரும்;
எவ்வினம் மூன்றும் கிளர் தரும் ஏரதாம்,
சவ்வினம் மூன்றும் தழைத்திடும் தண்டுஅது ஆம்;
இவ்வினம் மூன்றும் இராசிகள் எல்லாம்.


ஓரைகள் மூன்று வகைப்படும். கதிரவனின் வீதிகள் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை முறையே

(1). மேட வீதி ( இடபம், மிதுனம், கடகம், சிம்மம் என்ற நான்கும் அமைந்திருக்கும் )

(2). இடப வீதி (கன்னி, துலாம், மீனம், மேடம் என்ற நான்கும் அமைந்திருக்கும்)

(3). மிதுன வீதி (விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் என்ற நான்கும் அமைந்திருக்கும்)

 
#1270 to #1274

#1270. ராசியினுள் இருக்கும் ஒளிமயமான சக்கரம்

இராசியுள் சக்கரம் எங்கும் நிறைந்தபின்,
இராசியுள் சக்கரம் என்றுஅறி விந்துவாம்;
இராசியுள் சக்கரம் நாதமும் ஒத்தபின்
இராசியுள் சக்கரம் நின்றிடு மாறே.


சிரசில் உள்ள சகசிரதளம் கதிரவனின் வீதியாகும். அது ஒளி மயமாகிய விந்துவினால் நிறைந்து விரிவடையும். அதனுடன் நாதத்தின் இயக்கமும் ஒத்தபடி அமைந்திடும் போது, அதுவரையில் கவிழ்ந்து இருந்த சகசிரதளம் நிமிர்ந்து நிற்கத் தொடங்கும்.


விளக்கம்:


சிரசில் உள்ள சகசிரதளம் இராசியாகும். சக்கரம் உடலில் உள்ளது. உடலில் உள்ள ஆறு ஆதாரங்களும் காரியப் பகுதிகள் எனப்படும். விந்துவின் இயக்கத்துக்கும், நாதத்தின் இயக்கத்துக்கும் ஏற்றபடி சகசிரதளம் மெல்ல மெல்ல மென்மை அடையும். அது மென்மை அடைந்த பிறகு அதில் ஏற்படும் அசைவும் ஒளியும் சாதகனின் முயற்சிக்கு ஏற்ப அதிகரிக்கும். இவை சிரசைத் தாண்டிய பிறகு கவிழ்ந்திருந்த சகசிரதளம் மேல் நோக்கி நிமிர்ந்துவிடும்.


#1271. ஆன்மா தாரகை ஆகிவிடும்


நின்றிடும் விந்து என்று, உள்ள எழுத்து எல்லாம்
நின்றிடும் நாதமும் ஓங்கும் எழுத்துடன்;
நின்றிடும் அப்பதி அவ் எழுத் தேவரின்
நின்றிடும் அப்புறம் தாரகை ஆனதே.


அக்கினி, கதிரவன், திங்கள் கண்டங்களுக்கு உரிய எழுத்துக்கள் தத்தம் தன்மைக்கு ஏற்ற அசைவுகளைக் கீழே தூலத்திலும் மேலே சூக்குமத்திலும் ஏற்படுத்தும். இந்த அசைவுகள் அந்த மூன்று மண்டலங்களைச் சீராக வளர்த்து வரும். சூரிய, சந்திர, அக்கினி மண்டலங்கள் வளர்ந்து ஒளிமயமாகி நிறைவடையும் போது ஆன்மா ஒரு தாரகை போல ஒளிரும்.


#1272. ஆன்ம அறிவாக விளங்கும்


தாரகை யாகச் சமைந்தது சக்கரம்
தாரகை மேலோர் தழைத்தது பேரொளி
தாரகை சந்திர னற்பக லோன்வரத்
தாரகை தாரகை தாரகை கண்டதே.


ஒளிரும் சகசிரதளம் நாள் மீன்களின் ஒளியாக ஆயிற்று. இந்த நாள் மீன்களின் ஒளிக்கு மேலே சிவம் என்னும் ஒரு பேரொளிப் பிழம்பு இருக்கின்றது. இந்த நாள் மீன்களின் ஒளியே, கதிரவன் தந்த அறிவுடனும், சந்திரனும் தந்த அறிவுடனும் கலந்து ஆன்ம அறிவாக விளங்கும்.


#1273. தீக் கொழுந்தும், காரொளியும்!


கண்டிடு சக்கரம் விந்து வளர்வதாம்
கண்டிடு நாதமும் தன்மே லெழுந்திடக்
கண்டிடும் வன்னிக் கொழுந்தன வொத்தபின்
கண்டிடு மப்புறங் காரொளி யானதே.


இங்ஙனம் ஒளி வளர்ந்து சக்கரம் அமைந்திடும். ஒளிக்குப் புற எல்லையில் நாதமும் அமைந்திடும். தீபத்தைப் போன்ற தீக்கொழுந்தை அடுத்து சக்தி தேவியின் காரொளியும் காணப்படும்.


#1274. அண்டகோசமும் ஒளிமயமாதல் வேண்டும்


காரொளி அண்டம் பொதிந்தது உலகு எங்கும்
பார்ஒளி, நீர்ஒளி, சார்ஒளி, கால்ஒளி,
வான்ஒளி ஒக்க வளர்ந்து கிடந்த பின்
நேர்ஒளி ஒன்றாய் நிறைந்து அங்கு நின்றதே.

