திருவாசகமே மணி வாசகம்

  • Thread starter Thread starter ramachandran girija
  • Start date Start date
Status
Not open for further replies.

மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம்
மின்ஒளி கொண்ட பொன்ஒளி திகழத்
திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும்.
( திருவாசகம்:அண்டப்பகுதி:125-126)

தீப்பிழம்பாய் அம்மையப்பனிடம் தோன்றிய பச்சைமரகத மணியின் ஒளியும், மாணிக்கச் செம்மணியின் ஒளியும் அருளும் அறிவுமாய்ப் பெருகி, மின்னல் போன்ற பொன்ஒளி எங்கும் பரந்து விரிய, நான்கு முகங்களையுடைய திசைமுகனாம் பிரமன், எங்கும் சென்று தேடியும் காணக் கிடைக்காமல் தன்னை ஒளித்துக் கொண்டான் இறைவன் என்கிறார். உண்மையில், இறைவன் எங்கேயும் ஒளிந்து கொள்ளவில்லை; ‘நான் இறைவனது முடியைக் காண்பேன்’ என்னும் அகங்காரமே பிரமனின் கண்ணை மறைத்தது. பிரமனைப்போல் ‘நான்’ என்னும் 'தன்முனைப்பு' கொண்ட மனிதர்கள் அனைவரையும் குறிப்பதற்காகவே, ‘தேடினர்க்கு’ என்று பன்மையில் கூறினார் மணிவாசகர். (குவால்-மேடு, பிறக்கம்-பெருக்கம்)

 

கைகாட்டி மரமும் பயணமும்

ஆகமநூல்கள் கூறும் திருக்கோவில் திருத்தொண்டு, இறைவனுக்கு வீட்டில் செய்யும் பூசைகள், உள்ளத்தையும், உடலையும் ஒருநிலைப்படுத்தும் ‘யோகம் அல்லது யோகா’ ஆகிய ‘சரியை, கிரியை, யோகம்’ போன்ற படிநிலைகளை ‘முறையுளி’ என்பார்கள். இப் படிநிலைகளில் முயற்சிப்பாருக்கும் இறைவன் அகப்படவில்லை என்கிறார் மணிவாசகர். இப்படிநிலைகள், ‘மதுரைக்குச் செல்லும் சாலை’ என்பதுபோல, இறைவனை அடைவதற்கான வழிசொல்லும் கைகாட்டி மரமாகும்;

 
சாலையில் பயணிக்காமல், கைகாட்டிக் கம்பத்தின் அடியில் நின்றுகொண்டு மதுரையை அடைந்துவிட்டதாக நினைப்பவரைப்போல், படிநிலைச் சடங்குகளை மட்டுமே செய்துவிட்டு, ‘அன்புத்தொண்டு’ என்னும் உணர்வுபூர்வமான சாலையில் பயணம் செய்யாதவர்கள் இறைவனைச் சென்று அடையமுடியாது என்பதை ‘முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும்’ என்றார் மணிவாசகர்.

 
மனம், சித்தம் போன்றவைகளை ஒருமைப்படுத்தி, உற்றார், உறவினர் கண்டு வருந்துமளவிற்கு உறைபனி நீரினில் நின்றும், தீயிடை நின்றும், உடலை வருத்திக் கடுந்தவம் புரிவோருக்கும் இறைவன் அகப்படுவதில்லை என்கிறார் பெருமான். இத்தகைய கடுந்தவத்தின் பயனாக, நீர்மேல் நடக்கும் ஆற்றலைப் பெற்ற சாதகன் ஒருவன் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் சென்று, கங்கைநதி நீரின்மேல் நடந்து காட்டினான். அத்தகைய ஆற்றல் எப்படிக் கிடைத்தது என்று ராமகிருஷ்ணர் வினவ, ஐம்பது ஆண்டுகள் அவன் செய்த பல்வேறு கடுந்தவங்களைப் பற்றி மூச்சுவிடாமல் கூறினான்.
 
