• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

திருமந்திரம் -ஆறாம் தந்திரம்

#1671 to #1673

#1671. ஆசைகளை வென்றவனே ஞானி

கத்தித் திரிவர் கழுவடி நாய்போற்
கொத்தித் திரிவர் குரக்களி ஞானிகள்
ஒத்துப் பொறியு முடலு மிருக்கவே
செத்துத் திரிவர் சிவஞானி யார்களே.

செப்பிடு வித்தைக்காரர்கள் கழு மரத்தின் அடியில் ஊனையும், உதிரத்தையும் சுவைக்க அலைகின்ற நாயைப் போலக் கத்தித் திரிவார்கள். மாய வித்தைகள் செய்பவர் கழுகு போலக் கொத்திப் பறித்துக் கொள்வர் ஏமாந்த மனிதர்களின் செல்வத்தை! உடலும் பொறிகளும் நல்ல நிலையில் இருந்த போதிலும், உலக இன்பங்களை வெறுத்து ஒதுக்கி விட்டு இறந்தவரைப் போலத் திரிவார் ஒரு மெய் ஞானி.

#1672. ‘சிவனே!’ என்று இருப்பவரே அடியார்

அடியா ரவரே யடியார லாதார்
அடியாரு மாகாரவ் வேடமு மாகார்
அடியார் சிவஞான மானது பெற்றோர்
அடியா ரலாதார் ளன்றே

தன் முனைப்பு என்று ஒன்றும் இல்லாமல் சிவன் திருவருளின்படி நடப்பவர் மட்டுமே உண்மையான சிவனடியார். அந்தத் தகுதியை அடையாத ஒருவர் சிவனடியார் அல்லர். அவர் தரித்துள்ள சிவக் கோலமும் மெய்க் கோலம் அன்று. சிவன் அருள் பெற்றவரே மெய்யடியார். மற்றவர்கள் பொய்யடியார்.

# 1673. ஞான சாதனம் ஆகும்

ஞானிக்குச் சுந்தர வேடமும் நல்லவாம்
தான் உற்ற வேடமும் தற் சிவயோகமே
ஆன அவ்வேடம் அருள் ஞான சாதனம்
ஆனதும் ஆம் ஒன்றும் ஆகாதவனுக்கே

சிவ ஞானிக்கு அழகிய சிவக் கோலம் நல்லதே! அந்தக் கோலத்தின் உண்மையை உணர்ந்து கொண்டு அதன்படி ஒழுகுவது சிவயோகம். அப்போது அந்த சிவக் கோலம் ஒரு ஞான சாதனம் ஆகிவிடும். இந்த உண்மையை அறியாத ஒருவனுக்கு அந்தக் கோலம் வெறும் ஒரு புறத் தோற்றம் மட்டுமே. அது ஞான சாதனம் ஆகாது.
 
#1674 & #1675

#1674. சிவ ஞானி

ஞானத்தில் நாற்பதம் நண்ணும் சிவஞானி
தானத்தில் வைத்தல் தனி ஆலயத் தனாம்
மோனத்தன் ஆதலின் முத்தனாம் சித்தன்;
எனைத் தவசி இவன் என லாகுமே

திருவடி உணர்வினால் ஞானம் பெற்றுச் சிவன் நிலையை ஒரு சிவஞானி அடைந்து விடுவான். அவன் நடமாடும் ஓர் ஒப்பற்ற சிவாலயம் ஆவான். அவன் மோனத்தில் மூழ்கி இருப்பதால் ஒரு சிறந்த சித்தனும் முத்தனும் ஆவான். இவனைப்பற்றிப் பேசுவதற்கு மற்றவர்களுக்குத் தகுதி இல்லை.

#1675. நந்தி பதம் முத்தி தரும்

தானன்றித் தன்மையும், தான் அவ னாதலும்,
ஏனைய அச்சிவ மான இயற்கையும்,
தான் உறு சாதக முத்திரை சாத்தலும்
மோனமும் நந்திபதம் முத்தி பெற்றதே

பிரணவ சித்தியும், சிவபதவியும் பெற்றவர்களின் இயல்பு இது.
தன்னறிவை இழந்து இருப்பது, சிவத்துடன் இரண்டறக் கலந்து விளங்குவது, எந்தப் பொருளுக்கும் உரிய மூன்று காலங்களையும் அறிகின்ற ஆற்றல் பெறுவது, ஞானம் பெறும் தகுதி படைத்தவர்களுக்குத் தன் பார்வையினால் அல்லது பரிசத்தால் சிவ ஞானத்தை வழங்குவது.
 
#1676 to #1679

#1676. சிவ வேடத்தார்

அருளால் அரனுக்கு அடிமை அது ஆகிப்
பொருளாம் தனது உடல் பொற்பதி நாடி,
இருளானது இன்றி இருஞ் செயல் அற்றோர்
தெருளாம் அடிமைச் சிவ வேடத்தாரே

சிவன் அருளால் அவனுக்கே அடிமை ஆகித் தன் உடலுக்கு மேலே விளங்குகின்ற ஒளி மயமான அண்ட கோசத்தை அறிந்து கொண்டு, அறியாமை இருள் நீங்கித் தன் செயல் என்று எதுவும் இல்லாமல், உடல், பொருள் ஆவி அனைத்தையும் சிவனுக்கே அர்ப்பணித்தவரே தெளிந்த சிவ வேடம் பூண்டவர்.

#1677. கடலில் அகப்பட்ட கட்டை

உடலில் துவக்கிய வேடம் உயிர்க்கு ஆகா,
உடல் கழன்றால் வேடம் உடனே கழலும,
உடல் உயிர் உண்மை என்று ஓர்ந்து கொள்ளாதார்
கடலில் அகப்பட்ட கட்டை ஒத்தாரே.

உடலில் ஏற்றுக் கொண்ட புறக் கோலங்கள் உள்ளே உள்ள ஆன்மாவுக்கு எந்தப் பயனையும் தராது. ஆன்மா உடலில் இருந்து நீங்கும் போதே அந்த வேடமும் கலைந்து விடும். உடல் அசத்து, ஆன்மா சத்து என்ற வேறுபாட்டினை உணராதவர்கள் கடலில் விழுந்த கட்டை கடலுக்கும் கரைக்கும் இடையில் அல்லாடுவதைப் போலவே பிறப்பு, இறப்பு என்ற இரண்டின் இடையே ஊசலாடுவர்.

#1678. செயல் அற்று இருப்பர்

மயல் அற்று, இருள் அற்று, மாமனம் அற்றுக்
கயல் உற்ற கண்ணியர் கை இணக்கு அற்றுத்
துயல் அற்றவரோடும் தாமே தாமாகிச்
செயல் அற்று இருப்பார் சிவ வேடத்தாரே

சிவ வேடத்தார் ஆணவ மலம் தரும் மயக்கத்தை நீக்குவர். அதன் விளைவாகிய அறியாமை இருளை அகற்றுவர். மனத்தால் எண்ணும் செயலைத துறப்பர். மீன் விழியாரின் தழுவலையும் துறப்பர். தெளிந்த ஞானிகளுடன் கூடித் தமக்கு என்று ஒரு செயலும் இல்லாமல் இருப்பர்.

#1679. இன்பப் பொருளை எய்தலாம்

ஓடுங் குதிரைக் குசை திண்ணம் பற்றுமின்
வேடங் கொண்டென் செய்வீர் வேண்டா மனிதரே
நடுமின் நந்தியை நம்பெருமான் தன்னைத்
தேடுமின் பப்பொருள் சென்றெய் தலாமே.

மனிதர்களே! புறக் கோலம் தரித்துக் கொள்வதால் மட்டும் என்ன பயன்? பிராண வடிவமாக இருந்து கொண்டு உங்களுக்கு உள்ளே ஓடும் அந்தக் குதிரையின் கடிவாளத்தைக் கைப் பற்றுங்கள் !அதை உங்கள் வசப்படுத்துங்கள்! வீணான புறக் கோலத்தைக் கைவிட்டுவிட்டுச் சிவபெருமானை நாடுங்கள்! நீங்காமல் அவனிடத்தில் மனத்தை வைத்தால் இன்பப் பொருளான அவனைச் சென்று அடைந்திட இயலும்.
 
13. அபக்குவன்

13. அபக்குவன் = பக்குவம் இல்லாதவன்

#1680 to #1683

#1680. இரு குருடர்கள்

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடுங் குழி விழுமாறே.

தன் அறிவால் மாணவனின் அறியாமையைப் போக்கும் நல்ல குருவை ஏற்றுக் கொள்ள மாட்டார். தானே அறியாமையில் அழுந்தியுள்ள ஒரு குருவை ஏற்பார். இது ஒரு குருடனுக்கு இன்னொரு குருடன் வழி காட்டி அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு குழியில் விழுவதைப் போன்றது.

#1681. புறக்கடை இச்சிப்பர்

மனத்தில் எழுந்தது ஓர் மாயக் கண்ணாடி
நினைப்பின் அதனில் நிழலையும் காணார்
வினைப் பயன் போக விளக்கியும் கொள்ளார்
புறக்கடை இச்சித்துப் போகின்றவாறே.

மனத்தில் இருந்தே பிரதிபலிக்கின்றன நாம் காண்கின்ற, உணர்கின்ற, எண்ணுகின்ற அனைத்துமே. ஆன்மாவை மறைக்கும் அந்தத் திரையின் நிழலைக் கூட இவர்கள் காண்பதில்லை. தம் வினைப் பயன்கள் வீணாகிவிடுவதற்கு சிறிதும் முயற்சி செய்வதும் இல்லை. மீண்டும் மீண்டும் அறியாமையின் விளைவாக உலக இன்பங்களையே நாடுகின்றார்கள்

#1682. ஊன் நிலை செய்யும் உருவிலி

‘ஏய் ‘ எனில் ‘என்’ என மாட்டார்கள் பிரசைகள்
வாய் முலை பெய்ய மதுரம் நின்று ஊறிடும்,
தாய் முலை யாவது அறியார் தமர் உளோர்
ஊன் நிலை செய்யும் உருவிலி தானே

‘ஏய்!’ என்று அழைத்தாலும் மறுமொழி கூறார் வெறும் மனிதர்கள்! ஆனால் நம் கண்ணுக்குத் தெரியாத உருவிலியாகிய சிவபெருமான் செய்வது என்ன தெரியுமா ? பிறந்த குழந்தையின் உடலில் உயிர் நிலைத்திருப்பதற்கு அதன் தாயின் மார்பில் இனிமையான பாலைச் சுரக்கச் செய்கின்றான். இந்த மாயம் நிகழ்வது எங்கனம் என்று வேறு எவரும் அறியார்!
 
