• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

கவிதையில் யாப்பு

Status
Not open for further replies.
பயிற்சி 2. திருக்குறள் நிரல்வர அமைத்தல்: விடை

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனன்றோ ஆன்ற வொழுக்கு.
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.
பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின்
அறம்நாணத் தக்க துடைத்து.

*****
 
6.16. யாப்பமைதிக்கோர் அளவுகோல்

புலவர் குழந்தையின் நூல்கள் இரண்டு
பலவிதக் கூறு தரும்.

ஒவ்வோர் அடியிலும் மோனை பொழிப்பிலே
செவ்விதின் வேண்டும் வர.

குறள்சிந்து வெண்பா அடியெதுகை ஒன்றாய்
வரவேண்டும் ஓர்விகற்ப மாய்.

ஒன்றோ இரண்டோ விகற்பம் அளவியலில்
நன்றாய் அமைதல் நலன்.

நேரிசை வெண்பா ஒரூஉ எதுகையும்
சீருடன் வேண்டும் வர.

பொழிப்பினில் மோனை இயலாத போது
பொழிப்பில் எதுகை நலம்.

சிறுபான்மை மோனை எதுகை ஒரூஉ
வருதலே பாவில் தகும்.

வேறு தொடைகள் அமையினும் கூடவே
மேலுள்ள வையே சிறப்பு.

யாப்பமைதிக் கூறுகள் காணவே புள்ளிதந்தால்
பாக்கள் அளத்தல் எளிது.

ஓர்விகற்பம் மோனை பொழிப்பு அதேஎழுத்து
நூறு சதவிகித மாம்.

கீழ்வரும் அட்டவணை சொல்லும் பிறவகைக்
கூறுகளின் புள்ளி களை.

00veNpA-yAppamaidhi.jpg

*****
 
இந்தத் தொடரின் திருத்திய வடிவம் கீழுள்ள வலைதளத்தில்:
இப்போது படிப்பவர்கள் இந்த வலைதளத்தையும் நாடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஈகரை தமிழ்க் களஞ்சியம்
 
Last edited:
6.24. குறள்வெண்பாப் பயிற்சி
பயிற்சி 1. குறட்பா நேர்வரச் செய்தல்
????????? ??????: ??????????: ????: 6.24. ????????????? ??????? 1

கலைந்த குறட்பாக்கள் கட்டில் அமைக்க
விளைந்திடும் பாக்குறள் மூன்று.

விளைந்திடும் மூன்று குறட்பா முதற்சீர்
இயற்-உல தள்ளா வென.

கல்லா ரறிவிலா தார்.
வகுத்தலும் வல்ல தரசு.
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
உலகத்தோ ரொட்ட ஒழுகல் பலகற்றுங்
செல்வருஞ் சேர்வது நாடு.
இயற்றலும் ஈட்டலும் காத்தலுங் காத்த

*****
 
6.24. குறள்வெண்பாப் பயிற்சி
பயிற்சி 2. குறட்பா பூர்த்தி செய்தல்
http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/

காணாத சீர்கள் அமைத்துக் கோடுகளில்
காணுக முழுக்குறட் பா.

வழிய உடம்பு. ஏதிலார் மன்னு
உலைவின்றித் தாழா

அன்பின் ----- துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த -----

----- குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ ----- முயிர்க்கு.

ஊழையும் உப்பக்கம் காண்பர் -----
----- துஞற்று பவர்.


பயிற்சி 3. குறட்பா தளைப்பிழை திருத்துதல்

கீழ்வரும் பாக்கள் இரண்டு இடங்களில்
பின்னசைத் தட்டும் தளை.

தட்டும் தளையைச் சரிசெய் தெழுதுக
கட்டுடன் வந்திடும் பா.

எதுகையும் மோனையும் மாறா திருந்து
அதுவென வாக அமை .

கணிணி யறிதல் கட்டாயம் இன்றேல்
பணிநீ புரிதல் தரிது.

பணமும் புகழும் வருதல் நன்றே
குணமது மேன்மையே யுறின்.

காலையின் கதிரவன் கற்றை யொளியிலே
சோலையில் ஆர்த்திடும் ஒலி.

முத்தாய் இலையில் ஒளிருமே பனித்துளி
சித்தமே ஒளிர்க்கும் இரவு.

அந்தி சந்தியில் ஆண்டவன் எண்ணமும்
சிந்தை வந்தால் சிறப்பு.


*****
 
Last edited:
6.24. குறள்வெண்பா பயிற்சி விடைகள்
பயிற்சி 1. குறட்பா நேர்வரச் செய்தல்: விடை

இயற்றலும் ஈட்டலும் காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.
--திருக்குறள் 039:05

உலகத்தோ ரொட்ட ஒழுகல் பலகற்றுங்
கல்லா ரறிவிலா தார்.
--திருக்குறள் 014:10

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வருஞ் சேர்வது நாடு.
--திருக்குறள் 074:01

பயிற்சி 2. குறட்பா பூர்த்தி செய்தல்: விடை

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
--திருக்குறள் 008:10

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு முயிர்க்கு.
--திருக்குறள் 019:10

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர்.
--திருக்குறள் 062:10

பயிற்சி 3. குறட்பா தளைப்பிழை திருத்துதல்: விடை

கணிணி யறிவது கட்டாயம் இன்றேல்
பணிநீ புரிவ தரிது.

பணமும் புகழும் வருவது நன்றே
குணமது மேன்மை யுறின்.

காலைக் கதிரவன் கற்றை யொளியிலே
சோலையில் ஆர்க்கும் ஒலி.

முத்தாய் இலையில் ஒளிரும் பனித்துளி
சித்தம் ஒளிர்க்கும் இரவு.

அந்தியின் சந்தியில் ஆண்டவன் எண்ணமும்
சிந்தையில் வந்தால் சிறப்பு.

*****
 
பயிற்சி 4. குறட்பாவில் நிரல்வரும் சீர்கள்

கீழ்வரும் சீர்நிரல் தன்னில் அமையக்
குறட்பா எழுதிப் பழகு.

ஓரெது கையும் பொழிப்பினில் மோனையும்
நேர்வர வேண்டுமிங் கே.

தேமா புளிமா கருவிளம் கூவிளம்
தேமா புளிமா மலர்/பிறப்பு

சான்று
தீதும் நலனும் பிறர்தர வாகுமோ
ஏதும் செயல்ந மதே.