ராமகிருஷ்ணர் பெருவியப்பு அடைந்து பாராட்டுவார் என்று எதிர்பார்த்தவனுக்குப் பெரும் ஏமாற்றம். ‘என் சாதனை தங்களை வியப்படையச் செய்யவில்லையா சுவாமி?” என்று பணிவாக வினவினான். ‘ஓட்டைக் காலணாவைக் கொடுத்தால் ஓடக்காரன் அக்கரைக்குக் கொண்டு சேர்த்துவிடுவான்; இத்தகைய அற்பமான காரியத்துக்காக விலைமதிப்பில்லாத வாழ்நாளின் ஐம்பது ஆண்டுகளை வீணடித்து விட்டாயே! இனி, எஞ்சிய வாழ்நாளையாவது பயனுற வாழ்வாயாக!” என்றார் பரமஹம்சர்.

 
கடும்தவம் செய்து இறைவனைக் காண முயற்சிப்பதைக் காட்டிலும் எளிதானதும் பயன் தருவதும் அன்பு வழியிலான தொண்டுஎன்று உணர்வோம்.
வேதம், ஆகம நூல்களில் கூறப்பட்ட சாத்திர சடங்குகளின் அடிப்படையில் இறைவனைக் காண முயல்பவர்கள், அச்சடங்குகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதால், அன்பும், தொண்டும் வெளியேற்றப்படுகின்றன; அவற்றுடன் இறைவனும் வெளியேறிவிடுகிறான்.
இறைக்காட்சியினால் அனைத்து நிகழ்வுகளையும் காண இயன்ற மணிவாசகரின் திருவாசகத்தில் இன்னும் சில நிகழ்வுகளை காண்போம்.
 
பக்தியால் உள்ளம் குழைந்து அன்பில் உருகி, தொண்டாற்றுபவர்களிடம், தானே வந்து, அருள் சுரந்து, ஆட்கொள்ளும் இறைவனின் தன்மை உணராமல், இறைவனை அடைய, தன் முனைப்புடன் மனிதர்கள் செய்யும் மேலும் சில முயற்சிகளையும், அவைகளால் இறைவனைக் காணமுடியாமல் அவர்கள் தவிப்பதையும் மணிவாசகரின் திருவாசகத்தால் இப்போது காண்போம்.
அன்பாலயமும் ஆகம ஆலயமும்
ஆகமவிதிப்படி மாபெரும் சிவாலயம் கட்டி, குடமுழுக்குச் செய்ய நாளும் நேரமும் குறித்த பல்லவ மன்னனின் கனவில் தோன்றிய இறைவன், மன்னன் குறித்த சமயத்தில் பூசலார் என்னும் அன்பர் கட்டிய சிவாலயக் குடமுழுக்கு விழாவிற்குச் செல்லவிருப்பதால், வேறு நேரம் குறிக்குமாறு கூறிமறைந்தான். கனவு கலைந்த பல்லவ மன்னன் பூசலார் கட்டிய சிவாலயக் குடமுழுக்கு விழாவுக்குப் போக, பூசலாரை அழைத்து விசாரித்தான். தன் மனத்தில் தான் அன்பால் கட்டிய சிவாலயத்தை மன்னனிடம் பெருமைப்படுத்திய இறைவனின் கருணையைப் பூசலார் விளக்க, ஆகமவழியினும் மேலான அன்பு வழியின் பெருமை உணர்ந்து, தன்முனைப்பு நீங்கி, இறையருள் பெற்றான் பல்லவ மன்னன்.

 
இறைவன் ஆணும் அல்லன்; பெண்ணும் அல்லன்; இருந்தும், அன்பினால் இறைவனை வழிபடுபவர்கள், அவரவர் சமயங்கள் காட்டிய வழிப்படி, இறைவனை ஆண் உருவிலோ, பெண் உருவிலோ, ஆணும்-பெண்ணுமான அம்மையப்பனாகவோ, ஆணும்பெண்ணும் கலந்த அர்த்தநாரி உருவிலோ வழிபடுவார்கள். இவர்கள் அனைவரையும் எந்தவித வெறுப்பும் இல்லாமல் ஒரேவிதமாக நோக்கி அருளும் இறைவன், பெண் எனக் கருதி வழிபட்டவர்களுக்கு ஆண் உருவில் தோன்றியும், ஆண் எனக் கருதி வழிபட்டவர்களுக்கு பெண் உருவில் தோன்றியும், அம்மையப்பன் எனக் கருதி வழிபட்டவர்களுக்கு அவ்விரண்டும் அல்லாத அர்த்தநாரி உருவில் தோன்றியும் காட்சி தந்து, அவரவர் அறிவின் சிறிய எல்லையையும், அவைகளுக்கு அப்பாற்பட்ட தன்னியல்பின் பேரளவினையும் அவர்களுக்கு உணர்த்தி, ஆட்கொள்கிறான்.