#1683 to #1685

#1683. முக்கரணங்களின் தூய்மை

வாய் ஒன்று சொல்லி, மனம் ஒன்று சிந்தித்து
நீ ஒன்று செய்யல், உறுதி நெடுந்தகாய்!
தீ என்று இங்கு உன்னைத் தெளிவன் தெளிந்த பின்
பேய் என்று இங்கு என்னைப் பிறர் தெளியாரே.

உறுதி படைத்த நெடுந்தகையோனே! நீ வாயால் ஒன்றைக் கூறி, மனத்தால் வேறு ஒன்றை எண்ணி, செயலால் பிறிதொன்றைச் செய்யாதே! மனம், மொழி, மெய் என்னும் மூன்று கரணங்களும் தூய்மையாக இருந்தால் மட்டுமே நீ சிவாக்கினி பெற்றவன் என்று நான் உன்னைக் கூறுவேன். அப்போது தான் என் சொல்லைப் பித்தனின் பேச்சு என்று எவரும் கூற மாட்டார்கள்.

# 1684. பஞ்ச மா பாதகங்கள்

பஞ்சத் துரோகத்திப் பா தகர் தம்மை
அஞ்சச் சமயத்தோர் வேந்த னருந் தண்டம்
விஞ்சச்செய் திப்புவி வேறு விடாவிடில்
பஞ்சத்து ளாய் புவிமுற்றும் பாழாகுமே.

பஞ்ச மா பாதகங்கள் செய்பவரை மன்னன் அஞ்சும் வண்ணம் தண்டித்து அவர்களை நாடு கடத்த வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அந்த நாடு பஞ்சம், வறுமை இவற்றால் பாழாகிவிடும்.

#1685. பவத்திடை நின்று பரிதவிப்பர்

தவத்திடை நின்றவர் தாம் உண்ணும் கன்மம்
சிவத்திடை நின்றது தேவர் அறியார்
தவத்திடை நின்றறியாதவர் எல்லாம்
பவத்திடை நின்றதோர் பாடு அது ஆமே.

தவத்தை மேற் கொள்பவருக்குப் பல துன்பங்கள் நேரலாம். அவை அனைத்தும் சாதகனின் கன்மம் கழிவதற்காகச் சிவத்தினால் ஏற்படுத்தப் பட்டவை என்று அறிந்து கொள்ள வேண்டும். இந்த உண்மையைத் தேவரும் அறிகிலர். தவத்திடை நிலையாக நிற்க இயலாதவர்கள் பவம் என்னும் பிறவித் துன்பத்தில் சிக்கிக் கொண்டு வருந்துவர்.
 
#1686 to #1689

# 1686. இறைபால் இயற்கை இல்லாதவை

கன்றலுங் கருதலுங் கருமம் செய்தலும்
தின்றலும் சுவைத்தலும் தீமை செய்தலும்
பின்றலும் பிறங்கலும் பெருமை கூறலும்
என்றிவை இறை பால் இயற்கை அல்லவே

இந்த ஒன்பது குற்றங்கள் இறை மீது அன்பு கொண்டவருக்கு ஏற்றவை அல்ல.

  1. பிறரிடம் சினம் கொள்ளுவது,
  2. எதையாவது சிந்தித்துக் கொண்டே இருப்பது,
  3. எப்போதும் ஏதோ செயல்கள் புரிந்து கொண்டே இருப்பது,
  4. ஓயாமல் தின்பது,
  5. எதையாவது சுவைப்பது,
  6. பிறருக்குத் தீங்கிழைப்பது,
  7. குறைவாக எண்ணுவது,
  8. நிறைவாக எண்ணுவது,
  9. தற்பெருமை பேசுவது.

#1687. சிவ ஒளி இடரை நீக்கும்

விடிவது அறியார், வெளி காண மாட்டார்,
விடியில் வெளியில் விழிக்கவும் மாட்டார்
கடியது ஓர் உள், இமை கட்டுமின் காண்மின்
விடியாமை காக்கும் விளக்கு அது ஆமே.

பக்குவம் அற்றவர்கள் தமக்கு நன்மை தருவதை அறியமாட்டார். பரமாகாயத்தைக் காண மாட்டார். பரவெளியில் பார்வையைச் செலுத்த மாட்டார் . பக்குவம் அடையாதவர்களே ! கண் இமைகளைக் காவலாக்கி விடுங்கள். கண்பார்வை வெளியே செல்லாது தடுத்து நிறுத்துங்கள். அதை உள்முகமாகத் திருப்புங்கள். அப்போது இடர்களை நீக்கும் சிவபெருமானின் ஒளி உங்களுக்குப் புலப்படும்.

#1688. பித்தான சீடனுக்கு ஈயாதீர்!

வைத்த பசுபாசம் மாற்றும் நெறி வைகிப்
பெத்தம் அற முத்தன் ஆகி, பிறழ்வுற்றுத்
தத்துவம் உன்னித் தலைப்படா தவாறு
பித்தான சீடனுக்கு ஈயப்பெறா தானே.

ஆணவ மலம் அனாதி காலமாக ஆன்மாவுடன் இணைந்துள்ளது. சாதகன் அதை மாற்றும் வழியில் செல்லவேண்டும். தன் மலங்கள் நீங்கி முத்தன் ஆகிவிட விழைய வேண்டும். உலகத்தோரின் இயல்பிலிருந்து மாறுபட்டு இருக்க வேண்டும். உண்மைப் பொருளை நாட வேண்டும். இவற்றைச் செய்யாதவனும் மனவுறுதி இல்லாதவனும் ஆன ஒரு சீடனுக்கு ஞானத்தை ஒருபோதும் ஈயாதீர்கள்.

#1689. விலக்கப்பட வேண்டிய மாணவன்

மன்னும் மலம் ஐந்தும் மாற்றும் வகை ஓரான்
துன்னிய காமாதி தோயும் தொழில் நீங்கான்
பின்னிய பொய்யன் , பிறப்பு இறப்பு அஞ்சாதான்
அன்னிய னாவான் அசற் சீடனாமே.

ஆணவம், கன்மம், மாயை, மாயேயம் , திரோதாயி ஐந்து மலங்களை நீக்குகின்ற வழிகளை ஆராயாதவன் ; காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் இவற்றில் தோய்ந்த செயல்களை விலக்காதவன்; பொய் கலந்து பேசுபவன்; பிறவிப் பிணியைக் கண்டு அஞ்சாதவன் குருவால் விலக்கப் பட வேண்டிய மாணவன் ஆவான்.
 
14. பக்குவன்

14. பக்குவன் = தகுதி உடையவனும், குருவின் சொற்படி நடப்பவனும் ஆன நல்ல மாணவன்.

#1690 to #1693

#1690. நல்வழி அறிவாளர்

தொழுது அறிவாளர் சுருதி கண்ணாகப்
பழுது அறியாத பரம குருவை
வழி அறிவார் நல் வழி அறிவாளர்
அழிவு அறிவார் மற்றை அல்லாதவரே.

வழி பட்டுத் தொழும் இயல்புடைய மாணவன் வேதாகமத்தின் இன்றியமையாமையை உணர்ந்து கொண்டு, குற்றமற்ற ஒரு பரம குருவை நாடிச் செல்வான். இவன் முக்தியை விரும்பும் நல்லறிவு படைத்தவன். உலகியலில் ஆர்வம் கொண்டு முக்தியை விரும்பாத மாணவனோ எனில் அழியும் வழியையே அறிவான்.

#1691. உகந்து ஆண்டருளாயே

பதைத்து ஒழிந்தேன் பரமா உனை நாடி
அதைத்து ஒழிந்தேன் , இனி யாரோடும் கூடேன்,
சிதைத்து அடியேன் வினை சிந்தனை தீர
உதைத்து, உடையாய் உகந்து ஆண்டருளாயே.

பரமா! உன்னை நாடி நான் வீணே பதை பதைப்பதைக் கை விட்டேன். உலகத்தில் உழன்று களைத்துப் போனேன். இனி யாருடனும் நான் சேர மாட்டேன். என் வினைகளைச் சிதைத்து அழித்து விடு! என் சிந்தாகுலம் தீரும் வண்ணம் என்னை உவந்து ஏற்றுக்கொள்வாய்!

#1692. இசைக்கின்ற அன்பருக்கு ஈயலாம்

பதைக்கின்ற போதே பரம் என்னும் வித்தை
விதைக்கின்ற வித்தினை மேல்நின்று நோக்கிச்
சிதைக்கின்ற சிந்தையைச் செவ்வே நிறுத்தி
இசைக்கின்ற அன்பருக்கு ஈயலும் ஆமே.

ஞானம் பெறவேண்டும் என்னும் பதைபதைப்பு இருக்கும் போதே மாணவனிடம் பரம் என்னும் விதையை விதைப்பான் நல்ல ஆசிரியன். சிந்தையைச் சிதறாமல் ஒருமுகப் படுத்தி மேலே சகசிர தளத்தில் நிலை நிறுத்தி இசைவாக இருக்கும் அன்பனுக்கு மெய் ஞானம் உறுதியாக ஈயப்படும்.

#1693. நல்ல குருவை நாடுவீர்

கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்க
உள்ள பொருளுடல் ஆவி யுடனீக
எள்ளத் தனையு மிடைவிடாதே நின்று
தெள்ளி யறியச் சிவ பதந் தானே.

நாடுவதாயின் நல்ல குருவை நாடுவீர்! அவருக்கு உம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் காணிக்கை ஆக்குவீர் ! அவர் காட்டும் நல்ல வழியில் எள்ளளவும் தடங்கல் தொடர்ந்து நடந்தால் உமக்குச் சிவபதம் தானே தெளிவாகும்.
 
திருமந்திரம் -ஆறாம் தந்திரம்

#1694 to #1696

#1694. உபதேசம் பெற உகந்த நாட்கள்

சோதி விசாகந் தொடர்ந்திரு தேள் நண்டு
ஓதிய நாளே யுணர்வது தானென்று
நீதியுள் நீர்மை நினைந்தவர்க் கல்லது
ஆதியு மேது மறிய கிலானே.

உபதேசம் பெறுவதற்கு உகந்த நட்சத்திரங்கள் சுவாதியும் விசாகமும். உபதேசம் பெற உகந்த ஓரைகள் விருச்சிகமும் , கடகமும். இதன் காரணம் யான் அறியேன். எனினும் குருமுகமாக உபதேசம் பெறுவதற்கு ஆதி முதல் இவையே உகந்தவையாக இருந்து வருகின்றன.

