• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

என் கதை முயற்சிகள்

Status
Not open for further replies.
1

மிக்க நலமுடைய மரங்கள்---பல
விந்தைச் சுவையுடைய கனிகள்---எந்தப்
பக்கத்தையும் மறைக்கும் வரைகள்---அங்கு
பாடி நகர்ந்து வரு நதிகள்...
---மஹாகவி பாரதியார், கண்ணன் என் காதலன் 3


ருகிலும் எதிரிலும் உட்கார்ந்து இருந்தவர்களை மெல்லத் தலையைத் திருப்பிப் பார்த்தவாறே தன் இருக்கையில் உட்கார்ந்தான் ராஜா.

"மதுரை செல்லும் வைகை எக்ஸ்ப்ரஸ், முதலாவது ப்ளாட்ஃபாரத்திலிருந்து புறப்படும் சமயம்..."

அறிவிப்பின் பேரலையில் அத்தனை சந்தடியும் இரைச்சலும் கணநேரம் அமிழ்ந்து தலைதூக்க, மெல்லிய திடுக்கிடலுடன் சிலர் தங்கள் பெட்டிகளின் வாசலுக்கு விரைந்து தொற்றிக்கொள்ள, இன்னமும் சிலர் டிக்கெட் பரிசோதகர்களுடன் ஏதோ விவாதித்துக்கொண்டிருக்க, தலைகளும், பின்னல்களும், விரல்களும் வார்த்தைகளின் பின்னணியில் அவசர விடைகூறி வழியனுப்ப, எழும்பூர் ஸ்டேஷன் ஒரு பெரிய தீவுபோல் பின்னால் நகரத் தொடங்க, அவனுக்கு அது தன் வாழ்வில் மிக முக்கியமானதொரு பயணம் என்ற உணர்வு தலைதூக்க, கண்களை வெளியே ஓடவிட்டபோது கூட்டத்தைக் கலைத்துக் கொண்டு பாஸ்கர் முன்வந்து கூடவே நடந்து அவன் கைகளைப் பிடித்துக் குலுக்கிவிட்டுக் கூறினான்:

"All the best RAjA! Have a nice time."

வண்டியின் சூழ்நிலை பரிச்சயமாகி, ஆரம்ப சம்பிரதாயங்களை முடித்துக்கொண்டு அவன் ஒருவித லயிப்புடன் சாய்ந்தபோது, மனம் விழித்துக்கொண்டு ’வைகை’க்குப் போட்டியாகத் தன் பயணத்தைத் துவக்கியது.

ந்த ரெயில் பிரயாணத்தில் இருக்கும் சுகமும் மகிழ்ச்சியும் அலாதி. ஒரே நேரத்தில் இயற்கையையும் மனிதர்களையும் பார்க்கும், நேசிக்கும் வாய்ப்பு வேறு எந்தவகைப் பயணத்திலும் கிடைக்காது என்று தோன்றியது.

பஸ் பிரயாணத்தின் அசதியும் குலுக்கலும் இரைச்சலும் இல்லாமல் அமைதியாக வசதியாக மெல்லத் தாலாட்டியபடி முன்னேறும் ரயிலின் இந்த சூழ்நிலை அவனுக்கு எப்போதும் மிகவும் பிடித்தவொன்று.

இந்தச் சிலமணிநேரப் பயணத்தின்போது அறிமுகமாகும் மனிதர்கள்தான் எத்தனை! அதிலும் சிலர் பார்த்த உடனே பிடித்துப்போய் வெகுநாள் பழகியவர்களாக எவ்வளவு அன்னியோன்னியமாகி விடுகிறார்கள்! என்ன இருந்தாலும் முன்பின் அறிந்திராத ஒரு அன்னியன் என்ற நினைவு இல்லாமல் தன் குடும்பம் முழுவதையும் அறிமுகம் செய்துவைத்து, உணவு உடைமைகளைப் பகிர்ந்தளித்து, அவனை மகிழ்சியிலும் நன்றியிலும் திளைக்கவைத்து---

ல்லாவற்றையும்விட ரயிலில் அறிமுகமாகும் குழந்தைகள்தான் எத்தனை இனிய நினைவுகள்!

"அம்மா, அந்த மாமாவுக்கும் ஒரு எக்ளேர்ஸ் குடும்மா!", என வாஞ்சையுடன் வினவிய குழந்தை---

இப்படித்தான் ஒருமுறை அவன் திடீர் பரிச்சயத்தில் தோழியாகிவிட்ட ஓர் அழகிய குழந்தைக்கு ஒரு பிஸ்கெட் பாக்கெட் வாங்க நினைத்து வழியில் ஒரு சின்ன ஸ்டேஷனில் இறங்கி ஸ்டால் ஸ்டாலாக அலைந்து இறுதியில் வெற்றியுடன் ஒரு மில்க் பிக்கி பாக்கெட்டைக் கைப்பற்றி பாக்கி சில்லறையைக்கூட வாங்கமுடியாமல் வண்டி கிளம்பிவிட, கடைசிப் பெட்டிகளில் ஒன்றில் ஏறி வெஸ்டிப்யூல் வழியே தன் பெட்டியை அடைந்தபோது, கவலையின் சாயல் படரத் தொடங்கிவிட்ட முகங்களை சந்தித்தது நினைவுக்கு வந்தது: "எங்கம்மா அந்த அண்ணாவைக் காணோம்?"​

அப்பாவின் மடியில் அமர்ந்தபடியே அகல விரியும் கண்களுடன் அவனையும் சுற்றுப்புறத்தையும் பார்த்த குழந்தை---

மெல்ல அருகில் வந்து அவனை, அவன் உடைமைகளை தொட்டுப் பார்த்த குழந்தை---

பத்திரிகைகளைக் கையில் எடுத்துக்கொண்டு எனக்கு-ஒரு-கதை-சொல்லுவியா பாணியில் பார்த்துவிட்டு அவன் அரவணைப்பில் கதை கேட்ட குழந்தை---

"ஒ தேகோ, கித்னா சுந்தர் ஹ ஓ சிடியா!" என்று அவனுடன் மழலை ஹிந்தியில் பேசிய குழந்தை---
["அங்கே பார், எவ்வளவு அழகு அந்தப் பறவை!"]

"பப்பா! ஹம் உப்பர் ஸோயேங்கே?" என்று தம் வினவியபடி கிடிகிடுவென மேல் பெர்த்தில் ஏறிவிட்ட குழந்தைகள்---
["அப்பா! நாங்க மேலே தூங்குவோமா?"]

பின் அங்கிருந்தபடியே மாடப் புறாக்களாக எட்டிப்பார்த்து மழலைக் கூவல்களை மிதக்கவிட்டு கார்ட்ஸ் விளையாடும், சாப்பிடும், மீண்டும் கீழிறங்கி ஓடும், "மத்ராஸ் கப் ஆயேகா, பப்பா!" ["மதராஸ் எப்போ வரும், அப்பா!"] என்று வாசல் வழியே எட்டிப் பார்க்கும் குழந்தைகள்---

ஒருவர் சட்டையை ஒருவர் பிடித்தபடியே, ’ரேலு காடி ரேலு காடி’ என்று பாடிக்கொண்டு, ரயிக்குள் ரயில் விளையாடி வெஸ்டிப்யூலில் அங்கும் இங்கும் அலைந்து டிக்கெட் வழங்கிய குழந்தைகள்---
 
ப்புறம் ரயிலில் அறிமுகமாகும் பெண்கள்தான் எத்தனை பேர், எத்தனை வகையினர்!

மௌனச் சாமியார்போல் அமர்ந்திருக்கும் தம் கணவன்மார்களிடம் அவர்கள் தலையாட்டுவது அனுமதியா மறுப்பா என்ற கவலையில்லாமல் பேசிக்கொண்டே...யிருக்கும் மனைவியர்கள்---

எதிரில் இருப்பவர்களைப் பார்த்துக்கொண்டே ரகசியக் குரலில் பெற்றோரிடம் (அல்லது தன் சகோதர சகோதரியிடம்) கிசுகிசுக்கும்--மற்றவர்களிடம் பேச வெட்கப்படும்--உயர்நிலைப் பள்ளிப் பெண்கள்---

நுனி நாக்கில் ’அமெரிக்கன் ஸ்லாங்’ தவழவிட்டபடி அலட்சியம் தெரியும் கண்களுடன் கையில் ஹெரால்ட் ராபின்ஸ் அல்லது டிரான்சிஸ்டருடன் பெரிதாகச் சிரிக்கும் ஜீன்ஸ், பெல்பாட்டம், மாக்ஸி, மினிகள்---

எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக உட்கார்ந்து சிந்தனையில் ஆழ்ந்து பார்பரா கார்ட்லாண்ட் அல்லது டென்னிஸ் ராபின்ஸ் படிக்கும் எழில்-முக-இளம்-பெண்கள்---

இன்னும் சுடிதார் அல்லது புடவையில் நம் தென்னிந்திய மக்களைவிடக் கொஞ்சம் வெளுப்பான நிறத்தில், வார்த்தைகளில் தைரியமும் தன்னம்பிக்கையும் தொக்கி நிற்க வினோத மொழிகளில் தம் ஆடவ, மகளிர் சுற்ற நட்புகளுடன் உரையாடும் எழுவகைப் பெண்கள்: பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, மற்றும் பேரிளம்பெண்கள்.

