Quotable Quotes Part II

#2255 to #2260

#2255. அத்தன் அருளால் சித்தம் ஒடுங்கும்

பெத்தமும் முத்தியும், பேணும் துரியமும்,
சுத்த ஆதீதமும் தோன்றாமல் தான் உணும்
அத்தன் அருள் என்று அருளால் அறிந்த பின்
சித்தமும் இல்லை, செயல் இல்லை தானே.


சீவன் மன மலங்களால் கட்டப் பட்ட நிலை பெத்தநிலை.
அவற்றில் இருந்து விடுபட்ட நிலை முத்தி நிலை.
ன்னைத் தானே உணர்ந்து கொள்வது துரிய நிலை.
சுத்த அவத்தை துரியாதீத நிலை.

ஆன்மாவுக்கு இந்த நிலைகள் தோன்றாதபடிச் சிவன் சீவனை ஆட்கொள்வான் என்ற உண்மையைச் சிவன் அருளால் சீவன் அறிந்து கொண்டு விட்ட பின்பு, சீவனின் சித்தமும் அடங்கி விடும், செயல்களும் ஒடுங்கி ஓடும்.


#2256. எய்தும் உயிர் இறைபால் அறிவு ஆகும்


எய்திய பெத்தமும் முத்தமும் என்பன
எய்தும் அரன் அருளே;விளையாட்டோடு
எய்திடு உயிர் சுத்தத்து இடுநெறி என்னவே
எய்தும் உயிர்இறை பால்அறிவு ஆமே.


உயிர்கள் அடைகின்ற தளைகளால் கட்டுண்ட பெத்த நிலையும், அல்லது தளைகளில் இருந்து விடுபட்ட முத்தி நிலையும் ஈசன் அருளால் அமைவன. சிவனின் அருள் பெற்ற சீவன் உயரிய சுத்த நிலையை அடையும். இங்கனம் சிவனை அடைந்துவிட்ட சீவன் சிவனின் அறிவாகத் திகழும்.


#2257. கர்மப் பயன்கள்


ஐம்மலத் தாரும் மதித்த சகலத்தர்,
ஐம்மலத் தாரும் அருவினைப் பாசத்தார்,
ஐம்மலத் தார்சுவர்க்கம் நெறி யாள்பவர்
ஐம்மலத் தார்அர னார்க்கு அறிவோரே.


ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி என்னும் ஐந்து மலங்கள் கொண்ட சீவர்கள் தம்மைத் தாமே மதிக்கின்ற சகலத்தார் ஆவர். தாங்கள் செய்த கொடிய வினைப்பயன்களைத் துய்ப்பதற்காக ஐம்மலத்தார் பாசத் தளைப் படுகின்றனர். அவர்கள் வீடு பேற்றை விரும்புவதில்லை. சுவர்க்க போகத்தையே விரும்புகின்றனர். இவர்கள் சிவனை அறியாது போனாலும், சிவன் இவர்களை நன்கு அறிந்து கொண்டுள்ளான்.


#2258. நனவு நிலை அமையும்


கருவில் அதீதம் கலப்பிக்கும் மாயை
அரிய துரிய மதில் உண்ணும் ஆசையும்
உரிய சுழுமுனை; முதல் எட்டும் சூக்கத்து
அரிய கனாத் தூலம் அந்நனவு ஆமே.


ஆன்மாவை பிறவிக்குச் செலுத்தச் சிவசக்தி அதன் கேவல அதீத நிலையில் மாயையைக் கலக்கச் செய்யும். துரிய நிலையில் அந்த ஆன்மா தான் விரும்பியவற்றைச் சுவைக்க எண்ணம் கொள்ளும். அந்த ஆன்மாவின் விருப்புக்கு ஏற்ப அதன் பிரமரந்திரம் அமையும். அதைச் சூழ்ந்துள்ள, கவிழ்ந்த சகசிரதளத்தில் தொழிற்படும் எட்டுச் சக்திகள் அமையும். ஆன்மாவின் குணம் எனப்படும் மனோமயகோசம் இவற்றுடன் இணைக்கப்பட்டதும் ஆன்மாவின் நனவு நிலை ஏற்படும்.


#2259. மலக் கலப்பு ஏற்படும் முறை


ஆணவம் ஆகும் அதீதமேல்; மாயையும்
பூணும் துரியம்; சுழுத்தி பொய்க் காமியம்;
பேணும் கனவு மாயேயம் திரோதாயி
காணும் நனவின் மலைக்கு கலப்பாகுமே.


ஆணவம் அகலாது நிற்கும் கேவல துரியாதீத நிலையில்.

துரிய நிலையில் மாயை வந்து பொருந்தும்.

பொய்யான
ன்மங்கள் கேவலச் சுழுத்தி நிலையில் ஆன்மாவைப் பிணிக்கும்.

மாயேயம் வந்து பொருந்தும் கேவலக் கனவு நிலையில்.

நனவு நிலையில் திரோதாயியும் மற்ற மலங்களும் இவ்வண்ணம் ஆன்மாவைப் பற்றிக் கொள்ளும்.


#2260. பிறவி எடுக்கும் சுத்தன்


அரன் முதலாக அறிவோன் அதீதத்தன்
அரன் முதலா மாயைத்தங்கி சுழுமுனை
கருமம் உணாந்து, மாமாயைக் கைக்கொண்டோர்
அருளும் மறைவார் சகலத்து உற்றாரே.


அதீத நிலையில் இருக்கும்போது ஆன்மா பரசிவத்தை அறியும். துரிய நிலையில் உள்ள ஆன்மா சிவத்தை முதலாகக் கொண்ட சுத்த மாயையில் நிற்கும். சுழுத்தி நிலையில் மலங்கள் வந்து ஆன்மாவிடம் பொருந்தும். கனவு நிலையில் ஆன்மாவை மாமாயை வந்து பற்றும். விழிப்பு நிலையில் திரோதாயி என்னும் மறைக்கும் சக்தி ஆன்மாவை வந்து பற்றும். சகல நிலையில் உள்ள ஆன்மா இவ்வாறு விளங்கும்.





 
#2261 to #2264

#2261. சகல அவத்தையில் சீவன்

உரு உற்றுப் போகமே, போக்கியத்து உற்று,
மருவு உற்றுப் பூதம், மன அதீதம் மன்னி,
வரும் அச்செயல் பற்றிச் சத்த ஆதி வைகிக்
கரு உற்றிடும் சீவன் காணும் சகலத்தே.


சகல அவத்தையில் பிறக்கும் சீவன் செய்பவை இவை:

மாயையின் காரியமாக ஓர் உடலைப் பெறும். எடுத்த உடலுக்கு ஏற்ப இன்பங்களை அனுபவிக்கும். பஞ்ச பூதங்களை சார்ந்து நிற்கும். மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்று நான்கு அந்தக் காரணங்களுடன் நன்கு பொருந்தும். சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் ஐந்து தன்மாத்திரைகளில் தங்கும். பிறவி எடுப்பதற்கு ஒரு கருப்பையை அடையும்.


#2262. பிறவாமை சுத்தமே


இருவினை ஓத்திட, இன்னருட் சக்தி
மருவிட ஞானத்தில் ஆதனம் மன்னிக்
குருவினைக் கொண்டு அருட்சக்தி முன் கூட்டிப்
பெருமலம் நீங்கிப் பிறவாமை சுத்தமே.


இருவினைகள் ஆகிய ஞானமும் கிரியையும் ஒத்து விளங்கும்போது, இன்பம் விளைவிக்கும் சிற்சக்தியில் ஆன்மா பொருந்தும். ஞான வடிவாகிய தூய சுத்த அவத்தையில் ஆன்மா பொருந்தும் போது ஆன்மாவுக்குக் குருவருள் கிடைத்தால், திருவருட் சக்தியினால் ஆன்மாவின் மலங்கள் நீங்கிவிடும். ஆன்மா மீண்டும் பிறவி எடுக்காமல் இருக்கும் நிலையை அடைவதே அதன் துரிய நிலை ஆகும்.


#2263. பரமசிவம் ஆதேயம் ஆகும்


ஆறாறும் ஆறுஅதின் ஐயைந்து அவத்தையோடு
ஈறா அதீதத் துரியது இவன் எய்தப்
பேறான ஐவரும் போம் பிரகாசத்து
நீறு ஆர் பரசிவம் ஆதேயம் ஆகுமே.


முப்பத்தாறு தத்துவங்களின் வழியாக, இருபத்து ஐந்து அவத்தை நிலைகளையும் ஆன்மா அடையும். நின்மல துரியாதீதத்தை சீவன் அடையும் போது சுத்தவித்தை, மகேசுரம், சதாசிவம், விந்து, நாதம் என்னும் சுத்த தத்துவத்துக்கு உரிய ஐந்தும் நீங்கிவிடும். அப்போது ஒளியினை உடைய சீவன் பரசிவம்
ஆகிவிடும். நீறு அணிந்த பரசிவம் ஆதேயம் ஆகிவிடும்.


#2264. பின்னையும் வந்து பிறந்திடும்


தன்னை அறியாது உடலைமுன் தான் என்றான்
தன்னைமுன் கண்டான், துரியம் தனைக்கண்டான்
உன்னும் துரியமும் ஈசனோடு ஒன்றாக்கால்
பின்னையும் வந்து பிறந்திடும் தானே.


உடலிலிருந்து வேறுபட்டது அதில் உ
றையும் ஆன்மா. ஒருவன் ‘தான் ஓர் ஆன்மா’ என்பதை அறியாமல் ‘தான் ஓர் உடல்’ என்று எண்ணி மயங்கி இருந்தான். அவன் உணர்வு நிராதாரத்தில் சென்றபோது அவன் தன்னை ஓர் ஒளி வடிவினனாகக் கண்டு கொண்டான். துரியத்தில் உடலைத் தங்குவதும் ஓர் ஒளி என்று கண்டு கொண்டான். சீவனின் ஒளி உடல் சிவனின் ஒளி உடலுடன் ஒன்றாகாமல் போய் விட்டால் அந்த ஆன்மா மீண்டும் மீண்டும் உலகில் வந்து பிறந்து, தன் வினைகளுக்கு ஏற்ற உடலைப் பெறுவான்.




 


#2265 to #2268

#2265. வாக்கும் மனமும் மருவல் செய்யாவே

சாக்கிரம் தன்னில் அதீதம் தலைப்படில்
ஆக்கிய வந்த வயிந்தவ மால் நந்த,
நோக்கும் பிறப்புஅறும் நோன் முத்தி சித்தியாம்
வாக்கும் மனமும் மருவல் செய்யாவே.


நின்மல சாக்கிராதீதம் கைக் கூடினால் அதனால் ஆன்மாவுக்குப் பல நன்மைகள் விளையும்.
அந்த அதீத நிலையைத் தோற்றுவித்த சுத்த தத்துவம் ஆன்மாவுக்கு மிகுந்த ஆனந்தத்தைத் தரும்.
ஆன்மாவை எதிர்நோக்கிக் காத்திருந்த அதன் பிறவிப்பிணி நீங்கி விடும். பெருமை உடைய வீடுபேறு கிடைக்கும். அந்த நிலையில் வாக்கும், மனமும் செயல் புரியா. வாக்கும் மனமும் கடந்த மோன நிலையே ஆன்மாவின் முத்தி நிலை எனப்படும்.