உலகு எங்கும் சூழ்ந்து உள்ள அண்டமே ஒவ்வொரு உயிரையும் சூழ்ந்து உள்ளது. ஐம்பெரும் பூதங்கள் ஊழியின் முடிவு வரையில் மாறாமல் நிலையாக உள்ளன. இதைக் காணும் போது சீவர்களின் மூலம் ஆவதும் இந்த அண்டகோசமே என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஒளிமயமாவது அண்டங்களுக்குச் சிறந்த வலிமை தரும்.




 
#1275 to #1278

#1275. உயிரின் அண்டகோசம்

நின்றது அண்டமும் நீளும் புவிஎலாம்
நின்ற இவ் அண்டம் நிலை பெறக் கண்டிட
நின்ற இவ் அண்டமும் மூல மலம் ஒக்கும்
நின்ற இவ் அண்டம் பலம் அந்த விந்துவே.

ஒவ்வொரு பொருளையும் சூழ்ந்திருக்கும் அண்டம் தான் இந்த உலகமாகப் பரவி இருகின்றது. இந்த அண்டம் நிலை பெற்று இருப்பதைக் காண்கின்ற போது இந்த அண்டமே அனைத்துப் பொருட்களுக்கும் மூலம் ஆக இருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றகின்றது. ஒளி மயமாகும் அண்டத்தின் ஒளியே அதற்கு வலிமையைச் சேர்க்கின்றது.


#1276. ஒளியும் ஒலியும் பொருத்தமாக இருக்க வேண்டும்


விந்துவும், நாதமும், ஒக்க எழுந்திடில்
விந்துவும் நாதமும் ஒக்க விரை அது ஆம்;
விந்தில் குறைந்திடு நாதம் எழுந்திடில்
விந்துவை எண் மடி கொண்டது வீசுமே.

பொருத்தமாக இருக்கும் விந்துவும் (ஒளியும் ) நாதமும் (ஒலியும் ) வானக் கூற்றான ஆண்ட கோசத்துக்கு விதையாக அமையும். விந்து (ஒளி ) குறைவாகவும் நாதம் (ஒலி) அதிகமாகவும் இருந்தால் ஒலி ஒளி யைப் போல எட்டு மடங்கு உள்ளது என்று கூறுவர்.


எண்ணமும், செயலும் முரண்படாமல் பொருத்தமாக இருந்தால் அப்போது அண்டகோசம் வளர்ந்து விரிவடையும். ஆன்ம ஒளியில் ஐம் பெரும் பூதங்களும், எட்டு அக்கினிக் கலைகளும் பொருந்த வேண்டும். ஒரு தூல வீரிய அணு தன்னுள் எட்டு வான் கூற்றில் உள்ள அணுக்களைக் கொண்டிருக்கும்.


#1277. ஒளி அணுக்களும், மண்டலங்களும்


வீசும் இரண்டு உள நாதத்து எழுவன;
வீசமும் ஒன்று விரைந்திடும் மேலுற;
வீசமும் நாதமும் எழுந்துடன் ஒத்த பின்,
வீசமும் விந்து விரிந்தது காணுமே.

இரண்டு வகை ஒளி அணுக்கள் உள்ளன. ஒரு வகை ஒளி அணுக்கள் அண்டகோசத்துக்குச் சென்று விந்து , நாத மண்டலங்களை அமைக்கும். இந்த ஒளியும், ஒலியும் ஒத்து அமைந்த பின்னர் அண்டகோசம் விந்து மண்டலங்களாக விரிவடையும்.


#1278. விந்து மண்டலம் இன்றியமையாதது.


விரிந்தது விந்துவும் கெட்டது வீசம்;
விரிந்தது விந்துவும் நாதத்து அளவினில்
விரிந்தது உட்கட்டம் எட்டெட்டும் ஆகில்
விரிந்தது விந்து விரையது ஆமே.

விந்து மண்டலம் விரியும் போது விதைகளாகிய ஒளி அணுக்கள் மறைந்துவிடும். விரியும் விந்துவின் தன்மைக்கு ஏற்றவாறு அங்கு நாதமும் அமையும். விந்து விரிந்தால் சந்திர கலை பதினாறும் பூரணமாக அமையும். ஒளி மண்டலம் விரிவடைந்து ஒளியின் பீஜங்களாக அமையும்.

 
#1279 to #1282

#1279. திருவடியை விந்து விளக்கும்

விரையது விந்து விளைந்தன வெல்லாம்
விரையது விந்து விளைந்த உயிரும்
விரையது விந்து விளைந்தவிஞ் ஞாலம்
விரையது விந்து விளைந்தவன் தானே.


தோன்றியுள்ள எல்லாப் பொருட்களுமே விந்துவாகிய ஒளியைத் தமக்குக் காரணமாகக் கொண்டவை. விந்துவால் விளையும் சீவர்களின் உயிர்கள். விந்துவால் விளையும் இந்த உலகம். இந்த விந்துவே சிவன் திருவடிகளை நமக்கு விளக்கும்.


