• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

என் கதை முயற்சிகள்

Status
Not open for further replies.
னு ’கான்வென்ட்’ படிப்புக்காக மதுரை போய்விட்டதைத் தொடர்ந்து மூன்று வருடங்களை வெறுமையாகவும், அசுவாரஸ்யத்துடனும் ஓட்டியவன் வாழ்க்கையில் இந்தப் புதியவள் குறுக்கிட, மீண்டும் வசந்தம் துளிர்த்தது.

"Summer is coming, summer is coming,
I know it, I know it, I know it.
Light again, leaf again, life again, love again,"
Yes, my wild little poet.
---Alfred Tennyson

வசந்தம் வருகிறது வசந்தம் வருகிறது!
தெரியும், தெரியும், தெரியும்.
மீண்டும் உயிர்கள், மீண்டும் துளிர்கள்,
மீண்டும் குயில்கள், மீண்டும் காதல்!
ஆம்*என் பொல்லாத சின்னக் கவிஞனே!


என்றது டயரி.

கொஞ்ச நாளிலேயே அவள் பெயர் ஜெயந்தி என்று தெரிந்துகொண்டான். சாமர்த்தியமாகக் கேட்டபோது வசந்தி சொன்னாள். பெயரைச் சொன்னாலும் அவள் படிக்கும் வகுப்பைச் சொல்லவில்லை.

ஒருநாள் எதிர்பாராமல் கனவுகண்டு ஜெயந்தியுடன் பேசி அவள் எட்டாம் வகுப்பில் படிப்பதை அறிந்துகொண்டான்!

நேரில் பேசத்தான் முடியவில்லை. அல்லது துணியவுல்லை. அவள் தன் எதிர்வீட்டுப் பையனுடன் சமயத்தில் ஓரிரு வார்த்தைகள் பேசக்கண்டு பொறாமைப்பட்டும் வார்த்தைகள் வெளிவரவில்லை. என்ன பேசுவது என்று புரியவில்லை.

அவள்தான் எவ்வளவு ’ஸோஷல்’ஆக இருக்கிறாள்!

தினமும் தவறாமல் பிள்ளையார் கோவிலுக்குப் போகும்போது ஒருநாள் கொஞ்சம் சீக்கிரமாகவே வந்துவிட்டவன் அவள் தன் வீட்டு வாசலில் நிற்பதைப் பார்த்து என்ன செய்வதென்று தெரியாமல் கோவிலின் வலது திண்ணையில் பெரிய வாசல் கதவின் பின் மறைவாக உட்கார்ந்துகொண்டு அவளைக் கவனிக்கத் தொடங்கினான்.

அந்த இடம் ஒரு ’வான்டேஜ் பாயின்ட்’ஆக அமைந்து, தினமும் தீபாராதனைக்குச் சற்று முன்னரே வந்து அமர்ந்து அவளைக் கவனிப்பது அவனுக்கு வழக்கமாகியது.

அடிக்கடி முன்புறம் சரியும் தன் இரட்டைப் பின்னல்களைத் தலையை வெட்டியவண்ணம் நளினமாக அவள் பின்னுக்குத் தள்ளிவிட்டு, பாண்டி விளையாடுவதையும், ரிங் டென்னிஸ் விளையாடுவதையும், அல்லது வெறுமனே உட்கார்ந்திருப்பதையும், தன் அம்மாவுடன் பேசிக்கொண்டிருப்பதையும் (அம்மா ஏன் இந்த மாமியுடன் பழகவில்லை என்று நினைத்தது உண்டு) அவனது கண்கள் அளவெடுத்துக் கொண்டிருக்க, ஆறு மணி யானதும் கோவில் மணி கணீரென்று ஒலிக்க, அவள் கையில் நெய்க்கிண்ணத்துடன் கோவிலை நோக்கி வரும்போது அவன் அப்போதுதான் வந்தவன் போல் உள்ளே நுழைந்து, அவள் பின்னால் வர, வெளிப் பிரகாரத்தை வலம்வரத் தொடங்குவான்.

பின்னர் தீபாராதனை ஆரம்பிக்கும்போது அவள் பெண்கள் வரிசையில் நின்று வழிபட இவன் எதிர் வரிசையில் நின்று அவளுக்கும் சேர்த்து வணங்கிக்கொண்டு, கற்பூரம் காட்டும்போது அவள் விரல்களை விறைப்பாக வைத்துக்கொண்டு தன் உள்ளங்கைகளால் கன்னத்தில் போட்டுக்கொள்வதைப் பார்த்து மனதுக்குள் சிரித்தபடியே தானும் அதுமாதிரி செய்வான்.

கோவில் மணிகள் ஓய்ந்ததும் அவள் வந்த சுவடு தெரியாமல் திரும்பிவிட இவன் கொஞ்ச நேரம் உட்கார்ந்துவிட்டுத் திரும்பும்போது அவள் அம்மாவின் குரல் கேட்கும்.

"வாசு, ஜெயா என்ன பண்றா, படிக்கறாளா பாரு?"

ஜெயந்தியுடன் பேசவேண்டும் என்கிற ஆவல் எதிர்பாராமல் ஒருநாள் உள்ளூர் நூலகத்தில் நிறைவேறியது.

அவன் அந்தச் சின்ன நூலகத்துக்கு ’ரெகுலர் விசிட்டர்’. மற்ற பையன்கள் கதைப் புத்தகங்களை நாடும்போது இவன் கதைகள் தவிர, என்.கோமதியின் தமிழ்நாடு அரசு விருது பெற்ற ’அணுவும் நாமும்’, கலைக்கதிர் பத்திரிகை வெளியீட்ட ’நாமும் விஞ்ஞானிகளாவோம்’ போன்ற புத்தகங்களையும் விரும்பிப் படிப்பது வழக்கம்.

அன்று அவன் அபிமான கதாசிரியர் தமிழ்வாணனின் ’துப்பாக்கி முனை’யைப் பிடித்துக் கொண்டிருந்தபோது அவள் உள்ளே நுழைந்தாள்.

கொஞ்ச நேரம் ’ஷெல்ஃப்’இல் தேடிவிட்டு நூலகரிடம் "தமிழ்வாணன் புக் ஏதாவது இருக்கா?" என்றாள்.

இவன் மனதுக்குள் சிரித்துக்கொண்டான். இவனும் நண்பர்களும் விரும்பிப் படிக்கும் தமிழ்வாணன் நாவல்களை மற்றவர் கண்ணில் படக்கூடாதென மற்ற ’சப்ஜக்ட்’ புத்தகங்களிடையே ஒளித்து வைப்பது வழக்கம்!

"ஷெல்ஃப்ல பாரும்மா."

"ஷெல்ஃப்ல இல்லையே!"

"பின்ன வெளில போயிருக்கும்."

இவன் எழுந்து அவளுக்குக்காகத் தேடுவதுபோல் தேடி அவள் போய்விடப் போகிறாளே என்ற கவலையில் கொஞ்ச நேரம் மலைத்து, கிடைத்த ஒன்றிரண்டு புத்தகங்களை எடுத்து வந்து நூலகரில் வலப்புறம் குடைந்து கொண்டிருந்தவளிடம் நீட்டியபடி மெல்லிய குரலில் (அது நூலகம் என்பதால் ’விஸ்பரில்’ பேசினானா அல்லது உண்மையில் குரல் எழுமபில்லையா தெரியவில்லை),

"ஜெயந்தி, தமிழ்வாணன் புக்ஸ்."

பார்த்தாள். ’கடலில் தெரிந்த கை’, ’ஆந்தை விழிகள்’.

"இதெல்லாம் நான் படிச்சாச்சு."

"அப்ப இந்த ’நீலப் பெட்டி’ படி. நல்லா இருக்கும்."

"வேண்டாம்."

"உனக்குப் படிக்கிறதுன்னா இனிமே தமிழ்வாணன் புதுசா எழுதினாத்தான் உண்டு போலிருக்கு."

சிரித்துக்கொண்டாள். சுற்றிலும் பார்த்தவள் கண்கள் ஒரு பையன் கையில் இருந்த புத்தகத்தில் நிலைக்க, நூலகரிடம் அதைக் கேட்டாள். ’சி.ஐ.டி. 009’!

அவள் கேட்டதும் அந்தப் பையன் மறுக்கத் தோன்றாமல் உடனே புத்தகத்தைக் கொடுத்துவிட்டான். பொறாமையாக இருந்தது. அவனாக இருந்திருந்தால் புத்தகம் படிக்க அவளையும் துணைக்கு அழைத்திருப்பான்.

நூலகத்தில் உண்டான அறிமுகத்தில் திருப்தி அடையாமல், அல்லது அதை வளர்த்துக்கொள்ள நினைத்து, பல நாட்கள் கோவிலில் முயன்றும் அவளைத் தனியே சந்திக்க வாய்ப்பு அமையவில்லை. ஒன்று வெளிப்பிரகாரம் கூட்டமாக இருக்கும் அல்லது அன்றைக்குப் பார்த்து அவள் வரமாட்டாள். அல்லது வந்து இவனைக் கடந்து வேகமாகச் சென்றுவிடுவாள். ஒருநாள் இவன் நவக்கிரகங்களைச் சுற்றும்போது அவள் கோயில் திண்ணையில் அமர்ந்ததைப் பார்த்துக் கையசைத்து காத்திருக்குமாறு ஜாடை காட்டியும் பலனில்லாது போயிற்று.

*** *** ***
 
11

என்கண்ணை மறந்துனிரு கண்களையே
என்னகத்தில் இசைத்துக்கொண்டு
நின்கண்ணால் புவியெல்லாம் நீயெனவே
நான்கண்டு நிறைவுகொண்டு
---மஹாகவி பாரதியார்


ற்றொரு நாள் தீபாராதனையின்போது அவளை நேர் எதிரில் தரிசிக்க முடிந்தது.

தாழ்ந்து தரைநோக்கும் கரிய விழிகளும்
கோவில் விளக்கில் மின்னும் மூக்குத்தியும்
ஓசையின்றி முணுமுணுக்கும் இதழ்களும்
எப்போதும் முன்னால் வந்துவிழும்
அந்தப் பொல்லாத பின்னலும்
விரல்களைப் பின்னிக்கொண்டு அவள்தான்
தழைந்து நின்ற தோற்றமும்
அந்தச்சில நிமிடங்களில்
அவன்மனதில் படம்பிடிக்கப் பட்டு
இப்போது நினைத்தாலும் கண்முன் தோன்றும்.


கற்பூர ஆராதனை முடிந்ததும் அர்ச்சகர் கற்பூரத் தட்டை வரிசையாக எல்லோருக்கும் நீட்ட அந்தக் கற்பூர ஜோதியைக் கண்ணில் ஒற்றிக்கொண்ட பின் அவர் தரும் விபூதி-குங்குமப் பிரசாதம் பெற்றுக்கொள்ள அவள் தன் கையை நீட்டியபோது அந்த அண்மையில் அவளது நீண்ட, அழகிய பொன்னிற விரல்களைப் பார்த்துப் பூரித்தான்.

ருநாள் அவளைத் தனியே வெளிப் பிரகாரத்தில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.

வழக்கம்போல் ஆறுமணியளவில் அவன் திண்ணையில் அமர்ந்து பார்த்திருக்க, அவள் கையில் நெய்க்கிண்ணத்துடன் ஒரு தெய்வலோகப் பெண்போல் நடந்து வந்தபோது---

She walked in beauty என்று டயரி பைரனின் கவிதையை எதிரொலித்தது.

இந்தத் தடவை எப்படியும் பேசிவிடவேண்டும் என்று நினைத்து இவன் கொஞ்சம் முன்னால் நடந்து பிரகாரத்தில் நுழைந்து, முதல்வரும் மூலவருமான விநாயகப் பெருமான் முன்நின்று வழிபடத் தொடங்க, அவள் கொஞ்சம் தயங்கிப் பின்னால் நின்றாள்.

மனம் பிரார்த்தனையில் ஒன்றவில்லை. பேசுவதற்கு இந்த இடம் சரியில்லை. யாராவது பார்த்து வத்திவைத்துவிடக் கூடும். என்ன பேசுவது?

விநாயகரை மும்முறை வலம்வந்து வலப்புறம் திரும்ப, தக்ஷிணாமூர்த்தி.

’குருப்ரம்மா, குருவிஷ்ணு, குருதேவ மஹேஸ்வர...’ என்று மனம் ’ரெடிமேட்’ வார்த்தைகளை முணுமுணுக்க, கண்கள் அவள் விநாயகரை வழிபடுவதைப் பார்த்திருக்க...

ம்ஹூம். இப்போதும் முடியாது. ஒருவேளை வேண்டுமென்றே தாமதிக்கிறாளோ?

அடுத்தது, கொஞ்சம் நடக்கவேண்டும். நடந்து வலப்புறம் திரும்பப் பெரிய முருகன் சந்நிதி. சந்நிதியின் சின்ன வாசல் வழியே வந்தால் தனியாக அமர்ந்திருக்கும் சண்டிகேஸ்வரரைப் பார்க்கலாம்.

என்ன பேசுவது?

பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவள் அவனை சற்று விரைவாகக் கடந்து முருகன் சந்நிதியை நோக்கி நடக்க, இவன் முதலில் முருகன் அடுத்து சண்டிகேஸ்வரர் என்ற தன் வழக்கத்தை விட்டு முதலில் சண்டிகேஸ்வரரை அவசரம் அவசரமாகக் கும்பிட்டுக் கைவிரல் சொடுக்கி நூலிழை போட்டுவிட்டு அந்தச் சின்ன வாசல் வழியே முருகன் சந்நிதிக்குள் அப்பிரதட்சிணமாக நுழந்தபோது அசரீரியாக அவள் குரல் கேட்டது.

என்ன பேசுவது?

என்ன ஸ்லோகங்கள் முணுமுணுத்தாள் என்பது காதில் விழவில்லை. ஆனால் அவள் குரலில் கொஞ்சம் கட்டை சுருதி ஒலித்ததாகத் தோன்றியது.

அனு மாதிரி ’மெல்லிஃப்ளூவஸ்’ குரல் இல்லைதான். இருந்தாலும் இந்தக் குரலும் இனிமையாகவே ஒலிக்கிறது.

சந்நிதியில் முருகக் கடவுள் மூன்றுவித தோற்றங்களில் எழுந்தருளி யிருந்தார். சந்நிதியின் வலது பக்கம் பாலமுருகன், நடுவில் கல்யாண முருகன், இடது பக்கம் தண்டாயுதபாணி.

இவன் பாலமுருகனிடம் நின்றிருந்தபோது அவள் தண்டாயுதபாணியிடம் வேண்டிக்கொண்டு நின்றாள். அடுத்து எப்படியும் இருவரும் கல்யாண முருகனிடம் வந்தாக வேண்டும்.

அந்தக் கணமும் வந்தது. இருவரும் எதிரும் புதிருமாக நின்றிருக்க, இவன் அவளையே பார்த்துக்கொண்டிருக்க, அவள் கண்கள் முருகனை நோக்கியிருக்க, இதழ்கள் தாழ்ந்த குரலில் முணுமுணுக்க---

என்ன பேசுவது?
உன்பெயர் ஜெயந்திதானே?
சே! அதான் அன்னைக்கு லைப்ரரில பேர் சொல்லித்தானே கூப்பிட்டேன்?

எய்த் ஸ்டான்டர்ட்தானே படிக்கறே?
நோ. இட்’ஸ் வெரி ஸிம்பிள்.

உனக்கு வசந்தியைத் தெரியுமில்ல?
இதென்ன கேள்வி? இருவரும் ஒரே ஸ்கூல். வசந்தி இவளுக்கு சீனியர். இருவரையும் அடிக்கடி சேர்ந்து பார்த்திருக்கிறான். வீட்டுக்குக்கூட ஜெயந்தி ஒன்றிரண்டு முறை வந்திருக்கிறாள்.

ஜெயந்தி, உங்கப்பா எந்த ஸ்கூல்ல வேலை பார்க்கிறார்?
அவள் அப்பாவைப்பத்தி என்ன இப்ப?

ஜெயந்தி, உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா? அன்னைக்கு முதமுதல்ல உங்காத்துக்கு வந்திருந்தப்ப கண்கொட்டாம பார்த்துண்டிருந்தயே?
திஸ் வில் பி ஷியர் இன்ஸலன்ஸ்.

வேற என்னதான் கேக்கறது? யெஸ், தட்’ஸ் இட்!
"ஜெயந்தி, இந்த முருகன் சிலைகள்லாம் ரொம்ப அழகா இருக்கில்ல? உனக்குப் பிடிச்ச முருகன் எது சொல்லேன்? மொத்தத்தில் இந்தக் கோவிலே அழகா இருக்கு இல்ல?"

கொஞ்ச நேரம் காத்திருந்தும் பதில் வரவில்லை. கேட்டது காதில் விழவில்லையோ?
அப்புறம்தான் தெரிந்தது அவன் ஒன்றுமே கேட்கவில்லை என்று!

"ஜெயந்தி, இந்த முருகன்---"

திடீரென்று ஒலித்த கோவில் மணியின் ஓங்காரத்தில் அவன் வார்த்தைகள் அமிழ்ந்து கலந்துவிட, அவள் அவசரம் அவசரமாக நெய்க்கிண்ணத்தை எடுத்துக்கொண்டு மீதியிருந்த தெய்வங்களையும் அறக்கப்பறக்க வலம் வந்துவிட்டு ஓட்டமும் நடையுமாக கோவிலுக்குள் சென்றுவிட்டாள்.
 
ற்றொரு நாள் காலை ஆறுமணிக்கு ஜெயந்தியின் குரல் அவன் வீட்டு வாசலில் ஒலிக்கத் தூக்கம் கலைந்து எழுந்தவனுக்குத் தன் கண்களையும் காதுகளையும் நம்ப முடியவில்லை.

"வசந்திக்கா!...வசந்திக்கா!"

அவன் புன்னகைக்க முயன்று கதவைத் திறந்தபோது ’ஆஃபீஸ் ரூம்’இலிருந்து அப்பாவின் குரல் வந்தது.

"இந்தாம்மா, ஏன் காலங்கார்த்தால கத்தற? வசந்தி மாடில இருக்கா, போய்ப்பார்."

அப்பாவுக்குக் கொஞ்சம்கூட இங்கிதம் தெரியாது. ரெண்டு தடவை கூப்பிட்டா கத்தறதா ஆயிடுமா?

’சாரி ஜெயந்தி. அப்பாவோட சுபாவம் அப்படி. அவரைத் தப்பா நெனைச்சுக்காதே’ என்று மனதுக்குள்தான் கூற முடிந்தது.

"ஜெயந்தியா? வா. நான்தான் பெரியப்பா அவளை வரச் சொல்லியிருந்தேன்."

டுத்த சில நாட்கள் இந்த நிகழ்ச்சியை அவன் மனம் சிலவித சாத்தியங்களில் ’ஃபான்டஸி’களாக்கிப் பார்க்க, ஒருமுறை அவன் மாடியில் தூங்கிக்கொண்டிருந்தபோது அவளும் வசந்தியும் பேசிக்கொண்டிருக்க, குரல் கேட்டு அவன் விழித்துக்கொண்டும் தூங்குவதுபோல் பாவனை செய்தபடி அவள் அழகை ரசித்தான்.

மற்றொரு முறை அவள் மாடியில் வசந்திக்காகக் காத்திருக்க, அவன் கையில் ’தினமணி’யுடன் தற்செயலாக உள்ளே நுழைந்து மலைத்து அவளைக் கன்னம் சிவக்கச் செய்தான்.

வேறொரு முறை சிறிது நேரம் மாடியில் அவளுடன் தனியே விடப்பட்டபோது அவன் தன் புத்தக அலமாரியிலிருந்து தமிழ்வாணனின் புதிய நாவல் ஒன்றை எடுத்துவந்து அவளிடம் கொடுத்து முகம் மலரச் செய்து அந்தச் சாக்கில் அவளுடன் ஓரிரு வார்த்தைகள் பேசத் தலைப்பட, படியில் அப்பாவின் காலடிகள் கேட்டன.

வனும் ஜெயந்தியும் பொது இடங்களில் ஒருவரை ஒருவர் குறுக்கிட நேர்ந்த நிகழ்ச்சிகளை ஒன்றுவிடாமல் வாஞ்சையுடன் நினைத்துப் பார்த்தபோது...

ஒருநாள் மாலை பெண்கள் உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் அவன் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடப் போனபோது அப்போதுதான் ’கேம்ஸ்’ முடிந்து ’ஸ்போர்ட்ஸ்’ உடையில் வெண்ணிற ’ஸாக்ஸ்’களை மீறிக்கொண்டு பொன்னிறக் கால்கள் தெரிய அவள் வரிசையில் சென்றதும்

மற்றொரு நாள் பள்ளி முடிந்து வெள்ளை ’மினி ஸ்கர்ட் யூனிஃபார்ம்’இல் அவள் தேவதை போல் தெருவில் நடந்துவந்த அழகும்

இரண்டொரு தடவை அவளைக் கடைகளில் பார்த்து ’நாம்மாத்துல எந்தப் பொண்ணு கடைக்குப் போவா? எல்லா வெளி வேலையும் பசங்கதான் செய்யணும்’ என்று வியந்ததும்

ஞாயிற்றுக் கிழமைகளில் அவள் தன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து ’டிராயிங், நிட்டிங், பேப்பர் கட்டிங், எம்ப்ராய்டரி’ போன்ற கலைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவதும்---இதுபோன்ற கலைகளில் அவன் வசந்தியின் திறமையை அடிக்கடி வியந்ததுண்டு---

அப்போதெல்லாம் இவன் அவ்வழிச் செல்லும்போது அவள் கண்கள் ஓரிரு முறை இவன் மீது விழும். எப்போதும் சிரித்துக்கொண்டு இருப்பதைப்போல என்ன கண்கள்! இவள் ஒருமுறை கூட அழுதிருக்க மாட்டாள் என்று தோன்றியது.

தீபாவளி சமயத்தில் அவள் தவறாமல் கோலாட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வலம்வரும் காட்சிகளும்

மார்கழி மாதக் குளிரில் அதிகாலையில் அவனும் அப்பாவும் கோவிலுக்குப் போகும்போது அவள் அன்றலர்ந்த மலராகக் குளித்துவிட்டுத் தலையில் காசித் துண்டு மலர்ந்திருக்க, குனிந்து பெரிய பெரிய கோலங்கள் போடும் பாங்கும்

கோலம் போடுவதில் வசந்தி ஒரு நிபுணி. முன்பெல்லாம் அவளுக்கும் அனுவுக்கும் பலத்த போட்டி, மார்கழிக் கோலங்கள் போடுவதில். இருவரும் சளைக்காமல் நடுக்கும் குளிரில் எழுந்து அதிகாலையிலேயே குளித்துவிட்டுத் தத்தம் தெரு வாசல்களில் மலையளவு கோலங்கள் போடும்போது, அவை கலையழகுடன், ஆறாம் வகுப்புப் பெண்கள் போட்ட கோலங்களா என்று மலைக்க வைக்கும்.

சில நாட்கள் அவள் அப்பாவும் கோவிலுக்கு தீபாராதனையின் போது வந்துவிட, அவன் அவள் கவனத்தைக் கவருவதற்காக அவர் அருகில் போய் நின்றுகொண்டு பேச்சுக் கொடுத்து அவள் அவனைக் கவனிப்பதில் அடைந்த திருப்தியும்

அவன் பள்ளிப் படிப்பை முடித்து ’எஸ்.எஸ்.எல்.ஸி.’ தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றுத் தேறியதும் அந்த மகிழ்ச்சியைப் பங்குகொள்ள நினைத்து அவளைக் கோவில் பிரகாரத்தில் மடக்கி சாக்லேட் கொடுத்ததும், அதை வாங்கிக்கொண்டு ’தாங்க்ஸ்’ என்று ஒற்றைச் சொல்லில் அவள் ஓடி மறைந்ததும், அவர்கள் வீட்டில் ஏதேனும் நினைத்துக்கொள்ளப் போகிறார்கள் என்ற பயம் தலைதூக்க அவள் தம்பி வாசுவைத் தேடிப் பிடித்து அவனுக்கும் சாக்லேட் வழங்கியதும்

ஊரில் வேறொரு கோவில் சமாராதனை விருந்தில் அவளும் அவள் அம்மாவும் அமர்ந்திருந்த வரிசையில் வெற்று மார்பில் சுற்றிக் கட்டிய மேல்துண்டுடன் அவன் அடிக்கடி அலைந்து பனை விசிறியால் வீசியும், தீர்த்தம் வழங்கியும், பாயசம் பரிமறியும் கவனித்துக் கொண்டபோது, அவள் அம்மா அவனைப் பார்த்து (அர்த்தத்துடன்?!) புன்னகை செய்ததும்

மனதில் துல்லியமாக ஒலி-ஒளி-வண்ணங்களில் தோன்றி மறைந்தன.

*** *** ***
 
12

பெண்மைக் குணமுடையான்;--சில நேரத்தில்
பித்தர் குணமுடையான்;--மிகத்
தண்மைக் குணமுடையான்; சில நேரம்
தழலின் குணமுடையான்.
---மஹாகவி பாரதியார், கண்ணன் என் தோழன் 8


மாலை வேளைகளில் காலாற நடப்பதைப் போன்ற இனிமையான அனுபவம் இல்லை என்று சொல்லிவிடலாம். கல்லூரி நாட்களில் ஸ்திரப்பட்ட இந்த வழக்கம் இன்றும் அவனை விடவில்லை.

நடப்பது என்றாள் மற்ற இளைஞர்களைப் போல் கூட்ட முடிச்சுகளாக ஆரவாரத்துடன் பேசிக்கொண்டும் அங்க சேஷ்டைகள் செய்துகொன்டும் சிரித்துக்கொண்டும் ’கண்ணோக்கி’க்கொண்டும் கமென்ட் அடித்துக்கொண்டும் கடைத் தெருக்களையும் தெப்பக்குளத்தின் நான்கு சுவரொட்டிய வீதிகளையும் மட்டுமே சுற்றிச் சுற்றி வருவது அவனுக்குப் பிடிக்காது.

"ஒனெக்கெல்லாம் எங்க ஃபார்முலா தெரியப் போறது? படிச்சாத் தானே? அப்பா கத்தைகத்தையா அனுப்பற பணம் பாக்கெட்ல. கேக்கவா வேணும்? டைட்-பேண்ட் போட்டுண்டு கிர்கிர்னு ஊர் சுத்தறாது; ’கண்கண்ட தெய்வம்’ சினிமா பாக்கறது! நீயெல்லாம் ஏய்யா படிக்க வறே? ஃபார்முலா தெரியலேன்னா கோர்ஸை விட்டுடு. பொட்டிக்கடை வெச்சுண்டு உக்காந்துக்கோ."

கணித விரிவுரையாளரின் காரசாரமான் பேச்சும் அதைச் சட்டை செய்யாது எருமை மாடாக எதிரில் நிற்கும் மாணவனும் நினைவில் வந்து போயினர்.