இன்னும் எப்போதாவது பால்போன்று வெளுத்த நிறத்தில், ஆடவர்போல ஆடை அணிந்து, கையில் மினரல் வாட்டர் பாட்டிலுடன், யாரென்று புரியாத சக ஆணிடம் ரகசியக் குரலில் உரையாடும் வெளிநாட்டுப் பெண்கள்.

ப்போதும் அவன் தன்னைச் சுற்றி உட்கார்ந்து இருப்பவர்கள் மேல் மெல்லக் கண்களை ஓட்டினான்.

எதிரில் மழமழவென்று முகம் மழித்துக்கொண்டு முகத்தின் தசைநார்கள் தெரிய, ஒரு உலகியல் அறிவுஜீவியின் தோரணையுடன், ஹிண்டுவில் ஆழ்ந்திருக்கும் காதோரம் தலை நரைத்த கம்பெனி எக்ஸிக்யூட்டிவ் அல்லது கல்லூரிப் பேராசிரியர்---

அருகில் கூஜா, கூடையில் பழம் பிஸ்கெட் தெர்மாஸ்ஃப்ளாஸ்க் சகிதம் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பம்: கணவன், மனைவி, சீருடையில் ஏழெட்டு வயதுப் பையன் மற்றும் கைக்குழந்தை. வாய்பேசாது உழைக்கும் உயிர்கள்---

அவனையடுத்து எதைப் பற்றியும் கவலைப்படாமல் தூக்கத்தில் மூழ்கியிருக்கும் நீள்முடி இளைஞன்---

ல்லவேளை அவனுக்கு ஜன்னலோர இருக்கை. இப்போதும் அவன் குழந்தைத் தனமாக ’விண்டோ ஸீட் ப்ளீஸ்’ என்று பயணச் சீட்டுப் பதிவுப் படிவத்தில் எழுதுவதுண்டு. அதை ஓரக் கண்ணால் பார்த்துப் புன்னகையுடன் அவன் விருப்பத்தைப் பூர்த்திசெய்யும் பெண் எழுத்தர். இதனாலேயே அவள்மேல் அவனுக்கு ஒரு பாசம்.

இந்த ஜன்னல் ஓர இருக்கைதான் எவ்வளவு வசதி! கம்பியில் கைவைத்தபடி ஜன்னல் விளிம்பின் வழியே எட்டிப் பார்ப்பதில் எத்தனை மகிழ்ச்சி!

தரையில் ஒரே சீராக வேகமாக ஓடும் தண்டவாளத்தை அடுத்த பொன்னிற ஒற்றையடிப் பாதை. அதற்குமேல் சீரான மரகதப் பட்டை. மங்கிய பச்சைக் கற்றாழைக் கோடுகள்.

பின்னால் கம்பீரமாக நகரும் பனை மரங்கள். சதுரங்கக் கட்டங்கள் போல் விரியும் பசுமை வயல்கள், புல்வெளிகள். ஆச்சரியத்துடன் தலையை உயர்த்திப் பார்க்கும் ஆடுமாடுகள். அங்கங்கே பளிச்சென்று மனிதர்கள்.

ஒன்றை ஒன்று துரத்திக்கொண்டு ஓடும் தந்திக் கம்பங்கள். அவற்றை இணைக்கும் அலைஅலையான இசைக் கோடுகளில் வால்குருவி, காக்கை மற்றும் பிற பறவைகளின் சங்கீதக் குறியீடுகள். இந்த இசைக் குறிகளுக்கு ஒலி வடிவம் கொடுக்கும் ரயில் சக்கரங்களின் தாளக் கச்சேரி.

தூரத்தே அடிவானத்தை ஒட்டியபடி ரயிலின் திசையில் நகரும் பசுமைத் தீவுகள். எல்லாவற்றையும் உள்ளடக்கிப் பரந்து விரியும் வானமாகிய பெருந்திரை. அதில் அவ்வப்போது காற்றுத் தூரிகையால் கதிரவன் தீட்டும் மேகவண்ண ஓவியங்கள்.

"டாடி, இந்த வைகை எக்ஸ்ப்ரஸ் எப்போ டாடி திருச்சிக்குப் போகும்?"

மழலைக் குரல் ஒன்று அவன் சிந்தனையைக் கலைக்க, தலையைத் திருப்பிப் பார்த்தவன் கண்களில் பளிச்சிட்டு மறைந்தது ஒரு அழகிய சிறுவன் முகம்.

அந்த முகத்தை, ஆர்வம் தோய்ந்த அந்தக் கருநீல குண்டு விழிகளை அவன் எங்கேயோ---

சிறிதுநேர நினைவுகூரலுக்குப் பின் மனத் திரையில் தெளிவாகத் தோன்றியது Close Encounters of the Third Kind படத்தில் ’காஸ்மிக்’ கடத்தலுக்கு ஆளாகும் அந்த ஏழு வயதுப் பையன் ’பெயர்ரி’யின் முகம்.

என்ன ஒற்றுமை! அடுத்த பெட்டியில் இருக்கும் அந்தப் பையனைப் பார்த்துப் பேசவேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.
 
திடீரென்று மனம் விலகிச் சென்று வைகை விரைவு-வண்டியின் சிறப்புகளில் அலைபாய்ந்தது. சென்னையில் இருந்து அவன் எப்போது மதுரைக்குச் செல்வதானாலும் பயன்படுத்துவது, பகல் பயணத்துக்கு வைகை எக்ஸ்ப்ரஸ். இரவுக்கு பாண்டியன் எக்ஸ்ப்ரஸ்.

அதிகம் சோர்வு தோன்றாத வண்ணம் இவர்களால் எப்படி இவ்வளவு விரைவில் மதுரை போய்ச்சேர முடிகிறது? நினைக்கவே பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. இந்த ’பாப் மியூசிக்’ இரைச்சல் மட்டும் இல்லாவிட்டால் இது ஓர் அழகிய மானோ ரயில்தான்.

கூடவே, வைகை எக்ஸ்ப்ரஸ் அறிமுகப் படுத்தப்பட்ட புதிதில் எதிர்பார்த்ததற்கு மிக முன்பாகவே வீடு சேர்ந்து அவன் அம்மாவைக் கன்னத்தில் கைவைக்கச் செய்தது நினைவுக்கு வந்தது.

"ராஜாவா! மெட்ராஸ்லேர்ந்து எப்படி இவ்ளோ சீக்கிரம் வந்துட்டே? கார்த்தாலதான் வருவேன்னு பார்த்தேன். என்ன, ப்ளேன்லயா வந்தே?"

அவன் அப்பா எப்போதும் ’வெல் இன்ஃபார்ம்ட்’. இதுபோன்ற விஷயங்கள் ஒன்று அவர் எதிர்பார்த்ததாக இருக்கும். அல்லது அவ்வளவு வியப்புத் தருவதாக இருக்காது. அப்படியே இருந்தாலும் அவர் அதை அதிகம் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்.

ப்பா என்றதும் அவருடைய சிந்தனை தோய்ந்த ஒளிவீசும் கண்களும், தெளிவாகத் திருநீறு அணிந்த அகலமான நெற்றியும், செந்நிறக் கடுக்கன்கள் அணிந்த செவிகளும், தீர்க்கமான நாசியும் (குறைந்தது அரைமணி நேரப் ப்ராணாயாமம் அவரது தினசரி யோகப் பயிற்சி), எப்போதும் புன்சிரிக்கும் வசீகர முகமும் (புன்சிரிப்பு உதட்டிலா, கண்களிலா அல்லது மெல்லச் சிவந்து விரியும் நாசியிலா என்று சொல்வது கடினம்), நேர்த்தியாக வாரி முடியப்பட்ட கட்டுக் குடுமியும் நினைவுக்கு வந்தன.

இன்னைக்கெல்லாம் பார்த்தாக்கூட அவரை அறுபது வயதைக் கடந்த ஒரு ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் என்று யாரும் சொல்லிவிட முடியாது.

வீட்டில் இவ்வளவு கனிவாக இருந்தாலும் பள்ளியில் அவர் கணிதத்தைப் போதிக்கத் தொடங்கினால் போதும், குண்டூசி விழும் ஓசை கேட்கும் மௌனம் நிலவும்.

கணீரென்ற குரலில் அவர், "A plus B whole square is equal to, A square plus two AB plus B square..." என்று அல்ஜீப்ராவையோ,

"ஒரு செங்கோண முக்கோணத்தில் செங்கோணத்தை உள்ளடக்கிய பக்கங்களின் கூடுதல் அதன் கர்ணத்தை விடப் பெரியது. ஆயினும் அந்தப் பக்க அளவுகளின் வர்க்கங்களின் கூடுதல் அதன் கர்ணத்தின் வர்க்கத்திற்குச் சமாமகும்" என்று ஜியோமிதித் தேற்றங்களையோ அலசும்போது வகுப்பு முழுவதும் சிலையெனச் சமைந்திருக்கும்.

கரும்பலகையில் எழுதிவிட்டு வகுப்பை வலம் வரும்போது, சரியாகப் பாடத்தைப் புரிந்துகொள்ளாத முகங்களை அவர் எளிதில் இனம் கண்டுகொள்வார். பின் அவர்களில் ஒரு மாணவனை எழுந்திருக்கச் சொல்லிக் கரும்பலகையில் எழுதச் செய்து மீண்டும் மீண்டும் தெளிவுறுத்தி எல்லோருக்கும் புரியும் வரை விடமாட்டார். கணிதத்தைப் பொறுத்தவரை அவர் வகுப்பில் ஒவ்வொரு வருடமும் நூறு சதவிகிதம் ’பாஸ்’. இத்தனைக்கும் அவர் தன் முப்பத்தைந்து வருட சர்வீஸில் எந்த ஒரு மாணவனையும் கைநீட்டி அடித்ததில்லை. ’இம்பொசிஷன்’ கொடுத்ததில்லை. எப்போதாவது கோபத்தில் ஓரிரு சொற்கள் அவர் வாயிலிருந்து நழுவி விடுவதுண்டு. உடனே சிரித்துவிடுவார்.

