Quotable Quotes Part II

#1540 to #1544

#1540. காயம் விளைக்கும் கருத்து

சேயன் அணியன், பிணி இலன், பேர் நந்தி
தூயன் துளக்கு அற நோக்க வல்லார்கட்கு;
மாயன், மயக்கிய மானிடராம் அவர்
காயம் விளைக்கும் கருத்து அறியார்களே.


சிவன் தன்னைத் தொலைவில் இருந்து வந்து வணங்குபவர்களுக்கும், அருகில் இருந்து வந்து வணங்குபவர்களுக்கும் அருள் புரிபவன்; பாசப் பிணிகள் நீங்கியவன்; அவன் பேர் நந்தி; அவன் மனத்தை ஒரு நிலையில் நிறுத்தி அவனைத் தொழுபவர்களுக்குத் தூய பேரொளியாகத் தோன்றுவான். மாயையில் மயங்கி நிற்பவர்களுக்குப் புலப்படான். மாயையில் மயங்கி நிற்கும் மனிதர்கள் இந்த உடல் எடுத்த பயனை அறிய மாட்டார்கள்.

#1541. பழி நெறியும், சுழி நெறியும்

வழிஇரண் டுக்கும் ஓர்வித்து அதுவான
பழியது பார்மிசை வாழ்தல் உறுதல்
சுழிஅறி வாளன் தன் சொல் வழிமுன் நின்று
அழிவு அறிவார் ,நெறி நாட நில்லாரே.


பழி நெறி வழி வாழ்பவர் உலகில் மீண்டும் மீண்டும் பிறந்தும் இறந்தும் துயர் உறுவர். சுழி நெறி வாழ்பவர் பிறவிப் பிணியை ஒழித்து விடுவர். இந்த இரு வழிப்பட்டவர்களுக்குமே கிடைத்துள்ள உடல் ஒரு அரிய வித்து ஆகும். பிரமரந்திரத்தை அடைந்து பிறவா வரம் பெறும் வழியினை அருளும் குருவின் மொழிப்படி வாழ்ந்து சீவன் பரந்த வெளியுடன் கலந்து விடுவதே சுழி நெறியாகும்.

#1542. இறைவன் வெளிப்படுவான்

மாதவர் எல்லாம் மாதேவன் பிரான் என்பர்,
நாதம் அது ஆக அறியப்படும் நந்தி
பேதம் செய்யாதே ‘பிரான்’ என்று கைத் தொழில்
ஆதியும் அந்நெறி ஆகி நின்றானே.


பெருந் தவசீலர்கள் மகாதேவனைத் தம்மைச் செலுத்தும் பிரான் என்று கூறி வழிபடுவர். அவன் குரு மண்டலத்தில் நாத வடிவாகத் தோன்றுவான். அவனை வீணாத் தண்டியின் வழியாக வழி பட்டு நின்றால் அவனும் அந்த நெறியின் வழியே தன்னை வெளிப்படுத்துவான்.

1543. பரன் அருள வேண்டும்

அரநெறி அப்பனை, ஆதிப் பிரானை,
உரநெறி ஆகி வந்து உள்ளம் புகுந்தானை
பரநெறி தேடிய பக்தர்கள் சித்தம்
பரன் அறியாவிடில் பல்வகை தூரமே.


அனைத்து சமயங்களுக்கும் தலைவன் ஆனவனை; எல்லாவற்றுக்கும் முதன்மை ஆனவனை; சிறந்த பக்தி நெறியில் வழிபடுபவர்களின் உள்ளம் தேடிவந்து குடி புகுபவனை;மேலான நெறியை விரும்பித் தொழும் பக்தர்களின் சித்தத்தை அறிந்து கொண்டு அவன் வெளிப்பட்டு அவர்களுக்கு அருள வேண்டும். அன்றேல் அவர்களால் உண்மையை அறிய முடியாமல் போய் விடும்.

#1544. துரிசு அற நீ நினை!
பரிசறி வானவன் பண்பன் பகலோன்
பெரிசறி வானவர் பேற்றில் திகழுந்
துரிசற நீநினை தூய்மணி வண்ணன்
அரிதவன் வைத்த அறநெறி தானே
.

சீவர்களின் தன்மையை நன்கு அறிந்தவன்; தன்னை விரும்பியவரை ஆதரிக்கும் உயர்ந்த பண்பு உடையவன்; கதிரவன் போல ஒளி வடிவானவன்; வானவர் பெற்றுள்ள அனைத்துப் பேறுகளுக்கும் பெருந் தலைவனாக உள்ளவன்; அவனைக் குறித்து நீ ஐயங்களை அகற்றிச் சிந்தனை செய்வாய்! தூய மணியினைப் போல ஒளி வீசும் அவன் வைத்த அற நெறிகள் அரிய நெறிகள் ஆகும்.
 
#1545 to #1549

#1545. கானம் கடந்த கடவுளை நாடுமின்!

ஆன சமயம் அதுஇது நன்று எனும்
மாய மனிதர் மயக்கம் அது ஒழி ;
கானம் கடந்த கடவுளை நாடுமின்
ஊனம் கடந்த உருவது ஆமே.


“இந்தச் சமயம் சிறந்தது! அந்தச் சமயம் சிறந்தது!” என்று கூறும் மக்களின் மயக்கும் சூழலை விட்டு நீங்கி மயக்கம் நீங்குவீர். நாதாந்தத்தில் உள்ள சிவபெருமானை நாடுங்கள். பஞ்சபூதங்களால் ஆன ஊன் உடம்பினை ஒழித்துப் பிரணவ உடல் பெறும் வழி அதுவே ஆகும்.

#1546. சென்னெறி செல்லாது திகைப்பது ஏன் ?

அந்நெறி நாடி அமரரும் முனிவரும்
செந்நெறி கண்டார் சிவனெனப் பெற்றார் பின்
முன்னெறி நாடி முதல்வனரு ளிலார்
சென்னெறி செல்லார் திகைகின்ற வாறே.


அமரர்களும், முனிவர்களும் சிவநெறியே சிறந்தது என்று அறிந்து கொண்டு சிவமாகும் பேற்றினைப் பெற்றனர். முதல்வனாகிய சிவபெருமான் அருளைப் பெற விரும்புபவர் செல்ல வேண்டிய நெறியில் செல்லாமல் திகைத்து நின்று மக்கள் வகுத்த வேறு பிற நெறிகளைப் பின் பற்றிச் செல்வது ஏன்?

#1547. உள் நின்ற சோதி

உறும் ஆறு அறிவதும், உள் நின்ற சோதி
பெறும்ஆறு அறியின் பிணக்கு ஒன்றும் இல்லை;
அறும் ஆறு அதுவானது அங்கியுள் ஆங்கே
இறும் ஆறு அறிகிலர் ஏழைகள் தாமே.


நாம் அடைய வேண்டிய நெறியை அறிந்து கொண்டு, உயிரில் உயிராய்ச் சுடர் விட்டு உள் நிற்கும் அந்த அரிய சோதியைப் பெற முயற்சித்தால் பிணக்கு எதுவும் இல்லை. நம் கர்மங்களைத் தொலைக்கும் வல்லமை கொண்ட அந்தச் சிவசோதியில் கலந்து நின்று சுய போதம் கழிவதை மக்கள் அறிந்து கொள்ளவில்லை எனில் இவர்கள் அறிவற்ற ஏழைகள் தாமே.

#1548. வழி நடக்கும் பரிசு

வழி நடக்கும் பரிசு ஒன்று உண்டு, வையம்
கழி நடக் குண்டவர் கற்பனை கேட்பர்,
சுழி நடக்கும் துயரம் அது நீக்கிப்
பழி நடப்பார்க்குப் பரவலும் ஆமே.

இறைவனை அடையும் வழி என்று ஒன்று உண்டு. உலக இன்பத்தில் விருப்பம் கொண்டு ஒழுகுபவர் தான் பிறர் கூறுகின்ற கற்பனைக் கதைகளைக் கேட்பர். பிறவி என்னும் சுழலில் அகப்பட்டுக் கொள்ளும் துன்பத்தைப் போக்கி, உலக இன்பத்தைப் பழித்து நடப்பவர்கள் பிறரால் போற்றப் படுவார்.

#1549. உம்பர் தலைவன் முன் ஆவான்

வழி சென்ற, மாதவம் வைகின்ற போது
பழி சொல்லும் வல்வினைப் பற்று அறுத்து, ஆங்கே
வழி செல்லும் வல்வினை யார்திறம் விட்டிட்டு
உழி செல்லில் உம்பர் தலைவன் முன் ஆமே.

சிறந்த சிவநெறியைப் பின்பற்றி அதில் நன்கு நிலை பெற வேண்டும். பழி பாவங்களில் செலுத்தும் வலிமை வாய்ந்த வினைப் பயன்களை முற்றிலுமாக அழிக்க வேண்டும். அந்த வினைகளில் வழியே ஒழுகும் தீவினையாளர்களையும் முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும். பிரமரந்திரத்தின் வழியே மேலே செல்பவர்களுக்குத் தேவர்களுக்குத் தேவனாகிய சிவன் வெளிப்படுவான்.
 
19. நிராகாரம்

19. நிராகாரம்
நிராகாரம் என்றால் வடிவம் இல்லாதது என்று பொருள். அருவமான உயிரில் அருவமாக இறைவன் கலந்திருப்பதைப் பற்றிக் கூறும் இந்தப் பகுதி.


#1550 to #1552

#1550. கலந்து நிற்பான்

இமயங்களாய் நின்ற தேவர்கள் ஆறு
சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி
அமைவு அறிந்தோம் என்பர் ஆதிப் பிரானும்
கமை அறிந்தாருள் கலந்து நின்றானே.


உயர்ந்த தெய்வத் தன்மை பெற்றவர்கள் தத்தம் இயல்புக்கு ஏற்ப ஆறு சமயங்களைப் உருவாக்கினர். அவர்கள் சாத்திரங்களை நன்கு கற்றுத் தேர்ந்துச் சமயங்கள் அமைவதை அறிந்து கொண்டோம் என்பார்கள். ஆனால் சிவன் பொறுமையுடனும் அடக்கத்துடனும் உள்ள ஞானியர் உள்ளத்தில் மட்டுமே கலந்து நிற்பான்.

#1551. நினைக்காதவர் ஏங்கி அழுவர்

பாங்கமர் கொன்றைப் படர்சடை யானடி
தாங்கு மனிதர் தரணியில் நேரொப்பர்
நீங்கிய வண்ண நினைவு செய்யாதவர்
ஏங்கி யுலகி லிருந்தழு வாரே.