கல்லூரி விட்டதும் ஹாஸ்டலுக்கு விரைந்துவந்து ’மெஸ்’ஸில் போட்ட டிஃபனை சாப்பிட்டுவிட்டு ’டேபிள் டென்னிஸ்’ விளையாட்டில் இடம்பிடித்து ஒரு ’பெஸ்ட் ஆஃப் ஃப்வைஸ்’ ஆடிவிட்டு அஞ்சரை மணிக்குக் கிளம்பிவிடுவான்.

நண்பர்களிடமிருந்து மெல்ல நழுவித் தனியே நடந்து ஒலி மலிந்த சாலைகளையும் தெருக்களையும் கடந்து திருச்சி நகரின் கடற்கரையான காவேரிப் பாலத்தை அடையவும் சூரியன் அஸ்தமிக்கத் தொடங்கவும் சரியாக இருக்கும்.

காவேரிப் பாலத்தில் நின்றுகொண்டு சூரியன் மறைவதைப் பார்ப்பது---சூரியன் உதிப்பதைத்தான் பார்க்க முடிவது இல்லை---ஓர் இனிய அனுபவம்.

தினமும் பார்க்கும் காட்சிதானே என்று அலுப்புத் தட்டாமல் எத்தனை விதத் தோற்றங்கள்! இன்று இப்படித்தான் இருக்கும் என்று கணிக்க முடியாது. கணித்தால் ஒன்று ஏமாற்றம்தான் மிஞ்சும். அல்லது கண்களையே நம்பமுடியாது.

கண்களை இதமாக வருடிக் கொடுத்துக்
கண்களில் வழிந்து ஒளிக்கற்றை பிரதிபலிக்க

நீலக் கடல்வானில் நித்திலப் பாறைகள்போல்
மிதக்கும் முகில்மகளிர் பொன்முலாம் பூசிக்கொண்டு
உடலெலாம் கதிர்பட்டுக் கதிரொளியில் குளித்திருக்க

உடல்நிறம் மாறியும் உவகை அடையாமல்
விட்டில் பூச்சிகளாக மேகங்கள் சேர்ந்து
கதிரவனை நோக்கிப் படையெடுக்க

தொல்லை தாங்காத தினகரன் காவிரியில் மறைந்து
எட்டுத் திக்கிலும் மன்மத பாணங்களை எறிய

நாணிச் சிவந்த மேக மங்கையர்
காவிரி அலைகளில் கண்ணாடி பார்க்கும்
அழகை வருணிக்கப் போதுமோ வார்த்தைகள்?


இதே காட்சி மறுநாள் பார்த்தால் ஒரே போர்க்களமாகி நிறங்களும் ஊளையிடும் காற்றின் ஒலிகளும் கலிங்கத்துப் பரணியை நினைவூட்டும்.

சில நாட்களில் கரைகளின் ஓரத்தில் நூலாடும் காவிரியின் பாதரச நீரோட்டத்தில் உடைந்த சில்லுகளின் பிரதிபலிப்பில் ஒரு ’மிஸ்டரி’ இருக்கும்.

வேறு சில நாட்களில் கதிரவன் தொடுவானில் இறங்கும் முன்னரே மேகங்கள் பின் மறைய சுவாரஸ்யமே போய்விடும்.

இப்படிக் காவிரிப் பாலத்தில் மெய்ம்மறந்து இருந்தபோதுதான் ஒருநாள் பாஸ்கரைச் சந்தித்தான்.

பாஸ்கர்!

சிலரைப் பார்த்த உடனேயே நண்பர்களாக்கிக் கொள்ள ஏக்கம் பிறக்கும். இப்படித்தான் அவன் கல்லூரியில் நுழைந்தவுடன் பாஸ்கரின் தோற்றத்தாலும் அறிவாலும் கவரப்பட்டு அவனுடன் பழகவேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்க, தகுந்த சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருக்க, கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததுபோல் ஒருநாள் பாஸ்கரே இவனுடன் வலியவந்து பேசி, அறிமுகம் செய்துகொண்டு, விரைவிலேயே அவர்கள் நெருங்கிய நண்பர்களாகி, அந்த நட்பு அவன் வீடுவரை பரவி, பொதுவாக அவன் நண்பர்களைப் பற்றி அதிகம் அக்கறை காட்டாத அவன் அப்பாகூடத் தன் கடிதங்களில் பாஸ்கரைப் பற்றி விசாரிக்கும் அளவு வளர்ந்துவிட்டது.

பாஸ்கரை இப்போது நினைக்கும்போது அந்த ’பாஸ்கர்’ என்ற உருவத்துக்குள் அடங்கியிருக்கும் எந்த பாஸ்கரை நினைப்பது என்று இனிமையான குழப்பம்.

எத்தனை பாஸ்கர்கள்!

அவன் தோற்றமே ஒரு கவர்ச்சிதான். ’ஸ்மார்ட் அன்ட் ஸ்போர்டிவ்’. துருதுரு என்று அலையும் கண்கள். அகன்ற நெற்றி. எப்போதும் ’பளிச்’, அப்போதுதான் குளித்துவிட்டு வந்த மாதிரி. கேசம் கலையாமல், உடை சுருங்காமல், கைகளில் ’இங்க்’ கறை தவறிக்கூடப் படியாமல், செருப்பில்கூடப் புழுதியின் சுவடு தெரியாமல் எப்படி அவனால் இருக்க முடிகிறது? போதாக் குறைக்கு மார்வாரிச் சிவப்பு வேறு.

அந்தச் சரளமான, இனிமையான பேச்சு எப்படிப்பட்ட ’மில்டன்’ஐயும் அல்லது அப்பாவையும் கவர்ந்துவிடும்.

கொஞ்சம்கூட நிதானிக்காமல் எப்படி அவனால் எல்லோருடனும் கலகலவென்று பேசி, சிரித்துப் பழகமுடிகிறது? அவனுக்கு நிறைய ’கேர்ல் ஃப்ரண்ட்ஸ்’ இருக்கவேண்டும், சொல்ல மாட்டேங்கறான் பயல்! பட்டுக் கத்தரித்தாற்போல் என்ன பேச்சு அது! எதிரில் இருப்பவரை அப்படியே ஆட்கொண்டு, மெல்ல வருடிக்கொடுத்து, உற்சாகப்படுத்தி, விரல்பிடித்து வழிகாட்டி, கொஞ்சமும் விமரிசனம் செய்யாமல், கோள் சொல்லாமல், முதுகுப்பக்கம் பேசாமல், டேல் கார்னகியின் How to Win Friends and Influence People புத்தகத்தை ஏதோ இவன்தான் எழுதியது மாதிரி...

கலகலவென்று பேசினாலும் அவன் பேச்சு காலியாக இருக்காது. யாப்பிலக்கணத்தில் இருந்து சமீபத்திய ’ஃபிலிம் ஃபெஸ்டிவல்’ வரை எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசுவான். சமய சந்தர்ப்பத்துக்குத் தகுந்த மாதிரி நளினமாகத் தலைப்புகளை மாற்றி, ஜேன் ஆஸ்டின் நாவல்களில் வருவதுபோல் பேசுவதே ஒரு கலையாகக் கடைப்பிடிப்பவன். அவன் எதைப்பற்றிப் பேசினாலும் அதில் ஒரு தெளிவான சிந்தனையும், ஆழமும், மாத்யூ ஆர்னால்ட் கூறும் அந்த high seriousness-உம் இருக்கும்.

பாஸ்கர் ஒரு நல்ல கிரிக்கெட் ஆட்டக்காரன். நம்பத் தகுந்த பேட்ஸ்மன். ஆனாலும் இன்னும் ’க்ளப் லெவல்’இலேயே இருப்பவன். ஏன் அதற்குமேல் முயலவில்லை என்றால், "நான் இந்த விளையாட்டை நேசிக்கிறேன். ஆனால் என்னால் இதைத் திருமணம் செய்துகொள்ள முடியாது" என்பான்.

பாஸ்கர் கலைகளை ரசிப்பவன். இசை, ஓவியம், புகைப்படம் போன்ற கலைகளில் அவனுக்கு அதீத ஈடுபாடு உண்டு. டானா சம்மர்ஸ் முதல் மதுரை மணி வரை ரசித்துக் கேட்பான். ஹிந்தித் திரை இசையில் லதாவும் தலத் மெஹ்மூத்தும் அவனுக்குப் பிடித்த பாடகர்கள். அதுபோல ஓவியம் என்றால் ரெம்ப்ராண்ட், டாவின்ஸி, ரவிவர்மா முதல் தலைகால் புரியாத ’மாடர்ன் ஆர்ட்’ வரை ரசிப்பது மட்டுமின்றி அதன் நுணுக்கங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டிருப்பான். சமயத்தில் அவனே தூரிகை கொண்டு ஓவியம் வரைவான். இது தவிர நன்றாகப் புகைப்படங்கள் எடுப்பான்.

பாஸ்கர் ஒரு பேராசைகொண்ட புத்தகப் புழுவும் கூட. ’பி.ஏ.’ இலக்கியம் படித்ததால் இலக்கிய ஈடுபாடு உண்டு. இப்போது வங்கியில் வேலை பார்த்தாலும் அதைத் தக்கவைத்துக் கொண்டிருப்பவன். கையில் கிடைத்த பத்திரிகை அனைத்தும் மேய்வான். சென்னையில் உள்ள பெரிய நூலகங்கள் அனைத்திலும் அவன் உறுப்பினர்.

இவ்வளவு ஈடுபாடுகளை வைத்துக்கொண்டு ஏன் ஓர் ஊர் அறிந்த கலைஞனாக/பாடகனாக/கவிஞனாக/எழுத்தாளனாக வர முயற்சி செய்யக்கூடாது என்று கேட்டால் ’பளிச்’ என்று பதில் வரும்.

"My aim in life is to know something of everything. That's all. வாழ்க்கைல எல்லா விஷயங்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிஞ்சுண்டு அதை நாலுபேரோட பேசிப் பகிர்ந்துண்டு, அதன் மூலமா நம்ம தோழமை வட்டத்தை வளர்த்துண்டு போறதுல இருக்கற இன்பமும் திருப்தியும் வேற எதிலையும் இருக்கும்னு நான் நினைக்கல. I want friends, not fans."
 
கண்களை இதமாக வருடிக் கொடுத்துக்
கண்களில் வழிந்து ஒளிக்கற்றை பிரதிபலிக்க

நீலக் கடல்வானில் நித்திலப் பாறைகள்போல்
மிதக்கும் முகில்மகளிர் பொன்முலாம் பூசிக்கொண்டு
உடலெலாம் கதிர்பட்டுக் கதிரொளியில் குளித்திருக்க

உடல்நிறம் மாறியும் உவகை அடையாமல்
விட்டில் பூச்சிகளாக மேகங்கள் சேர்ந்து
கதிரவனை நோக்கிப் படையெடுக்க

தொல்லை தாங்காத தினகரன் காவிரியில் மறைந்து
எட்டுத் திக்கிலும் மன்மத பாணங்களை எறிய

நாணிச் சிவந்த மேக மங்கையர்
காவிரி அலைகளில் கண்ணாடி பார்க்கும்
அழகை வருணிக்கப் போதுமோ வார்த்தைகள்?
Beautifully written saidevo Sir... i am at loss of words to express my happiness while reading thru your these post.. thought i will not interupt in between with my commetns, but these words are so beautiful i am unable to control my emotions. will not distrub further and wait for the novel to move ahead. cheers.
 
ப்புறம் அவன் கையெழுத்து. கொஞ்சம் வலப்புறம் சாய்ந்து, முத்துமுத்தாக இன்னைக்கெல்லாம் பார்த்துக்கொன்டே இருக்கலாம். கல்லூரித் தேர்தல்கள், ஆண்டு விழா நிகழ்ச்சிகளுக்கு ’பானர்’கள் எழுதுவது அவனுக்குப் பிடித்தமான வேலை. அவனது கையெழுத்துக்காகவே பலர் அவன் வங்கியில் ’ஃபிக்ஸ்ட் டெபாசிட்ஸ்’ கணக்குகள் துவக்குவதுண்டு. இதனால் அவனுக்குப் ’ப்ரொமோஷன்’ கிடைக்கும்வரை அவனை ’டெபாசிட் செக்*ஷன்’இல் வைத்திருந்தார் அவன் மானேஜர். இப்போது ’ப்ரமோஷன்’இல் சென்னைக்கு மாற்றலாகி வந்தபிறகும் ’டெபாசிட் செக்*ஷன்-இன்-சார்ஜ்’தான்.

இதெல்லாம்விட பாஸ்கர் ஒரு ’ஹைலி ரொமான்டிக் ஃபெல்லோ’. அவன் பஸ் நிறுத்தத்தில் நிற்கும்போது மாணவிகள் சிலர் அவனையே பார்ப்பதுண்டு. ஓரிருவர் கொஞ்சம் தைரியம் பெற்று, "எக்ஸ்க்யூஸ் மி...வாட்’ஸ் த டைம் லைக்?" என்று கேட்க, அவன், "இட்’ஸ் குட் டைம்!" என்று விளையாட்டாகக் கூறிவிட்டுத் தன் மணிக்கடிகாரத்தை அவர்களிடம் காட்டுவான். கடவுள் படங்களில் தலைக்குப் பின்னால் உள்ள ஒளிவட்டங்கள் போல அவனைச் சுற்றி ஒரு ’ஆரா ஆஃப் ரொமான்ஸ்’ இருக்கிறது போலும்.

அவனுடன் நெருங்கிப் பழகுபவர்களுக்கு அவனுடைய ’ரேன்ஜ் ஆஃப் மூட்ஸ்’ வியப்பளிக்கும். உணர்ச்சிகளின் நவரசங்களிலும் சஞ்சரிக்க வல்லவன் அவன். ஆனால் மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டான்.

பாஸ்கர் அவன் டைரியில் நிறைய இடம் பெற்றிருந்தான். அவர்கள் இருவரும் சேர்ந்து பார்த்த திரைப்படங்கள், ரசித்த இயற்கைக் காட்சிகள், சுற்றுலா சென்ற இடங்கள், விவாதித்த புத்தகங்கள், வாழ்க்கை பற்றித் தத்தம் கண்ணோட்டங்களைப் பரிமாறிக்கொண்ட நிகழ்ச்சிகள் போன்ற எல்லா விவரங்களையும் ஒன்றுவிடாமல் குறித்திருந்தான்.

பாஸ்கரின் நினைவில் கண்கள் தாழ்ந்து அவனுடைய ’ஜர்னல்ஸ்’ பக்கங்களில் நிலைத்தபோது அவன் மாலதியை சந்திக்க, வரிகளைக் கலைத்துக்கொண்டு அவள் விஸ்வரூபம் எடுத்து அவன் நினைவுகளை ஆக்கிரமித்துக்கொண்டாள்.

ஒருநாள் மாலை. அவனும் பாஸ்கரும் கல்லூரி விட்டதும் வழக்கம்போல் காவேரிப் பாலத்தில் காற்று வாங்கச் சென்றபோது சிந்தாமணித் திடல் அண்ணா சிலை ’ரவுண்டாணா’ பக்கத்திலுள்ள பஸ் நிறுத்தத்தில் அவள் தனியாகக் நின்றிருந்தாள்.

பார்த்த உடனேயே கண்கள் நிலைத்து மனசுக்குப் பிடித்துப்போய் விடக்கூடிய குழந்தை முகம். விழிகளில் ’சங்கராபரணம்’ மஞ்சு பார்கவி. (இந்த ஒப்புமையைப் பின்னால் சேர்த்துக்கொண்டான், அவள் கண்களை வருணிக்க வேறு வழியில்லை என்று.) அவள் தலையில் சூடியிருந்த அந்த ஒற்றை ரோஜா வாடியிருந்தாலும் இதழ்களில் புன்னகை விரிந்திருந்தது. புத்தகங்கள்-’டிஃபன் பாக்ஸ்’ சுமையைக் கைகள் நெஞ்சுடன் அணைத்திருக்க, கால் விரல்கள் தார் ரோடில் அருவமான கோலங்கள் போட, ரோஸ் சாரியில் அவள் பளிச்சென்று இருந்தாள். அவளைக் கடந்து சென்றபோது அவனால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

"ப்யூட்டிஃபுல் இல்ல, பாஸ்கர்?"

"வொன்டர்ஃபுல்."

"யார் தெரியலையே?"

"தெரியாது? மாலதி. தினமும் நான் வரும் பஸ்ல திருவானைக்காவல் ஸ்டாப்ல ஏறுவா."

"பேர் எப்படித் தெரியும்?"

"ஒருநாள் பஸ்லேர்ந்து அவளுக்குப் பின் இறங்கினபோது அவள் நோட்புக்ல பார்த்தேன். ஹௌ டு யு லைக் த நேம்?"

"அடக்கமான பெயர், அவள் போலவே. தினமும் இப்படித்தான் ஒரே ஒரு ரோஜா தலையில் வெச்சிண்டு வருவாளா? பார்க்க அழஹா இருக்கில்ல?"

"தட்’ஸ் ரைட். சமயத்தில கனகாம்பரமும் டிசம்பர் பூவும்கூட கத்தைகத்தையா அலங்கரிக்கும்."

"வித்தியாசமா இருக்கா பாரு. அங்கே பார் அரட்டைக் கச்சேரி. சத்தம் ட்ராஃபிக்கை மீறி இங்கே கேக்கறது! இவள் அவர்களோட சேராமல் தனியா, அமெரிக்கையா எதையோ யோசிச்சிண்டு...இன்டலக்சுவல் டைப் போல."

"லைக்லி. அந்த கும்பல்ல ஒவ்வொருத்திக்கும் ஒரு பெயர். ஓரத்தில நிக்கறது கிளியோபாட்ரா. பக்கத்துல ’பணமா பாசமா’ சரோஜாதேவி. அடுத்தது டேம் அகதா க்றிஸ்டி. பக்கத்தில பட்டு மாமி. எல்லாம் ஶ்ரீரங்கம். என்னோட முன்பின் அறிமுகம் இல்லாத பஸ்-மேட்ஸ்."

"எப்படித் தெரியும் இந்த நிக் நேம்ஸ்?"

"எல்லாம் நான் வெச்சதுதானே!"

"யு ஆர் நாட்டி. ஆனால் பொருத்தம்தான்."

"இவளுக்கு அந்தமாதிரி பெயர் வைக்க முடியலை. வேணும்னா உயரத்துக்காக எம்மா ஓடௌஸ்னு வைக்கலாம். ஆனால் இவள் அவ்வளவு தூரம் துருதுருப்பா இல்லை. மே பி ஷி ஹாஸ் தட் ரிஸோர்ஸ்ஃபுல்னஸ்."

"ரோஸ் சாரி என்ன பொருத்தம் கவனிச்சயா?"

"அவளே ஒரு ரோஸ் தானே? A rose is a rose is a rose is a rose.*"

*For this famous quote check:
Rose is a rose is a rose is a rose - Wikipedia, the free encyclopedia

*** *** ***
 
13

கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே
காதல் இன்பத்தைக் காத்திது வோமடா.
---மஹாகவி பாரதியார், பெண்மை 4


முதல் கவனிப்பைத் தொடர்ந்து நாலைந்து மாதங்கள் அவளைப் பல நாட்கள் பார்த்த நிகழ்ச்சிகள் டயரியில் இடம்பெற்றிருந்தன.

*************************
செப்.10, புதன்
*************************
ஏறத்தாழ நான்கு வாரங்கள் கழித்து இன்று அந்த ரோஜாவைத் தற்செயலாக பஸ் ஸ்டாப்பில் பார்த்தேன். இன்றும் ரோஸ் சாரி. ரோஜா.

*************************
அக்.3, வெள்ளி
*************************
இன்று தற்செயலாகப் பார்த்தபோது அவள் குரல் கேட்க முடிந்தது. குரல் இனிமையாகவே உள்ளது. அனுவுக்கும் ஜெயந்திக்கும் இடைப்பட்ட த்வனி. கண்டக்டரிடம் பேசினாள். அருகில் இருந்த தோழியிடம் கொஞ்சம். மற்றபடி ஷ்...!

*************************
அக்.13, திங்கள்
*************************
இன்று பாஸ்கர் உடவரப் பார்த்தேன். அதே இடம். இன்று பசுமையாக இருந்தாள். அதே அமைதி. கண்கள் எங்கள் மேல் விழுந்தபோது கொஞ்சமும் சலமில்லை.

Not a ray of recognition.

பாஸ்கரோ, நானோ அவள் கவனத்தை ஈர்க்க எந்த முயற்சியும் செய்யவில்லை. இயல்பாகக் கடந்தோம்.

*************************
அக்.14, செவ்வாய்
*************************
இரண்டாம் நாள். பாஸ்கர் சொன்னது சரிதான். கனகாம்பரம்.

*************************
அக்.17, வெள்ளி
*************************
தொடர்ந்து ஐந்து நாட்கள் பார்க்கும் வாய்ப்பு. இன்று கொஞ்சம் வாடியிருந்தாள். கடுமையான ’பிராக்டிகல்’ போலும். அல்லது...

இனி தினமும் பார்ப்பேன் என்று தோன்றுகிறது.

*************************
அக்.30, வியாழன்
*************************
இன்று என்னுடன் இரண்டாம் நம்பரில் வந்தாள். என்ன ’மெயின்’ தெரியவில்லை. zoo-வாக இருக்குமோ?

What a silent creature!

*************************
டிச.16, செய்யாய்
*************************
ஆறு வாரங்கள் கழித்து இன்று பார்க்க முடிந்தது, டி.வி.எஸ். பஸ் நம்பர் நாலில் கோவிலுக்குப் போகும்போது.

இன்று நான் அதிர்ஷ்டக்காரன். பாஸ்கர் கேட்டால் பொறாமைப் படுவான். பஸ்ஸில் எதிரெதிரே அமர்ந்து இருந்தோம். டி.வி.எஸ். வாழ்க! வசீகர முகம். வளமான உடல். கொஞ்சம் மாநிறம்தான். கையில் எத்தனை புத்தகங்கள்! எல்லாம் அழகாக அட்டை போடப்பட்டு... என்ன சப்ஜெக்ட் என்று தெரிந்துகொள்ள முடியவில்லை.

ரோஸ் அவளுக்குப் பிடித்த நிறம் என்பது உறுதியாகத் தோன்றுகிறது. இது குறைந்தது அவளது நாலாவது ரோஸ் சாரி என்று நினைக்கிறேன். ஒவ்வொன்றும் ஒரு டிசைன்.

கண்டக்டரிடம் சில்லறையைக் கொடுத்து ’திருவானைக்காவல்’ என்றபோது கோவில் அர்ச்சகர் கைமணியின் மென்மையான ’கலீர்’ கேட்டது. டிக்கெட்டைத் தவறவிட்டாள்.

எடுக்கக் குனிந்தபோது தலையில் இருந்து நீளக் கருநாகம் புரண்டது. ரோஸ் ரிப்பன்.

என் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால்---பாஸ்கராக இருந்தால் கூட---அவளுக்கு உதவக் குனிந்து கொஞ்சம் ஸ்பரிசித்திருக்கலாம். எனக்கு அவ்வாறு செய்ய மனமில்லை. தேவையில்லாத அனுகூலங்கள் எடுத்துக்கொளவது அநாகரிகம்.

ஆனால் அவள் என்னை ஸ்பரிசிக்க நேரிட்டது விந்தை! நாலுகால் மண்டபம் அருகில் பஸ் திரும்பியபோது அவள் எழுந்துகொள்ள, டிரைவரின் திடீர் ப்ரேக்கில் தடுமாறி ஜன்னல் கம்பிகளைப் பிடிக்க முயன்று என் விரல்களைப் பிடித்துக்கொண்டாள். ’ட்ஃபன் பாக்ஸ்’ கீழே விழ, என்னுள் கவிதை வரிகள் தலைகாட்டின.

என் விரல்கள்
நட்சத்திரங்களை வருடினாலும்
விழிகள் என்னவோ
ஜன்னல் கம்பிகளளோடுதான்.
[மு.மேத்தாவின் கவிதையைக் கொஞ்சம் மாற்றி எழுதியது]


அந்தக் கணத்தில் அவள் முகம் பார்க்க முடியவில்லை, முனையவில்லை.

"ஐ’ம் சாரி", என்றாள் மெல்லிய முறுவலுடன். இப்போது அவள் முகம் நோக்கினேன்.

"இட்’ஸ் ஆல் ரைட்."

’ட்ஃபன் பாக்ஸ்’ஐ எடுத்துக் கொடுத்தபோது "தாங்க் யு" என்றாள். "I'm sorry for the inconvenience!"

அவள் அண்மையில் பேசக்கேட்ட நீளமான சொற்றொடார்!

It's a pleasure என்று சொல்ல நினைத்து, "It's okay. I didn't mind." என்றேன்.

கொஞ்சம் காத்திருந்து அவள் இறங்க, பின்னள் இறந்கினேன். அந்தத் தவிர்க்கமுடியாத பின்தொடரலில் கொஞ்சம் பேசியிருக்கலாம். தவறாக எடுத்துக்கொள்வாளோ என்று தோன்றியது. அவள் என்மேல் வைத்திருக்கும் மதிப்பு குறைந்து விடும்படி நான் எந்த செயலும் செய்துவிடக் கூடாது.

கோவில் வாசல் வந்ததும் அவள் வலப்புறம் திரும்பி சந்நிதித் தெருப்பக்கம் சென்றுவிட நான் நேரே கோவிலுக்குள் சென்றுவிட்டேன்.

திரும்பி வரும்போது காவிரிக் கரையில் வீசிய தென்றலின் இதமான வருடலில் நடந்தவற்றை ஒருமுறை யோசித்துப் பார்த்தேன். நான் செய்தது சரியென்றே தோன்றியது.

றுநாள் பாஸ்கரிடம் சொன்னபோது எதிர்பார்த்தபடியே, "ராஜா, நீ ஒரு நல்ல வாய்ப்பை நழுவ விட்டுட்டே" என்றான்.

"எனக்கு அப்படித் தோன்றவில்லை பாஸ்கர். ஓகே, நீயாயிருந்தால் என்ன செய்திருப்பாய்?" என்றேன், அவன் மனத்திலுள்ள வக்கிரங்களின் வருகைக்குக் காத்திருந்து.

ஏதாவது ஏடாகூடமாகப் பிதற்றப் போகிறானே என்று பயந்தபோது அவன் சொன்ன பதிலில் அசந்து போனேன்.

"லிஸன். நம்ம ரெண்டு பேரும் முதன்முதல அவளைப் பார்த்தபோது என்ன நினைச்சோம்? அவளுடைய அழகிலயும் அடக்கத்திலயம் மனசப் பறிகொடுக்கலை? பெண்கள்னாலே வளவளன்னு பேச்சைத் தவிர ஒண்ணும் உருப்படியாத் தெரியாதுன்னு இதுவரை நாம நினைச்சது தப்புன்னு அடிச்சுச் சொல்றமாதிரி எவ்ளோ அமைதியா, அடக்கமா, வித்தியாசமா இருந்தாள் அவள், இல்லையா? நீகூட ’இன்டலக்சுவல் டைப் போல’ன்னு சொன்ன, ஞாபகம் இருக்கா?