அப்பாவிடம் அவனுக்கு ஒரே ஒரு குறை.

ஊரில் எல்லோருக்கும் அவர் ஓர் ஆசிரியராக, வழிகாட்டியாக, வணக்கத்திற்குரிய பெரிய மனிதராக இருந்தாரே தவிர ஒருவரும் அவரைத் தன் உற்ற நண்பராகக் கருதியதில்லை. சக ஆசிரியர்கள் கூட அவரைத் தம்மினும் உயர்ந்த பெரியவர் என்று நினைத்துப் பழகினார்களே தவிர, நண்பர் என்ற முறையில் அல்ல.

இதற்குக் காரணம் அப்பாவின் வயதா, அறிவா, தோற்றமா என்பது விளங்கவில்லை. ஆனால் இதற்கு அப்பாவைக் குறைசொல்வதைவிட அவரைச் சுற்றி இருந்தவர்களைக் குறைசொல்வது பொருத்தமாகப் பட்டது. அவர்கள் உருவாக்கியுள்ள ’இமேஜுக்கு’ அப்பா என்ன செய்வார்?

வனும் அப்படியொரு ’இமேஜை’ மனசில் வைத்தே அப்பாவிடம் பழகியிருக்கிறான். ஒருகால் அந்த முப்பத்தந்து வருட வயது-இடைவெளி காரணமோ? அவன் தன் இருபத்து-நான்காம் வயதில், இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு கல்லூரியில் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராகப் பொறுப்பேற்ற போது அப்பா ரிடயராகி விட்டார்.

அல்லது அப்பாவுக்கு மணமாகி நீண்டநாள் குழந்தைப் பேறில்லாமல் பதினைந்து வருடங்கள் கழித்து அவன் பிறந்ததாலும், சிறுவயதில் அவனைச் சுற்றி இருந்த உறவினர்கள் அவரைப் பெரியப்பா என்றும் தாத்தா என்றும் அழைத்தபோது அவன் மட்டும் அப்பா என்று அழைத்தது வியப்பாக இருந்ததாலும், இத்தகைய ஒரு ’சைகலாஜிகல்’ பின்னணியில் அவனுடைய அப்பா ஒரு அப்பாவை விட வயதானவராகத் தோன்றிட அவருக்கு ஒரு தாத்தாவின் அந்தஸ்தையே கொடுத்து வழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறான்.

உண்மையில் சிறுவயதில் அவன் தன் அப்பாவை தாத்தா என்றே கூப்பிட்ட நிகழ்ச்சிகள் உண்டு!

இத்தகைய பின்னணியில் அவன் தன் ஆசை அபிலாஷைகளை, எண்ணங்களை, கருத்துகளை, மற்றபிற உணர்வுகளைத் தன் அப்பாவுடனோ--அல்லது அம்மாவுடனோ--பகிர்ந்துகொள்ளச் சந்தர்ப்பம் கிடைத்ததில்லை. அல்லது உருவாக்கிக் கொண்டதில்லை.

’நோநோ! அப்பாவுக்கு இதெல்லாம் பிடிக்காது. அம்மாவுக்கு இதெல்லாம் புரியாது. அவா வளர்ந்த சூழ்நிலை வேற, நாம வளர்ற சூழ்நிலை வேற. இதெல்லாம் அவாளுக்கு சரின்னு படாது. அல்லது என்னைத் தப்பாப் புரிஞ்சுக்குவா. ஏன் அனாவசியமா அப்பா அம்மா மனசை நோக அடிக்கணும்?’---

என்ற நினைவில், அவன் தன் ’அடலெசென்ட்’ (பருவ) உணர்வுகளை, அதைத் தொடர்ந்த ஆசைகளை, அனுபவங்களைத் தனக்குள்ளேயே பூட்டிச் சிறைப்படுத்தி விடுவது வழக்கம்.

ஒரு முயற்சியாகக் கூட அவற்றை அவன் அப்பாவிடம் வெளியிட்டது இல்லை. அவர் கருத்துக்களை அறிய முனைந்தது இல்லை.

’இனிமேல் அதற்கு வழியில்லை’ என்று அப்பாவின் சமீபத்திய கடிதம் உணர்த்தியது.

*** *** ***
 
2

ஆங்கோர் கன்னியைப் பத்துப் பிராயத்தில்
ஆழ நெஞ்சிடை யூன்றி வணங்கினன்;
ஈங்கோர் கன்னியைப் பன்னிரண் டாண்டினுள்
எந்தை வந்து மணம்புரி வித்தனன்.
---மஹாகவி பாரதியார், சுயசரிதை 35


ன்புள்ள ராஜா,

வெகு நாட்களாக உன்னிடம் இருந்து கடிதம் வராதது குறித்து வருத்தம். ஏன் எழுதவில்லை? அஃப் கோர்ஸ், கல்லூரியில் முதல் தவணைத் தேரிவுகள் நெருங்குவதால் வேலை அதிகம் இருக்கும். அல்லது உடல் நலமில்லையா?

இங்கு அம்மாவும் நானும் நலம். நம் நெருங்கிய உறவினர்களிடம் இருந்து அவ்வப்போது கடிதம் வருகிறது. கோயம்புத்தூரில் வசந்தியும் குழந்தைகளும் நலம். மற்ற இடங்களிலும் அப்படியே.

அங்கு நீ எப்படி இருக்கிறாய்? கல்லூரி மற்றும் ஜாகை வசதிகள் எப்படி? அதே ரூமில்தான் இன்னமும் இருக்கிறாயா? ஓய்வு நேரங்களில் என்ன செய்கிறாய்? விடுமுறை நாட்களில் அனாவசியமாக வெய்யிலில் அலையாதே. உன் நண்பன் பாஸ்கர் நலம்தானே? ’ப்ரமோஷ’னுக்குப் பின் அவன் ’பாங்க்’ உத்தியோகம் எப்படி இருக்கிறது?

எனக்குத்தான் பொழுதே போகவில்லை. என் தினசரி நியமனுஷ்டானங்களில் ஒன்றும் குறைவில்லாமல் செய்கிறேன். மூன்று வேளையும் தவறாது சந்தியா வந்தனம் செய்கிறேன். காலை மாலை நேரங்களில் ’கனகதாரா, விஷ்ணு சஹஸ்ரநாமம்’ போன்ற ஸ்தோத்திரங்களை நானும் அம்மாவும் தவறாது காஸட் போட்டுக் கேட்கிறோம். இருந்தும் நேரம் நிறைய மீந்துவிடுகிறது. பலர் வற்புறுத்தியும் ட்யூஷன் வைத்துக்கொள்ள விருப்பப்படவில்லை.

நான் புதிதாக ஒரு ’ஹாபி’யை மேற்கொண்டுள்ளேன். என்ன தெரியுமா? ஜேன் ஆஸ்டினின் எம்மாவைப் போல ஜோடி சேர்க்கும் வேலை! என் ஜாதகப் பொருத்தம் பார்க்கும் பணியைத்தான் குறிப்பிடுகிறேன். முன்பெல்லாம் நேரம் கிடைத்தபோது எப்போதேனும் செய்துவந்ததை இப்போது ஆர்வத்துடன் முழுமூச்சாக செய்யத் தொடங்கியிருக்கிறேன். ஜாதகப் பொருத்தம் மட்டுமின்றி மற்றபிற ஆலோசனைகளையும் வழங்க யத்தனிக்கிறேன்.

இந்த இடத்தில் திடீரென்று ஒரு விஷயத்தை, ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட வேண்டியுள்ளது. உனக்கு ஒரு பெண் பார்த்திருக்கிறேன். பெண் நல்ல இடம். பி.ஏ. இங்லிஷ் படித்திருக்கிறாள். வாஸ்தவமாகவே மூக்கும் முழியுமாக இருக்கிறாள். நன்றாகப் பாடுகிறாள். வீணை வாசிக்கத் தெரியும். ஆத்துக் காரியங்களைச் செவ்வனே செய்வதிலும் கெட்டிக்காரி என்று படுகிறது. மொத்தத்தில் அம்மாவின் மனசுப்படி ஒரு ஆதர்ஷ மருமகளாக அமைவாள் என்று தோன்றுகிறது. உனக்கும் வயதாகிவிட்டது, நல்ல வேலையிலும் செட்டிலாகிவிட்டாய். நானும் ஓய்வுபெற்றுவிட்டேன் அல்லவா? உன் சக வயது உறவினர்கள் வசந்தி, முரளி போன்றோர்க்கும் கல்யாணமாகிவிட்டதை நினைவுபடுத்துகிறேன்.

மற்ற லௌகிக விஷயங்களில் உன் கருத்துப் படியே நான் ஒன்றும் பிரஸ்தாபிக்கவில்லை. அம்மாவுக்கு அதில் கொஞ்சம் கோபம்தான். ஆனாலும் பெண் வீட்டார் எல்லா விஷயங்களிலும் குறைவறச் செய்ய சம்மதித்துள்ளனர். விபரங்களை நேரில் கூறுகிறேன்.

