குறை குடம் தான் தளும்பி வழியும்;
நிறை குடம் என்றுமே தளும்பாது!
நெல்லின் பதர்கள் காற்றில் பறக்கும்,
நெல் மணிகள் என்றுமே பறக்காது!
இறைவன் தந்தான் இரண்டு செவிகளை,
நிறைய நிறைய நாம் கேட்பதற்காக!
இறைவன் தந்தான் ஒரே ஒரு நாவினை,
குறைவாகப் பேச வேண்டும் என்பதற்காக.
அறிவிலிகளும் அறிவாளர்களே, தங்கள்
திருவாயைத் தாம் திறக்காத வரையிலும். கன்று முட்டி, முட்டிப் பால் வேண்டுவது போல,
நின்று கேட்பவர்களிடமே நாம் பேச வேண்டும்.
பால் பொங்கிய பின் வெளியே வழியும்,
மனம் பொங்கி நிறைந்த பின்னரே,
பால் போல் இனிய சொற்கள் வழிந்து,
மனம் குளிர வெளியில் வரவேண்டும்.
பயனில்லாச் சொல் பாராட்டக் கூடாது,
புறம், கோள், வம்புகள் பேசக்கூடாது; முத்து உதிர்ந்தார்ப் போலப் பேசினால்,
உற்று கவனிப்பார்கள் மற்றவர்களும்.
பேசாத போதுதான் நினைவலைகள்,
தூசாக அடங்கிச் சற்று அமைதியுறும்;
பள்ளத்தை நோக்கி ஓடும் வெள்ளம் போல,
உள்ளத்தை நோக்கி ஓடத் தொடங்கும்.
உள்முகமாகச் சென்றால்தான் பல
உண்மைகள் நமக்குப் புரிய வரும்.
உண்மைகள் புரிந்த பின்னர், நமது
வண்மைகள் நமக்கு நன்கு புலப்படும்.
அதிகம் பேசுபவராக இல்லாமல்,
மிதமாகப் பேசுபவராக மாறுவோம்; சக்தி வாய்ந்த நம் வார்த்தைகளை,
யுக்தியுடன் நாம் பயன்படுத்துவோம்.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.