#1280. பிரணவமும், விந்து நாதமும்


விளைந்த எழுத்தது விந்துவும் நாதமும்;
விளைந்த எழுத்தது சக்கரம் ஆக,
விளைந்த எழுத்து அவை மெய்யினுள் நிற்கும்
விளைந்த எழுத்து அவை மந்திரம் ஆமே.


எல்லா எழுத்துக்களுக்கும் மூலமாக அமைந்தது பிரணவம். அந்தப் பிரணவமும் விந்து நாதங்களால் ஆனது. அந்தப் பிரணவமே சீவனின் தலையில் ஒரு சக்கரமாக அமையும். அந்தப் பிரணவமே சீவனின் உடலுக்குள் நிற்கும். அந்தப் பிரணவம் எல்லா எழுத்துக்களின் தொகுப்பாகிய அரிய மந்திரம் ஆகும்.


#1281. பிரணவ தியானம்


மந்திரம் சக்கரம் ஆனவை சொல்லிடில்
தந்திரத்துள், எழுத்து ஒன்று எரிவட்டம் ஆம்;
கந்தரத்துள்ளும் இரேகையில் ஒன்றில்லை,
பந்தமும் ஆகும் பிரணவம் உன்னிடே.

மந்திரம் , தந்திரம் யந்திரம் இவற்றைப் பற்றிக் கூறப் போனால் சீவனின் உள்ளே காணப்படும் பிரணவம் என்னும் ஒளி வட்டம் நல்லதொரு உபாயம் ஆகும். பிரணவத்தைக் கண்டத்தில் நிறுத்தி எண்ணுவதாலும், அல்லது தகடுகளில் பொறிப்பதனாலும் எந்த நன்மையும் விளையாது. அசைவின் வடிவாக உள்ள பிரணவத்தை முதன்மையாகக் கொண்டு தியானம் செய்ய வேண்டும்.


#1282. பிரணவச் சக்கரத்தின் பயன்


உன்னிட்ட வட்டத்தில் ஒத்து ஏழு மந்திரம்
பின்னிட்ட ரேகை பிழைப்பது தான் இல்லை
த்ன்னிட்டு எழுந்து தகைப்பு அறப் பின்நிற்கப்
பண்ணிட்ட மந்திரம் பார்க்கலும் ஆமே.

அகவழிபாடகிய தியானத்தில் பிரணவத்தை முன்னிறுத்தும் போது அது பிரணவ வட்டத்தில் பொருந்தி விளங்கும். .பிறகு அது அந்தச் சக்கரக் கோடுகளைத் தாண்டுவதோ தவறுவதோ நிகழாது. சீவனுக்குத் தானாக உண்டாகிய தடைகள் எல்லாம் பிரணவச் சக்கரம் அமைந்தால் தகர்ந்து போய் விடும். அந்தப் பிரணவ மந்திரம் ஆராயப்பட வேண்டிய ஒன்று.

 
#1283 to #1286

#1283. சிவனை அடையலாம்

பார்க்கலும் ஆகும் பகை அறு சக்கரம்
காக்கலும் ஆகும், கருத்தில் தடம் எங்கும்
நோக்கலும் ஆகும், நுணுக்கமற்ற நுண் பொருள்
ஆக்கலும் ஆகும் அறிந்து கொள் வார்க்கே.


ஜனனம் மரணம் என்னும் பகைவனை அழிகின்ற வல்லமை கொண்டது இந்தச் சக்கரம். இதைப் பார்க்கவும் முடியும். தன் உள்ளத்துக்குள் இதைக் காக்கவும் முடியும். நுட்பமானவற்றுள் நுட்பமாகிய சிவனைக் நம்மால் நோக்கவும் முடியும். உள்ளபடி உணர்ந்து கொண்டவரால் இதை அடையவும் முடியும்.


#1284. பெருமை சொல்லில் அடங்காது


அறிந்திடும் சக்கர மாதி யெழுத்து
விரிந்திடும் சக்கர மேலெழுத் தம்மை
பரிந்திடும் சக்கரம் பாரங்கி நாளும்
குவிந்திடும் சக்கரம் கூறலு மாமே.


இந்தச் சக்கரத்தின் முதல் எழுத்து ‘அ’கரம் ஆகும். அதற்கும் அடுத்த எழுத்து தேவிக்கு உரிய எழுத்தாகிய ‘உ’கரம். இந்தச் சக்கரத்தில் மாயையின் செயல்களாகிய நிலம், நீர், தீ, காற்று என்னும் நான்கு பூதங்களும் அமைந்திருக்கும். இவை அனைத்தும் குவிந்துள்ள இந்தச் சக்கரத்தின் பெருமையைப் புகலவும் முடியுமோ?


#1285. ஆறு இயல்புகள் கொண்ட மந்திரம்


கூறிய சக்கரத் துள் எழுமந்திரம்
ஆறு இயல்பாக அமைந்து விரிந்திடும்;
தேறிய அஞ்சுடன் சேர்ந்தெழு மாரணம்
ஆறு இயல்பாக மதித்துக் கொள்வர்க்கே
.


தெளிவான ஐந்து எழுத்துக்கள் கொண்ட மந்திரம் மாரணம். சொல்லப் பட்ட சக்கரத்துடன் எழும் அம மந்திரம் ஆறு செயல்களைச் செய்வதாக விரிந்து அமையும் அவை (1). தம்பனம், (2). மோகனம், (3). உச்சாடனம், (4). வித்வேடனம், (5). மாரணம், (6). வசியம்.