எனவே, நீ உடனடியாக வரும் 15-ஆம் தேதி வைகை எக்ஸ்ப்ரஸில் புறப்பட்டு வரத் தோதாக ஏற்பாடுகள் செய்துவிடு. 17-ஆம் தேதி நல்லநாள் என்பதால் அன்றே மதுரையில் பெண்பார்க்க ஏற்பாடு செய்துவிட்டேன். உனக்கும் பதினைந்து முதல் விடுமுறை ஆரம்பம் அல்லவா? கல்யாணத்தை உடனடியாக நடத்தப் பெண்ணின் பெற்றோர் விரும்புவதாள் இந்த அவசரம்.

இதுபோன்ற நல்ல இடம் அமைவது கஷ்டம் என்பதால் இந்த வாய்ப்பை நழுவவிடுவது உசிதமல்ல. பெண்பார்த்தபின் உன் கருத்தை அறிந்து மேலே தொடரலாம்.

பதினைந்தாம் தேதி இரவு உன்னை எதிர்பார்க்கிறேன். அம்மா உனக்குத் தன் ஆசிகளைத் தெரிவிக்கிறாள்.

இப்படிக்கு,
உன் பிரியமுள்ள அப்பா
மஹாதேவ ஐயர்


ப்பாவின் கடிதத்தை இரண்டு வாரம் முன் ஒரு நாள் ’லஞ்ச் அவ’ரில் தன் அறையில் பார்த்தபோது ஏற்பட்ட அதிர்ச்சியின் விளைவுகள் இன்னமும் தொடர்ந்தன.

மனதில் விவரிக்க இயலாத ஒரு சோகம். சூன்யம்.

தான் ஆசையுடன் கட்டிய மணல் வீடுகள் மழையில் கரைந்துவிட்ட நிகழ்காலத்தை நம்ப மறுக்கும் குழந்தையின் பிடிவாதம்.

ஏதேனும் நல்லது நடந்து இருள் விலக விடியலின் முதல் ஒளிக்கீற்று தோன்றாதா என்ற ஏக்கம்.

எப்படியும் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை. அதே நேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது போன்ற அச்சம்.

கொஞ்சம்கூடத் தான் எதிர்பார்த்திராத சாத்தியத்தாலோ அல்லது மூளையின் சாம்பல்நிற செல்களில் ஏதோ ஒன்றன் அனுமானத்தில் எழுந்த எச்சரிக்கையை அசட்டை செய்ததன் விளைவாலோ அடுத்த நாலைந்து ’மூவ்’களின் விஸ்வரூபத்தில் திடீரென்று ’செக்மேட்’ ஆகிவிட்ட சதுரங்க ராஜாவின் நிலையில் தான் இருப்பதாக உணர்ந்தான்.

Checkmated in life!
 
நான் முன்பின் அறிந்திராத, முகம்கூடத் தெரியாத, பி.ஏ. இலக்கியம் பயின்றுள்ள, அப்பாவின் கணிப்பில் வாஸ்தவமாகவே ’மூக்கும் முழியு’மாக இருக்கும் பெண்ணே! யார் நீ? எந்த வகையில் நீ என் ’லைஃப் பார்ட்னர்’ ஆகத் தகுதி உடையவள், அல்லது நான் உன் ’லைஃப் பார்ட்னர்’ ஆகத் தகுதி உடையவன் ஆகிறேன்? அம்மாவின் ஆதர்ஷ மருமகளே! எனக்கு ஆதர்ஷ மனைவி ஆவாயா? என் வழியில் நான் அமைத்துக்கொள்ள விரும்பும் வாழ்க்கையில் குறுக்கிட உனக்கு என்ன உரிமை இருக்கிறது? என் எண்ணங்கள், கனவுகள், ஆசைகள் பற்றி உனக்கு என்ன தெரியும்? நான் இதுவரை அறிந்துள்ள, பழகியுள்ள, நேசித்துள்ள பெண்களைவிட நீ என்ன உசத்தி?

How can I reconcile myself to a total stranger I have not seen, talked to, moved with, or loved?

பெரும் இரைச்சலுடன் பாலம் ஒன்றில் ஓடத் தொடங்கிய வைகை எக்ஸ்ப்ரஸ் சாந்தமடைந்து மீண்டும் சமவெளியில் பிரவேசித்தது.

புதிதாகப் போடப்பட்ட குழாயில் முதலில் வரும் துருவும் அழுக்கும் கலந்த வெதுவெதுப்பான நீரைத் தொடருந்து வரும் தெள்ளிய, குளிர்ந்த நீரைப் போல, வெறுப்பும் கோபமும் கசப்பும் நிறைந்த மனத்தின் முதல் எதிர் இயக்கத்தை அடுத்து எண்ணங்கள் சிறிதுசிறிதாகத் தெளிவடைந்து ஒருமைப்படத் தொடங்கின.

ப்பாவின் கடிதத்தில் அவனுக்கு ஒரு விஷயம் புலப்பட்டது. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பெண்ணைப் பிடித்துவிட்டது, அவனுக்குப் பிடிக்காமல்போக நியாயமில்லை என்பது அவர்கள் அபிப்பிராயம்.

அப்படி ஒன்றும் சாதாரணமான பெண்ணை அவனுக்குப் பார்த்திருக்க மாட்டார்கள் என்று தோன்றியது. யாரந்த இலக்கியம் பயின்ற, அழகான, நன்றாகப் பாடும், வீணை வாசிக்கும் பெண்? எந்த ஊர்?

இவ்வளவு தூரம் அப்பா அம்மாவின் மனதில் நிறைந்துவிட்ட, அவர்களால் ஒருமனதாகப் பாராட்டப்படும் பெண்ணே, யார் நீ?

என்ன இருந்தாலும் இந்த விஷயத்தில் அவனை முன்பே ஒரு வார்த்தை கேட்டிருக்க வேண்டும். ’ராஜா, உனக்குக் கல்யாணம் பண்ணிவைக்க விரும்புகிறோம். நீ யாரையாவது மனதில் நினைத்திருக்கிறாயா? அல்லது நாங்கள் முயற்சி செய்யட்டுமா?’ என்று அன்பாக, ஆதரவாக, வெளிப்படியாக அவனை ஒரு வார்த்தை---ஒரே ஒரு வார்த்தை---கேட்டிருக்க வேண்டாம்?

’நாங்கள் பார்க்கும் பெண் உனக்குப் பிடித்திருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. உனக்கு உதவுவதற்காகவே நாங்கள் முயற்சி செய்கிறோம். எப்படி இருந்தாலும் கல்யாணம் பண்ணிக்கொள்ளப் போவது நீதானே? எங்களைப் பொறுத்தவரையில் எல்லோரையும் அனுசரித்துக்கொண்டு, குடும்பத்தை நல்லபடியாக நடத்திக்கொண்டு போகக் கூடிய நம்ம ஜாதிப் பெண் யாராக இருந்தாலும் சம்மதமே. உனக்கு இந்த வகையில் அனுபவம் போதாது என்பதால் நாங்கள் முயற்சிசெய்ய நேரிடுகிறது’, என்றாவது ஆலோசனை கூறியிருக்கலாம்.

ஏன் அப்பாவும் அம்மாவும் இப்படியெல்லாம் செய்யவில்லை? கல்யாணம் பண்ணிக்கொள்ளப் போவது அவனல்லவா? வீட்டுக்கேற்ற மருமகள் என்ற சுயநல எண்ணம் காரணமாகத்தானோ அவர்கள் பார்த்திருக்கும் முதல் பெண்ணையே வற்புறுத்தித் தலையில் கட்ட முனைகின்றனர்?

இப்படியெல்லாம் நினைக்கும் நிலைக்கு அவனை ஆளாக்கிய அப்பா அம்மாவின் நோக்கம்தான் என்ன?

கூடவே வசந்தியைப் பெண் பார்த்த நிகழ்ச்சியின்போது அவன் அப்பா அம்மா நடந்துகொண்ட விதம் நினைவில் நிழலாடியது.

"அத்திம்பேர் நீங்க என்ன சொல்றேள்? பையன் எஞ்சினியரிங் டிகிரி. நல்ல வேலை. கை நிறைய சம்பளம். பாக்கறதுக்கும் லக்ஷணமா இருக்கான். அவா அப்பா அம்மாகூட ரொம்ப நல்ல மாதிரியாத் தோண்றது. அவாளுக்கு வசந்திகிட்ட இப்பவே எவ்வளவு ஒட்டுதல் பார்த்தேளா? இந்த இடம் மட்டும் குதிர்ந்ததுன்னா நாங்க ரொம்ப பாக்யசாலிகள்."

சித்தியின் ஆதங்கத்துக்கு அப்பாவிடமிருந்து வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பதில் வந்தது.

"ஏம்மா காமு, நா ஒண்ணு கேக்கறேன், தப்பா நெனச்சுக்க மாட்டியே? நீங்கள்ளாம் இவ்வளவு தூரம் குதிக்கறேளே, யாரவது பொண்ணை ஒரு வார்த்தை கேட்டேளா? கல்யாணம் பண்ணிக்கப்போறது அவதானேம்மா? காலத்துக்குத் தகுந்தமாதிரி நாம்பளும் நடந்துக்க வேண்டாமா? நீ என்ன சொல்றே மீனாக்ஷி?"

"ஆமா காமு. அத்திம்பேர் சொல்றது வாஸ்தவம்தான். வசந்தி ரொம்ப நாளா எங்ககிட்ட வளர்ந்தவ, அவள் மனசப் பத்தி நேக்கு நன்னாத் தெரியும், பெரியவா சொல்லைத் தட்டமாட்டா. இருந்தாலும் அவளையும் ஒரு வார்த்தை கேட்டுர்றதுதான் சரி."

