திருவாசகமே மணி வாசகம்

  • Thread starter Thread starter ramachandran girija
  • Start date Start date
Status
Not open for further replies.
மாணிக்கவாசகரைப் பலப்பல கடினமான சோதனைகளும், துயரங்களும் பெருமழைபோல் தாக்கின. அவைகளின் காரணமாக, உலகின் பலதரப்பட்ட குறைபாடுள்ள மனிதர்களின் குற்றங்களைத் தாமே செய்ததாகத் தம்பால் ஏற்றிக்கொண்டார் மணிவாசகர்; அத்துன்பச்சூழலில், அவர்களாகவே மாறிப்போய் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கியதால் பிறந்தன பல்வேறுவகைத் திருவாசகப் பாடல்கள்.

திருவாசகப் பாடல்களில் கரையும் குறைபாடுள்ள பலதரப்பட்ட மனிதர்கள், “இதோ இப்பாடல்கள் எமக்காகவே படைக்கப்பட்டன; “இவை நமக்கானவை” “ என்று உணர்வார்கள், கடைத்தேறுவார்கள் என்பது உறுதி. மாணிக்கவாசகர் முதன் முதலில் சுவைத்த இறையின்பம் குறித்து விரிவாக அறிய நமக்கெல்லாம் ஆசை உண்டல்லவா? தாம் பெற்ற முதல் இறைஅனுபவத்தை மணிவாசகர் நம்முடன் அணுஅணுவாகப் பகிர்ந்துகொள்வதை காண்போம்.
 
மாணிக்கவாசகர் இறைவனின் கட்டளைப்படியே பல சிவத்தலங்களையும் தரிசித்து, தில்லைக்கு வருகின்றார். தில்லைவாழ் சிவனடியார்கள் மாணிக்கவாசகரை வணங்கி, வரவேற்று மகிழ்ந்தனர். பின் அடிகளிடம், “நாங்கள் சிவனடியார்கள்; சிவபெருமானின் பெருமையெல்லாம் அறிந்திருக்கின்றோம்; ஆயினும் கண்ணால் காணும் பேறு பெறவில்லை; பிரம்மனும், திருமாலும் காணமுடியாத சிவபெருமானைத் திருப்பெருந்துறையில் தாங்கள் கண்டுகளித்த அனுபவத்தை எங்களுக்கு அறியத் தாருங்கள்” என்று விண்ணப்பித்தனர்.
 
அடியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்டதும், இறைப்பேரின்ப நிகழ்வுகளின் நினைவுகள் மாணிக்கவாசகப் பெருமானை ஆட்கொண்டன; தம்மைச் சுற்றி நிற்கும் அடியாரை மறந்தார்; தம்மையே மறந்தார்; இறைப்பேரின்ப வெள்ளத்தில் திளைத்தார்; அடிகளின் மனம், மொழி, மெய் எல்லாம் கனிந்துருகத் ‘திரு’வாம் இறைவனில் கரைந்த அனுபவத்தை விளக்கும் ‘கோயில் திருப்பதிகம்’ என்னும் பத்துப் பாடல்களும், முன்னிற்கும் இறைவனுடன் பேசும் திருவார்த்தைகளாக, சிவனடியார்கள் அனைவரின் ஊனினை உருக்கி, என்புருக்கும் இறைக்காட்சியாய் விரிந்தது.

 
இறைவனை உள்ளவாறு காண ...
“தேனினும் தெளிவான சிவபெருமானே, திருப்பெருந்துறையில் உறையும் சிவனே! சொர்க்கப்பதவி, பிரம்மலோகப் பதவி, வைகுண்டப் பதவி போன்று முடிவில்லாத பல பதவிகள் எல்லாவற்றையும் கடந்த இன்பமே! என்னுடைய அன்பே! உன்னை எனக்கு உணர்த்தும் கடமைகளிலிருந்து மாறி நின்று, என்னை மயக்கிடும் மெய், வாய், கண், மூக்கு, செவியாம் ஐந்து வஞ்சகப் புலன்களின் வாயில்களையும் அடைத்து, அமுதமாய்ச் சுரந்து நின்று, என்னுள்ளே உதிக்கின்ற இறையொளியே! யான் உன்னை உள்ளவாறு கண்டதை அடியவர்கள் காணும்படி வந்தருள்வாயாக!” என்று அருளிய மாணிக்கவாசகப் பெருமான் பரவசத்தில் மூழ்கினார். (தேறலின் தெளிவே - தேனின் தெளிவானவனே)