#1695. திருவடி கண்டு அருள் பெறலாம்

தொழில் ஆர, மாமணித் தூய்து ஆன சிந்தை
எழிலால் இறைவன் இடம் கொண்ட போதே
அழல் ஆர் விறலாம் வினைஅதுபோகக்
கழல் ஆர் திருவடி கண்டு அருள் ஆமே.

நல்ல குருவின் உபதேசம் சாதகனின் சிந்தையைத் தூய்மையாக்கி விடும். பெரிய மணியைப் போன்ற அவன் சிந்தையில் ஒளிருகின்ற எந்தை எழுந்தருள்வான். அக்கணமே அவனைப் பிணித்திருந்த வல் வினைகள் நீங்கி விடும். அவன் இறைவனின் கழல் ஒலிக்கும் திருவடியைக் கண்டு நாத உணர்வாகிய சிவன் அருளைப் பெறலாம்.

#1696. நல்ல சீடன் யார் ?

சாத்திகனாய்ப், பரதத்துவம் தான் உன்னி
ஆத்திக பேத நெறி தோற்றம் ஆகியே
ஆர்த்த பிறவியின் அஞ்சி அறநெறி
சாத்த வல்லான் அவன் சற் சீடனாமே.

நல்ல சீடனின் இலக்கணம் இது.
சத்துவ குணம் கொண்டிருக்க வேண்டும்; சிவத்தைத் தியானித்து வர வேண்டும்; ஏதாவது ஒரு ஆத்திக நெறியைப் பின் பற்ற வேண்டும். வினைப் பயனாக விளையும் பிறவிப் பிணிக்கு அஞ்ச வேண்டும். மேன்மையான அறநெறிகளைப் பின் பற்ற வேண்டும்.
 
திருமந்திரம் -ஆறாம் தந்திரம்

#1697 to #1700

#1697. ஆனந்த சக்தியில் இச்சை

சத்தும் அசத்தும் எவ்வாறு எனத் தான் உன்னிச்
சித்தை உருக்கிச் சிவனருள் கை காட்டப்
பத்தியில் ஞானம் பெறப் பணிந்துஆனந்தச்
சத்தியில் இச்சை தருவோன் சற் சீடனே

இந்த உலகில் உள்ளவற்றில் ‘சத்து’ என்னும் நிலையான, அழியாத பொருள் எது? ‘அசத்து’ என்னும் என்னும் நிலையற்ற, அழிகின்ற பொருள் எது? என்று சிந்தித்துக் கண்டறிய வேண்டும்.சிவனையே சிந்திதது அவனருள் பெற வேண்டும். பத்தி செய்து சிவஞானம் பெற வேண்டும். சிவனைப் பணிந்து ஆனந்த வடிவாகிய சிவ சக்தியின் விருப்பத்துக்கு ஏற்ற வண்ணம் தன்னை பக்குவப் படுத்திக் கொள்ள வேண்டும்.

#1698. ஆசு அற்ற ஞானத்தான்

“அடிவைத்து அருளிதி ஆசான் இன்று” உன்னா
வடிவைத்த மாமுடி மாயப் பிறவி
அடிவைத்த காய அருட் சத்தியாலே
அடி பெற்ற ஞானத்தான் ஆசு அற்றுளானே.

‘குருநாதன் சிவபெருமான் இன்று எனக்கு அருள் புரிவான்” என்று எண்ணித் தன் குருவின் வடிவைத் தன் தலையின் மீது வைத்து தியானிக்க வேண்டும். மாயப் பிறவியைச் சினந்து அழிக்கும் வல்லமை கொண்ட அருள் சக்தியின் அருளைப் பெற்றுத் தூய ஞானம் அடைந்த மாணவனே குற்றமற்ற சிறந்த மாணவன் ஆவான்.

#1699. காதல் குருபரன் பாலாகும்!

சீராரும் ஞானத்தின் இச்சை செலச் செல்ல
வாராத காதல் குருபரன் பாலாகச்
சாராத சாதகம் நான்கும்தன் பால் உற்றோன்
ஆராயும் ஞானத்தனாம் அடி வைக்கவே.

சாதகனுக்குச் சிறந்த அனுபவ ஞானத்தின் மீது இச்சை அதிகரிக்கும் போது, அதுவரையில் அவனுக்கு வாராத காதல் குருபரன் சிவபெருமான் மேல் ஏற்படும். அதுவரையில் அவனிடம் அமைந்திராத ஒழுக்கம்,நோன்பு, செறிவு , அறிவு என்ற நான்கு சாதகங்கள் வந்து அமையும். இத்தகைய மாணவன் திருவடி தீட்சை பெற்ற பின்பு ஞானத்தின் அனுபவத்தை ஆராயத் தொடங்குவான்.

#1700. பக்குவத்துக்கு ஏற்ப உணர்த்துவீர்

உணர்த்தும் அதிபக்குவர்க்கே உணர்த்தி
இணக்கு இல் பராபரத்து எல்லையுள் இட்டுக்
குணக்கொடு தெற்கு உத்தர பச்சிமம் கொண்டு
உணர்த்துமின் ஆவுடையாள் தன்னை உன்னியே.

பக்குவம் அடைந்த மாணவனுக்கு அவன் அடைந்துள்ள பக்குவத்துக்கு ஏற்ப ஒரு உத்தம குரு உபதேசம் செய்ய வேண்டும். பசுக்கள் ஆகிய சீவர்களுக்கு உதவுபவள் பராசக்தி. அவளை மாறாத நினைவில் கொள்ளுங்கள். சிவன் ஒன்றுடனும் பற்றில்லாத பராபரன். அவன் கிழக்கு எல்லைக்கு மாணவனை அழைத்துச் செல்லுங்கள். ஈசனின் ஐந்து முகங்களையும் அவை அமைந்துள்ள திசைகளையும் உணர்த்துங்கள். குருபரன் சிவபெருமானின் ஐந்து முகங்களும் சாதகனின் மூலாதாரமும் இணையும் போது அவனுக்குச் சதாசிவன் விளங்குவான்.
 
திருமந்திரம் -ஆறாம் தந்திரம்

#1701 to #1703

#1701. சன்மார்க்க உபதேசம்

இறைஅடி தாழ்ந்து, ஐ வணக்கமும் எய்தி
குறை அது கூறிக் குணங் கொண்டு போற்றச்
சிறை உடல் நீ அறக் காட்டிச் சிவத்தோடு
அறிவுக்கு அறிவிப்போன் சன்மார்க்கி ஆமே

குருவுக்கு ஐந்து விதமான வணக்கத்தையும் செய்ய வேண்டும். அவர் திருவடிகளில் விழுந்து வணங்க வேண்டும். மாணவன் ஆன்மாவின் குற்றம் குறைகளைக் கூறிக் குணம் நல்குமாறு அவரிடம் வேண்டும் போது அவர், “சிறைப் பட்டுள்ள உடலையே நீ என்று நம்பி இருக்கும் மாணவனே! நீ எல்லையற்ற சிவமாக ஆவாய்!” என்று அவனுக்கு உணர்த்துவார். ஒரு நல்ல சன்மார்க்க குரு சிவ அறிவையும் ஆன்ம அறிவையும் ஒன்றாக ஆக்கிவிடுவார்.

#1702. தாழுந் தலையோன் சற் சீடன்

வேட்கை விடுநெறி வேதாந்தம் ஆதலால்
வாழ்க்கைப் புலன்வழி மாற்றிச்சித் தாந்தத்து
வேட்கை விடுமிக்க வேதாந்தி பாதமே
தாழ்க்குந் தலையினோன் சற் சீடனாமே.

வேதாந்தம் கூறும் உலக வேட்கைகளை அழிக்கவேண்டும் என்று! உலக வாழ்வு என்பது புலன்களை நாடிச் செல்கின்ற பொறிகளின் வழியே நடப்பது. அதை மாற்றிச் சித்தாந்த நெறியினில் சாதகன் செல்ல வேண்டும். விருப்பங்களை விட்டு விட்ட வேதாந்தியாகிய தன் சற்குருவின் பாதங்களில் தன் தலையைத் தாழ்த்தி வணங்குபவன் ஒரு நல்ல மாணவன் ஆவான்.

#1703. அற்புதம் தோன்றும்

சற்குணம் வாய்மை தயாவிவேகந் தண்மை
சற்குரு பாதமே சாயைபோல் நீங்காமே
சிற்பர ஞானந் தெளியத் தெளிவோர்தல்
அற்புத மேதோன்ற லாகுஞ் சற்சீடனே.

பக்குவம் உடைய மாணவனின் இலக்கணம் : சத்துவ குணம், வாய்மை, தயை, விவேகம், எளிமை, குருவின் திருவடிகளை விட்டு நீங்காமை, சிற்பர ஞானத்தைத் தெளிந்து அறிதல், அற்புதத்தை உணருதல் என்பவை ஆகும்.

இத்துடன் திருமந்திரத்தின் ஆறாம் தந்திரம் முற்றுப் பெற்றது.
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

1. ஆறு ஆதாரங்கள்

உடலில் மைந்துள்ள ஆறு அதைச் சக்கரங்கள்
மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாஹதம், விசுத்தி , ஆக்ஞை என்பவை.

#1704 to #1706

#1704. ஈசன் திருவடியை நேசன் காணலாம்

நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும்
கோலி து கொண்ட மேல் நின்ற குறிகள் பதினாறும்
மூலம் கண்டு ஆங்கே முடிந்த முதல் இரண்டும்
காலம் கண்டான் அடி காணலும் ஆமே.

நான்கு இதழ்த் தாமரை வடிவம் கொண்ட மூலாதாரம்; ஆறு இதழ்த் தாமரை வடிவம் கொண்ட சுவாதிட்டானம் , பத்து இதழ்கள் கொண்ட மணி பூரகம், பன்னிரண்டு இதழ்கள் கொண்ட அநாகதம், பதினாறு இதழ்கள் கொண்ட விசுத்தி என்னும் ஐந்து ஆதாரச் சக்கரங்களையும் தரிசித்து விட்டால் ஆக்ஞை சக்கரத்தில் ஈசன் திருவடிகளை அவன் நேசன் காணலாம்.