அதுக்கப்பறம் எத்தனை தடவை நாம அவளைப் பார்த்திருக்கோம். நீயே தனியா நிறைய தடவை பார்த்திருப்பே இல்லையா? நான் அனேகமா தினமும் காலையில் அவளை பஸ்ல பார்க்கறதுண்டு. பெரும்பாலும் மெயின் ரோடுல போகும் ஶ்ரீரங்கம் பஸ்லதான் ஏறுவா. நான் எப்போதும் டிரைவருக்கு எதிர்த்த ஸீட்லதான் உக்காருவேன். அவளுமே முன்னாலதான் உக்காருவா. ஸோ, நல்ல சான்ஸ், அவளை வாட்ச் பண்ண. அவள் பாட்டுக்குத் தான் உண்டு தன் புத்தகம் உண்டுன்னு இருப்பா. இல்லை, ஏதாவது பத்திரிகை படிச்சிண்டு இருப்பா. அநாவசியமா ஒரு வார்த்தை பேசமாட்டா. அதுக்காக முசுடுன்னு சொல்ல முடியாது. தற்பெருமையா இருக்குமோன்னு கூட நினைச்சேன். ஒருநாள் என்னாச்சு தெரியுமா?" படபடவென்று பொரிந்துதள்ளிவிட்டு மூச்சுவிட நிறுத்தினான்.

"ப்ரொஸீட்" என்றேன்.

"எங்க ஶ்ரீரங்கத்துப் பட்டாளத்துக்கிட்ட மாட்டிக்கிட்டா. ஒரு நிமிஷம் சும்மா இருக்கவிடலையே அவளை? மாலதி என்ன படிக்கறே? மாலதி ஏன் என்னவோ போல் இருக்கே? மால் ஏன் பேசவே மாட்டேங்கறேன்னு பிடுங்கி எடுத்துட்டாங்க. எனக்கு ஒரே வேடிக்கையா இருந்தது. இவளால பதில் சொல்லி மாளலை. திடீர்னு அந்தக் கிளியோபாட்ரா சத்தம் போட்டு சொல்றா, ’ஏ மால், நீ இப்படி யாரோடையும் சரியாப் பழகாம, தனியா ஒதுங்கி இருந்தா, அதுக்கு ரெண்டு அர்த்தம் உண்டு. ஒண்ணு நீ ஒரு ego-centric introvert. அல்லது You are in love. Come on, who's that guy?’ சுத்தி ஒரே சிரிப்பு."

"இன்ட்ரஸ்டிங்" என்றேன்.

"நானா இருந்தா கடுப்பாயிருப்பேன். அவள் அமைதியா, அழகா, ரத்னச் சுருக்கமா ’நோஸ்கட்’ குடுத்தா. ’ஹேமா, டோன்ட் பி ஸில்லி. அதோட, ஏன் பொய் சொல்றே? நான் காலேஜ்ல எல்லோரோடையும் கலகலப்பாப் பழகலை? அதுக்காக பஸ்ல வரும்போதுகூட டமாரம் வண்டி மாதிரி ஓசைப்படுத்திண்டே வரச் சொல்றியா? ஒரு பொது இடத்துல கொஞ்சம் நாசூக்கா, அமைதியா இருந்தா என்ன தப்பு? எனக்கு பஸ்ல படிக்கப் பிடிக்கும், படிக்கறேன். அல்லது பேசாம உக்காந்திருக்கேன். அதைப்போய் ego-centric-னு லேபிள் பண்ணா I just don't care. தவிர, இந்த ஸ்டேஜ்ல லவ் அதுஇதுன்னு கவனத்தை சிதறவிடற அளவுக்கு நான் முட்டாள் இல்லை.’ அவ்ளதான், எல்லார் வாயும் தெப்பக்குளம் போஸ்ட் ஆஃபீஸ் பசையால ஒட்டின மாதிரி கப்சிப்!"

"என்னோட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லலை."

"எதுக்கு இந்த நிகழ்ச்சியை விலாவரியா சொல்றேன்னா, இவ்வளவு தூரம் அடக்கமா, நாகரீகமா, ப்ராக்டிகலா இருக்கிற ஒரு பெண்ணை விரும்பும்போது, அதுவும் அவளோட பழகச் சான்ஸ் கிடைக்கும்போது, அவளைப் பத்தி மேலும் தெரிஞ்சுக்க முயற்சி செய்யறது என்ன தப்பு? என்னைவிட நீ கொஞ்சம் reserved type. More like her. In fact, I would say you have a better chance."

"அதுக்காக அவள் sorry for the inconvenience-னு சொன்னபோது, Not at all. It's a pleasure to help a girl in distress-னு வழியச் சொல்றயா? அல்லது டிக்கெட் மீட்டுத் தர்ற சாக்கில அவள்மேல் பட்டிருக்கலாம்னு சொல்றயா, What's your idea?", என்றேன் அவன் வாயைக் கிளறுவதற்காக.

You are thoroughly mistaken, ராஜா. எதிர்பாராத சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திண்டு ஒரு பெண்ணைத் தொடறது, அப்புறம் அதுக்கு நியாயம் கற்பிக்க முயற்சி செய்யறது இதெல்லாம் அநாகரிகம், சிறுபிள்ளைத்தனம், அறியாமை அல்லது sheer hypocrisy. உன்னோட ஒருத்தி கைகுலுக்க ரெடியா இருந்தா கைகுலுக்கறது நாகரிகம். அதுக்காக உன்னைக் கும்பிடறவள் கிட்டபோய்க் கையை நீட்டறது காட்டுமிராண்டித்தனம். இந்தக் காலத்தில பாம்பே, மெட்ராஸ்ல டிஸ்கோத்தேல்லாம் வந்திருச்சுன்னு கேள்விப்படறேன். ஆண்களும் பெண்களும்---முக்கியமா கல்லூரி மாணவ மாணவிகள்---கைகோத்துகிட்டு தோளோடு தோள் உரசி மேற்கத்திய இசையின் பிண்ணணியில டான்ஸ் ஆடறாங்க. இதெல்லம் ஒரு ஸோஷல் ஆக்டிவிடி, அவ்வளவுதான். சைகலாஜிகலா பார்த்த இந்தத் தொடுதல் உரசுதல்லாம் அடலசன்ட் உணர்வுகளோட வெளியீடுகள். But if you seriously love a woman, இதெல்லாம் தேவை இல்லாத அவசரங்கள். Loving is primarily respecting. நம்ம கிராமத்தில சொல்றாப்பல கெணத்து நீரை வெள்ளமா கொண்டுபோய்டும்?"

"நான் என்னதான் செஞ்சிருக்கணும்னு சொல்றே?" என்றேன் குழப்பத்துடன்.

"ஏன், பஸ்லேர்ந்து இறங்கி அவளைத் தொடர்ந்து போனபோது அவளோட பேசியிருக்கலாம். அவள் முகவரியை விசாரித்திருக்கலாம். அவளை அடிக்கடி பாக்கறது பத்தியும், எப்படி அவள் அவளோட தோழிகளிடம் இருந்து வித்தியாசமா இருக்கா, எவ்வளவு அடக்கமா, அழகா இருக்கான்னு காம்ப்ளிமென்ட் பண்ணியிருக்கலாம், நாசூக்கா. Tell me honestly, don't you like her, or better still, love her?"

என் நினைவில் அப்பாவும், கூடவே அம்மாவும், வசந்தியும், அந்தப் பூஜை அறையும் ஸ்வாமி படங்களும் தோன்ற, "நாட் யெட்" என்றேன். "நீ நினைக்கிற மாதிரி அல்லது உனக்கு முடியற மாதிரி எனக்கு இது அவ்வளவு சுலபம் இல்லை பாஸ்கர். என்னால அவ்வளவு ஈஸியா கமிட் பண்ணிக்க முடியாது."

"But I lover her, come what may", என்றான் ஒரு தீவிரத்துடன். "With all my heart and soul. அவள் இனிஷியல் என்ன தெரியுமா? என். என் மாலதி."

"புரியறது பாஸ்கர்."
 
Last edited:
யோசித்துக்கொண்டே டைரியின் பக்கங்களைப் புரட்டியபோது கலைடாஸ்கோப்பில் கோலம் மாறி மாலதிக்கு பதில் கோவி. மணிசேகரன் தோற்னினார்.

*************************
ஜன.10, சனி
*************************
கோவி. மணிசேகரனின் ஒரு சிறுகதையில் ஒரு குறிப்பிட்ட வருணனை என்னைக் கவர்ந்தது. துல்யமான, யதார்த்தமான, உயர்ந்த கற்பனையுடன் கூடிய வருணனை!

"முத்துக்களிலே நிலவொளி கடுகெனச் சிறைப் பட்டிருந்தது; முத்துக்கள் வெடித்தன; முழுநிலவோ சிரித்தது."
---’அதுவும் அங்கேயே முடியுமானால்’


walter de la mare-இன் கனவுக் கவிதைகள் நினைவுக்கு வருகின்றன.

அந்த வார்த்தைகளின் தாக்கமும் அதனை அவன் வியந்ததும் இப்பொதும் பிடிபட, பக்கங்களை விரலிட்டபோது மீண்டும் அவள் தோன்றினாள்.

*************************
ஜன.16, வெள்ளி
*************************
சரியாக ஒரு மாதம் கழித்து அவளைப் பார்த்தேன். கோவிலுக்கு வந்திருந்தாள். மறுபடியும் ஒரு கோவில் சந்திப்பு அமைந்தால் நன்றாக இருக்கும்.

ப்போது ஸேக்*ஷ்பியர் வந்தார்.

*************************
ஜன.23, வெள்ளி
*************************
உயிர் ஒலிகள் மற்றும் இதர சந்தங்களைக் கையாள்வதில் ஸேக்*ஷ்பியருக்கு இணையில்லை என்ற கூற்றை நான் இதுவரை நம்பியதில்லை. அவரது கதாபாத்திரங்களின் விஸ்வரூபத்தில் அவர் கவிதைத்திறன் மறந்துபோய்விடுவது இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் இன்று Antony and Cleopatra நாடகப் படைப்பில்

Which to the tune of flutes kept stroke and made
The water which they beat to follow faster


[http://penelope.uchicago.edu/~grout/encyclopaedia_romana/miscellanea/cleopatra/alma-tadema.html]


என்ற வரிகளைக் குரலுடன் படித்தபோது அந்த kept stroke வார்த்தைகளில் துடுப்பொலி கேட்கத் திடுக்கிட்டுப் போனேன். அடுத்த வரியில் தண்ணீர் என்னமாய்த் துடுப்புடன் இழைகிறது!

நீரின் ஒலிகளையோ, துடுப்பின் ஒலியையோ நேரடி வார்த்தைகளால்---like 'the clicking oars' or 'ripples of water'--குறிக்காமல், எளிய, இடத்துக்குப் பொருத்தமான வார்த்தைகளில் சந்தங்கள் சுட்டும் ஸேக்*ஷ்பியர் உணர்வுகளை மீட்டவல கவிஞரும் கூட.

*************************
மார்ச் 13, வெள்ளி
*************************
ன்று அவள் பஸ் ஸ்டாப்பில் என்னைக் கடந்து போனபோது நான் தயக்கத்துடன் மெல்லப் புன்னகைத்தும் பதிலில்லை. இந்த நேரம் பார்த்து பாஸ்கர் பக்கத்தில் இல்லை.

*************************
மார்ச் 15, ஞாயிறு
*************************
நானும் பாஸ்கரும் கோவிலின் திறந்த வெளியில் காலாற நடந்தபடியே படிக்கச் சென்றபோது அவள் கையில் ஒரு கனமான புத்தகத்துடன் எங்களைக் கடந்துசென்றாள். இன்று கொஞ்சம் கலகலப்பான தோற்றம். எங்களைப் பார்த்தபோது அவள் மனதில் தோன்றிய புன்னகையின் கீற்று அவள் கண்களில் எட்டிப்பார்த்ததாகத் தோன்றியது. பாஸ்கரின் அந்த ’ரொமான்டிக் ஆரா’ காரணமோ? நான் இருந்தபடியாலோ என்னவோ அவன் அவளுடன் பேச முயலவில்லை. Love is after all a very private thing.

எனக்கும் பாஸ்கருக்கும் ஒரு சின்ன வாக்குவாதம். அவள் இலக்கியம் இரண்டாம் வருடம் என்பது என் கட்சி. இல்லை கடைசி வருடம் என்பது அவன் கட்சி. பந்தயம் அஜந்தாவில் டின்னர்.

அவள் இலக்கியம், அதுவும் எங்களைப் போலவே இரண்டாம் வருடம் என்று மனதுக்குள் பல்லி கூறுகிறது. பார்ப்போம்.

*** *** ***
 
14

வேண்டு தந்தை விதிப்பினுக் கஞ்சியான்
வீதி யாட்டங்ஙளேதுங் கூடிலேன்,
தூண்டு நூற்கணத் தோடு தனியனாய்த்
தோழ மைபிறி தின்றி வருந்தினேன்.
---மஹாகவி பாரதியார், சுயசரிதை 4


*************************
மார்ச்20, வெள்ளி
*************************
கோவிலில் இன்று ஏகக் கூட்டம். அகிலாண்டேஸ்வரியின் முன் நின்று நானும் பாஸ்கரும் மனதார வேண்டிக்கொண்டோம். வேண்டுதல் முடிந்கதும் கண்கள் அலைந்தன. தேடின. நிலைத்தன.

அழகே உருவாக அவள் நின்றிருந்தாள், மழைவிட்டதும் பளிச்சென்று தோன்றும் வானவில்லாக. பக்கத்தில் மங்கிய உபரி வானவில். அம்மா போலும். பாஸ்கர் என்னை விலாவில் இடித்தான்.

கூட்டத்தில் தனியாகத் தெரிந்தாள். கண்கள் அம்மனை நோக்கியிருந்தன. கற்பூர ஆராதனையின் போது கம்பிகளில் சாய்ந்து ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு கன்னத்தில் போட்டுக்கொண்டாள்.

ஆராதனை முடிந்ததும் நெற்றியில் வியர்வை பொடிக்க அர்ச்சகர் இருவர் வெளிவந்து கற்பூரமும் குங்குமமும் கொடுத்தபோது நளினமாக ஒற்றிக்கொண்டு வாங்கி நெற்றியில் அழக்குக்கு அழகு சேர்த்துக்கொன்டாள். பாஸ்கர் கைகளை சுட்டுக்கொண்டான்!

"என்ன சார்! எங்க பார்த்துண்டிருக்கேள்? குங்குமம் வாய்ங்க்கோங்கோ."

வாங்கி நெற்றியில் தீற்றிக்கொண்டான். நான் அவளைக் காப்பியடிக்க முயன்று நெற்றியில் எங்கேயோ ஓரத்தில் குங்குமம் இட்டுக்கொண்டது பாஸ்கர் பின்னர் என்னைப் பார்த்துச் சிரித்தபோதுதான் தெரிந்தது.

அர்ச்சகர் கொடுத்த பிரசாதத் தட்டைப் பெற்றுக்கொண்டு அம்மாவுடன் (அல்லது அக்காவோ?) உட்பிரகாரத்தை மூன்று முறை வலம்வந்து, அகஸ்தியர் தீர்த்தத்தில் எட்டிப்பார்த்து "எவ்ளோ தெளிவா இருக்கில்லே!" என்று வியந்தவண்ணம் வெளியில் வந்து, நாங்கள் பிடிவாத நாய்க்குட்டிகளாகப் பின்தொடர, அம்மன் சந்நிதிக்கு நேர் எதிரில் உள்ள விநாயகர் சிலையைச் சுற்றிக்கொண்டு வெளிக்கதவு அருகில் இருந்த மகிஷாசுரமர்தினி சுவரோயியத்தை வணங்கிவிட்டுப் பழைய சந்நிதிப்பக்கம் திரும்பிச் சென்றுவிட்டாள்.

நானும் பாஸ்கரும் கோவிலைவிட்டு வெளியில் வரும்வரை பேசவில்ல.

றுநாள் அவன் கண்களையும் காதுகளையும் நம்பமுடியாதபடி அந்த நிகழ்ச்சி நடந்தது.

அன்று அவன்மட்டும் தனியாகக் கோவிலுக்குப் போனான். ஆறு மணிக்கெல்லாம் இருட்டத் தொடங்கிவிட்டது. ஆறரை மணியளவில் அன்னை அகிலாண்டேஸ்வரிக்கு தீபாராதனை.

அன்னையின் சந்நிதிக்குள் நுழைவதற்கு முன் பழைய சந்நிதிப்பக்கம் சென்று அந்த இரும்பு வாயிற்கதவு வரை போய்த் தெருப்பக்கம் பார்த்தல் என்ன என்று தோன்றியது. கூடவே, நடுவில் அவள் எதிர்ப்பட்டால் செயற்கையாக இருக்கும் என்று தோன்றிட அந்த யோசனையைப் புறக்கணித்தான்.

அன்னையின் கோவிலுக்குள் நுழையும்போது அவள் நினைவு வந்து மனம் அந்த மகிழ்ச்சியான தருணத்தை எதிர்பார்த்தது. அவளைக் காணவில்லை. மௌனமாக மகிஷாசுரமர்தினியின் காலடியில் எரியும் கற்பூரங்களைத் திரும்பிப் பார்த்தவாறே நடந்தான். ஒருவேளை சந்நிதிக்குள் இருக்கிறாளோ?

கால்களின் அவசரத்தில் விநாயகருக்கு எதிர்ப்புறம் இடம்திரும்பிய போதுதான் கவனித்தான். கோவிலில் கூட்டமே இல்லை. உள் பிரகாரத்தை நோக்கிச் சென்றபோது வழியில் இரண்டு அர்ச்சகர்கள் உட்கார்ந்துகொண்டு இருளைப் பொருட்படுத்தாது சாவகாசமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.

பிரகாரத்தில் நுழைந்ததுமே கண்கள் தாமாக சந்நிதியை நோக்கின. அவள் இல்லை. உண்மையில் அவனைத் தவிர ஒருவரும் இல்லை. பிரகாரம் காலியாக இருந்தது!

இன்று சனிக்கிழமை யாதலால் ஒருவேளை வரமாட்டாளோ?

நேற்றைய நிகழ்ச்சியின் பின்னணியில் இன்றைய வெறுமையின் சாயல் விளத்த குழப்பத்தில் ஏமாற்றம்தான் மிஞ்சியது.

இருட்டில் பறக்கும் வௌவால்களாக அலையும் கண்களில் இப்போதும் ஏதோ ஒரு நம்பிக்கை.

சிமென்ட் பால் பளபளக்கும் கற்சுவரைப் பிடித்துக்கொண்டு சிந்தனையுடன் படியேறி சந்நிதிக்குள் நுழைந்தபோது நெடிய உருவமாக அன்னை அகிலாண்டேஸ்வரி நின்றிருந்தாள். உத்திரத்திலிருந்து தொங்கும் விளக்குச் சுடரின் மேல்நோக்கிய படபடப்பில் அவள் அணிந்திருந்த நகைகள் மினுமினுக்க, அந்த ஒளிச் சிதறலும் சுடரின் இருள்கலந்த தீட்சணியமும் தோற்றுவித்த பக்தியுணர்விலும் நம்பிக்கையிலும் மனத்தின் ஏமாற்றங்கள் மறைந்துபோக, இப்போதும் மனம் அவளை நினத்திருக்க, ஒரு கணம் தலையைச் சிலிர்த்துக்கொண்டு கண்மூடிப் பிரார்த்தித்தான்.

கண்களைத் திறந்தபோது அவனால் எதையும் நம்பமுடியவில்லை. கர்பக்கிருஹத்தில் அர்ச்சகரின் மந்திரக் கூவல்கள் இசைவடிவில் ஒலிக்க, அவர் எப்படித் திடீரென்டு தோன்றினார் என்று மனம் வியக்க, தலையைத் திருப்பியபோது நேர் எதிரில் அவள் பூனைபோல் வந்து நின்றிருந்தாள். பக்கத்தில் ஒரு சின்னப் பையன்.

அவர்களைத் தவிர சந்நிதியில் வேறு யாருமே இல்லை. இந்த நல்ல சந்தர்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவளுடன் எப்படியாவது பேசிவிட வேண்டும் என்ற ஆவலில் எண்ணங்கள் வார்த்தைகளாக ஸ்படிகித்து மோதினாலும் நாக்கின் முடிச்சு அவிழ மறுத்தது.

கண்கள் மட்டும் எந்தத் தளைக்கும் கட்டுப்படாமல் அவளையும் அன்னையையும் மாறிமாறிப் பார்த்தன.

வழக்கபடி புடவை அணியாமல் இன்று பாவாடை தாவணியில் கொஞ்சம் குட்டையாகத் தெரிந்தாள்.

வழக்கமான் மௌனத்தின் சுமை நீங்கி கொஞ்சம் ’ரிலாக்ஸ்ட்’ஆகக் காணப்பட்டாள். கைகள் பையனின் கழுத்தில் அரவணைத்திருக்க, கண்கள் அன்னையை நோக்கியிருக்க, இதழ்கள் முணுமுணுக்க நின்ற இந்த ’ஹோம்லி’ மாலதியின் எளிய, இனிய, இளைப்பாறிய தோற்றத்தில் அன்பும் பண்பும் அக்கறையும் போட்டிபோட்டுக்கொண்டு மிளிர்ந்தன.

ஆராதனை முடிந்து குருக்கள் கற்பூரம் கொணர்ந்தபோது பவ்யமாகத் தானும் கண்களில் ஒற்றிக்கொண்டு பையனுக்கும் ஒற்றிவிட்டாள். குங்குமம் வந்ததும் வாங்கி வழக்கம்போல் அழகாக நெற்றியில் உறுதிப்படுத்திக்கொண்டு பையனுக்கும் இட்டுவிட்டு மீதமிருந்ததை அவன் தளிர்க் கையில் ஒப்படைத்தாள்.

அவள் செய்கைகளைக் கவனித்தவாறே அவன் தானும் குங்குமம் இட்டுக்கொண்டு, காணிக்கை போட்டுவிட்டு அவளுடன் பேசத் துணைக்கு அன்னையையும் அழைத்தான்.

என்ன பேசுவது?
வழக்கம்போல் தலைக்கு மேலே பெரிய கேள்விக்குறி தொங்க, இதற்கிடையில் ஆராதனை முடிந்து அவள் நகர ஆரம்பிக்கத் தானும் மௌனமாகத் தொடர்ந்தான்.

வெளியில் வந்து அவள் நமஸ்கரித்தபோது பையன் கம்பத்தில் ஏறி மணிகளை வருடினான். எங்கிருந்தோ திடீரென மற்றொரு சின்னப்பையன் தோன்றி, "மாலதீ!" என்று கூப்பிட்டுக்கொண்டே பிரகாரத்தில் ஓடியபோது அவள் பெயர் உறுதியாயிற்று.

ஒரு புன்னகையுடன் படியிறங்கி வந்தவளை முன்னால் விட்டு அவன் இன்னமும் மௌனமாகப் பின்தொடர்ந்தான்.

எத்தனை சந்தர்ப்பங்கள்!
என்ன பேசுவது?

உட்பிரகாரத்தை வலம்வரும் போது விநாயகரை வழிபட்டாள். அடுத்து சுப்ரமணியர். அப்புறம் ஆறுமுகன், ரேணுகா. எல்லோருக்கும் வணக்கம் தெரிவித்த பின் சரஸ்வதியை நமஸ்கரித்தாள். சூரியனை நெருங்கும்போது அவன் ஒருவழியாகத் தீர்மானித்து வாய்திறக்க முற்பட்டபோது குரல் கரகரப்பாக, கொஞ்சம் செயற்கையாக வந்ததது.

"ஹலோ மிஸ். மாலதி! ஸ்டடி ஹாலிடேஸ் ஆரம்பிச்சாச்சா?"

மெல்லத் தலையாட்டினாள் உடன்பாடாக.

"செகண்ட் இயர் தானே?"

"ஆமாம்."

"என்ன மேஜர்?"

நளினமாகத் திரும்பி "லிட்ரேச்சர்", என்றாள். "இங்லிஷ் லிட்ரேச்சர்."

விநாடிகள் மௌனமாக நழுவ, அவள் சூரியனை நமஸ்கரித்தாள். பின்னர் மெல்லிய குரலில் கேட்டாள்: "நீங்க யாருன்னு தெரியலையே?"

அந்தக் கேள்வியை எதிர்பார்த்து அவன் தயாராக இருந்தபோதிலும் அதை அவள் தயக்கத்துடன் மெதுவாகக் கேட்டபோது அந்த நாசூக்கில் அவள் சந்தேகத்தின் நியாயம் உறைக்கத் திணறிப்போனான்.

கொஞ்சம் தயங்கி, கொஞ்சம் யோசித்து, கொஞ்சம் புன்னகைத்து, அவளுக்கு நேர் எதிரில் போய் நின்றுகொண்டு, சின்னப் பையனைக் கன்னத்தில் லேசாகத் தட்டிவிட்டு, "வசந்தினு ஒரு பொண்ணு உங்ககூடப் படிச்சிருக்கலாம். அவள் எங்க சித்தி பொண்ணு. நீங்க பி.யு.ஸி அதே காலேஜ்லதானே படிச்சிங்க?"

"இங்கதான் படிச்சேன். அவங்க எந்த செக்*ஷன்?"

"பி.யு.ஸி. ஃபர்ஸ்ட் க்ரூப்லதான் படிச்சா. இப்பகூட அவளும் லிட்ரேச்சர் ஸெகன்ட் இயர்தான்."

"எந்த செக்*ஷன்?"

"தெரியவில்லை."

அப்படியா என்பதுபோல் தலையாட்டியபடியே போய்விட்டாள்!

பாஸ்கரின் ஆலோசனையைக் காற்றில் பறக்கவிட்டு
அரிய வாய்ப்பொன்று விரல்களின் இடுக்குகளில்
பிரசாதத் தீர்த்தமாக நழுவி சிந்திவிட

நாவில் பட்ட ஓரிரு துளிகளின்
அதீத இனிமையில் மெய்மறந்த வனாக
கண்களில் ஒற்றிக்கொண்டு தலையில் தெளித்துக்கொண்ட
துளிகளில் உச்சி குளிர்ந்தவனாய் நிற்க

மனமோ கடந்த நிகழ்ச்சிகளை
மீண்டும் ஒத்திகை பார்க்க
(நாடகத்துக்குப் பின் ஒத்திகை!)

தொடர்ந்து அப்பாவின் சலனமற்ற முகமும்
தீட்சண்யமான பார்வையும் நினைவில்வரக்
கடைசியில் குழப்பம்தான் மிஞ்சியது.


பாஸ்கர் யு கேரி ஆன்!
 
பாஸ்கரிடம் மறுநாள் சொன்னபோது எதிர்பார்த்தபடியே கோபித்துக்கொண்டான்.