 
மாறிநின்று என்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியடைத்து அமுதே
ஊறிநின்று என்னுள் எழுபரஞ் சோதி உள்ளவா காண வந்தருளாய்
தேறலின் தெளிவே சிவபெருமானே திருப்பெருந் துறையுறை சிவனே
ஈறு இலாப் பதங்கள் யாவையுங் கடந்த இன்பமே என்னுடை அன்பே.
திருவாசகம்:20-1

 
இந்திரன், பிரம்மன், திருமால், உருத்திரன் உள்ளிட்ட எண்ணற்ற தேவர்களுக்குரிய எண்ணற்ற பதவி இன்பங்களினும் மேலான இன்பவடிவினன் சிவபெருமான்-எனவே, 'ஈறு இலாப் பதங்கள் யாவையுங் கடந்த இன்பமே' என்றார்; ‘அன்பே சிவம்’ ஆகையால், 'என்னுடை அன்பே' என்றார்; மாறி நின்று மயக்குதல் என்பது, இறைநெறியில் சென்று பேரின்ப முழுமையறிவைப் பெற விடாமல் வழிமாறச் செய்வது; ஏனெனில், மனம் என்னும் கருவியின் கட்டுப்பாட்டில் உள்ள ஐந்துபுலன்களும் அவைகளுக்குரிய ஐந்துபொறிகள் வழியாக மனதைத் தம் வழியே திசைதிருப்பும் தன்மையுடையன.

 
மயக்கும் புலன்கள்
அறிவு பெறுவதில் நமக்கு வரமாகச் செயல்படும் பொறி,புலன்களே உலகச் சிற்றின்பம் துய்ப்பதற்கும் வாயில்களாக உள்ளமையால், பலவேளைகளில் மனதைத் தீய வழிகளில் திசைமாற்றும்போது சாபமாக மாறிவிடுகின்றன. எனவேதான், அவைகளை ‘மயக்கும் வஞ்சப்புலன் ஐந்தின் வழி’ என்றார் மணிவாசகர். எனவே இவைகளின் துணையுடன் இறைவனைக் காண இயலாது. சுவை, ஒளி, தொடுதல், ஓசை, மணம் என்று சொல்லப்படும் ஐம்புலன்களையும், மனதையும் தன்வயப்படுத்தி அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனுக்கே இவ்வுலகம் வசப்படும் என்கிறார் திருவள்ளுவர்.

 
சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
-திருக்குறள் 27
அப்பர் சுவாமிகளும் ‘இறைவனின் அருள்’ என்னும் கண்கொண்டு கண்டாலொழிய, மற்றைப் பொருள்கள்போல இன்னவகையுட்பட்டவன், இன்ன நிறத்தையுடையவன் , இன்ன வடிவத்தை உடையவன் என்று இவனைச் சொல்லோவியமாகவோ எழுத்தோவியமாகவோ எழுதிக் காட்டல் இயலாது என்கிறார்;

 
இறைவனின் அருள் என்னும் பேரின்பம் உள்ளேயிருந்து ஊறி எழும்போது, மயக்கும் ஐம்புலன்களும் செயல்மறந்து போவதால், ‘அடைத்து அமுதே ஊறி நின்று' என்றார். உலகோர் அனைவரும் இறைவனை கண்டுகளிக்குமாறு வழிகாட்டும் விருப்பத்தால், 'உள்ளவா காண வந்தருளாய்' என்றார். இறைவன் வெளிப்பட்டுத் தோன்றும்போது, புற உலகத்தையே காணும் உடலும் புலன்களும் ‘மாறி நின்று மயக்கும்’ செயல்மறந்து, இறைக்காட்சி காணும் புலன்களாக மாறும். தளைகள் அணுகவியலா இறைவன் உயிரை அணுகினால், உயிரைக் கட்டிய தளைகள் நில்லாமல் சென்று ஒழியும் என்பது திருமூலர் வாக்கு.