#1705. பரமசிவன் விளங்குவான்

ஈராறு நாதத்தில், ஈரெட்டாம் அந்தத்தில்
மேதாதி நாதாந்தம் மீது ஆம் பராசக்தி
போதா ஆலயத்து அவிகாரம் தனில், போத
மேதாதி ஆதாரம் மீதானம் உண்மையே

கதிரவன் மண்டலம் பன்னிரண்டு கலைகள் கொண்டது. இதுவே தலையைச் சுற்றியுள்ள வானவீதி ஆகும். மேதை முதலான பதினாறு கலைகள் கொண்டது சந்திர மண்டலம். இதன் வீதி மூலாதாரத்தில் இருந்து செங்குத் தாக மேல் நோக்கிச் செல்லும். நாதாந்தம் எனப்படுவது உடல் முடியும் இடம். இதுவே பிரமரந்திரம் என்னும் உச்சித் தொளை. இங்கு நிராதாரத்தில் விளங்குவாள் பராசக்தி. பிரசாத நெறியில் விகாரம் அற்ற அறிவுடன் மேல் நோக்கிச் செல்லும் போது எல்லா ஆதாரங் களையும் கடந்த நிலையில் பரம சிவன் விளங்குவான்.

#1706. கார் ஒன்றிய கற்பகம் ஆவான்

மேல் என்றும் கீழ் என்று, இரண்டு அறக் காணுங் கால்
தான் என்றும் நான் என்றும் தன்மைகள் ஓர் ஆறும்
பாரெங்கும் ஆகிப் பரந்த பராபரம்
கார் ஒன்று கற்பகம் ஆகி நின்றானே.

பிரசாத நெறியில் நின்று மேற்பக்கம் கீழ்பக்கம் என்ற வேறுபாடுகளைக் கடந்து சென்றால், இறைவன் ஒரே பேரொளியாகக் காட்சி தருவான். அவன் இறைத் தன்மையின் ஆறு சீரிய குணங்களும் பெற்று இருப்பான். பார் எங்கும் பரந்து நிற்பான் அந்தப் பராபரம். கற்பகத் தருவைப் போல வேண்டியவருக்கு வேண்டியதைத் தருவான். கார் மேகம் போல் அன்பர்களின் மீது தன் அருள் மழையைப் பொழிவான்.

விளக்கம்
இறைவனின் ஆறு சீரிய குணங்கள்
அவா இன்மை, இறைத் தன்மை, கீர்த்தி, செல்வம், ஞானம், வீரியம்
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

#1707 to #1709

#1707. சகமார்க்கம் யாது ?

ஆதார சோதனையால் நாடி சுத்திகள்
மேதாதி ஈரெண் கலாந்தத்து விண்ஒளி
போதாலயத்துப் புலன் கரணம் புந்தி
சாதாரணங் கெட்டான் றான்சக மார்க்கமே.

ஆறு ஆதாரங்களையும் அவற்றுக்கு உரிய மந்திரங்களைச் சொல்லித் தூய்மை ஆக்க வேண்டும். இதனால் நாடி சுத்தி ஏற்பட்டு, இடைகலை ,பிங்கலை நாடிகளும் தூய்மை அடையும். மேதை முதலான பதினாறு கலைகளின் முடிவில் வானத்தில் ஒளி தோன்றும் . சாதகனின் அறிவாலயம் எனப்படும் ஆன்மாவை வெளி உலகை நோக்கிச் செலுத்துகின்ற ஐந்து பொறிகள், நான்கு அந்தக் கரணங்கள், புத்தி என்பவை தம் இயல்பிலிருந்து மாறுபட்டு ஆன்மாவைக் கீழ் நோக்கி இழுப்பதை நிறுத்தி விடும். இதுவே சக மார்க்கம் எனப்படும் தோழமை நெறி ஆகும்.

#1708. இன்ப மயமானது பிரணவ உபாசனை

மேதாதி யாலே விடாதுஓம் எனத் தூண்டி
ஆதார சோதனை அத்துவ சோதனை
தாது ஆதாரமாகவே தான் எழச் சாதித்தால்
ஆதாரம் செய்போகம் ஆவது காயமே.

பிரணவத் தியானம் செய்து மேதை முதலிய பதினாறு கலைகளையும் நன்றாகத் தூண்ட வேண்டும் . வீரியத்தைத் தன் இடமாகக் கொண்டுள்ள, கீழ் நோக்கிப் பாய்கின்ற தன்மை உள்ள, குண்டலினி சக்தியை உடலின் ஐந்து மற்ற ஆதாரங்களின் வழியே மேல் நோக்கிச் செலுத்த வேண்டும். அது அப்போது அத்துவா என்னும் ஒரு தூயவழியை உண்டு பண்ணும். இதனால் உடலின் ஆறு ஆதாரங்களிலும் ஒளி உண்டாகும். அங்கு இன்பம் விளையும். பிரணவ உபாசனை இன்ப மயமானது.

#1709. எழுத்துக்கள் ஒடுங்கி நாதமாகும்

ஆறு அந்தமும் கூடி ஆகும் உடம்பினில்
கூறிய ஆதாரம் ஆறும் குறிக் கொண்மின்
ஆறிய அக்கரம் ஐம்பதின், மேலாக
ஊறிய ஆதாரத்து ஓர் எழுத்தாமே.

ஆறு ஆதாரங்கள் உடலில் உள்ளன. அவற்றை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அவற்றின் மீது தியானம் செய்து அவைகளின் வழியே படிப் படியாக மேலே ஏற வேண்டும். அந்த ஆறு ஆதாரங்களில் ஐம்பது எழுத்துக்கள் பொருந்தி உள்ளன. அவற்றைக் கடந்து செல்லும் போது அவை அனைத்தும் ‘ஓம்’ என்ற ஓரெழுத்தாகிய பிரணவத்தில் அடங்கி விடும்
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

#1709 to #1711

#1709. எழுத்துக்கள் ஒடுங்கி நாதமாகும்

ஆறு அந்தமும் கூடி ஆகும் உடம்பினில்
கூறிய ஆதாரம் ஆறும் குறிக் கொண்மின்
ஆறிய அக்கரம் ஐம்பதின், மேலாக
ஊறிய ஆதாரத்து ஓர் எழுத்தாமே.

ஆறு ஆதாரங்கள் உடலில் உள்ளன. அவற்றை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அவற்றின் மீது தியானம் செய்து அவைகளின் வழியே படிப் படியாக மேலே ஏற வேண்டும். அந்த ஆறு ஆதாரங்களில் ஐம்பது எழுத்துக்கள் பொருந்தி உள்ளன. அவற்றைக் கடந்து செல்லும் போது அவை அனைத்தும் ‘ஓம்’ என்ற ஓரெழுத்தாகிய பிரணவத்தில் அடங்கி விடும்.

#1710. நுண்ணுடல் பருவுடல் பொருந்தும்

ஆகும் உடம்பும் அழிகின்ற அவ் உடல்
போகும் உடம்பும் பொருந்திய வாறுதான்
ஆகிய அக்கரம் ஐம்பது தத்துவம்
ஆகும் உடம்புக்கும் ஆறு அந்தமாமே

பருவுடல் நுண்ணுடலின் இயல்புக்கு ஏற்ப அமையும். ஆகின்ற நுண்ணுடலும் போகின்ற பருவுடலும் நன்றாக ஒன்றாகப் பொருந்துவது எங்கனம்? நுண்மையாக நாதத்தில் ஒடுங்கிவிடுகின்ற, ஆனால் ஆதாரங்களில் ஐம்பதாக விரிகின்ற, எழுத்துக்களும், தத்துவங்களும் அந்த இரு உடல்களையும் நன்கு பொருந்தச் செய்கின்றன.

#1711. தூய அறிவு சிவானந்தம் ஆகும்

ஆயும் மலரின் அணிமலர் மேலது
ஆய இதழ் பதினாறும் அங்கு உள,
தூய அறிவு சிவானந்த மாகிப் போய்
மேய அறிவாய் விளைந்தது தானே.

ஆராயத் தகுந்த இதயத் தாமரைக்கு மேல் பதினாறு இதழ்த் தாமரை ஒன்று கழுத்தில் விசுத்திச் சக்கரத்தில் உள்ளது. அங்கு ஆன்மா தூய சிவானந்தமே தன்வடிவாகக் கொள்ளும். செறிந்த அறிவாக நீக்கமற நிறைந்து எங்கும் சென்று பொருந்தும்.
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

2. அண்ட லிங்கம்
அண்டம் = உலகம்
லிங்கம் = குறி / அடையாளம்
உலகம் முழுவதுமே சிவனது அடையாளம் ஆகும்.

#1712 to #1715

#1712. உலகம் சிவன் வடிவம்

இலிங்கம் அது ஆகுவது ஆரும் அறியார்
இலிங்கம் அது ஆகுவது எண்டிசை எல்லாம்
இலிங்கம் அது ஆவது எண்ணெண் கலையும்
இலிங்கம் அது ஆக எடுத்தது உலகே.

உலகத்துக்குக் காரணம் ஆனது இலிங்கம் எனப்படும் சிவம் என்ற உண்மையை யாரும் அறியார். எட்டுத் திசைகளிலும் நிறைந்திருப்பது உலகலிங்கம் என்று அறிவீர். அறுபத்து நான்கு கலைகள் உடைய பிரணவமும் சிவலிங்கம் ஆகும். உலகம் முழுவதும் காரண வடிவில் ஒடுங்கி இருப்பது சிவலிங்கத்திடமே.

#1713. உலகம் எடுத்த சதாசிவம்

உலகு இல் எடுத்தது சக்தி முதலா
உலகு இல் எடுத்தது சத்தி வடிவாய்
உலகு இல் எடுத்தது சத்தி குணமாய்
உலகம் எடுத்த சதாசிவம் தானே.

உலகைப் படைக்க விரும்பிய சதாசிவன், தன்னை விட்டு இணை பிரியாத சக்தியின் துணையுடன் அதைத் தோற்றுவித்தான். குண்டலினி சக்தி உலகுக்கும் உயிர்களுக்கும் வடிவத்தைத் தந்தது. சிவ சக்தியரின் சிற்சக்தி சீவர்களுக்கு அறிவைத் தந்தது.

#1714. அனைத்தையும் அளிப்பவன் சிவன்

போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும்
ஆகமும் ஆறாறு தத்துவத்து அப்பாலாம்
ஏகமும் நல்கி இருக்கும் சதாசிவம்
ஆகம் அது அத்துவாவறும் சிவமே

உலக வாழ்வில் இன்பம், முக்தி, சித்தி, புத்தி, அனைத்தையும் நமக்குத் தருபவன் சிவன். பெற்றுள்ள உடலையும் மற்றும் முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து ஒன்றாக விளங்கச் செய்பவனும் சிவன். ஆகமங்கள் உணர்த்துகின்ற ஆறு அத்துவாக்களின் வழியே சென்று அடையப்படுகின்றவனும் சிவன் .

# 1715. அண்டங் கடந்து காப்பவன் சிவன்

ஏத்தின ரெண்ணிலி தேவரெம் ஈசனை
வாழ்த்தினர் வாசப் பசுந்தென்றல் வள்ள லென்று
ஆர்த்தன ரண்டம் கடந்தப் புறநின்று
காத்தன னென்னும் கருத்தறி யாரே.