முன்னோர் மொழிகள் மனம்பட வாழ்ந்திடத்
தன்னால் பெருகும் தகவு.

***

புளிமா கருவிளம் கூவிளம் தேமா
புளிமா கருவிளம் நாள்/காசு

சான்று
விழிமுன் தெரிவதே வேண்டுவன் என்றால்
வழியில் துயரமே தான்.

இலையின் பனித்துளி செஞ்சுடர் பட்டு
கலைகள் விழிப்படும் காடு.

***

கருவிளம் கூவிளம் தேமா புளிமா
கருவிளம் கூவிளம் நாள்/காசு

சான்று
கதவுகள் மூடிடும் காலம் பொறுத்தால்
உதவிகள் தேடிவ ரும்.

அலர்மக ரந்தமே கால்கள் பிடிக்க
மலர்வலம் வந்திடும் வண்டு.

***

கூவிளம் தேமா புளிமா கருவிளம்
கூவிளம் தேமா மலர்/பிறப்பு

சான்று
காடுதான் மீண்டும் எனவந் திடும்சுழல்!
வீடுதான் கூடு மெவண்?

கார்முகில் வானம் கனிந்தே பொழிந்திட
ஊர்தனில் உள்ளக் களிப்பு.

***

உதவி:
தமிழில் தட்டெழுத
Tamil Unicode Editor (??????? ???????? )

பாவகை ஆய்ந்து சரிபார்க்க
Avalokitam Download - Virtual Vinodh

*****
 
பயிற்சி 5. குறட்பாவில் நிரல்வரும் காய்ச்சீர்கள்

ஓரெது கையும் பொழிப்பினில் மோனையும்
சீர்வரும் காய்ச்சீர் இனி.

இவ்வகைச் சீர்கள் இனிதே அமைந்திடச்
செவ்வியப் பாக்கள் எழுது.

தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய்
தேமாங்காய் தேமாங்காய் நாள்/காசு

சான்று
தென்காற்றில் காற்றாலை மென்சுற்றும் கம்பீரம்
முன்செலுமே தார்ச்சாலைப் பாம்பு.


வானத்தில் வெண்மேகம் ஐராவ தம்போல
மௌனத்தில் வீசும்தென் றல்.


***

கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் நாள்/காசு

சான்று
வான்வழியே தேனமுதாய்க் காலிறங்கும் மென்துளிகள்
யானுமொரு நீர்த்துளியே தான்.


வான்வழியே தேனமுதாய்க் காலிறங்கும் மென்துளிகள்
கானமிசைக் கும்கூரை மீது.


***

ஓரெது கைவரும் போது உயிர்மெய்யும்
ஒற்றும் எதுகையா காது.

ஒற்றுடன் ஒற்றதே சேரும் உயிர்மெய்
வருக்கக் குறில்நெடி லாய்.

கீழ்வரும் பாக்குறள் ஓரெது கையல
ஒற்றோ டுயிர்மெய் வர.

மாட்டின் மடியினில் பால்மிகக் கோனாரும்
பாடியே பால்கறப் பார்.


இதனால் இனிவரும் காய்ச்சீர் நிரல்கள்
எதுகையில் ஒன்றாய் வராது.

கருவிளங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய்
தேமாங்காய் தேமாங்காய் நாள்/காசு.

கருவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் நாள்/காசு.

புளிமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய்
தேமாங்காய் தேமாங்காய் நாள்/காசு.

புளிமாங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் நாள்/காசு.

***

இயற்சீரும் காய்ச்சீரும் சேரும் வகைகள்
பயில்வது பற்பல வாய்.

இயற்சீர் தமக்குள் வகைகள் பலவாய்
இயன்று வருவ தியல்பு.

திருக்குறள் யாப்பைத் திருத்தமாய்க் நோக்க
வரும்வகைக் கண்படும் நன்கு.

*****
 
6.25. குறள்வெண்பா வித்தகங்கள்

வித்தகம் பற்பலவாய் விந்தைக் குறள்வெண்பா
உத்தி பலவா றுள.

ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
இரட்டைச் சிறப்பெனத் தேறு.

உத்தி 1. முதற்சீர் இரண்டெழுத்து முடிவில் வருதல்

ரமணி:
தாத்தா தடியெடுத்தால் தண்டல ராவாரோ?
ஆத்தா தடியெடுத் தா. ... 1

வாசிவாசி யென்று மனதில் முணுமுணுத்தால்
பேசுமொழி யாகும் சிவா. ... 2.

சுவாசப் பயிற்சிகளில் தேர்ந்து மனதை
சுவாசத்தால் கட்டினான் வாசு. ... 3

சுகாதாரம் சிங்கார வஸ்துகள் அல்ல
விகாரம் விளைப்பதே காசு. ... 4

வாசிக்கப் பேப்பரைக் கேட்டதுதான் தாமதம்
ஓசியா என்றான் சிவா. ... 5

புன்னகை இன்முகம் போதாது வேண்டுவது
தன்னல மில்லாத அன்பு. ... 6

திரமுள்ள பக்தியில் தீராது நின்றால்
உறவாவார் பார்த்’சா ரதி. ... 7

புரிந்து செயலாற்றின் போய்விடும் அச்சம்
அறியுமோ வாழ்வில் இரிபு? ... 8
[இரிபு=தோல்வி, வெறுப்பு]

குலவும் கலியில் கலித்துக் களித்துப்
பலவிதமாய் வாழும் உலகு. ... 9

விரல்களில் மோதிரம் மின்னிடத் தொக்கா
நிரல்களைச் செய்தார் ரவி. ... 10
[தொக்கா=தொலைக்காட்சி என்பதன் சுருக்கம்.]

மேலும் பாக்களுக்கு:
https://groups.google.com/forum/#!searchin/santhavasantham/முடிபிறழ்$௨0அடி/santhavasantham/EZ0mnRh32rE/tdgMtULMJjUJ
https://groups.google.com/forum/#!searchin/santhavasantham/முடிபிறழ்$௨0அடி/santhavasantham/9dmhNUiaULw/NywyN0xsYkAJ

பயிற்சி
இந்த வகைவரும் விந்தைக் குறட்பாக்கள்
சிந்தனை செய்தே எழுது.

*****
 
Last edited:
உத்தி 2. முதல் ஒலிபிறழ மாறும் முடிவு

முதற்சீர் எழுத்து இரண்டிலோ மேலோ
அதனொலி மாறிவரும் ஈற்று.