#2266. அப்பும் அனலும் கலப்பது இவ்வாறே


அப்பும் அனலும் அகலத்துளே வரும்,
அப்பும் அனலும் அகலத்துளே வாரா,
அப்பும் அனாலும் அகலத்துள் ஏது எனில்
அப்பும் அனாலும் கலந்தது அவ்வாறே.


அகண்ட வானத்தில் நீரின் குளிர்ச்சியும், நெருப்பின் ஒளியும் கலந்து விளங்கும். ஆனால் அங்கே நீரின் நெகிழ்ச்சியோ நெருப்பின் வெப்பமோ இராது. விரிந்த வானத்தில் நீரும், நெருப்பும் கலந்து எங்கனம் என்று கேட்டால் விரிந்த வானத்தில் நீரும், நெருப்பும் கலந்து விளங்குவது இங்ஙனமே.

#2267. மாயை உறும் ஆன்மாவிடம்

அறுநான்கு அசுத்தம்; அதி சுத்தாசுத்தம்
உறும்ஏழு மாயை, உடன் ஐந்தே சுத்தம்
பெறுமாறு இவை மூன்றும், கண்டத்தால் பதித்து
உறும்மாயை, மாமாயை ஆன்மாவி னோடே.


முப்பத்தாறு தத்துவங்களில் ஆன்ம தத்துவங்கள் இருபத்து நான்கும் அசுத்தமானவை. வித்தியா தத்துவங்கள் எழும், சிவ தத்துவங்கள் ஐந்தும் சுத்தமானவை. மாயை ஆன்மாவை இம் மூன்றுவகைத் தத்துவங்களையும் அடைவிப்பதற்காகத் தானும் மூன்று பிரிவுகளாகப் பிரியும். அவை பிரகிருதி மாயை, அசுத்தமாயை, சுத்த மாயை எனப்படும்.


#2268. சுத்த நிலையை அடையும்


மாயை கைத்தாயாக, மாமாயை ஈன்றிட,
ஆய பரசிவன் தந்தையாய் நிர்க்கவே
எயும் உயிர்க் கேவல சகலத்து எய்தி
ஆய்தரு சுத்தமும் தான் வந்து அடையுமே.


அசுத்த மாயை ஆன்மாவின் செவிலித் தாயை ஒத்தது. சுத்த மாயை ஆன்மாவின் ஈன்ற தாயை ஒத்தது. ஆன்மாவின் தந்தையாக நிற்பவன் சிவன். ஆன்மா கேவல, சகல நிலைகளை எய்தி, ஆராய்ந்து, அறிந்து தெளிவடைந்த பின்பு சுத்த மாயையைப் பொருந்தி சுத்த அவத்தையை அடையும்.







 
#2279. அமலன் என்று அறிதியே

உன்னை அறியாது, உடலை முன் நான் என்றாய்,
உன்னை அறிந்து துரியத்து உறநின்றாய்
தன்னை அறிந்ததும் பிறவித் தணவாதால்
அன்ன வியாத்தான் அமலன் என்று அறிதியே.


முன்பு உன் ஆன்ம ஒளியை நீ அறிந்து கொள்ளாமல் ‘என் உடல் தான் நான்’ என்று கூறினாய். பின்னர் உன் ஆன்ம ஒளியை அறிந்து கொண்டு துரியத்தில் நின்றாய். உன் ஆன்மவொளி சிவவொளியில் லயம் பெற வேண்டும். அதுவரை பிறவித் துயர் அகலாது. ஆன்ம ஒளி சிவ ஒளியில் அடங்குவதே மலங்கள் நீங்கிய தூய நிலையை அடைவது என்று அறிந்து கொள்வாய்!


#2280. இருவரும் இன்றி ஒன்றாகி நின்றார்

கருவரம் பாகிய காயம் துரியம்
இருவரும் கண்டீர் பிறப்பிறப் புற்றார்
குருவரம் பெற்றவர் கூடிய பின்னை
யிருவரும் இன்றியொன் றாகிநின் றாரே.

துரியத்தில் உள்ள நுண்ணிய தேகம் கருவறையின் வரம்புக்கு உற்பட்டது. பிறவியின் காரணம் அகற்றப் படும் வரை பருவுடலும் நுண்ணுடலும் பொருந்திச் சீவன் பிரவிப் பிணியில் துயருறும். குருவருள் பெற்றுப் பருவுடல், நுண்ணுடலைச் சீவன் துறந்து விட்டால் அப்போது சீவன் சிவனுடன் ஒன்றாகிவிடும்.

#2281. பரதுரியம் பரம் ஆம்

அணுவின் துரியத்தில் ஆன நனவும்
அணுஅசை வின்கண் ஆன கனவும்
அணு அசைவிற் பராதீதம் சுழுத்தி
பணியின் பரதுரியம் பரம் ஆமே.


துரிய நிலையில் நனவு, கனவு, சுழுத்தி நிலைகளைக் கடந்து செல்லும் ஆன்மா பர துரீய நிலையை அடையும். அந்நிலையில் ஆன்மா உயரிய பரம் என்று ஆகிவிடும்.


#2282. சிவதுரிய
ன் ன உயிர்

பரதுரியத்து நனவும், பரந்து
விரிசனம் உண்ட கனவும் மெய்ச் சாந்தி
உருஉரு கின்ற சுழுத்தியும் ஓவ
தெரியும் சிவதுரி யத்தனும் ஆமே.


பரதுரிய நனவு நிலையை அடுத்து பரதுரிய கனவு நிலை அமையும். இந்நிலையில் பரவி விரிந்த உலகின் தூலநிலை அழிந்து போகும். இதனை அடுத்த பரதுரிய சுழுத்தி நிலை அமையும். இந்நிலையில் ஆன்மாவுக்கு உபசாந்தம் என்று விவரிக்க முடியாத ஒரு மனஅமைதி உண்டாகும். இந்த நிலையையும் கடந்து செல்லும் ஆன்மா சிவதுரியத்தை அடையும்.


#2283. உபசாந்தம் உற்றல் உண்மைத் தவம்

பரமா நனவின் பின், பாற்சகம் உண்ட
திறம்ஆர் கனவும் சிறந்த சுழுத்தி,
உரம் ஆம் உபசாந்தம் உற்றல் துறவே
தரன் ஆம் சிவதுரி யத்தனும் ஆமே


பர அவத்தையில் நின்மல நனவு நிலைக்குப் பின்னர் தூல உலகம் காட்சி அளிக்காது. அந்நிலையில் தூல உலகம் ஒரு கனவு போலாகிக் காட்சி தரும். நின்மலச் சுழுத்தியில் ஆன்மாவின் சுட்டறிவு நீங்கி விடும். உபசாந்தம் என்னும் விவரிக்க முடியாத ஒரு மன அமைதி உண்டாகும். இதுவே உபசாந்தம் பொருந்திய உயரிய துறவு நிலை. இங்கு தங்கி இருப்பவன் உண்மையில் சிவனுடன் கலந்து இருப்பவன்.

 
8. பராவத்தை

பராவத்தை = பரா + அவத்தை.
பரை = சக்தி
அவத்தை = நிலை
பராவத்தை = ஆன்மா சக்தியுடன் உள்ள நிலை

#2269 to #2273


#2269. உடல் வேறு! உயிர் வேறு!

அஞ்சும் கடந்த அனாதி பரம் தெய்வம்
நெஞ்சம் அது ஆய நிமலன் பிறப்பிலி
விஞ்சும் உடல் உயிர் வேறு படுத்திட
வஞ்சம் திருந்தும் வகை அறிந்தேனே.


ஐந்து சிவதத்துவங்களையும் கடந்தவன் சிவன். அவன் அனாதி. அவன் பரம் தெய்வம். அவன் எல்லோர் நெஞ்சிலும் அஉறைகின்றான். அவன் நின்மலன். அவன் பிறப்பிலி. அவன் அகண்ட மெய்ப்பொருள். அவன் சீவனின் உடலில் இருந்து உயிரை வேறுபடுத்திட சீவனுள் மறைந்து உறைகின்றான். அவன் ஆன்மாவின் விருப்பத்தை நிறைவேற்றுவான். சுத்த மாயையை விரும்பும் சீவனை அதில் கொண்டு சேர்ப்பான். சீவன் அசுத்த மாயையை விரும்பினால் அதில் கொண்டு சேர்ப்பான்.

#2270. பராசக்தி அருள்வாள்

சத்தி பராபரம் சாந்தி தனில் ஆன
சத்தி பரானந்தம் தன்னில் சுடர் விந்து
சத்தியமாயை, தனுச் சத்தி ஐந்துடன்
சத்தி பெறும் உயிர் தான் அங்கத் தாறுமே.

பராபரையில் இருக்கையில் சக்தி பராசக்தி. சாந்தியில் இருக்கையில் அவள் சிற்சக்தி. பேரானந்தத்தில் இருக்கையில் அவள் இச்சா சக்தி. ஒளிமயமான விந்துவில் இருக்கையில் அவள் ஞான சக்தி. மாயையில் இருக்கையில் அவள் கிரியா சக்தி. சீவன் இந்தச் சக்திகளை அடையும்போது பராவத்தையை உணர்கின்றது.

#2271. அரன் இனிது ஆமே

ஆறாறுக்கு அப்பால் அறிவார் அறிபவர்;
ஆறாறுக்கு அப்பால் அருளார் பெறுபவர்,
ஆறாறுக்கு அப்பால் அறிவு ஆம் அவர்கட்கே
ஆறாறுக்கு அப்பால் அரன் இனிது ஆமே
.

முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து உண்மையை அறிபவர் மட்டுமே உண்மையில் உண்மையை அறிபவர். அவர் அங்ஙனம் தத்துவங்களைக் கடந்த நிலையில் சக்தியின் பூரண அருளுக்குப் பாத்திரம் ஆவார். தத்துவங்களைக் கடந்த நிலையில் அவருக்கு நிறைந்த அறிவு உண்டாகும். அவர் சிவத்துடன் இனிதாகப் பொருந்தி இருப்பார்.

#2272. நஞ்சுற நாடி நயம் செய்யும்

அஞ்சொடு நான்கும் கடந்து அகமே புக்குப்
பஞ்ச அணி காலத்துப் பள்ளி துயில்கின்ற
விஞ்சையர் வேந்தனும் மெல்லியலாளொடு
நஞ்சுற நாடி நயம் செய்யு மாறே.


ஐந்து ஞானேந்திரியங்களும், நான்கு அந்தக்கரணங்களும் தத்தம் செயல்களைத் துறந்து உள்ளே அடங்கவும், ஐந்து இந்திரியங்களை அணிகலன்கள் போல அணிந்து கொண்ட ஆன்மா உறங்கும். அப்போது தேவர் தேவனும் மெல்லியலாள் சக்தியும் ஆன்மவின் மலங்களை அகற்றி அதற்கு நன்மை செய்வார்கள்.

#2273. திரிய வரும் துரியத்தில் சீவன் சிவம்

உரிய நனாத் துரியத்தில் இவனாம்;
அரிய துரியம் நனவு ஆதி மூன்றில்
பரிய பரதுரியத்தில் பரனாம்;
திரிய வரும் துரியத்தில் சிவமே.

நின்மல சாக்கிர துரிய நிலையில் சீவன் சுத்த நிலையில் இருப்பான். அந்தத் தூய நிலையில் நனவு, கனவு, உறக்கம் என்ற மூன்று நிலைகளையும் கடந்து சென்று விட்டால், நின்மலத் துரியநிலையில் சீவன் பரனாகி விடுவான். சீவன் வேறு சிவன் வேறு என்று அறிய இயலாத உயரிய நிலையை அடைந்த சீவன் சிவன் ஆகி விடுவான்.