#1286. ஐம்பூதங்கள் பகையை வெல்ல உதவும்


மதித்திடும் அம்மையும் மாமாதும் ஆகும்,
மதித்திடும் அம்மையும் அங்கனல் ஒக்கும்,
மதித்து அங்கு எழுந்தவை காரணம் ஆகில்,
கொதித்து அங்கு எழுந்தவை கூடகி லாவே.

குறிப்பிட்ட சக்கரத்தின் தலைவி எல்லா சீவர்களுக்கும் அருளும் அன்னை ஆவாள். அவளைத் துதிக்கின்ற அன்பர்களுக்கு அவள் பகையை வெல்ல உதவுவாள். ஐம் பெரும் பூதங்களும் அன்னையின் ஆணைப்படித் தொழில் புரிபவை. அவள் ஆணையின்றி அவை எதுவும் செய்யா.




 
திருமூலரின் திருமந்திரம் - நான்காம் தந்திரம்

#1287 to #1290


#1287. பகைவர் என்பவர் இரார்.

கூடிய தம்பனம் மாரணம் வசியம்
ஆடுஇயல் பாக அமைந்து செறிந்திடும்
பாடியுள் ளாகப் பகைவரும் வந்துறார்
தேடிஉள் ஆகத் தெளிந்துகொள் வார்க்கே.


தனக்குள்ளே தேடித் தெளிவு பெற்ற அடியவர்களுக்குத் தம்பனம், மாரணம், வசியம் போன்றவை தானாகவே வந்து பொருந்தி விடும். இவர்களுக்குப் பகைவர் என்று எவரும் இரார்.


#1288. அகாரத்தைத் தியானிப்பீர்


தெளிந்திடும் சக்கரம் மூலத்தின் உள்ளே
அளிந்த அகாரத்தை அந்நடு ஆக்கி,
குளிர்ந்த அரவினைக் கூட்டி உள் வைத்து,
நலிந்தவை அங்குஎழு நாடிய காலே.


மூலாதாரத்தில் உள்ள சக்கரத்தை நன்கு அறிந்து தெளிவீர். மண்டலமிட்ட, குளிர்ந்த, குண்டலினியின் வட்டத்துக்குள் கனிந்த அகாரத்தை வைப்பீர். மூலவாயுவைச் சுழுமுனை வழியே மேலே ஏற்றுவீர்.


#1289. காமம் ஆதிப் பகைவர் அறுவர்


கால் அரை முக்கால் முழுது எனும் மந்திரம்
ஆலித்து எழுந்த ஐந்து ஊறி எழுந்ததாய்ப்
பாலித்து எழுந்து பகை அற நின்றபின்,
மால்உற்ற, மந்திரம் மாறிக்கொள் வார்க்கே.


கால், அரை, முக்கால், முழுது என்று வளர்ந்து முழுமை அடையும் பிரணவம். இது மூலாதாரத்துக்கு மேலே உள்ள ஐந்து ஆதாரங்களையும் கடந்து செல்லும். காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் சீவனின் ஆறு உட்பகைவர்களும் கெடும்படி இது நிலைத்தால் அப்போது பிரணவம் ஓங்கும், சீவனின் மன மலங்கள் நீங்கும்.


#1290. பிரணவ வழி சிவனை அடைவிக்கும்


கொண்ட இம் மந்திரம் கூத்தன் எழுத்ததாய்ப்
பண்டை யுள் நாவிற் பகையற விண்டபின்
மன்று நிறைந்த மணிவிளக்கு ஆயிடும்
இன்றும் இதயத்து எழுந்து “நம” எனே.


கூத்தபிரானின் எழுத்தாகிய இந்தப் பிரணவம் முன்பு வெளிப்படாமல் மறைந்து நின்றது. உட்பகைவர்களை ஒருவர் வென்ற பின்னர் அது வெளிப்பட்டுத் தலையை நோக்கிச் செல்லும். அங்கு சகசிர தளம் விரிந்து ஒளியுடன் விளங்கும். அங்கே இருப்பது மன்றுள் மணிவிளக்காகிய சிவன் என்று அறிவீர். பிரணவ வழி சிவபெருமானை அடைவிக்கும்.




 
Last edited:
10. வயிரவச் சக்கரம்.

10. வயிரவச் சக்கரம்.
வயிரவர் சிவபெருமானின் பல வடிவங்களுள் ஒருவர் ஆவார்.
பகை போன்ற இடையூறுகளை வெல்ல இவரை வழிபடுவர்.
வயிரவர்க்கு உரிய சக்கரம் வயிரவச் சக்கரம் ஆகும்.


#1291 to #1293

#1291. வயிரவரை தியானிக்கும் முறை
அறிந்த பிரதமையோடு ஆறும் அறிஞ்சு
அறிந்த அச் சத்தமி மேலிவை குற்ற
அறிந்தவை ஒன்றுவிட்டு ஒன்று பத்து ஆக
அறிந்து, வலம்அது வாக நடவே.