எழுத்திடம் மாறுவதால் மாறும் ஒலியே
எழுத்தின் வகையைப் பொறுத்து.

ராம்-எனும் சொல்மாற மார்-என ஆகுமே
கூத்து திரும்பினால் தூக்கு.

மேலும் சில காட்டுகள்
சாவி-வாசி, குருவி-உருகி, கப்பல்-பக்கல்,
வேதம்-தேவம், காதம்-தாகம், வேதனை-தேவனை

ராம்ராம் வடநாட்டில் ராமா தமிழிலே
ராமாஞ்ச நேயரனு மார். ... 1

ரோம்நாட்டில் அன்று குடிமக்கள் சாப்பாட்டில்
யாம்கண்ட தில்லையே மோர். ... 2

ரவைதரும் உப்புமா சட்னியுடன் ஆகா!
சுவைப்போமே உள்ள வரை! ... 3

வார்த்திகம் எய்தியதில் ஆளே உருமாற
யாரெனும் கேள்வியில் ராவ். ... 4

குச்சுவீட்டில் ஏதுவழி காப்பிக்கு? காலையில்
பச்சரிசிக் கஞ்சியில் சுக்கு. ... 5

தலாரூபாய் நூறுதர முந்நூறு தந்தாள்
கலாவின் மகளாம் லதா. ... 6

சாவுபல தீவிபத்தில் மாண்டோர் கணக்கிலே
பாவம்நம் தீயணையர் வாசு. ... 7

காத்துப் பயனில்லை மாற்றானின் பாசறையை
ராத்திரியில் சூழ்ந்துநின்று தாக்கு. ... 8

தூக்கிக் கழிநுனியில் ஊசலாட வைப்பானே
ஊக்கில் எழும்கழைக் கூத்து. ... 9

தோப்புவழிச் சென்றபோது தோன்றித் தலையுயர்த்த
கூப்பிட்ட தேவோர்செம் போத்து. ... 10

பயிற்சி
இந்த வகையிலே சொந்தக் குறட்பாக்கள்
சிந்தனை செய்தே எழுது.

*****
 
உத்தி 3. முதற்சீரில் வரும் சொல் முடிவில் வேறு பொருளில் வருதல்

நூற்கண்டு தேர்ந்ததில் நூல்கிழியத் தேடினேனே
நூற்றைக்க ஊசிநூற் கண்டு.

கற்கண்டு சிற்பி கலைவடிக்கத் தோன்றிய
பற்பல பெண்ணுருகற் கண்டு.

உண்டும் உறங்கியும் போதைக் கழிப்பதில்
குண்டனைப் போலெவர் உண்டு?

குடியுயரக் கோனுயரும் சொல்மாறி யின்று
குடிமக்கள் கேடு குடி.

படிதாண்டாப் பத்தினி மாறினாள் இன்று
படித்துமுன் னேறும் படி.

தேர்தலின் கூட்டத்தை விஞ்சிப் பொதுமக்கள்
பார்க்க நகர்ந்தது தேர்.

அக்கரைக்கு இக்கரை பச்சை குடியிருப்பு
இக்கரையேன் பின்னக் கறை?

தலைப்பு அறிவிக்கப் பாட எழுந்த
கலைக்கையில் சேலைத் தலைப்பு.
[கலை என்பது ஒரு பெண்ணின் பெயர்]

கதையால் துரியோத னைவீமன் தாக்கி
வதைசெய முற்றும் கதை.

அரிச்சுவடி மேற்படிப்பு எல்லாம் சரிதான்
அரிசி அரிச்சு வடி.

உத்தி 3. முதற்சீரில் வரும் சொல் முடிவில் வேறு பொருளில் வருதல்

நூற்கண்டு தேர்ந்ததில் நூல்கிழியத் தேடினேனே
நூற்றைக்க ஊசிநூற் கண்டு.

கற்கண்டு சிற்பி கலைவடிக்கத் தோன்றிய
பற்பல பெண்ணுருகற் கண்டு.

உண்டும் உறங்கியும் போதைக் கழிப்பதில்
குண்டனைப் போலெவர் உண்டு?

குடியுயரக் கோனுயரும் சொல்மாறி யின்று
குடிமக்கள் கேடு குடி.

படிதாண்டாப் பத்தினி மாறினாள் இன்று
படித்துமுன் னேறும் படி.

தேர்தலின் கூட்டத்தை விஞ்சிப் பொதுமக்கள்
பார்க்க நகர்ந்தது தேர்.

அக்கரைக்கு இக்கரை பச்சை குடியிருப்பு
இக்கரையேன் பின்னக் கறை?

தலைப்பு அறிவிக்கப் பாட எழுந்த
கலைக்கையில் சேலைத் தலைப்பு.
[கலை என்பது ஒரு பெண்ணின் பெயர்]

கதையால் துரியோத னைவீமன் தாக்கி
வதைசெய முற்றும் கதை.

அரிச்சுவடி மேற்படிப்பு எல்லாம் சரிதான்
அரிசி அரிச்சு வடி.

பயிற்சி
இந்த வகையிலே சொந்தக் குறட்பாக்கள்
சிந்தனை செய்தே எழுது.

*****
 
6.64. சவலை வெண்பா

இருகுறள் சேர்ந்தே தனிச்சொல் விடுத்து
வருமே சவலைவெண் பாவாம்
அடியிரண்டில் சீர்மூன்றே வந்துவெண் பாப்போல்
முடியும் இலக்கணம் பெற்று.

முழுமையாய் வெண்பா இலக்கணம் இன்றி
எழுமே சவலைவெண்பா என்றாலும்
இருகுறள் வெண்பா இணைவதால் மட்டும்
வருவதென் றாகா தது.

அறுவகை யிலக்கணம் சொல்வதிலிருந்து:
(ஆசிரியர்: வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)

முதற்குறள் ஈற்றுச்சீர் ஓரசை யல்லா(து)
அதுவேவெண் பாக்குறிய ஏனைய
சீர்களில் ஒன்றாய் இருந்து தனிச்சொல்லை
ஏராது நிற்கு மிது.

வேறோர் வகையில் இலக்கணம் சொன்னாலோ
நேரிசை வெண்பாத் தனிச்சொல்லை
நீக்கச் சவலை; தனிச்சொல் இதனுடன்
சேர்க்க வரும்நே ரிசை.


அரிதே பயிலும் சவலைவெண் பாவைப்
பெரிதாய்ப் புலவர் இயற்றிட
வில்லை யெனவே இதுவே பொதுவாக
இல்லை வழக்கிலென் போம்.