 
SORRY I HAD MISSED THE "PAAKKAL" ##2274 TO #2278 DUE ON 26TH BY
OVERSIGHT. HERE THEY ARE POSTED IN THE RIGHT ORDER ONCE AGAIN!

#2274 to #2278

#2274. பரமாகார் பாசம் பற்றியவர்

பரமாம் அதீதமே பற்றறப் பற்றப்
பரமா மதீதம் பயிலப் பயிலப்
பரமா வதீதம் பயிலாத் தபோதனர்
பரமாகார் பாசமும் பற்றொன் றறாதே.


நின்மல சாக்கிராதீதத்தில் ஆன்ம தத்துவங்களை விட்டு விட்ட ஒரு சீவன் பரம் ஆகிவிடும். இந்த நின்மல சாக்கிராதீத நிலையைப் பயிலப் பயிலப் சீவனுடன் பரம் வந்து பொருந்தும். பரம் ஆக இயலாது இந்த நின்மல சாக்கிர அதீத நிலையை அடைய இயலாதவர்களுக்கு. இத்தகையவர் என்றுமே பாசத்தில் இருந்தும் பற்றுக்களில் இருந்தும் விடுதலை பெறார்.


#2275. தூய அறிவு சிவானந்தம்


ஆயும்பொய்ம் மாயை யகம்புற மாய்நிற்கும்
வாயும் மனமும் கடந்த மயக்கறின்
தூய வறிவு சிவானந்தமாகிப்போய்
வேயும் பொருளாய் விளைந்தது தானே.


நாம் ஆராய்ந்து அறிய விரும்பும் மாயை ஒவ்வொரு சீவனின் உள்ளும் புறமும் சூழ்ந்துள்ளது. அது சீவனின் சிந்திக்கும் திறனையை மயக்கிச் சொல் வன்மையை அழிக்கிறது. சீவன் அந்த மாயையைக் கடந்து வந்தால் சீவனின் அறிவு தூய்மை அடைந்து விடும். அதுவே பின்னர் சிவானந்தமாக மாறி, சீவனின் அறிவை மயக்கும் மாயையை மூடிவிடும் ஒரு பொருளாக மாறிவிடும்.


#2276. நரிகளை ஓடத் துரத்திய நாதர்


துரியப் பரியி லிருந்தஅச் சீவனைப்
பெரிய வியாக்கிரத் துள்ளே புகவிட்டு
நரிகளை யோடாத் துரத்திய நாதர்க்கு
உரிய வினைகள் நின்றோலமிட் டன்றே.


துரிய நிலை என்னும் பரியின் மேல் இருந்தது சீவன். அதை அங்கிருந்து பராவத்தை நிலையில் புகச் செய்தான் ஈசன். பராவத்தை நிலையில் இந்திரியங்கள் என்னும் நரிகள் நாதனால் விரட்டப்பட்டு ஓடிச் சென்று விட்டன. சீவனுக்கு உரிய வினைகள் அவனை அணுக முடியாமல் எட்ட நின்று ஓலம் இட்டன.


#2277. இவன் அவன் வடிவு ஆவான்


நின்றஇச் சாக்கிரம் நீள்துரியத்தினின்
மன்றனும் அங்கே மணம் செய்ய நின்றிடும்
மன்றல் மணம் செய்ய, மாயை மறைந்திடும்
அன்றே இவனும் அவன் வடிவு ஆமே.


சீவன் சாக்கிரத்தில் துரியாதீத நிலையை அடையும் போது மன்றில் ஆடும் செஞ்சடைப் பிரானும் அவனுடன் கலந்து நிற்பான். சிவனும், சீவனும் ஒன்றாகப் பொருந்தும் போது இருளாகிய மாயை விலகி விடும். அதனால் சீவனும் சிவனைப் போன்ற அகண்ட வடிவத்தை அடைந்து விடுவான்.



 
#2279 to #2283

#2279. அமலன் என்று அறிதியே

உன்னை அறியாது, உடலை முன் நான் என்றாய்,
உன்னை அறிந்து துரியத்து உறநின்றாய்
தன்னை அறிந்ததும் பிறவித் தணவாதால்
அன்ன வியாத்தான் அமலன் என்று அறிதியே.

முன்பு உன் ஆன்ம ஒளியை நீ அறிந்து கொள்ளாமல் ‘என் உடல் தான் நான்’ என்று கூறினாய். பின்னர் உன் ஆன்ம ஒளியை அறிந்து கொண்டு துரியத்தில் நின்றாய். உன் ஆன்மவொளி சிவவொளியில் லயம் பெற வேண்டும். அதுவரை பிறவித் துயர் அகலாது. ஆன்ம ஒளி சிவ ஒளியில் அடங்குவதே மலங்கள் நீங்கிய தூய நிலையை அடைவது என்று அறிந்து கொள்வாய்!

#2280. இருவரும் இன்றி ஒன்றாகி நின்றார்

கருவரம் பாகிய காயம் துரியம்
இருவரும் கண்டீர் பிறப்பிறப் புற்றார்
குருவரம் பெற்றவர் கூடிய பின்னை
யிருவரும் இன்றியொன் றாகிநின் றாரே.

துரியத்தில் உள்ள நுண்ணிய தேகம் கருவறையின் வரம்புக்கு உற்பட்டது. பிறவியின் காரணம் அகற்றப் படும் வரை பருவுடலும் நுண்ணுடலும் பொருந்திச் சீவன் பிரவிப் பிணியில் துயருறும். குருவருள் பெற்றுப் பருவுடல், நுண்ணுடலைச் சீவன் துறந்து விட்டால் அப்போது சீவன் சிவனுடன் ஒன்றாகிவிடும்.

#2281. பரதுரியம் பரம் ஆம்

அணுவின் துரியத்தில் ஆன நனவும்
அணுஅசை வின்கண் ஆன கனவும்
அணு அசைவிற் பராதீதம் சுழுத்தி
பணியின் பரதுரியம் பரம் ஆமே.

துரிய நிலையில் நனவு, கனவு, சுழுத்தி நிலைகளைக் கடந்து செல்லும் ஆன்மா பர துரீய நிலையை அடையும். அந்நிலையில் ஆன்மா உயரிய பரம் என்று ஆகிவிடும்.

#2282. சிவதுரியான உயிர்

பரதுரியத்து நனவும், பரந்து
விரிசனம் உண்ட கனவும் மெய்ச் சாந்தி
உருஉரு கின்ற சுழுத்தியும் ஓவ
தெரியும் சிவதுரி யத்தனும் ஆமே.

பரதுரிய நனவு நிலையை அடுத்து பரதுரிய கனவு நிலை அமையும். இந்நிலையில் பரவி விரிந்த உலகின் தூலநிலை அழிந்து போகும். இதனை அடுத்த பரதுரிய சுழுத்தி நிலை அமையும். இந்நிலையில் ஆன்மாவுக்கு உபசாந்தம் என்று விவரிக்க முடியாத ஒரு மனஅமைதி உண்டாகும். இந்த நிலையையும் கடந்து செல்லும் ஆன்மா சிவதுரியத்தை அடையும்.

#2283. உபசாந்தம் உற்றல் உண்மைத் தவம்

பரமா நனவின் பின், பாற்சகம் உண்ட
திறம்ஆர் கனவும் சிறந்த சுழுத்தி,
உரம் ஆம் உபசாந்தம் உற்றல் துறவே
தரன் ஆம் சிவதுரி யத்தனும் ஆமே.


பர அவத்தையில் நின்மல நனவு நிலைக்குப் பின்னர் தூல உலகம் காட்சி அளிக்காது. அந்நிலையில் தூல உலகம் ஒரு கனவு போலாகிக் காட்சி தரும். நின்மலச் சுழுத்தியில் ஆன்மாவின் சுட்டறிவு நீங்கி விடும். உபசாந்தம் என்னும் விவரிக்க முடியாத ஒரு மன அமைதி உண்டாகும். இதுவே உபசாந்தம் பொருந்திய உயரிய துறவு நிலை. இங்கு தங்கி இருப்பவன் உண்மையில் சிவனுடன் கலந்து இருப்பவன்.



 
#2284 to #2287

#2284. நால் ஏழ் விடுத்தது நின்றான்

சீவன் துரியம் முதலாகச் சீரான
ஆவ சிவன் துரியாந்தம் அவத்தை பத்து
ஓவும் பாரா நந்தி, உண்மைக்குள் வைகியே
மேவிய நால்ஏழ் விடுத்துநின் றானே.

சீவனுக்குத் துரியம் முதல் சிவதுரியம் வரையில் உள்ள அவத்தை நிலைகள் பத்து ஆகும். இந்தப் பத்து நிலைகளையும் கடந்த சீவன், நிறைவான சிவத்தில் அடங்குவான். அந்தக் கரணங்கள் நான்கினையும், வித்தியா தத்துவங்கள் ஏழினையும் அவன் விடுத்து நிற்பான்.

#2285. அவத்தைகளுக்கு அப்பாற்பட்டவன்


பரஞ் சிவன் மேலாம் பரமம் பதத்தில்
பரம்பரன் மேலாம் பர நனவாக
விரிந்த கனா விடர் வீட்டுஞ் சுழுமுனை
உரந்தகு மாநந்தி யாமுண்மை தானே.


பரசிவனைக் காட்டிலும் உயர்ந்தது பரமம் என்னும் பிரம்மம். பரமத்திலும் உயர்ந்தது பரம்பரமம் என்னும் பரப்பிரம்மம்.
நனவுப் பரசிவம், கனவுப் பரசிவம், சுழுத்திப் பரசிவம் என்னும் நிலைகளின் வழியாக பரநந்தி நிலையை அடையும் சீவன்.


#2286. பற்றுக்கோடுகள் பதின்மர்


சார்வாம் பரசிவஞ் சத்தி பரநாதம்
மேலாய விந்து சதாசிவ மிக்கோங்கி
பாலாய்ப் பிரம னரியம ராபதி
தேவாம் உருத்திரன் ஈசனாங் காணிலே.


சீவர்களுக்குப் பற்றுக் கோடாக இருப்பார்கள் பதின்மர் ஆவர். அருவ நிலையில் உள்ளவர்கள் பரம், சிவம், சக்தி, பரானந்தம், பரவிந்து, சதாசிவன் என்னும் அறுவர். உருவ நிலையில் உள்ள நால்வர் நான்முகன், திருமால், உருத்திரன், மகேசன் ஆவார்.


#2287. உடலோடு உயிர் கலப்பு


கலப்புஅறி யார்கடல் சூழ்உல கேழும்
உலப்புஅறி யார்உட லோடுஉயிர் தன்னை
அலப்புஅறிந்து இங்குஅர சாளகி லாதார்
குறிப்பது கோலம் அடலது வாமே.


இந்தப் பத்து தெய்வங்கள் உயிருடன் கலந்து இயங்குகின்றன என்ற உண்மையை உலகத்தார் அறிவதில்லை. கடல் சூழ் உலகம் அழிந்துபடும் என்னும் உண்மையையும் இவர்கள் அறிவதில்லை. உடலுடன் உயிர் பொருந்தும் தன்மையை அறியாதவர்கள் இந்தத் தெய்வங்களை தியானிப்பது என்ன பயன் அளிக்கும்?