வளர் பிறையில் பிரதமை முதல் சஷ்டி வரை உடலின் ஆறு ஆதாரங்களிலும் வயிரவரைத் தியானிக்க வேண்டும். அதன் பின் ஒன்பதாவது திதியாகிய நவமியில் நெற்றிக்கு மேல் தியானிக்க வேண்டும். பதினோராவது திதியாகிய ஏகாதசியில் வலது காதின் பக்கம் தியானிக்க வேண்டும். பதின்மூன்றாவது திதியாகிய திரயோதசியில் பிடரியில் தியானிக்க வேண்டும். பதினைந்தாம் திதியாகிய பௌர்ணமியன்று இடது காதின் பக்கம் தியானிக்க வேண்டும். இங்கனம் தியானிப்பவருக்கு வெற்றி கிட்டும்.

#1292. பகைவனைப் பந்தாடலாம்


நடந்த வயிரவன் சூல கபாலி
கடந்த பகைவனைக் கண்ணது போக்கி
தொடர்ந்த வுயிரது உண்ணும் பொழுது
படர்ந்த வுடல்கொடு பந்தாடலமே.

தன்னைக் குறித்துத் தியானம் செய்பவரின் மனதில் வயிரவர் தோன்றுவார். சூலத்தையும், கபாலத்தையும் கைகளில் ஏந்தி இருப்பார். பகைவன் மீது அருள் காட்ட மாட்டார். அவர் பகைவனை வென்ற பிறகு அந்த பகைவனுடலைப் பந்தாட முடியும்.

#1293. வயிரவர் வடிவம்


ஆமேவப் பூண்டருள் ஆதி வயிரவன்
ஆமே கபாலமும் சூலமும் கைக் கொண்டு அங்கு
ஆமே தமருக பாசமும் கையது
ஆமே சிரத்தொடு வாளது கையே.

சீவர்களின் பக்திக்குத் தகுந்தபடி அருள் புரியும் வயிரவர் தன் இரு கரங்களில் கபாலமும், சூலமும் ஏந்தி இருப்பார். மற்ற இரண்டு கரங்களில் உடுக்கையையும், பாசக் கயிற்றையும் வைத்து இருப்பார். ஐந்தாவது ஆறாவது கரங்களில் துண்டிக்கப்பட்ட ஒரு தலைலயும் , ஒரு வாளும் விளங்கும்



 
#1294 to #1296

#1294. பூசனை செய்வீர்

கையவை யாரும் கருத்தது நோக்கிடும்
மெய்யது செம்மை விளங்கு வயிரவன்
துய்யருள் ளத்தில் துளங்கு மெய் யுற்றதாய்ப்
பொய்வகை விட்டுநீ பூசனை செய்யே.


வயிரவரின் ஆறு கரங்களையும் அவற்றில் அவர் ஏந்தியுள்ளவற்றையும் மனம் ஒன்றித் தியானம் செய்வீர்.செந்நிறம் கொண்டது அவர் திருமேனி. தூயவர்களின் உள்ளத்தில் அவர் நன்கு துலங்குவார். பொய் வகை பூசைகளை விட்டு விட்டு மெய்யுற்றதாகப் பூசை செய்வீர்.

#1295. வயிரவரைப் பூசிக்கும் முறை


பூசனை செய்யப் பொருந்தியோ ராயிரம்
பூசனை செய்ய மதுவுட னாடுமால்
பூசனை சாந்து சவ்வாது புழுகு நெய்
பூசனை செய்து நீர் பூசலை வேண்டுமே.

வயிரவரை ஆயிரம் உரு செபித்து வழிபடுவீர். நல்ல தேனைப் படைத்தது பூசை செய்வீர். சாந்து, சவ்வாது, புனுகு, போன்ற வாசனைப் பொருட்களை அவருக்குச் சாத்தி பகை நீங்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்வீர்.

#1296. விரும்பியவற்றை அடையலாம்


வேண்டிய வாறு கலகம் ஆயிடும்
வேண்டிய ஆறினுள் மெய்யது பெற்றபின்
வேண்டிய வாறு வரும் வழி நீ நட
வேண்டிய வாறது வாகும் கருத்தே.


நீ விரும்பிய வண்ணம் பகைவர்கள் இடையே கலகம் மூளும். ஆறு கர்ம வித்தைகளையும் நீ முறையாகப் பெற வேண்டும். அதன் பின்னர் நீ விரும்பிய வழிகளில் நடக்கலாம். நீ விரும்புகின்ற அனைத்துமே உனக்குக் கிடைக்கும்.
 
11 சாம்பவி மண்டலச் சக்கரம்

11 சாம்பவி மண்டலச் சக்கரம்

சாம்பவி என்பது சிவசக்தி.
சிவனும் சக்தியும் ஒன்றாக விளங்கும் சிவலிங்கத் திருமேனி அமைந்துள்ள சக்கரம் சாம்பவி மண்டலச் சக்கரம்.


#1297 to #1300

#1297. நாட்டு மக்கள் தொழுது நிற்பர்

சாம்பவி மண்டலச் சக்கரம் சொல்லிடில்
ஆம்பதம் எட்டாக விட்டிடன் மேலதாம்
காண்பதம் தத்துவ நாலுள் நயனமும்
நாம்பதம் கண்டபின் நாடறிந் தோமே.


சாம்பவி மண்டலச் சக்கரத்தின் அமைப்பு:
இது எட்டு இதழ்கள் கொண்டது. மேலானதாகக் காணப்படும் நான்கு இதழ்களில் விந்து, நாதம், சிவம், சக்தி அமைவர். இவற்றுள் விந்துவை நயனமாக அறிந்து கொண்டவரை நாட்டு மக்கள் வந்து தொழுது நிற்பர்.