சான்றுகள்
அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவல்ல
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசந்து
சுட்டாலும் வெண்மை தரும்.
--ஔவையார், மூதுரை 4.

அரசன் உவாத்தியான் தாய்தந்தை தம்முன்
நிகரில் குரவர் இவரிவரைத்
தேவரைப் போலத் தொழுக என்பதே
யாவரும் கண்ட நெறி.
--பெருவாயின் முள்ளியார், ஆசாரக் கோவை 16.

அவமிருந்தோ ராயிரம்நீத் தாண்டுகொண்ட தன்றிச்
சிவன்விழிநீ யென்றுமுரை செய்தாய்
பவமொழியச் சற்றருட்கண் பாராய் பழனித்
தவகுலவே டக்குருநா தா.
--பழனிக் கலம்பகம் 61.

*****
 
6.65. கலிவெண்பா

வெண்பா விலக்கணம் ஏற்றே வரும்கலி
வெண்பாக்கீ ழெல்லை யடிபதின் மூன்றாகும்;
வெண்பாமே லெல்லையே பாவலர் உள்ளமாம்;
வெண்பா விதுவருமே இன்னிசை நேரிசை
யென்றே இருவகை; ஈரடிக் கோரெதுகை
ஒன்றிட மோனை பொழிப்பில் வருவதாம்;
நண்ணி எதுகையில் ஒன்றும் இரண்டடிக்
கண்ணி யெனவும் அழைக்கப் படுமே.
தனிச்சொல் பெறுவது நேரிசை யாகும்
தனிச்சொல் பெறாததே இன்னிசை யாகுமே;
தூது உலாமடல் போன்ற பிரபந்தம்
ஓதும் கலிவெண்பா நேரிசை யாகும்;
திருவா சகத்தின் சிவபுராணம் மற்றும்
பெரிய சிறிய திருமடல் நூலில்
விரியுமே இன்னிசை யே.


நேரிசைக் கலிவெண்பாச் சான்று
’தமிழ்விடு தூது’, இயற்றியவர்: மதுரைச் சொக்கநாதர்
(268 கலிவெண்பாக் கண்ணிகளில் முதல் ஏழும் இறுதியும்)


சீர்கொண்ட கூடற் சிவராச தானிபுரந்
தேர்கொண்ட சங்கத் திருந்தோரும் - போர்கொண் 1

டிசையுந் தமிழரசென் றேத்தெடுப்பத் திக்கு
விசையஞ் செலுத்திய மின்னும் - நசையுறவே 2

செய்யசிவ ஞானத் திரளேட்டி லோரேடு
கையி லெடுத்த கணபதியும் - மெய்யருளாற் 3

கூடல் புரந்தொருகாற் கூடற் புலவரெதிர்
பாடலறி வித்த படைவேளும் - வீடகலா 4

மன்னுமூ வாண்டில் வடகலையுந் தென்கலையும்
அன்னைமுலைப் பாலி னறிந்தோறும் - முன்னரே 5

மூன்றுவிழி யார்முன் முதலையுண்ட பிள்ளையைப்பின்
ஈன்றுதரச் சொல்லி னிசைத்தோருந் - தோன்றயன்மால் 6

தேடிமுடி யாவடியைத் தேடாதே நல்லூரிற்
பாடி முடியாப் படைத்தோரும் - நாடிமுடி 7
... ... ...

துறவாதே சேர்ந்து சுகாநந்த நல்க
மறவாதே தூதுசொல்லி வா. 268

***

இன்னிசைக் கலிவெண்பாச் சான்று
’சிறிய திருமடல்’, இயற்றியவர்: திருமங்கை ஆழ்வார்
(77 கலிவெண்பாக் கண்ணிகளில் முதல் ஏழும் இறுதியும்)


காரார்வரை கொங்கை கண்ணர் கடலுடுக்கை
சீரர்சுடர் சுட்டி செண்களுழிப்பெராற்று 1

பெராரமார்பின் பெருமாமழைக்குந்தல்
நீராரவெலி நிலமண்கை யென்னுமிப் 2

பாரூர் சொலப்பட்ட மூன்றன்றெ அம்மூன்றும்
ஆரயில்தானெ அரம்பொருளின்பமென்று 3

ஆராரிவற்றினிடையதனை எய்துவார்
சீரார் இருகலயும் எய்துவர் சிக்கெனமது 4

ஆரானுமுண்டெம்பால் என்பதுதானதுவும்
ஒராமையன்றெ? உலகதார் சொல்லும்சொல் 5

ஒராமையாமாரதுவுரைக்கெங்கெளாமெ
காரார்ப்புரவியெழ் பூந்ததனியாழி 6

தெரார் நிரைகதிரொன் மண்டலதைக்கெண்டு புக்கு
ஆரா வமுதமண் கய்தி அதுனின்றும் 7
... ... ...

ஊரா ரிகழினும் ஊரா தொழியேன்நான்
வாரார்பூம் பெண்ணை மடல். 77

*****
 
6.80. வெண்பா வினங்கள்

(வெண்டுறை)
வெண்பா விலக்கணம் தழுவியோ வழுவியோ
வெண்டளை யியங்கியோ வேற்றளை விரவியோ
அடிகள் சீர்களில் அதுவாய்ப் பலவாய்
இடையில் முடிவில் சீர்குன்றி
ஒன்றும் ஒன்றா ஒலியோடே
குன்றி வரும்வெண் பாவினமே.

வெண்பா வினம்வரும் வெண்டுறை வெண்டா ழிசைவெளி விருத்தமென
வெண்குறட் பாவரும் குறள்வெண் செந்துறை குறட்டா ழிசையெனவே
வெண்டா ழிசையில் ஒலியொத் துவரின் வெள்ளொத் தாழிசையாம்
வெண்டுறை யிலுமே ஓரொலி வேற்றொலி விதமுண்டே
வெளிவிரு தத்தில் தனிச்சொல் அதுவே அடிதோறும்.


துறையெனச் சொன்னால் தத்தம் பாவகை யொழுக்கில் துறைபோல் நிற்பதுவாம்
துறைபோல் தத்தம் பாவியல் பெல்லாம் வந்தும் ஒடுங்கியே நிற்பதுவாம்
தாழம் பட்ட ஓசை யோடு வருதல் தாழிசையாம்
தாழம் என்றால் தாமசம் மந்தம் தாழ்வு எனப்பொருளாம்
விருத்தம் தத்தம் பாவடி அளவின் மிக்கு வருவதுவாம்
விருத்தம் தத்தம் பாவகை யிலக்கணம் பொதுவில் பெறுவதில்லை.