 
சார்ந்த வண்ணம் ஆதல்உயிரின் தன்மை (தத் த்வம் அசி) - நீ அதுவாக இருக்கிறாய்என்று வேதமும் கூறும். அதாவது, “நீ உடலைச் சார்ந்து, ‘உடலே நான்என்று வாழ்கிறாய்என்கிறது வேதம். உடல்-பொறி-புலங்களால் கட்டுண்ட நாம்உடல்-பொறி-புலன்களை நம் கட்டுக்குள் கொண்டுவருவோம்; இறைவனைக் காண்பதற்கு இதுவே முதல்படி ஆகும். இதில் வெற்றி கிட்டும்போது, நம்முள்ளும் அமுதே.
ஊறிநின்று பரஞ்சோதியாம் இறைவன் எழுந்து, உள்ளபடியே நாம் காண வந்தருள்வான் என்பது உறுதி. இறைக்காட்சிக்கான இரண்டாவது தகுதியைப் பேசும் திருவாசகத் தேனை சுவைப்போம்.
 
புலனடக்கத்தை இறைவனைக் காண்பதற்கான முதல்படியாகக் கண்டோம். ‘மருந்தைக் குடிக்கும்போது குரங்கை நினையாதே’ என்றால் குரங்கு மட்டுமே நினைவில் இருப்பதுபோல், மனதால் புலன்களை அடக்கும் கடினமான கூர்நோக்குப் பயிற்சிகள் மிகவும் கடினமானவை; பலன் தருவதைப் போல் தோன்றினாலும், எப்போது வேண்டுமானாலும் புலன்களின் வழியே மனம் வழிதவறிப் போகும் ஆபத்துள்ளது. புலனடக்கத்துக்கு மிக எளிதான வழி, இறைவனிடம் அன்பில் கரைந்து போதலாகும். தன்னுள்ளே அமுதாய் ஊறி எழுந்த இறைக்காதலால், “என்னுடை அன்பே” என்றுருகிய திருவாசகத்தில் கரைந்தனர் சிவனடியார்கள்.

 
ஆனந்தமாய்க் கசிந்துருக
“அனைத்திற்கும் முன்னுமாய், பின்னுமாய், முழுதுமாய், எங்கும் நிறைந்த, தளைகளற்ற தூயவனே! எல்லையற்ற பரம்பொருளே! அழகிய திருப்பெருந்துறையையுடைய சிவபிரானே! சிறப்புப் பொருந்திய சிவபுரத்துக்கு அரசனே! அன்பின் மிகுதியால் அடியேனது உயிரோடு உடம்பும் இன்பவெள்ளமாய்க் கசிந்து உருகும்படி, என் நிலைக்குத் தகுதியில்லாத, உனது இனிய அருளைப் புரிந்தாய்! இந்தப் பேருதவிக்கு, யான் உனக்குத் திரும்பச் செய்யக்கூடிய உதவி இல்லாதவனாயிருக்கிறேன்.” என்று உருகினார் மணிவாசகர். (முத்தன்–தளைகள் அற்றவன், முதல்-பரம்பொருள், ஆக்கை-உடம்பு, என் பரம்அல்லா - என் நிலைக்குத் தகுதியில்லாத)

 
அன்பினால் அடியேன் ஆவியோடு ஆக்கை ஆனந்தமாய்க் கசிந்துருக
என்பரம் அல்லா இன்னருள் தந்தாய்! யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறு!
முன்புமாய்ப் பின்பு முழுதுமாய்ப் பரந்த முத்தனே! முடிவிலா முதலே!
தென்பெருந் துறையாய் சிவபெருமானே! சீருடைச் சிவபுரத்து அரைசே! – திருவாசகம்: 22-2

அன்பினால் உள்ளக் கனிவோடு உடலும் நெகிழ்வதால், 'ஆவியோடு ஆக்கை ஆனந்தமாய்க் கசிந்துருக' என்றார். எதுவும் வேண்டாத, பெருங்கருணையாளனான இறைவனுக்குச் சிற்றுயிர்கள் என்ன செய்ய இயலும் என்பதை 'யான் இதற்கு இலனொர் கைம்மாறு' என்றார்.

அன்பரல்லாத பிறர் எவராலும் அறியமுடியாதவன் ‘தேவர் பிரானும், உண்மையான வீரனும், அழகிய திருப்பெருந்துறைக்குத் தலைவனும்’, ‘பிரமன் திருமால் உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளாலும் அறிய முடியாத, முதல்வனாகிய, இன்ப வடிவினனும்’, ‘அன்பரல்லாத பிறர் எவராலும் அறியமுடியாத’, மலர் போன்ற ஒளியையுடைய இறைவனது, தூய மாமலர் போன்ற சிவந்த திருவடியின்கீழே, நம்தலை நிலைபெற்று நின்று விளங்கும், என்று சென்னிப்பத்து பதிகத்தில் அருளினார் மணிவாசகர்.