#1298. நாடறிந்த மண்டலம்


நாடறி மண்டலம் நல்லஇக் குண்டத்துள்
கோடற வீதி கொணர்ந்துள் இரண்டழி
பாடறி பத்துடன் ஆறு நெடுவீதி
ஈடற நாலைந் திடவகை ஆமே
.


நாடறிந்த மண்டலமான இந்த நல்ல சக்கரத்தில் நேராகச் செல்லும் வீதிகளை நாற்புறமும் அமைக்க வேண்டும். நெடிய வீதிகளில் உள்ள அறைகள் பதினாறு. வீதிக்குள் அமைந்த அறைகளின் எண்ணிக்கை முப்பது ஆறு. உட்சுற்றில் உள்ள அறைகளின் எண்ணிக்கை இருபது.


#1299. இலிங்கங்கள்


நாலைந் திடவகை உள்ளதோர் மண்டலம்
நாலுநல் வீதியுள் நந்நால் இலிங்கமா
நாலுநற் கோணமும் நண்ணால் இலிங்கமா
நாலுநற் பூநடு நண்ணல்அவ் வாறே.


இருபது அறைகள் ஒவ்வொன்றும் தனித் தனி வட்டமாக நிற்கும். வீதிகள் நான்கிலும் திசைக்கு நான்காகப் பதினாறு இலிங்கங்கள் இருக்கும். நடுவில் உள்ள நான்கு அறைகளிலும் நான்கு இலிங்கங்கள் இருக்கும். நடுவில் உள்ள ஒவ்வொரு இலிங்கமும் நான்கு தாமரை மலர்களின்
நடுவில் ஒரு தாமரை மலரில் இருக்கும்.


#1300. குறைகளும் இல்லையே!


ஆறிரு பத்துநால் அஞ்செழுத் தஞ்சையும்
வேறுரு வாக விளைந்து கிடந்தது
தேறிநீர் உம்மில் சிவாய நமஎன்று
கூறுமின் கூறிற் குறைகளும் இல்லையே
.

சாம்பவி மண்டலச் சக்கரம் அமைப்பதை ஒரு நல்ல குருமுகமாகக் கற்கவும்.






 
#1301 to #1305

#1301. குரைகழல் கூடும்

குறைவதும் இல்லை குரைகழல் கூடும்
அறைவதும் ஆரணம் அவ்வெழுத் தாகில்
திறம்அது வாகத் தெளியவல் லாருக்
கிறவில்லை என்றென் றியம்பினர் காண
.

வேதம் மூல மந்திரமாகச் சொல்லுவது திரு ஐந்தெழுத்து. இதனை அவ்வாறே அறிந்து கொண்டவர்களுக்கு உலகப் பயன்களில் எந்தக் குறையும் இராது. `இறப்பு` என்பது அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு ஒலிக்கின்ற வீரக்கழலை அணிந்துள்ள சிவபெருமானின் அரிய திருவடிகள் கிடைக்கும் என்று கற்றறிந்தோர் உறுதிபடக் கூறியுள்ளார்கள்.

#1302. சாம்பவி மண்டலச்சக்கர வழிபாடு


காணும் பொருளும் கருதிய தெய்வமும்
பேணும் பதியும் பெருகிய தீர்த்தமும்
ஊணும் உணர்வும் உறக்கமும் தானாகக்
காணுங் கனகமும் காரிகை யாமே.

ஐம்புல நுகர்வுக்குத் தேவையான பல சிறந்த பொருட்களும், விரும்பும் தெய்வங்களை வழிபடுகின்ற வாய்ப்புக்களும், போற்றப்படுகின்ற திவ்ய தலங்களில் வாழும் நற்பேறும், புண்ணிய தீர்த்தங்களில் நீராடும் நல்ல சந்தர்ப்பங்களும், இவற்றால் கிடைக்கும் நற்பயன்களும், நல்லறிவும், அமைதியான உறக்கமும், தானாகக் கிடைக்கும் பொன்னும் இந்தச் சாம்பவி மண்டலச் சக்கர வழிபாட்டினால் கிடைக்கும்.

#1303. பகைவரும் இரார்


ஆமே எழுத்தஞ்சும் ஆம்வழி யேஆகப்
போமே அதுதானும்? போம்வழி யேபோனால்
நாமே நினைத்தன செய்யலும் ஆகும்
பார்மேல் ஒருவர் பகையில்லை தானே.

திருவைந்தெழுத்து எப்போதும் நன்மை தரும். அது நல்ல வழி உண்டாகச் செய்யும். அதனால் அதில் தெளிந்து வல்லமை அடைதல் யாருக்குக்கும் கைக்கூடும்! அங்ஙனம் கைக்கூடுமாயின் அவர் நினைத்தவற்றை நினைத்தவாறு முடிக்க முடியும். உலகில் அவருக்குப் பகைவரும் இரார்.

#1304. நன்மையே விளையும்.


பகையில்லை என்றும் பணிந்தவர் தம்பால்
நகையில்லை நாணாளும் நன்மைகள் ஆகும்
வினையில்லை என்றும் விருத்தமும் இல்லை
தகையில்லை தானும் சலமது வாமே.