 
சிறிதளவு இறைவனின் தன்மையை உணர்ந்தவுடன், இறைவனைத் தானே முற்றிலும் உணர்ந்ததாகக் காட்டிக்கொள்ளும் இயல்புடைய மனிதர்களையும் வெறுக்காமல் ஆட்கொள்ளும் இறைவன், அவர்களின் ஆணவத்தை நீக்கிய பின்பே ஆட்கொள்கிறான் என்கிறார் மணிவாசகர்.
பிறவியின் நோக்கம்
அகஇன்பங்கள், புறஇன்பங்கள் அனைத்தையும் வெறுத்து, ஐம்புலன்களையும் அடக்கி, பெரிய மலையில் ஏறிச் சென்று, உணவு முதலிய அனைத்தையும் துறந்து, எலும்பும் தோலுமாகிய உடலுடன் கடும்தவம் செய்யும் முனிவர்களின் அறிவுக்கும் எட்டாதவன் இறைவன் என்கிறார் பெருமான்.

 
இவ்வுலகு, உலகின் நுகர்பொருட்கள், உடம்பு, உடம்பில் உள்ள ஐம்பொறிகளான புறக்கருவிகள், அகக்கருவிகளான ஐம்புலன்கள், மனம், சித்தம், புத்தி, அகங்காரம் ஆகியவை அனைத்தையும் உயிர்களுக்கு இறைவன் படைத்துத் தந்ததன் நோக்கம், இவைகள் மூலம் உயிர்கள் அறிவு பெற்று, இறைவனின் கருணையையும், அருளையும் உணர்ந்து, சக உயிர்களிடம் அன்பு செலுத்தி, தொண்டு செய்து, இறைவனின் அருளைப்பெற்று, இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு, முழுமைப் பேரின்பம் பெறுவதற்கே. இதை உணராது, இறைவன் தந்த உடம்பையும், கருவிகளையும், ‘யான், எனது’ என்னும் ‘தன் முனைப்பு’ அறிவால் வாட்டி, வதைத்துத் தவம் செய்வது, இறைவனின் கருத்துக்கு மாறானது என்பது மணிவாசகர் கருத்து.

அடக்குதலும் அறிதலும்

ஐம்புலன்களையும் அடக்கும் தேவர்களும் இல்லை என்பதால் அவைகளை அடக்குக என்பவர்கள் அறிவிலாதவர்கள்; ஐம்புலன்களும் அடங்கிவிட்டால், அறிவற்ற சடப்பொருளாகிவிடும் இவ்வுடல் என்பதால், ஐம்புலன்களையும் அடக்காத அறிவை அறிந்தேன் என்கிறார் திருமூலநாயனார். (அசேதனம்- சடப்பொருள்) இதன் பொருள், அடக்க நினைத்தால் அடங்காமல் அலையும் ஐம்புலன்களும், மனமும், அவைகளை அன்பே சிவமாம் இறையருள் அறிவைக்கொண்டு அறிய முயன்றால், அவ்வறிவுக்கு, ஐம்புலன்களும் மனமும் அடங்கிப் பணிசெய்யும் என்பதாகும். ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்பார் மணிவாசகர்.

 
அஞ்சும் அடக்குஅடக்கு என்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்குஇல்லை;
அஞ்சும் அடக்கில் அசேதனம் ஆம்என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே - திருமந்திரம் :2௦33

“மனம்: அடக்க நினைத்தால் அலையும், அறிய முயன்றால் அடங்கும்” என்பது

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் அருள்வாக்கு.