அன்பர்களின் அறிவு மண்டலம் என்னும் பொன்னொளி மண்டலத்தில் பொருந்தியுள்ள, கொன்றை மலர் சூடிய சிவபெருமானைத் தன்னிலும் வேறாகக் கருதாமல் நினைப்பவர் அவனுக்கு நிகராக ஆகி விடுவர். சிவனைத் தன்னிலும் வேறாகக் கருதி அவனை நினையாமல் இருப்பவர்கள் உலகில் உழன்று துன்புற்று ஏங்கி அழுவர்.

#1552. பெருந்தன்மை நல்குவான்

இருந்தழு வாரும் இயல்பு கெட்டாரும்
அருந்தவ மேற்கொண் டங்கு அண்ணலை எண்ணில்
வருந்தா வகை செய்து வானவர் கோனும்
பெருந்தன்மை நல்கும் பிறப்பிலி தானே.

துன்புற்று அழுபவர்களும், நல்ல இயல்புகளை இழந்து விட்டவர்களும், பெருமையுடைய சிவனை தியானித்து அருந்தவ வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும். அப்போது சிவன் அவர்கள் துயரங்களைப் போக்கி வருத்தத்தை நீக்குவான். பிறப்பிலியாகிய சிவன் அவர்களுக்குப் பெரிய தகுதிகளையும் நல்குவான்.
 
#1553 to #1556

#1553. கார்முகில் போல் உதவுவார்.

தூரறி வாளர் துணைவர் நினைப்பிலர்
பாரறி வாளர் படுபயன் தானுண்பர்
காரறி வாளர் கலந்து பிறப்பார்கள்
நீரறி வார்நெடு மாமுகி லாமே.


‘இறைவன் எங்கோ தொலைவில் இருக்கின்றான்’ என்று எண்ணி அவனை வணங்குபவர், அவன் தன்னுடனேயே துணையாக இருந்து தனக்கு வேண்டியவற்றைத் தருவதை அறிந்து கொள்வதில்லை. உலகில் உள்ள பொருட்களையும், அவை தரும் இன்பத்தையும் விரும்புபவர்கள், அதன் வினை பயனையும் அடைந்து வருந்த நேரிடும். அறியாமையில் அழுந்திய இந்த இரு சாராரும் பிறவிக் கடலில் விழுவர். சிவன் எப்போதும் தன்னை விட்டு அகலாமல் இருப்பவன் என்பதை உணர்ந்து கொண்டவர்கள் கைம்மாறு கருதாத கார்முகில் போல உலகத்துக்கு நம்மை புரிபவர்கள்.

#1554. சேவடி நினைகிலர் !

அறிவுடன் கூடி யழைத்ததோர் தோணி
பறியுடன் பாரம் பழம்பதி சிந்தும்
குறியது கண்டும் கொடு வினையாளர்
செறிய நினைக்கிலர் சேவடி தானே.


பிரணவம் என்னும் தோணி, சீவன் அறிவுடன் கூடிச் சிவனை அறிந்து அவனை அனுபவிப்பதற்கு உதவுகின்றது. அந்தச் சிவம் என்னும் பேரொளியாகிய தூண் வினைப் பயன்களைச் சேமிக்கும் காரண உடலை அழிக்க வல்லது என்ற உண்மையை அறிந்திருந்தும் கொடு வினையாளர்கள் சிவனின் சேவடியை நினைப்பதில்லையே!

#1555. தொழுபவருக்குச் சிவப் பேறு!

மன்னும் ஒருவன் மருவு மனோமயன்
என்னின் மனித ரிகழ்வரிவ் வேழைகள்
துன்னி மனமே தொழுமின் துணையிலி
தன்னையும் அங்கே தலைப் பட லாமே.


மன்னும் சிவன் மனத்தோடு பொருந்திய பரம் பொருள் என்ற போதிலும், அதனை உணராமல் அவனை இகழ்பவர்கள் அறிவில்லாத ஏழைகள் ஆவர். உண்மையான செல்வமாகிய சிவனை இகழாமல், அவன் சிறப்பினை உணர்ந்து கொண்டு, அவனை உள்ளத்தில் இறுத்தி வணங்குங்கள் . அப்போது ஒப்பாரும் மிக்காரும் இல்லாத சிவத்தினை உணர்ந்து சிவப் பேற்றினை அடைய முடியும்.

#1556. நீங்காச் சமயம் நின்று ஒழிவர் !

ஓங்காரத்து உள்ளொளி உள்ளே உதயம் உற்று,
ஆங்காரம் அற்ற அனுபவம் கை கூடார்,
சாம்காலம் உன்னார், பிறவாமை சார்வுறார்,
நீங்காச் சமயத்துள் நின்று ஒழிந் தார்களே.


மயக்கம் தரும் சமயங்களைச் சார்ந்தவர்கள் பிரணவத்தின் உள்ளே ஒளிரும் சிவனைக் காணார்; தன் தனித் தன்மை கெட்டு அவனுடன் ஒன்றாகச் சேரார் ; உடல் அழியும் என்ற உண்மையை அறியார்; பிறவிப் பிணியை ஒருநாளும் ஒழியார்.
 
20. உட்சமயம்

20. உட்சமயம்

சீவன் சிவசோதியை அறியச் செய்வது .
சன்மார்க்கம் என்னும் ஒளிநெறி இதுவே.

#1557 to #1560

#1557. ஆறு சமயங்களும் அவனை நாடும்

இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம்
அமைய வகுத்தவன் ஆதி புராணன்,
சமையங்கள் ஆறும் தன் தாளினை நாட
அமைய அங்கு உழல்கின்ற ஆதிப் பிரானே.

உடல், கருவிகள், கரணங்கள் முதலியவற்றைத் தந்து விண்ணவர்களையும் , மண்ணவர்களையும் உலகில் பொருந்தி அனுபவம் பெறுமாறு செய்தவன் சிவன். அவன் மிகவும் பழமையானவன். ஆறு சமயங்களும் அவன் திருவடியை நாடுகின்றன .அவன் அவற்றில் கலந்து விளங்குவதால் அவனே அனைத்துக்கும் முதல்வன் ஆவான்.

#1558. குன்று குரைக்கும் நாய்

ஒன்று அது பேரூர் வழி ஆறு அதற்குள்,
என்றது போல, இரு சமயமும்
நன்று இது, தீது இது என்று உரையாளர்கள்
குன்று குரைத்து எழு நாயை ஒத்தாரே


ஒரே ஊருக்குச் செல்வதற்கு ஆறு வேறு வேறு வழிகள் உள்ளன. அதைப் போலவே ஆறு சமயங்களும் ஒரே பொருளை அடைவிக்கின்றன. அவற்றில் இது நன்று இது தீது என்று உரைக்கும் அறிவிலிகள், குன்றை நோக்கிக் குரைக்கும் நாயைப் போன்றவர்கள்.

#1559. வையத் தலைவனை அடைந்து உய்வீர்

சைவப் பெருமைத் தனிநாயகன் தன்னை,
உய்ய உயிர்க்கின்ற ஒண் சுடர் நந்தியை
மெய்ய பெருமையர்க்கு அன்பனை, இன்பம் செய்

வையத் தலைவனை வந்து அடைந்து உய்மினே.

உய்ய விரும்புபவர்கள் செய்ய வேண்டியது என்ன ?
பெருமை வாய்ந்த சைவ சமயத்தின் ஒப்பற்ற தனித் தலைவனான சிவனை வந்து அடைய வேண்டும். உயிர்களை உய்விக்கும் ஒண் சுடர் சோதியான சிவனை வந்து .அடைய வேண்டும். மெய்யறிவு பெற்ற அடியார்களுக்கு அன்பன் ஆன சிவனை, இந்த வையத்தின் ஒரே தலைவனை வந்து வணங்க வேண்டும்.

#1560. பழ வழி நாடுவீர்

சிவன் அவன் வைத்தது ஓர் தெய்வ நெறியில்
பவன் அவன் வைத்த பழவழி நாடி,
“இவன் அவன் ” – என்பது அறியவல்லார்கட்கு
அவன் அவன் அங்கு உளதாம் கடன் ஆமே.

உயிர்கள் உய்யும் பொருட்டுச் சிவபிரான் ஒரு தெய்வநெறியை ஏற்படுத்தியுள்ளான். அந்தப் பழமையான வழியில் சென்று இந்த சீவனே அந்தச் சிவன் என்னும் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். அப்போது சிவன் அந்த வழியில் செல்லும் சீவனுக்கு அங்கு தவறாமல் தோன்றுவான்
 
#1561 to #1564

#1561. ஆதார சக்தி தாங்குவாள்

ஆமாறு உரைக்கும் அறு சமயாதிக்குப்
போமாறு தான் இல்லை புண்ணியம் அல்லது அங்கு
ஆம்ஆம் வழி ஆக்கும் அவ்வேறு உயிர்கட்குப்
போம் ஆறு; அவ் ஆதாரப் பூங்கொடியா ளே.

சீவர்கள் உய்யும் வழிகளை உரைக்கும் ஆறு சமயங்களின் உச்சியைச் சீவர்கள் தாமாக ஏறி அடைந்து விட முடியாது. அவர்கள் முன்பு நல்வினைப் பயன்களே அவர்களுக்கு அந்த வழியை அமைத்துத் தரும். அப்படி மேலே செல்லும் சீவர்களைத் தாங்குவது ஆதார சக்தியின் திருவருள் என்று அறிவீர்.

#1562. தனிச் சுடர் தரும் நெறி

அரநெறி யாவ தறித்தேனு நானுஞ்
சிலநெறி தேடித் திருந்தவந் நாளும்
உரநெறி யுள்ளக் கடல்கடந் தேறும்
தரநெறி நின்ற தனிச்சுடர் தானே.


சிவனை அடையும் வழிகளை அறிந்து கொண்டு நான் வேறு சில நெறிகளைத் தேடித் திரிந்தேன். அந்த நாட்களில் உண்மையான நல்ல நெறியில், எண்ணங்கள் என்னும் கடலை நீந்திக் கடந்து கரை ஏற எனக்கு உதவி செய்தது நிகரற்ற சிவச் சுடரே ஆகும். சீவனில் உறையும் சிவசோதியை அறிந்து கொள்வதே அனைத்துக்கும் மேலான சிவநெறியாகும்.