 
#2288 to #2291

#2288. என்னை அறிந்து இன்புற்றேன்

பின்னை அறியும் பெருந்தவத்து உண்மைசெய்
தன்னை அறியில், தயாபரன் எம்இறை
முன்னை அறிவு முடிகின்ற காலமும்
என்னை அறியலுற்று இன்புற்ற வாறே.


மெய்த் தவம் செய்மின். உம்மை உண்மையாக உணர்மின். நேசம் மிகுந்த ஈசன் உமக்கு அருள் புரிவான். உம்மை உண்மையாக நீர் உணர்ந்தவுடன் முன்பு இருந்த அறிவும் ஆணவமும் நீங்கி விடும். அளவில்லாத ஆனந்தம் விளையும்.


#2289. தன்னை மறைத்தது தன் கரணங்கள்


பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம்
பொன்னின் மறைந்தது பொன்னணி பூடணம்
தன்னை மறைத்தது தன்கர ணங்களாம்
தன்னின் மறைந்தது தன்கர ணங்களே.


பொன்னால் உருவான அணிகலனைக் காணும் போது பொன் காட்சி தராது. பொன்னின் தன்மை காட்சி தரும் போது அணிகலன் காட்சி தராது. அது போன்றே அந்தக்கரணங்கள் வெளி உலகை நாடும் போது ஆன்மா புலப்படாது. ஆன்மா புலப்படும் போது அந்தக்கரணங்கள் வெளியுலகை விடுத்து ஆன்மாவில் ஒடுங்கி மறைந்து விடும்.


#2290. பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்


மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே.


மரத்தல் செய்யப் பட்ட யானையைப் பார்க்கும் போது மரத்தின் தன்மை புலப்பட்டால் யானையின் உருவம் தெரியாது. யானையின் உருவம் தெரிந்தால் மரத்தின் தன்மை புலப்படாது. அது போன்றே பார் முதலான பூதங்களை நோக்கும் போது பரம்பொருள் நமக்குப் புலப்படுவதில்லை. பரம்பொருள் புலப்படும்போது பார் முதலான பூதங்கள் நமக்குப் புலப்படா.


#2291. சீவன் சிவத்தில் அடங்குவதே முத்தி


ஆறாறு ஆகன்று, நமவிட்டு அறிவாகி
வேறான தானே யகாரமாய் மிக்கோங்கி
ஈறார் பரையின் இருளற்ற தற்பரன்
பேறார் சிவாய அடங்கும் பின் முத்தியே.


முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்த பின்பு ஆன்மா திரு ஐந்தெழுத்தில் உள்ள ‘நம’ வை விட்டு விடும். பேரறிவு பெறும். தத்துவங்களில் இருந்து மாறுபட்டு விளங்கும். ஆன்மா ‘ய’காரமாகி ‘வ’காரம் ஆகிய சக்தியுடன் முதலில் இணையும். பின்பு ‘சி’காரமாகிய சிவனுடன் இணையும். சீவன் இங்கனம் ‘சிவாய’ ஆகும் நிலையே சீவனின் முத்தி நிலை.




 
#2292 to #2295

#2292. பரமம் துரியம் தெரியும்

துரியத்தில் ஓரைந்தும் சொல்அக ராதி
விரியப் பரையில் மிகுநாதம் அந்தம்
புரியப் பரையில் பராவத்தா போதம்
திரியப் பரமம் துரியம் தெரியவே.


பராவத்தையில் சாக்கிரம், சுழுத்தி, கனவு, துரியம், துரியாதீதம் என்ற ஐந்து நிலைகள் இவ்வாறு அமையும். பரையில் நாதம் தோன்றும். நாதம் கனவில் ஒடுங்குப் பரையில் நின்மல சுழுத்தி என்னும் உறக்கம் அமையும். ஆன்மா நின்மல சுழுத்தியில் அழுந்தாது விளங்கும் போது உயரிய சிவதுரியம் அமையும்.


#2293. ஐம்மலங்கள் மாறுமே


ஐந்தும் சகலத்து, அருளால் புரிவற்றுப்
பந்திடும் சுத்த அவத்தைப் பதைப்பினில்,
நந்தி பராவத்தை நாடச் சுடர்முனம்
அந்தி இருள்போலும் ஐம்மலம் மாறுமே.


சகல நிலையில் உள்ள சீவனுக்கு பராவத்தைகள் ஐந்தும் அருள் புரிந்து அதன் பந்தங்களை நீக்கி விடும். ஆன்மாவைச் சுத்த அவத்தையில் பொருந்தச் செய்யும். இந்த நிலையில் ஆன்மாவிடம் சிவத்தை அடைவதற்கான விருப்பம் மேலிடும். மாலை நேரத்தில் நிலவொளியில் இருள் அகல்வது போன்றே, சீவனின் சிரத்தின் முன்பு விளங்கும் வெண்மையான ஒளியில் அதன் அனைத்து மலங்களும் அகன்று விடும்.


#2294. பராவத்தையுள் உறல் சுத்தம்


ஐஐந்தும், மட்டுப் பகுதியும், மாயையும்
பொய்கண்ட மாமாயை தானும் புருடன்கண்டு
எய்யும் படியாய், எவற்றுமாய் அன்றாகி
உய்யும் பராவத்தை யுள்உறல் சுத்தமே.


ஆன்ம தத்துவங்கள் இருபத்து ஐந்தும் அசுத்த மாயை என்னும் தூவா மாயையைச் சார்ந்தவை. அவற்றைக் கடந்து முன்னேறும் சீவன் மாமாயை நிலையை அடையும். அந்த நிலையையும் கடந்து செல்லும் சீவன் பராவத்தை என்ற சுத்த நிலையை அடையும். இப்போது சீவன் எல்லாப் பொருட்களையும் அறிந்து கொண்டு அவைகளாகவும் இருக்கும். அதே நேரத்தில் அவற்றிலிருந்து விலகியும் இருக்கும். இதுவே ஆன்மாவின் உயரிய சுத்த நிலையாகும்.


#2295. நன்றான ஞானத்து நாதப்பிரான்


நின்றான் அருளும், பரமும்முன் நேயமும்
ஒன்றாய் மருவும் உருவும், உபாதியும்
சென்றான்; எனைவிடுத்து ஆங்கில் செல்லாமையும்
நன்றான ஞானத்து நாதப் பிரானே.


சிவன் அருளாகி நின்றான்; சிவன் பரமாகி நின்றான்; சிவன் அன்பாகி நின்றான்; சிவன் என்னுடன் ஒன்றாக மருவி நின்றான்; சிவன் ஆன்மாவுடன் பிரிவின்றிக் கலந்து இருந்த போதிலும் ஆன்மாவின் உபாதைகளால் வருந்தாமல் இருந்தான். என்னை விட்டு என்றும் அகலாதவன் என் நன்றாகிய ஞானத்து நாதப்பிரான் ஆன சிவபிரான்.


 
9. முக்குண நிர்குணம்

முக்குணங்கள்:

இராசதம் = மன எழுச்சி

தாமசம் = மயக்கம்
சாத்துவிகம் = அமைதி

#2296. அவத்தைகளுக்கு உரிய குணங்கள்

சாத்திகம் எய்தும் நனவெனச் சாற்றுங்கால்
வாய்ந்த இராசதம் மன்னும் கனவென்ப
ஓய்த்திடும் தாமதம் உற்ற சுழுத்தியாம்
மாய்த்திடும் நிற்குணம் மாசில் துரியமே.


நனவு நிலையில் உயிரிடம் பொருந்துவது சாத்துவிக குணம்.
கனவு நிலையில் உயிரிடம் பொருந்துவது இராசத குணம்.
சுழுத்தி நிலையில் உயிரிடம் பொருந்துவது தாமச குணம்.
ஐம்பொறிகள், அந்தக்கரணங்கள் செயற்படாமல் இருக்கும் நிலையே துரியம் என்னும் பேருறக்கம்.



 
10. அண்டாதி பேதம்

அண்டத்தின் வகை

சீவனின் உடல் தொம்பைக் கூடு போன்ற ஒளி மண்டலங்களால் சூழப்பட்டுள்ளது.

முட்டைக்குள் முழு வளர்ச்சி அடைந்தபின் குஞ்சு முட்டையை உடைத்துக் கொண்டு வெளியேறும்.
இது போன்றே அண்டகோசம் என்ற பிரணவத்தில் வளர்ந்து பக்குவம் அடைந்த ஆன்மா பிரணவத்தைக் கடந்து செல்கிறது.

#2297 & #2298


#2297. தேவர் பிரான்

பெறுபகி ரண்டம் பேதித்த அண்டம்
எறிகடல் ஏழின் மணல்அள வாகப்
பொறியொளி பொன்னணி யென்ன விளங்கிச்
செறியும் அண்டாசனத் தேவர் பிரானே.

அண்டத்தைத் தன் இருக்கையாக்கி அதன் மேல் அமர்பவன் தேவர் பிரான் ஆகிய சிவன். பேரண்டத்தில் உள்ளன பல அண்ட கோசங்கள். அவை எண்ணிக்கையில் ஏழு கடற்கரையில் உள்ள மணல் துகள்கள் போன்றவை. பொன்னொளி வீசும் இவற்றின் மீது தன் பொன்வண்ண மேனி ஒளிரச் சிவன் அமர்வான்.

#2298. தான் அந்தம் இல்லாத தத்துவம்

ஆனந்த தத்துவம் அண்டா சனத்தின்மேல்
மேனிஐந்தாக வியாத்தம்முப் பத்தாறாய்த்
தான்அந்த மில்லாத தத்துவம் ஆனவை
ஈனமி லா அண்டத்து எண்மடங்கு ஆமே.

அண்டாசனத்தின் மீது அமர்ந்து கொண்டு ஆனந்தமாகத் தத்துவங்களைக் கடந்து சிவன் விளங்குகின்றான். அவன் திரு மேனிகள் ஐந்து. அவை சத்தியோசாதம், வாமதேவம், தத்புருடம், ஈசானம், அகோரம். அவன் கடந்து நிற்கும் தத்துவங்களின் எண்ணிக்கை அண்டங்களின் எண்ணிக்கையைப் போல எண் மடங்கு ஆகும்.





 
11. பதினோராம் தானம்

11. பதினோராம் தானமும் ஓர் அவத்தையே!

துவாதச கலை 'அராகம்' முதலாக 'உன்மனி' ஈறாக
ப் பன்னிரண்டு ஆகும்.

ஒவ்வொரு கலைக்கும் ஓர் இடம் உண்டு.


பதினோராவது கலையாகிய 'சமனை'யின் இடம் இருப்பது தலைக்கு மேலே.


'அவத்தை' என்பது ஆன்மா அந்த இடத்தில் பொருந்தி இருப்பது.


#2299 to #2301


#2299. உலக நோக்கு இருந்தால் நாதம் விளங்காது

அஞ்சில் அமுதும், ஓர் ஏழின்கண் ஆனந்தம்
முஞ்சில்ஓங் காரம், ஓர் ஒன்பான் பதினொன்றில்
வஞ்சக மேநின்று வைத்திடில், காயமாம்
கிஞ்சுகக் செவ்வாய்க் கிளிமொழி கேளே.