எண்ணற்ற தேவர்கள் எம் ஈசனாம் சிவனைப் போற்றித் தொழுதனர். அவர்கள் நறுமணம் பரப்பும் குளிர் தென்றல் போன்ற வள்ளல் என்று சிவனைப் போற்றிப் புகழ்ந்தனர். ஆரவாரம் செய்து கொண்டாடினர். எனினும் சிவன் அண்டங்களைக் கடந்து நின்று கொண்டு அவற்றைக் காப்பதை அவர்களும் அறியார்.
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

#1716 to #1720

#1716. தண்சுடராகிய தற்பரம்

ஒண்சுட ரோனயன் மால்பிர சாபதி
ஒண்சுட ரான இரவியோ டிந்திரன்
கண்சுட ராகிக் கலந்தெங்கும் தேவர்கள்
தண்சுட ராயெங்கும் தற்பரமாமே

ஒளிவீசும் சுடராகிய அக்கினி, பிரமன், திருமால், பிரசாபதி, காயும் கதிரவன், இந்திரன் இவர்களுடன் கண்ணில் ஒளி போலக் கலந்து நிற்பவன் சிவன். பிற தேவர்களிடம் குளிர்ந்த நிலவைப் போலக் கலந்து நிற்பவன் சிவன். இங்ஙனம் பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்து இருப்பவன் சிவன்.

#1717. மா பரத்தில் உள்ளான் சிவன்

தாபரத்துள் நின்று அருள வல்லான் சிவன்
மாபரத்து உண்மை வழிபடுவார் இல்லை;
மாபரத்து உண்மை வழிபடு வாளர்க்கும்
பூவகத்துள் நின்ற பொற்கொடி ஆகுமே.

அசையாப் பொருட்களில் லிங்கமாக உறைந்து சீவர்களுக்கு அருளுபவன் சிவன். அவனே ஞான ஆகாயமான பரமாகாயத்தில் மறைந்து உறைவதை அறிந்து கொண்டு அவனை வழிபடுபவர்கள் இல்லை. அவன் பரமாகாயத்தில் மறைந்து உறைந்து அருள் புரிவதை அறிந்து கொண்டவர்களுக்குச் சிவன் உடலின் ஆறு ஆதாரங்களிலும், சகசிரதளத்திலும், பொற்கொடி போன்ற குண்டலினி சக்தியாக விளங்குவான்.

#1718. ஆலயத்தில் அமையும் இலிங்கங்கள்

தூய விமானமும் தூலம தாகுமால்
ஆய சதாசிவ மாகுநற் சூக்குமம்
ஆய பலி பீடம் பத்திர லிங்கமாம்
ஆய வரனிலை யாய்ந்து கொள்வார் கட்கே.

அரன் ஆலயத்தைப் பற்றி அறிந்து கொள்பவருக்கு கருவறையின் மேல் அமைந்த விமானமே பருலிங்கம் ஆகும். கருவறையில் உள்ள லிங்கம் நுண் இலிங்கம் ஆகும். பலி பீடத்தில் இருப்பது இதழ் வடிவில் அமைந்துள்ள பத்திரலிங்கம்.

#1719. இலிங்கம் அமைக்க உகந்தவை எவை?

முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும்
கொத்துமக் கொம்பு சிலை நீறு கோமளம்
அத்தன்ற னாகம மன்ன மரிசியாம்
உய்த்ததின் சாதனம் பூமண லிங்கமே.

இலிங்கம் அமைக்க உகந்த பொருட்கள் இவை: முத்து, மாணிக்கம், பவளம், மரக் கொம்பு, கல், திருநீறு, மரகதம், சிவாகமம், சாதம், அரிசி, பூ, மணல்.

#1720. சிவலிங்கம் அமைக்கலாம்

துன்றுந் தயிர்நெய் பால் துய்ய மெழுகுடன்
கன்றிய செம்பு கனலிர தம்சலம்
வன்திறல் செங்கல் வடிவுடைவில்வம் பொன்
தென்றியங் கொன்றைத் தெளி சிவலிங்கமே

இறுகிய கட்டித் தயிர், தூய்மையான நெய், பால், பசுஞ் சாணம், செம்பு, அக்கினி, பாதரசம், சலம், நன்கு வேகவாய்த்த செங்கல், வில்வம், பொன் இவற்றாலும் சிவலிங்கம் செய்யலாம். திரவங்களை கலசத்தில் பெய்து அதை லிங்கமாக வழிபட வேண்டும்.
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

#1721 to #1725

#1721. இலிங்கங்களின் வகைகள்

மறையவர் அர்ச்சனை வண்படிகம் தான்
இறையவ ரர்ச்சனை ஏயபொன் னாகும்
குறைவிலா வசியர்க்குக் கோமளமாகும்
துறையுடைச் சூத்திதிரர் தொல்வாண லிங்கமே.

வளமிக்க படிக இலிங்கம் வேதியர்கள் பூசை செய்வதற்கு உரியது.
பொன்னால் ஆன இலிங்கம் மன்னர்கள் பூசை செய்வதற்கு உகந்தது.
செல்வ வளமிகுந்த வைசியர்கள் மரகத இலிங்கதைப் பூசிக்கலாம்.
தொண்டு செய்வதில் சிறந்த சூத்திரரகள் வாண லிங்கத்தை வழிபடலாம்.

#1722. சீவனின் உடலே ஓர் ஆலயம்

அது வுணர்ந் தோனொரு தன்மையை நாடி
ஏதுவுண ராவகை நின்றனன் ஈசன்
புதுவுணர் வான புவனங்கள் எட்டும்
இது உணர்ந் தென்னுடல் கோயில் கொண்டானே.

இலிங்கத்தில் மட்டும் சிவனைக் காணும் இயல்பினை உடைய ஒருவன் சிவபெருமான் உலகில் உள்ள அனைத்துப் பொருட்களிலும் கலந்து உறைவதை உணர முடியாது. மண், நீர், நெருப்பு, வளி, வெளி , கதிரவன், சந்திரன், ஆன்மா என்னும் இந்த எட்டிலும் இறைவன் கலந்து இருப்பதைத் தெரிந்து கொண்டபோது அவன் என் உடலையும் தன் கோவிலாகக் கொண்டு விளங்கினான்.

#1723. உள்ளமே ஓர் ஆலயம்

அகலிடமாய், அறியாமல் அடங்கும்
உகல்இடமாய், நின்ற ஊன் அதனுள்ளே
பகல்இடமாம் முனம் பாவ வினாசன்
புகலிடமாய் நின்ற புண்ணியன் தானே.

சிவன் அகன்று விரிந்த பிரபஞ்சம் ஆவான். அதனுடன் அவன் யாரும் அறியாத வண்ணம் கலந்து உறைகின்றான். உயிர்கள் அனைத்தும் சென்று ஒடுங்கும் உகளிடமும் ஆவான் சிவன். சீவன் முன்பு வினைகள் புரிந்து ஈட்டிய பாவங்களை நாசனம் செய்பவன் சிவன். அவனிடம் புகல் அடைந்தவர்களின் உடலுள் ஒளியை ஏற்படுத்துபவன் சிவபெருமான்.

#1724. அண்டமே அவன் திருமேனி

போது புனை கழல் பூமிய தாவது
மாது புனைமுடி வானக மாவது
நீதியுள் ஈசன் உடல் விசும்பாய் நிற்கும்
ஆதியுற நின்ற தப்பரி சாமே.

ஆதாரங்களை மாலையாக அணிந்துள்ள ஈசனின் திருவடி நிலம் ஆகும். ஒளியுடைய கங்கை திகழும் திருமுடி வானம் ஆகும். ஆதி பகவானான ஈசனின் உடல் விசும்பாக நிற்கும் தன்மை இதுவே. இந்த அண்டமே அவன் அரிய திருமேனி.

#1725. அண்ட இலிங்கம்

தரையுற்ற சத்தி தனி லிங்கம் விண்ணாம்
திரை பொரு நீரது வரை மஞ்சன சாலை
வரைதவழ் மஞ்சுநீர் வானுடு மாலை
கரையற்ற நந்திக் கலையும் திக்காமே.

நிலம் என்னும் சத்தி பீடத்தின் மேல் விளங்கும் அண்ட இலிங்கம் விண்ணளாவ நிற்கும். அலை கடலே இதன் திரு மஞ்சன சாலை! மலை முகிலே இதன் திரு மஞ்சன நீர். விண்ணில் மின்னும் விண் மீன்களே அண்ட இலிங்கம் அணிந்துள்ள மாலை. எட்டுத் திசைகளே அண்ட இலிங்கம் அணிந்துள்ள ஆடை.
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

3. பிண்ட இலிங்கம்
பிண்டம் = உடல்
சீவனின் உடலே ஒரு சிவலிங்கம்

#1726 to #1729

#1726. மானுடராக்கை ஒரு சிவலிங்கம்

மானுட ராக்கை வடிவு சிவலிங்கம்
மானுட ராக்கை வடிவு சிதம்பரம்
மானுட ராக்கை வடிவு சதாசிவம்
மானுட ராக்கை வடிவு திருக் கூத்தே.

மனித உடலின் வடிவமே ஒரு சிவலிங்கம்.
மனிதனின் உடலே ஆகும் ஓர் அறிவாலயம்.
மனிதனின் உடல் சதாசிவனின் திருவடிவம்.
மனிதனின் அசைவுகள் சிவனின் திருக்கூத்து!

மனித உடலில் இடை வரை அமைவது பிரம்ம பீடம். அதற்கு மேலுள்ள உடற்பகுதி ஆகும் சக்தி பீடம். மனிதனின் தலை ஆகும் சிவலிங்கம். தலையின் மேலே விளங்குவது ஞான ஆகாசம் ஆகிய சிம்பரம். எல்லா அசைவுகள் நிகழுகின்ற உடல் சிவனின் திருக் கூத்து நடக்குமிடம்.

#1727. வந்தனை செய்வீர்!

‘உலந்திலர், பின்னும் உளர்’ என நிற்பர்
நிலம் தரு நீர், தெளி யூனவை செய்யப்
புலம் தரு பூதங்கள் ஐந்தும் ஒன்றாக
வளம் தரு தேவரை வந்தி செய்யீரே.