#1563. பரமுக்தி தருவது சிவநெறி

தேர்ந்த அரனை அடைந்த சிவநெறி
பேர்ந்தவர் உன்னிப் பெயர்ந்த பெருவழி
ஆர்ந்தவர் அண்டத்துப் புக்க அருள் நெறி
போந்து புனைந்து புணர்நெறி ஆமே.


ஆராய்ச்சிகளும், அனுபவங்களும் உணர்த்கின்ற உண்மை சிவனே பரம்பொருள் என்பது ஆகும். அவனை அடைவிக்கின்ற சிவநெறியில் பிற சமயங்களைச் சார்ந்தவர்களும் மீண்டும் வந்து ஒன்றிவிடுவர். சீவர்கள் தங்கள் தங்கள் தகுதிக்கு ஏற்ப வேறு வேறு உலகங்களை அடைவதற்கும் இந்த நெறியே உதவுகின்றது. அந்த முத்தி நிலைகளில் நின்ற பின்பு மீண்டும் வந்து அவர்கள் பொருந்துவது இந்தச் சிவநெறியில் தான்.

#1564. சுடரொளி தோன்றும்

ஈரு மனதை இரண்டற வீசுமின்
ஊருஞ் சகாரத்தை யோதுமி னோதியே
வாரும் அறநெறி மன்னியே மன்னியத்
தூருஞ் சுடரொளி தோன்றலு மாமே.

புறவுலகை நாடி செல்கின்ற மனதைத் திசை திருப்பி அகப் பொருளாகிய
சிவன் மீது அதைப் பொருத்துங்கள். அதற்குச் ‘சி’காரத்தால் உணர்த்தப்படுவதும், மூலாதாரத்தில் இருந்து மேல் நோக்கிச் செல்வதும் ஆகிய திரு ஐந்தெழுத்து மந்திரத்தை கூறுங்கள். இந்த சாதனையைச் சிவநெறியில் பொருந்தி செய்து வந்தால், நெற்றிக்கு முன்பாக ஒரு சிவந்த ஒளி தோன்றும்.
 
Getting AWAY from unwanted things/places/ people saves time which can be utilized

to do things we want to do, where we want to do, and where we FEEL wanted! :)
 
Last edited:
#1565 to #1568

#1565. இதுவே அரநெறி ஆகும்

மினற்குறி யாளனை வேதியர் வேதத்
தனக் குறியாளனை ஆதிப் பிரான் தன்னை
நினைக்குறி யாளனை ஞானக் கொழுந்தின்
நயக் குறி காணி லரநெறி யாமே.


யோகப் பயிற்சி செயப்வனுக்கு மின்னல் ஒளி போன்று வெளிப்படுவான் சிவன். அந்தணர் வளர்க்கும் வேள்வித் தீயில் வெளிப்படுவான் சிவன். எந்த உருவில் அவனை நினைத்தாலும் அந்த உருவில் வெளிப்படுவான் சிவன். ஞானக் கொழுந்தாகிய அவனை ஒளி மயமாகக் காண்பதுவே அரநெறி என்னும் சிவநெறியாகும்.

#1566. அரன் நெறி தரும் இன்பம்

ஆய்ந்துண ரார் களின் ஆன்மாச் சதுர்பல
வாய்ந்துண ராவகை நின்ற அரனெறி
பாய்ந்துணர் வாரரன் சேவடி கைதொழுது

ஏய்ந்துணர் செய்வதோ ரின்பமு மாமே.

ஆராய்ந்து ஒளி நெறியே சிறந்தது என்று உணராதவர்கள் பல நெறிகளிலும் பொருந்தி நின்றாலும் அரன் நெறியில் புக முடியாது. ஒளி நெறியில் சிறப்பை உணர்ந்து கொண்டு, அரன் நெறியில் புகுந்து, அவன் மேன்மையை உணர்ந்து, அவன் சேவடிகளைக் கைதொழுபவர் பெறுவது ஒப்பில்லாத பேரின்பம் ஆகும்.

#1567. ஒளி நெறியே சிவநெறி

சைவ சமயத் தனி நாய கனந்தி
உய்ய வகுத்த குருநெறி யொன்றுண்டு
தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய
வையத் துளார்க்கு வகுத்து வைத்தானே.


சைவச் சமயத்தில் ஒப்பற்ற தனித் தலைவன் சிவபெருமான். அவன் உயிர்கள் உய்வதற்கு ஒரு ஒளி நெறியை அமைத்துத் தந்துள்ளான். அதுவே தெய்வத் தன்மை வாய்ந்த சிவநெறி எனப்படும் சன்மார்க்கம். வையத்தோர் உய்வடைடைய உலக மக்களுக்கு சிவன் தந்த நன்னெறியாகும்.

#1568. வீடுபேறு அடையலாம்

இத்தவம் அத்தவம் என்றிரு பேரிடும்
பித்தரைக் காணின் நகுமெங்கள் பேர்நந்தி
யெத்தவ மாகிலென் எங்கு பிறக்கிலென்
ஒதுணர் வார்க் கொல்லை யூர்புக லாமே.


இந்தத் தவம் சிறந்தது! அந்தத் தவம் சிறந்தது என்று பேதப்படுத்திப் பேசும் அறிவற்றவர்களைக் கண்டால் சிவ பெருமான் சிரிப்பான்! எந்தத் தவத்தை மேற்கொண்டால் என்ன? எங்கே சென்று பிறந்தால் என்ன? இறைவனோடு வேறுபாடு இன்றி ஒன்றி நின்று அவனை உணர்பவர்களே வீடு பேற்றினை அடைய முடியும்.
 
#1569 to #1572

#1569. தெய்வத் தன்மை பெறலாம்

ஆமே பிரான்முகம் ஐந்தொடு ஆருயிர்
ஆமே பிரானுக் கதோமுக மாறுள
தாமே பிரானுக்குந் தன்சிர மாலைக்கும்
நாமே பிரானுக்கு நரரியல் பாமே.


உயிர்களுடன் பொருந்தி விளங்கும் சிவபெருமானுக்கு ஐந்து முகங்கள் உண்டு. தத் புருடம், அகோரம், சத்தியோசாதம், வாமதேவம், ஈசானம் என்ற ஐந்து முகங்களுடன் என்னும் ஐந்து முகங்களுடன் அதோமுகம் என்னும் ஆறாவது முகமும் உண்டு. சிவனை உணர்ந்து கொண்டவர்களுக்கு அதோமுகம் மேல் நோக்கியபடி விளங்கும். ஆறு முகங்களும் சதாசிவன் போல ஆகிவிடும். சிவத்தை அறியாதவர்களுக்கு அதோமுகம் கீழ் நோக்கியபடி இருக்கும்.

#1570. சக்தியின் செயல்கள்

ஆதிப் பிரானுல கேழு மளந்தவன்
ஓதக் கடலு முயிர்களு மாய்நிற்கும்
பேதி பிலாமையி னின்ற பராசக்தி
ஆதிக்கண் தெய்வமு மந்தமு மாமே.


ஆதிப் பிரானாகிய சிவன் ஏழு உலகங்களிலும் கலந்து விளங்குகின்றான். அலை கடலாகவும், கடல் சூழ்ந்த உலகமாகவும், உலகில் உள்ள உயிர்களாகவும் இருக்கின்றாள் சக்தி. சிவனிடமிருந்தி பிரியாமல் இருக்கும் சக்தி, ஆதியில் உலக உற்பத்திக்கு உதவி புரிகின்றாள். அவளே அந்தத்தில் உலகினைத் தன்னுள் ஒடுக்கிக் கொள்கின்றாள்.

#1571. இம்மையில் மறுமையைக் காணலாம்

ஆய்ந்தறி வார்க ளமரர் வித்தி யாதரர்
ஆய்ந்தறி யாவண்ணம் நின்ற அரனெறி
ஆய்ந்தறிந் தேனவன் சேவடி கைதொழ
ஆய்ந்தறிந் தேனிம்மை அம்மைகண் டேனே.


அமரர், வித்தியாதரர் போன்றவர்கள் ஆராய்ந்தால் உண்மையை அறிந்து கொள்ள முடியும். ஆயினும் அவர்கள் இன்பம் வேண்டி இறைவனை வழிபடுவதால் உண்மையை அறிந்து கொள்வதில்லை. ஆராய்ச்சியால் அறிய முடியாத அரன் நெறியை அவன் சேவடிகளைக் கை தொழுது நான் அறிந்து கொண்டேன். அதனால் நான் இம்மையிலேயே மறுமை இன்பத்தை அடைந்தேன்

#1572. சிவனை அறிவதே மேலான சமயம்

அறியவொண் ணாதவ் வுடம்பின் பயனை
அறியவொண் ணாத அறவகை யாக்கி
அறியவொண் ணாத வறு வகைக் கோசத்து
அறியவொண் ணாததோ ரண்டம் பதிந்ததே.

மனித உடலைப் பெற்றதன் பயன் இறைவனை அறிந்து கொள்வதற்கே என்ற இந்த உண்மையை மக்கள் அறிந்து கொள்ளவில்லை! அறிய ஒண்ணாத சிவம் சீவனின் கூடு போன்ற அண்டமாக உள்ளது. அறிய ஒண்ணாத வானத்தைச் சிவம் உடலின் ஆறு ஆதாரங்களில் இயங்க வைத்தது. சிவம் அறிய ஒண்ணாதவற்றை உடலின் ஆறு கோசங்களில் அனுபவிக்கச் செய்தது.

ஆறு கோசங்கள்:

1. பூத ஆத்மா, 2. அந்தராத்மா, 3. தத்துவாத்மா,
4. சிவாத்மா, 5. மந்திராத்மா, 6. பரமாத்மா.


இத்துடன் திருமந்திரத்தின் ஐந்தாம் தந்திரம் முற்றுப் பெற்றது.
 
ஆறாம் தந்திரம்

1. ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே

ஐங்கரன், ஆனைமுகன், இளம் பிறை போன்ற தந்தங்களை உடையவன்;
சிவன் மகன், ஞான வடிவானவன், அவன் திருவடிகளை வணங்குகின்றேன்

2. ஒன்று அவன்தானே; இரண்டு அவன் இன்னருள்;
நின்றனன் மூன்றினுள்; நான்கு உணர்ந்தான்; ஐந்து
வென்றனன், ஆறு விரிந்தனன் ஏழு உம்பர்ச்
சென்றனன்; தான் இருந்தான் ; உணர்ந்து எட்டே.