ஐந்தாவது கலையாகிய 'அர்த்த சந்திர'னின் இடம் புருவ மத்தி.
இது விழிப்பு அடைந்து விட்டால் அமுத மயமான ஒளி பெருகும்.
ஏழாவது கலையாகிய 'நிரோதினி' ஆன்மாவுக்கு ஆனந்தத்தை அளிக்கும்.
விந்து ஜெயம் பெறுவதே பிரணவம் ஆகும்.
ஒன்பதாவது கலைக்கு மேல் பிரணவம் விளங்கும்.
பதினோராவது நிலையாகிய 'சிவதுரியம்' ஓர் அவத்தையே.
இந்த நிலைகளே ஆன்மாவின் பராவத்தை.

2300. புரியட்டகம் ஒளிமயமாகும்

புருட னுடனே பொருந்திய சித்தம்
அருவமொ டாறும் அதீதத் துரியம்
விரியும் சுழுத்தியின் மிக்குள்ள எட்டும்
அரிய பதினொன்று மாம்அவ் அவத்தையே.


ஆன்மாவின் துரியாதீத நிலையில் புருடன் மற்றும் ஐந்து சிவத்துவங்கள் என்னும் ஆறும் விளங்கும்.
உறக்க நிலையில் புரியட்டகம் என்னும் நுண்ணுடல் விளங்கும்.
நனவு, கனவு நிலைகளில் வித்தியா தத்துவம் விளங்கும்.
இந்நிலைகளில் உட்கரணங்கள் நான்கும் பொருந்தி அமையும்.
புரியட்டகம் :
மனம், புத்தி, அஹங்காரம், சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், கந்தம் பொருந்திய நுண்ணுடல்

#2301. சிவத்தின் வழியே நிற்பது நன்மை

காட்டும் பதினொன்றும் கைகலந் தால்உடல்
நாட்டி அழுத்திடின் நந்திஅல்லால் இல்லை
ஆட்டம்செய் யாத அதுவிதி யேநினை
ஈட்டு மதுதிடம் எண்ணலும் ஆமே.


வித்தியாததுவங்கள் எழும், அந்தக் கரணங்கள் நான்கும் ஆகிய பதினோரு தத்துவங்களும் ஒன்று கூடினால் உடல் அமையும்.
இவை செயல் படாது நின்றால் அப்போது சிவன் அமைவான்.
அந்தக் கரணங்களின் வழி சென்று அலைந்து திரியாமல் சிவத்தின் வழியே நிற்பதுவே நன்மை பயக்கும் என்று நீ அறிந்து கொள்வாய்!





 
12. கலவு செலவு

கலவு = ஒன்று சேர்த்தல்

செலவு = பிரிதல்


கருவிகளுடன் கலத்தலும் பிரிதலும் இதில் கூறப்படும்.


#2302. ஆன்மாவின் தூயநிலை


கேவலம் தன்னின் கலவச் சகலத்தின்
மேவும் செலவு விடவரு நீக்கத்துப்
பாவும் தனைக்கண்டால் மூன்றும் படர்வற்ற
தீதறு சாக்கிரா தீதத்தில் சுத்தமே.


கேவல அவத்தையில் உள்ள ஆன்மா கருவிகள் கரணங்களுடன் கலந்து சகல அவத்தையை அடையும். ஆன்மா கருவிகள், கரணங்கள் இவற்றை விட்டு விட்டதும் சகல நிலையில் இருந்து பிரிந்து விடும். கேவலம், சகலம் என்ற இந்த இரண்டு நிலைகளையும் துறந்து விட்ட ஆன்மா தன்னைத் தானே அறிந்து கொள்ளும். இது மூன்றாவது நிலை. ஆன்மா இம்மூன்று நிலைகளையும் கடந்து சென்று சாக்கிராதீத நிலயை அடைந்து அங்கு பொருந்தி இருப்பதே ஆன்மாவின் தூய நிலை எனப்படும்.


#2303. சினத்தைத் துறந்தால் விளையும் பயன்


வெல்லும் அளவில் விடுமின் வெகுளியைச்
செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை
அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால்
கல்லும் பிளந்து கடுவெளி யாமே.


சினத்தை உங்களால் முடிந்த அளவுகுத் துறந்து விடுங்கள்.
உள்ளத்தை உங்களால் முடிந்த அளவுக்கு சிவன் மேல் செலுத்துங்கள்.
இரவும் பகலும் சிவன் நினைவுடன் துரியத்தில் சமாதியில் பொருந்தி இருங்கள்.
அப்போது கற்பாறை போன்ற கனத்த பாச இருள் அகன்று விடும்.
நீங்கள் பரம ஆகாய மண்டலத்தின் ஒளியை உணர்வீர்கள்.





 
13. நின்மலாவத்தை

நின்மலாவத்தை
நின்மலம் + அவத்தை = நின்மலாவத்தை
மலம் இன்றி ஆன்மா சிவத்தில் ஒடுங்கி இருக்கும் நிலை.


#2304 to #2308

2304. பிரணவ உடல் மரணமில்லா வாழ்வு

ஊமைக் கிணற்றகத் துள்ளே உறைவதோர்
ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்துள
வாய்மையின் உள்ளே வழுவாது ஒடுங்குமேல்
ஆமையின் மேலும்ஓர் ஆயிரத்து ஆண்டே.


மௌனம் என்னும் கிணற்றுக்குள் ஓர் ஆமையைப் போல உறைவார் பிரணவ வழிபாட்டாளர். அவரிடம் நின்மல சாக்கிரம் முதலிய ஐந்து நிலைகள் உண்டு. அவர் ஆன்ம ஒளியில் நழுவாத வண்ணம் தன் அறிவை ஒடுக்கினால் அவர் பிரணவ உடல் பெற்று மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ்வார்.


#2305. எம பயம் இல்லை!


காலங்கி நீர்,பூக் கலந்தஆ காயம்
மாலங்கி, ஈசன், பிரமன், சதாசிவன்
மேலஞ்சும் ஓடி, விரவவல் லார்கட்குக்
காலனும் இல்லை, கருத்தில்லை தானே.


காற்று, தீ, நீர், நிலம், வானம் என்னும் ஐந்தினையும் இயக்குபவர்கள் உருத்திரன், திருமால், நான்முகன் , மகேசன், உருவம் உடைய சதாசிவம் ஆவர். இவர்களுக்கு மேலே அமைந்துள்ள அருவச் சதாசிவம், விந்து, நாதம், சக்தி, சிவன் என்னும் ஐவரை பொருந்தும் ஆற்றல் கொண்டவருக்கு
க் காலனைப் பற்றிய அச்சம் தேவை இல்லை. அவருக்கு இந்த உலகத்தைப் பற்றிய கருத்தும் இராது.

#2306. சிவத்தை சேரின் சிவகுமாரன்!

ஆன்மாவே மைந்தன் ஆயினன் என்பது
தான்மா மறையறை தன்மை அறிகிலர்
ஆன்மாவே மைந்தன் அரனுக்கு இவன்என்றால்
ஆன்மாவும் இல்லையால் ஐஐந்தும் இல்லையே
.


ஆன்மா சிவனின் தன்மையைப் பெறும்போது சிவகுமாரன் ஆகிவிடும். மறைகள் “ஆன்மாவே சிவகுமாரன் ஆனான்” என்று கூறுவதன் பொருள் இதுவே. நின்மல அவத்தையில் ஆன்மா சிவனுக்கு மகன் ஆகும். அந்நிலையில் இருபத்து ஐந்து தத்துவங்களும் இரா. ஆன்மாவின் தன்மையுடன் வாழ்பவர் சிவப் பேற்றினை அடைய முடியாது. சிவகுமாரன் ஆக முடியாது.


#2307. ஆன்மா அதி சுபன் ஆகும்


உதயம், அழுங்கல் ஒடுங்கல்இம் மூன்றின்
கதிசாக் கிரங்கன வாதி சுழுத்தி
பதிதரு சேதனன் பற்றாம் துரியத்து
அதிசுப னாய்,அனந் தான் அந்தி யாகுமே.


நின்மல சாக்கிரத்தில் ஆன்ம ஒளி உதயமாகும். நின்மலக் கனவில் உலக சிந்தைகள் அழிந்து ஆன்மா தன்ஒளியில் அழுந்தும். நின்மல உறக்கத்தில் ஐம்பொறிகள் ஓய்ந்து அடங்கி விடும். சித்துப் பொருளை ஆன்மா தன் பற்றுக் கோடாகக் கொண்டு இருந்தால், பேருறக்க நிலையில் அது அதிசுபன் ஆகி மங்கள வடிவுடன் அழியாத பேறு அடையும்.


#2308. எய்துவதற்கரிய சிவகதி எய்தும்


எல்லாம்தன் னுட்புக யாவுளும் தானாகி
நல்லாம் துரியம் புரிந்தக்கால் நல்லுயிர்
பொல்லாத ஆறாறுள் போகாது போதமாய்ச்
செல்லாச் சிவகதி சென்றுஎய்தும் அன்றே.


சீவ ஒளி உடலைச் சூழும் போது ஆன்ம தத்துவம் அடங்கி விடும். தத்துவங்களின் உள்ளும், புறமும் சீவ ஒளி நிறையும் போது ஆன்மா துரிய நிலையை மேற்கொண்டால் அது சுத்த ஆன்மா ஆகிவிடும். அந்த நிலையில் ஆன்மாவுக்குத் தீமைகளை அளிக்கும் முப்பத்தாறு தத்துவங்களும் அகன்று விடும். ஆன்மா ஞான வடிவாகச் சென்று அடைவதற்கு அரியதாகிய சிவசக்தியை அடையும்.








 
#2309 to #2313

#2309. கர்மத் துரிசு அகலாது!

காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும்
வாய்ந்த கனலென வாதனை நின்றாற்போல்
ஏய்ந்த கரணம் இறந்த துரியத்துத்
தோய்ந்த கருமத் துரிசுஅக லாதே.


தீயில் நன்கு காய்ச்சப்பட்ட இரும்பு தீயை விட்டு அகன்றாலும் அதனிடம் தீயின் நிறமும் வெப்பமும் அமைந்திருக்கும். அது போன்றே கரணங்களை விடுத்து நிற்கும் நின்மலத் துரியத்தில் முன்பு நிகழ்ந்த கிரியா வாசனைகள் ஆன்மாவிடம் அமைந்திருக்கும்.


#2310. மலமற்ற ஆன்மா பரம் ஆகும்


ஆன மறையாதி யாம் உரு நந்திவந்து
ஏனை அருள்செய் தெரிநனா அவத்தையில்
ஆன வகையை விடும்அடைத் தாய்விட
ஆன மாலதீதம் அப்பரந் தானே.


நனவு நிலையில் ஆன்மாவின் அனுபவங்கள் அநேகம். அவற்றை முற்றிலுமாகத் துறந்து விட்ட நிலையில் வேத விழுப்பொருளான சிவன் அருள் கிடைக்கும் என்றால், அந்த ஆன்மா அனைத்தையும் கடந்து அதீத நிலையை அடையும். அந்த ஆன்மா மலங்கள் நீங்கப் பெற்று இருக்கும். இத்தகைய மலமற்ற ஆன்மாவே பரம் ஆகும்.


#2311. அத்தனோடு ஒன்றலாம்


சுத்த அதீதம் சகலத்தில் தோய்வுறில்
அத்தன் அருள்நீங்கா ஆங்கணில் தானாகச்
சித்த சுகத்தைத் தீண்டாச் சமாதிசெய்து.
அத்தனோடு ஒன்றற்கு அருள்முத லாமே.