‘அழியவில்லை இவர். நுண்ணுடலில் ஒடுங்கி உள்ளார்’ என்று கூறும்படி ஒருவரால் வாழ இயலும். ஐம் பெரும் பூதங்களில் நிலம் நீரில் ஒடுங்கும்; நீர் நெருப்பில் ஒடுங்கும்; நெருப்பு காற்றில் ஒடுங்கும்; காற்று வானத்தில் ஒடுங்கும். இங்ஙனமே ஐம்பெரும் பூதங்களுக்குக் காரணமான சுவை, ஒளி, ஓசை, ஊறு, நாற்றம் என்னும் ஐந்து தன் மாத்திரைகளும் ஒடுங்கிவிடும். இந்த விந்தையைச் செய்யவல்ல ஈசனைச் சிந்தையில் கொள்ளுங்கள். அப்போது பருவுடல் அழிந்தாலும் நுண்ணுடல் அழியாமல் நிலை பெற்று விளங்கும்.

#1728. ஈசன் ஆளவந்தான்

கோவில் கொண்ட அன்றே குடிகொண்ட ஐவரும்;
வாயில் கொண்டு ஆங்கே வழி நின்று அருளுவர்;
தாய் இல் கொண்டாற்போல் தலைவன் என்னுள் புக,
வாயில் கொண்டு ஈசனும் ஆள வந்தானே.

உடல் உண்டான போதே ஐந்து பூதங்களின் தலைவர்களும் அதில் குடியேறினார்கள். அவரவர் தொழிலை, அதன் அதன் நுழைவாயிலில் நின்று கொண்டு நன்கு செய்து, ஆன்மாவுக்குத் தேவையான அறிவை அளித்து உதவினார்கள். அன்னை வீட்டுக்குப் போவது போல விருப்பத்துடன் ஈசன் என் உள்ளத்தில் குடி புகுந்தான். அந்த நுழை வாயில்களைத் தனதாக்கிக் கொண்டு என்னை ஆள வந்தான்.

#1728. விளக்கம்

  1. நான்முகன்…..மண் …. ..மூக்கு…..மணம்
  2. திருமால் ………நீர்…………நாக்கு….சுவை
  3. உருத்திரன்……நெருப்பு…கண்……..ஒளி
  4. மகேசுரன்……..காற்று……தோல்….ஊறு
  5. சதாசிவன்……..வான் …….செவி….ஓசை

#1729. நாடிகளை இயக்குபவன்

கோயில் கொண்டான் அடி கொல்லைப் பெருமறை
வாயில் கொண்டான் அடி நாடிகள் பத்து உள
பூசை கொண்டான் புலன் ஐந்தும் பிறகிட்டு
வாயில் கொண்டான் எங்கள் மாநந்தி தானே.

எங்கள் நந்திப் பிரான் இந்த உடலையே அவன் உறையும் அழகிய ஆலயமாக ஏற்றுக் கொண்டான். மூலாதாரத்தில் உள்ள நான்கு இதழ்த் தாமரையைத் தன் இருப்பிடமாகக் கொண்டான். உடலின் பத்து முக்கிய நாடிகளின் செயலை அவன் செய்விக்கின்றான். ஐம்புலன்கள் தறி கேட்டுத் திரியாத வண்ணம் அவன் காவல் செய்கின்றான்.

பத்து முக்கிய நாடிகள் :
இடைகலை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி, அத்தி, அலம்புடை, சிங்குவை, புடை, சங்கினி, குரு.
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

4. சதாசிவ லிங்கம்

#1730 to#1733

#1730. சதாசிவனின் வடிவம்

கூடிய பாதம் இரண்டும் படிமிசை;
பாடிய கை இரண்டு எட்டுப் பரந்து எழும்
தேடும் முகம் ஐந்து; செங்கையின் மூவைந்து
நாடும் சதாசிவ நல்லொளி முத்தே.

திருவருள் மிகுந்த இரு திருவடிகள் பூமியின் மேலே அமைந்து இருக்கும். பாடிப் பரவும் பத்துக் கரங்கள் எல்லாத் திசைகளிலும் பரவி நிற்கும். அன்பர்கள் காண விழைந்து தேடும் முகங்கள் ஐந்தாக அமையும். செம்மை நிற விழிகள் மூவைந்தாக அந்த ஐந்து முகங்களில் விளங்கும். முத்துக்களின் நிறத்துடனும் ஒளியுடனும் மிளிரும் சதாசிவனின் அழகிய வடிவம் இதுவே என்று அறிவீர்.

#1731. யாவரும் சதாசிவமே!

வேதா நெடுமால் உருத்திரன் மேலீசன்
மீதான ஐம்முகன் விந்துவும் நாதமும்
ஆதார சக்தியும் அந்தச் சிவனொடும்
சாதா ரணமாம் சதாசிவந் தானே.

நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன், விந்து, நாதம், குண்டலினி சக்தி என்னும் இவை யாவும் சதாசிவமே!

#1732. ஒளிமயமானவன் சதாசிவன்

ஆகின்ற சத்தியி னுள்ளே கலைநிலை
ஆகின்ற சக்தியி னுள்ளே கதிரெழ
ஆகின்ற சத்தியி னுள்ளே யமர்ந்தபின்
ஆகின்ற சத்தியு ளத்திசை பத்தே.

சதாசிவம் என்னும் அனைத்துமாய் ஆகின்ற சக்தியில் நிலை பெரும் ஐந்து கலைகள் இவை:-
1. நிவிருத்தி, 2. பிரதிட்டை, 3. வித்தை, 4. சாந்தி, 5. சாந்தியாதீதை என்பவை.
இந்த ஐந்து கலைகளால் அங்கே சிவ சூரியன் உதிப்பான்.
அதன் ஒளி அண்டகோசத்தை உள்ளும் புறமும் முழுதாக நிறைத்து விடும். அந்த பேரொளியில் எண்திசைகளுடன், மேலும் கீழுமாகப் பத்து திசைகளும் ஒளி மயமாகி விடும்.

#1733. அறிவின் இருப்பிடம் அண்டகோசம்

அத்திசைக் குள்ளே அமர்ந்தன ஆறங்கம்
அத்திசைக் குள்ளே அமர்ந்தன நால்வேதம்
அத்திசைக் குள்ளே அமர்ந்தன சரியையோடு
அத்திசைக் குள்ளே அமைந்த சமயமே.

பத்துத் திசைகள் கொண்டது அண்டகோசம். அதில் ஆறு பெரிய சாத்திரங்களின் அறிவும் நிறைந்து இருக்கும். அங்கே நான்கு வேதங்களின் அறிவும் நிரம்பி இருக்கும். சரியை முதலிய நன்நெறிகளின் சமய அறிவும் அங்கே அமைந்திருக்கும்.
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

#1734 to 1737

#1734. உருவ அருவ இடைநிலை

சமயத் தெழுந்த அவத்தையீ ரைந்துள
சமயத் தெழுந்த இராசி யீராருள
சமயத் தெழுந்த சதிரீரா றெட்டுள
சமயத் தெழுந்த சதாசிவம் தானே.

சமயத்தில் ஐந்து கீழ் அவத்தைகளும், ஐந்து மேல் அவத்தைகளும் உள்ளன. சமயத்தில் கதிரவனின் ஈராறு பன்னிரண்டு ராசிகள் உள்ளன. சமயத்தில் ஈரெட்டுப் பதினாறு சந்திர கலைகளும் உள்ளன. காணும் உருவத்துக்கும் காண இயலாத அருவதுக்கும் இடைநிலையில் உள்ளது சதாசிவம்.

கீழ் அவத்தைகள் ஐந்து:-

சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்பவை மேலிருந்து மூலாதாரம் வரையில் கீழே இறங்கும் முறையில் அமைவது.

மேல் அவத்தைகள் ஐந்து:-

சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்பவை மூலாதாரம் முதலாக ஏறுமுகமாக அமைவது.

#1735. முகங்களின் நிறங்கள்

நடுவு, கிழக்குத் தெற்குத்தரம், மேற்கு
நடுவு படிகம் நற்குங்கும வன்னம்
அடைவு உள அஞ்சனம், செவ்வரத்தம், பால்
அடியாற்கு அருளிய முகம்இவை அஞ்சே.

திசை………முகம்…………………..நிறம்

உச்சி………ஈசானம்……………….படிகம்
கிழக்கு……தத்புருடம்…………….மஞ்சள் குங்குமம்
தெற்கு……அகோரம்……………..அஞ்சனம்
வடக்கு ……வாமதேவம்………... சிவப்பு
மேற்கு…… சத்தியோசாதம் .. .....பால்

இந்த ஐந்து முகங்களும் அடியவர்களுக்கு அருள் செய்யும் முகங்கள் ஆகும்.

#1736. சதாசிவன் தோற்றத்தின் ஏற்றம்

அஞ்சு முகமுள ஐம்மூன்றும் கண்ணுள
அஞ்சினொ டஞ்சு கரதலம் தானுள
அஞ்சுடன் அஞ்சா யுதமுள நம்பி என்
நெஞ்சு புகுந்து நிறைந்து நின்றானே.

சதாசிவனுக்கு ஐந்து அழகிய முகங்கள் உள்ளன; பதினைந்து சிவந்த கண்கள் உள்ளன; காக்கும் கரங்கள் பத்து உள்ளன, அவற்றில் பத்து அரிய படைக்கலன்கள் உள்ளன. இத்தகைய ஏற்றம் வாய்ந்த தோற்றத்துடன் சதாசிவன் என் நெஞ்சம் புகுந்து நிறைந்து நிற்கின்றான்.

#1737. முப்பத்தாறு தத்துவங்கள்

சத்தி தராதலம் அண்டம் சதாசிவம்
சத்தி சிவமிக்க தாபர சங்கமம்
சத்தி யுருவம் அருவம் சதாசிவம்
சத்தி சிவதத்துவ முப்பத் தாறே.

சக்தி பூமி என்றால் சதாசிவம் அண்டம் ஆவான். அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள் என்னும் அனைத்தும் சிவ சக்தியரே. உருவம் படைத்த அனைத்தும் சக்தியின் வடிவம். அருவமாவது சதாசிவன். சக்தியும் சதாசிவனும் பொருந்திய தத்துவங்கள் முப்பத்தாறு ஆகும்.

முப்பத்தாறு தத்துவங்கள்:-
ஆன்ம தத்துவங்கள்………….24
வித்தியா தத்துவங்கள் … …. ..7
சிவ தத்துவம்…………………5
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

#1738 to #1742

#1738. சுகோதயம் சதாசிவம்

தத்துவ மாவ தருவம் சராசரம்
தத்துவ மாவ துருவம் சுகோதயம்
தத்துவ மெல்லாம் சகலமு மாய்நிற்கும்
தத்துவ மாகும் சதாசிவன் தானே.