 
தேவ தேவன், மெய்ச் சேவகன், தென் பெருந்துறை நாயகன்,
மூவராலும் அறியொணா முதல் ஆய, ஆனந்த மூர்த்தியான்,
யாவர் ஆயினும், அன்பர் அன்றி, அறியொணா மலர்ச் சோதியான்,
தூய மாமலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, சுடருமே!
- திருவாசகம்: 42-1

‘மூவராலும் அறியொணாத முதல்' ஆயினும், அன்பராயின் சோதியாய் வெளிப்பட்டுத் தோன்றுவான் என்பார், மாம்பழத்தோட்டத்தில் இருந்தாலும், மாம்பழத்தைப்பற்றி அறியாதவன் பசியோடேயே இருப்பான். அறிந்தவனும், பறித்து உண்ணாவிட்டால் பசிதீரமாட்டான். இறைவனைப் பற்றிய ஞானமில்லாதார் இறைவனை அறிய மாட்டார்கள்; இறைவனைப் பற்றிய ஞானமுடையார் அவன் இருப்பையும், தன்மையையும் அறிவினால் அறிவரேயன்றி, ‘இறைவனிடம் காதல் செய்யாவிட்டால்’ அனுபவத்தில் உணர மாட்டார்கள் ஆகையால் ஞானத்தினாலும் அவன் உணரப்பட மாட்டான்.

ஞானம் இருந்தும், ஆணவத்தால், மாலுக்கும், பிரமனுக்கும் இறைவனின்அடி-முடி அறியமுடியாமல் போயிற்று. அன்பனுக்கே இறைவனின் சுவையறிய இயலுமாதலால், 'யாவராயினும் அன்பரன்றி அறியொணா மலர்ச் சோதியான்' என்று இறைவனது எளிமைத்தன்மையைக் கூறினார். இதனால், இறைவன் அன்பரல்லாதார்க்கு அறியமுடியாதவன் என்பது புலனாகும். காதல் ஒன்றே அவனை அடையும் வழி.

 
இளமையிலேயே காதல் செய்யுங்கள்
அடியவர்களிடம், “அன்பர்களே! காலம் நம்வசம் உள்ளபோதே, இறைவனிடத்தில் காதல் செய்து பிழைத்துக்கொள்ளுங்கள். நினைத்தற்குஅரிய, உலகத்தை உண்ட திருமாலோடு, பிரமன், மற்றைய தேவர்களும் எளிதில் பெறஇயலாதவன், நஞ்சத்தை அமுதாக உண்ட, எங்கள் பாண்டிப்பெருமானாம் இறைவன்,
தன் அடியவர்களுக்கு, மூலபண்டாரமாகிய தனது அருள் முதற்கருவூலத்தைத் திறந்து அள்ளிஅள்ளி வழங்குகின்றான்; அதனைப் பெறுதற்கு, விரைவாக வந்து முந்திக்கொள்ளுங்கள்” என்று கருணையோடு அறிவுறுத்தினார் மணிவாசகர். (ஞாலம் உண்டான் - உலகத்தை உண்ட திருமால், நண்அரிய – எளிதில் அடையஇயலாத, ஆலம்உண்டான் - நஞ்சை உண்ட சிவபெருமான், மூலபண்டாரம்- முதற்கருவூலமாம் அருள், உய்மின் – பிழைத்துக்கொள்ளுங்கள்)

 
காலம் உண்டாகவே, காதல் செய்து உய்ம்மின்; கருது அரிய
ஞாலம் உண்டானொடு, நான்முகன், வானவர், நண் அரிய
ஆலம் உண்டான் எங்கள் பாண்டிப் பிரான்; தன் அடியவர்க்கு
மூல பண்டாரம் வழங்குகின்றான், வந்து, முந்துமினே. – திருவாசகம்:36-5

இறைவனிடத்து அன்பு செய்து வாழ்வதே மானிடப் பிறவியின்பயன் ஆதலின், 'காதல் செய்து உய்ம்மின்' என்றார். அதனை இளமையிலே தொடங்கினால் மட்டுமே போதிய காலம் கிடைக்குமாதலால், ‘காலம் உண்டாகவே' என்றார். இளமையில் இறைச் சிந்தனை தேவையில்லை; இளமையில் பொருள் மட்டும் தேடிக்கொள்வோம்; ஓய்வு பெற்றபின் இறைப்பேற்றைப் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் பலரும், முதுமையில் கண், காது முதலிய பொறி-புலன்கள் குறைவுபட்டு, பல்வகை நோயில் அவதியுற்று, பிறவிப்பயனாம் இறைச் சிந்தை எழவொட்டாமல், படுக்கையில் வருந்துவதைக் காண்கிறோம். மனிதப் பிறவிகளின் இப்போக்கைக் கண்டு வருந்திய அய்யன் திருவள்ளுவர் நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவான பிறவிக்கு மனிதனை இட்டுச்செல்லும் என்றார்.