திருவைந்தெழுத்தை ஓதுபவருக்குப் பகைவர்கள் இல்லை.
அவர்களைப் பெரியோர் இகழும் இகழ்ச்சி என்பதும் இல்லை.
இருவினைகள் இல்லை; பொருந்தாச் செயல்கள் இல்லை.
இடையூறு என்பவை இல்லை. நாளும் நன்மையே விளையும்.
அம்மந்திரம் மலத்தைக் கழுவித் தூய்மையைத் தரும் ஜலமாகும்.

#1305. இன்பமும் மிகும்


ஆரும் உரைசெய்ய லாம்அஞ் செழுத்தாலே
ஆரும் அறியாத ஆனந்த ரூபம்ஆம்
பாரும் விசும்பும் பகலும் மதியதில்
ஊரும் உயிரும் உணர்வது மாமே.

மண்ணும், விண்ணும் ஆகிய எல்லா இடங்களிலும்; பகலும், இரவுமாகிய எல்லாக் காலங்களிலும்; வாழுகின்ற எல்லா உயிர்களும்; அந்த உயிர்களின் உணர்வுமாக இருப்பது திருவைந்தெழுத்து. அதனால் எதை விரும்புகின்றரும் அந்த மந்திரத்தை ஓதலாம். அதை ஓதுவதால் உலகில் பிறர் அறியாத இன்பமும், இறை இன்பமும் மிகும்.
 
12. புவனாபதிச் சக்கரம்

12. புவனாபதிச் சக்கரம் = புவனத்தின் அதிபதிக்கு உரிய சக்கரம்

#1306 to #1310


#1306. சூதனும், சூதியும்

உணர்ந்தெழு மந்திரம் ஓமெனும் உள்ளே
அணைந்தெழும் ஆங்கதன் ஆதியது ஆகும்
குணர்ந்தெழு சூதனும் சூதியும் கூடி
கணந்தெழும் காணும் அக்காமுகை யாலே


ஓம் என்னும் பிரணவம் சீவனின் உள்ளே உணர்ந்து எழும். சிவசக்தியருடன் சீவனை இணைப்பது அந்த மந்திரம்தான். உயிர்களைச் செலுத்துகின்ற சிவனும் சக்தியும் ஒன்றாகக் கூடி இணைந்து எழுந்து அருள் புரிவார்கள்.

#1307. போகமும், மோட்சமும் தரும்


ககாராதி ஓர்ஐந்தும் காணிய பொன்மை
அகாராதி ஓர் ஆ றரத்தமே போலும்
சகாராதி ஓர்நான்கும் தாம்சுத்த வெண்மை
ககாராதி மூவித்தை காமிய முத்தியே.


‘க’காரத்தை முதலில் உடைய ஐந்தெழுத்துக்களும் பொன்னிறம் உடையன;
‘அ’ காரத்தை முதலில் உடைய ஆறெழுத்துக்களும் செந்நிறம் உடையன;
‘ச’காரத்தை முதலில் உடைய நான்கெழுத்துக்களும் தூய வெண்ணிறம் உடையன.
இந்த மூன்று வித்தைகளும் `போகம், மோட்சம்` என்ற இரு பயன்களையும் தரும்.

#1308. சிவன் வடிவாகும்


ஓரில் இதுவே உறையும் இத் தெய்வத்தைத்
தேரில் பிறிதில்லை யானொன்று செப்பக்கேள்
வாரித் திரிகோணம் மாவின்ப முத்தியும்
தேரில் அறியும் சிவகாயந் தானே.


மாணவனே! நான் உனக்கு ஒன்று சொல்லுகின்றேன். நன்கு கேள். உண்மையையில் இந்தப் பதினைந்து எழுத்து மந்திரமே மந்திரங்கள் அனைத்திலும் தலையாயது. இந்த மந்திரத்திற்கு உரிய தேவியின் பெருமையை ஆராய்ந்திடில் இவளை அன்றி வேறு தெய்வம் இல்லை. இந்த மந்திரத்தைக் கொண்ட ஸ்ரீசக்கரம் என்னும் முக்கோணச் சக்கரமே பேரின்ப வீடு. இதுவே தெளிந்தவர்கள் அறிந்து கொள்ளும் சிவன் வடிவாகிய சிதாகாசம்.

#1309. சக்திக்கு எட்டு வடிவங்கள்


ஏக பராசத்தி ஈசற்காம் அங்கமே
ஆகம் பராவித்தை ஆம் முத்தி சித்தியே
ஏகம் பராசத்தி யாகச் சிவன்உரு
யோகம் பராசத்தி உண்மைஎட் டாமே.


பராசத்தி ஒன்றே. அவளே பரசிவத்தின் வடிவம். அந்தச் சத்திக்கு வடிவம், `பராவித்தை` எனப்படும் ஸ்ரீ வித்தை. அந்த ஸ்ரீ வித்தையால் முத்தி, சித்தி இரண்டும் சித்திக்கும். பராசத்தி ஒன்று என்றாலும் சிவன் அங்கியாய் நிற்கச் சத்தி அவனுக்கு அங்கமாய் நிற்பதால் சக்தி எட்டாகத் தோன்றுகின்றாள்.

