14. அடியார் பெருமை
#1869 to #1872
#1869. அவ்வுலகத்தே அருள் பெறுவர்
அவ்வுல கத்தே பிறந்தவ் வுடலோடும்
அவ்வுலகத்தே அருந்தவம் நாடுவர்
அவ்வுலகத்தே அரனடி கூடுவர்
அவ்வுலகத்தே அருள் பெறுவாரே.
முன்பு செய்த நல்வினைப் பயனால் மண்ணுலகில் சிவநேசத்துடன் கூடிய பிறவி எடுப்பவர், அந்த உடலுடன் அந்த உலகில் நல்ல தவம் செய்வர். அந்த உலகத்தில் அரன் அருள் பெற்று அவ்வுலகத்தில் அரன் அடியினில் கூடுவர்.
#1870. நாம் உய்ந்து ஒழிந்தோம்
கொண்ட குறியும் குலவரை உச்சியும்
அண்டரும் அண்டத்து அமரரும் ஆதியும்
எண்டிசை யோரும் வந்து என் கைத்தலத்தினுள்
உண்டு எனில், நாம் இனி உய்ந்தொழிந் தோமே.
சிவனை அடை வது நான் கொண்ட குறிக்கோள். குலவரையின் உச்சியாகிய சகஸ்ராரத்தில், என் சுழுமுனை நாடியின் முடிவில், இந்த அண்டங்களில் வாழும் அனைவரும், அமரர்களும், ஆதிப் பிரானும், எட்டுத் திசைகளில் வசிக்கின்ற உள்ள அனைவரும் வந்து அமையப் பெற்றால், அப்போதே நான் உய்ந்து ஒழிவேன்.
#1871. அவன் அன்றி இல்லையே!
அண்டங்கள் எழும் அகண்டமும் ஆவியும்
கொண்ட சராசர முற்றும் குணங்களும்
பண்டை மறையும் படைத்து அளிப்பு ஆதியும்
கண்ட சிவனும் என்கண் அன்றி இல்லையே.
ஏழு உலகங்களும், அகண்ட வானமும், உயிர்த் தொகைகளும், உலகில் உள்ள அசையும் அசையாப் பொருட்களும், அவற்றின் மாறுபடும் குணங்களும், பண்டைய மறைகளும், படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத் தொழில்களும், அவற்றை நடத்துகின்ற சிவனும், என்னுள் அன்றிப் புறத்தில் வேறு எங்கும் இல்லை.
#1872. அண்ணல் பெருமை ஆய்ந்தது மூப்பே
பெண் அல்ல ஆண் அல்ல பேடு அல்ல மூடத்துள்
உள் நின்ற சோதி ஒருவர்க்கு அறி ஒணாக்
கண் இன்றிக் காணும் செவி இன்றிக் கேட்டிடும்
அண்ணல் பெருமையை ஆஐந்தது மூப்பே.
இறைவன் ஆண் அல்லன், பெண் அல்லள், பேடு அல்ல. தன் அறியாமையினுள் மறைந்து உறைகின்ற ஒருவராலும் அவனை அறிந்து முடியாது. கண்கள் இல்லாமலே அவன் காண வல்லவன்; செவிகள் இல்லாமலேயே அவன் கேட்க வல்லவன். இத்தகைய அண்ணலின் பெருமையை ஆராய்ந்து அறிந்து கொள்வதே முதிர்ந்த ஞானம் ஆகும்.