"What nonsense I say! இப்படியா ஒரு பொண்ணோட பேசறது? எதோ பேட்டிக்கு வந்த பத்திரிகை நிருபர் மாதிரி! நீங்க யாருன்னு தெரியலையேன்னு அவ கேட்டாளாம் இவன் வாயை மூடிண்டு கம்முனு வந்துட்டானாம். எந்தப் பொண்ணுய்யா உன்னை எனக்குத் தெரியும், நாலஞ்சுதரம் காவேரிப் பாலத்துகிட்ட பார்த்திருக்கேன்னு சொல்லுவா? தெரிஞ்சாதான் அவளே வந்து பேச மாட்டாளா? உங்களைத் தெரியலைன்னா உங்களைப் பத்தித் தெரிஞ்சுக்க விரும்பறேன்னு அர்த்தம். இதுகூடப் புரிஞ்சுக்க முடியலை, நீயெல்லாம் ஒரு லிட்ரேச்சர் ஸ்டூடன்ட். (பெருமூச்சுடன் தலையில் அடித்துக்கொண்டு) ஹூம், போயி, பிரபாத் தியேட்டர்ல சினிமா பாரு, ’காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்!’னு பாடிண்டு ஜெயலலிதா வருவா!"

"பாஸ்கர் உனக்கு எங்க குடும்பப் பின்னணி பத்தித் தெரியாது."

அவன் ஆதங்கம் புரிய மெல்லக் கூறியபோது சீறினான்.

"என்னய்யா பெரிய குடும்பப் பின்னணி? நீ என்ன காதலுக்காக குடும்ப சாம்ராஜ்யத்தைத் துறந்துட்டு ஓடப் போறியா, இல்லை பின்னால படைகள் துரத்த பிருத்விராஜ் மாதிரி ராணி சம்யுக்தாவைக் கடத்திண்டு போகப் போறியா? உனக்கு வரப்போறவளை நீ தேர்ந்தெடுக்கணுமா உங்க அப்பாம்மா தேர்ந்தெடுப்பாளா சொல்லு? அப்படியென்ன நீ எவளோ ஒருத்தியைக் கூட்டிண்டு குடும்பத்துக்குத் தலைமுழுகிடவா போறே? அந்த மாதிரி செய்யறவன் ஒரு கோழை, மடையன். அப்படிச் செய்யறது அநாகரிகம். நாமெல்லாம் படிச்சவங்க. குடும்பத்தில நம்ம கடமை, கமிட்மென்ட் பத்தித் தெரிஞ்சவங்க. நம்முடைய ’எய்ம்’ என்ன, நமக்கும் நம்ம குடும்பத்துக்கும் பொருத்தமானவளா ஒருத்தியைத் தேர்ந்தெடுக்கணும். நமக்கும் உகந்த வாழ்க்கைத் துணையா இருக்கணும், அதே நேரத்தில குடும்பத்தையும் அனுசரிச்சிண்டு போகணும். இதைக் கடைசி நேரத்தில கால்ல கஞ்சியைக் கொட்டிண்டு உங்கப்பா செய்யறதுக்குப் பதிலா இப்பருந்தே திட்டமிட்டு நீ செய்யப்போறே, அவ்வளவுதானே?"

"பாஸ்கர் கொஞ்சம் மெதுவா. இது பொது இடம். ரொம்பநாள் கழிச்சு இன்னைக்குத்தான் சூரியன் கடைசிவரைக்கும் நதியில் மூழ்கறது பாத்தியா? இப்ப இங்கேர்ந்து வெள்ளைவேளேர்னு ஒரு பூமராங் எறிஞ்சேன்னு வெச்சுக்க, அது சூரியனைத் தொட்டுட்டு என் கைக்குத் திரும்ப வரும்போது செக்கச்செவேர்னு ஆயிடும் இல்ல?"

"ஸில்லி. அப்புறம் உன்னால அதைக் கையில் பிடிக்கமுடியாது."

"ஸில்லி இல்லை. பொயடிக் லைசன்ஸ். ரைட். இன்னைக்கு எங்க அவளைக் காணலை?"

"அதான் லீவு விட்டாச்சே. வீட்ல உக்கார்ந்து படிச்சிண்டிருப்பா. அல்லது கோவிலுக்கு வந்திருப்பா, உன்னைத் தேடிண்டு அவள் அப்பாவோட!"

"வரட்டுமே, எனக்கென்ன கொறைச்சல்? போய்ப் பார்க்கலாம் வரையா?"

"கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்", என்றான் காட்டமாக. உடனே சாந்தமடைந்து, "வேண்டாம். We may be disappointed." என்றான்.

"எப்ப எனக்கு அஜந்தால டின்னர்?"

"குடுத்திட்டாப் போறது. நானும் ஒரு தடவை வெரிஃபை பண்ணிக்கறேன். நீ வேணா பாரு, உன்னைவிட நான் இந்த விஷயத்தில ப்ராக்டிகலா, பெட்டரா, நேச்சரலா ட்ரை பண்ணி அவளை வழிக்குக் கொண்டுவரேன். என்ன பெட்?" என்றான் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு.

"உன்னாம் முடியும் பாஸ்கர்."

*** *** ***
 
15

கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
கவர்ந்திட மாட்டாவோ? -- அட
மண்ணில் தெரியுது வானம், அதுநம்
வசப்பட லாகாகோ?
---மஹாகவி பாரதியார், ஆத்ம ஜெயம்


சையுடன் ஊதும்போது பாதியில் வெடித்துவிட்ட பலூன் போன்ற அந்த முதல் சந்திப்பைத் தொடர்ந்து அவளைப் பலமுறை பார்க்க நேரிட்டபோது அவனால் பேசமுடியவில்லை. அல்லது முயலவில்லை.

அவளது கண்கள் ஓரிரு முறை அவன்மீது நிலைத்தபோது கூட, அவற்றில் மூன்றாம் பிறைச் சந்திரன்போல் மெல்லிய கீற்றாகப் புன்னகையும் தோழமையும் எட்டிப் பார்த்தபோது கூட அவன் புன்னகை செய்யவில்லை.

கண்கள் மட்டும் பிடிவாதமாக அவள் பக்கம் பார்த்திருக்க, மனம் அவள் அழகின் பிரதிபலிப்பில் லேசாகிப் பிரகாசமாகத் தோன்ற, கூடவே திடீரென்று யாரோ ஒன்றன்பின் ஒன்றாகச் சின்னச் சின்ன கற்களை எறிய ஏற்பட்ட எண்ண அலைகள் மனதைக் குழப்பி அலைக்கழிக்க...

’இந்த ஸ்டேஜ்ல லவ் அதுஇதுன்னு கவனத்தை சிதறவிடற அளவுக்கு நான் முட்டாள் இல்லை.’

’அவள் இனிஷியல் என்ன தெரியுமா? என். என் மாலதி.’

’நீங்க யாருன்னு தெரியலையே?’

’எந்தப் பொண்ணுய்யா உன்னை எனக்குத் தெரியும்னு சொல்லுவா?’
’நீ நினைக்கிற மாதிரி எனக்கு இது அவ்வளவு சுலபம் இல்லை பாஸ்கர். என்னால அவ்வளவு ஈஸியா கமிட் பண்ணிக்க முடியாது.’

’வசந்தி, இன்னைக்கு நான் அனுவைப் பார்த்தேன்.’
’அப்படியா? என்ன சொன்னா?’
’என்னப் பார்த்து சிரிச்சா. நான் ஒண்ணும் கேட்கலை.’

’எண்ணங்களுக்கும் எழுத்துகளுக்கும் நடுவில் உள்ள இடைவெளி எப்போதுமே பெரியது. பொல்லாதது.’

’"ஜெயந்தி, இந்த முருகன்...’

வ்வொரு முறையும் ரேடியோவில் மனசுக்குப் பிடித்த இனிமையான பாட்டைக் கேட்கும்போது யாரோ திடீரென்று நடுவில் அணைத்துவிடுவது போலிருந்தது.

’கொடியசைந்ததும்... காற்றுவந்ததா?...’

’ஏம்மா, இந்த டப்பா சங்கீதத்தைவிட்டா ஒண்ணுமே தெரியாதா உங்களுக்கு? அறுவது நாழியும் ரேடியோ பக்கத்திலேயே உக்காந்துண்டு... விளக்கு வைக்கிற நேரத்தில வேற பாட்டு கிடைக்கலையா? அதான் மத்த நேரம் பூராவும் கேக்கறேளே?’

’மலர் மலர்ந்த்---’

"சரி பெரியப்பா நான் அப்புறம் கேட்டுக்கறேன்."

ஏன்பா, அவளுக்குப் பிடிச்ச பாட்டுன்னா கேட்டுட்டுப் போறா. நாம நினைக்கற நேரத்தில நல்ல பாட்டுப் போடுவானா? இதுலெல்லாம் நீங்க ஏன் தலையிடறேள்?--என்று மனதுக்குள்தான் சொல்லமுடிந்தது.

ஒவ்வொரு முறையும் யாரோ அவனைப்
பின்தொடர்வது போலிருந்தது.

எப்போதும் இரண்டு கண்கள் அவனைப்
பார்த்துக் கொண்டிருப் பதாகப் பட்டது.

அனுமதியா, மறுப்பா, கோபமா என்று புரியாத
அப்பாவின் சலனமற்ற கண்கள்.

அல்லது கலவரம் நிறைந்த
அம்மாவின் கண்கள்.

’ஏண்டா இந்த மாதிரிலாம் செய்யறே?
ஒழுங்காப் படிச்சு முன்னுக்கு வர்ற
வழியைப் பார்ர்க்க வேண்டாமா?’

அல்லது ஆர்வமும் வியப்பும் அனுதாபமும்
தோன்றப் பார்க்கும் வசந்தியின் கண்கள்.


எல்லோருடைய பார்வையும் பரீட்சை ஹாலில் வலம்வரும் மேற்பார்வையாளர்களின் ’எனக்கொன்றும் சம்பந்தமில்லை’ என்னும் பார்வையாக இருந்தது.

பக்க்த்தில் நின்று, நிதானித்து,
அவன் பேனாவின் ஓட்டத்தையே பார்த்துக்கொண்டு,
சமயத்தில் பேனா தடுமாறி நிற்கும்போதோ,
நத்தையைப்போல் நகரும்போதோ,

அல்லது திடுமெனக் கீழே விழுந்துவிடும்போதோ கூட
ஒன்றுமே சொல்லாமல், ஒரு சின்ன ’க்ளு’கூடக் கொடுக்காமல்,

அல்லது பரீட்சை முடிந்த பிறகாவது
’நீ இப்படி செய்திருக்கலாம்’ என்று
ஆலோசனை கூறாமல்,

அவன் மற்ற பரீட்சைகளையாவது
நல்லபடியாகச் செய்யட்டுமே என்ற
அக்கறை இல்லாமல்,
முகத்தைச் சிலைபோல வைத்துக்கொண்டு...


கூடவே சுஜாதாவின் ’கொலையுதிர் காலம்’ நாவலில் வருவதுபோல் அந்த உரையாடல்கள் எப்போதும் எங்கிருந்தோ கேட்டன.

"இந்தக் காலத்துல கன்னாபின்னான்னு கதை எழுத ஆரம்பிச்சுட்டா. கதிர்ல புஷ்பா தங்கதுரை, விகடன்ல குமாரி பிரேமலதா, குமுதத்தில் வழக்கம்போல் ஒரு சாண்டில்யன்... போறாக்குறைக்கு சுஜாதாவோட படையெடுப்பு, ஜெயராஜோட அப்பட்டமான படங்கள்... வரவர கலைமகள் கல்கி தவிர ஒரு புஸ்தகத்தைக் கையால் தொடமுடியலை."

"ஆமாக்கா. இதுபோதாதுன்னு சினிமா வேற. இந்தக் காலத்துப் பசங்ககிட்ட இதப் படிக்காதே அதப் பார்க்காதேன்னு சொல்லவா முடியும்?"

"அதுவேற எனக்கு பயம் காமு. நாம என்ன வாச்மேன் உத்தியோகமா பாக்கமுடியும்? எனக்கென்னவோ இவா ரெண்டுபேரையும் நினைச்சா கவலைதான். ஊர்விட்டு ஊர்போய் ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கிறதுகள். பாத்துக்கறத்துக்கும் ஆளில்லை. என்னமோம்மா, நல்லா படிச்சுக் கரையேறணும்."

"எங்க பார்த்தாலும் கண்டகண்ட சினிமாப் படங்கள். அதுக்கு ஆயிரம் போஸ்டர். கோயம்புத்தூர்ல போறாக்குறைக்கு மலையாள சினிமா வேற. காதல் காதல்னு ஆபாசத்தைத்தான் திணிக்கறாங்க."

"காதலாவது கத்திரிக்காயாவது? நா இந்த சினிமாப் பக்கமே தலைவெச்சு படுக்கறதில்ல. உங்க அத்திம்பேர்க்கும் இதெல்லாம் கட்டோட பிடிக்காது."

வனும் வசந்தியும் காற்றாட மொட்டை மாடியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார்கள். சட்டென்று முடிவுசெய்து அவன் கேட்டான்.

"வசந்தி, நீ அனுவைப் பத்தி என்ன நினைக்கறே?"

"எந்த அனு?"

திடுக்கிட்டான். "என்ன வசந்தி இப்படிக் கேக்கறே? நம்மளோட ஆறாவது வரைக்கும் படிச்சாளே அந்த அனுதான்."

"இல்லை, என்னோட காலேஜ்ல ஒரு அனுராதா படிக்கறா. அவளை நினைச்சிண்டுட்டேன்."

"எனக்கு வேற எந்த அனுவைத் தெரியும்?"

"அதானே?"

"நீ அனுவைப் பத்தி என்ன நினைக்கறே, சொல்லேன்?"

"அவதான் இப்ப இங்க இல்லையே? மதுரைலைன்னா ஏதோ ஒரு காலேஜ்ல படிக்கறா?"

"தெரியும், சொல்லேன்?"

’தெரியும்’ என்ற வார்த்தை வாய்தவறி விழுந்துவிட்டது, வசந்தியின் முகத்தில் தெரிந்தது. சற்றே புருவங்களை வளைத்து அவள், "எதுக்கு இப்ப திடீர்னு அனு?" என்றாள்.

பெருமூச்சுவிட்டான். "சரி, ஜெயந்தியைப் பத்தி நீ என்ன நினைக்கறே?"

"ஜெயந்தி?... ஓ அவளா! நல்ல சூட்டிக்கையான பொண்ணு. நன்னாப் படிப்பா. என்ன இப்ப திடீர்னு பெண்களைப் பத்தின ஆராய்ச்சி?"

"சும்மாதான். ஏதோ தோணித்து, கேட்டேன். நீ இதைப்பத்தி யார்கிட்டயும் பிரஸ்தாபிக்க வேண்டாம்."

"நான் ஏன் பிரஸ்தாபிக்கறேன்? But one thing. This is the time to study."

இவர்கள் யாரும் கொஞ்சம்கூடப் பிடிகொடுத்துப் பேசமாட்டார்கள் என்று புலப்பட்டது. அப்பாவோ கேட்கவே வேண்டாம். இந்த மாதிரி விஷயங்களில் அவருக்கு அக்கறையே கிடையாது.

தேடிச் சோறு நிதந் தின்று -- பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி -- மனம்
வாடித் துன்பமிக உழன்று -- பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து -- நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி -- கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் -- பல
வேடிக்கை மனிதரைப் போலே -- நான்
வீழ்வே னெனுறுநினைத் தாயோ?
---மஹாகவி பாரதியார், யோக சித்தி, வரம்கேட்டல் 4


என்று வசந்தியை நோக்கி மானசீகமாகக் கூறிவிட்டுக் காலரை சரிசெய்துகொண்டான்.

அவனும் பாஸ்கரும் அறையில் பாரதியை உரக்கப் பாராயணம் செய்தது நினைவுக்கு வந்தது.

காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்;
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம், சிற்பமுதற் கலைக ளுண்டாம்;
ஆதலினால் காதல்செய்வீர் உலகத் தீரே!
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்;
காதலினால் சாகாம லிருத்தல் கூடும்;
கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம்.
---மஹாகவி பாரதியார், சுயசரிதை, காதலின் புகழ் 49


பாரதியின் வரிகளில் ஆறுதல் அடைந்தவன், பாஸ்கரிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டியதுதான் என்று தீர்மானித்துக் கொண்டான்.
 
Last edited:
தேடிச் சோறு நிதந் தின்று -- பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி -- மனம்
வாடித் துன்பமிக உழன்று -- பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து -- நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி -- கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் -- பல
வேடிக்கை மனிதரைப் போலே -- நான்
வீழ்வே னெனுறுநினைத் தாயோ
Only that greatest poet, man with turban and big moustache can write tlike this. Had he premotion that he will not live long enough? What a "deerkadarsee". Thanks for using this here Saidevo Sir. Cheers.
 
ருநாள் மாலை தமிழ்ப் பரீட்சை முடிந்ததும் அவனும் பாஸ்கரும் சத்திரம் பஸ் நிறுத்தம் தாண்டிக் காவிரிப் பாலம் நோக்கி நடைபோட்டபோது தற்செயலாகத் திரும்பிப் பார்த்ததில் அப்போதுதான் வந்துநின்ற ஒன்றாம் நம்பர் பஸ்ஸில் மாலதி தன் தோழிகளுடன் நுழைவது தெரிந்தது.

"ராஜா, கவனிச்சேல்ல? கம் ஆன், இப்ப இருக்கற ட்ராஃபிக்ல இந்த பஸ் சிந்தாமணி ஸ்டாப்க்கு வர கொறஞ்சது மூணு நிமிஷமாகும். இப்ப திரும்பி சத்திரம் ஸ்டாப்புக்கு ஓடறதுக்குள்ள பஸ்ஸைக் கிளப்பிடுவான். So, hurry, this is the race of our life!"

இடம்வலம் சாலைநடைபாதை பாகுபாடுகளின்றி மக்களும்மாக்களும்வாகனங்களும் நீக்கமற நிறைந்து ஒரு குழம்பிய குட்டையாக இயங்கிக்கொண்டிருக்க, அவர்கள் தம் தலையை வானில் வைத்துக்கொண்டு ஒரு நாயின் உத்வேகத்துடன் நீந்திக் கடந்து மூச்சிரைக்க விரைந்து, கால் விரல்களிலும் கணுக்காலிலும் வலி ஊசிகள் பின்னிக்கொள்ள, அண்ணா சிலைக்கு அருகில் அந்த பஸ் அவர்களை முந்திவிட, அவர்கள் மேலும் ’தம்’ பிடித்து சாலையைக் கண்டபடி கடந்து போக்குவரத்துக் காவலரின் விசிலையும் வசவுகளையும் புறக்கணித்து, சிந்தாமணித் திருப்ப நிறுத்தத்தை விட்டுக் கிளம்பத் தொடங்கிவிட்ட பஸ்ஸைக் கடைசி நிமிஷத்தில் பற்றிப் படிகளில் தொற்றிக்கொண்டார்கள்.

அவர்கள் அதிர்ஷ்டம் பஸ்ஸில் கூட்டமில்லை. உட்கார இடம் கிடைத்தது. அதுவும் அந்த மகளிர் கூட்டத்தின் பக்கம், எதிரில்.

"மால் நீ அந்த சாயும் நெய்தலும் அநோடேஷன் எழுதினியா?"

"ஓ. பெரியபுராணம்."

"அய்யய்யோ இல்லை! புறநாறூறு."

"கிடையாது பெரியபுராணம்தான். ’சாயும் நெய்தலும் ஓம்புமின் | ஆய்வளை கூட்டு அறிவை’. இதான் ஃபுல் கொட்டேஷன்."

"பெரியபுராணம்தான்!" என்று கோரஸ் ஒலிக்க அவள் இரண்டாம் வருட மாணவிதான் என்று உறுதியாயிற்று.

"உன்னோட முயற்சிகள் எந்த அளவில் இருக்கு பாஸ்கர்?"

"அவள் வீட்டைக் கண்டுபிடிச்சிட்டேன்! செகன்ட் இயர்ங்கறது இன்னும் வசதி. என்னைவிட, சாரி, நம்மைவிட மூத்தவளா இருக்க சான்ஸ் இல்லை. அதே வயசுங்கறது இந்தக் காலத்தில பரவாயில்லை. மற்றபடி உடல் உள்ளம் பெர்சனாலிட்டி விஷயங்கள் பரம திருப்தி. அந்த ’ஸ்பார்க் ஃப்ரம் ஹெவன்’ மட்டும் விழுந்ததுன்னா சிலாக்கியமா இருக்கும். நீயோ நானோ, ஒன் அஃப் அஸ் மஸ்ட் கெட் ஹர்."

"நான் ஏற்கனவே உனக்கு ’கிரீன் ஸிக்னல்’ கொடுத்திட்டேன் பாஸ்கர்."

*** *** ***
 
வணக்கம் திரு. மனோஜ்குமார்.

வேடிக்கை என்னவென்றால் பாரதி தன் ’தேடிச் சோறு நிதந் தின்று’ சூளுரையைப் பராசக்தியை நோக்கி உரைக்கிறார்! இன்று காலை நன்றாகத் தேடிக் கிடைத்த இந்த இரு கவிதைப் பகுதிகளின் தலைப்பைப் பதிவுசெய்ய மறந்தது இப்போது திருத்திவிட்டேன். ’தேடிச் சோறு’ அவர்தன் ’யோக சித்தி, வரம்கேட்டல்’ பாடலிலும், ’காதலினால் மானுடர்க்குக்’ சுயசரிதை, காதலின் புகழ் பகுதியிலும் வருகிறது.

இங்கு உறுப்பினராக இருக்கும் நண்பர் விகரம அவர்கள் தன் ’பாரதி செய்த வேதம்’ புத்தகத்தில் பாரதி எப்படித் தான் ’பார்மீது சாகாதிருப்பேன் காண்பீர்’ என்று நம்பி உரைத்ததை அடைந்தார் என்பதை அழகுற விளக்குகிறார். காலனைக் காலால் மிதிக்கேறேன் என்ற பாரதி அகால மரணம் அடைந்தும் அமரராக வாழ்வது ’ஆதலினால் காதல் செய்வீர்’ என்று உலகம் முழுவதையும் பராசக்தியின் வடிவாக, லீலையாகப் பார்த்துக் காதல் செய்ததால்தான் என்று விக்ரம மேலும் விரித்து விளக்குகிறார். ’அன்பே தவம்’ என்ற பாரதியின் கொள்கையைத் தன் வலைதளத்தில் அவர் விளக்குகிறார்.
bharathiadi.blogspot.in/search/label/பாரதி
பாரதி அடிப்பொடி: &

பாரதியின் வரிகளை நான் என் நாவலில் லௌகிக விஷயங்களுக்கு மேற்கோள்களாகக் காட்டி அவர் வரிகளின் கருத்துப் பரிமாணத்தை நீர்த்துப்போகச் செய்கிறேன் என்று சிலர் விமரிசனம் செய்யலாம். ஆனால் அவர் சுயசரிதையைப் படிக்கும்போது, பிள்ளைப் பிராயத்திலிருந்தே அவர் ஒரு பெண்ணைக் காதலித்ததாலும் பின்னர் தன் மனைவியை உயிரினும் மேலாகக் காதலித்ததாலும் இல்லறக் காதலின் மேன்மையையும் அவர் தன் கவிதைகளில் காட்டத் தவறவில்லை என்று தெரிகிறது.
 
16

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்.
---மஹாகவி பாரதியார், புதுமைப் பெண் 7


ரு பசுவின் அவசரத்துடன் கண்கள் டைரியில் மேய்ந்தும் பின் மனம் மேய்ந்ததை நிதானமாக எண்ணங்களாகப் பகுத்து அசைபோட்டும் அவன் தன் கடந்தகால நிகழ்ச்சிகளை நினைவுகூர்ந்து மகிழ்ந்து கொண்டிருந்தபோது, கண்கள் மறுபடியும் எழுத்துகளின் புல்வெளியை நாட, கௌசல்யா தோன்றினாள்.

கல்லூரியில் சேர்ந்தபின் அவன் பெரும்பாலும் ஒவ்வொரு சனிக்கிழமை மாலையும் வசந்தியின் கல்லூரிக்குச் சென்று அவளைப் பார்த்துவருவது வழக்கம். அன்றும் வழக்கம்போல் எப்போதும் சைக்கிள்மேல் பவனி வரும் அந்தப் பியூனிடம் சொல்லியனுப்பிவிட்டுப் பார்வையாளர்கள் பெஞ்ச்சில் உட்கார்ந்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம் வசந்தி தன் அறையிலிருந்து வெளிப்போந்து மாடிப்படிகளில் இறங்கி ஹாஸ்டல் கட்டட வாசலைக் கடந்து அவனை நோக்கி வந்தாள். கூடவே ஒரு தோழி.

கொஞ்ச தூரம் வசந்தி வந்ததும் தோழி கையசைத்து விடைபெற்றுக்கொள்வாள், வசந்தி மட்டும் அவனை நோக்கி வருவாள் என்று வழக்கம்போல் எதிர்பார்த்து இருந்தவனுக்கு ஆச்சரியும் காத்திருந்தது.

சந்தியுடன் வந்தவளைக் கண்கள் அளவெடுத்தன. மெல்லிய ஃப்ரேமுடன் கூடிய வெயில் கண்ணாடிகளுக்குள் விழிகள் கருவண்டுகளாகக் குறுகுறுத்தன. ஃப்ரேம் நடுவிலிருந்து ஓடிய எடுப்பான நாசி ஷர்மிளாவை நினைவுபடுத்தியது. கொஞ்சம் நீளவடிவம் கொண்ட முகத்தில் காலைப் பனிமூட்டம் போல் மெல்லிய பவுடர் திரையிட்டு முகத்தின் சந்தன நிறத்தைச் சற்றே மங்கச் செய்தது. அப்போதுதான் ஷாம்பு போட்டுக் குளித்தாற்போல் புதிதாகக் காணப்பட்டு, வில்லென வளைந்த hair band-டைத் அருவியாகக் கொட்டும் கூந்தலை நீண்ட கைகளின் நீளமான விரல்கள் அனாயாசமாக ஒதுக்கிவிட, ஒரு ’க்ளோஸப்’ புன்னகையுடன் அவள் பேசினாள்.

"ஹலோ, குட் ஈவனிங்! நீங்க ராஜா இல்லை? என்னைத் தெரியறதா?"

"குட் ஈவனிங். ஐ’ம் சாரி, எனக்கு ஞாபகம் இல்லை."

"நேச்சுரல் தானே! சின்ன வயசில பார்த்தது."

"என்ன ராஜா, இவள் யாருன்னு ஞாபகம் இல்லை? கௌசல்யா."

"நீ ஏன் சொன்னே வசந்தி? ராஜாவாக் கண்டுபிடிக்கறானான்னு பாக்க நினைச்சேன்."

"கௌசல்யா? ஐ ஸீ, நாராயணன் மாமாவோட டாட்டரா நீங்க! ரொம்ப வருஷம் கழிச்சுப் பாக்கறோம். வாட் சர்ப்ரைசிங் சேஞ்ஜ்!"

"என்ன சேஞ்ஜ், சொல்லுங்கோ?"

"சின்ன வயசில பாத்தபோது நீங்க குட்டையா, ஒல்லியா இருந்தீங்க."

"நௌ தி அதர் வே இல்ல? ஆனால் நான் வசந்தி மாதிரி குண்டு இல்ல, இல்லையா?"

"எனக்கொண்ணும் வித்தியாசம் தெரியலை. பட்தென் வசந்தி நிச்சயமா குண்டு இல்லை."