சுத்த அதீத நிலையை அடைந்தவர்கள் மீண்டும் சகல நிலைக்குத் திரும்பி விட்டாலும் அவர்கள் மீது அத்தன் கொண்ட அருள் மாறாது. நீங்காது. அவர்கள் உலக இன்பங்களை நாடாமல் சிவன் நினைவிலேயே நாதாந்தத்தில் சமாதி அடைந்து சிவத்துடன் பொருந்துவார்கள்.


#2312. உமையொரு பாகன் அருள் செய்தான்


வேறுசெய் தான்இரு பாதியின் மெய்த்தொகை
வேறுசெய் தான்என்னை எங்கணும் விட்டுய்த்தான்
வேறுசெய் யாஅருள் கேவலத் தேவிட்டு
வேறுசெய் யாஅத்தன் மேவிநின் றானே.


உமையொரு பாகன் ஆன சிவன் உலகத்து உயிர்களை எல்லாம் ஆண், பெண் என்ற இரு வேறு பாலர்களாகப் படைத்தான். உமையொரு பாகன் ஆன அவனே என்னை உலகச் சுகங்களின் கவர்ச்சியில் இருந்து மீட்டான். எனக்கு அகண்ட வடிவம் தந்து, எங்கும் சென்று வரும் ஆற்றலையும் தந்தான். என் தந்தை போல என்னுடன் இருந்து என்னைக் காத்தான்.




 
#2213. சுவர்க்கமும் நரகமும் நீங்கும்!

கறங்குஓலை கொள்ளிவட் டம்கட லில்திரை
நிறஞ்சேர் ததிமத்தன் மலத்தே நின்றங்கு
அறங்காண் சுவர்க்க நரகம் புவிசேர்த்து
கிறங்கா உயிர்அரு ளால்இவை நீங்குமே.


காற்றாடியின் ஓலையும், கொள்ளிக் கட்டையின் வட்டமும், கடலில் எழுகின்ற அலைகளும், தயிரில் சுழலும் மத்தும் தாமாகவே இயங்குவதில்லை. அது போன்றே உயிர்களும் தாமாக இயங்குவதில்லை. அவைகள் தங்கள் மலங்களால் இயக்கப்பட்டு பல்வேறு வினைகளை புரிகின்றன. தத்தம் வினைகளுக்கு ஏற்ப சுவர்க்கம் அல்லது நரகத்தை அடைகின்றன. மீண்டும் உலகத்தின் வந்து பிறக்கின்றன. சீவன்கள் இறைவனின் அருளை பெற்றால் பிறவிப் பிணியில் இருந்து விடுபடலாம்.

#2314. கதிரவன் முன்பு மதியொளி

தானே சிவமான தன்மை தலைப்பட
ஆன மலமும்அப் பாச பேதமும்
ஆன குணமும் பரான்மா உபாதியும்
பானுவின் முன்மதி போல்படராவே.


சீவன் சிவனாகும் தன்மையை அடைந்துவிட்டால் அதனைப் பற்றி இருக்கும் பழமையான மலங்களும், அவற்றால் உண்டாகும் பாசத் தளைகளும், அதனால் அமைகின்ற மூன்று குணங்களும் அகன்று விடும். ஆன்மா தன் மேன்மையையும், உண்மையையும் அறிய விடாமல் தடுத்த தடைகள் அனைத்தும் கதிரவன் முன்பு மதியொளி போல ஒளிராமல் அகன்று சென்று விடும்.


#2315.தொழில் அற்று இருப்பர்


நெருப்புண்டு நீருண்டு வாயுவும் உண்டங்கு
அருக்கனும் சோமனும் அங்கே அமரும்
திருத்தக்க மாலும் திசைமுகன் தானும்
உருத்திர சோதியும் உள்ளத்து ளாரே.


நின்மலத் துரியத்தில் சீவனின் ஆன்ம ஒளியில் நுண்ணிய நிலயில் பஞ்ச பூதங்கள் அடங்கி இருக்கும்.
கதிரவனும் திங்களும் தங்கள் கலைகள் அடங்கி இருப்பர். படைப்புத் தொழில் ஆற்றும் நான்முகன், காக்கும் கடவுள் திருமால், அழிக்கும் செயல் புரியும் உருத்திரன் என்ற மூன்று தெய்வங்களும் தங்கள் தொழில் அற்று விளங்குவர்.


#2316. சிவலோகம் எளிதாகும்


ஆனைகள் ஐந்தும் அடக்கி அறிவென்னும்
ஞானத் திரியைக் கொளுவி அதனுட்புக்கு
ஊனை இருளற நோக்கும் ஒருவற்கு
வானகம் ஏற வழிஎளி தாமே.


ஐம்பொறிகள் என்னும் ஐந்து யானைகளை அடக்கி விட்டு, அறிவு என்னும் ஞானத் திரியை நன்கு தூண்டி விட்டு, அதில் காணும் ஒளியில் புகுந்து கொண்டு, தன் ஊன உடலைச் சோதி வடிவாகக் காண்பவர்க்கு சிவலோகம் செல்வது மிகவும் எளிதாகும்.


#2317. நாடியின் உள்ளே நாதம் கண்டேன்


ஆடிய காலில் அசைக்கின்ற வாயுவும்
தாடித் தெழுந்த தமருக ஓசையும்
பாடி எழுகின்ற வேதாக மங்களும்
நாடியின் உள்ளாக நான்கண்ட வாறே.


ஆடிய திருவடி அசைக்கின்ற காற்றையும், தாடித்து எழுகின்ற டமருக ஓசையும், வேதங்கள் ஆகமங்கள் இசைகின்ற ஒலியையும் நான் என் நாடியின் உள்ளேயே கண்டு
கொண்டேன்.


#2318. பேரறிவும், பேயறிவும்


முன்னை அறிவினில் செய்த முதுதவம்
பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம்
தன்னை அறிவது அறிவாம் அஃ தன்றிப்
பின்னை அறிவது பேயறி வாகுமே


முற்பிறவியில் பெற்ற நல்லறிவுடன் பயிற்சி செய்த நல்வினைகளின் பயன் இந்தப் பிறவியில் பெற்றுள்ள தூய பேரறிவு ஆகும். சீவனின் அறிவு ஒளி பெற்று விளங்கும் போது தான் சீவன் தன்னைப் பற்றிய உண்மைகளை அறிய முடியும். தன்னை உள்ளபடி தான் அறிந்து கொள்வதே உண்மையான அறிவு ஆகும். மற்றவை எல்லாம் பேயறிவு ஆகும். ஏனென்றால் அவை சீவனின் பிறவிப் பிணியை அகற்றுவதில்லை.


 
#2319 to #2323

#2319. செயலற்று இருப்பார்க்குச் சிவனருள் சித்திக்கும்

செயலற் றிருக்கச் சிவானந்த மாகும்
செயலற் றிருப்பார் சிவயோகம் தேடார்
செயலற் றிருப்பார் செகத்தொடுங் கூடார்
செயலற் றிருப்பார்க்கே செய்தியுண் டாமே.

உட்கருவிகள் என்னும் அந்தக்கரணங்கள் செயலற்று இருக்கும் போது ஆன்மாவுக்குச் சிவானந்தம் ஏற்படும். இந்த ஆனந்த நிலையை அடைந்தவர் சிவ யோகத்தையம் கூட நாடார். இங்கனம் செயலற்று இருப்பவர் இந்த உலகத்தோடும் ஒட்ட மாட்டார். இவ்வாறு செயலற்று ‘சிவனே!’ என்று இருப்பவர்களுக்குச் சிவனருள் கிடைக்கும்.

#2320. ஒளியுடல் கிடைக்கும்

தான்அவ னாகும் சமாதிகை கூடினால்
ஆன மலம்அறும் அப்பசுத் தன்மைபோம்
ஈனமில் காயம் இருக்கும் இருநிலத்து
ஊனங்கள் எட்டும் ஒழித்தொன்று வோர்கட்கே.

சீவன் “தானே சிவன்!” என்று அறிந்து கொண்டு சிவனுடன் சமாதியில் இருந்தால், ஆன்மாவைப் பிணித்துள்ள மலங்கள் நீங்கும். ஆன்மாவை கட்டியிருக்கும் தளைகள் நீங்கும். பிறவியை உண்டாக்கும் நுண்ணுடலை ஒழித்துச் சிவனுடன் பொருந்துவோருக்கு மேலுலகில் ஓர் அழியாத ஒளியுடல் கிடைக்கும்.

#2321. நாதசக்தி நன்மை நல்கும்

தொலையா அரனடி தோன்றும் அம் சத்தி
தொலையா இருளொளி தோற்ற அணுவும்
தொலையாத் தொழின்ஞானம் தொன்மையில் நண்ணித்
தொலையாத பெத்தம்முத் திக்கிடை தோயுமே.

ஆன்மாவை விட்டு நீங்காத சிவன் அருளால் ஒரு நாதம் பிறக்கும். ஆன்மாவை விட்டு நீங்காத இருளும் ஒளியும் மாறி மாறி விளங்கும் போது ஆன்மா முறையே கிரியையிலும், ஞானத்திலும் மாறி மாறி தங்கும். இங்கனம் ஆன்மாவின் பத்த நிலையிலும் முத்தி நிலையிலும் அருட் சக்தி மாறாமல் விளங்கும்.

#2322. உள்ளொளிக்கு ஒளியாமே.

தோன்றிய பெத்தமும் முத்தியும் சூழ்சத்தி
மான்றும் தெருண்டும் உயிர்பெறும் மற்றவை
தான்தரு ஞானம் தன் சத்திக்குச் சாதனாம்
ஊன்றல்இல் லாஉள் ளொளிக்கு ஒளி யாமே.

பத்தத்திலும், முக்தியிலும் ஆன்மாவுக்கு தொடர்ந்து உதவுபவள் சக்தி. பத்த ஆன்மா அவளை மயங்கியும், முக்த ஆத்மா அவளைத் தெளிந்தும் உணர்ந்து கொள்ளும். ஆன்மாவுக்குச் சக்தி அளிக்கும் நல்லறிவே ஆன்மாவுக்கு நல்ல துணையாக அமையும். அதுவே சீவனின் ஒளிக்கு ஒளியினைத் தரும்.

#2323. அறிகின்ற நானென்று அறிந்து கொண்டேன்

அறிகின்றி லாதன ஐஏழும் ஒன்றும்
அறிகின்ற என்னை அறியா திருந்தேன்
அறிகின்றாய் நீயென்று அருள்செய்தான் நந்தி
அறிகின்ற நானென்று அறிந்துகொண் டேனே.

உண்மையில் முப்பத்தாறு தத்துவங்களும் அறிவற்றவை ஆகும். ஒரு சமயத்தில் நான் அவற்றுடன் நன்கு பொருந்தி அவைகளாகவே இருந்தேன். ‘எல்லாவற்றையும் அறியும் அறிவின் வடிவம் நான்!” என்ற உண்மையை நான் அறியாமல் இருந்தேன். சிவனை நாடிய போது நாதசக்தியின் வழியே நந்தி உண்மையை எனக்குப் புரிய வைத்தான். ‘நான் வெறும் சடம் அல்ல. நான் அறிவின் வடிவம்’ என்று அறிந்து கொண்டேன். பின்னர் நான் என்னையும் அறிந்து கொண்டேன். ஆன்மத் தத்துவங்களையும் அறிந்து கொண்டேன்.


 
#2324 to #2328

#2324. ஊனமிலாள் தனை ஊனிடைக் கண்டேன்

தான்அவ னாகிய ஞானத் தலைவனை
வானவ ராதியை மாமணிச் சோதியை
ஈனமில் ஞானத்து இன்னருள் சத்தியை
ஊனமிலாள்தன்னை ஊனிடைக் கண்டதே.