#1310. பராவித்தை பராசக்தியின் வழிபாடு


எட்டாகிய சத்தி எட்டாகும் யோகத்துக்
கட்டாகும் நாதாந்தத் தெட்டும் கலப்பித்த (து)
ஒட்டாத விந்துவும் தான்அற் றொழிந்தது
கிட்டா தொழிந்தது கீழான மூடர்க்கே.


பராசத்தி வழிபாடு பராவித்தை. இது சத்தியின் பேதங்களாகிய எட்டினையும் அட்டாங்க யோகத்தின் வழியே அடையச் செய்து, முடிவில் நாதாந்தத்தில் கொண்டு சேர்க்கும். அதன் பின்னர் பரசிவத்தை அடைவதற்குத் தடையாக இருந்த விந்து நாதங்களும் அகலும் .அப்போது சீவன் பரசிவத்தைக் கூடிப் பராமானந்தம் எய்தலாம். பராவித்தை வழிபாடு அறிவிலும், ஆற்றலிலும் தாழ்ந்த நிலையில் உள்ளவர்கள் செய்ய இயலாதது.



 
#1311 to #1314

#1311. அறுகோண யந்திரம்

ஏதும் பலமாம் இயந்திரரா சன்னடி
ஓதிக் குருவின் உபதேசம் உட்கொண்டு
நீதங்கும் அங்க நியாசந் தனைப்பண்ணிச்
சாதங் கெடச் செம்பில் சட்கோணந் தான்இடே.


புவனாபதி சக்கரம் வழிபடுவோர் விரும்பும் பயனைத் தரும். இயந்திர ராசன் எனப்படும் இந்த புவனாபதி சக்கரத்தை எந்தத் துதியினாலும் துதிப்பாய். அதனை வழிபடும் முறையைக் குருவின் உபதேசத்தால் அறிவாய் . கர நியாச, அங்க நியாசங்களை இந்த வழிபாட்டிற்கு ஏற்ற முறையில் செய்வாய். பிறவிப் பிணியின் நீக்கத்தை விரும்புவாய். செப்புத் தகடு ஒன்றில் முதலில் அறுகோணச் சக்கரத்தை வரைவாய்.


#1312. அறு கோணச் சக்கரம்


சட் கோணந் தன்னில் சிரீம்இரீம் தானிட்டு
அக்கோணம் ஆறின் தலையில்இரீங் காரம்இட்
டெக்கோண முஞ்சூழ் எழில்வட்டம் இட்டுப்பின்
மிக்கீரெட் டக்கரம் அம்முதல் மேல்இடே.


வரையப்பட்ட அறுகோணச் சக்கரத்தின் அறைகளில் `ஸ்ரீம், ஹ்ரீம்` என்னும் பீசங்களைப் பொறிக்க வேண்டும். அந்தச் சக்கரத்தின் ஆறு மூலைகளின் `ஹ்ரீம்` என்னும் பீசத்தை மட்டும் எழுதவேண்டும். எல்லா மூலைகளும் உள்ளே அடங்கும்படி அவற்றைச் சுற்றி ஒரு பெரிய வட்டம் வரைய வேண்டும். அந்த வட்டத்திற்கு வெளியில் திசைக்கு ஒன்றாக எட்டுத் தாமரை இதழ்களை அமைக்க வேண்டும். அந்த இதழ்களின் கீழே, வட்டத்தில் வடக்கில் அகாரத்திலிருந்து இதழ் ஒன்றுக்கு இரண்டு, இரண்டாக உயிரெழுத்துப் பதினாறையும் முறையாக எழுத வேண்டும்.


#1313. அறுகோணச் சக்கர அமைப்பு


இட்ட இதழ்கள் இடைஅந் தரத்திலே
அட்டஹவ் விட்டிட் டதன்மேலே உவ்விட்டுக்
கிட்ட இதழ்களின் மேலே கிரோம்சிரோம்
இட்டுவா மத் (து) ஆம் கிரோம்என் மேவிடே.


சக்கரத்தைச் சூழ்ந்த வட்டத்திற்கு வெளியில் உள்ள இதழ்களின்
இடைநிலம் எட்டிலும் எட்டு ஹகார மெய்யை உகார உயிர் புணர்த்து எழுதி, அவ் இதழ்கள் எட்டிலும் பொருந்தி நிற்க, `க்ரோம், ஹ்ரோம்` என்பவற்றைப் பொறித்து, இதழ்களின் இடப்பக்கங்களில் `ஆம், க்ரோம், என்னும் பீசங்களை எழுதுக.


#1314. புவனாதிபதியை பூசிப்பாய்


மேவிய சக்கர மீது வலத்திலே
கோவை யுடைய குரோம்சிரோம் என்றிட்டுத்
தாவில் இரீங்காரத் தால்சக் கரஞ்சூழ்ந்து
பூவை புவனா பதியைப்பின் பூசியே.


பொருந்திய சக்கரத்தின் வெளியே உள்ள இதழ்களின் வலப்பக்கங்களில் எங்கும் வரிசையாக, `க்ரோம், ஹ்ரோம்` என்பவற்றை எழுதி, எல்லாவற்றையும் கேடில்லாத ரீங்காரத்தால் வளைத்து முடித்தபின், புவனாபதியாகிய அம்மையை வழிபடு.

 

Latest ads

Back
Top