ஒரே மெய்ப் பொருளானவன்,
சிவ சக்தியராக இரண்டானவன்,
பிரமன், திருமால் ருத்திரன்என்ற மும் மூர்த்திகளுமானவன்,
நான்கு புருஷார்த்தங்களை (அறம் பொருள் இன்பம் வீடு) உணர்ந்தவன்,
ஐம் பொறிகளை ( மெய், கண், மூக்கு, வாய், செவி ) வென்றவன்,
ஆறு சக்கரங்களில் (மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம்,
அநாஹாதம், விசுத்தி, ஆக்ஞைகளில் ) விரிந்தவன்,
ஏழாவது சக்கரமான ஸஹஸ்ர தளத்தில் இருப்பவன்,
எட்டுப் பொருட்களில் ( நிலம், ஜலம், தீ, வளி, வெளி,
கதிரவன், நிலவு, ஆன்மா ) கலந்து விளங்குபவன்.

3. கூற்றுதைத்தான் போற்றி!

போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை
நால் திசைக்கும் நல்ல மாதுக்கும் நாதனை
மேல்திசைக்குள் தென் திசைக்குஒரு வேந்தனாம்
கூற்று உதைத்தானை யான் கூறுகின்றேனே.

தூயவனாக இனிய உயிரில் பொருந்தி உள்ளான்,
நான்கு திசைகளுக்கும், சக்திக்கும் அவனே நாயகன்,
தென்திசை மன்னனாகிய யமனை உதைத்தவன்,
அந்த இறைவனை நான் புகழ்ந்து போற்றுகின்றேன்.
 
1. சிவகுரு தரிசனம்

உள்ளத்தில் உள்ள சிவனையே தன் குருவாகக் காணுதல்


#1573. சித்தம் இறையே சிவகுரு

பத்திப் பணிந்துப் பரவும் அடி நல்கிச்
சுத்த உரையால் துரிசு அறச் சோதித்துச்
சத்தும் அசத்தும் , சதசத்தும் காட்டலால்
சித்தம் இறையே சிவகுரு ஆமே.


பக்தியை உண்டாக்குவான் சிவன்; தன் சேவடிகளை வணங்கச் செய்வான் சிவன்; பிரணவ உபதேசத்தால் ஆன்மாவின் குற்றங்களை நீக்குவான் சிவன்; சத்து (சிவம் அல்லது பதி ) ; அசத்து (உலகம் அல்லது பாசம்); சதசத்து (ஆன்மா அல்லது பசு ) என்பவற்றின் உண்மையான இயல்புகளை உயிருக்கு உணர்த்துபவன் சிவன். ஆதலால் சிவனே சிறந்த குரு ஆவான்.

#1574. ஆசு அற்ற சற்குரு

பாசத்தைக் கூட்டியே கட்டிப் பறித்திட்டு
நேசத்த காயம் விடுவித்து நேர் நேரே
கூசு அற்ற முத்தியில் கூட்டலால் , நாட்டத்தது
ஆசு அற்ற சற்குரு அம்பலம் ஆமே.


சீவன் ஆணவத்தில் அமிழ்ந்து, “உடலே நான்!” என்று மயங்கிக் கிடக்கின்றது. அதன் மாய மலத்தைக் கழித்தும், அதன் ஆணவத்தை நீக்கியும், அது உடல் மீது கொண்ட நேசத்தைப் போக்குவதும் சிவகுரு ஆவான். முத்தியில் நேருக்கு நேராகச் சேர்த்து வைக்கும் சிவனே உபாசகனின் ஒளி மண்டலத்தில் உள்ள குற்றமற்ற குரு ஆவான்.

#1575. நாதன் அருள் நல்குபவை இவை

சித்திக லெட்டொடும் திண்சிவ மாக்கிய
சுத்தியு மெண்முத்தித் தூய்மையும் யோகத்துச்
சத்தியு மந்திர சாதக போதமும்
பத்தியு நாத னருளில் பயிலுமே.

நாதன் அருள் நமக்கு நல்குபவை இவை : அணிமா முதலிய சித்திகள் எட்டும் கைக் கூடும் . சாதகன் சிவனைப் போன்ற பக்குவ நிலை அடைவான். வாமை முதலிய எட்டு சக்திகளுக்கும் கட்டுப்படாத தூய்மை அடைவான். யோகத்தால் நிரம்ப ஆற்றல் ஏற்படும். மந்திர தியானத்தால் ஞானம் விளையும். இறைவனிடத்தில் மிகுந்த அன்பு தோன்றும்.

எட்டு சித்திகள்:

அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம்,
வசித்துவம்,

எட்டு சக்திகள்:
வாமை, சேட்டை, ரௌத்திரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரதமனி, சர்வபூத தமனி.

#1576. சுத்த சிவமே நற்குரு

எல்லா வுலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய்
நல்லா ருள்ளத்து மிக்கருள் நல்கலால்
எலாரு முய்யக்கொண் டிங்கே அளித்தலாற்
சொல்லார்ந்த நற்குருச் சுத்த சிவமே.


எல்லா உலகங்களுக்கும் அப்பாற் பட்டவன் சிவன்; இந்த உலகிலும் நிறைந்து இருப்பவன் சிவன்; நல்லோர் உள்ளத்தில் உறைந்து அருள்பவன் சிவன்; எல்லோரும் உய்யுமாறு அருள்பவன் சிவன்; இவ்வுலகிலேயே எல்லோரும் உய்யுமாறு அருள்பவன் சிவன் .ஆதலால் பிரணவ வடிவு கொண்ட சிவனே ஒரு நல்ல குரு ஆவான்.

#1577. முத்தி நல்குவான்

தேவனும் சுத்த குருவும் உபாயத்துள்
யாவையும் மூன்றாயுளக் கண்டு, உரையாலே
மூவாப் பசு பாசம் மாற்றியே முத்திப் பால்
ஆவையும் நல்கும் குருபரன் அன்புற்றே.

தேவனாகவும், தூய குருவாகவும் விளங்குபவன் சிவன். நூல்களில் பதி , பசு, பாசம் என்ற மூன்றாகக் கூறப்படுவதைத் தன் உபதேசத்தால் மாற்றி விடுவான். அழிவற்ற சீவனைத் தளைப் படுத்தும் பாசத்தை நீக்கிவிடுவான். சீவனுக்கு அன்புடன் முக்தியையும் அளிப்பான்.
 
#1578 to #1581

#1578. குருவாய் அருள்பவன் சிவன்

சுத்த சிவன் குருவாய் வந்து, தூய்மை செய்து
அத்தனை நல்கு அருள் காணா அதி மூடர்
பொய்த்தகு கண்ணால் , நமர் என்பர், புண்ணியர்
அத்தன் இவன் என்று அடி பணிவாரே.


சிவனே சீவனிடத்தில் அருள் கொண்டு குருவாக உருவெடுத்து வருவான். சீவனின் மலங்களை அகற்றுவான். அவன் அருளை அறியாத அறிவற்றவர்களும் , உலக இன்பத்தில் ஈடுபாடு உடையவர்களும், பாசம் என்னும் தளைப் பட்டவர்களும் குருவைத் தமக்குச் சமமாகவே எண்ணுவர். ஞானியரோவெனில் குருவைச் சிவனாகவே கருதுவர்.

#1579. பொய்மை ஒழியும்

உண்மையிற் பொய்மை ஒழித்தலும் உண்மைப்பார்
திண்மையும் ஒண்மைச் சிவமாய அவ்வரன்
வண்மையும், எட்டெட்டுச் சித்தி மயக்கமும்
அண்ணல் அருள் அன்றி யார் அறிவாரே?


ஞானத்தால் பொய்மையை ஒழிக்க வேண்டும். உண்மையைக் கண்டறியும் திண்மை பெற வேண்டும். சிவனின் அருளைப் பெற வேண்டும். எட்டு சித்திகள் தரும் மயக்கத்தை வெல்ல வேண்டும். அண்ணலின் அருள் அன்றி இவை அனைத்தும் சாத்தியமாகுமா?

#1580. நன் முத்தி நண்ணும்

சிவனே சிவஞானி யாதலால் சுத்த
சிவனே எனவடி சேரவல் லார்க்கு
நவமான தத்துவ நன்முக்தி நண்ணும்
பவமான தின்றிப் பரலோக மாமே.


சிவனே உருவெடுத்து உபதேசம் செய்யச் சிவஞானி ஆக வருவான். தனக்கு உபதேசம் செய்யும் குருவைச் சிவனாகக் கருதுபவருக்கு சிவபெருமானின் நட்பும் நல்ல முத்தியும் கிடைக்கும். அவர் பிறவிப் பிணையை வென்று சிவ லோகப் பதவியை அடைவர்.

#1581. குருவே சிவன்

குருவே சிவமெனக் கூறினான் நந்தி
குருவே சிவமென் பது குறித் தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே உரையுணா வற்றதோர் கோவே.


என் ஒளி மண்டலத்தில் உள்ள சிவன், “குருவே சிவன் ஆவான்!” என்று கூறினான். குருவே ஒளி மண்டலத்தில் உயிரின் தலைவனாகவும், ஒப்பற்ற மன்னனாகவும் விளங்குகின்றான். இத்தகைய குரு மண்டலத்தில் சிவன் உள் நின்று ஒளிர்வதை உணராதவர்கள் பேதைகள்.
 
#1582 to #1585

#1582. அத்தன் சித்தத்தில் அமர்வான்

சித்தம் யாவையும் சிந்தித்திருந் திடும்
அத்தம் உணர்த்துவ தாகும் அருளாலே ;
சித்தம் யாவையும் திண்சிவம் ஆனக்கால்
அத்தனும் அவ் விடத்தே அமர்ந்தானே.


சீவனின் சித்தம் தான் அறிந்தவை எல்லாவற்றையும் குறித்து எப்போதும் சிந்தித்த வண்ணம் இருக்கும். அத்தன் அருள் பெற்றவர்களால் மட்டுமே அவனைக் குறித்து மட்டும் சிந்திக்க முடியும். இங்ஙனம் சித்தம் முழுவதையும் வேறு நினைவுகள் இன்றிச் சிவமயமாக ஆக்கிவிட்டால் சிவனும் அங்கு வந்து அமர்ந்து கொள்வான்.

#1583. தனிச் சுடர் ஆவான்

தான் நந்தி நீர்மையுட் சந்திக்கச் சீர்வைத்த
கோன் நந்தி , எந்தை குறிப்பு அறிவார் இல்லை
‘வான் நந்தி’ என்று மகிழும் ஒருவற்குத்
தான் அந்தி அங்கித் தனிச் சுடர் ஆகுமே.