என்னை அவனாக (சீவனைச் சிவனாக) ஆக்கிவிட்ட ஞானப் பிரான் சிவன். வானவர்களின் முதன்மைத் தலைவன் அவன். மாமணிச் சோதியானவன் அவன். இத்தகைய சிவபெருமானையும், குற்றமற்ற மெய்ஞ்ஞானத்து இன்னருள் தரும், உடல் வடிவம் அற்ற சக்தியையும், என் உடலில் நான் கண்டு கொண்டேன்.


#2325. தெளியச் சிவானந்தம் விளையும்


ஒளியும் இருளும் பரையும் பரையுள்
அளியது எனலாகும் ஆன்மாவை யன்றி
அளியும் அருளும் தெருளும் கடந்து
தெளிய அருளே சிவானந்த மாமே.


ஆன்மாவின் மீது சக்தியின் அருள் உள்ள போது ஒளியும். சக்தியின் அருள் இல்லாத போது இருளும் நிலவும். ஆன்ம போதம் அகலும் போது சக்தி தெளிவான அறிவைத் தருவாள். அதனால் நாத சக்தி உண்டாகும். அதனால் உயரிய சிவானந்தம் விளையும்.


#2326. “தத் தவம் அசி!”

ஆனந்த மாகும் அரனருட் சத்தியில்
தான் அந்த மாம்உயிர் தானே சமாதிசெய்து
ஊன்அந்த மாய் உணர் வாய்உள் உணர்வுறில்
கோன்அந்தம் வாய்க்கும் மகாவாக் கியமாமே.


தன்வயம் இழந்து ஆன்மா சிவனின் அருளில் அழுத்தி விட்டால் உயரிய ஆனந்தம் விளையும். சீவன் உடலைக் கடந்து சமாதி செய்யும் போது அது உணர்வாகி, உள்ளுணர்வாகி, அகண்ட அறிவைப் பெறும். உடலைச் செலுத்தி வந்த சுட்டறிவு என்னும் ஆன்ம அறிவு மறைந்து விடும். அந்த நிலையில் “நீ அவன் ஆகின்றாய்!” என்ற மகா வாக்கியப்படிச் சீவன் சிவன் ஆகிவிடும்.


#2327. அறிவிக்க அறிவார் அறிவார்


அறிவிக்க வேண்டாம் அறிவற்று அயர்வோர்க்கும்
அறிவிக்க வேண்டாம் அறிவிற் செறிவோர்க்கும்
அறிவுற்று அறியாமை எய்திநிற் போர்க்கே
அறிவிக்கத் தம்அறி வார்அறி வோரே.


தாமச குணம் பொருந்திய, ஆன்மா ஞானம் சிறிதும் இல்லாதவர்களுக்கு ஞான உபதேசம் செய்ய வேண்டாம். அது வீண்! முற்பிறவிகளில் செய்த பயிற்சிகளால் இயல்பாகவே ஞானம் பெற்று விளங்குபவர்களுக்கும் ஞான உபதேசம் செய்ய வேண்டாம். அது தேவை இல்லை! கல்வியின் மூலம் ஆன்ம ஞானத்தைக் கற்று அறிந்த பின்னும், அதன் அனுபவத்தைப் பெறமுடியால் அறியாமையில் இருப்பவர்களுக்கே ஞான உபதேசம் செய்து அவர்கள் ஆன்ம அனுபவம் பெறுவதற்கு உதவ வேண்டும். அவர்கள் ஆன்ம அனுபவம் பெற்றால் தம் உண்மை வடிவை அடைவார்கள்.

#2328. சொல் அற்றவர்கள்!

சத்தும் அசத்தும் சதசத்தும் தான்கூடிச்
சித்தும் அசித்தும் சிவசித்த தாய்நிற்கும்
சுத்தம் அசுத்தம் தொடங்காத துரியத்துச்
சுத்தரா மூன்றுடன் சொல்லற் றவர்களே.


சத்து, அசத்து, சதசத்து என்னும் மூன்று பொருட்களுடன் கூடி ஆன்மா முறையே சித்து (அறிவுள்ள பொருள்), அசித்து (அறிவற்ற பொருள்), சிவசித்து (பேரறிவுப் பொருள்) என்ற மூன்று நிலைகளை அடைகின்றது. துரிய நிலையில் சுத்த மாயை அசுத்த மாயை இரண்டுமே இரா. அங்கு ஆன்மா நனவு, கனவு, உறக்கம் என்னும் மூன்று அவத்தைகளையும் கடந்து பிரணவத்தையும் கடந்து மலங்கள் நீங்கப் பெற்றுத் தூய்மை அடையும்.




 
#2329 to#2333

#2329. சிவத்துடன் தங்கும்

தானே அறியான் அறிவிலோன் தானல்லன்
தானே அறிவான் அறிவு சதசத்தென்று
ஆனால் இரண்டும் அரனரு ளாய்நிற்கத்
தானே அறிந்து சிவத்துடன் தங்குமே.


ஆன்மா தன் உண்மை வடிவைத் தானே அறிந்து கொள்ள முடியாது. அதே சமயம் ஆன்மா அறிவு அற்றவனுன் அல்லன். ஆன்மா தன் உண்மை வடிவத்தை அறிந்து கொண்ட பின்பு தான் அறிவும் அறியாமையும் கலந்தவன் எடன்றுஅறிந்து கொள்வான். அருள் சக்தியால் இந்த இரண்டு நிலைகளையும் அறிந்த பின்பு சிவத்துடன் பொருந்திப் பேரின்பம் அடைவான்.


#2330. தத்துவ ஞானம்


தத்துவ ஞானம் தலைப்பட் டவர்க்கே
தத்துவ ஞானம் தலைப்பட லாய்நிற்கும்
தத்துவ ஞானத்துத் தான்அவ னாகவே
தத்துவ ஞானானந் தந்தான் தொடங்குமே.


தத்துவ ஞானம் வாழ்வில் நம் அமைவதற்குத் தத்துவ ஞானங்கள் முப்பத்து ஆறையும் அறிந்து கொள்ள வேண்டும். இங்கனம் தத்துவ ஞானம்
அடைந்த ஆன்மா சிவத்துடன் பொருந்தினால் அதன் தத்துவ ஞானத்தால் அதற்குச் சிவானந்தம் விளையும்.


#2331. ஞான முத்திரை நண்ணுமே


தன்னை அறிந்து சிவனுடன் தானாக
மன்னும் மலம்குணம் மாளும் பிறப்பறும்
பின்அது சன்முத்தி சன்மார்க்கப் பேரொளி
நன்னது ஞானத்து முத்திரை நண்ணுமே.


ஆன்மா தன்னை உள்ளபடி அறிந்து கொண்டுவிட்டுச் சிவனோடு பொருந்திச் சிவனாக மாறினால், அதனிடம் இருந்த மலங்கள், அதனால் விளைந்த குணங்கள் அழித்து விடும். பிறவிப் பிணியின் தளைகள் நீங்கும். அந்த ஆன்மாவிடம் முத்தி நிலையும், சன்மார்க்க ஒளியும், ஞான முத்திரையும் தாமே வந்து அமையும்.


#2332. ஞான முத்திரை பெறுவார்


ஞானம்தன் மேனி கிரியை நடுஅங்கம்
தானுறும் இச்சை உயிராகத் தற்பரன்
மேனிகொண்டு ஐங்கரு மத்தவித் தாதலான்
மோனிகள் ஞானத்து முத்திரை பெற் றார்களே.

சீவனின் ஞானம் என்பது சிவபிரான் திருமேனி . சீவனின் கிரியை என்பது அவன் நம் இதயத்தில் உறையும் செயல். இச்சை என்பது சிவன் தன் இச்சையை நம் இச்சை மேல் கொண்டு வந்து பொருத்துவது. படைப்பு முதலான ஐந்தொழில்களுக்கும் காரணம் ஆனவன் சிவன். பிரணவ யோகம் செய்தவர் சிவனுடன் ஒன்றாகப் பொருந்துவார். அவர் தன் இச்சை, கிரியைகளைத் துறந்துவிடுவார். ஞான முத்திரையைப் பெறுவார்.

#2333. உயிர்க்கு ஊட்டுவான் சிவன்


உயிர்க்குஅறி உண்மை உயிர்இச்சை மானம்
உயிர்க்குக் கிரியை உயிர்மாயை சூக்கம்
உயிர்க்குஇவை ஊட்டுவோன் ஊட்டும் அவனே
உயிர்ச்சொல் அன்றி அவ்வுளத்து ளானே.

உயிரின் அறிவில் மெய்ப்பொருள் உள்ளது. உயிரின் அபிமானம் அதன் இச்சை. உயிரின் கிரியை உயிருடன் கலந்த மாயையின் அளவு ஆகும். உயிரின் ஞானம், இச்சை, கிரியை என்று மூன்றும் நுண்ணிய வடிவில் பரவிந்துவில் அமைத்திருக்கும். உயிருடன் இவற்றைச் சேர்பவன் சிவபெருமான். எனவே உயிரின் செயல்கள் எல்லாம் அதன் செயல்கள் அல்ல. அவை உயிரில் கலந்துள்ள சிவத்தின் செயல்கள் ஆகும்



 
#2334 to #2338

#2334. அழிவற்ற சாந்தாதீதன் சிவன்

தொழில்இச்சை ஞானங்கள் தொல்சிவசீவர்
கழிவற்ற மாமாயை மாயையின் ஆகும்
பழியற்ற காரண காரியம் பாழ்விட்டு
அழிவற்ற சாந்தாதீ தன்சிவ னாமே.


சிவமாகிய தன்மையை முன்னமே அடைந்த சீவர்களின் கிரியை, இச்சை, ஞானம் இவைகள் அனைத்தும் மாமாயை, மாயையின் செயல்கள் ஆகும். காரண காரியங்களைக் கடந்த சாந்தியாதீத நிலையில் விளங்குபவன் அழிவற்ற சிவபெருமான் ஆவான்.


#2335. உயிர்க்கு உயிராவான்


இல்லதும் உள்ளதும் யாவையும் தானாகி
இல்லதம் உள்ளது மாய்அன்றாம் அண்ணலைச்
சொல்வது சொல்லிடில் தூராதி தூரமென்று
ஒல்லை உணர்ந்தால் உயிர்க்குயி ராகுமே.


நிலையற்ற மாயா காரியப் பொருட்களில் நிறைந்தவன் சிவன். நிலையான பரவிந்துவில் பொருந்திவனும் அவன். பொருட்களில் இருந்தும், இல்லாமலும், அவற்றிலிருந்து வேறாக இருப்பவன் அவன். அவன் சொற்பதம் கடந்த அற்புதமானவன் என்பத்தைச் சிவஞானத்தால் உணர்ந்து கொண்டவரின் உயிரின் உயிராகத் திகழ்வான் சிவன்.


#2336. உயிர் உயர் பதம் சேரும்


உயிரிச்சை யூட்டி உழிதரும் சத்தி
உயிரிச்சை வாட்டி ஒழித்திடும் ஞானம்
உயிரிச்சை யூட்டி யுடனுறலாலே
உயிரிச்சை வாட்டி உயர்பதஞ் சேருமே


உயிர்களுக்கு இச்சைகளை உண்டாக்கித் துன்பம் தருவது இச்சா சக்தி. ஞான சக்தி ஓங்கும் போது உயிர்களின் இச்சைகள் அழிந்து விடும்.அப்போது உயிர்களுக்கு ஈசன் மேல் நேசம் ஏற்படும். அந்நிலையில் உயிர்கள் உலக இச்சைகளைத் துறந்துவிட்டு மேன்மை வாய்ந்த சிவகதியை அடையும்.