"ஓகே, அக்ரீட். ஆனால் நான் அவ்ளோ அழகா, அடக்க-ஒடுக்கமா இருக்கற மாதிரி என்னைப் பார்த்தா தெரியலை இல்ல? ஐ லுக் மாடர்ன்."

"அன்ட் ப்ரெட்டி."

கலகலவென்று சிரித்தாள்.

"வெல், சின்ன வயசில பார்த்ததுக்கு இப்போ நீங்க எப்படி இருக்கேள்னு சொல்லட்டுமா?"

"யு ஆர் வெல்கம் டு ஸே எனிதிங்."

"நீங்களும் அப்போ குட்டையா, ஒல்லியாதான் இருந்தீங்க. இப்போ பார்க்கும்போது நம்பத்தான் முடியலை."

"வொய்?"

"யு லுக் ஸோ டால் அன்ட் வெல்-பில்ட். அன்ட் சார்மிங் டூ!" என்று கண்ணடித்தாள்.

அனுவை நினைத்துக்கொண்டான். அநேகமாக இப்போது அவன் அவளைவிட உயரமாகி இருக்கக்கூடும். மதுரையில் படிக்கிறாளாமே? அவளுக்குக் கடிதம் எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.

"என்ன பலமான யோசனை?"

"ஒண்ணுமில்லை. நானே இவ்வளவு உயரமா வருவேன்னு நினக்கலை."

"ஆல் இன் த கேம். ஊர்ல எப்படி, அப்பா அம்மால்லாம் சௌக்யமா?"

"சௌக்யம்."

"இப்பவும் அதே ஊர், வீடுதானே?"

"அதேதான். வேறெங்க போறது?"

"உங்க தெருவுல ஒரு கோவில் இருக்கில்ல? ம், பிள்ளையார் கோவில்!"

"ஆமாம்."

"சின்ன வயசில---மூணாவது படிக்கும்போதுன்னு நினைக்கறேன்---நாமெல்லாம் ஒண்ணாச் சேர்ந்து பாண்டி விளையாடி யிருக்கோம், லீவு நாள்ல. உங்களுக்கு அதெல்லாம் ஞாபகம் இல்லை போல. தவிர, நான் கொஞ்ச நாள்தானே உங்காத்தில இருந்தேன்."

"கொஞ்சம் ஞாபகம் இருக்கு மிஸ் கௌசல்யா."

"ஒரு சின்ன வேண்டுகோள்."

"என்ன?"

"இந்த மிஸ், நீங்க-வாங்கல்லாம் வேண்டாமே? ப்ளீஸ்."

"ரைட். உங்களுக்கும் அதேதான்."

"மறுபடியும் பார்த்தாயா, வசந்தி? ராஜா, சொல்றதைக் கேளுங்கோ, கட் தட் க்ராப்."

"நீங்க மட்டுமென்ன?"

"இதுக்கு முடிவே இல்லை!" என்று சிரித்தபடி செல்லமாக அவன் தோளில் கைவைத்துத் தள்ளினாள். அவ்வழியே போய்க்கொண்டிருந்த ஒன்றிரண்டு பெண்கள் திரும்பிப் பார்த்தனர். நல்லவேளை, அருகில் வேறு பார்வையாளர்கள் இல்லை.

"யு கால் மி ஜஸ்ட் கௌசல்யா, ஆர் கௌசி ஃபர் ஷார்ட்."

"அன்ட் யு கால் மி ராஜா. நாட் ஜஸ்ட் ரா ஆர் ஜா!"

"போதும் ரொம்ப அறுக்காதீங்கோ" என்றாள் வசந்தி.

"வசந்தி, இவள் இங்க எப்படி திடீர்னு? மாமா மாமில்லாம் மெட்ராஸ்ல இல்ல இருக்கா? கௌசல்யா, அப்பா அம்மால்லாம் சௌக்யமா?"

"நல்லா இருக்கா. நாங்க இப்போ திருச்சி வந்தாச்சு."

"அப்பா என்ன பண்றார் இப்போ? அந்தக் காலத்தில மாமா வேலை விட்டு வேலை தாவிண்டே இருப்பார்னு அப்பா சொல்லக் கேள்வி."

"ஒரு வழியா ஃபார்மஸி லைன்ல செட்டிலாய்ட்டார். இப்ப அவர் சீனிய மெடிகல் ரெப். இன்னும் ஒண்ணு ரெண்டு வருஷத்தில ஏரியா மானேஜர் ஆய்டுவார்."

"நல்ல ப்ரொஃபஷன். இப்ப சொல்லு வசந்தி, இவளை எங்கே பார்த்தே?"

"ஒரு வாரத்துக்கு முன்னால காலேஜ் முடிஞ்சு நான் ஹாஸ்டலப் பாத்துப் போனப்ப, ’ஹாய் வசந்தி’ன்னு பின்னால யாரோ கூப்பிடறது கேட்டது. திரும்பிப் பார்த்தா இவள் தடதடன்னு ஓடிவந்தாள். எனக்கும் முதல்ல அடையாளம் தெரியலை. அடையாளம் தெரியலைன்னா முகஜாடைலாம் மறந்து போல! மாமா மாமில்லாம் மெட்ராஸ்ல இருக்காளே, இவள்கூட அங்கதானே படிச்சிண்டிருந்தாள், திடீர்னு எப்படி இங்கே வந்துசேர்ந்தானு ஒண்ணுமே புரியலை."

"நான் பி.யு. மெட்ராஸ்லதான் படிச்சேன். அப்புறம் அப்பாவுக்கு இங்க மாத்தலாச்சு. ஸொ ஐ’ம் ஹியர்!" என்று தோள்களை உயர்த்தினாள்.

அவள் அணிந்திருந்த பாலியஸ்டர் ஷர்ட் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொஞ்சம் சுருங்கியது. விரல்களை அதன் விளிம்பில் ஓடவிட்டு சரிசெய்துகொண்டாள்.

"வசந்தி உங்க காலேஜ்ல சாரிதான் உடுத்தணும்னு ஒரு ரூல் இருக்கில்ல?"

"அப்படின்னு ஒண்ணுமில்ல. திங்கட்கிழமை மட்டும் வெள்ளை சாரி யுனிஃபார்ம் கட்டாயம். மத்தபடி எந்த உடையிலும் வரலாம். சில பேர் பெல்-பாட்டம் பேன்ட் ஷர்ட், நிறைய பேர் சல்வார் கமீஸ்ல வரா. ஆனால் இந்த மினி மிடி வகையறா கூடாது. கௌசி சாரிலகூட அழகா இருப்பா."

"அப்புறம்? கௌசல்யா என்ன மேஜர்? கெமிஸ்ட்ரி, பாட்டனி, இல்ல பிகாம்?"

"அதெல்லாம் எனக்கு ஒத்துவராத சப்ஜேக்ட்ஸ். நானும் இங்லீஷ் லிட்ரேச்சர்."

"சரிதான். ஒரு இலக்கியப் படையே இருக்கு. நான், வசந்தி, கௌசல்யா, பாஸ்கர்..." மாலதி, ஒருவேளை அனுவும்கூட.

"யார் பாஸ்கர்?"

"என் அத்யந்த சினேகிதன். வெரி மாடர்ன், லைக் யு. வெரி ஸ்மார்ட் அன்ட் ஷார்ப்."

"வாவ் வாவ்! பாக்கணுமே?"

"நீ எங்க காலேஜ்க்கு வரமுடியுமா?"

"அவரை இங்கே கூட்டி வரது?"

"வேற வினையே வேண்டாம்!"

பற்கள் பளிச்சிட ஜலதரங்கம் இசைத்தாள்.

"வசந்தி, என்ன பேசாம இருக்கே? இந்த ரியூனியனை நாம ஸெலிபரேட் பண்ணனும்னு முன்னடியே உன்கிட்ட சொன்னேன் இல்ல?"

"பண்ணிட்டாப் போறது. எங்க போகலாம்?"

"வேற எங்க நாம போக முடியும்? நம்ம காலேஜ் கேன்டீன்தான்."
 
கேன்டீனில் வேண்டுமென்றே இவன் பக்கத்தில் நாற்காலியை ஓசையுடன் இழுத்துப் போட்டுக்கொண்டாள், சுற்றிலும் சந்தேகக் கண்களை சட்டை செய்யாமல்.

"அய்யர், என்ன ஸ்வீட் இன்னிக்கு?"

"பாஸந்தி."

"இன்னிக்குன்னு கேட்டேன்."

"பாஸந்தி இன்னைக்குப் போட்டதுதாம்மா. இங்கதான் டெய்லி ஒரு ஸ்வீட் போடறோமே?"

"பொய் சொல்றார்", என்று கிசுகிசுத்தாள். "சரி, மூணு பாஸந்தி."

"கௌசி, இன்னிக்கு வறுத்த முந்திரி, கவனிச்சயா? ராஜாவுக்கு அதிர்ஷ்டம்தான்."

"ஆமாம். அய்யர், அடுத்து மூணு ப்ளேட் ஃப்ரைட் காஶ்யூஸ். ராஜா, டிஃபன் ஏதாவது சாப்பிட்டயா, அல்லது அதையும் இங்கேயே வெச்சுக்கலாமா?"

"இப்பத்தான் ஹாஸ்டல் மெஸ்ல சாப்பிட்டேன். நோ, தாங்க்ஸ்."

பாஸந்தியும் வறுத்த முந்திரிகளும் வந்தன. "அய்யர், கடைசியா காஃபி, எவர்சில்வர் டபரா செட்ல."

"அப்புறம்? எப்படி இருக்கு கௌசல்யா காலேஜ் லைஃப்? மெட்ராஸ்ல படிச்சவளுக்கு இந்த ஊர் கொஞ்சம் கிராமத்தனமா இருக்கும்."

"நாட் அட் ஆல். நான் கொஞ்சம் முற்போக்கா டிரெஸ் பண்றதைப் பார்த்து நிறையப் பேர்---சில பெண்கள் கூட--கொஞ்சம் ’அவுட்லாண்டிஷ்’னு நினைக்கறாங்க. இப்படித்தான் ஒருநாள் தெப்பக்குளம் பக்கம் ஒரு கிருதா---பெரிய சார்ல்ஸ் ப்ரான்ஸன்னு நினைப்பு---’ஹாய் பேபி, கம் வித் மி’ன்னான். நான் உடனே என் செருப்பைக் கழற்றிக் காட்டி, ’லுக், நேத்துதான் பர்மா பஸார்ல வாங்கினேன். ஃபாரின் சரக்கு. நல்லா மெத்துனு இருக்கும்!’னு சொன்னேன். அவ்வளவுதான், கூட்டத்தில அவன் போன இடம் தெரியலை."

தோள்களை உயர்த்திவிட்டுத் தொடர்ந்தாள்.

"எதுக்கு சொல்றேன்னா, நான் பார்க்க மாடர்னாத் தெரியலாம். ஆனால் நானும் வசந்தி மாதிரிதான். ஸாஃப்ட் அன்ட் மாடஸ்ட். என்ன கொஞ்சம் வாயடிப்பேன். விகல்பம் இல்லாம எல்லோரோடையும் சோஷலா பழகுவேன்."

"தட்’ஸ் நைஸ். பாஸந்திகூட உன்னைமாதிரி ஸ்வீட்டா இருக்கு."

"பாஸந்தி ஸ்வீட்டாத்தான் இருக்கும். நல்லா இருக்கா சொல்லு."

"ரியலி குட்."

"அய்யர், கேட்டீங்களா?"

"என்னம்மா?"

"உங்க கடை பாஸந்தி ரொம்ப நல்லா இருக்காம். சார் சொல்றார்."

கல்லாவில் இருந்த அய்யர் அவனைப் பார்க்க, "சார் யார் தெரியுமா? எங்க அத்தை பையன்" என்றாள்.

"இவள் இப்படித்தான் எல்லோரோடையும் வாயடிப்பாள். ஷ், கௌசி! உன் ராமாயணத்தை எல்லாம் வெளில வெச்சுக்கலாம். அய்யர், சீக்கிரம் காஃபி கொண்டாங்கோ."

அய்யர் காஃபி கொண்டு வந்ததும் அவன் அவர் கையில் பத்து ரூபாய்த்தாள் ஒன்றைத் திணித்தான்.

"என்ன தைரியம்? எங்க காலேஜ்க்கு வந்து எங்களுக்கே ட்ரீட் கொடுக்கறயா? அய்யர், எப்படி நீங்க அந்த நோட்டை வாங்கலாம்?"

"பரவாயில்லை அய்யர். பாக்கி சில்லறையை நீங்களே வெச்சிக்கோங்கோ", என்று எழுந்தான்.

"கமான், கௌசல்யா! நேரமாச்சு. எனக்கு இன்னும் அரை மணியில ஹாஸ்டல்ல இருக்கணும்."

"ராஜா, நீ பெரிய ஆள்தான். நான்தானே ஸெலிபரேட் பண்றதாச் சொன்னேன்."

"நோ, நான்தான் முதலில். அடுத்து நீ."

"அப்படியா?" என்று அரைமனதாகத் தலையாட்டிவிட்டு, நடுவிரலைக் கன்னத்தில் முட்டுக்கொடுத்துக் கொஞ்சம் யோசித்தாள்.

"ரைட், நாளைக்கு ஞாயிற்றுக் கிழமைதானே? உனக்கும் வசந்திக்கும் எங்காத்துல டின்னர். நான் இப்பவே வார்டன்ட்ட சொல்லி வசந்தியை அழைச்சிட்டுப் போறேன். நாங்கதான் அவளுக்கு லோகல் கார்டியன்னு ஏற்கனவே பேர், விலாசம்லாம் தந்து அனுமதி வாங்கியாச்சு. கார்த்தால சரியா பதினொரு மணிக்கு டின்னர். ஒம்பது ஒம்பதரைக்கெல்லாம் வந்திரு, என்ன? அப்பாகூட உன்னைப் பார்க்கணும்னார். அவர் போனவாரம் முழுக்க ஈரோடு டூர் போய்ட்டதால உன்னைக் காலேஜ்ல வந்து பார்க்க நெனைச்சும் முடியல."

"அதனாலென்ன? நாளைக்கு நான்தான் ஆத்துக்கே வரேனே."

"அப்ப சரியா கார்த்தால லேடஸ்ட் பை ஒம்பதரை மணி. மறந்துடாதே. தூங்கிடாதே!"

"ஓகே, பை! பை வசந்தி! நாளைக்குப் பார்க்கலாம்."

"பை ராஜா!" என்று பெண்கள் இருவரும் கோரஸ் பாட, கௌசல்யா, "நான் ஒரு முட்டாள்!" என்றாள்.

நின்றான். "எஸ்?"

"என்ன எஸ்? எங்க வீடு தெரியுமா உனக்கு? தில்லை நகர் மூன்றாவது கிராஸ் நம்பர் பதினஞ்சு. வாசல்ல அப்பா பேர் போட்ட போர்டும் ’நாய் ஜாக்கிரதை’ போர்டும் இருக்கும்."

"ஆல்ரைட். நாளைக் காலை பார்க்கலாம்."

*** *** ***
 
17

பெண்கள் அறிவை வளர்த்தால் -- வையம்
பேதைமை யற்றிடுங் காணீர்.
---மஹாகவி பாரதியார், முரசு 10


றுநாள். காலை சரியாக ஒன்பதரை மணிக்கு அவன் அவள் வீட்டு கேட்டைத் திறக்க முயன்றபோது ஒரு வெள்ளைப் பாமரேனியன் ஆக்ரோஷக் குரலில் தன் எதிர்ப்பைத் தெரிவித்தது.

நாயின் குரல் கேட்டு மாடி ஜன்னலில் ஓர் முகம் தோன்றி, சில விநாடிகளில் விரைந்த காலடி ஓசைகளும், "ஸ்காம்ப்! கீ கொயட்" அதட்டலும் தொடர்ந்து, "ஹலோ ராஜா! குட் மார்னிங்! பங்ச்சுவல் டு த மினிட்" என்ற குரலும் கேட்டன.

வெள்ளை மாக்ஸியின் அலைஅலையான மடிப்புகளும், பூவேலைகளும், கைகளில் பெல்ஸும் ராஜ் கபூரின் ’பாபி’யை நினைவூட்ட, ஷாம்பூவில் தோய்ந்து குளித்த கூந்தல் அலைபாய, நெற்றியில் செயற்கைத் திலகம் மினுமினுக்க, ஃபாரின் ஸ்ப்ரேயின் சுகந்தம் தென்றலாகச் சூழ்ந்துகொள்ள, கௌசல்யா ஓடிவந்து கதவைத் திறந்து அவனை வரவேற்றது ஒரு கணம் மூச்சைப் பறித்துக்கொள்ளும் காட்சியாக இருந்தது.

ஹாலில் வசந்தி சோபாவில் சாய்ந்துகொண்டு ’குமுதம்’ பார்த்துக்கொண்டிருந்தாள். "வா ராஜா" என்றாள்.

மாமா மாமியின் சுவடுகூடக் காணோம்.

"அப்பா இல்லை?"

"குளிச்சிண்டிருக்கார். அம்மா சித்த முன்னாடி எதிர்வீட்டு வரைக்கும் போய்ட்றேன்னு போனா. நான் போய் கூப்பிடவா?"

"வேண்டாம், வரட்டும்."

"ஃபீல் அட் ஹோம் ராஜா! வீட்டைப் பார்க்கறையா?"

"அப்பா வரட்டுமே?"

"சரி உக்காந்துக்கோ. இதோ வரேன்."

திரும்பி வந்தபோது ஒரு ட்ரேயில் மூன்று கோப்பைகளில் காப்பியும் ஒரு சின்ன எவர்சில்வர் தட்டில் கேக்கும் கொண்டுவந்தாள்.

"என்ன விசேஷம் கேக் எல்லாம்?"

"சொல்ல மறந்துட்டேன் ராஜா. இன்னிக்கு எனக்குப் பிறந்த நாள்."

"என்ன கௌசல்யா? முன்னாடி ஒரு வார்த்தை சொல்றதில்லை?"

"ஐயோ நான் நேத்து நெஜமாவே மறந்துட்டேன்! என்னோட நட்சத்திரம் அடுத்த வாரம் வருது. ஆங்கிலத் தேதிப்படி இன்னிக்கு."

"விளையாடாதே கௌசல்யா. உனக்கு நேத்து ஞாபகம் இல்லைனு என்னை நம்பச் சொல்றியா? ஒரு வேளை ஃபர்ஸ்ட் டைம் என்னைப் பார்த்ததால சொல்லலியா? கமான், நான் ஒண்ணும் தப்பா நினைச்சுக்க மாட்டேன்."

"ப்ராமிஸ் ராஜா! நேத்து உன்னைப் பார்த்த சந்தோஷத்துல மறந்தே போய்ட்டேன். வீட்டுக்குப் போறச்ச ஞாபகம் வந்து வசந்திகிட்ட சொன்னேன். ’வசந்தி ராஜாகிட்ட சொல்ல மறந்துட்டேன். தப்பா நினைச்சுக்கப் போறான்’னு. வசந்தி சொன்னா, ’டோன்ட் வொர்ரி, கார்த்தால சர்ப்ரைஸா சொல்லிக்கலாம்’னு. மத்தப்படி நான் நெஜமாவே மறந்துட்டேன்."

கண்களை உயர்த்தி, தலையை ஆட்டியபடி அவள் பேசிய விதம் ’நிறம் மாறாத பூக்கள்’ ரத்தியை நினைவூட்டியது.

விஜய், எனக்கு ஸ்விம்மிங் தெரியாது! நா பொய் சொல்லலை விஜய்... நெஜமாவே எனக்கு ஸ்விம்மிங் தெரியாது!

கௌசல்யா அவன் மௌனத்தைக் கலைத்தாள். "ராஜா, உனக்கு நமஸ்காரம்---"

"நோ!"

"நான் உன்னையும் வசந்தியையும் விட கிட்டத்தட்ட ஒரு வயசு சின்னவ! வசந்திக்குக் கூடப் பண்ணினேன்" என்று அவன் தடுத்ததையும் மீறி நமஸ்கரித்தாள்.

"என்ன கௌசல்யா? நான் ஒண்ணும் அவ்வளவு பெரியவன் இல்லை. தவிர, எனக்கு இந்த சென்டிமென்ட்லாம் பிடிக்காது."

"இது ஒண்ணும் சென்டிமென்டல் இல்லை. நான் மனப்பூர்வமான அக்கறையோடதான் உனக்கு நமஸ்காரம் பண்ணினேன்."

"எனக்கொண்ணும் சந்தேகமில்லை. இருந்தாலும்... எனிவே, பெஸ்ட் விஷஸ் ஃபர் திஸ் அன்ட் எவெர் ஸோ மெனி பர்த்டேஸ்!" என்று கேக்கில் ஒரு துண்டு எடுத்து ஊட்டிவிட்டான். "சொல்லியிருந்தா ஒரு கிஃப்ட் வாங்கி வந்திருப்பேன். பரவாயில்லை. என்னோட நினைவா இந்த வில்ஸன் கோரோநெட் பால்பென் உனக்குத் தரேன்."

"தாங்க் யு. ஐ வுட் லவ் தட் கிஃப்ட். நேத்திக்கே எனக்கு அந்தப் பேனா மேலே ஒரு கண்!"

"சரிதான். வசந்தி, நீ என்ன பரிசு கொடுத்தே?"

"ஆர்தர் ஹெய்லியோட ’ஏர்போர்ட்’."

"அது இன்னும் மெட்ராஸ்லயே விற்ப்னைக்கு வரல்ல போலிருக்கே? குமுதத்தில ரெவ்யு வந்தது."

"யார் சொன்னா? மெட்ராஸ் ஹிக்கின்பாதம்ஸ்ல கிடைக்குது. என் தோழி ஒருத்தி வாங்கி வந்தா."

அவன் மௌனத்தைப் புரிந்துகொண்டு தொடர்ந்தாள். "நானே இன்னும் படிக்கலை ராஜா. என்கிட்ட இருந்தா என்ன கௌசிகிட்ட இருந்தா என்னன்னு ப்ரசென்ட் பண்ணிட்டேன்."

"கார்த்தால அம்மாவும் நானும் வசந்தியும் மலைக்கோவிலுக்குப் போயிட்டு வந்தோம். அடுத்த வாரம் என்னோட நட்சத்திரம் வரும்போது போய் அர்ச்சனை பண்ணுவோம். அப்ப நீயும் வா ராஜா, என்ன?"

காப்பி கோப்பைகளை உள்ளே வைத்துவிட்டு வந்து சொன்னாள். "ராஜா, அப்பா இப்பதான் குளியலை முடிச்சிண்டு பூஜை அறைக்குள்ளே போயிருக்கார். சந்தி ஜபம் பண்ணி வெளியில் வர அரை மணியாகும். அதுவரை வா, வீட்டைச் சுத்திப் பார்க்கலாம். வசந்தி, நீயும் வா."

"நான்தான் நேத்திக்கே பாத்தாச்சே!"

"பரவாயில்லை வாயேன்."

அந்த வீடு மிகச் சுத்தமாக, கவர்ச்சியாக, அவளைப் போலவே மாடர்னாக இருந்தது. சுவர்களில் தகுந்த மென்னிறங்களில் டெகோ-லம் மின்னியது. தரையில் வெள்ளை மொஸைக் எதிரொளிப்பில் உருவங்களும் நிழல்களும் கூடின. பிரிந்தன.

டிராயிங் ரூம் சுவர்களை ஒன்றிரண்டு ’பத்திக்’ ஓவியங்களும், ஓலை, கோரை கேன்வாஸ், மரம் முதலியவற்றில் தீட்டப்பட்ட ஓவியங்களும் அலங்கரித்தன.

"இந்த பெயின்டிங்லாம் என்ன விலை இருக்கும்னு நினைக்கறே, ராஜா?"

"எனக்கு ஓவியம் பத்தி அதிகம் தெரியாது கௌசல்யா. பாஸ்கர் கரெக்டா சொல்லுவான்."

"சும்மா தோராயமா சொல்லேன்!"

"ஒவ்வொரு படமும் முப்பது நாப்பது ரூவா இருக்கலாம்."

மியூசிகல் காலிங் பெல் போல ’க்ளிங்’ என்றாள்.

"சாரி, ரொம்பக் குறைவா சொல்லிட்டேனா?"

"எல்லாம் நான் பெயின்ட் பண்ணினது."

"நெஜமாவா!"

"ப்ராமிஸ்! வேணும்னா இப்பவே பெயின்ட் பண்ணிக் காட்டவா?"

"நேத்து என்னையும் இப்படித்தான் ஏமாத்திட்டா."

அந்த இயற்கைக் காட்சிகளும், விதம்விதமாகப் பெண்களின் ஓவியங்களும், தலைகால் புரியாத ஒன்றிரண்டு ’மாடர்ன் ஆர்ட்’களும் அசரவைத்தன.

"ஒரு எக்ஸிபிஷன் நடத்தலாம் போலிருக்கே கௌசல்யா?"

"இன்னும் சிலது மாடியில அப்பா ரூம்லலயும் என்னோட ரூம்லயும் இருக்கு."

ஒவ்வொரு அறையிலும் ஃபர்னிச்சர் அளவாகக் கலையழகுடன் போடப்பட்டிருந்தன. அங்கங்கே புதிய மலர்கள் பிளாஸ்டிக், சைனா, பித்ரி ’வாஸ்’களில் உற்சாகக் கொத்துகளாக மலர்ந்திருந்தன.
 
Last edited:
டிராயிங் ரூமில் இருந்து ஹாலுக்கு வர இரண்டு வாசல்கள். ஹாலுக்கு வந்ததும், "இதுதான் எங்க லிவிங் ரூம்", என்றாள்.

அந்த ஹால் அவன் வகுப்பறைகளைவிடப் பெரிதாக, ஒரு பணக்காரக் கல்யாண மண்டபத்தில் ஹால் போல உயரமான கூரையுடன் சுற்றிலும் தெரியும் மாடி அறைகளுடன் அழகிய ஃப்ரென்ச் ஜன்னல்களுடன் காணப்பட்டது. வலப்புறம் சுவரில் ஒன்றிரண்டு புகைப்படங்களும், பெயின்ட்டிங்களும், ஓர் அழகிய வெளிநாட்டுக் கடிகாரமும் இருந்தன. டிராயிங் ரூம் கதவு நிலையருகில் கார்பெட் விரித்த மாடிப்படிகள் அடக்கமாகத் தெரிந்தன. மணி பத்தடிக்க, கடிகாரத்தின் குயில் பத்துமுறை இனிமையாகக் கூவியது.

இடப்புறச் சுவரை இரண்டு ஃப்ரென்ச் ஜன்னல்கள் மெல்லிய திரைகளுடன் அலங்கரித்தன. விலக்கப்பட்டிருந்த திரைகளின் வழியே காம்பௌன்ட் சுவரும் அதற்கு மேல் எட்டிப்பார்த்துத் தலையாட்டும் போகன்வில்லாவும் தெரிந்தன.

ஹால் நடுவில் உத்திரத்தில் இருந்து அழகிய, பெரிய, சரவிளக்கு ஒன்று தொங்கியது. அதன் கண்ணாடி மணிகள் காற்றில் சிலிர்த்தன.