6.81. குறள் வெண்செந்துறை

ஒழுகிய ஓசையின் ஒத்தடி இரண்டாய்
விழுமிய பொருளது வெண்செந் துறையே.
--யாப்பருங்கலம்

எவ்வகைச் சீரும் தளையும் ஈரடி அளவொத்தே
செவ்விதின் முடிவன வெல்லாம் குறள்வெண் செந்துறையே.


எதுவோ முதலடிச் சீர்களின் எண்ணிக்கை
அதுவே அடுத்தடி வருவது அளவொத்தல்.

பொதுவில் நாலசைச் சீர்கள் காண்பதிலை
அதிகம் நாற்சீர் அளவடி யேகாண்போம்.

நேரிய இசையும் சீரிய பொருளும் பெறவரும் குறள்வெண் செந்துறையின்
வேறு பெயர்களாம் வெள்ளைச் செந்துறை அல்லது வெறுமே செந்துறையாம்.

பொருளின் விழுமம் பற்றியே இலக்கணம் குறையச் செந்துறை எனப்பெயராம்
பொருளின் விழுமம் பற்றித் தொடைகள் இலாதது செந்தொடை என்பதுபோல்.

செந்துறைப் பாட்டு செந்துறை வெள்ளை எனவும் பெயர்பெறுமே
இந்த நாளில் எவ்வகைப் பொருளும் தாங்கும் செந்துறையே.

பொதுவில் பொருளது முடியும் ஈரடியில்
அதுவே இன்று நீளும் பலவடியே.

முதலில் வந்த குறள்வெண் செந்துறைப் பாக்களையே
எதுகை மோனை ஓசை நோக்கி எழுதிலையே.

சான்று
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை.
--முதுமொழிக் காஞ்சி.


ஆசான் பசுபதி நூலது செந்துறை பின்னாள் வளம்பெறுமே
பேசும் எதுகையும் மோனையும் ஒழுங்கில் வரவே எனக்காட்டும்.
(’கவிதை இயற்றிக் கலக்கு’, பக்.84)

சான்றுகள்
ஆத்தி சூடி யமர்ந்த தேவனை
ஏத்தி யேத்தித் தொழுவோ மியாமே.

கொன்றை வேந்தன் செல்வ னடியினை
என்று மேத்தித் தொழுவோ நாமே.
--ஔவையார்

நன்றி யாங்கள் சொன்னக்கால் நாளு நாளு நல்லுயிர்கள்
கொன்று தின்னும் மாந்தர்கள் குடிலஞ் செய்து கொள்வாரே.
--யாப்பருங்கலம்


எண்ணில் அளவொத்த சீர்கள் பயில
எண்ணில் இரண்டே அடிகள் வந்திடும்
செந்தொடை பின்னாள் பலவடி நீள
வந்து நிற்கும் சான்றுகள் கீழே
இவ்வகைப் பாக்களில் பொதுவில் எதுகை
செவ்விதின் அமையும் ஈரடிக் கொன்றென.

இரண்டடியின் மிக்க செந்துறைச் சான்றுகள்
1. அடியெதுகையின்றிப் பொழிப்பு மோனை பயின்றது


தேன்பெருகுஞ் சோலை தென்னன் வளநாடு
வாழை வடக்கீனும் வான்கமுகு தெற்கீனும்
கட்டுக் கலங்காணும் கதிருழக்கு நெற்காணும்
பஞ்சங் கிடையாது பாண்டி வளநாட்டில்.
--அல்லியரசாணிமாலை


2. அடியெதுகையும் பொழிப்பு மோனையும் பயின்றது

பார்புகழ் நோபல் பரிசுவென்று பாரதத்தில்
பேர்பெற்ற ராமனது பேச்சில் நகையிழையும்
விருந்துக்குச் சென்றிருந்தார் விஞ்ஞானி ஓர்நாள்
அருந்தவோர் அரியமது அளித்தனர் யாவர்க்கும்
மதுக்கிண்ணம் பார்த்ததுமே மறுத்துவிட்டார் ராமன்
இதற்கென்ன காரணம் என்றவர்க்(கு) உரைத்தார்
ராமன்விளை வைஸோம ரசத்தில் ஆயலாம்
ஸொமரசம் செய்விளைவை ராமனிடம் அன்று!

--பசுபதி

*****
 
6.82. குறள் வெண்செந்துறை வளர்ச்சி

அளவொத்த அடிகள் இரண்டில் அமையும் குறள்வெண் செந்துறை
அளவின் வசதியால் அழகாய் வளரும் சாதனை செய்ததே.

ஆசான் பசுபதி நூலது செந்துறையின் பின்னாள் வளர்ச்சியில்
பேசும் எதுகையும் மோனையும் ஓசையும் ஒருங்கே வந்ததை விரித்திடுமே.
(’கவிதை இயற்றிக் கலக்கு’, பக்.84)

தோற்றம்
தோன்றிய போது அளவடி யிரண்டில்
எதுகை மோனை யின்றிய மைந்ததே.

சான்று:
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை.
--முதுமொழிக் காஞ்சி.

எதுகை மோனையுடன்
அடியெது கையுடன் பொழிப்பில் மோனையும்
திடம்பட அமைந்தன பின்னெழு பாக்களிலே.

சான்றுகள்
ஆத்தி சூடி யமர்ந்த தேவனை
ஏத்தி யேத்தித் தொழுவோ மியாமே.

கொன்றை வேந்தன் செல்வ னடியினை
என்று மேத்தித் தொழுவோ நாமே.
--ஔவையார்

பொழிப்பு மோனையுடன்
எதுகை அடியில் ஏதும் இன்றி
பொழிப்பில் மோனையிற் போனதும் உண்டே.

சான்றுகள்
எழுத்தறி வித்தவன் இறைவ னாகும்
கல்விக் கழகு கசடற மொழிதல்
செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்
மந்திரிக் கழகு வரும்பொருள் உரைத்தல்
--அதிவீரராம பாண்டியர், வெற்றிவேட்கை

தேன்பெருகுஞ் சோலை தென்னன் வளநாடு
வாழை வடக்கீனும் வான்கமுகு தெற்கீனும்
கட்டுக் கலங்காணும் கதிருழக்கு நெற்காணும்
பஞ்சங் கிடையாது பாண்டி வளநாட்டில்.
--அல்லியரசாணிமாலை

பொழிப்பு எதுகையுடன்
எதுகை அடியில் எதுவும் இன்றி
பொழிப்பில் எதுகையின் வழக்கும் உண்டே.