இவ்வாறு பல்வேறு வகைப்பட்ட முயற்சிகளுக்கும் அகப்படாமல் ஒளித்து நின்ற கள்வனாகிய இறைவனை இன்று தம் கண்ணெதிரே கண்டோம் என்கிறார் மணிவாசகர். இங்கு கண்டேன் என்று தன்னை மட்டும் ஒருமையில் கூறாமல், ‘கண்டனம்’ என்று பன்மையில் கூறியது கவனிக்க வேண்டிய செய்தி. முதலமைச்சர் திருவாதவூரருடன் சென்ற அனைவரும் மறை-பயில் அந்தணன் வடிவில் குருவாக நின்ற இறைவனைக் கண்டிருக்கவேண்டும். மனிதவடிவில் இருந்த குருவை இறைவன் என்று மற்றவர்கள் கருதவில்லை. இறைவன் என்று உணர்ந்துகொண்டதால் மட்டுமே, முதலமைச்சர் திருவாதவூரர் மாணிக்கவாசகரானார்.


 
பண்டே பயில்தொறும் இன்றே பயில்தொறும்
ஒளிக்கும் சோரனைக் கண்டனம்
ஆர்மின் ஆர்மின் நாள்மலர்ப் பிணையலில்
தாள்தளை இடுமின்
சுற்றுமின் சூழ்மின் தொடர்மின் விடேன்மின்
பற்றுமின் என்றவர் பற்றுமுற்று ஒளித்தும் - திருவாசகம்:அண்டப்பகுதி:140-145

ஒருவருடைய பொருளை, அவர் அறியாமல் திருடிக்கொள்பவனையே ‘சோரன்’(கள்வன்) என்று கூறுவோம். அனைத்து உடல்வாழ் உயிர்களின் ஆழ்மனத்தின் உள்ளே அவைகள் அறியாமல் கலந்து வாழ்வதால் ‘ஒளிக்கும் சோரன்’ என்றார் பெருமான். இவ்வாறு நமக்குள் உள்ளே ஒளிந்து கொண்டிருக்கும் சோரனாம் இறைவனை இங்கே, அங்கே என்று வெளியே தேடி அலையும் நாம், நமக்குள் தேட முயற்சி செய்யாததால்தான் அவன் அகப்படவில்லை.

 
இறைவனைக் கண்ட இறையனுபவ ஆனந்தத்தால் தன்னை மறந்து, “விரைந்து வாருங்கள்! புதிய நறுமண மலர்மாலைகளால் இறைவனின் திருப்பாதங்களைக் கட்டுங்கள்; அவனைச் சுற்றி வளைத்துக் கொள்ளுங்கள்; தொடருங்கள்; விடாமல் பிடியுங்கள்என்ற முதலமைச்சர் வாதவூரரின் ஆணையை மீறி இறைவன் தன்னைப் பிறர் கண்களுக்கு ஒளித்துக் கொண்டான்.


இதன்பின், மணிவாசகராக மாறிவிட்ட திருவாதவூரரின் முழுமையான இறையனுபவப் பிழிவை, தேனை, பாலை, தெளிந்த கருப்பஞ்சாற்றின் இனிமையை, கனிந்த திருவாசகத் தேனால் சுவைக்க காத்திருப்போம்.
 
கல்வியும் செல்வமும் கடந்த இறைவன்

தன்முனைப்புடன் முயன்ற பிரம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கும், கடுமையான தவம் புரிந்த முனிவர்களுக்கும், தன்னைக் காட்டாது ஒளித்துக்கொண்டான் சிவபெருமான். “தனக்கு ஒப்புமை இல்லாதவனாகிய தனித்தலைமைக் கடவுளாம் சிவபெருமான், என்னைப் போன்ற ஒன்றுக்கும் அற்றவர்கள் பலரும் கேட்குமாறு, ஓர் அந்தணன் வடிவில் தோன்றி, தனது முழுமுதல் தன்மையைத் தானே எடுத்துச் சொல்லி, என்னை வலிந்து அழைத்து, ஆட்கொண்டு அருளிய பேரருள் தன்மைதான் என்னே?” என்று இறைவனின் அடியவர்க்கு அருளும் எளிய தன்மையை வியந்து உருகுகின்றார் மணிவாசகப் பெருமான்.