தத்துவமாக இருக்கும் போது அருவமாக இருக்கும். அதுவே உருவெடுத்துக் கொண்டால் சரம், அசரமாக மாறிவிடும். உருவெடுத்து விரியும் போது தத்துவம் சுகோதயம் ஆகிச் சுகத்தை விளக்கும். இங்ஙனம் அனைத்துமாக விளங்கும் தத்துவம் சதாசிவமே ஆகும்.

#1739. ஊறு சதாசிவனைக் கூறுமின்!

கூறுமின், ஊறு சதாசிவன், எம் இறை
வேறு உரை செய்து மிகைப் பொருளாய் நிற்கும்
ஏறுரை செய்தொழில் வானவர் தம்மொடும்
மாறு செய்வான் என் மனம் புகுந்தானே.

உள்ளத்தில் உறையும் சதாசிவனைப் போற்றிப் புகழுங்கள்! அவன் வேறு வகையான பிற நூல்களால் சிறிதும் அறியப்படாதவன். அவன் அவற்றைக் கடந்து நிற்பவன். தம் மேன்மைக்காகத் தன்னைப் புகழும் வானவருடன் இவன் மாறுபட்டு நிற்பான். இத்தகைய சிறப்பு வாய்ந்தவன் உவந்து வந்து என் மனம் புகுந்தான்.

#1740. உள்ளம் தெளிந்தேன்

இருளார்ந்த கண்டமும் ஏந்து மழுவும்
சுருளார்ந்த செஞ்சடைச் சோதிப் பிறையும்
அருளார்ந்த சிந்தைஎம் ஆதிப் பிரானைத்
தெருளார்ந்தென் னுள்ளே தெளிந்திருந் தேனே

கரிய நிறம் கொண்ட கண்டமும், வலக் கரத்தில் ஏந்திய மழுவும், சுருண்ட செஞ்சடையில் ஒளிரும் பிஞ்சு மதியும், அருள் சிந்தையும் கொண்ட ஆதிப் பிரானாகிய சதாசிவனைத் தெளிந்திருக்கும் என் சிந்தையில் இருத்தி நானும் தெளிவடைந்திருந்தேன்.

#1741. முடி முதல் அடி வரை தொழுமின்!

சத்திதான் நிற்கின்ற ஐம்முகஞ் சாற்றிடில்
உத்தமம் வாம முரையத் திருந்திடும்
தத்துவம் பூருவம் தர்புரு டன்சிர
மத்த குகோரம் மகுடத்தீ சானனே.

சீவர்களுக்கு அருள் செய்திட இருக்கும் சதாசிவனின் ஐந்து முகங்கள் பற்றிக் கூறினால், மெளனமாக வடக்கு திசையில் விளங்கும் வாமதேவம் அனைத்திலும் உத்தமமானது. கிழக்கில் உள்ள தத்புருடம் உடலில் உள்ள தத்துவங்களை இயக்குவது. தெற்கு நோக்கிய அகோரம் சிரசை நிகர்த்தது. மகுடத்தில் உள்ள வடகிழக்கு திசையை நோக்கியுள்ள முகம் ஈசானம்.

#1742. வணங்கும் விதிகள்

நாணுநல் லீசான நடுவுச்சி தானாகும்
தாணுவின் தன்முகம் தற்புருட மாகும்
காணும் அகோர மிருதயம் குய்யமாம்
மாணுற வாமமாம் சத்தி நற்பாதமே.

ஈசான முகத்தைத் தொழும்போது தலையைத் தொட்டு வணங்க வேண்டும்.
தத்புருட முகத்தைத் தொழும்போது முகத்தைத் தொட்டு வணங்க வேண்டும்.
அகோர முகத்தை வணங்கும் போது இதயத்தைத் தொட்டு வணங்க வேண்டும் .
வாமதேவ முகத்தை வணங்கும் போது குறியைத் தொட்டு வணங்க வேண்டும்.
சத்தியோ சாதத்தை வணங்கும் போது பாதத்தை தொட்டு வணங்க வேண்டும்
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

#1743 to #1747

#1743. குண்டலினி சக்தி

நெஞ்சு சிரம்சிகை நீள் கவசங் கண்ணாம்
வஞ்சமில் விந்து வளர்நிறம் பச்சை யாம்
செஞ்சுறு செஞ்சுடர் சேகரி மின்னாகும்
செஞ்சுடர் போலுந் தெசாயுதம் தானே.

ஆறு சைவ மந்திரங்கள் உடலின் ஆறு அங்கங்களைப் பற்றி அமைந்தவை. அவை முறையே இதயம், தலை, சிகை , கவசம், நேத்திரம், அத்திரம் என்பவை. வஞ்சனை இன்றி சீவனுக்கு அறிவு விளக்கம் தரும் சக்தியின் நிறம் வளர் பச்சை. இவள் உடல் எல்லாம் ஒளி மயமாகி இருக்கும் போது மின்னல் போல விளங்குவாள். கரங்களில் பற்றி இருக்கும் பத்து ஆயுதங்களும் உதிக்கும் சூரியனின் ஒளியுடன் மிளிரும்.

சைவமந்திரங்கள் ஆறு :-
1. இருதயாய நம: 2. சிரசாய நம: 3. சிகாய நம: 4. கவசாய நம: 5. நேத்திராய நம: 6. அத்திராய நம:

#1744. ஐந்து சக்திகள்

எண்ணில் இதயம் இறைஞான சக்தியாம்
விண்ணிற் பரைசிர மிக்க சிகையாதி
வண்ணக் கவசம் வனப்புடை இச்சையாம்
பண்ணுங் கிரியை பரநேத் திரத்திலே.

எண்ணிப் பார்த்தால் இது விளங்கும். இருதய மந்திரம் என்பது இறைவனின் ஞான சக்தி; சிரசு மந்திரம் என்பது விண்ணில் விளங்கும் உயர்ந்த பராசக்தி; சிகை மந்திரம் என்பது ஆதி சக்தி; கவச மந்திரம் என்பது இச்சா சக்தி; நேத்திரம் என்பது கிரியா சக்தியாகும்.

#1745. சத்தி உருவாம் சதாசிவம் தானே

சத்தி நாற்கோணம் சலம் உற்று இருந்திடும்
சத்தி அறுகோணம் சயனத்தை உற்றிடும்
சத்தி நல் வட்டம் சலம் உற்று இருந்திடும்
சத்தி உருவாம் சதாசிவம் தானே.

குண்டலினி சக்தி சீவனின் உடலில் தான் இருக்கும் இடத்துக்கு ஏற்ப மாறுபட்டு விளங்கும். நாற்கோண வடிவமாகிய மூலாதாரத்தில் இருக்கும் போது இது ஜலதாரையை நோக்கிய வண்ணம் இருக்கும். குண்டலினி மேலே நகர்ந்து அறுகோண வடிவம் கொண்ட கழுத்தை அடையும் போது உறக்க நிலை
ஏற்படும். குண்டலினி வட்ட வடிவம் கொண்ட நெற்றியை அடையும் போது நீரோட்டம் போன்ற ஒரு உணர்வைத் தோற்றுவிக்கும். இத்தகைய ஒளிமயமான சக்தியின் வடிவமே சதாசிவன் வடிவம் ஆகும்.

#1746. பஞ்சப் பிரமத்தின் ஒன்பது நிலைகள்

மானந்தி எத்தனை காலம் அழைக்கினும்
தான்நந்தி அஞ்சின் தனிச்சுடராய் நிற்கும்
கால்நந்தி, உந்தி கடந்து கமலத்தின்
மேல், நந்தி ஒன்பதின் மேவிநின் றானே.

எத்தனை காலம் தொழுத போதிலும் சதாசிவன் பஞ்சப் பிரமமாகவே விளங்குவான். மூலாதாரத்தில் இருந்து எழுந்து, உடலின் எல்லா ஆதாரங்களையும் கடந்து சென்று, ஊர்த்துவ சகசிர தளத்தை அடையும் போது சதாசிவன் ஒன்பது நிலைகளிலும் ஒன்றி நிற்பான்.

#1747. உடலிலும் உயிரிலும் கலந்து நிற்பான்

ஒன்றியவாறும், உடலினுடன் கிடந்து
என்றும் எம் ஈசன், நடக்கும் இயல்பு அது;
தென்தலைக்கு ஏறத் திருந்து சிவனடி
நின்று தொழுதேன் என் நெஞ்சத்தின் உள்ளே.

சீவனின் உடலிலும் உயிரிலும் கலந்து உறைவது சிவபெருமானின் இயல்பு ஆகும். சிவன் திருவடிகள் சூரிய கலை, சந்திர கலைகளைக் கடந்து மேலே நிராதாரத்துக்குச் சென்ற போது நான் அவனை என் நெஞ்சத்தில் உள்ளே நினைந்து தொழுதேன்.
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

#1748 to #1752

#1748. பகலவன் பாட்டு ஒலியே!

உணர்ந்தேன் உலகினில் ஒண்பொரு ளானைக்
கொணர்ந்தேன் குவலயம் கோயில் என் நெஞ்சம்
புணர்ந்தேன், புனிதனும் பொய் அல்ல மெய்யே
பணிந்தேன் பகலவன் பாட்டும் ஒலியே.

உலகம் முழுவதும் ஒளிப் பொருளாக மிளிரும் பரமசிவனை அவன் அருளால் நான் உணர்ந்து கொண்டேன். சீவர்கள் உய்யும் வண்ணம் அவனைப் பூமித் தத்துவதிற்குக் கொண்டு வந்தேன். என் உள்ளக் கோவிலில் புனிதனாகிய சிவபெருமானுடன் நான் கூடினேன். தூய இறைவன் எனக்கு நாத வடிவமாகத் தோன்றினான். சிவசூரியனை நான் பாடிப் பணிந்தேன். அவனோ தன் நாதத்தால் என்னுடன் கூடி இருந்தான்.

#1749. ஆதியும், அந்தமும், இந்துவும் ஆகும்

ஆங்கு அவை மூன்றினும் ஆரழல் வீசிடத்
தாங்கிடும் ஈரேழும் தான் நடுவான் அதில்
ஓங்கிய ஆதியும் அந்தமும் ஆம் என
ஈங்குஇவை தம் உடல் இந்துவும் ஆமே.

அக்கினி மண்டலம், கதிரவன் மண்டலம், சந்திர மண்டலம் என்னும் மூன்றும் ஆரழல் வீசிடும். ஒன்பது நிலைகளிலும் தானே பொருந்தியுள்ள சதாசிவன், ஈரேழு பதினான்கு உலகங்களையும் தாங்கி நிற்பான். ஆதியும் அவனே, அந்தமும் அவனே, உடலில் சந்திர மண்டலத்தை விளங்கச் செய்பவனும் அவனே.