சான்றுகள்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
இல்லறம் அல்லது நல்லறம் அன்று
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
--ஔவையார், கொன்றை வேந்தன்

ஆனைகட்டுந் தூராகும் வானமுட்டும் போராகும்
எட்டுத் திசைகளையும் கட்டியர சாள்வானாம்

சிந்தடி, குறளடிக் குறள்வெண் செந்துறைகள்
அளவொத்தே அடிகள் பயில்வதால்
அளவடிக் கீழும் அமையுமே.

அறம்பொரு ளின்பம் பெறும்பயனாம்
ஆன்றோர் உரையே அறமாகும்
இன்சொல் அன்புக் கிருப்பிடமாம்
ஈருளங் கலந்த தில்லறமாம்
உண்மையே ஒழுக்கத் துரைகல்லாம்
ஊரவர் வாழ்வுக் குறுதுணைசெய்.
--புலவர் குழந்தை

அறஞ்செய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
--ஔவையார், ஆத்திசூடி

கண்ணிகள் போல்
(வெண்டுறை)
ஈரடி யளவொத்தே சீர்கள் ஓசையில்
நாரினில் இருமலராய் நின்றே - சீரிய
தனிச்சொல் அமைந்தோ அமையாமலோ ஈற்றடி
குனிந்தோ அளவொத்தோ வரும்செய்யுற் கண்ணிகள்
குறள்வெண் செந்துறை உருவினை யொட்டியே
பிறந்தன என்பர் இன்று.

சான்றுகள்
நன்றி யாங்கள் சொன்னக்கால் நாளு நாளு நல்லுயிர்கள்
கொன்று தின்னும் மாந்தர்கள் குடிலஞ் செய்து கொள்வாரே.
--யாப்பருங்கலம்

பேராப் பெரும்பகை தீரப் பிறவேந்தர்
ஊராக் குலிச விடையூர்ந்தான் - சோராத்

துயில்காத்து அரமமகளிர் சோர்குழை காத்தும்பர்
எயில்காத்த நேமி இறையோன்
--மூவருலா: குலோத்துங்க சோழனுலா, கண்ணிகள் 3-4

ஆங்கார முள்ளடங்கி யைம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம்பெறுவ தெக்காலம்? .. 2
--பத்ரகிரியாரின் மெய்ஞ்ஞானப் புலம்பல்

கட்டளை அடிகள்
அடிகளில் ஒற்றுகள் கணக்கிடாத எழுத்துகள் எண்ணிக்கை யொன்றி
அடிச்சீர் நிரலோர் வாய்பாடில் அமைவது கட்டளை யடிகளாம்.

கட்டளை யடிகளாய் மாலை மாற்றாய்ச் சம்பந்தர் அருளிய
எட்டும் மூன்றும் பாவரும் பதிகம் குறள்வெண் செந்துறையே.

யாமா மாநீ யாமாமா யாழீ காமா காணாகா
காணா காமா காழீயா மாமா யாநீ மாமாயா ... 1
--சம்பந்தர், மாலைமாற்றுப் பதிகம்

சுப்ரமண்ய பாரதியார்
பாரதியின் பாக்கள் பலவற்றில் பயிலுமே
ஆரமாய் ஈரடிக் குறள்வெண் செந்துறையே.

வானில் பறக்கின்ற புள்ளெலாம்நான்;
மண்ணில் திரியும் விலங்கெலாம்நான்;
கானில் வளரும் மரமெலாம்நான்,
காற்றும் புனலும் கடலுமேநான்.
--இரட்டைக் குறள்வெண் செந்துறை

கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம்மறப்பார்
வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்
ஏனடாநீ நேற்றைக் கிங்குவர வில்லையென்றால்
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்ததென்பார்;
--கண்ணன் என் சேவகன்

பாரதியின் பாக்களில் வெண்டளை பயின்று
சாரத்தில் வெண்பாவாய் அமைவது காண்க.

குயில்பாட்டில் பாஞ்சாலி சபதத்தின் பகுதிகளில்
பயில்வது செந்துறையே என்பார் குழந்தையார்.
[புலவர் குழந்தையின் ’தொடையதிகாரம்’, பக்.65]

பொருள மைதியோ டெளிதில் பாடுதற் கேற்ற செய்யுளுருக்
குறள்வெண் செந்துறையே அம்மானைப் பாக்களில் என்பார் குழந்தையார்.

*****
 
6.84. குறட்டாழிசை

குறள்வெண் பாவினம் இரண்டாம் குறள்வெண் செந்துறை தாழிசையே
குறட்டா ழிசையே மூவகை வருமே.

வகை 1. முதலடி பலசீர் ஈற்றடி குறைசீர்

அடியிரண் டாகி நாற்சீ ரின்மிகு பலசீர் கொண்டே முதலடியும்
அடியிரண் டில்சீர் குறைவரும் வகைக்குறட் டாழிசையே. ... 1.

சான்று:
நண்ணு வார்வினை நைய நாடொறும் நற்ற வர்க்கர சாய ஞானநற்
கண்ணி னானடி யேயடி வார்கள் கற்றவரே.
--யாப்பருங்கலம்

பரசு பாணியர் பாடல் வீணையர் பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
தரசு பேணிநின் றாரிவர் தன்மை யறிவாரார்.
--சம்பந்தர் தேவாரம், 3.112.1.

வகை 2. சிதைந்த குறள்வெண்பா

குறள்வெண் பாவில் வேற்றுத் தளைமிகக்
குறட்டா ழிசைவகையா கும். ... 2.

சான்று (யாப்பருங்கலம்):
வண்டார்பூங் கோதை வரிவளைக்கைத் திருநுதலாள்
பண்டைய லல்லள் படி.
(முதலடி ஈற்றில் கலித்தளை வந்தது)

தண்ணந் தூநீர் ஆடச் செய்த
வண்ண ஓதி கண்.
(அனைத்தும் ஆசிரியத்தளை)

வகை 3. சிதைந்த குறள் வெண்செந்துறை

விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையும் இல்லாக் குறள்வெண் செந்துறையில்
விழுப்பமில் திண்ணிய பொருளுடன் சிதைந்தே வரும்வகை குறட்டா ழிசையே. ... 3.