 
கொம்புத்தேனால் உடல் செய்தான்
“இறைவனின் ஒப்பற்ற அன்பு விளைவித்த இன்பத்தால் என் எலும்புகளும் உருகின; என்னுடல், கடலலை போல ஆர்ப்பரித்து ஓங்கி உயர்ந்து எழுந்து, தலைதடுமாறி வீழ்ந்து புரண்டு அலறவும், பித்தனைப் போல மயங்கி, மதக்களிப்பு அடையும் என்னைக் கண்டவர்கள், பாண்டியப் பேரரசின் முதலமைச்சருக்கு என்னவாயிற்று என்று கவலைப்படவும், ஊரார் மருளவும், என்னை நன்கு அறிந்தோர், என் நிலையைக் கேள்விப்பட்டு வியக்கவும், மதம் பிடித்த யானை தன் பாகனை மேலே ஏறவிடாமல் அங்குமிங்கும் ஓடுவதைப் போல், இறையின்ப வெள்ளத்தைத் தாங்கமுடியாமல் அரற்றி, என் ஊனுடல் நிலை தடுமாறிற்று; இந்நிலையை மாற்றி, இறையின்பம் தாங்கும் வகையில், இறைவன் என் மனதையும், என்னுடல் உறுப்புக்களையும், கொம்புத் தேனால் செய்ததைப்போன்ற இனிய சுவையுடைய நுண்ணுடம்பாய்ச் செய்தான்” என்று தன் இறையனுபவத்தை நம்மோடு பகிர்கின்றார் மணிவாசகர்.

 
உளையா அன்பு என்பு உருக ஓலமிட்டு
அலைகடல் திரையின் ஆர்த்து ஆர்த்து ஓங்கித்
தலை தடுமாறா வீழ்ந்துபுரண்டு அலறிப்
பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து
நாட்டவர் மருளவும் கேட்டவர் வியப்பவும்
கடக்களிறு ஏற்றாத் தடம் பெருமதத்தின்
ஆற்றேன் ஆக அவயவம் சுவைதரு
கோல் தேன் கொண்டு செய்தனன் – திருவாசகம்: அண்டப்பகுதி: 150-157

பேரின்பத்தின் பரவசநிலை

“அறிவதற்கு அரிய இறைவன், உள்ளங்கை நெல்லிக்கனி போல எனக்கு எளியவன் ஆனான்; என் இறையனுபவத்தைச் சொல்லால் விளக்கமுடியாமல் தவிக்கிறேன்; இறைவா நீ வாழ்க! முதலமைச்சராக வந்த என்னை, நீ இவ்விதம் பேரின்ப வெள்ளத்தில் இருக்கச் செய்ததை இன்னது என்றும் நான் அறியேன்! நாயேனாகிய நான் இவ்வின்பத்துக்குத் தகுதி உடையவன் அல்லேன்; இறையின்பத்தால், ‘நான்’, ‘எனது’ என்னும் பேதங்கள் செத்து ஒழிந்தன! ஒன்றுக்கும் அற்ற அடியேனுக்கு இறைவன் அருளியது எதற்காக என்று அறியேன்!
 
இறையின்பத்தை எவ்வளவுதான் பருகினாலும், விழுங்கினாலும், ஆரா வேட்கையுடன் பொறுக்க மாட்டாமல் உள்ளேன்!” என்று பேரின்பப் பரவசத்தின் நிலையை நமக்குக் காட்டுகிறார் பெருமான்.
தடக்கையின் நெல்லிக்கனி எனக்கு ஆயினன்;

சொல்லுவது அறியேன்! வாழி! முறையோ!
தரியேன் நாயேன் தான் எனைச் செய்தது
தெரியேன்! ஆஆ செத்தேன்! அடியேற்கு
அருளியது அறியேன்! பருகியும் ஆரேன்!
விழுங்கியும் ஒல்ல கில்லேன்!

(அண்டப்பகுதி: 162-167)