#2337. அவையும் அருளின் வெளிப்பாடே


சேரும் சிவமானார் ஐம்மலம் தீர்ந்தவர்
ஓர்ஒன்றி லார் ஐம் மலஇருள் உற்றவர்
பாரின்கண் விண்நர கம்புகும் பான்மையர்
ஆருங்கண் டோரார் அவையருள் என்றே.


உலக இச்சைகளை அழித்துவிட்டுச் சிவம் ஆனவர் உயிரின் ஐந்து மலங்களையும் நீக்கி விட்டவர். சிவத்துடன் இவ்வாறு பொருந்தாதவர் ஐந்து மலங்களை உடையவர். இவர்கள் உலகத்தில் வாழ்ந்து விட்டுச் சுவர்க்கம் அல்லது நரகம் சென்று விட்டு மீண்டும் உலகில் வந்து பிறவி எடுப்பர். இவர்கள் இப்படிப் பிறந்து உழல்வதும் அந்த சிவசக்தியரின் செயலால் என்பதை இவர்கள் உணர்வதில்லை.


#2338. எய்தினர் இறையருள் தானே


எய்தினர் செய்யும் இருமாயா சத்தியின்
எய்தினர் செய்யும் இருஞான சத்தியின்
எய்தினர் செய்யும் இருஞால சத்தியின்
எய்தினர் செய்யும் இறையருள் தானே.


உயிர்கள் தூமாயை (சுத்த மாயை), தூவா மாயை ( அசுத்த மாயை) என்னும் இரண்டிலும் பொருந்தி அவற்றின் இயல்புக்கு ஏற்ற அனுபவங்களைப் பெற்றன.. ஞான சக்தியால் ஞானத்தை அடைந்தன. உலகப் பொருட்களால் கவரப் பட்டு பல நன்மைகளை அடைந்தன. இவை அனைத்தும் நிகழ்வது சிவன் அருளால்.




 
#2339 to #2343

#2339. சிவமாய் ஆயினர்

திருந்தனர் விட்டார் திருவில் நரகம்
திருந்தனர் விட்டார் திருவார் சுவர்க்கம்
திருந்தனர் விட்டார் செறிமலர் கூட்டம்
திருந்தனர் விட்டார் சிவமாய் அவமே.


திருவடியின் ஞானம் பெற்றுத் திருந்திவிட்ட உயிர்கள் இன்பம் தராத நரகத்தையும் விடுத்தன. இன்பம் தரும் சுவர்க்கத்தையும் விடுத்தன. தம்மிடம் பொருந்தி இருந்த மலக்கூட்டத்தையும் விட்டனர். சிவத்துடன் பொருந்திச் சிவம் ஆகிய பின்பு பயனற்ற பிறவிகளை அவை விட்டு விட்டன.


#2340. அவமும் சிவமும் அவன் அருளாமே


அவமும் சிவமும் அறியார் அறியார்
அவமும் சிவமும் அறிவார் அறிவார்
அவமும் சிவமும் அருளால் அறிந்தால்
அவமும் சிவமும் அவனரு ளாமே.


பயன் தருவது எது, பயன் அற்றது எது என்பதை அறிவு இல்லாதவர் அறிய மாட்டார். பயன் உள்ளதையும் பயன் அற்றதையும் அறிவுடையவர் பிரித்து அறிவார். இங்கனம் பிரித்து அறியும் நல்ல அறிவு பெற்றவர் தமக்கு வரும் நன்மை, தீமை ஏமாற்ற இரண்டுமே சிவன் அருளாலே விளைவன என்பதையும் அறிவார்.


#2341. சிவ சக்தியர் அனலும் வெப்பமும் போல்வர்.


அருளான சத்தி அனல் வெம்மை போல
பொருள் அவனாகத்தான் போதம் புணரும்
இருள் ஒளியாய் மீண்டு மும்மல மாகும்
திருவருள் ஆனந்தி செம்பொருளாமே.


அனல் சிவன் என்றால் அதன் வெப்பம் சக்தி ஆவாள். சிவனைப் பொருளாகக் கொண்டு சக்தி சீவனை நடத்துவாள். இருளாகவும் ஒளியாகவும், சக்தி விளங்குவாள். மும்மலங்களாக விரிபவளும் அவளே. பின்பு சீவனைச் சிவனாக்கிச் சிவனந்தத்தைத் தருபவளும் அவளே!


#2342. அருட் பேதம் அல்ல காரணம்!


ஆதித்தன் தோன்ற வரும்பது மாதிகள்
பேதித்த தம்வினை யாற்செயல் சேதிப்ப
ஆதித்தன் தன்கதி ரால்அவை சேட்டிப்பப்
பேதித்தப் பேதியா வாறுஅருட் பேதமே.


கதிரவன் உதித்ததும் பல பத்மங்கள் மலரும். சில பத்மங்கள் மலரா. கதிரவனின் ஒளி ஒரு போன்றே அவைகளின் மீது இருந்தாலும் மலர்களின் தன்மையின் வேறுபாட்டினால் இங்கனம் நிகழும். சீவர்கள் அடையும் மாறுபட்ட பக்குவமும் அவர்களின் மாறுபட்ட தகுதியினால் நிகழ்வதே அன்றி அவர்களுக்கு நேசத்துடன் ஈசன் புரியும் அருளில் உள்ள பேதத்தினால் அல்ல.


#2343. ஆன்மாவின் இச்சா சக்தி


பேதம் அபேதம் பிறழ்பேதா பேதமும்
போதம் புணர்போதம் போதமும் நாதமும்
நாத முடன்நாக நாதாதி நாதமும்
ஆதன் அருளின் அருள்இச்சை யாமே.


கண்களால் காணும் உலகில் வேற்றுமைகளையும், ஒற்றுமைகளையும், வேற்றுமைகளில் ஒற்றுமைகளையும் காணும் ஆற்றல்; ஆன்மாவிடம் இயற்கையாகவே அமைந்துள்ள அறிவு; கல்வி, கேள்வியால் பெற்ற ஞானம்; நாதம்; நாதாந்தம் இவை அனைத்துமே ஆன்மாவிடம் அமைந்துள்ள இச்சா சக்தியின் அருளினால் அமைகின்றன.



 
#2344 to #2348

#2344. ஆவியை நாட்டும் அரன் அருள்

மேவிய பொய்க்கரி யாட்டும் வினையெனப்
பாவிய பூதம்கொண்டு ஆட்டிப் படைப்பாதி
பூவியல் கூட்டத்தால் போதம் புரிந்தருள்
ஆவியை நாட்டும் அரன்அரு ளாமே.


பொம்மை யானையின் உருவத்தில் இரு மனிதர்கள் புகுந்து கொண்டு அதனுள் ஆடி அதை ஆட்டுவிப்பார்கள். அது போன்றே ஆன்மாவை ஐம்பூதங்களைக் கொண்டு ஆடச் செய்வதும், படைப்பு முதலிய ஐந்தொழில்களால் சுவர்க்கம், நரகம் இவற்றுடன் கூடச் செய்வதும், இறுதியில் ஞானம் நல்குவதும் இவை அனைத்துமே ஆன்மாவின் உடலில் உயிரை நிலைபெறச் செய்யும் சிவனின் அருட் சக்தியால் நிகழ்பவை ஆகும்.

#2345. தெளிவுற்றுத் தீண்டச் சிவம் ஆகும்!

ஆறாது அகன்று தனையறிந் தானவன்
ஈறாகி யாவினும் யாவும் தனில்எய்த
வேறாய் வெளிபுக்கு வீடுற்றான் அருள்
தேறாத் தெளிவுற்றுத் தீண்டச் சிவமாமே.

ஆறு ஆறு முப்பத்தாறு தத்துவங்களையும் துறந்து விட்ட ஆன்மா; தன்னைத் தானே உள்ளபடி உண்மையாக அறிந்து கொண்ட ஆன்மா; எல்லா உயிர்களிடத்தில் தான் உறைபவனாகவும், தன்னிடத்தில் எல்லா உயிர்கள் உறைவதை அறிந்தவனாகவும், அவற்றில் இருந்து வேறாகி நிற்பவனும் ஆகிய ஆன்மா; பரவெளியில் பிரவேசித்து வீடு பேற்றினை அடைவான். அத்தகைய ஆன்மா தன் மயக்கம் ஒழித்துத் தெளிவுற்றுச் சிவமாகி விடுவான்.

#2346. சிவனுடன் சாரலும் ஆமே

தீண்டற்குரிய அரிய திருவடி நேயத்தை
மீண்டுற்று அருளால் விதிவழியே சென்று
தூண்டிச் சிவஞான மாவினைத் தானேறித்
தாண்டிச் சிவனுடன் சாரலும் ஆமே.


இறைவனின் திருவடி அடைவதற்கு அரியது. எனினும் முற்பிறவிகளில் செய்த சாதனையின் பயனாக ஆன்மா இப்பிறவியில் ஈசனின் அருள் பெறும்.
சீரிய நெறி வழியே சென்று, சிவஞானத்தைத் தேடி, குண்டலினி சக்தியை எழுப்பி, அதனுடன் உடலின் ஆறு ஆதாரங்களையும் கடந்து சென்று நிராதாரத்தை அடைந்தால் ஆன்மா சிவனுடன் பொருந்த இயலும்.

#2347. சிவனைச் சார்ந்தவர்கள் எவர்?

சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர்
சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர்
சார்ந்தவர் நேயந் தலைப்பட்ட ஆனந்தர்
சார்ந்தவர் சத்த அருள்தன்மை யாரே.
சிவபெருமானைச் சார்ந்தவர்கள் எவர்?

சாரணர்கள், சித்தர்கள், சமாதி பயின்றவர்கள், சிவஞானம் பெற்றவர்கள்; சிவனிடம் மிகுந்த அன்பு கொண்டவர்கள், சிவானந்தத்தில் திளைப்பவர்கள், நாதத்தில் திளைப்பவர்கள் இவர்கள் அனைவருமே சிவபெருமானைச் சார்ந்தவர்கள் ஆவர்.

#2348. தான் இன்றித் தானாவது தத்துவ சுத்தம்

தான்என்று அவன்என்று இரண்டென்பர் தத்துவம்
தான்என்று அவன்என்று இரண்டற்ற தன்மையைத்
தான்என்று இரண்டுஉன்னார் கேவலத் தானவர்
தான்இன்றித் தானாகத் தத்துவ சுத்தமே.


சகல நிலையில் உள்ளவர்கள் “தான்” என்னும் ஆன்மா வேறு, “அவன்” என்னும் சிவன் வேறு என்று நினைப்பார்கள். “தான்” என்றும் ” அவன்” என்றும் உண்மைப் பொருட்கள் இரண்டு உண்டு என்பார்கள். அருள் கேவல நிலையில் உள்ளவர்கள் “தான் வேறு, அவன் வேறு!” என்று எண்ணாமல் உண்மைப் பொருள் ஒன்றே ஒன்று என்பார்கள். “தான்” என்பது அழிந்து சிவனுடன் சேருவது சுத்தத் தத்துவம் ஆகும்.

 
Back
Top