இதற்குள் பையன் வீட்டாரை வாசல்வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்த அவன் சித்தப்பாவின் குரல் ஒலிக்க---"என்ன வசந்தி, பையன் எப்படி? முதல்ல உனக்கு பிடிச்சிருக்கா சொல்லு?"---நினைவலைகள் கலைந்தன.

யோசித்துப் பார்த்ததில் அப்பாம்மா பேரில் தப்பில்லை என்று பட்டது. தன் மகனின் திருமணத்திற்கு முதல்படியாக எந்த பெற்றோரும் தொடங்கும் காரியத்தைத்தானே அவனுடைய பெற்றோரும் செய்திருக்கிறார்கள்? திடீரென்று இந்த இடம் எதிர்பாராத விதமாக அமைந்திருக்கலாம். போதிய அவகாசம் இல்லாததால் நேரில் அவனிடம் பேசிக்கொள்ள நினைத்திருக்கலாம். அப்பாதான் விவரங்களை நேரில் சொல்வதாக எழுதியிருக்கிறாரே?

ப்புறம் அந்த ஜேன் ஆஸ்டினின் எம்மா!

அப்பா எப்போது ’எம்மா’ படித்தார்? அவருக்கு இந்த நாவல்கள் எல்லாம் கட்டோடு பிடிக்காது என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தான்? வீட்டில் உள்ள ஆங்கில நாவல்கள் எல்லாம் அவன் மட்டும் படிப்பதுதானே வழக்கம்?

அம்மாவின் கருத்து, புத்தகங்களை விலைகொடுத்து வாங்குவது வீண் செலவு. அவாளுக்குத் தேவையான ’விகடன், கதிர், கல்கி, கலைமகள்’ போன்ற பத்திரிகைகளை அண்டை வீடுகளுடன் பகிர்ந்துகொண்டு படித்துவிடுவார்கள்.

ஓய்வு நேரத்தில் கூட அப்பா ’ஹிண்டு’வும் ’கீதா’வும் தானே படிப்பார்? பத்திரிகைகளைப் பொறுத்தவரை அவர் எப்போதாவது ’டைஜஸ்ட், பவன்ஸ் ஜர்னல்’ அல்லது ’வீக்லி’ படிப்பார். அதுகூடத் தனக்குப் பிடித்த பகுதிகள் மட்டும்தான்.

ரிடயர் ஆனதுமுதல் ஒருவேளை இந்த நாவல்கள் எல்லாம் படிக்க ஆரம்பித்திருக்கிறாரோ? அதுகூட அவன் விடுமுறை நாட்களில் வந்திருந்தபோது வெளிப்படையாகத் தெரியவில்லையே?

முன்பு ஒருமுறை அப்பா தன் கல்லூரி நாட்களில் பி.ஏ. பயின்றபோது படித்ததாகச் சொன்ன புத்தகங்களும் ஆசிரியர்களும் நினைவுக்கு வந்தன.

"இந்தக் காலத்தில இங்க்லிஷை சரியாகவே ’டீச்’ பண்ணறதில்லை. டிகிரி சிலபஸ்லாம்கூட ரொம்பக் குறச்சலாகவும் ஏனோதானோன்னும் இருக்கு. நாங்கள்லாம் பி.ஏ. பண்றச்சே ’மெயின் சப்ஜக்ட்’ கணிதமாக இருந்தாலும் எங்க இங்க்லிஷ் பேப்பருக்கு ஏகப்பட்ட புத்தகங்கள் வெச்சிருந்தா. ஷேக்ஸ்பியர் நாடகங்கள் என்ன, டென்னிஸன், வேர்ட்ஸ்வர்த், பைரன், ஷெல்லி, கீட்ஸ், மில்டன் இவாளோட ’பொயட்ரி’ என்ன, லாம்ப், ஆர்னால்ட், தோரூ இவாளோட கட்டுரைகள்னு ஏகப்பட்ட ஆதர்ஸ். இதைத் தவிர ’நான்-டீடெய்ல்ட் ஸ்டடி’ன்னு ஜேன் ஆஸ்டின், ஸ்காட், டிக்கன்ஸ், ஹார்டி, கால்ஸ்வர்தினு ஒரு பெரிய லிஸ்ட். இதெல்லாம் போக ’ரென் அன்ட் மார்டின் கிராம்மர்’. அந்தக் காலத்தில எங்களுக்கு சாமுவேல் எல்டன்னு ஒரு வெள்ளைக்காரன் க்ளாஸ் எடுத்தான். அவன் க்ளாஸ்ல போர்டு பக்கத்தில நடந்துண்டு ஷேக்ஸ்பியரையோ, மில்டனையோ எடுத்தா நேரம் போறதே தெரியாது. நானெல்லாம் அப்பவே இங்க்லிஷ்ல ஸெகண்ட் க்ளாஸ்ல பாஸ் பண்ணினேன். என்ன படிக்கிறேள் நீங்கள்ளாம் இப்போ?"

உண்மைதான். அப்பாவின் ’இங்க்லிஷ்’ பேச்சும் எழுத்தும் கற்றுத்தேர்ந்த ஒரு வெள்ளைக்காரன் பாணியில் இருக்கும்.

அப்பா பி.ஏ. படித்தது சுமார் நாற்பது வருஷங்களுக்கு முன்னால். இன்னுமா அவர் தான் படித்தவற்றை ஞாபகம் வைத்திருக்கிறார்?

*** *** ***
 
3
நாடகத்தில் காவியத்தில் காதலென்றால்
நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்;
ஊடகத்தில் வீட்டினுள்ளே கிணற்றோரத்தே
ஊரினிலே காதலென்றால் உறுமு கின்றார்.
---மஹாகவி பாரதியார், சுயசரிதை, பாரதி-அறுபத்தாறு 52


அவனால் அப்பாவைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. எத்தனை அப்பாக்கள்!

தும்பைப்பூ போன்ற வேஷ்டி சட்டை ஜரிகை அங்கவஸ்திரம் அணிந்து ஸ்கூலுக்குப் போகும் அப்பா.

வகுப்பில் கண்டிப்பே உருவான அப்பா.

ஊரில் எல்லோராலும் வணக்கத்துக்குரிய பெரிய மனிதராகக் கருதப்படும் அப்பா.

நெருங்கின நண்பர்களே இல்லாத அப்பா.

ஓய்வு நேரங்களில் மற்றவர்களைப் போல திண்ணையில் துண்டை விரித்துப்போட்டு உட்கார்ந்து வெற்றிலையைக் குதப்பிக்கொண்டு சீட்டு மற்றும் அரட்டைக் கச்சேரியிலில் ஈடுபடாமல் கீதை படிக்கும் அப்பா.

தவறாமல் சந்தியா வந்தனம் பண்ணு, தினமும் ஸ்தோத்திரப் பாடல்களை காஸட் போட்டுக் கேட்கும், ஆனால் ஏதேனும் விசேஷ நாட்களில் மட்டுமே கோவிலுக்குப் போகும் அப்பா.

காய்கறி மளிகை சாமான்கள் விறகு கரி வாங்கி வருவது முதல் எல்லா வேலைகளையும் தானே முன்னின்று செயலாற்றி கவனிக்கும் அப்பா.

எப்போதும் கொஞ்சம் ’ரிசர்வ்ட்’ ஆகக் காட்சியளிக்கும் அப்பா.

இப்போது ஜாதகப் பொருத்தம் பார்க்கும், ஜேன் ஆஸ்டின் படிக்கும் அப்பா.

இத்தனை அப்பாக்களில் எது அவனுடைய அப்பா என்று கேட்டால் உடனே பதில் வராது. பொறுமையாக, நிதானமாக யோசிக்க வேண்டிவரும்.

அப்பாவின் இதுபோன்ற எல்லாத் தோற்றங்களிலும் அவனுக்கு உடன்பாடு உண்டு. ஆனால் ஒன்றிலாவது ஈடுபாடு கிடையாது.

மறுபடியும் அந்தத் ’தாத்தா இமேஜ்’தான் தலைதூக்கும். அவனுடைய தாத்தாவாக இருந்தால் இந்த எல்லாத் தோற்றங்களையும் வரவேற்றிருப்பான். ஆனால் அவன் அப்பா இன்னும் கொஞ்சம் நெருக்கமாக, மனம்விட்டுப் பேசுபராக, அவனது எண்ணங்கள், கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள சந்தர்ப்பம் அளிப்பவராக, மற்ற பையன்களைப் போல் சமயத்தில் எதிர்வாதம் செய்யவோ எதிர்த்துப் பேசவோ முடிவதற்கு அனுகூலமாக இருப்பவராக அமைந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

இப்போதும் சரி, அவனால் அப்பாவிடம் எதிர்வாதம் செய்யவோ, அப்பாவின் சொல்லை, கருத்தை மீறவோ முடியாது என்று தோன்றியது. இதுவரை மீறியதில்லை என்பதைவிட மீறுவதற்கு அவர் இடம் கொடுத்ததில்லை என்பதே உண்மை.

எல்லா விஷயங்களிலும் ஒன்று இணக்கமாக அல்லது ஒதுக்கமாக இருக்கும் அப்பாவை மீறும் துணிச்சல் அவனுக்கு எப்படி வரும்?