 
அன்பால் உடலமைத்தான்

“சொல்லால் எடுத்துக்காட்ட முடியாத இறைப்பேரின்ப அமுதம் என் உடம்பின் மயிர்க்கால்கள் தோறும் தேக்கி நிறைத்தான்; நாய் போன்ற என்னுடல் உள்ளேயே தன் இருப்பிடத்தை அமைத்துக்கொண்டான்; என் உள்ளிருந்து, இனிய தேன் கொண்டு பாய்ச்சி நிரப்பிய அற்புதமான அமுதங்கள் கசிந்து ஒவ்வொரு எலும்பின் சிறுசிறு துளைகள்தோறும் ஏறும்படிச் செய்தான் இறைவன்; அன்பால் இடைவிடாமல் உருகும் என் உள்ளத்தையே மூலப்பொருளாகக் கொண்டு ஓர் உருவம் செய்து, அங்கு,
அன்பால் செறிந்து ஊறும் உடலை எனக்கு அமைத்தான்; நன்கு விளைந்து முற்றிய கரும்பையும், விளாங்கனியையும் வயிறார உண்ட இன்பத்தில் திளைத்திருக்கும் ஆண்யானையைப் போல, என்னையும், பேரின்பத்தில் என்றும் இருப்பதாகச் செய்தான்; பிரம்மனும் மாலும் அறியாத எம்பெருமானின் பெருங்கருணையாம் வான் தேன் என்னிடம் கலந்ததால், அருளோடு பேரின்பமும் என்னுள்ளேயே நிறையும்படி செய்தான்” என்று தன் இறையனுபவப் பேரின்பப் பகிர்வை, அற்புதமாக நிறைவுசெய்கின்றார் மணிவாசகப் பெருமான். (குரம்பை - உடல், எற்பு – எலும்பு, அள்ளூறு – செறிந்து ஊறும், ஆக்கை – உடல், கன்னல் – கரும்பு, களிறு – ஆண்யானை)

 
வாக்கு இறந்து அமுதம் மயிர்க்கால் தோறும்
தேக்கிடச் செய்தனன்! கொடியேன் ஊன்தழை
குரம்பை தோறும் நாய் உடல் அகத்தே,
குரம்பைகொண்டு, இன்தேன் பாய்த்தி, நிரம்பிய
அற்புதம் ஆன அமுத தாரைகள்,
எற்புத் துளைதொறும் ஏற்றினன்! உருகுவது
உள்ளம் கொண்டு ஓர் உருச்செய்து ஆங்கு, எனக்கு
அள்ளூறு ஆக்கை அமைத்தனன்! ஒள்ளிய
கன்னல் கனிதேர் களிறு எனக் கடைமுறை
என்னையும் இருப்பது ஆக்கினன்! என்னில்
கருணை வான்தேன் கலக்க,
அருளொடு பரா அமுது ஆக்கினன்,
பிரமன் மால் அறியாப் பெற்றி யோனே!
(அண்டப்பகுதி: 170-182)

 
மணிவாசரின் இறையனுபவப் பகிர்வில், ‘கடைமுறை என்னையும் இருப்பது ஆக்கினன்’ என்ற சொற்கள் மிகமிக முக்கியமானவை; மனிதர் எவருக்கும், இறைவனை வசப்படுத்தப் பயன்படும் திருவாசகத்தின் மூலம், மணிவாசகரை, இப்பூவுலகிலே என்றும் இருப்பதாகச் செய்தான் இறைவன் என்பது இதன் உட்பொருள். இதைத் தனி அகவல் என்றே பரவசமடைவார் வள்ளலார்.
மற்றொரு முக்கியமான பகுதி ‘பிரமன் மால் அறியாப் பெற்றியோன்’ என்பது; இதன் உட்பொருள், மணிவாசகர் பெற்ற கல்வியாலோ, முதலமைச்சராக அவர் பெற்ற செல்வத்தாலோ அவருக்கு இறையருள் கிட்டவில்லை; இறைவனின் பெருங்கருணையாலேயே கிடைத்தது என்பதே. இறைவன் முப்புரம் எரித்த பேரருள் செயலை, புராணங்களிலிருந்து வேறுபட்ட, அறிவுபூர்வமான புதிய பொருளுடன், திருவாசகத்தில் மணிவாசகர் விளக்குவதை அறிய காத்திருப்போம்.
 