சரவிளக்கின் இருபுறமும் நான்கு கூரை விசிறிகளும், ரிஃப்ளெக்டர் மூடிகளுக்குள் மறைந்திருக்கும் குழல் விளக்குகளும் அணிவகுத்து இருந்தன. தவிர அங்கங்கே அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய விளக்குகள் சுவரில் பொருத்தப்பட்டு இருந்தன.

கூரை விசிறிகளின் கீழ் எதிரும் புதிருமாக இரண்டு பெரிய, இரண்டு சின்ன சோபா செட்கள் போடப்பட்டு நடுவில் நீளமான, ஸன்மைகா வேய்ந்த டீப்பாய் அடியில் செய்தித் தாள்களும், பத்திரிகைகளும் ஒழுங்காக அடுக்கியிருந்தன. சோபாக்களை இணைத்த வட்ட முக்காலிகளில் பூஜாடிகளும் ஆஷ்ட்ரேக்களும் ஒரு மேஜைக் காலண்டரும் இருந்தன.

இடப்புறச் சுவரில் ஜன்னல்களுக்கு நடுவில் இருந்த பகுதியில் ஒரு பெரிய ’ஷோகேஸ்’ தன்னுள் கொலுவீற்றிருந்த பொம்மைகளையும் கலைப் பொருட்களையும் புகைப்படங்களையும் கொண்டு அந்தக் குடும்பத்தின் நுண்கலைச் சுவைகளுக்குக் கட்டியம் கூறின.

ஹாலின் பின்புறம் சமையல் கட்டுக்குச் செல்லும் கதவு நிலையை அடுத்து நடுவில் ஒரு சிறிய டைனிங் டேபிளும் சுவர் ஓரத்தில் ஒரு ஜோடி சோபா செட்டும் விரைவு உணவுக்காகவும், விருந்தினர்களுக்கு வசதியாகவும் போடப்பட்டிருந்தன.

டிராயிங் ரூம் செல்லும் கதவு நிலைகளுக்கு இடைப்பட்ட சுவரில் தேக்குமர ஷெல்ஃகள் வரியிட்டிருக்க, நடுவில் ஒரு ஃபிலிப்ஸ் மேஜர் ரேடியோ வீற்றிருந்தது. மற்றொரு பகுதியில் ஒரு அகாய் ’ஸ்டீரியோ ரெகார்ட் ப்ளேயர்’உம் அருகில் ஒரு நேஷனல் பானசானிக் ’கேஸட் ரிகார்டர்’உம் அவற்றின் கீழிருந்த ஷோகேஸ்களில் ரெகார்ட்களையும் எண்ணற்ற கேஸட்களையும் கொண்டு சுவரில் பதிந்த ஸ்டீரியோ பெட்டிகளில் சங்கீத அலைகளை ஒரு விசையின் சொடுக்கில் வெளியிடத் தயாராக வைத்திருந்தன. ஓரத்தில் சிவப்பு டெலிஃபோன். அருகில் இன்டர்காம். சுவர்களில் அழகிய ’லாம்ப்ஷேட்’கள். ’கன்ஸீல்ட் வயரிங்.’

"என்னென்ன ரெகார்ட்ஸ், கேஸட்ஸ் இருக்கு, கௌசல்யா?"

"எல்லாம்."

"எல்லாம்னா?"

"அம்மாவுக்குக் கர்நாடக சங்கீதம். அப்பா எல்லாம் கேட்பார். எனக்கு ஹிந்தி, தமிழ், ஆங்கிலத் திரையிசைப் பாடல்கள். எல்லாம் ரெகார்ட்ஸ் வாங்க கட்டுப்படி யாகாதுங்கறதால பெரும்பாலும் கேஸட்கள்தான். அதுவும் ரேடியோவிலிருந்து நானே ரெகார்ட் பண்ணினது. அப்புறம் கொஞ்சம் பக்தி பாடல்கள், தமிழ் நகைச்சுவை உரையாடல்கள், இதுமாதிரி."

"நானும் கௌசியும் நேத்து ராத்திரி ரொம்பநேரம் தமிழ், ஹிந்தி பாட்டு கேட்டோம். நைஸ் ரெகார்டிங்."

"நான்கூட இன்னிக்குக் கேக்கணுமே?"

"கேட்டாப் போறது."

’லிவிங் ரூம்’ஐ அடுத்து சமையலறையும் ’டைனிங் ஹால்’உம் எதிர் எதிராக இருந்தன. சமையல் அறையில் பொருட்கள் மிக ஒழுங்காக, வசதியாக, நாகரிகமாக ஸன்மைகா வேய்ந்த ஷெல்ஃப்களில் அடுக்கப் பட்டிருந்தன. மிக்ஸி, கிரைன்டர், ஒரு மூலையில் சுவரோரம் இன்டர்காம். மேடையில் காஸ் அடுப்பு விர்ரிக்க, ஒருவர் மும்முரமாக சமையல் செய்துகொண்டிருந்தார்.

"We have a very good cook in மணி அய்யர். தஞ்சாவூக்காரர். அய்யர், சாப்பாடு ரெடியா?"

"அநேகமா முடிஞ்சமாரிதாம்மா."

சாப்பாட்டு அறையில் இரண்டு மேஜைகள் ஒன்றாக இணைந்து ’ஃபார்மிகா டாப்’ பளபளக்க, சுற்றிலும் எட்டு நாற்காலிகள். அறை ஓரத்தில் ஒரு வோல்டாஸ் ஓபல் ’ஃப்ரிஜ்’ அடக்கமாக நின்றிருந்தது.

கிச்சனை அடுத்து ஒரு சின்ன தாழ்வாரமும் அதன் நடுவில் துளசி மாடமும், அப்பால் ’பாத்ரூம்’களுக்கு வழியும் தோட்டமும், கடைசியில் பின்பக்க காம்பௌன்ட் சுவரும் தெரிந்தன.

மறுபடியும் ஹாலுக்கு வந்தார்கள்.

"அப்பா மாடில இருக்காரா?"

"ஆமாம். பூஜை அறை மாடில இருக்கு. பொதுவா எல்லார் வீட்லயும் பூஜை அறை கீழ்த் தளத்தில்தான் இருக்கும். கேட்டா, ’கடவுள் மேலதான் இருக்கணும்’பார்."

"அதுவும் சரிதான்."

டிராயிங் அறைக்கு நேர்மேலே இருந்த பூஜை அறையிலிருந்து ஊதுவத்திப் புகையின் மணம் வந்தது. தொடர்ந்து மெலிதாக மணிச்சத்தம் கேட்டது.

மாடியில் இருந்து பார்க்கும்போது ஹால் ஒரு சினிமா செட் போலப் பளபளத்தது.

பூஜை அறையினை ஒட்டி ஒரு ’ஃபேமலி ரூம்’உம், அவற்றின் முன் ஓடிய செவ்வக வடிவ நடைவழியில் இடப்புறம் நான்கு அறைகளும் வலப்புறம் மூன்று அறைகளும் கதவுகளாகத் தெரிந்தன.

"இடது பக்கம் முதல் அறை என்னோடது. அடுத்தது அம்மாவோடது. அப்புறம் அப்பா. அந்தக் கடைசி அறையும் அதுக்கு எதிர்த்தாப்பல இருக்கும் அறையும் விருந்தினர் வந்தால் தங்க. இந்தப் பக்கம் முதல் அறை அப்பாம்மா பெட்ரூம். நடுவில் ஸ்டடி."

அவள் தன் அறையின் கைப்பிடியைத் திருக உள்ளே நுழைந்தார்கள்.

நுழைந்ததும் அந்த ’ஸ்ப்ரே’யின் மணம் வந்தது. கௌசல்யாவின் அறை அவன் எதிர்பார்த்ததை விட மிகவும் சுத்தமாக, ஒழுங்காக இருந்தது.

வலப்புறம் படிக்க ஒரு மேஜை இரண்டு நாற்காலிகள். மேஜையின் இன்டர்காம். சுவரில் பதிந்த ஷெல்ஃப்களில் புத்தகங்கள். ’ஷேக்ஸ்பியரின் கம்ப்ளீட் வொர்க்ஸ், ஜேன் ஆஸ்டின் நாவல்கள், யேட்ஸ் கவிதைகள்...’ அடுத்த ஷெல்ஃபில் பழுப்பு நிறக் காகிதத்தில் சீராக உறை போடப்பட்ட நோட்டுப் புத்தகங்கள். ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துப் புரட்டினான்.

கௌசல்யாவின் கையெழுத்து நளினமாக, நேர்த்தியாக, அடித்தலே இல்லாமல் அச்சுக்கோர்த்தாற்போல் இருந்தது.

அறையின் இடப்புறம் ஒரு இரும்பு சாய்வு நாற்காலி அருகில் சுவரின் கீழ்ப்பகுதியில் புத்தகங்கள் கண்ணாடி கேஸில்.

அறையின் நடுவில் ஒரு திரை. அதற்கப்பால் ஸ்டீல் கட்டில் ஃபோம் மெத்தை. அருகில் ஒரு அலங்கரிப்பு மேஜை, துணிமணி அலமாரிகள்.

"எதுக்கு நடுவில ஸ்க்ரீன்?"

"ஒரு ப்ரைவஸிக்காகத்தான். தவிர, எனக்குப் படிக்கும்போது படுக்கை கண்ல பட்டா கொஞ்ச நேரம் படுத்துண்டே படிக்கலாமேன்னு தோணும். அப்படியே தூக்கம் வந்திடும். இதைத் தவிர்க்கவே திரை. எப்படி இருக்கு என் ரூம்?"

"எக்ஸலன்ட். இதெல்லாமும் நீ பெயின்ட் பண்ணினதா?"

சுவரில் மாட்டியிருந்த சித்திரங்கள் கீழே பார்த்தவற்றை விட அழகாகவும் உயர்தரத்திலும் இருந்தன.

வெண்ணிலா காய்ந்திருக்க நிலவொளியில் பளபளக்கும் ஒரு ’ப்ரைவேட் ரன்வே’. அதில் ’டேக் ஆஃப்’ பண்ணத் தயாராக இருக்கும் ஒரு விமானம்.

அம்மா பார்த்திருக்கக் குனிந்து தன் ஷூலேஸைத் தானே கட்டிக்கொள்ளும் வெள்ளக்காரக் குழந்தை.

ஆடுகள் அங்கும் இங்கும் ஓடக் கையில் துறட்டியுடன் அவற்றை ஒன்றுசேர்க்க முற்படும் கோவணாண்டிச் சிறுவன். அந்த லான்ட்ஸ்கேப் இயற்கையாக இருந்தது.


"என்ன ரேஞ்ச் ஆஃப் சப்ஜக்ட்ஸ், ஸிம்ப்ளி பியூட்டிஃபுல், இல்ல?" என்றாள் வசந்தி.

"யு ஆர் கிரேட், கௌசல்யா?"

"நோ ஸச் திங். சில பேருக்குப் பாட வரும். சில பேருக்குக் கவிதை எழுத வரும். எனக்கு பெயின்ட் பண்ண வரும், அவ்வளவுதான்."

ஸ்டடியில் நுழைந்ததும் அந்த நான்கு சுவர்களில் பதிந்த உயரமான புத்தக அலமாரிகளும், நடுவில் நீளமான மேஜையும், டைப்ரைட்டரும், ’கார்ட்-இன்டெக்ஸ்’ இழுப்பறைகளும் ஒரு மினி லைப்ரரியை அந்து உருவாக்கியிருந்தன.

புத்தகங்கள் அவன் கல்லூரி நூலகத்தில் உள்ளதுபோல் ’ட்யூவி டெஸிமல்’ எண்ணமப்பில் எண்ணிடப்பட்டு உரிப்பொருள் வாரியாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஆங்கிலம், தமிழ் இலக்கியம், மருத்துவம், விஞ்ஞானம், பொழுதுபோக்கு, குழந்தைகள் பகுதி, இதர உரிப்பொருள்கள்.

ஆங்கில நாவல் வரிசையில் முதலில் ஜேன் ஆஸ்டின்.

"தமிழ் நாவல்கள், சிறுகதைகள் படிப்பியா?"

"நிறைய. கல்கிமுதல் சுஜாதாவரை முக்கியமான நாவல்கள், கதைகள் படிச்சிருக்கேன்."

பார்த்தான். ஐநூறு புத்தகங்களுக்குக் குறையாது! அவளை அதிசயமாகப் பார்த்தபோது, "என்னோட வாழ்க்கையை ஓவியம், இலக்கியத்துக்கு அர்ப்பணிக்கப் போறேன்", என்றாள்.

"எ லாஃடி ஆம்பிஷன், கௌசி."

"யு ஆர் கொய்ட் அன் இன்ஸ்பிரேஷன், கௌசல்யா."

"ரெண்டு பேரும் என்னை ஓவராப் புகழறீங்க. நான் எதுவுமே இன்னும் ஸீரியஸா ஆரம்பிக்கலையே? ரைட் தென், மணி பத்தரையாச்சு. வாங்க போகலாம். அப்பா கீழே காத்திருப்பார்."

*** *** ***
 
Last edited:
18

மோகத்தைக் கொன்றுவிடு -- அல்லால் என்றன்
மூச்சை நிறுத்திவிடு.
---மஹாகவி பாரதியார், மஹாசக்திக்கு விண்ணப்பம் 1


"லோ ராஜா! எப்படி இருக்கே? பார்த்து ரொம்ப வருஷமாச்சு!"

கீழே இறங்கியதும் மாமா அவனை அன்புடன் கட்டிக்கொண்டார்.

"நல்லா இருக்கேன் மாமா! நீங்க எல்லாரும் சௌக்யம்தானே?"

அந்த உறவின் மனித உருவை இப்போதுதான் முதன்முதலாகப் பார்க்கிறான். மாமா நல்ல நிறமாக, பணக்கார தோரணையுடன், சுருள் முடிகளுடன், ’பியர்’ஆல் செழித்த கன்னக் கதுப்புகளுடன், இலேசாகச் சிவந்த கண்களுடன், அவனைவிடக் குள்ளமாக நின்றார். அவர் அவனைக் கட்டிக்கொண்டபோது மெல்லிய சிகரெட் நெடி அடித்தது.

அவரைப் பார்த்தபோது அப்போதுதான் பூஜையை முடித்துவிட்டு வந்தவராகத் தெரியவில்லை. நெற்றியில் விபூதியின் வரிகளை அறவே காணோம். பேன்ட், ஷர்ட் அணிந்துகொண்டு வெளியில் கிளம்பத் தயாராகிவிட்டவர்போல் காணப்பட்டார்.

கேட்க வாயெடுத்தபோது, "நான் பூஜை பண்ணினதையே சந்தேகிக்கத் தோண்றது, இல்லே? Work while you work, pray while you pray, and eat while you eat! I have dressed up for dinner!" என்றார்.

"அப்பா காரியங்களை எல்லாம் இங்க்லிஷ் பாணிலதான் செய்வார். முடிஞ்சவரை நாங்களும் அவரை ஃபாலோ பண்றோம். இப்ப டின்னர் முடிஞ்சதும் பாரேன், பழையபடி ரிலாக்ஸ்டா வேஷ்டிக்கு மாறிடுவார்."

அவனுக்கு மாமாவைப் பார்க்கப் பெருமையாக இருந்தது.

"மாமியும் உங்களை மாதிரி வேளைக்கு ஒரு டிரெஸ் பண்ணுவாங்களா?"

"அவள் கிடக்கறா, நாட்டுப்புறம்", என்றார் ஈஸியாக. அந்த சமயம் பார்த்து மாமி வந்துவிட, "லக்ஷ்மீ, யார் வந்திருக்கா பாரேன்!"

"அட, ராஜாவா! வாப்பா, சௌக்யமா? இப்பவான்னும் மாமாவாத்துக்கு வழி தெரிஞ்சுதா? கௌசல்யா சொன்னா நீ இந்த ஊர்லதான் படிக்கறதா. உக்காந்துக்கோ வசந்தி, ஏன் நிக்கறே? அம்மா அப்பா சௌக்யமா?"

"எல்லோரும் நல்லார்க்கா, மாமி. உங்களைப் பத்தி அடிக்கடி நினைச்சுப்பா. எனக்கு நீங்க இந்த ஊருக்கு வந்துட்டது பத்தித் தெரியாது. நேத்துதான் காலேஜ்ல கௌசல்யாவைப் பார்த்தபோது சொன்னா."

"எங்களுக்கும் போன வாரம்தான் நீயும் வசந்தியும் இந்த ஊர்ல படிக்கறது பத்தித் தெரியும். வந்து பார்க்கலாம்னா மாமா ஒரு வாரமா ஊர்ல இல்லை. ஈரோடு டூர் போயிட்டார்."

"சொன்னா, கௌசல்யா சொன்னா."

மாமி கொஞ்சம் பருமனாக, ஆறு கெஜம் பட்டுப் புடவையில், மூக்கிலும் காதுகளிலும் வைரம் மின்ன, ஒரு கையில் தங்க வளையல்கள் ஒலிக்க---மற்றதில் லேடீஸ் வாட்ச்---விரல்களில் தங்க மோதிரங்கள் பளிச்சிட, கொஞ்சம் வயதுதெரியும் முகத்தில் பவுடர் திரையிட்டிருக்க, இதழ்களில் வெற்றிலைச் சிவப்பு மீதமிருக்க, பழமையும் புதுமையும் கலந்து நின்றாள்.

"எல்லாரும் இப்படி சோபாவில் உக்காந்து பேசிண்டிருங்கோ. இதோ வந்துடறேன்", என்று மெட்டி ஒலிக்க உள்ளே சென்றாள்.

மாமாவின் கம்பெனியைப் பற்றிக் கேட்டான்.

"இந்தியால இருக்கற நாலஞ்ச் லீடிங் ஃபார்மஸ்யூடிகல் கம்பெனில எங்க கம்பெனியும் ஒண்ணு. ஃபாரின் கொலாபரேஷன். பாம்பேல ஹெட் ஆஃபிஸ். Our products cover a wide range of health applications. சாதாரண ஜலதோஷத்லேர்ந்து டி.பி., அல்சர் மாதிரி சிக்கலான வியாதி வரைக்கும் மருந்துகள் தயாரிச்சிருக்கோம்னா பார்த்துக்கோயேன்."

"நீங்க எத்தனை வருஷமா இருக்கேள் இந்தக் கம்பெனில?"

ஒரு புன்னகையுடன் கௌசல்யாவைப் பார்த்தார்.

"அப்பா இந்தக் கம்பெனிக்கு வந்து பத்து வருஷத்துக்கு மேலாய்ட்டது."

இதற்குள் மாமியும் வந்துவிட, அவன் கேள்வியில் துணுக்குற்றாள்.

"என்ன அப்படிக் கேட்டுட்டே? எங்களுக்குக் கல்யாணம் ஆன நாள்லேர்ந்து மாமா மெடிகல் ரெப்ரஸன்டேடிவ் வேலைலதான் இருக்கார்."

"அதுக்கில்லை மாமி, அந்தக் காலத்தில மாமா ’இந்த வேலை பிடிக்கலை அந்த வேலை பிடிக்கலை’ன்னு ஒவ்வொரு வேலையா மாத்திண்டே இருப்பார்னு அப்பா சொல்லுவா. அதான் கேட்டேன்."

"உங்கப்பாவுக்கு என்னைப் பத்தி ஏதாவது சொல்லலைன்னா தூக்கம் வராது. அந்த நாள்ல எனக்கும் அவருக்கும் ஒரு சின்ன மனஸ்தாபம். கொஞ்சநாள் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தது. உங்கம்மா கூட எங்களை சரியா ட்ரீட் பண்ணலை..."

கொஞ்சம் இடைவெளிக்குப் பின் மாமா தொடர்ந்தார். "என்னைப் பொறுத்தவரைக்கும் நான் பழசெல்லாம் மறந்துட்டேன். அவா இன்னும் மனசில வெச்சுண்டிருக்காளோ என்னவோ?"

வசந்தி முகத்தில் சலனமில்லாமல் அமர்ந்திருக்க,. கௌசல்யா தன் தந்தையை அன்புடன் கடிந்துகொண்டாள்.

"ராஜாவையும் வசந்தியையும் டின்னர்க்கு இன்வைட் பண்ணிட்டு ஏன்பா ஆறிப்போன பழங்கதையெல்லாம் கிளறிண்டு? நாமதான்---"

"அதுக்கில்லைம்மா, அவனுக்கும் நம்ம தரப்பு விஷயம் தெரியணுமோன்னோ? எல்லாரும் என்னைத் தப்பாப் புரிஞ்சுண்ட மாதிரி அவனும் நினைச்சிடப்படாது இல்லையா?"

"எல்லாம் அவனுக்கும் தெரிஞ்சிருக்கும் பா. நீங்க இப்ப விடுங்கோ இந்த விஷயத்த?"

அன்றைய தேதிவரை அவனுக்கு அந்தக் காலத்தில் அப்பாவுக்கும் மாமாவுக்கும் இடையில் இருந்த மனஸ்தாபம் பற்றிய விவரங்கள் தெரியாது. அப்பாவோ கேட்கவே வேண்டாம். எந்த விஷயத்தையும் சுலபமாக வெளியில் சொல்லமாட்டார். அம்மாவுக்கும் மாமாவின் மீது கோபம் அல்லது வருத்தம் அதிகமாக இருக்கவேண்டும் என்று தோன்றியது. தூண்டித் துளைத்து கேட்டபோதுகூட ஏதோ சொத்து சம்பந்தமான விஷயம் என்பதைத் தவிர மற்ற விவரங்கள் அம்மாவிடைருந்து அறிய முடியவில்லை.

ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது. அப்பா அம்மாவுக்கு மாமாவையும் அவர் குடும்பத்தையும் பிடிக்கவில்லை. சொந்தத் தம்பி என்றுகூடப் பார்க்காமல் பகைமை பாராட்டும் அளவுக்கு அப்படி என்ன விஷயம் என்பது புதிராக இருந்தது.

ரியாகப் பதினொரு மணிக்கு சமையற்காரர் டின்னர் அறிவிக்க அவர்கள் கலைந்து மீன்டும் டைனிங் ஹாலில் சந்தித்தார்கள். எல்லோரும் மடியில் நாப்கின் விரித்துக்கொண்டு ஆவி பறக்கும் தக்காளி சூப் கவர்ந்திழுக்க, கண்ணுக்குத் தெரியாத ராட்டினத்தின் இடைவிடாத சுழற்சியில் ஸ்பூன் கொண்டு சூப் இறைக்கத் தலைப்பட, மாமா மட்டும் அனைவரையும் மாறிமாறிப் பார்த்தபடி தன்னையும் தன் குடும்பத்தையும் பற்றி அளந்த பிரதாபங்கள் அலைஅலையாய் நினைவில் தோன்றி மறைந்தன.

மாமாவின் ’ஸேல்ஸ்மன்ஷிப்’ அவரது வார்த்தைகளில் தெரிந்தது. அந்த வார்த்தைகள் எழுதிய ஓவியத்தில் அவரும் அவர் குடும்பத்தாரும் தன்னிகரற்றுத் தோன்றினார்கள்.

எல்லா ’மெடிகல் ரெப்’களும் ’பெட்டர் ப்ராஸ்பெக்ட்ஸ்’ என்று அடிக்கடி வேலையை நீத்து இரண்டொரு வருடத்தில் வேறு கம்பெனிகளை நாடித் தஞ்சம் புக, மாமா மட்டும் பல வருஷங்கள் ஒரே கம்பெனியில் தொடர்ந்து, சம்பளத்தில் ஏணிப்படிகளில் ஏறி, கம்பெனி தந்த ’ஸேல்ஸ்மன் கமிஷன்’களில் இரண்டு மூன்று படிகளை ஒரே சமயத்தில் தாண்டி, மற்ற பிற ’இன்ஸென்டிவ்’களில் ’போல்வால்ட்’ தாவி இன்று ஒரு ’சீனியர் ரெப்’ஆக நின்றார்.

மறுபடியும் மாமா பல வருடங்கள் திட்டமிட்டு தன் வருமானத்தில் சேமிப்பு, மூதாதையர் மற்றும் மாமியின் சொத்து இவற்றின் சங்கமத்தில் தன் கனவுகள் எல்லாம் நனவாக அழகிய, பெரியதொரு பங்களாவைக் கட்டி அதை ’டெகோ-ல’த்தாலும் ’மொஸைக்’காலும் இழைத்து, அழகிய ’மாடர்ன் ஃபர்னிச்சர்’ மற்றும் மின் சாதனங்களால் அலங்கரித்து, ஊரிலேயே பெரிய ’ஹோம் லைப்ரரி’யில் கலைமகளைக் குடியேற்றி, நண்பர்கள் வியந்து பாராட்டப் பெருமிதத்துடன் ’வீட்டைக் கட்டிப் பார்த்துவிட்டேன் அடுத்தது கல்யாணத்தையும் பண்ணிப் பார்த்துவிடுகிறேன் (கௌசல்யாவுக்கு)’ என்று நின்றார்.

அடுத்தபடியாக அவர் குனிந்த தலை நிமிராமல் நாட்டுப்புறத்தின் மொத்த உருவமாக இருந்த மாமியைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி, நாகரிகப்படுத்தி, அவள் விரும்பிய கலைகளில் ஊக்குவித்து, மங்கிப்போயிருந்த அவள் சங்கீத ரசனைகளைப் புதுப்பித்து மெருகேற்றி, கேட்கவும் பாடவும் வசதிகள் செய்துகொடுத்து, அவள் அடுப்படி வேலைகளைச் சுளுவாக்கி மறக்கச்செய்து, மாதர் சங்கங்களுக்கு அறிமுகப்படுத்தி, மொத்தத்தில் பெர்னார்ட் ஷாவின் பூக்காரி* Eliza Doolittle போன்று இருந்த தன் மனைவியின் பரிணாம வளர்ச்சியில் கடைசிவரை பங்குகொண்டு ப்ரொஃபஸர் ஹிக்கின்ஸாக நின்றார், ஒரு வித்தியாசத்துடன். அந்தப் ப்ரொஃபஸர்போல் இவர் மனமுடைந்து Let a woman in your life... என்று பாடவில்லை.

[Eliza Doolittle ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவின் Pygmalion நாடகத்தில் வரும் ஒரு பூக்காரி. இந்த நாடகம் My Fair Lady என்ற திரைப்படமாக்கப் பட்டது. பூக்காரியை நாகரிகப்படுத்தி அவளை மணந்துகொள்ளும் பேராசிரியர் ஹிக்கின்ஸ் பின்னர் அவர்களுக்குள் வந்த சச்சரவால் அவள் அவரைக் கைவிட்டுச் செல்லும்போது திரைப்படத்தில் ஹிக்கின்ஸ் பாடும் பாடலில் வரும் வரி Let a woman in your life...
My Fair Lady (1964) - IMDb
* I'm an Ordinary Man Lyrics | from "My Fair Lady" --ரமணி]

கடைசியாக அவர் கௌசல்யா எனும் ஒரே மகவைப் பெற்றெடுத்து அவளை ஓர் இளவரசிபோல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்த்துப் படிக்கவைத்து, நாகரிகத்தின் சோப்புக்குமிழ் நிறங்களில் மயங்கவைத்து, அவளை ஒரு ’ஸ்பாயில்ட் கிட்’ ஆக்க முயற்சிசெய்து---ஆனால் அவள்தான் அதற்குக் கொஞ்சமும் மசிவதாகத் தெரியவில்லை---செல்வத்தின் ’எஸ்கலேட்டர்’இல் ஏற்றிவைத்து, கல்யாண ’ஷாப்பிங் சென்டர்’இல் அவளை ஒரு கனவுக்கன்னியாக உலவவிட்டுப் புண்ணியம் தேடிக்கொண்டவராக நின்றார்.