அப்படியே மீறினாலும் அப்பாவின் மனநிலை பற்றி அவனுக்கு என்றுமே தெரியப் போவதில்லை. அவர் தன் விருப்பு வெறுப்புகளை வெளிப்படையாக உணர்த்தியதில்லை. அவருக்குப் பிடிக்காத விஷயங்கள், நிகழ்ச்சிகளில் இருந்து அவர் விலகி இருப்பது மட்டுமில்லாமல் தன் கொள்கையிலும் உறுதியாக நிற்பார் என்பது மட்டும் நிச்சயம்.

மற்றவர்களைப் போல் அவர் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ண மாட்டார். வார்த்தைகளைக் கொட்டி வெறுப்பையும் கோபத்தையும் வெளியிட மாட்டார்.

"ராஜா, உனக்கு என்னைப் பத்தி நல்லாத் தெரியும். எனக்கு இந்த ’அலையன்ஸ்’ல விருப்பமில்லை. உனக்கு கௌசல்யா ரொம்பப் பொருத்தமானவளா இருக்கலாம். எம்.ஏ. இங்க்லிஷ் படிச்சிருக்கா, உன்னை மாதிரியே காலேஜ் லெக்சரரா இருக்கா, கைநிறைய சம்பாதிக்கறா, இல்லேங்கல. அழகாவும் இருக்கா, முறைப் பெண்ணும் கூட. உன்னைவிட ஒரு வயசுதான் சின்னவள்னாலும் பரவாயில்லை. ஆனால்... அவ அப்பாவோட போக்கு எனக்குப் பிடிக்கலை. அம்மாவோட தம்பிங்கற த்வேஷத்ல இதை நான் சொல்லலை. அம்மாவுக்கே தெரியும் அவனைப் பத்தி. என்னைவிட பத்துப் பன்னிரண்டு வயசு சின்னவன் அவன். பெரிய பணக்காரனா இருந்தா மத்தவாளை மதிக்கக் கூடாதுன்னில்லையே?"

"கல்யாணங்கறது அதைப் பண்ணிக்கறவாளோட சந்தோஷம் மட்டுமில்லை. அதில நேரடியா சம்பந்தப்பட்ட எல்லோரோட சந்தோஷமும் முக்கியம். அப்பதான் வாழ்க்கை நெறக்கும். அதேமாதிரி, மனுஷாளுக்கு மரியாதை முக்கியம். இன்னிக்கு எனக்குக் கிடைக்காத மரியாதை நாளைக்கு உனக்கு அவாத்தில கிடைக்கும்னு எனக்குத் தோணலே. கௌசல்யாவை நீ கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லை. ஆனால், அதுக்கப்புறம் ஒண்ணு நீ எங்களை மறந்துடணும் அல்லது அவள் தன் பெற்றோரை மறந்துடணும். இதுக்கு சம்மதம்னா மேலே போங்கோ."

அப்பாவோட அசைக்கமுடியாத கொள்கைக்கும் கருத்துக்கும் இதைவிட ’கான்க்ரீட் எக்ஸாம்பிள்’ வேறு என்ன வேணும்?

அம்மாவுக்கு அவனிடம் ஒரே பிள்ளை என்ற பாசமும் அதீதமான அன்பும் இருந்தாலும் அப்பாவை எதிர்த்து ஒரு வார்த்தை சொல்லவோ அல்லது அப்பாவுக்கு ஆலோசனை கூறவோ அம்மாவால் முடியாது. அப்பாவே அடிக்கடி அம்மாவை ’ரெஃபர்’ பண்ணினாலும் அம்மாவுக்கு அப்பாவின் பேச்சை ’என்டார்ஸ்’ பண்ணித்தான் பழக்கம்.

மேலும் இயற்கையாகவே அம்மா ரொம்ப ’கன்சர்வேடிவ்’. தோற்றத்திலும் கூட. மடிசார் புடவை கட்டிய அளவாகப் பருத்த சரீரம். நல்ல நிறம். மஞ்சள் உரமேறிய முகம். நெற்றியில் சிவப்பு நிலாக் குங்குமம், தலைவகிட்டில் அதன் எதிரொளி. முன்னால் கொஞ்சம் நரைத்த, அடர்ந்த அலைக் கூந்தல். மூக்கிலும் காதுகளிலும் வானவில், உதடுகளில் பவழம். எப்போதும் மலர்ந்திருக்கும் சோகமே அறிந்திராத முகம். மெட்டி ஒலிக்கும் மிருதுவான நடை. கலகவென்று அண்டை அயலாரிடம் பழகும் சுபாவம்.

கல்யாணம் என்றாலே அம்மாவின் கணிப்பில் முதலிடம் பெறுபவை இவ்வளவு தொகை வரதட்சிணை, இத்தனை சவரன் நகைகள், வைரமூக்குத்தி-தோடு, இவ்வளவு ரூபாய்க்கு வெள்ளி மற்ற பாத்திரங்கள், இத்யாதி இத்யாதி. இதைத் தவிர, வருகின்ற பெண் லக்ஷணமாக, சங்கீதம் கேட்கும் ஞானம் உடையவளாக, தெய்வபக்தி நிறைந்தவளாக, வீட்டுக் காரியம் எல்லாம் சவரணையாகச் செய்யத் தெரிந்தவளாக, மொத்தத்தில் அம்மாவைப் போலவே ஒரு மாமியார் மெச்சும் மருமகளாக இருக்க வேண்டும்.

அப்பாவின் கடிததில் உள்ள ’ஆதர்ஷ மருமகள்’ போல.

கைகள் மறுபடியும் அந்தக் கடிதத்தைப் பிரித்தன.

"இந்த இடத்தில் திடீரென்று ஒரு விஷயத்தை..."

கண்கள் மீண்டும் மீண்டும் அந்த வரிகளில் ஓடியபோது மனம் கனத்து ஆழமான பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது.

திடுக்கிட்டவனாகச் சுற்றிலும் பார்வையை ஓட்டினான். யாரவது கவனித்திருப்பார்களோ?

’பேப்பர்’ படிக்கும் பேராசிரியரின் வாய் மெல்லத் திறந்து மூடிக் கொண்டிருந்தது, ஒரு மீனின் வாயைப் போல. இமைகள் மட்டுமே தெரியும் தாழ்ந்த கண்கள் ’ஹிண்டு’வில் நிலைத்திருந்தன. மற்றபடி வேறு சலனமில்லை.

அவர் பக்கத்தில் நடுத்தர வர்க்கக் குடும்பம் சுவாரஸ்யமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தது, மடியில் தூங்கும் குழந்தையை நோக்கியபடி.

பையன் ’காமிக்ஸில்’ மூழ்கியிருந்தான். அருகில் அந்த இளம் சந்நியாசி--அல்லது ஹிப்பி--நிஷ்டையில் மூழ்கியிருந்தான்.

திருப்தியுடன் தன் ஜோல்னாப் பையிலிருந்து சிவப்பு லெதரில் அழகாக ’பைன்ட்’ செய்யப்பட்ட தன் ’டைரி’யை எடுத்துப் பிரித்தான்.
 
Last edited:
வனது டைரி காதலில் தொடங்கியது!

Love is a blend of affection, reverence, and passion.
--Rajaraman


பல நாட்கள் சிந்தனை செய்து, வார்த்தைகளைத் தேடிப் பிடித்து, புடம்போட்டு உருவாக்கி, இது காதலின் அறுதி விளக்கமாக இருக்கலாம் என்று நினைத்துப் போற்றிவந்த வரிகளை இப்போது படிக்கும்போது, அதுவும் அந்த blend மனதின் சலங்கைகளை வருடும்போது, கேலிதான் தலைதூக்கியது.

The made for each other blend
That set the filter trend.


ஏன் அந்த ’லேடிலவ்’ புகை பிடிப்பதில்லை என்று நினைத்துக்கொண்டான்.

மனதில் ஆறிப்போய்விட்ட வரிகளின் சாம்பலைக் கிளறும்போது தீப்பொறிகள் பறந்தன.

காதலை அவன் விரும்பும் வகையில் அழகாக, எளிமையாக, ஆழமாகப் படம் பிடித்துக்காட்டிய ஆசிரியர்கள் யார்யார் என்று நினைத்துப் பார்க்க,

ஜேன் ஆஸ்டின்தான் முதலில் நினைவுக்கு வந்தார். அவரது பாத்திரங்கள் எலிசபெத்-டார்ஸி, எம்மா-நைட்லி, ஹென்றி-காதரின் இவர்களில் யார் உண்மையான காதலர்கள்? கொஞ்சம் யோசனைக்குப் பின் மனம் எம்மா-நைட்லி ஜோடிக்கு வாக்களித்தது.

மற்ற ஆசிரியர்களை நினைக்கும்போது---

எமிலி ப்ரான்டியும் (ஹீத்க்ளிஃபின் காதல் ஆழமானது, மூர்க்கத்தனமானது),

தாமஸ் ஹார்டியும் (நண்பனுக்காகத் தன் காதலைத் துறந்த அந்த ’ட்ரம்பெட் மேஜர்’ஐ அவனுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை),

ஆர்தர் ஹெய்லியும் (நடைமுறை அமெரிக்கக் காதலர்கள்),

ஸிட்னி ஷெல்டனும் (’தி அதர் ஸைட் ஒ மிட்னைட்’இல் வரும் காதலர்கள் காதலில் தோல்வி அடைந்து தடம் மாறியவர்கள்),

இந்துமதியும் (’தரையில் இறங்கும் விமானங்கள்’ நாவலில் அந்த அண்ணியும் தம்பியும் காதலர்களாக இருந்திருக்கக் கூடாதா என்று தோன்றியது. அப்புறம் அந்த மாயா-ப்ரஸன்னா-நந்தகோபால் முக்கோணத்தில் மாயாவும் டாக்டரும் ஒன்று சேர்ந்தது ஒரு ஆறுதல்), மனதில் வந்து போயினர்.