விழுமிய திண்ணிய பொருள்வகை யெல்லை மாறிய விந்நாளில்
பழுதுள குறள்வெண் செந்துறை தாழிசை வேற்றுமை அரிதே.

சான்று (யாப்பருங்கலம்):
அறுவர்க் கறுவரைப் பெற்றுங் கவுந்தி
மறுவறு பத்தினி போவையி னீரே.

என்னே செல்லுதி வாழி நங்காய்
பொன்னே சொல்லுவன் போகு நங்காய்

*****
 
6.86. வெண்டுறை

அளவடி நாற்சீர் கொண்டோ அதனின் மிக்கோ
அளவில் மூன்றடி முதலே ஏழின் மிகாதே
முன்னடி களினும் பின்னடி களின்சீர் முறையாய்
ஒன்றோ மேலோ குன்றி வருவதே
வெண்டுறை யிலக்கண மென்ப தறிக.

முன்னடி களினும் பின்னடிச் சீர்கள், இடையிடை
அன்று, முறையாய்க் குறைந்தே வெண்டுறை வருமே
அடிகளில் ஓரொலி வந்தால் ஓரொலி வெண்டுறை
அடிச்சீர் குன்றும் பின்னடி களிலே
வேறொலி வந்தால் வேற்றொலி வெண்டுறை.


சான்றுகள்: ஓரொலி வெண்டுறை
(மூன்றடி)
தாளாள ரல்லாதார் தாம்பலராயக்கா லென்னா மென்னாம்
யாளியைக் கண்டஞ்சி யானைதன் கோடிரண்டும்
பீலிபோற் சாய்த்துவிடும் பிளிற்றி யாங்கே.
--யா.கா.

(நான்கடி)
குழலிசைய வண்டினங்கள் கோழிலைய செங்காந்தட் குலை மேற்பாய
அழலெரியின் மூழ்கினவா லந்தோ வளியவென் றயல்வாழ் மந்தி
கலுழ்வனபோ னெஞ்சழிந்து கல்லருவி தூஉம்
நிழல்வரை நன்னாட னீப்பானோ வல்லன்.
--யா.கா.

(ஐந்தடி)
வெறியுறு கமழ்கண்ணி வேந்தர்கட் காயினும்
உறவுற வரும்வழி யுரைப்பன வுரைப்பன்மற்
செறிவுறு தகையினர் சிறந்தன ரிவர்நமக்
கறிவுறு தொழிலரென் றல்லவை சொல்லன்மின்
பிறபிற நிகழ்வன பின்.
--யா.கா.

சான்றுகள்: வேற்றொலி வெண்டுறை
(நான்கடி)
அருணையதிரும் கழலாறணுசெஞ் சடையாளர் அரிவை பாகர்
கருணைநெடுங் கடலான்பெரு மானார்தா டொழுதார் நதியை நாடின்
மரணமிலா இமையவர்தம் வானுலகம் அன்றே
பொருணிரையும் நான்மறையோர் புகலுமத்தாட் பூவே.
--பசுபதி, க.இ.க.

(ஐந்தடி)
கல்லாதார் நல்லவையுட் கல்லேபோற் சென்றிருந்தாற் கருமம் யாதாம்
இல்லாதார் செல்வரைக்கண் டிணங்கியே ஏமுற்றால் இயைவ தென்னாம்
பொல்லாதார் நன்கலன்கள் மெய்புடையப் பூண்டாலும் பொலிவ தென்னாம்
புல்லாதார் பொய்க்கேண்மை புனைந்துரைத்தால் ஆவதென்னே
அல்லாதார் பொய்யாவ தறிபவேல் அமையாதோ?
--யா.கலம்.

(ஆறடி)
முழங்கு களியானை மூரிக் கடற்படை முறித்தார் மன்னர்
வழங்கும் இடமெல்லாம் தன்புகழே போக்கிய வைவேல் விண்ணன்
செழுந்தண்பூம் பழைசையுட் சிறந்துநா ளுஞ்செய
எழுந்தசே திகத்துள் இருந்தவண் ணல்லடி
விழுந்தண்பூ மலர்களால் வியந்துநா ளுந்தொழத்
தொடர்ந்துநின் றவ்வினை துறந்துபோ மாலரோ.
--யா.கலம்.

(ஏழடி)
முழங்குதிரைக் கொற்கை வேந்தன் முழுதுலகும் ஏவல்செய முறைசெய்கோமான்
வழங்குதிறல் வாள்மாறன் மாச்செழியன் றாக்கரிய வைவேல் பாடிக்
கலங்கிநின் றாரெலாம் கருதலா காவணம்
இலங்குவாள் இரண்டினால் இருகைவீ சிப்பெயர்ந்
தலங்கல்மா லையவிழ்ந் தாடவா டும்மிவள்
புலங்கொள்பூந் தடங்கட்கே புரிந்துநின் றாரெலாம்
விலங்கியுள் ளந்தப விளிந்துவே றாபவே.
--யா.கலம்.

*****
 
6.88. வெண்டாழிசை

சிந்தியல் வெண்பாவில் வெண்டளை பிறழ்ந்தே
வந்தமூன் றடியில் வெண்பாபோல் ஈற்றடி
வந்துமுடி வதுவெண்டா ழிசை.

ஒருபொருள்மேல் வெண்டாழிசை யடுக்கி மூன்றோ
இரண்டோ ஒன்றோவரும்; சிந்தியல்வெண் பாமூன்று
வரினது வெள்ளொத் தாழிசை.


சான்றுகள்: வெண்டாழிசை
(வெண்டளை பிறழ்ந்தது)
போதார் நறும்பிண்டிப் பொன்னார் மணியணையான்
தாதார் மலரடியைத் தணவாது வணங்குவார்
தீதார் வினைகெடுப்பார் சிறந்து.
--யா.கலம்.

(ஆசிரியத்தளை)
நன்பி தென்று தீய சொல்லார்
முன்பு நின்று முனிவ செய்யார்
அன்பு வேண்டு பவர்.
--யா.கலம்.

(கலித்தளை)
சீர்கொண்ட கருங்கடலிற் றிரைமுகந்து வலனேந்திக்
கார்வந்த ததனோடும் கமழ்குழலாய் நிற்பிரிந்தார்
தேர்வந்த திதுகாணாய் சிறந்து.
--யா.கலம்.