மாமாவின் தம்பட்டம் செவிகளை நிறைக்க அவனுக்கு அந்த டின்னரின் சுவையும், மணி அய்யரின் அன்பான உபசரிப்பும், கௌசல்யாவின் கனிவான கவனிப்பும் எடுபடாமல் போக, அவனும் வசந்தியும் ஒப்புக்காகச் சொல்லவேண்டிய தாயிற்று:

"Thanks for a sumptuous, delicious dinner கௌசல்யா!

கொஞ்ச நேரம் மனதுக்குப் பிடித்த ஹிந்திப் பாடல்களைக் கேட்டுவிட்டு, திடீரென்று முடிவுசெய்து அவர்கள் மூவரும் அருணா டாக்கீஸில் அப்போது ஓடிக்கொண்டிருந்த ’உபஹார்’ ஹிந்தித் திரைப்படம் பார்க்கச் சென்றபோது வழியில் கௌசல்யா கேட்டாள்.

"அப்பா உங்க ரெண்டு பேரையும் ரொம்ப போர் அடிச்சுட்டார் இல்லே? அவர் எப்போதுமே அப்படித்தான். Ego-centric you can say. ஆனால் அவருக்கு அம்மா மேலையும் என்மேலையும் அளவுகடந்த பாசம், ராஜா. எனக்காக எது வேன்ணும்னாலும் செய்வார்."

"புரியறது கௌசல்யா. இதெல்லாம் நான் ஒரு குறையா நினைக்கல. உங்க அந்தஸ்தைப் பார்க்கும்போது மாமா நிச்சயம் பெரிய ஆள்தான்."

"என்னது திடீர்னு மாமாவுக்கு ஐஸ் வெக்கறே? ஓகோ, புரியறது, புரியறது..."

"டோன்ட் பி ஸில்லி, கௌசல்யா. நான் ஒண்ணும்---"

"சும்மா விளையாட்டுக்குச் சொன்னாக்கூட கோவிச்சுக்கற பத்தியா? வசந்தி, ராஜா பெரிய கோவக்காரனா இருப்பான் போலிருக்கே?", என்று அவன் தோள்கள் மீது கைகளைப் பின்னிக்கொண்டாள்.

அவனுக்கு அனுவின் ஞாபகம் வந்தது.

பஹார்’ ஜெயாபாதுரியின் நடிப்பில் அவர்கள் உருகிப் போனாற்கள். எந்த நடிகையும் தன் முதல் படத்தில் இவ்வளவு அழகாக, மாறுதலாக, அதிசயிக்கத் தக்கபடி நடித்திருக்க முடியாது என்று தோன்றியது. ’சமாப்தி’யில் தாகூர் சித்தரித்திருந்த மீனுவை அப்படியே தனது பாத்திரத்துடன் ஒன்றிவிட்ட நடிப்பினால் கண்முன் கொண்டுவந்து நிறுத்தினாள்.

பருவமடைந்து ஒன்றுமே தெரியாமல் கள்ளங்கபடமற்ற குழந்தை போல, சிறுவர் சிறுமியருடன் சேர்ந்துகொண்டு, மாந்தோப்பில் அலைந்து மாங்காய் அடித்து மடிநிறைய சுமந்துகொண்டு, எதெற்கெடுத்தாலும் சிரித்துக்கொண்டு, பெற்றோர்கள் பின் ஓடி ஒளிந்துகோண்டு, கைகளை நீட்டி அபிநயித்துக்கொண்டு, தன்னுடைய திருமணத்தின்போது கூட மனத்தளவில் குழந்தையாக, அது தனக்கொன்றும் சம்பந்தம் இல்லாத நிகழ்ச்சியாக நினைத்துக்கொண்டு, பின்னர் மண வாழ்க்கயின் புதுமையும், பிரிவும், அந்நியத்தன்மையும் தாங்க முடியாத சுமைகளாகிவிட, அவளது மென்மையான உணர்வுகளைப் புரிந்துகொண்டு மெல்ல அவள் மனதைப் பக்குவப்படுத்த முயலும் கணவனாக, கனவானாக ஸ்வரூப் தத் வந்து, வண்ண வண்ண மலர்கள் நிறைந்த தோட்டத்தில் பாடும் அந்தப் பாட்டின் இனிமையில் அவர்கள் வாயடத்துப் போனார்கள்.

மைன் எக் ராஜா ஹூம்
தூ எக் ராணி ஹோ ஓ ஓ ஓ!
மைன் எக் ராஜா ஹூம்
ப்ரேம் நகர்கி யே எக் சுந்தர்
ப்ரேம் கஹானி ஹோ!
[http://lyricsandme.com/lyrics_song_Main_Ek_Raja_Hoon.htm]


பாட்டின் முதல்வரி காதில் விழுந்ததும் கௌசல்யா வசந்திக்குத் தெரியாமல் அவர்களுக்கு நடுவில் அமர்ந்திருந்த அவனை விலாவில் இடித்தாள். திரும்பிப் பார்த்தபோது அவள் கண்கள் அவன் கண்களை சந்திக்கமுடியாமல் தாழ, குறும்பும் நாணமும் போட்டிபோடும் அந்த முகத்தின் அந்திவானச் சிவப்பில் இளம்பிறைக் கீற்றாக மெல்லிய புன்னகை தோன்றி மறைந்தது அந்த இருளிலும் தெளிவாகத் தெரிந்தது.

தீடீரென்று மனம் பிரகாசமாக, கண்கள் திரையிலிருந்து விலகி அவள் மீது நிலைக்க, தியேட்டர் ஹாலில் நிலவிய மௌனத்தில் துல்யமாக ஒலிக்கும் மொஹம்மத் ரஃபியின் குரலும் லக்ஷ்மி-பியாரியின் இசையும் தேய்ந்து மறைய,

மனத்தின் ஆழத்தில் இருந்து
அலையடிக்கும் நீர்ப்பரப்பைக் கிழித்துக்கொண்டு

டால்ஃபின்களாக எழுந்த
எண்ணங்களின் லயிப்பில்,
உணர்வுகளின் நன்றியில்,
கண்டுபிடிப்புகளின் சிலிர்ப்பில்,

வானத்தில் தெளித்த நீர்த்துளிப் படலங்களின்
வானவில் நிறங்கள் தோற்றுவித்த வியப்பில்
அவன் கௌசல்யாவைக் காதலிப்பதை உணர்ந்தான்.


நன்றியுடன் விரல்கள் அவர்களுக்கு நடுவில் இருந்த கைப்பிடியில் படர்ந்து அவள் விரல்களுடன் இணந்தபோது மனதில் ஒரு வைராக்கியமும் உறுதியும் பிறந்தன.

*** *** ***
 
19

சற்றுன் முகஞ் சிவந்தால் -- மனது
சஞ்சல மாகு தடீ;
---மஹாகவி பாரதியார், கண்ணம்மா என் குழந்தை 6


தன்பின் ஒவ்வொரு வாரமும் கௌசல்யாவைப் பார்க்கத் தோன்றியது.

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை எப்போது வரும் என்று எதிர்பார்க்க வைத்தது.

வசந்தியைப் பார்க்கப் போனபோது கண்கள் கௌசல்யாவைத் தேடின. அவள் வந்தபோது கண்கள் குன்றிலிட்ட விளக்காயின. வராத நாட்களில் குடத்திலிட்ட விளக்காயின.

தவறாது ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் அவள் வீட்டுக்கு அழைத்தபோது மறுக்கத் தோன்றவில்லை. வாரம் தவறாமல் மாமா வீட்டில் சாப்பிட்டால் ஏதாவது நினைத்துக்கொள்ளப் போகிறார்கள் என்ற எண்ணம் உதித்தபோது ஞாயிறு மாலை நேரங்களில் அவளை வீட்டில் சந்திக்க ஏற்பாடு செய்துகொள்ள வைத்தது.

நேரம் போவதே தெரியாமல் கௌசல்யாவுடன் பேசிக்கொண்டிருக்கத் தோன்றியது. ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் அவள் கருத்துகளை அறிந்துகொள்ள ஆவலாக இருந்தது. எல்லா விஷயங்களையும் கொஞ்சமாவது அவள் அறிந்து வைத்திருந்தது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. சமயத்தில் மலைக்க வைத்தது.

மாமாவுடன் பேசிக்கொண்டிருந்த போது அவருடைய சாமர்த்தியமான பேச்சை கவனமாகக் கேட்கத் தோன்றியது. கௌசல்யா அவனுடன் நெருங்கிப் பழகுவதைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று தெரிந்துகொள்ள ஆவலாக இருந்தது.

வெளியில் அவர் ஒன்றும் சொல்லாவிட்டாலும் மனதில் ஏதேனும் வைத்துக்கொள்வாரோ என்று சந்தேகமாக இருந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக அவர் அவன் பெற்றோரைப் பற்றிய விசாரிப்பைக் குறைத்துக்கொண்டு விட்டதை உணர்ந்தபோது கோபம் கலந்த கவலை தலைதூக்கியது.

ஒருமுறை அவன் தன் ஊருக்குப் போய்விட்டு வந்து மாமா வீட்டுக்குப் போனபோது அவர்கள் ஒன்றுமே கேட்காமல் இருந்தது வருத்தமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

இப்படிக்கூட நெருங்கிய உறவினர்களால் இருக்கமுடியுமா என்று புதிராக இருந்தது.

பாஸ்கரைக் கௌசல்யாவுக்கு அறிமுகப் படுத்திவைக்கத் தயக்கமாக இருந்தது!

அவள் ஒவ்வொரு வாரமும் அவனைப் பற்றிக் கேட்கும்போது ஏதாவது காரணம் கூறி அந்த அறிமுகத்தை முடிந்தவரை ஒத்திப் போடத் தோன்றியது.

அவள் பாஸ்கரைப் பற்றி வினவியபோதெல்லாம் உள்ளுக்குள் முகம் மாறி ’இவளுக்கு என்ன முன்பின் தெரியாதவனைப் பற்றி அக்கறை?’ என்ற எண்ணம் எழுந்து சாமர்த்தியமாக மனதை மறைத்து முகத்தைத் திருப்பிக்கொள்ள வேண்டியிருந்தது.

கொஞ்சநாளில் அவன் தன் பகுத்தறிவின் இயக்கத்தில் உண்மைகளையும் எல்லைகளையும் சரிவரப் புரிந்துகொண்டு தன் எண்ணங்களை சமன்செய்து சீர்தூக்கிப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்து பாஸ்கரை அவளுக்கு அறிமுகம் செய்துவைத்தபோது கொஞ்சம் தர்மசங்கடமாகி விட்டது!

"ராஜா உங்களைப் பத்தி நிறைய சொல்லியிருக்கான். ரொம்ப நாளா உங்களை மீட் பண்ணனும்னு நினைச்சேன். இப்பதான் சந்தர்ப்பம் வாய்த்தது."

"இஸ் தாட் ஸோ? ஐ’ம் வெரி க்ளாட். ராஜா இதுவரை என்னிடம் உங்களைப் பத்தி ஒண்ணும் சொல்லலை. அவனுக்கு ஒரு மாமா இருக்கார், அதுவும் உள்ளூரிலேயே இருக்கார், அவருக்கு இப்படி ஒரு அழகான பொண்ணு இருக்காங்கன்னே எனக்குத் தெரியாது!"

முதல் சந்திப்பிலேயே கௌசல்யாவுக்கும் வசந்திக்கும் பாஸ்கரை மிகவும் பிடித்துப்போனது கண்கூடாகத் தெரிந்தது. பொதுவாக எல்லோரிடமும் கொஞ்சம் ஒதுக்கமாக இருக்கும் வசந்திகூட பாஸ்கரின் தோற்றத்தாலும் அறிவாலும் சாதுர்யமான பேச்சாலும் கவரப்பட்டு அவனிடம் தாராளமாகப் பேசினாள். கௌசல்யாவோ அந்த முதல் சந்திப்பிலேயே பாஸ்கருடன் நீண்டநாள் பழகியவள்போல் சிரித்தும், ’கமென்ட்’ அடித்துக்கொண்டும், கண்களும் கைகளும் அபிநயிக்கப் பேசிக்கொண்டிருந்ததைப் பார்க்கும்போது அவனுக்கு என்னவோ போலிருந்தது.

விடைபெற்று அவர்கள் இருவரும் கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே வந்ததும் பாஸ்கர் அவன் கைகளைக் குலுக்கினான்.

"கங்க்ராட்ஸ் அன்ட் பெஸ்ட் விஷஸ், ராஜா! உண்மையில் நீ பெரிய அதிர்ஷ்டக்காரன். கௌசல்யா வில் பி அன் ஐடியல் மாட்ச் ஃபர் யு."

மறுநாள் கௌசல்யாவைத் தனியே சந்திக்க முடிந்தபோது கோபித்துக் கொண்டாள்.

"லுக் ராஜா, பாஸ்கரை எனக்கு இவ்வளவு தாமதமா அறிமுகம் செய்துவைத்ததில உன்னோட உணர்வுகளை நான் மதிக்கறேன். அதே சமயத்தில யு ஹாவ் அன்டர்-எஸ்டிமேட்டட் மி. எனக்கு சோஷலாகப் பழகப் பிடிக்கும், யு நோ தட். And BhASkar is a good friend of all of us. Let's not have any confusion there."

தைகளில் போல் அல்லாமல் வாழ்வில் அன்றாடம் நடக்கும் சின்னச் சின்ன நிகழ்ச்சிகளில் அவர்கள் காதல் மலர்ந்து, வளர்ந்த விதத்தை இப்போது டைரியில் படிக்கும்போது விரல்கள் அவள் சம்பந்தப்பட்ட பக்கங்களைப் புரட்டிக் காட்ட மனம் அதை விரித்து ஒத்திகை பார்த்து மகிழ்ந்தது.

ஒருநாள் இருவரும் மத்தியான நிசப்தத்தில் செஸ் விளையாடிக் கொண்டிருந்தபோது அவன் தன்னுடைய ’மூவ்’ ஒன்றைச் சற்று அவசரமாகச் செய்துவிட்டு அவள் பதிலுக்கு யோசித்தபோது கண்கள் அவளையே பார்த்திருக்க மனம் வியந்தது.

இவ்வளவு தூரம் நான் இவளிடம் மனசைப் பறிகொடுத்ததற்கு என்ன காரணம்? இவளுடைய அழகா? நீண்ட சந்தன விரல்கள் வழவழப்பான கன்னத்தில் அழகாகப் பதிந்திருக்க, இமைகள் சிறகடிக்க ஒரே செடியிலேயே மலர் விட்டு மலர் தாவும் பட்டாம்பூச்சி போன்ற விழிகள் செஸ் போர்டின் நிலவரத்தை முன்பின்னாகவும் பக்கவாட்டிலும் நகர்ந்து கணிக்க... எவ்வளவு அழகாக இருக்கிறாள்! நான் சந்தித்த பெண்களில் இவளைவிட அழகு அனு மட்டுமே. வெற்றி மேடையில் அனு முதல்படி என்றாள் இவள் இரண்டாவது.

அல்லது இவள் அறிவா? ஆங்கில, தமிழ் இலக்கியத்தில் எவ்வளவு ஆர்வம்! அவள் நூலகத்தில் எத்தனை புத்தகங்கள்! இதுபோக எத்தனை நுண்கலைகள் தெரிந்தவள்! இதுமாதிர் எல்லாத் துறைகளிலும் விஷய ஞானம் உள்ளவளாக இருக்கும் இவளுக்கு என்னவிட---இதை நினைக்கத்தான் வேண்டியிருக்கிறது---பாஸ்கர் இன்னும் பொருத்தமோ? ஒருவேளை என்னுடைய இந்த முயற்சியில் நான் தோற்றுப் போனால் பாஸ்கர்தான் எனக்கு வாரிசு.

அல்லது கலகலவென்று பழகும் இவள் சுபாவமா? அல்லது இவளுடன் பழகி இவளைப் பற்றி நிறையத் தெரிந்துகொள்ள உதவிய சந்தர்ப்பங்களா? எப்படி இருந்தாலும் இவள் இல்லாமல் நான் இருப்பது சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. அனுவிடமிருந்து என் கடிதத்துக்கு பதில் வந்தவுடன் நான் ஒரு முடிவுக்கு வர இயலும்.

"Hey, you are losing your queen!" என்றாள் கௌசல்யா, அவன் முகத்துக்கு முன்னால் கையை மேலும் கீழும் அசைத்து. "Or else, if it is a queen sacrifice, it's the silliest I have seen!"

அந்த ’க்வீன்’ பதத்தில் திடுக்கிட்டான். கண்கள் செஸ் போர்டில் இறங்கத் தலையை இடம்வலமாக அசைத்தான். ஒரு பள்ளிச் சிறுவன் நினைத்துப் பார்த்திருக்க முடியாத ’மூவ்’. அடுத்த இரண்டு ’மூவ்’களின் கட்டாயத்தில் அவள் குதிரையால் ’செக்’ சொல்லி ராணியைக் காவு வாங்கிவிட முடியும்.

"பரவாயில்லை, வேற மூவ் பண்ணு."

"சாரி, கௌசி. ஏதோ ஞாபகம்."

"தெரியும்."

என்ன என்பதுபோல் பார்த்தபோது ஓர் அழகிய புன்னகையை மிதக்கவிட்டாள்.

The smile that launched a thousand ships! என்றது டைரி.

"நீ என்னைப் பத்தித்தான் நினைச்சிண்டிருந்தாய் இல்லையா?"
 
ற்றொரு நாள். அவனும் பாஸ்கரும் கௌசல்யா வசந்தியுடன் சுற்றுலா போனபோது நடந்தது. மரங்கள் அடர்ந்த வனாந்தரப் பகுதியில் சற்று மேடான இடத்தில் புல்தரையில் அவர்கள் உட்கார்ந்துகொண்டு பாஸ்கரின் கிடாரில் மெய்மறந்தபின் கேக், சான்ட்விச் சாப்பிட்டுவிட்டு நெஸ் காஃபியைச் சுவைத்தபடியியே எதிரில் இருந்த சுனையில் மிதக்கும் அசைவற்ற வாத்துக்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

தூரத்தே சூரியன் மறந்துகொண்டிருக்க, மேகங்கள் அற்ற நீல வானப் பெருந்திரையின் பின்னணியில் மரக்கூட்டங்கள் பசுமை நிழல்களாகத் தெரிந்தன.

தீடீரென்று பாஸ்கர் முழங்கையைத் தலையில் முட்டுக்கொடுத்து புல்தரையில் படுத்துக் கொண்டிருந்தவன் எழுந்து கால்களை நீட்டி உட்கார்ந்துகொண்டு சின்னச் சின்ன பருக்கைக் கற்களைச் சுனையில் எறிந்து வாத்துக்களுக்கு உயிரூட்டினான். கௌசல்யாவும் அவனுடன் சேர்ந்துகொண்டாள். தண்ணீரில் எழுந்த சிற்றலைகளில் வாத்துக்கள் கலைந்து அப்பால் செல்ல, கௌசல்யா அவனைச் சீண்டினாள்.

"ஒரு சிகரெட் கம்பெனி விளம்பரம் மாதிரி இருக்கு. ராஜா, நீ ஏன் புகை பிடிப்பதில்லை?"

"எனக்குப் பிடிக்காது கௌசி."

"இல்லை, இப்ப நீ இருக்கற ஸ்டைல்ல ஜம்முனு ஒரு வில்ஸ் பாக்கெட்டைப் பிரிச்சு அதிலேர்ந்து ஒரு சிகரெட் செலக்ட் பண்ணி, நான் அதை லைட்டரின் க்ளிக்கில் ஏற்ற, உதடுகளுக்கு நடுவில் பொருத்திப் புகையை ஆனந்தமா உள்ளிழுத்து இதமா வெளியவிட்டா க்ளாஸா இருக்கும்! ரிலாக்ஸ்!... க்ளிக்! ஒரு ஃபோட்டோ, அவ்வளவுதான். நாளையில் இருந்து நீ ஒரு பெரிய மாடல்!"

"யு புட் இட் ஸோ நைஸ்லி", என்றான் பாஸ்கர்.

"ஸ்டில் யு வொன்ட் லைக் ஸ்மோக்கிங்?"

"என்ன பேச்சு இது கௌசி? போற போக்கைப் பாத்தா நீயே அவனை ஸ்மோக் பண்ண வெச்சுடுவே போலிருக்கே?"

"ஸ்மோக்கிங், ட்ரிங்க்கிங் இதெல்லாம் ஒருத்தரோட பர்சனல் விஷயங்கள் வசந்தி. அளவோட இருக்கறவரைக்கும் இதெல்லாம் வைஸஸ்னு நான் நினைக்கல. எங்கப்பாகூட அடிக்கடி ஸ்மோக் பண்ணுவார், எப்பவானும் குடிப்பார், அவர் வேலைசேர்ந்த பழக்கங்கள் அப்படி. அதுக்காக அவர் கெட்டவர்னு சொல்லமுடியுமா?"

"ஒத்துக்கறேன். அதுக்காக இந்தப் பழக்கங்கள் கொஞ்சங்கூட இல்லாதவங்களை நாமே தூண்டிவிடறது எவ்ளோதூரம் சரின்னு நினைச்சுப் பார்க்கணும், இல்லையா?"

"கௌசல்யா ஒரு ஜோக்காக சொல்லியிருக்கலாம் இல்லையா வசந்தி?" என்றான் பாஸ்கர்.

"இல்லை. நான் ராஜாவோட வில்பவரை டெஸ்ட் பண்ணினேன். எனக்குத் தெரியாதா அவனோட வில்பவர் வில்ஸ் பவரைவிட வலிமையானதுன்னு?"

"சிகரெட் புகைக்க வில்பவர் தேவையில்லை கௌசி. சிகரெட் பழக்கம் இருந்தால் அதைக் கட்டுப்படுத்தவோ, அறவே ஒழிக்கவோ நினைச்சா, நினைச்சதை செயல்படுத்த வில்பவர் வேணும்."

"வில்பவர்னு சொன்னதும் எனக்கு ஒரு வழக்கம் ஞாபகம் வருது", என்றான் பாஸ்கர். "உனக்குத் தெரியுமா ராஜா?"

"கேள்விப் பட்டிருக்கேன், சொல்லு."

"உங்களுக்கு?"

தலைகள் மறுத்தன.

"கல்லூரி ஹாஸ்டல் மாணவர்கள்கிட்ட இருக்கறதா சொல்லப்படும் வழக்கம். ஒருவிதமான ராகிங்னுகூடச் சொல்லலாம். என்ன செய்வாங்க, புதுசா சேர்ந்த ரெண்டு மாணவர்களை எதிரும்புதிருமாக நிற்கவைத்து, ’உங்க வில்பவர்க்கு ஒரு டெஸ்ட்’னு சொல்லி, ரெண்டு பேரையும் கண்ணை மூடிண்டு கைகளால பெடல் பண்ற மாதிரி ஒருத்தர் மேல ஒருத்தர் படாம சுத்தணும்; சுத்திண்டே வாய்விட்டு ஒண்ணு, ரெண்டு, மூணுன்னு மாத்திமாத்தி எண்ணனும்னு சொல்வாங்க. நடுவில நிறுத்தக் கூடாது, எக்காரணம் கொண்டும் கண்ணைத் திறக்கக் கூடாது. மீறினா ஆளுக்கு பத்து ரூபாய் ஃபைன்.

"இந்தப் புதுப் பையன்கள் ரெண்டு பேரும் மும்முரமா பெடல் பண்ற போது சுத்தி இருக்கறவங்க சத்தம் போடாம நழுவிப் போய் டிஃபன் காப்பி சாப்பிட்டு பீடா போட்டுண்டு பதினஞ்சு இருவது நிமஷம் கழிச்சு வருவாங்க. வரும்போது ஒரு மாணவர் பட்டாளத்தையே கூட்டிண்டு வருவாங்க. பார்த்தா, இந்த ரெண்டு பேரும் பேக்கூ மாதிரி கண்ணை மூடி பெடல் பண்ணிண்டு, நம்பர்ஸ் எண்ணிண்டு! கடைசியா ஒருவழியா ரெண்டு பேரையும் கண்ணைத் திறக்கச் சொன்னா, எதிர்ல ஒரு பெரிய கும்பல், கைதட்டல், எக்காளச் சிரிப்பு! எப்படி இருக்கும் ரெண்டு பேர்க்கும்? இந்த எக்ஸ்பெரிமென்ட்ல ஒரு பையனுக்குப் பைத்தியமே பிடிச்சுடுத்தாம். இன்னொருத்தன் தற்கொலையே பண்ணிக்கொண்டானாம்!"

கௌசல்யாவின் சிரிப்பு மரங்களியே எதிரொலிக்க, வசந்தி, "ஐயோ பாவம்!" என்றாள்.

*** *** ***
 
20

கத்துங் குயிலோசை -- சற்றே வந்து
காதிற் படவேணும்; என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே -- நன்றாயிளந்
தென்றல் அவரவேணும்.
---மஹாகவி பாரதியார், காணி நிலம் 2


ருமுறை மாமா ஒரு வாரம் டூர் போனபோது அவனைக் கட்டாயப் படுத்தி மாமிக்கும் கௌசல்யாவுக்கும் துணையாக அவர் வீட்டில் தங்கச் சொன்னபோது, கௌசல்யாவுடன் மனம்விட்டுப் பேச, பழக வாய்ப்புக் கிடத்தது.

அந்த நாட்கள் அவன் வாழ்வில் மறக்கமுடியாத, முக்கியமான நாட்களாகி டைரியில் நிறைய இடம் பிடித்துக்கொண்டன.

அந்தப் புதிய பங்களாவில் ’கெஸ்ட் ரூம்’இல் தங்கும் முதல் நபர் என்பதே ஒரு பெருமையாக இருந்தது. கௌசல்யாவின் அறை போலவே அந்த அறை மிகவும் வசதியாக இருந்தது. படுத்துக்கொள்ள ஃபோம் மெத்தையும் தலையணகளும், வசதியாக சாய்ந்துகொள்ள ’ஸ்டீல் ஈஸிசேர்’உம், எழுதப் படிக்க அழகிய மேசையும்---மேசைமேல் ’இன்டர்காம்’---அலமாரியில் அவனுக்குப் பிடித்த புத்தகங்களும், ஜன்னல் வழியாகப் பார்த்தால் தோட்டத்தில் கொள்ளை கொள்ளையாகப் பூக்களின் அழகும், தென்னை ஓலைகளில் அமர்ந்து ஊஞ்சலாடும் காக்கைகளும், கிரீச்சிடும் அணில்களும், விர்ரெனப் பறக்கும் குருவிகளும்...