 
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு. – திருக்குறள்: 351


எனவேதான் காலம் உள்ளபோதே, இளமையிலேயே, பொருள் சேர்க்கும்போதே, அருளையும் சேர்க்கும் வண்ணம், இறைவனிடம் 'காதல் செய்து உய்ம்மின்' என்றார் மணிவாசகப்பெருமான். கொடியநஞ்சை உண்டு, நாம்வாழ அமுதம் வழங்கிய தியாகேசன் சிவபெருமானிடம் தாம்பெற்ற இறைஇன்பத்தை நாமும் பெற வேண்டும் என்ற அன்புள்ளத்தினால், 'மூல பண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்துமினே' என்றார் மணிவாசகர். மூலபண்டாரம்-திருவருள் கருவூலம், அதில் உள்ள நிதி, வீடுபேறுப் பேரின்பம் ஆகும். கிடைத்த காலத்தை வீணாக்காமல் பயன்படுத்தி, இப்பிறவியிலேயே நாம் இறையருளாம் வீடுபேறு இன்பத்தைப் பெற வேண்டும் என்பதே திருவாசகத்தின் நோக்கம்.

 
இறைவன்பால் காதல் செய்வது எங்ஙனம்? “மலரிட்டு பூசை செய்தலா?, பாலாபிஷேகம் செய்தலா?, தங்கஅணிகலன்களால் அலங்கரித்து வழிபடுதலா? நாம் செலுத்தும் அன்பை அவன் ஏற்றுக்கொள்கிறானா என்று எவ்வாறு உணர்வது? காண இயலாத இறைவனிடம் அன்பு செலுத்தும் விதத்தை எங்களுக்கு அருளுங்கள்என்று விண்ணப்பித்தனர் அடியார்கள். அடியவர்களின் வேண்டுகோளுக்கான விடைதரும் திருவாசகத் தேனை சுவைப்போம்
 
இறைவனைக் காதலிப்பது எப்படி? மலரிட்டுப் பூசை செய்வதா? பாலாபிஷேகம் செய்வதா? அல்லது தங்கஅணிகலன்கள் அணிவித்து வணங்குவதா? நம் கண்களால் பார்க்கமுடியாத இறைவன், நாம் செலுத்தும் அன்பை ஏற்றுக்கொள்கிறானா என்று தெரிந்துகொள்வது எப்படி என்று கேட்கும் சிவனடியார்களிடம் மாணிக்கவாசகர், “திருக்கோயிலில் இறைவன் வீற்றிருக்கும்போது நம் கண்களால் பார்க்க முடியாத இறைவன் என்று சொல்வது ஏன்?” என்றார். அடியவர்கள் பதில் கூற முடியாமல் திகைத்தனர்.

 
“அசைவற்று இருக்கும் சிலையை இறைவனாகக் கற்பனை செய்து வழிபடும் உங்கள் மனத்தால், அதை இறைவனாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை; எனவேதான் கண்களால் பார்க்க முடியாத இறைவன் என்றீர்கள் அல்லவா?” என்று மணிவாசகர் கேட்டதும் அடியவர்கள் வெட்கித் தலைகுனிந்தனர். “நீங்கள் உயிர்ப்புள்ள இறைவனைக் கண்டு, காதல் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால், இறைவன் நிறைந்திருக்கும் அனைத்து உயிர்களையும், குறிப்பாக, சக மனிதர்களைக் காதலியுங்கள்” என்றார் மணிவாசகர்.

 
குடும்பக் காதல் இறைக் காதலாகுமா?
“ஐயனே! நான் என் குழந்தைகள், மனைவி, அன்னை-தந்தை, உடன்பிறந்தோரிடம் மிக்க அன்பைச் செலுத்துகிறேன். நான் பாடுபட்டுச் சேர்க்கும் பொருளையும், பணத்தையும் அவர்களுக்கே தருகிறேன். அவர்களிடமும் இறைவன் நிறைந்திருப்பதால், எனது இச்செயல் இறைவனைக் காதலித்ததற்குச் சமம் என்று கொள்ளலாமா?” என்றார் ஒரு அடியவர்.