தந்தையைப் போன்ற சிவபெருமான் தானே வந்து குருமண்டலத்தில் பொருந்தும் சீர்மையை உணர்பவர் இலர். சிவன் வானத்தில் குருமண்டலத்தில் திகழ்பவன் என்று எண்ணுவார்கள். அக்கினி மண்டலத்தில் விளங்குகின்ற மன்னனே ஒப்பில்லாத சிவசூரியன் ஆவான்.

#1584. வேதாந்த போதம்

திரு ஆய சித்தியும் முத்தியும் சீர்மை
மருளாது அருளும் மயக்கறும் வாய்மைப்
பொருள் ஆய வேதாந்த போதமும் நாதன்
உருவாய் அருளாவிடில் ஓர் ஒண்ணாதே.


குருவருளால் கிடபிப்பவை எவை?
செல்வமாகிய சித்தியும், அதன் பயனாகிய முக்தியும், மயக்கம் நீங்கிய தெளிவும், ஐயங்கள் அகன்று நன்கு உணர்ந்த மெய்ப்பொருளும், வேதங்களின் ஞானமும் இவை அனைத்துமே குரு அருளும் பொழுது மட்டுமே கிடைப்பவை. அவர் அருளாவிட்டால் யாருக்குமே கிடைக்காதவை.

#1585. ஞானம் என்னும் பயிர்

பத்தியும் ஞான வைராக்கிய மும்பர
சித்திக்கு வித்தாம் சிவோகமே சேர்தலால்
முத்தியின் ஞானம் முளைத்தலால் அம்முளை
சத்தி அருள் தரில் தான் எளிதாமே.

பர சித்தி அடைய உதவும் வித்துக்கள் சிவனிடத்தில் கொண்ட பக்தியும், ஞானம் அடைய வேண்டும் என்னும் வைராக்கியமும் ஆகும். சிவோகம் அல்லது ‘நானே சிவன்’ என்ற எண்ணம் உண்டாகி அது முதிர்ச்சி அடைய வேண்டும். சக்தியின் அருளால் ஞானம் என்னும் பயிர் எளிதாக வளர்ந்து முத்தியை அளிக்கும்.
 
#1586 to #1589

#1586. சிவனை அடைய உதவும் மனம்

பின்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை
முன்னெய்த வைத்த முதல்வனை எம்மிறை
தன்னெய்தும் காலத்துத் தானே வெளிப்படும்
மன்னெய்த மைத்த மனமது தானே.


வீடு பேறு அடைவதற்காகவே இறைவன் எனக்கு இந்த உலகில் ஒரு பிறவியை அளித்துள்ளான். முன்னமே எனக்கு இவ்வாறு உதவி செய்த இறைவனை நான் ஞானத்தின் துணை கொண்டு நெருங்கும் பொழுது அவனே தன்னை வெளிப்படுத்துவான். இங்கனம் சிவனைச் சென்று அடையப் பேருதவி செய்வது என் மனம்.

#1587. சிவானந்தம் நல்கும்

சிவமான ஞானம் தெளியவொண் சித்தி
சிவமான ஞானம் தெளியவொண் முத்தி
சிவமான ஞானம் சிவபரத் தேயேகச்
சிவமான ஞானம் சிவானந்த நல்குமே.


சிவஞானம் தெளிவடையும் போது நல்ல சித்திகள் உண்டாகும். சிவஞானம் தெளியும் போது உயரிய முத்தி உண்டாகும். சிவஞானம் பெருகும் போது சிவம் ஆன்மாவில் நிலை பெறும். சிவஞானத்தால் உயர்ந்த சிவானந்தம் உண்டாகும்.

#1588. பிறவி ஒழிந்தேன் நானே

அறிந்துணர்ந் தேனிவ் வகலிட முற்றும்
செறிந்துணர்ந் தோதித் திருவருள் பெற்றேன்
மறந்தொழிந் தேன்மதி மாண்டவர் வாழ்க்கை
பிறிந்தொழிந் தேனிப் பிறவியை நானே.


நான் கற்ற கல்வியினாலும், பெற்ற அனுபவங்களினாலும் இந்த விரிந்து பரந்த உலகத்தை அறிந்து கொண்டேன். சிவனுடன் பொருந்தி, அவன் பெயரை ஓதி அவன் திருவருளைப் பெற்று விட்டேன். அறிவிலிகளின் கூட்டத்தை விட்டு விலகியே நின்றேன். இவற்றின் காரணமாக நான் பிறவி என்பதை ஒழித்து விட்டேன்.

# 1589. ஈசனைக் கண்டு கொண்டேன்!

தரிக்கின்ற பல்லு யிர்க் கெல்லாம் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்;
பிரிக்கின்ற இந்தப் பிணக்கு அறுத்து, எல்லாம்
கருக் கொண்ட ஈசனைக் கண்டு கொண்டேனே.


வினைப் பயனாகப் பெற்ற உடலைத் தரிக்கும் அனைத்து சீவராசிகளுக்கும் தலைவன் சிவன். சீவன் சிவனிடம் பொருந்தி இருப்பதை பலரும் அறிவதில்லை .சீவர்கள் அறியாத வண்ணம் அவற்றின் பிணக்குகளை எல்லாம் அறுத்து விட்டு அவற்றைத் தன் கருவில் வைத்துக் காக்கும் சிவனை நான் கண்டு கொண்டேன்.
 
2. திருவடிப் பேறு

2. திருவடிப் பேறு
திருவடி = இறைவன் அருள்
அடி = குண்டலினி சக்தி
குண்டலினி சக்தி சிரசை நோக்கிச் செல்வதே திருவருள்.
குண்டலினி சக்தி தலையில் பொருந்தி இருப்பது திருவடிப் பேறு


#1590 to #1594

#1590. குருபதம் உள்ளத்து வந்தது

இசைந்து எழும் அன்பில் எழுந்த படியே
பசைந்தெழும் ஈசரைப் பாசத்துள் ஏகச்
சிவந்த குருவந்து சென்னியில் வைக்க
உவந்த குருபதம் உள்ளத்து வந்ததே.


மனதில் இசைந்து எழும் அன்பின் வழியே எழும்பி மேலே எழ வேண்டும். அன்பு கொண்ட ஈசனை நம் அன்பால் பற்ற வேண்டும். சிவந்த ஒளி சிரசை அடைந்ததும் நான் விரும்பிய இறைவனின் பதம் என் உள்ளத்தில் தோன்றியது.
மூலாதாரத்திலும், சுவாதிட்டானத்திலும் உள்ள சக்கரங்கள் சிவந்த ஒளி கொண்டவை. இவை பிடரி வழியாகச் சென்று பிரமரந்திரத்தை அடையும் போது குருமண்டலம் விளங்கும். ஆனந்தம் பெருகும்

#1591. அந்தம் இன்றி வீடு ஆள்க!

தாள்தந்தபோதே தனைத் தந்த எம் இறை
வாள்தந்த ஞான வலியையும் தந்திட்டு,
வீடு அந்தம் இன்றியே ஆள்க என விட்டு அருள்
பாடு இன்முடி வைத்துப் பார்வந்து தந்ததே.


தன் திருவடிகளைச் சிவன் எனக்கு அளிக்கும் போதே தன்னையும் எனக்குத் தந்து விட்டான். வலிமை மிக்கக் கூரிய ஞான வாளையும் எனக்குத் தந்தான்.”அந்தம் இல்லாக் காலத்துக்கு நீ வீட்டுலகை ஆளுவாய்!” என்று எனக்கு அருள் புரிந்தான். இவை அனைத்தையும் சிவன் இந்த உலகுக்கு வந்து எனக்குத் தந்தான்.

#1592. சிவ சொரூபம் வரும்

தான் அவன் ஆகிச் சொரூபத்து வந்திட்டு
ஆன சொரூபங்கள் நான்கும் அகற்றின
ஏனைய முத்திரை ஈந்தாண் ட நன் நந்தி
தான் அடி முன் சூட்டித் தாபித்தது உண்மையே


சிவன் என்னை வந்து ஆட்கொண்டபோது நானும் சிவனின் வடிவம் பெற்றேன். அதற்கு முன்பு என்னிடம் விளங்கிய நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுவரன் என்ற வடிவங்கள் நான்கும் அகன்று விட்டன. ஏனைய நான்கு முத்திரைகள் ஆகிய அருவமாகிய சதாசிவம், விந்து, நாதம், சத்தி என்பனவற்றை என்னிடம் விளங்கச் செய்தான். அவன் திருவருளை நான் முன்னமே பெற்றுள்ளவன் என்பதை நிரூபணம் செய்தான்.

#1593. சொல் இறந்தோமே

உரை அற்று, உணர்வு அற்று, உயிர் பரம் அற்று,
திரை அற்ற நீர் போல் சிவமாதல் தீர்த்துக்
கரை அற்ற சத்தாதி நான்கும் கடந்த
சொரூபது இருத்தினான்; சொல் இறந்தோமே
.

இத்தகைய இன்பத்தை அனுபவிக்கும் போது உரை அற்றுவிடும்; உணர்வு அற்று விடும்; தன்னிலை மறந்து விடும்; தெளிந்த அலையற்ற நீரைப் போன்று அசைவற்ற சிவத்தன்மையும் கெடும். நான்கு வகை வாக்குகளையும், நாதத்தையும் கடந்து, எல்லையில்லாத தன் வடிவத்துடன் சிவன் என்னை ஒன்றாக்கி விட்டான். அதனால் பிறப்பு இறப்பு இவற்றின் எல்லையாகிய பிரணவத்தை நான் கடந்து விட்டேன்.

#1594. உய்யக் கொண்டான்

குரவ னுயிர்முச் சொரூபமும் கைக் கொண்டு
அரிய பொருள் முத்திரை யாகக் கொண்டு
பெரிய பிரானடி நந்தி பேச்சற்று
உருகிட வென்னையங் குய்யக் கொண்டானே.
உத்தம குரு செய்ய வேண்டியது எது?


தன்னிடம் தீட்சை பெற வந்துள்ள மாணவனின் மூன்று உடல்களாகிய பருவுடல், நுண்ணுடல், காரண உடல் இவற்றில் உள்ள தடைகளை நீக்க வேண்டும்.உயிரைக் குருவிடம் வேண்டும். உயிர்களுக்குத் தலைவனாகிய சிவபெருமானிடம் மாணவனை மௌன யோகத்தில் பொருந்தச் செய்து ஆட்கொள்ள வேண்டும்.
 