ஒன்பது நிலைகளில் உள்ள முதல் நால்வரும் ( நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுரன் ) உருவம் கொண்டவர்கள். நடுவில் உள்ள சதாசிவம் அருவுருவம் கொண்டவன். மற்ற நான்கும் ( நாதம், விந்து, சக்தி, சிவம்) அருவம் ஆனவை.

#1750. ஞானி தானே சிவம் ஆகிவிடுவான்

தன்மேனி தற்சிவ லிங்கமாய் நின்றிடும்
தன்மேனி தானும் சதாசிவ மாய்நிற்கும்
தன்மேனி தற்சிவன் தற்சிவா னந்தமாம்
தன் மேனி தானாகும் தரற்பரந் தானே.

மேலே கூறிய வண்ணம் மாறிய உடல் ஒரு சிவலிங்கம் ஆகிவிடும். அதுவே சதாசிவம் ஆகிவிடும். அந்த உடல் அடைவது கிடைப்பதற்கரிய சிவானந்தம் ஆகும். அந்த உடலே உயரிய சிவமாகி விடும்.

#1751. சதாசிவ நிலை இதுவே

ஆரும் அறியார் அகாரம் அவன் என்று;
பாரும் உகாரம் பரந்திட்ட நாயகி;
தாரம் இரண்டும் தரணி முழுதுமாய்
மாறி எழுந்திடும் ஓசையது ஆமே.

அகாரமே சிவன் என்பதை யாரும் அறியார். உகாரம் ஆகிய சக்தி உலகப் பொருட்கள் அனைத்திலும் கலந்து நிற்பாள். சிவனும் சக்தியும் பொருந்தி இந்த உலகத்தை உண்டாக்கினர். இந்த சிவசக்தியர் தலையைத் தாண்டும் போது நாத ஒலியை ஏற்படுத்துவர்.

#1752. பிரணவம்

இலிங்க நற்பீடம் இசையும் ஓங்காரம்
இலிங்கம் நற்கண்டம் நிறையும் மகாரம்
இலிங்கத்து உள்வட்டம் நிறையும் உகாரம்
இலிங்க அகாரம் நிறைவிந்து நாதமே.

சதாசிவ லிங்கத்தின் பீடம் ஆகும் ஓங்காரம்.
லிங்கத்தின் கண்டப் பிரதேசம் ஆகும் மகாரம்.
சதாசிவ லிங்கத்தின் உள்வட்டம் ஆகும் உகாரம்.
லிங்கத்தின் மேற்பகுதி அகாரம், நாதம் விந்து ஆகும்.
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

5. ஆத்ம லிங்கம்

5. ஆத்ம லிங்கம் = ஆத்மாவே ஒரு சிவலிங்கம் ஆகுதல்

#1753 to #1757

#1753. சிவசக்தியரின் வடிவம்

அகார முதலா அனைத்துமாய் நிற்கும்
உகார முதலா யுயிர்ப் பெய்து நிற்கும்
அகர வுகார மிரண்டு மறியில்
அகார உகார மிலிங்கம் தாமே.

அகரம் ஆகிய சிவம் அனைத்துப் பொருட்க்களுடன் கலந்து இருக்கும். உகரமாகிய சக்தி அப்பொருட்கள் உயிர்பெற உதவும். அகரம் சிவம் என்றும், உகரம் சக்தி என்றும் அறிந்து கொண்டால் அகர உகரம் பொருந்தியதே சிவலிங்கம் என்று புரிந்து விடும்.

#1754. ஆன்மலிங்கம்

ஆதாரம், ஆதேயம் ஆகின்ற விந்துவும்
மேதாதி நாதமும் மீதே விரிந்தன;
ஆதார விந்து அதி பீட நாதமே
போதா இலிங்கப் புணர்ச்சி அது ஆமே.

விந்துவை ஆதாரம் ஆகக் கொண்டு மேதாதி நாதம் அதன் மேல் ஆதேயமாக விரிந்தது. ஆதார விந்துவே ஆதி பீடம் ஆகும். மேதாதி நாதம் அதனுடன் இணைந்து சிவலிங்கம் ஆனது.

#1755. சக்தி சிவம்

சத்தி சிவமாம் இலிங்கமே தாபரம்
சத்தி சிவமாம் இலிங்கமே சங்கமம்
சத்தி சிவமாம் இலிங்கஞ் சதாசிவம்
சத்தி சிவமாகும் தாபரம் தானே.

இடம் பெயர்ந்து செல்ல முடியாத பொருட்கள் அனைத்துமே சக்தி சிவனின் சேர்க்கையில் உருவானவை. அசைந்து இடம் பெயரும் உயிரினங்களும் சக்தி சிவனின் சேர்க்கையில் உருவானவை. சதாசிவனும் சக்தி சிவனின் சேர்க்கையில் தோன்றியவன். ஆனால் சக்தியும் சிவமும் பிறப்பற்றவர்கள்!

#1756. பூ நேர் எழும் பொற்கொடி

தான்நேர் எழுகின்ற சோதியைக் காணலாம்
வான்நேர் எழுகின்ற ஐம்பது அமர்ந்திடம்
பூநேர் எழுகின்ற பொற்கொடி தன்னுடன்
தானேர் எழுகின்ற அகாரம் அது ஆமே.

சிவசக்தியரின் வடிவமாகிய ஆத்தும லிங்கத்தில் ஒரு பேரொளியைக் காணலாம். வான் கூற்றில் ஐம்பது அக்கரங்கள் தோன்றும் இடமும் அதுவே ஆகும். உடலின் ஆதாரச் சக்கரங்களில் எழுகின்ற பொற்கொடியாகிய குண்டலினி சக்தியுடன் அகரமாகிய சிவனும் பொருந்திக் கலந்து விளங்குவான்.

#1757. நாதமும் விந்துவும்

விந்துவும் நாதமும் மேவு மிலிங்கமாம்
விந்துவ தேபீட நாத இலிங்கமாம்
அந்தவிரண்டும் ஆதார தெய்வமாய்
வந்த கருஐந்துஞ் செய்யு மவை ஐந்தே.

ஆன்மாவிடம் பொருந்தியுள்ள விந்து நாதங்களின் சேர்க்கையே ஆன்ம லிங்கம் ஆகும், விந்துவே இதன் ஆதாரம். நாதமே இதில் ஆதேயம். இவற்றில் சேர்க்கையில் உருவான ஆன்ம லிங்கத்தை ஆதாரமாகக் கொண்டு மற்ற ஐந்து தெய்வங்கள் தத்தம் தொழில்களை சரிவர இயற்றுகின்றார்கள்
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

#1758 to #1762

#1758. தத்துவங்கள் ஆன்மலிங்கம்

சத்தி நற்பீடம் தகு நல்ல வான்மா
சத்தி நற்கண்டம் தகு வித்தை தானாகும்
சத்தி நல் லிங்கம் தகுஞ்சிவ தத்துவம்
சத்திநல் லான்மாச் சதாசிவம் தானே.

சக்தியின் பீடமாக அமைவது ஆன்ம தத்துவங்கள்.
சக்தியின் கண்டமாக அமைவது வித்தியா தத்துவம்.
சக்தியின் இலிங்கமாவது சிவதத்துவம்.
சக்தியின் ஆத்மாவாக ஆவது எப்போதும் சதாசிவம்.

#1759. இலம் புகுவான்

மனம் புகுந்து என் உயிர் மன்னிய வாழ்க்கை
மனம் புகுந்து இன்பம் பொழிகின்ற போது
நலம் புகுந்து என்னொடு நாதனை நாடும்
இலம் புகுந்து ஆதியும் மேற்கொண்ட வாறே.

சிவபிரான் என் மனத்தில் புகுந்து கொண்டான். என் உயிரில் கலந்து என் வாழ்வில் பேரின்பம் சுரக்கச் செய்தான். நலம் தருகின்ற அந்த நாதனை நீங்களும் நாடுவீர். அப்போது அவன் நம் தலை உச்சியில் விளங்கி நம்மை ஆட்கொள்ளுவான்.

#1760. மனத்து உறைவான்

பராபரன், எந்தை, பனிமதி சூடி,
தராபரன், தன்அடி யார்மனக் கோயில்
சிராபரன், தேவர்கள் சென்னியில் மன்னும்
அராபரன் மன்னி மனத்துள் உறைந்தானே.

பராபரன் சிவன் மேலானவற்றுக்கு எல்லாம் மேலானவன். அவன் நம் அனைவரின் தந்தை ஆவான். பனி மதியைச் சூடிய அவன் அடியவர்களின் மனக் கோவிலில் குடியிருப்பான். தேவர்களின் சிரசின் மீது ஒளிமயமாக விளங்குவான். மண்டலமிட்ட குண்டலினி சக்தியின் தலைவனாகிய அவன் நீங்காமல் என் உள்ளத்தில் உறைந்து விட்டான்.

#1761. உள்ளமே ஆலயம்

‘பிரான் அல்லன் , நாம்’ எனின், பேதை உலகம்
குரால் என்னும் என்மனம் கோவில் கொள்ஈசன்
அராநின்ற செஞ்சடை, அங்கியும் நீரும்
பெரா நின்றவர் செய் அப்புண்ணியன் தானே.

“சிவன் பிரான் அல்லன். நானே பிரான்!” என்று கூறுபவன் அறியாமையில் முழுவதுமாக அமிழ்ந்துள்ளவன். கட்டப்பட்ட பசுவின் தன்மையை உடைய என் மனத்தில் அவன் கோவில் கொண்டுள்ளான். அவன் செஞ்சடையில் நீரும், மேனியில் பாம்பும், கரத்தில் நெருப்பும் உடையவன். நாம் செய்யும் புண்ணியச் செயல்களின் பலன் அவனே ஆவான்.

#1762. என்றும் நின்று ஏத்துவன்

அன்று நின்றான் , கிடந்தான் அவன் என்று
சென்று நின்று எண்டிசை ஏத்துவர் தேவர்கள்;
என்றும் நின்று ஏத்துவன் எம்பெருமான் தன்னை
ஒன்றி என்உள்ளத்தின் உள்இருந் தானே.

‘அன்று இறைவன் அங்கு நின்றான்’, ‘அன்று இறைவன் இங்கு கிடந்தான்’ என்று கூறித் தேவர்கள் அவனை எண்திசைகளிலும் சென்று வணங்குவர். என் உயிருக்கு உயிராக என் மனதில் பொருந்தி நிற்கும் அவனை நான் என்றும் ஏத்திப் புகழ்ந்து தொழுவேன்.
 

Latest ads

Back
Top