 
கலக்கம் தெளிவித்த வித்தகத்தேவன்
“அன்பர்களே! பிறப்பாலும், திருமணத்தாலும் ஏற்பட்ட பாசத்தினால், உங்களுடையவை என்று கருதும் சொந்தங்களிடம் காட்டும் காதல் இயல்பானது; ஆயினும், என் குடும்பம் என்ற அளவில் அதுவும் சுயநலத்தின் ஒரு வகையே! பாரபட்சம் பார்க்காமல் எல்லா உயிர்களுக்கும் கருணைசெய்யும் இறைவனைக் காதலிக்க விரும்பினால், சொந்த பந்தங்களிடம் காட்டும் அதே காதலை, துன்பப்படும் ஏழைகளிடமும் காட்டுவதே சிறந்த வழியும், பக்தியுமாகும்.
இறைவனுக்கு நீங்கள் செலுத்த விரும்புகின்ற காணிக்கைகளைத் துன்பப்படும் ஏழைகளுக்குக் கொடுங்கள்; அவை உடனடியாக இறைவனிடம் சென்று சேரும். என் பணம், என் மனைவி, என் மக்கள், என் சாதி, என் அறிவு எனப் பித்துப்பிடித்து அலையும் இந்தஉலகத்தில், சிவபெருமான் தன் திருவடிகளை என் தலைமேல் வைத்ததுமே என்னிடமிருந்த சித்த விகாரக் கலக்கம் தெளிந்து, அனைவரிடமும் அன்புகாட்டும் தெளிவு பிறந்தது; நீங்களும் தெளிவடையுங்கள்” என்று அருளினார் மணிவாசகர்.

 
வைத்த நிதி, பெண்டிர், மக்கள், குலம், கல்வி, என்னும்
பித்த உலகில், பிறப்போடு இறப்பு என்னும்
சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த
வித்தகத் தேவற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ (திருவாசகம்:10-6)

செல்வத்தின் பயன் ஏழையர்க்கும் கொடுத்தல் என்று உணராமல், அவை நிலையுடையன என்று நினைத்துப் பதுக்கி வைப்பது ‘பேதைமை’ என்பதால், இவ்வுலகைப் ‘பித்த உலகு’ என்றார். இறைவன் இதைத் தெளியவைத்ததால், ‘சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த வித்தகத் தேவர்’ என்றார்.

 
இறைவனே ஏழைப்பங்காளன்

இறைவனின் அருள்வடிவே அம்மை. உயிர்களிடம் கொண்ட கருணையினால், அவரவர் செய்த நன்மை தீமைப்படி பிறந்த எல்லா உயிர்களுடன், ஏழைகளுடன் அம்மையப்பனாக, இறைவனும் அவர்களின் துன்பத்தில் பங்கெடுப்பதால், ஏழைப் பங்காளனைப் பாடித் துதிக்கலாம் வா என்று திருவெம்பாவையின் ஏழாவது பாட்டில் அழைக்கின்றார் மாணிக்கவாசகர்.

 
ஏழைகளிடம் நாம் செலுத்தும் அன்பு, அவருள் வாழும் இறைவனாம் அம்மையப்பனைக் குளிர்விப்பதால், நம் புலன்கள் அன்பில் திளைத்து, இறைவன் அமுதாய் நமக்கு வெளிப்பட்டுத் தோன்றுவான்.

ஆனால், நாம் எல்லோரும் மனைவி, குழந்தைகள், சுற்றத்தாரிடம் கொண்ட அளவுக்கு அதிகமான பாசத்தால், பேராசை கொண்டு, ஏழு தலைமுறைக்கும் பணம் சேர்க்கப் பித்துப்பிடித்துப் பைத்தியமாக அலைகிறோம். இதை நீக்கி, துன்புறும் ஏழைகளுக்குச் செய்யும் அன்பான உதவியே இறைவனிடம் உடனடியாகச் சேருகிறது என்ற மனத்தெளிவைத் தந்த ‘வித்தகத் தேவற்கே சென்றுஊதாய் கோத்தும்பீ’ என்றார் மணிவாசகர்.

 
Status
Not open for further replies.
Back
Top