#1595 to #1599

#1595. மாளாப் புகழும், தாளும் தருவான்

பேச்சற்ற இன்பத்துப் பேரானந்தத்திலே
மாச்சற்ற என்னைச் சிவமாக்கி மாள்வித்துக்
காச்சற்ற சோதிக் கடன் மூன்றும் கைக் கொண்டு
வாச்ச புகழ் மாளத் தாள்தந்து மன்னுமே.


என் குற்றங்குறைகளை சிவன் அகற்றிவிட்டான். என்னையும் அவன் சிவமாக்கிவிட்டான். வாக்குக்கு அப்பாற்பட்ட பேரின்பத்தில் என்னை ஆழ்த்தி விட்டான். அவன் சோதி நம்மைக் காய்வதில்லை! எனினும் அது என் ஆன்மாவின் மூன்று குற்றங்களையும் முற்றிலுமாக அழித்து விட்டது. சிவன் என் ஆணவத்தை அழித்துத் தன் திருவடிகளை என் மீது சூட்டி நிலை பெற்று விளங்கினான்.

#1596. விளம்ப ஒண்ணாதே!

இதயத்து நாட்டத்து மென்தன் சிரத்தும்
பதிவித்த வந்தப் பராபரன் நந்தி
கதிவைத்த வாறும் மெய்காட்டிய வாறும்
விதிவைய்த்த வாறும் விளம்ப ஒண்ணாதே .


குரு தன் திருவருளை என் இதயத்தின் மீதும், என் பார்வையிலும், என் தலை மீதும் பதித்தார். கீழ் நோக்கியவாறு மண்டலமிட்டிருந்த குண்டலினி சக்தியை மேல் நோக்கியவாறு செய்தார். விந்து நாதங்களையும் அவை செயல்படும் முறைகளையும் எனக்கு உணர்த்தினார். இவற்றை எல்லாம் என்னால் வேறு ஒருவருக்கு விளம்பவும் ஒண்ணாது.

#1597. ஞான தீட்சை பெற்றேன்

திருவடி வைத்தென் சிரத்தருள் நோக்கிப்
பெருவடி வைத்தந்த பேர்நந்தி தன்னைக்
குருவடிவிற் கண்ட கோனை எங்கோவை
கருவழி வாற்றிடக் கண்டு கொண்டேனே


தன் திருவடியை என் தலை மீது சூட்டினான். அருள் வழிய என்னை நோக்கினான். எங்கும் நிறைந்துள்ள தன் பெருவடிவினை எனக்குத் தந்தான்.குரு வடிவில் வந்த என் மன்னனை நான் என் பிறவிப் பிணி உலர்ந்து போகும் வண்ணம் நன்கு கண்டு கொண்டேன்.

#1598. திருவடி ஞானம் முத்தி தரும்!

திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமல மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.


திருவடி ஞானம் அளிப்பவை இவை :சாதகனைச் சிவமயமாக்கி விடும்; அவனைச் சிவலோகத்தில் கொண்டு சேர்க்கும்; ஆன்மாவைச் சிறைப் படுத்தி இருந்த மலங்களில் இருந்துஅதை மீட்கும்; அணிமா முதலிய எண் சித்திகளையும் அதன் பின்னர் உயர்ந்த முத்தியையும் தரும்.

#1599. தாள் வைத்துத் தரிப்பித்தான்

மேல்வைத்த வாறுசெய் யாவிடின் மேல்வினை
மால்வைத்த சிந்தையை மாயம தாக்கிடும்
பால்வைத்த சென்னிப்ப் படரொளி வானவன்
தாள்வைத்த வாறு தரிப்பித்த வாறே.

கீழ் நோக்கியவாறு இருந்த குண்டலினி சக்தியை மேல் நோக்கும் படிச் செய்யாவிடில், பண்டு செய்த வினைகளின் பயன்கள் மீண்டும் உள்ளதை மயக்கி மாயையின் வழியில் செலுத்திவிடும். பால் போன்ற வெண்மையான ஒளி பொருந்திய மண்டலத்தில் உள்ள இறைவன் தன் திருவடியை என் மேல் பதித்து என்னை விட்டு அகலாது இருந்தான்.
 
[h=1]#1600 to #1604[/h] #1600. உடல் பற்று அழியும்


கழல்ஆர் கமலத் திருவடி என்னும்
நிழல்சேரப் பெற்றேன் நெடுமால் அறியா
அழல்சேரும் அங்கியுள் ஆதிப் பிரானும்
குழல் சேரும் என் உயிர் கூடும் குலைத்தே.


தாமரையில் விளங்குகின்ற கழல் அணிந்த ஈசன் திருவடி நிழலை அடைந்தேன்.அழல் சேர்ந்த அக்கினி மண்டலத்தில் விளங்குகின்றவரும், திருமாலும் அறிந்திடாதவரும் ஆன உருத்திரர், என் உடல் பற்றினை அழித்து விட்டு சுழு முனை உச்சியில் சிவமாகச் சென்று அமர்ந்தார்.


#1601. அளவற்ற இன்பம்


முடிமன்ன ராகின் மூவுலகம தாள்வர்
அடிமன்ன ரின்பத் தளவில்லை கேட்கின்
முடிமன்ன ராய்நின்ற தேவர்க ளீசன்
குடிமன்ன ராய்க்குற்ற மற்று நின்றாரே.



முடி சூடிய மன்னன் மூவுலகையும் ஆள்வான். அவன் அடையும் இன்பம் மிகப் பெரிது. எனினும் சிவன் அடியார்கள் என்னும் அன்பின் மன்னர்கள் பெறுகின்ற இன்பத்துக்கு ஓர் எல்லையே இராது. முடி மன்னர்கள் சிவனடி தொழும் அடியவர்கள் ஆனால் அவர்கள் குற்றம் குறைகள் எல்லாம் நீங்கிவிடும்.


#1602. வேதத்தின் அந்தம்


வைத்தேன் அடிகள் மனத்தி னுள்ளே நான்
பொய்த்தே எரியும் புலன்வழி போகாமல்;
எய்த்தேன் உழலும் இருவினை மாற்றிட்டு
மெய்த்தேன் அறிந்தேன் அவ்வேதத்தின் அந்தமே.



என் மனத்தில் இறைவனின் திருவடிகளைப் பதித்துக் கொண்டேன். அதனால் பொய்யை மெய் போலக் காட்டித் துன்புறுத்தும் வலிமை வாய்ந்த புலன்களின் வழியே நான் செல்லவில்லை. உலக வாழ்வில் உழலச் செய்யும் இருவினைத் துன்பங்களை மாற்றிவிட்டேன். மறைகளின் முடிவாகிய வேதாந்தத்தை நான் அடைந்தேன்.

#1603. இன்ப வெள்ளத்தில் திளைப்பர்


அடிசார லாமண்ணல் பாத மிரண்டும்
முடிசார வைத்தனர் முன்னை முனிவர்
படிசார்ந்த வின்பப் பழவடி வெள்ளக்
குடிசார் நெறிகூடி நிற்பவர் கொள்கையே.

எவரும் இறைவனின் திருவருளைப் பெறலாம். பண்டு வயோதிக முனிவர்கள் யுவ சிவகுருவின் திருவடிகளைத் தம் தலை முடிமீது அணிந்து கொண்டனர். படிப்படியாக பேரின்ப வெள்ளத்தை அடைந்து அதில் குடி கொண்டு திளைப்பதற்கு இதுவே ஒரு நல்ல வழியாகும்.


#1604. திருவடிகள் தருபவை இவை


மந்திர மாவதும் மாமருந் தாவதும்
தந்திர மாவதும் தானங்க ளாவதும்
சுந்தர மாவதும் தூய்நெறி யாவதும்
எந்தை பிரான்ற னிணையடி தானே.



ஈசன் திருவடிகள் அவற்றை உன்னுபவரைக் காக்கும் உயரிய மந்திரம் ஆகும்; பிறவிப் பிணியைத் தீர்க்கும் அரு மருந்து ஆகும்; இறைவன் திருவருளைப் பெற்றுத் தருகின்ற சிறந்த தந்திரம் ஆகும்; இறையருளைப் பெற்றுத் தரும் அரிய தானங்களாகும். வீடு பேற்றினைத் தரும் தூய நன்னெறியாகும்; இவை அனைத்துமாக ஆவது எந்தைப் பிரானின் இனிய திருவடிகளே.
 
3. ஞாதுரு, ஞானம், ஞேயம்

3. ஞாதுரு, ஞானம், ஞேயம்
ஞாதுரு = காண்பவன் => ஆன்மா / சீவன்
ஞானம் = பெறும் அறிவு => சிவ ஞானம்
ஞேயம் = காணப்படும் பொருள் => சிவம்.


#1605 to #1607

#1605. அமுத நிலை பெறலாம்

நீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப்
பாங்கான பாசம் படரா படரினும்
ஆங்கார நீங்கி யதநிலை நிற்கவே
நீங்கா அமுத நிலை பெறலாமே.


ஆன்மா நீங்காத சிவானந்தத்தில் நிலை பெற்று இருந்தால் அறிவுத் திறனை ஆணவம் மறைக்காது. அப்படி மறைக்க முயன்றாலும் குருவின் அருளால் அகங்காரம் நீங்கி எப்போதும் சிவானந்தத்தில் திளைத்து அதன் மூலம் அமுத நிலையை அடையலாம்.

#1606. அறிவு அறிவார்கள்

ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நின்றிடும்
ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடாகும்
ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை யுற்றவர்
ஆயத்தில் நின்ற அறிவறி வாரே.

அறியப் படும் பொருள் சிவன் என்று அறிந்து கொண்டு, அந்த நெறியில் உறுதியாக நிற்பவர்களிடம் ஞானத்துக்கு உரிய பிற நலன்கள் அனைத்தும் பொருந்தி அமையும். அறியப் படும் பொருளான சிவத்தை அறிந்து கொண்ட ஆன்மா தானும் சிவமாகவே மாறி விடுவது வீடுபேறு ஆகும். ஞேயத்தின் ஞேயமாகச் சிவனைப் பிரியாது விளங்கும் சக்தி தேவியை உணர்ந்தவர் மெய்ஞான அறிவினைப் பெற்றவர் ஆவார்.