மாமியும் கௌசல்யாவும் அவனுக்காகவே பார்த்துப் பார்த்து எல்லா வசதிகளும் செய்துகொடுத்த மாதிரி இருந்தது.

அவர்கள் அன்பை வியந்துகொண்டு எழுந்தபோது ’இன்டர்காம்’ ஒலித்தது.

"குட் மார்னிங், ராஜா! கௌசி ஹியர். எழுந்தாச்சா? நல்லாத் தூங்கினாயா?"

"ஹாய் கௌசி! குட் மார்னிங்! எங்கேர்ந்து பேசறே?"

"சமையலறை. பெட் காஃபியா இல்லை பல் தேய்ச்சிட்டு வரயா?"

"அஞ்சு நிமிஷத்தில வரேன். மணி ஆறுதான் ஆறது, அதுக்குள்ள எழுந்தாச்சா?"

"எழுந்து, காஃபி சாப்ட்டு, குளிச்சாச்சு."

"என்ன விசேஷம்?"

"ஒண்ணுமில்லை. தினமும், அம்மாவும் நானும் காலைல சீக்கரமே குளிச்சிடுவோம். அப்பதான் புத்துணர்ச்சியா இருக்கும்."

"Incredible of a college girl!"

"Not at all!" என்று வைத்துவிட்டாள்.

ந்து நிமிடத்தில் அவன் அறைக்கதவு மெல்லத் தட்டப்பட்டது. திறந்தபோது நெற்றியில் குங்குமம் துலங்க, மஞ்சள் மணக்க, தலையில் துண்டு முடிந்திருக்க, ஈரம் தோய்ந்த ஒன்றிரண்டு கேசக் குழல்கள் நெற்றியிலும் கன்னத்திலும் விளிம்பு கட்ட, பாவாடை தாவணி அவள் அழகை இரட்டிப்பாக்க, கையில் காஃபி ட்ரேயுடன் கௌசல்யா நின்றிருந்தாள்.

"என்ன மலைச்சுப் போயிட்ட?"

"வசந்தியை நான் இதுபோலப் பார்த்திருக்கேன். ஆனால் நீ? உன்னைப் பத்தி நான் தெரிஞ்சிக்க வேண்டியது நிறைய இருக்கு, கௌசல்யா."

"வசனம்லாம் அப்புறம். காஃபி ஆறிடப் போறது."

டீப்பாயில் ட்ரேயை நளினமாக வைத்துவிட்டு தாவணியைக் கொஞ்சம் சரிசெய்துகொண்டு அவன் எதிரில் ஸ்டீல் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு, காப்பிக் குடுவையில் இருந்து காப்பியைக் கோப்பியில் ஊற்றினாள். கோப்பை நிறைந்ததும் அதன் அடியில் இருந்த பீங்கான் தட்டை மெல்ல உயர்த்தி அவனிடம் நீட்டும்போது ஆவி பறக்கும் காஃபியின் மணம் மூக்கைத் துளைத்தது.

அவன் விரல்கள் ’ஸாஸர்’இல் பதிந்தபோது சொன்னாள்: "Take care NOT to touch me. நான் இன்னைக்கு மடி."

"என்ன விசேஷம் கௌசி?"

"இன்னிக்கு என்ன கிழமை?"

"ஓ, வெள்ளிக் கிழமை."

"வெள்ளியும் செவ்வாயும் அம்மாவும் நானும் இப்படித்தான் இருப்போம். இன்னும் கொஞ்ச நேரத்தில ஸ்வாமி அறைல இருப்போம். சாப்பிடு, ஆறிடப் போறது."

"உனக்கு?"

"ஓவர்."

"என்னோட கொஞ்சம் சாப்பிடேன் கௌசி."

"ஓகே", என்று மற்றொரு கோப்பையில் பாதி நிறைத்துக் கொண்டாள்.

"ராஜா, உனக்குத் தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கப் பிடிக்குமா?"

"நிறைய."

அனுவின் ஞாபகம் வந்தது.

’நான் சொன்னேல்ல, என்னோட வாழைதான் ஜெயிக்கும்னு!’
அப்புறம் அந்தக் கடிதம்!
’நடைமுறையில் பார்க்கும்போது சில உண்மைகளையும் எல்லைகளையும் புரிந்துகொள்ள வேண்டும்.’
யு ஆர் க்ரூயல் அனு!

"அடிக்கடி என்ன யோசனை, ராஜா?"

சொல்லிவிடலாமா? வேண்டாம்.

"ஒண்ணுமில்லை கௌசி. சின்ன வயசில நானும் வசந்தியும் தினமும் ஒரு தடவை கார்த்தால தோட்டத்தைச் சுற்றிப் பார்ப்போம். அது நினைவுக்கு வந்தது."

கௌசல்யா போனதும் அவனும் பத்து நிமிடத்தில் குளித்துவிட்டுப் படியிறங்கி கூடத்துக்கு வந்தபோது சிவானந்த விஜயலக்ஷ்மியில் ’கனக தாரா’ டேப்பில் ஒலித்துக் கொண்டிருந்தது. துண்டால் ஈரத் தலையை முடிந்துகொண்டு, நெற்றியில் குங்குமம் துலங்க, காலைப் பொழுதின் முதல் சூரியஒளிக் கற்றைகளில் அவள் எப்போதும் அணிந்திருக்கும் நகைகள் மினுக்க, மாமி அவனைப் பார்த்துப் புன்னகத்தாள்.

"நான் போய்ப் பூப்பறிச்சிண்டு வரேம்மா", கௌசல்யா கிளம்பப் பின்தொடர்ந்தான்.

அடிக்கடி பார்த்ததாக இருந்தாலும் அந்தத் தோட்டம் எப்போதும் புதிதாக, அழகாக, அடக்கமாக இருந்தது. பூச்செடிகள் வீட்டின் பக்கங்களில் இருக்க, காய்கறித் தோட்டம் வீட்டின் பின்னால் இருந்தது.

வாசலிலும் பக்கங்களிலும் குரோட்டன்ஸ் போகன்வில்லாச் செடிகள்
நெடுநெடுவென வளர்ந்து கலர்கலரான இலைகளையும்
பூக்களையும் சுமந்து நிற்க, சரக்கொன்றை மரம் நெடுக
இளங்காலை வானம் மலர்ந்திருந்தது.

நடுநடுவே ரோஜாச் செடிகள் பரந்து
ஆரோக்கியமாக வளர்ந்து நிறையப் பூத்து
வரிசை வரிசையாகப் பழுப்பு முட்களையும்
இளம்பச்சை முட்களையும் அவற்றை உள்ளடக்கிய

பச்சை, பழுப்பு இலைகளையும் தாங்கி,
அந்த இலைகளுக்கு நடுவில் தலைநீட்டும் பச்சை,
பச்சை பிளந்து ரோஸ், முழுவதும் ரோஸ் மொக்குகள்
மலரும் நாட்களை எதிர்பார்த்து வளர்ந்திருக்க,

அன்று மலரும் அதிர்ஷ்டம் பெற்ற மொக்குகள்
மலரத் தொடங்கி மெல்ல இதழ் விரிக்க,
அடியில் காப்பிப்பொடிச் சக்கைத் துகள்களில்
எறும்புகள் மொய்க்க நின்றன.

மயில் மாணிக்கக் கொடிகள்
பக்கச் சுவர்களில் தொடங்கி, கயிறுகளில் படர்ந்து,
ரத்தச் சிவப்புப் பூக்களை
வாரி யிறைத்துக்கொண்டு மலையேற,

நந்தியாவட்டைச் செடிகளில்
பனிபெய்து நிலத்திருக்க,

பந்தலில் படர்ந்த நித்திய மல்லிக் கொடிகளின்
முன்னைய இரவு மலர்கள் இப்போதும் மணம் வீசின.

இன்னும் உள்ளே தள்ளி
குண்டுமல்லிப் பூக்கள் பரவலாக
மலர்ந்து மணம்பரப்ப,

செம்பருத்திச் செடிகள்,
பிடிவாதத்துடன் கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு
எடுத்ததைத் தரமாட்டேன் என்று
அடம்பிடிக்கும் குழந்தையைப் போல்
தன்னுள் ஆச்சரியப் பூக்களை ஒளித்து வைத்திருக்க

கௌசல்யா அவனுடன் பேசியபடியே
ஒவ்வொரும் பூவாகப் பறித்துக்
குடலையில் சேர்த்தபோது
அவளே ஓர் ஆச்சரிய மலராகத் தெரிந்தாள். பேசும் மலர்!

காய்கறித் தோட்டத்தில் நீண்ட பாத்திகளில்
வெண்டைச் செடிகள்
ஆங்காங்கே காய்கள் வளர
மென்மஞ்சளில் வெல்வெட் விழிக்கப் பூத்திருந்தன.
கத்திரிச் செடிப் பூக்கள் மென்நீலத்தில் ரகசியம் பேசின.

குட்டை குட்டையான கொத்தவரங்காய்ச் செடிகள்
பூத்ததே தெரியாமல் ரோஸ்வண்ண முறுவலில்
பொம்மைப் போர்வீரர்கள் போலக்
காய்வாட்கள் ஏந்தி நின்றன.

மிளகாய்ச் செடிகள் கடுகெனப் பூத்துக்
கண்ணைப் பறிக்கும் பசுமையில்
காய்களத் தாங்கி நின்றன.

ஓரத்தில் கொத்தமல்லிச் செடிகள் பசுங் காளான்களாக்
கூட்டம் கூட்டமாக வளர்ந்திருந்தன.

உயரமாக வளர்ந்து பரவியிருந்த
முருங்கை மரக்கிளைகளில் அணிகள்
ஒன்றையொன்று துரத்தி
ஓடிப் பிடித்து விளையாடி
பூக்களைச் சிலிர்த்தன.
சில பூக்களைக் கொத்தாகச் சேர்த்து
சிலந்தியொன்று வலையின் இழையில் தொங்கவிட் டிருந்தது.

வாழை மரங்கள் அப்போதுதான் உட்கொண்ட
நீரின் வெண்நுரை அடியில் படிந்திருக்க,
கற்றை கற்றையாக வளர்ந்து,
பெரிய பெரிய இலைகளில்
காற்றைத் தோண்ட முயன்று,

இன்னும் சில மரங்கள் குருத்துகளையும்
பாதிவிரிந்த இலைகளின் நுனியில் நீர்த்துளிகளையும்
தாங்கியந்த நீர்த்துளிகளில் எங்கிருந்தோ ஊடுருவித்
தாக்கும் கதிர்களை நிறங்களாகப் பிரதிபலித்து,
புரியாத மொழிகளில் பேசின.

அண்ணாந்து பார்த்தபோது சில மரங்களில்
வாழைத் தார்கள் நுனியில் பூவினைத்
தாங்கி வணங்கித் தழைந்திருந்தன.

தென்னை மரங்களில் காக்கைகள் உட்கார்ந்து ஊஞ்சலாடி
மூக்கைத் தேய்த்து ஒலி எழுப்பி
திடீரென்று ஏதோ நினைத்துக்கொண்டு பறக்க,

தூரத்தே இலைச் சருகுகளை
ஓசைப் படுத்திக்கொண்டு அணில்கள்
வாலைக் குழைத்தபடி எதையோ தேடின.

மாடி ஜன்னல் விளிம்புகளிலும்,
வெயில் மறைப்புக்களிலும், இன்னும்
சட்டென்று கண்ணில் படாத இடங்களிலும்

சிட்டுக் குருவிகளும் குண்டுக் குருவிகளும்
அமர்ந்துகொண்டு அங்கும் இங்கும்
தலையைத் திருப்பிச் சளசளவென்று பேசின.

தத்தித் தத்தி நடந்து
தரையில் மூக்கை உராய்ந்தன.
திடீரென்று உணர்ந்த ஆபத்துகளில்
விர்ரிட்டுப் பறந்தன.

சில செடிகளுக்கு அடியில் தேங்கியிருந்த தண்ணீரில்
சிறகுகளை அடித்துக்கொண்டு நீராடின.


கௌசல்யாவின் பூக்குடலை நிறைந்ததும் அவர்கள் உள்ளே சென்றபோது அவன், ’நீயும் வேணும்னா எங்களோட பூஜைல உக்காரு’ என்ற மாமியின் அழைப்பை நாசூக்காக நிராகரித்துவிட்டு கூடத்தில் உட்கார்ந்துகொண்டு ’ஹிண்டு’ பேப்பரை மேயத் தொடங்கியபோது மணி ஏழடித்தது.
 
Last edited:
Dear SAidevo Sir,

Felt as if i was in a garden and could see all action happeninig in front of my eyes...such was the beauty of your expressing the scene in the garden and the beauty of the Tamil language.. sorry the reply is in english.. the description of the action of the crows on Coconut trees, and sparrows were 100% to the dot...

Cheers!!
 
ந்த மர நிழல்களில் அமர்ந்து அவர்கள் தம் இலக்கிய ஈடுபாடுகளைப் பரிமாறிக்கொண்ட நாட்கள் நினைவுக்கு வந்தன.

"எனக்கென்னவோ மாடியில் ’ஸ்டடி’யில் பட்டிக்கிறதைவிட தோட்டத்தில் உட்கார்ந்து படிப்பது வசதியாகவும் ரம்யமாகவும் இருக்கு."

"எனக்கும் இதுபோன்ற சூழலில் படிக்கப் பிடிக்கும் கௌசி. முக்கியமா கவிதைகள்."

"Let nature be your teacher."

"ஷேக்ஸ்பியரின் As You Like It நாடகத்திலகூட இதுமாதிரி ஒரு கவிதை வருது."

"அப்புறம் ராஜா, எனக்கு English Prosody-பத்தி அவ்வளவாத் தெரியாது. சொல்லித் தருவியா?"

"With pleasure. எப்போ ஆரம்பிக்கலாம்?"

"இப்பவே!"

இலக்கியம் முதல் வருடம் சேர்ந்த புதிதில் ஆங்கில யாப்பிலக்கணத்தில் ஆர்வம்கொண்டு அதைப் பற்றி விவரமாகத் தெரிந்துகொள்ளப் புத்தகங்கள் கிடைக்காமல் ஒவ்வொரு Encyclopaedia-வாகத் தேடிக் கடைசியில் Pears Encyclopaedia-வில் கண்டுபிடித்து அதை முழுமூச்சாக உடனே படித்து வரிவிடாமல் குறிப்பெடுத்துக் கொண்டு மனனம் செய்தது நினைவுக்கு வரக் கேட்டான்.

"எங்கேர்ந்து ஆரம்பிக்க?"

"Begin from the beginning."

"நான் Pears Encyclopaedia-வில் படித்துப் புரிஞ்சிண்ட மாதிரியே உனக்கும் சொல்லித் தரேன். நம்ம தமிழ் யாப்பிலக்கணத்தில அசை சீர் அடிலாம் ஹைஸ்கூல் இலக்கணத்தில் படிச்சேல்ல? அதுமாதிரி இங்க்லிஷ்லேயும் உண்டு. நான் சொல்றதை நல்லா கவனி The express left Manchester at seven. இந்த வாக்கியத்தை ஒரு தடவை சொல்லு பார்க்கலாம்."

சொன்னாள்.

[ராஜாவும் கௌசல்யாவும் ஆங்கில இலக்கிய மாணவர்களாதலால் கொஞ்சம் விரிவாக அவன் உரையாடித் தன் டயரியில் பதிந்த ’லெக்சர்’ இங்குச் சுருக்கமாக அவர்கள் உரையாடலில் தரப்படுகிறது, வாசகர்களுக்கு உதவும் என்ற எண்ணத்தால்.
For more details, check links such as the following:
PROSODY
About Poetry: English Prosody and Literary Terms
Prosody Guide

--ரமணி]

"என்ன தெரியறது? ஆங்கில வார்த்தைகளோட உட்பிரிவுக்கு syllable-னு பேர். இது உனக்குத் தெரியும். ஒரு வார்த்தைல ஒண்ணோ ரெண்டோ மூணோ அதுக்கும் மேலையோ syllables இருக்கலாம். இப்ப நாம் சொன்ன வாக்கியத்தில The, express, Manchester இந்த மூணு சொற்களில் முறையே ஒண்ணு, ரெண்டு, மூணு syllable இருக்கறதை முதலில் கவனிக்கணும். அப்புறம் அந்த வாக்கியத்தைச் சொல்லும்போது சில syllables அழுத்தம் கொடுத்தும் மிச்சமுள்ளதை அழுத்தம் கொடுக்காமலும் சொல்லறோம். இந்த வாக்கியத்தை scan பண்ணிப் பார்த்தா இப்படி வரும்."

அவள் நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் காட்டினான்:
The express left Manchester at seven.
The- exp/ress- left/ Man/ches-ter at- seven-.


"நான் எழுதினதில ஒவ்வொரு syllable-ம் stressed-ஆ அல்லது unstressed-ஆன்னு காட்டறதுக்கு a dash for unstressed and a slash for stressed syllables அந்த syllableமுடியற இடத்தில போட்டிருக்கேன். எந்த மொழியிலேயும் எழுதும்போது வார்த்தைகளை இடம்விட்டு எழுதினாலும் பேசும்போது வார்த்தைகளைச் சேர்த்து சில அசைகளில் அழுத்தம் கொடுத்தும் சிலவற்றில் கொடுக்காமலும் பேசறோம் இல்லையா? இப்போ இந்த வாக்கியங்களைப் படி."

The woods are lovely, dark and deep.
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.


"Robert Frost என்றாள்."

"அந்த உரைநடை வாக்கியத்துக்கும் இந்தக் கவிதை அடிகளுக்கும் என்ன வித்தியாசம்? கவிதையின் முதல் அடியை அலகிட்டுப் பார்த்தாத் தெரியும்".

The- woods/ are- love/ly-, dark/ and- deep/.

"எல்லா வரிகள்லயும் ஓசையில் தாழ்ந்த ஓர் அசையும் உயர்ந்த ஓர் அசையும் மாறிமாறி வரது."

"வெரி குட். இதுதான் ஆங்கிலக் கவிதையோட அடிப்படை உருவம். அசைகள் சேர்ந்து வருவது சீர்--meter. ஒரு dash ஒரு slash சேர்ந்துவரும் சீருக்கு iamb என்று பெயர். இதே மாதிரி மத்த ஈரசை, அப்புறம் மூவசைச் சீர்கள்க்குப் பெயர்களும் pattern-களும் உண்டு."

கௌசல்யா ஆர்வத்துடன் நோட்டுப் புத்தகத்தைப் பார்த்தாள்.

-/ dash slash = iamb eg: upon, arise
/- slash dash = trochee eg: virtue, further
--/ dash dash slash = anapest or anapaest eg: intervene
/-- slash dash dash = dactyl eg: tenderly
//- slash slash dash = spondee eg: 'slow moon' in 'The slow moon climbs'


"தமிழ்ல ஈரசை, மூவசைச் சீரடின்னு சொல்ற மாதிரி ஆங்கிலத்தில iambic, trochaic, anapaestic, dactylic and spondaic meterனு சொல்லறது. எப்படி குறளடினா ரெண்டு சீர், அதோட ஒவ்வொரு சீர் சேர்த்து சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடின்னு சொல்ற மாதிரி ஆங்கிலத்தில ரெண்டு சீருள்ளது dimeter, then trimeter, tetrameter, pentameter, hexameterனு ஆறு சீரடி வரைக்கும் சொல்றது."

"ரொம்ப ஸ்வாரஸ்யமா இருக்கு."

"அப்புறம் குறளியில், சிந்தியல், அளவியல், விருத்தம்னு நாம் அடிகளின் எண்ணிக்கையை வெச்சு சொல்றமாதிரி ஆங்கிலத்தில tercet for a group of three lines, quatrain for four, sestet for six, septet for seven and octave for eight lines. நாம மேலே பார்த்த Robert Frost poem stanza-ல, ஒவ்வொரு அடியும் iambic tetrameter, and every stanza is a quatrain. என்ன, புரியுதா?"

"நல்லா. எனக்கு நம்ம தமிழ் எதுகை மோனை, இயைபு போல ஆங்கிலக் கவிதைல வரும் alliteration, assonance, rhyme பத்தி ஓரளவு தெரியும். இருந்தாலும் நீ சொல்லு, refresh பண்ணிக்கறேன்."

"மெய்யெழுத்து, அதாவது consonants, ஒன்றி வந்தா alliteration. உதாரணம் Peter Piper picked a peck of pickled peppers. இந்த வரி என்ன metre தெரியுமா?"

விரல்களால் எண்ணிக்கொண்டு கொஞ்சம் யோசித்தாள். "I got it! Trochaic hexameter."

"Brilliant! Samuel Taylor Coleridge's poem 'The Rime of the Ancient Mariner' has a beautiful example of alliteration."
The fair breeze blew, the white foam flew,
The furrow followed free;


"லவ்லி! கடல்ல போறமாதிரியே இருக்கில்ல?"

"Too much of alliterations can get artificial.. அதனாலதான் apt alliteration's artful aid-னு சொல்வாங்க."

"Always avoid aweful alliterations-னு நானும் எங்கேயோ படிச்ச்ருக்கேன்."

"மெய்யொலிகள் மாதிரி உயிரொலிகளுக்கு assonanceனு பெயர். உதாரணம் அலெக்ஸாண்டர் போப். இதில வர O sounds கவனி. அதுதான் assonance."
Since my old friend is grown so great,

"alliteration, assonance அடிகளுக்கிடையிலும் வரலாம். அப்புறம் rhyme எல்லோர்க்கும் தெரிஞ்சதுதான். Rhyme-லதான் பெரும்பாலான English classical poetry-யே இருக்கு."

"Rhyme-ல விதங்கள் இருக்கில்ல?"

"சொல்றேன். cat--mat is single pure rhyme; silly--billy double pure; mystery--history--triple pure; love--move eye rhyme; breath-deaf near rhyme. bent--firmament wrenched rhyme ஒரே அடிக்குள்ள வந்தா leonine rhyme: For the moon never beams without bringing me dreams (Edgar Allan Poe)."

"ஒரு syllable-ல rhyme இருந்தாலே கணக்கு போல."

"Rhyme schemes-ஐ வெச்சு பாவகைகளே இருக்கு. Couplets-ங்கர ரெண்டு அடிகள்ல ஒண்ணுக்கொண்ணு rhyme வரணும். நாலடி quartrain can have 'abab' or 'aabb' or 'abba' பதினாலு லைன் sonnets of Shakespeare, Milton, இந்த வடிவத்தில ஒரு நிர்ணயித்த rhyme scheme இருக்கு."

"Metre-ஐ மட்டும் வெச்சிண்டு rhyme இல்லாம எழுதினா அது blank verse இல்ல?"

"இது போதும் எனக்கு. இனிமே நான் படிக்கற ஒவ்வொரு ஆங்கிலக் கவிதையையும் அலகிட்டுப் பார்க்கப் போறேன். அப்புறம் நானே எழுத முயற்சி செய்யப்போறேன்."

"உனக்கு எதுதான் முடியாது, கௌசல்யா? ஆல் தெ பெஸ்ட்."
 
ங்கில யாப்பிலக்கணம் படித்ததும் அவர்களுக்குத் தாம் படிக்கும் ஒவ்வொரு கவிதை வரியையும் பிரித்துப் பார்க்கத் தோன்றியது. இந்த வகையில் டென்னிஸனுடய கவிதைகளின் சந்த நலன்களும் வார்த்தை ஓவியங்களும் அதிசயிக்க வைத்தன. ஷேக்ஸ்பியர், கீட்ஸ், பைரன், ஷெல்லி கவிதைகளில் உத்திகளும் உணர்வுகளும் இரண்டறக் கலந்து உவகையூட்டின. பொதுவாக எளிமையாக, நேரடியாக எழுதும் வேர்ட்ஸ்வர்த் கவிதைகளில் கூட இந்த உத்திகள் பயன்பட்டது வியப்பளித்தது.

கௌசல்யாவின் கவிதை ஆர்வம் அவளையே கவிதைகள் இயற்றத் தூண்ட, ஒருநாள் அவள் வெட்கத்துடன் தான் யாத்த முதல் வரிகளை அவனிடம் கொடுத்து அவன் கருத்தைக் கேட்டாள்.

Rhythm and rhyme, short and long,
All that takes to write a song,
Jolly well it means to me a lot!
And there my pen, it goes about!

Round and round I go in thought
And my pen is forced to come to halt.
More I think, the more I care
At what you taught me, what you are.
Numerous ways to write a heart!


"முதல் முயற்ச்சியிலேயே இவ்வளவு தூரம் உனக்குக் கவிதை எழுத வந்தது க்ரேட்! ஆனால் ஒண்ணு ஞாபகம் வெச்சுக்கோ. புதுசா கவிதை முனையறபோது இவ்வளவு variations வரக்கூடாது. கூடுமான வரைக்கும் metre-ஐ விடக்கூடாது. அதுலதான் ஒரு கவிஞனோட திறமை இருக்கு. Variations இருந்தா அதுக்கு ஒரு நோக்கம் இருக்கணும். A very good effort, anyway. இதையே திரும்பத் திரும்பத் திருத்தாம வேற எழுத முயற்சி செய்."

"இந்தக் கவிதைல ஒண்ணு கவனிச்சயா?"

"என் பெயர் தானே? ஒவ்வொரு அடியிலும் முதல் எழுத்தைக் கோர்த்தா RAJA RAMAN-னு வரது. உன் கவிதைலயும் என்னைப் பத்தி நெனச்சது எனக்கு சந்தோஷமா இருக்கு", என்று அவள் கன்னத்தைத் தட்டினான்.

"உனக்குக் கவிதை எழுத வருமா ராஜா? நீ ஏதாவது எழுதியிருக்கயா?"

"முயற்சியும் ஆர்வமும் இருந்தால் யாருக்கு வேணும்னாலும் எது வேணும்னாலும் கூடும் கௌசி. என் கருத்து என்ன தெரியுமா? ஒரு கவிஞன் பிறப்பதில்லை, உருவாகிறான்."

"எனக்காக இப்பவே ஒரு ரெண்டு லைன் கவிதை எழுதி ட்ரை பண்ணறயா?" என்று அவனைப் புன்சிரிப்புடன் ஆர்வமாகப் பார்த்தாள்.

"வொய் நாட்?" என்று கொஞ்ச நேரம் யோசித்துக் காகிதத்தில் கிறுக்கி அவளிடம் கொடுத்தான்.

Jasmines, lilies, roses and lotus flowers
They can't excel your smile!
They last only for hours
Yours has a life of eternal style.


"நான் என் கவிதையை முடிக்க மூணு நாளாச்சு. நீ எப்படி இவ்ளோ சீக்கிரம் எழுதினே ராஜா?" என்று மலைத்துப் போனாள். "The best compliment I have received."

"’வலிமையான உணர்வுகளின் இயற்கையான வடிகால்தான் கவிதை*’, அப்படின்னு வேர்ட்ஸ்வர்த் சொல்லியிருக்கார். I was overwhelmed by your smile."

[*"...poetry is the spontaneous overflow of powerful feelings: it takes its origin from emotion recollected in tranquillity:..."--William Wordsworth, in his 'Preface to Lyrical Ballads']

*** *** ***
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top