(வஞ்சித்தளை)
முழங்குகடல் முகந்த மூரிக் கொண்மூத்
தழங்குகுரல் முரசிற் றலைசிறந் ததிர்ந்து
வழங்கின‍இவை காணாய் வந்து.
--யா.கலம்.

(ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வந்த சிந்தியல் வெண்பாக்கள்)
அன்னாய் அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி
ஒன்னார் உடைபுறம் போல நலம்கவர்ந்து
துன்னான் துறந்து விடல்.

ஏடி அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி
கூடார் உடைபுறம் போல நலங்கவர்ந்து
நேடான் துறந்து விடல்.

பாவாய் அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி
மேவார் உடைபுறம் போல நலங்கவர்ந்து,
காவான் துறந்து விடல்’
--யா.கலம்.

*****
 
6.90. வெள்ளொத்தாழிசை

சிந்தியல் வெண்பா ஒருபொருள்மேல் மூன்றடுக்கி
வந்ததுவெள் ளொத்தா ழிசையென வாகும்

ஒருபொருள்மேல் மூவெண்பாக் கூட்டு.

வெண்பாவை யொத்துவந்த தாழிசை யென்பதால்
வெண்பாமூன் றும்வெள்ளொத் தாழிசை யாகும்
பொதுவிலிவை இன்னிசைவெண் பா.

மூன்றுமேவெண் பாவெனில் தாழிசைப் பேரேனோ?
பஃறொடைபோ லின்றி இடையிடை சிந்தடியாய்
ஓசையது தாழ்வதாலிப் பேர்.

சான்றுகள்:
அன்னாய் அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி
ஒன்னார் உடைபுறம் போல நலம்கவர்ந்து
துன்னான் துறந்து விடல்.

ஏடி அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி
கூடார் உடைபுறம் போல நலங்கவர்ந்து
நேடான் துறந்து விடல்.

பாவாய் அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி
மேவார் உடைபுறம் போல நலங்கவர்ந்து,
காவான் துறந்து விடல்’
--யா.கலம்.

அம்பேருண் கண்ணார்க் கழிந்த மடநெஞ்சே !
கொம்பே றுடையான் கழலிறைஞ்சா தென்கொலியாம்
வம்பே இறந்து விடல்.

வாணேருண் கண்ணார்க் கழிந்த மடநெஞ்சே !
நீணாகம் பூண்டான் கழலிறைஞ்சா தென்கொலியாம்
வீணே இறந்து விடல்.

கோளாருண் கண்ணார்க் கழிந்த மடநெஞ்சே !
ஆளாக ஆண்டான் கழலிறைஞ்சா தென்கொலியாம்
வாளா இறந்து விடல்.

*****
 
6.92. வெளிவிருத்தம்

சீரைந் தாகி நெடிலடி பயிலும் - வெளிவிருத்தம்
சீரைந்தில் ஒரேதனிச்சொல் அடிதோறும் பயிலும் - வெளிவிருத்தம்
ஓரெதுகை மூன்றடியோ நாலடியோ பயின்றுவரும் - வெளிவிருத்தம்.

இருவகையாம் பொருள்முடிந்தால் அடிமறி மண்டில வெளிவிருத்தம்
பொருளதுவே அடிதோறும் தொடர்ந்தா லதுநிலை - வெளிவிருத்தம்
இருவகையும் இன்று இல்லையே வழக்கில் - வெளிவிருத்தம்!


சான்றுகள்: அடிமறி மண்டில வெளிவிருத்தம்
(அடிமாறினும் பொருள் மாறாத வகை)

மூன்றடி
உற்ற படையினார் பெற்ற பகையினார் - புறாவே
பெற்றம் உடையார் பெருஞ்சிறப் பாண்டகை - புறாவே
மற்றை யவர்கள் மனையிற் களிப்பதோ - புறாவே!
--யா.கலம்.

ஆடு கழைகிழிக்கும் அந்தண் புயலிற்றே - எந்தைகுன்றம்
நீடு கழைமேல் நிலாமதியம் நிற்குமே - எந்தைகுன்றம்
கூடு மழைதவழும் கோடுயர் சந்தமே - எந்தைகுன்றம்.
--யா.கலம்.

நான்கடி
சொல்லல் சொல்லல் தீயவை சொல்லல் - எஞ்ஞான்றும்
புல்லல் புல்லல் தீநெறி புல்லல் - எஞ்ஞான்றும்
கொல்லல் கொல்லல் செய்நலம் கொல்லல் - எஞ்ஞான்றும்
நில்லல் நில்லல் நீசரைச் சார்ந்தங் - கெஞ்ஞான்றும்.
--யா.கலம்.

ஆவா என்றே அஞ்சினர் ஆழா௧ - ஒருசாரார்
கூகூ என்றே கூவிளி கொண்டார் - ஒருசாரார்
மாமா என்றே மாய்ந்தனர் நீந்தார் - ஒருசாரார்
ஏகிர் நாய்கீர் என்செய்தும்த் என்றார் - ஒருசாரார்.
--யா.கலம்.

சேயரி நாட்டமும் செவ்வாயும் அல்குலுமோ - அம்மானாய்
ஆய்மலரும் தொண்டையும் ஆழியந் திண்டேரும் - அம்மானாய்
மாயிருந் தானை மயிடன் றலையின்மேல் - அம்மானாய்
பாயின சீறடிப் பாவை பகவதிக்கே - அம்மானாய்!
--யா.கலம்.

சான்றுகள்: நிலை வெளிவிருத்தம்
(பொருள் மாறுவதால் அடி மாறா வகை)

மூன்றடி
ஏதங்கள் நீங்க எழிலிளம் பிண்டிக்கீழ் - புறாவே
வேதங்கள் நான்கும் விரித்தான் விரைமலர்மேற் - புறாவே
பாதம் பணிந்து பரவுதும் பல்காலும் - புறாவே!

நான்கடி
வெஞ்சமன் அஞ்ச வேலொடு எதிர்ந்தால் - நமரங்காள்
அஞ்சல் எனுஞ்சொல் ஆர்சொல வல்லார்? - நமரங்காள்
மஞ்சிவர் இஞ்சி மன்றம் இறைஞ்சீர் - நமரங்காள்
நஞ்சம் அயின்றவர் நல்குவர் மாதோ நமரங்காள்.

*****
வெண்பா வெண்பாவின இயல் முற்றியது.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top