#1607. தானே சிவனாதல்

தான் என்று அவன் என்று இரண்டாகும் தத்துவம்
தான் என்று அவன் இரண்டும் தனில் கண்டு
தான் என்ற பூவை அவனடி சாத்தினால்
நான் என்று, அவன் என்கை நல்லதொன்று அன்றே.

உண்மைப் பொருட்கள் ‘நான்’ என்றும் ‘அவன்’ என்றும் வேறுபட்ட இரண்டு போலத் தோன்றும். சகசிர தளம் என்னும் ஆயிரம் இதழ்த் தாமரை கவிழ்ந்த நிலையில் உள்ளபோது, ‘நான்’, ‘அவன் ‘ என்ற இரண்டும் வேறு வேறாத் தோன்றும். கவிழ்ந்த சகசிரதளத் தாமரையை நிமிர்த்தி விட்டால் அதன் பிறகு ‘நான்’ என்றும் ‘அவன்’ என்’றும் தோன்றும் வேறுபாடுகள் அகன்று விடும். நானே நீ!’ என்று அவன் என்னிடம் சொல்வது நல்லது அல்லவா?
 
#1608 to #1610

#1608. அச்சம் கெடுப்பான்!

வைச்சன வாறாறு மாற்றி யெனை வைத்து
மெச்சப் பரன்றன் வியாத்துவ மேலிட்டு
நிச்சய மாக்கிச் சிவமாக்கி ஞேயத்தால்
அச்சம் கெடுத் தென்னை யாண்டனன் நந்தியே.


என்னிடம் அமைந்திருந்த முப்பத்தாறு தத்துவங்களையும் மாற்றி அமைத்தான் என் குருநாதன். என்னை நிலைபெறச் செய்தான் உலகத்தவர் மெச்சிக் கொள்ளும் வண்ணம். சிவனின் எல்லைக்குள் என்னை இருத்தி என்னையும் சிவமாகவே செய்துவிட்டான். என் அச்சங்களையையும், அறியாமையையும் நீக்கி என்னை ஆட்கொண்டான்.

#1609. ஆன்மாவைப் பரனாக்கியது

முன்னை அறிவு அறியாதஅம் மூடர்போல்
பின்னை அறிவுஅறி யாமையைப் பேதித்தான்
தன்னை அறியப் பரன் ஆக்கித் தற்சிவத்து
என்னை அறிவித்து இருந்தனன் நந்தியே.


தீட்சை பெரும் முன்பு அறிவுக்கும், அறியாமைக்கும் உள்ள வேறுபாடு அறியாத மூடன் போல இருந்தேன். தீட்சைக்குப் பின்னர் அறிவுக்கும், அறியாமைக்கும் உள்ள வேறுபாடுகளை அறிந்து கொண்டேன். ‘தான்’ என்று இருந்த என் ஆன்மாவுக்குப் பரம்பொருளாகிய ‘தத்’ என்பதின் இயல்பினை அளித்தான்.

#1610. செறிந்த அறிவைத் தருவான்

காணாத கண்ணுடன் கேளாத கேள்வியும்
கோணாத போகமும் கூடாத கூட்டமும்
நாணாத நாணமும் நாதாந்த போதமும்
காணாயென வந்து காட்டினான் நந்தியே.


“கண்கள் கண்டிராத காட்சிகள், செவிகள் கேட்டிராத சொற்கள், குறையாத சிவானந்தம், கிடைப்பதற்கு அறிய யோகக் கூட்டு, குறைவில்லாத நாதம், நாதாந்ததில் உள்ள தூய அறிவாகிய போதம் இவை அனைத்தையும் வந்து காண்பாய்!” என எனக்குக் காட்டினான் என் நந்தியாகிய சிவபெருமான்.
 
#1611 to #1613

#1611. ஐந்தொழில் ஆற்றும் வல்லமை

மோனங்கை வந்தோர்க்கு முத்தியும் கைகூடும்
மோனங்கை வந்தோர்க்குச் சித்தியும் முன்னிற்கும்
மோனங்கை வந்தூமை யாமொழி முற்றுங்காண்
மோனங்கை வந்தைங் கருமமு முன்னுமே.

மோனமாகிய பிரணவ யோகம் கைவரப் பெற்றவர்களுக்கு முக்தியும் கைக்கூடும். அவர் முன்பு எட்டு பெருஞ் சித்திகளும் கை கட்டி நின்று ஏவல் செய்யும். அவருக்குப் பேசாத மோன மொழியாகிய அசபை கைக் கூடும். படைத்தல், காத்தல், அழித்தல் மறைத்தல், அருளல் என்னும் ஐங் கருமங்களையும் ஆற்றும் வல்லமையை அவர் பெறுவார்.

#1612. பிறந்து இறவார்!

முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றன் பால்
வைத்த கலைகால் நால்மடங் கால்மாற்றி
உய்த்த ‘வத்து ஆனந்தத்து’ ஒண் குரு பாதத்தே
பெத்தம் அறுத்தோர் பிறந்து இறவாரே.


மூன்று முத்திரைகள் சாம்பவி, கேசரி, பைரவி என்பவை. இவற்றின் காரியம் எப்போது முடிந்துவிடும் என்று அறிவீரா ? காண்பவன், காட்சி, காணும் பொருள் என்ற மூன்றும் வேறுபாடுகள் இன்றி ஒன்றிவிடும் போது! இடைகலை பிங்கலை வழியாகச் செல்லும் காற்றை உள்நாக்கின் வழியே அதன் மேலுள்ள நான்கு விரற்கடைப் பகுதியில் உலவ விட வேண்டும். குருவின் திருவடிகளில் அமர வேண்டும். பந்தப் படுத்தும் தளைகளை விட்டு விட வேண்டும். இவற்றைச் செய்பவர் மீண்டும் உலகில் பிறக்கவோ இறக்கவோ மாட்டார்.

#1613. மூல சொரூபன்

மேலைச் சொரூபங்கள் மூன்றும் சக்தி
பலித்த முத்திரை பற்றும் பரஞானி;
ஆலித்த நட்டமே ஞேயம் ; புகுந்தற்ற
மூலச் சொரூபன் மொழி ஞாதுருவனே.

மிகுந்த சக்தி விளங்கும் மேலான மூன்று சொரூபங்கள் விந்து, நாதம், சாதாக்கியம் என்பவை. இதுவே முதல் நிலை. இதைப் பற்றியுள்ள பரம ஞானி செய்யுன் நடனமே ஞேயம் என்னும் காணப் படும் பொருள். தன்னிலை அழிந்துவிட்ட பரன் ஞாதுரு என்னும் காண்பவன் ஆகிவிடுவான்.
 
4. துறவு

அன்பால் இறவனைப் பற்றிக் கொண்டு இயல்பாகவே பாசங்களில் இருந்து விடுபடுவது துறவு.

#1614 to #1618

#1614. அறப் பதி காட்டுவான் அமரர் பிரான்

இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கித்
துறக்கும் தவம் கண்ட சோதிப் பிரானை
மறப்பில ராய் நித்தம் வாய்மொழி வார்கட்கு
அறப்பதி காட்டும் அமரர் பிரானே.

சிவன் பிறப்பு, இறப்பு என்ற இரண்டையும் நீக்கிவிடுவான். இயல்பாகவே இந்த உலக இன்பங்களைத் துறக்கும் அருந்தவத்தையும் அருள்வான். ஒளி வடிவினனாகிய சிவனை மறவாமல் அவனை வாய் மொழியும் அன்பர்களுக்கு அவன் அறப்பதியாகிய சிவலோகத்தைத் தருவான்.

#1615. உயிர்க்குச் சுடரொளி

பிறந்தும் இறந்தும் பல் பேதமை யாலே
மறந்து மலவிருள் நீங்க மறைந்து
சிறந்த சிவனருள் சேர்பருவத்துத்
துறந்த உயிர்க்குச் சுடரொளி யாமே.

வினைப் பயன்களின் படிச் சீவன் பிறக்கின்றான்; பிறகு இறக்கிறான். அறியாமை இருளில் அவன் அழுந்தி விடுகின்றான். செய்ய வேண்டியவை எவை, விலக்க வேண்டியவை எவை என்று மறந்து விடுகின்றான். மலங்களால் அறிவு மறைக்கப் படுகின்றான். எனினும் சிவன் அருள் வெளிப்படும் போது தகுந்த பருவத்தில் பற்றுக்களைத் துறந்து விடுவதன் மூலம் சீவன் சுடரொளியாக ஆகிவிடுவான்.

#1616. பிறவி அறுப்பான்

அறவன் பிறப்பிலி யாரு மிலாதான்
உறைவது காட்டகம் உண்பது பிச்சை
துறவனும் கண்டீர் துறந்தவர் தம்மைப்
பிறவி அறுத்திடும் பித்தன் கண்டீரே.

அவன் அறநெறிப் பட்டவன்; பிறப்பில்லாத அநாதியானவன்; அதனால் தன்னந் தனியன்;
அவன் தங்கும் இடம் தத்துவங்கள் சுட்டு எரிக்கப் பட்ட இடம்; அவன் ஏற்பது பிச்சை. அவன் அனைத்தையும் துறந்து விட்டவன். பற்றுக்களை விட்டு விட்டவர்களின் பிறப்பை அறுக்கும் பித்தன் அவன் என்று அறிந்து கொள்ளுங்கள்!

#1617. நெருஞ்சில் முள் பாயாது

நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்
நெறியில் வழுவின் நெருஞ்சில் முள் பாயும்
நெறியின் வழுவாது இயங்க வல்லார்க்கு
நெறியின் நெருஞ்சில்முள் பாயகில்லாவே.


இறைவன் கைக் கொள்ள வேண்டிய நல்ல நெறிகளையும் படைத்தான் ; ஒதுக்கித் தள்ள வேண்டிய நெருஞ்சில் முட்களைப் போன்ற செயல்களையும் படைத்தான். அறவழி செல்லாமல் தவறான வழியில் செல்பவர்கள் நெருஞ்சில் முள் பாய்ந்ததைப் போலத் துன்புறுவர். அற வழியில் செல்பவர்களுக்கு இந்தத் துன்பம் நேராது.