இந்த ஆசிரியர்கள் படைப்பில் உண்டான காதலர்களிடம் ஏதோ ஒரு குறை இருப்பதாகப் பட்டது. அவர்கள் வாழ்க்கையில், காதலில், சந்தர்ப்பம் ஒரு பெரிய இடத்தைப் பிடித்துக் கொண்டிருப்பதாகப் பட்டது.

’சந்தர்ப்பங்கள் மனிதனை உருவாக்குவதில்லை. மனிதனே சந்தர்ப்பங்களை உருவாக்குகிறான்’, என்றது மனத்தில் ஒரு மூலை.

இப்போதெல்லாம் ஜேன் ஆஸ்டின் போல் திட்டமிட்டு வளர்ந்து முழுமையுறும் காதலை ஏன் ஆசிரியர்கள் சித்தரிப்பதில்லை?

இந்த நாவல்களைவிட ஜார்ஜ் மெர்டித்தின் ’தி ஆர்டியல் அஃப் ரிச்சர்ட் ஃபெவரல்’ தேவலாம். தூய்மையான, தெய்வீகக் காதலை வேறு யாரும் இவ்வளவு அழகாகப் படம்பிடித்துக் காட்டியதில்லை.

ஷேக்ஸ்பியரைத் தவிர. ஷேக்ஸ்பியரிடம்கூட அவரது புகழ்பெற்ற ரோமியோ-ஜூலியட், ஆன்டனி-கிளியோபாட்ராவை விட, ஃபெர்டினான்ட்-மிராண்டா, ஆலிவர்-ரோஸலின் போன்ர காதலர்கள் அவனுக்குப் பிடித்தமானவர்கள்.

’அன்பும், மதிப்பும் வேட்கையும் இரண்டறக் கலந்திருப்பதே காதல்’ என்ற அவன் கருத்துக்குப் பொருத்தமானவர்கள்.

நாவல்களிலும், ’ஃப்ரெண்ட்ஸ்’, ’சோட்டி ஸி பாத்’, ’சித்சோர்’ போன்ற திரைப்படங்களிலும் சித்தரிக்கப்படும் காதலும், காதல் சூழ்நிலையும் நிஜ வாழ்க்கையில் ஏன் சாத்தியமாவதில்லை? அல்லது எவ்வளவு தூரம் சத்தியமாகிறது?

இளைஞர்களின் முனைப்பாகவும் இளம்பெண்களின் கனவாகவும் விளங்கும் இந்தக் காதலை மேலை நாட்களில் உள்ளது போன்று வாழ்வில் ஒரு அங்கமாக்கி, நெறிப்படுத்தி, வெற்றிகரமான விவாகங்கள் நிகழ இன்றைய சமூகம் என்ன செய்துள்ளது?

இன்றைய மாறுபட்ட சூழ்நிலையில் தம் மக்கள் திருமண முயற்சிகளில் பெற்றோர் தம் பங்கை சரிவர ஆற்றுகிறார்களா?


பாரதியும், திரு.வி.க.வும் கண்ட ’பெண் விடுதலை’க் கனவு இன்று எவ்வளவு தூரம் நனவாகியுள்ளது?

மனம் அடுக்கடுக்காக கேள்விக் கணைகளைத் தொடுக்க, அவனுடைய நண்பர்களில் யாராவது காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் இருக்கிறார்களா என்று நினைத்துப் பார்த்தான்.

ஏன், வசந்த் இருக்கிறானே!

வசந்த் தன் எதிர் வீட்டில் வசிக்கும் ஒரு பெண்ணைக் காதலிப்பதை முன்பே அவனிடம் கூறியிருந்தான். இவன் தன் அறையிலிருந்தும் அவள் தன் வீட்டுத் திண்ணையிலிருந்தும் வெறும் சைகைகளாலும் கண்களாலும் பேசிக்கொண்டே தம் காதலை வளர்த்துக்கொண்ட விதத்தை, ’ராஜா, அவர்ஸ் இஸ் அ ப்ரிமிடிவ் லவ்’ என்று வசந்த் வேடிக்கையாக வருணித்ததைக் கேட்டபோது பெருமையாக இருந்தது. பொறாமையாகக்கூட இருந்தது.

வீட்டில் ஆயிரம் எதிர்ப்பு இருந்தும் வசந்தைப் புரிந்துகொண்டு ஊக்குவிக்க ஒரு அண்ணன் இருந்தான்...

விரல்கள் டைரியின் பக்கங்களை மெல்லத் திருப்ப

My Early Days
I was born on Fifth June as people say,
But I do not at all remember that day!

Well, the earliest thing I remember---


கல்லூரியில் படித்த நாட்கள் முதல் அவன் தன் டைரியை விடாமல் எழுதிவந்திருக்கிறான். மற்றவர்களைப் போல் அச்சிட்ட டைரிகளில் அவனுக்கு நம்பிக்கையில்லை. தினசரி நடந்தவற்றை அப்படியே இயந்திர கதியாகக் குறித்து வைப்பதிலும் விருப்பமில்லை.

முதலில் ’டைரி’ என்ற அந்தப் பதமே ஒரு ’க்ளிஷே’ (cliche)-வாகத் தோன்றியதால் அவன் தன் நாட்குறிப்புகளுக்கு ’ஜர்னல்ஸ்’ என்று பெயர் சூட்டியிருந்தான்.

அவனைப் பொறுத்தவரையில் ’ஜர்னல்ஸ்’ அவன் சுயசரிதம். சுயசரிதம் என்றால் சாதாரணமாக அல்ல. அது அவனுடைய கதை, கமலா தாஸின் ’மை ஸ்டோரி’ போல. அதில் அவன்தான் கதாநாயகன். காலவோட்டத்தின் பிராவகத்தில் அமிழ்ந்து விடாமல் ரத்தமும் சதையும் தனித்தன்மையுடைய மனமும் கொண்டு விஸ்வரூபம் எடுத்து நிற்கும் கதாநாயகன்.

பெரும் இரைச்சலுடன்
பாறைகளின் இடுக்குகளில் பரணி பாடி,
அருவியாகக் கொட்டி,
ஆறாக நெளிந்து,
சமவெளியில் பரந்து,
மனிதர்கள் அனைவர் வாழ்க்கையையும்
இரக்கமில்லாமல் அடித்துக்கொண்டு போய்
முடிவே இல்லாத
கடலில் சங்கமித்துவிடும்
காலம் என்னும் ஜீவ நதியில்

நானூறடி நினைத்து
நாலடி எதிர் நீச்சலிட்டுத்
தன் உண்மையான ஸ்வரூபம்
எனும் சிற்பத்தை,
வரும் தலைமுறை அறிவதற்காக
அறிந்து நினைவிற் கொள்வதற்காக
காலம் தொடாத கரையில்
விட்டுச் செல்லும் நோக்குடன்
நடத்தும் போராட்டம்


அவன் கதையின் ’ப்ளாட்’.

டொரதி வேர்ட்ஸ்வர்த், மெக்காலே, கீட்ஸ், ஆர்.கே.நாராயண் போன்றவர்களின் நாட்குறிப்புகளையும், கடிதங்களையும் அவன் இப்போதும் பலமுறை விரும்பிப் படிப்பதால் அவர்கள் பாணியிலேயே அவன் தன் ’ஜர்னல்ஸ்’ பக்கங்களை எழுதி, நேர்த்தியாகத் தொகுத்து ’எடிட்’ செய்து ஒரு சுவையான நாவல் போலாக்கி, சிவப்பு லெதரில் அழகாக ’பைன்ட்’ செய்துவைத்திருக்கிறான்.

மனம் வெறுமையாகி, விரக்தியாகி, அல்லது தளர்ச்சி அடைந்து, ஒன்றுமே நினைக்கப் பிடிக்காமல், சாப்பிடப் பிடிக்காமல், தூங்கப் பிடிக்காமல், நண்பர்களுடன் வெளியே செல்லப் பிடிக்காமல், புத்தகம் படிக்கப் பிடிக்காமல், இப்போது இருப்பதுபோல் இருக்கும் சமயங்களில் அவனுக்கு உற்ற துணைவன் அவன் ’ஜர்னல்ஸ்’.

அவன்தன் பள்ளிப் பருவத்தைப் பற்றி எழுதியிருந்த முதல் வரிகளில் விழிகள் ஓடியதும், ஏதோ ஒரு ’ஸ்விட்ச் ஆன்’ செய்ததுபோல் வரிகள் ஃபிலிம் சுருள்களாகி மூளையாகிய ப்ரொஜக்டரில் சுழல, வெளியுலகம் மூடப்பட்டு இருளடைந்து அந்த இனிய நாட்கள் வண்ணத் திரைப்படமாக மனத்திரையில் ஓட ஆரம்பிக்க, அவன் அனுவை சந்தித்தான்.

*** *** ***
 
4

சுட்டும் விழிச்சுடர் தான்,--கண்ணம்மா!
சூரிய சந்திரரோ?
---மஹாகவி பாரதியார், கண்ணம்மா என் காதலி 1


ந்த நாள் அவன் வாழ்வில் மறக்க முடியாத நாள். வருடம் மாதம் தேதி சரியாகத் தெரியாவிட்டாலும் அந்த நாளைப் பற்றிய நினைவு எழுந்த உடன் மனம் எல்லாவற்றையும் மறந்து குதூகலிக்கத் தொடங்கிவிடும். இன்னதென்று அடையாளம் கூறமுடியாத மகிழ்ச்சிப் பரவசம் மெல்ல முகிழ்த்து, வண்ண வண்ண பூக்களாய்ப் பரந்து, பலூன்களாக மேலெழும்பி, இன்னும் மேலே... மேலே...