முப்புரங்களை எரித்த சிவன்

திருவாசகம் முழுவதுமே மணிவாசகரின் இறைவனுபவப் பிழிவு ஆகும். மனித உடலிலேயே இறையனுபவம் பெற்ற மணிவாசகரின் ‘சொல்லால் விளக்க இயலாத’ பெருவிளக்கமே அண்டப்பகுதியில் நாம் காணும் திருவாசகம். ‘பூமியில் சிலநாள் வாழ்ந்து, பின் தில்லை வருக’ என்ற இறைவன் ஆணையிடுகிறார்; இறைவனைப் பிரிந்த பேரிழப்பு, நரகத்தினும் கொடியதாய், பேரிருளாய் மணிவாசகரைச் சூழ்ந்து வருத்தியதால் பிறந்த திருவாசகப் பதிகங்கள் நீத்தல் விண்ணப்பம், செத்திலாப்பத்து, அடைக்கலப்பத்து, வாழாப்பத்து போன்றவை. இந்தத் துன்பநிலையைக் கடந்தபின் தோன்றும் பேரின்பம் விளைவித்த திருவாசகப் பதிகங்கள் இளைய தலைமுறையை இறைத்தொண்டிலும், வழிபாட்டிலும் நெறிப்படுத்தும் திருவெம்பாவை, திருவம்மானை, திருக்கோத்தும்பி, திருப்பள்ளியெழுச்சி போன்றவை.

 
முடிவாக, அனைத்தையும் ஒன்றாக உணர்ந்து, பெரும்பொருளோடு ஒன்றுபட்டு அமைந்த குறைவிலாது எழுந்த நிறையனுபவத்தால் தோன்றிய திருவாசகப் பதிகங்கள் சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், போற்றித் திருவகவல், அற்புதப்பத்து, பிடித்தபத்து, திருவார்த்தை, யாத்திரைப்பத்து போன்றவை.

 
இந்நான்கு வேறுநிலைகளின் இடைப்பட்ட நிலைகளில் விளைந்த திருப்புலம்பல், ஆசைப்பத்து, புணர்ச்சிப்பத்து போன்ற திருவாசகங்களும் உண்டு. துன்பம் மிகுதியும், இடைஇடையே இன்பவாழ்வும் கலந்த வாழ்வின் அனைத்து நிலைகளிலும், நம்மை உருக்கி, நெறிப்படுத்தும் திருவாசகங்களில் நமக்கான விடியலைக் காணலாம்.

 
அடியவர்கள் அனைவருக்கும் பேரின்பம்

வலிமைமிக்க பழம்பெருநகர்களான முப்புரங்களையும், தன்னுடைய எழில்மிக்க அழகிய நகைப்பினாலேயே எரித்து வீழ்த்தி, இந்திரன் உள்ளிட்ட தேவர்களைக் காப்பாற்றினான் இறைவன்; அப்பேரருள் செயலைப் போன்று, இறைவன் எம்மை ஆட்கொண்டபோது, அடிமைச் சிறுவீடுகளில் வசிக்கும் தன்னுடைய அடியவர்கள் ஒருவர்கூட விடுபட்டுப் போகாமல், தன்னுடைய அருள் என்னும் பெருந்தீயினால் ஆட்கொண்டு, தன்னுடன் ஒன்றாக்கிக்கொண்டான் என்கிறார் மணிவாசகப் பெருமான்.
 
ஏற்றார் மூதூர் எழில்நகை எரியின
வீழ்வித்து ஆங்கன
அருள் பெருந்தீயின் அடியோம் அடிக்குடில
ஒருத்தரும் வழாமை ஒடுக்கினன்
(அண்டப்பகுதி:158-161)
வடமொழி மகாபாரத்தின் அநுசாசந பர்வதத்திலும், யஜூர் வேதத்திலும், சரபோபநிடதத்திலும், மச்சபுராணம், கந்தபுராணம், லிங்கபுராணம் ஆகியவைகளிலும் காணப்படும் இறைவன் திரிபுரம் எரித்த புராணத்தின் சுருக்கம் இது. பெரும்தவம் செய்து, வித்யுமாலி, கமலாட்சன், தாரகாட்சன் ஆகிய மூன்று அசுரர்கள் இரும்பு, வெள்ளி, தங்கத்தாலான பறக்கும்திறன்கொண்ட முப்புரங்களைப் பெற்றனர்; அவைகளை, இந்திரனால் பெரும்படைக்கலங்களைக் கொண்டும் அழிக்க முடியவில்லை; தேவர்கள் அனைவரும் மகாருத்திரரைச் சரணடைந்து, முப்புரங்களை அழித்து, தங்களைக் காக்க வேண்டினர்.

 
Status
Not open for further replies.
Back
Top