#1618. திருவடி கூடும் தவம்

கேடும் கடமையும் கேட்டு வந்து ஐவரும்
நாடி வளைந்தது நான் கடவேன் அலேன்
ஆடல் விடை உடை அண்ணல் , திருவடி
கூடும் தவம் செய்த கொள்கையன் தானே


ஐம்பொறிகள் எனக்குக் கேடு விளைவிக்க எண்ணி என்னை அலைக் கழிக்கும். ஆனால் நான் அவைகள் வசப்பட்டுச் செயல்படக் கடமைப்பட்டவன் அல்லன். ஒளி மண்டலத்தில் நடனம் செய்யும் விடையேறும் ஈசனின் திருவடிகளை எப்போதும் பிரியாத சிறந்த தவத்தை மேற் கொண்டவன் நான்.
 
#1619 to #1623

#1619. உழவன் உழவு ஒழிவான்

உழவன் உழ, உழ, வானம் வழங்க,
உழவன் உழவினில் பூத்த குவளை
உழவன் உழத்தியர் கண் ஒக்கும் என்றிட்டு
உழவன் அதனை உழவு ஒழிந் தானே


ஞான சாதனை செய்பவன் விருப்பத்துடன் அதனை மேன் மேலும் தீவிரமாகச் செய்வான். வான மண்டலம் அதனால் மேன் மேலும் விகசிக்கும். ஒரு நீல நிற ஒளி தோன்றும். சாதகன் அது அருள் மிகுந்த சக்தியின் ஒளி என்று அறிந்து கொள்வான். மேலும் சாதனை செய்யத் தேவை இல்லை அதனால் அவன் சக்தியின் அருளில் நாட்டம் கொள்வான்.

#1620. பார் துறந்தார்க்குப் பதம்

மேல்துறந்து அண்ணல் விளங்குஒளி கூற்றுவன்
நாள்துறந்தார்க்கு அவன் நண்பன், அவாவிலி,
கார்துறந்தார்க்கு அவன் கண்ணுதலாய் நிற்கும்
பார்துறந்தார்க்கே பதம்செய லாமே


சிவன் அனைத்தையும் துறந்து விட்டவன்; அவன் மேலே ஒளிரும் ஒளியாக இருந்து கொண்டு அனைவருக்கும் வழி காட்டுபவன்; அவன் எல்லோருக்கும் நண்பன்; எந்த ஆசையும் இல்லாதவன். இருளாகிய அஞ்ஞானத்தை விட்டு விட்டு ஞானத்தைத் தேடுபவருக்குத் தன் நெற்றிக் கண்ணால் அருள்பவன். உலக ஆசைகளை முற்றிலுமாகத் துறந்தவர்களுக்கே அவன் தன் திருவடிகளைத் தருவான்.

#1621. உடம்பு இடம் ஆமே

நாகமும் ஒன்று படம் ஐந்து நால் அது
போகமும் புற்றில் பொருந்தி நிறைந்தது ;
ஆகம் இரண்டும் படம் விரித்து ஆட்டு ஒழிந்து,
ஏகப் படம் செய்து உடம்பு இடம் ஆமே.

குண்டலினி சக்தி என்னும் நாகம் ஒன்று. அதன் ஐந்து படங்கள் ஐம்பொறிகள் ஆகும். அந்தக்கரணங்கள் நான்கும் இவற்றுடன் தொடர்பு கொண்டு போகம் அடைகின்றன. இது புற்றுப்போன்ற உலக அனுபவங்களில் நிறைந்துள்ளது. பருவுடல் நுண்ணுடல் இரண்டிலும் இது படம் எடுத்து ஆடும். எப்போது குண்டலினி சக்தி சிற்சக்தியுடன் இணைந்து விடுகின்றதோ அப்போது இது ஆடுவதை விட்டு விடும். இரண்டு படங்களையும் ஒன்றாக்கி விட்டு உடலை இடமாகக் கொண்டு கிடக்கும்.

#1622. நயன்தான் வரும் வழி

அகன்றார் வழி முதல் ஆதிப் பிரானும்
இவன்தான் என நின்ற எளியனும் அல்லன்;
சிவன்தாள் பல பல சீவனும் ஆகும்
நயன்தான் வரும் வழி நாம் அறியோமே.

துறவு மேற்கொண்டவர்களில் முதல்வன் சிவன் ஆவான். ‘இவனே அவன்!’ என்று சுட்டிக் காட்டும் அளவுக்கு அவன் எளிமையானவன் அல்லன். சீவனுக்குச் சிவன் அருளைப் பெறப் பல பல பிறவிகள் தேவைப்படலாம். நயந்து அவன் நம்மிடம் வரும் வழியை நம்மால் அறிந்து கொள்ள முடியுமா?

சீவனின் பக்குவத்துக்கு ஏற்ப சிவன் அருள் புரிவான். இலயம் விரும்புபவர்களுக்கு இலயம் அளிப்பன். போகம் விரும்பியவருக்குப் போகம் அளிப்பான். அதிகாரத்தை விரும்பியவருக்கு அதிகாரம் தருவான்.

#1623. உலகம் கசக்கும்

தூம்பு திறந்தன ஒன்பது வாய்தலும்,
ஆம்பற் குழலியின் கஞ்சுளிபட்டது,
வேம்பேறி நோக்கினென், மீகாமன் கூரையில்,
கூம்பு எறிக் கோவில் பழுக்கின்ற வாறே.


அற்புதமான அந்த வழி திறந்துவிட்டவுடன், உடலின் ஒன்பது வாயில்களும் ஆம்பல் மலர்களைச் சூடிய அன்னையின் அருளால் அடைபட்டுவிடும். உடலின் அனுபவம் முடிந்து விடும். உலகம் கசந்து விடும். அதுவரை உடலைச் செலுத்தி வந்த ஆன்மா தலை உச்சியில் மேல் தலைவன் விளங்கும் சகசிர தளத்தில் தானும் அமைந்து விளங்கும்.
 
5. தவம்

தனக்குள் மறைந்து உறையும் உண்மைப் பொருளைத் தேடும் முயற்சி

#1624 to #1626

#1624. பற்று விட்டோர்

ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்
நடுங்குவது இல்லை நமனும் அங்கு இல்லை
இடும்பையும் இல்லை இராப் பகல் இல்லை
படும் பயன் இல்லை பற்று விட்டோர்க்கே


சிவத்திடம் உள்ளத்தை ஒடுக்கி அங்கே நிலை பெற்றவர்கள் எந்தத் துன்பத்தையும் கண்டு அஞ்சி நடுங்குவது இல்லை. காலன் அவர்களுக்கு இல்லை. அவர்களுக்குத் துன்பம் என்பதே கிடையாது. இரவும் இல்லை, பகலும் இல்லை. உலகப் பொருட்களின் மேல் உள்ள பற்றினைத் துறந்தவர்களுக்கு இதைவிட நல்ல பயன் என்று வேறு எதுவும் இல்லை.

#1625. தவத்தின் சிறப்பு

எம்மா ருயிரு மிருநிலத் தோற்றமும்
செம்மா தவத்தின் செயலின் பெருமையும்
அம்மான் திருவருள் பெற்றவர்க்கல்லாது
இம்மா தவத்தினியல்பறி யாரே.

உயிர் உலகில் வந்து பிறப்பதையும், அது ஓர் உடலுடன் கூடிப் பிறப்பதையும், அது அனுபவிப்பதற்கு உலகம் ஏற்படுத்தப் பட்டதையும், தவத்தின் மேன்மையையும் சிவன் அருள் பெற்றவர்களுக்கு மட்டுமே தெரியும். பிறர் இந்த மாதவத்தின் மேன்மையை அறிகிலர்.

#1626. பிறப்பை நீக்கும் பெருமை

பிறப்பறி யார்பல பிச்சைசெய் மாந்தர்
சிறப்பொடு வேண்டிய செல்வம் பெறுவார்
மறப்பில ராகிய மாதவம் செய்வார்
பிறப்பினை நீக்கும் பெருமை பெற்றோரே.


பிச்சை பெற்று உயிர் வாழும் மாதவத்தவர் இனிப் பிறவியை அறியார். அவர்களுக்கு சிறப்பும் உயரிய அருட் செல்வமும் நிரம்பவும் கிடைக்கும். மறக்காமல் சிவனை நினைந்து தவம் செய்பவர் பிறவிப் பிணியை நீக்கும் பெருமை பெறுவார்.
 
#1627 to #1629

#1627. சிந்தை சிவன் பால்

இருந்தி வருந்தி எழில் தவம் செய்யும்
பெருந்தன்மை யாளரைப் பேதிக்க வென்றே
இருந் திந்திரனே எவரே வரினும்
திருந்துந்தஞ் சிந்தை சிவனவன் பாலே.


சிவன் மீது சிந்தையை இருத்தி, உடலை வருத்தி மாதவம் செய்பவர்கள, இந்திரனோ அன்றி வேறு எவரேனும் வந்து அவர்கள் தவத்தைக் கலைக்க முயற்சி செய்தாலும், சிறிதும் சிந்தை கலங்காமல் தன் உள்ளக் கருத்தைச் சிவன் மீதே பொருத்தி இருப்பார்.

#1628. அணுகுவதற்கு அரியவன் சிவன்

கரந்துங் கரந்திலன் கண்ணுக்குந் தோன்றான்
பரந்த சடையன் பசும்பொன் நிறத்தன்
அருந்தவர்க் கல்லா லணுகலு மாகான்
வரைந்து தொழப்படும் வெண்மதி யானே.


சிவன் தவம் செய்யாதவர்களுக்கு மறைந்து உ றைவான்; தவம் செய்பவர்களுக்கு மறையாமல் தெரிவான். சிவன் புறக் கண்களுக்குப் புலப்படமாட்டான். அவன் அகக் கண்களுக்கு நன்கு புலப்படுவான். பரந்து விரிந்த வீசும் சடையை உடையவன். ஆணிப் பொன்னின் நிறம் கொண்டவன். பக்குவம் அடைந்த சீவர்களின் மதி மண்டலத்தில் சிவன் விளங்குவான்.

1629. தானே வெளிப்படுவான்

பின்னெய்த வைத்ததோ ரின்பப் பிறப்பினை
முன்னெய்த வைத்த முதல்வனை எம்மிறை
தன்னெய்துங் காலத்துத் தானே வெளிப்படும்
மன்னெய்த வைத்த மனமது தானே.


பின்னால் அடைய வேண்டிய இனிய பிறப்பை முன்னமேயே நியதியாக அமைப்பவன் சிவன். சீவன் சிவனை அறிய முயற்சி செய்யும் போது, சிவன் சீவன் முன்பு தானே வெளிப்படுவான். சாதகனின் தளராத மன உறுதியே இதைச் சாத்தியம் ஆகும்.
 
Back
Top