நாள் பார்த்து, சகுனம் பார்த்து, புதிய உடைகள் அணிந்துகொண்டு, புதிய சிலேட்டு புத்தகங்களைப் புதுப் பையில் எடுத்துக்கொண்டு, பையை அழகாகத் தோளில் தோகை விரித்துக்கொண்டு, முகமெல்லாம் பூரித்துப் புன்னகை மிளிர--ஷேக்ஸ்பியரின் ’வைனிங் ஸ்கூல்பாய்’ போல் அல்ல--அப்பா கூடவர, அவனும் வசந்தியும் அன்று முதல்முதலாகப் பள்ளியில் சேர்ந்து மூன்றாம் வகுப்பில் காலடி எடுத்து வைத்தனர்.

மூன்றாம் வகுப்பில் சேர்ந்தபோது அவர்களுக்கு ஏற்கனவே நன்கு தெரிந்திருந்த பாடங்கள்: தமிழ் எழுத்துகள் முழுதும் தப்பில்லாமல் படிக்க, எழுத; அதேபோல் ஆங்கில எழுத்துகள்; சில தமிழ், ஆங்கில ’நர்சரி ரைம்’கள்; ஆத்திசூடி, கொன்றை வேந்தன்; அதுபோக ஒன்று முதல் நூறு வரை எழுதவும், ஆயிரம் வரை சொல்லவும். அவ்வளவும் அப்பாவின் உழைப்பு.

ஆத்திசூடியை அழகாக, குண்டு குண்டான எழுத்துகளில் அப்பா அவன் காப்பி நோட்டில் எழுதிக் கொடுத்து, அவன் எழுதினதும் பொறுமையாகத் திருத்திக் கொடுத்து, நன்றாக வந்ததும் மகிழ்ச்சியுடன் முதுகில் தட்டிப் பாராட்டியதை எப்படி மறக்க முடியும்?

வசந்தியும் அவனும் அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு அந்த ஆதாரப் பாடசாலையில் நுழைந்ததும், ஹெட்மாஸ்டர் அவரகளை வரவேற்று, கன்னத்தில் செல்லமாகக் கிள்ளி, பெயர்களைக் கேட்டுப் பதிவு செய்துகொண்டார்.

பின்னர் அப்பா அவர்களை அழைத்துக்கொண்டு இருட்டாக இருந்த ஹெட்மாஸ்டர் அறையைக் கடந்து, நீரில் மிதக்கும் பெரியதொரு காகிதக் கப்பல் மாதிரி மெல்ல ஊர்ந்து செல்லும் சூரிய ஒளியின் பிரதிபலிப்பில் பிரகாசிக்கும் சிவப்பு முற்றத்தைச் சுற்றிக்கொண்டு, ஏற்கனவே தொடங்கி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த வகுப்பில் நுழந்து, கண்ணாடி போட்ட ஓர் ஆசிரியரிடம் ஒப்படைத்தார்.

வகுப்பில் நுழைந்ததுமே அவன் முதலில் பார்த்தது அந்த அழகிய சிறுமியை!

வசந்தியைவிட அழகாக, நிறமாக, கொஞ்சம் உயரமாக, பளீரென்ற தோற்றத்துடன், அந்த அறையையே ஒளிரச்செய்து, குளிரச் செய்து, கலகலக்கச் செய்துகொண்டு, கைகள் இரண்டையும் முழங்கால் மூட்டுகளுக்கு கீழ் கொடுத்து ஊஞ்சல் போல் ஆடிக்கொண்டு, குண்டு மல்லிகை மாதிரி மலர்ந்த, கொஞ்சம் மருண்ட விழிகளால் அவர்களைப் பார்த்துக்கொண்டு, ஒரு தயக்கத்துடன் புன்னகைத்துக்கொண்டு... என்ன விழிகள்!

கல்யாணம் பண்ணிண்டா நான் இவளைத்தான் பண்ணிக்கணும்!

எடுத்த எடுப்பிலேயே எப்படி அவனால் அது மாதிரி நினைக்கத் தோன்றியது என்று ஆச்சரியமாக இருந்தது. புதிராகக் கூட இருந்தது.

கண்ணாடிகளின் வழியே அவனை உடுருவிப் பார்க்கும் ஆசிரியரின் கண்களை மறந்து, பக்கத்தில் நிற்கும் வசந்தியை மறந்து, வகுப்பின் இரைச்சலை மறந்து, முதுகில் பதிந்திருந்த அப்பாவின் கையை மறந்து, மாடிப்படி முகப்புத் தூண்களில் பதித்த கோலிக்குண்டுகள் மாதிரி கண்கள் அவள்மீது நிலைத்திருக்க---

’கல்யாணம் பண்ணிண்டா நான் இவளைத்தான் பண்ணிக்கணும்!’

எப்படி அவனால் அது மாதிரி நினைக்கத் தோன்றியது? அதுவும் கல்யாணம் என்றால் என்னவென்று அறிந்திருக்க முடியாத அந்த ஏழு வயதில்! அப்பா-அம்மா விளையாட்டுக் கூட அவன் விளையாடியது இல்லையே? அப்பவே என்ன ’பொஸஸ்ஸிவ் நேச்சர்’ அவனுக்கு!

இந்தக் காலத்து குழந்தைகளுக்காவது கொஞ்சம் கொஞ்சம் விஷய ஞானம் எப்படியோ வந்து விடுகிறது. அந்த ’பியர்ஸ் சோப்’ விளம்பரம் மாதிரி---

---எந்தப் பொண்ணு ’பியர்ஸ்’ தேச்சிக் குளிக்கறாளோ அவ அழகா ஆயிடுவா!
---ஒன்னப் போல தானேம்மா!
---அப்புறம் அவளைக் கல்யாணம் பண்ணிக்க மாப்ளையாட்டமா ஒருத்தர் வருவார்.
---அப்பாவாட்டம் தானே!


"ராஜா, இவள் அனுராதா. நாம குடியிருக்கமில்ல, அந்தப் பிள்ளையார் கோயில் தெருவில நம்மாத்துக்கு எதிர்த்தாப்பல நாலஞ்சாம் தள்ளி இவா வீடு இருக்கு."

வசந்தி அனுவை அறிமுகப் படுத்திவைக்க, முதல் சந்திப்பிலேயே அவர்கள் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர்.

கொஞ்ச நாளில் அப்பாவின் துணை இல்லாமல் தினம் இரண்டு வேளையும் பள்ளிக்கு வரப் பழகிவிட்டனர்.

மூன்று பேரும் ஒருவருக் கொருவர் துணையாக கைகளைக் கோத்துக்கொண்டு--அவன் நடுவில், இந்தப் பக்கம் அனு--அந்தப் பக்கம் வசந்தி--அம்மா சகுனம் பார்த்து வழியனுப்ப, பிள்ளையார் கோவில் வந்ததும் செருப்பைக் கழற்றிவிட்டு வாசலில் இருந்தபடியே ஒன்றிரண்டு அரைகுறைத் தோப்புக்கரணங்கள் போட்டு வேண்டிக்கொண்டு, கோவில் முனையில் திரும்பி ஒற்றைத் தெருவைக் கடந்து, அந்தத் தெருமுனையில் இருக்கும் ராமர் கோவில் வாசலில் உள்ள குழாயில் கால் அலம்பி வலம்வந்து,

"ராஜா, ராமர் எவ்ளோ அழஹ்ஹா இருக்கார்!" என்று அனும் தினமும் வியக்க, அந்தப் புன்னகை மூர்த்தியைத் தரிசித்துவிட்டு, ஒரு பாழடைந்த சுவரைத் தாண்டி, ’சுருக்குப் பாதை’ வழியே நடந்து, சில குடிசைகளைக் கடந்து, ஈயப் பட்டறையில் உள்ல துருத்தியை இழுக்கும் அந்தச் சிறுவனைப் பொறாமையுடன் பார்த்துவிட்டு (அவன் இவர்களை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருப்பான்), சைக்கிள்கள் விரையும் சாலயைக் கவனமாகக் கடந்து எதிரில் உள்ள பள்ளியில் நுழையும்போது முதல் மணி அடிக்கும்.
 
நீளமான மரக் கைப்பிடியுடன் கூடிய, சற்றுப் பெரிய பூஜை மணியாகத் தோண்றும் அந்த மணியை உயரமான பள்ளி மாணவர் தலைவன் வாசலில் நின்றுகொண்டு, அவன் தலையையும் முழங்கால்களுக்குக் கீழே உள்ள தரையையும் இணைக்கும் அரைவட்டப் பகுதியில் மேலும் கீழும் வேகமாக ஆட்டியபடி அடிக்க, ஈக்கள் மொய்க்கும் ஜவ்வு மிட்டாய்களையும் இலந்தம் பழங்களையும் மொய்த்திருக்கும் சிறுவர் சிறுமியர் கலைந்து ’ப்ரேய’ருக்குத் தயாராக,

பாரத சமுதாயம் வாழ்கவே!--வாழ்க வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்கவே!


என்று ஒரு டீச்சர் பாட, அவள் குரல் மாணவர்களிடம் வார்த்தைகள் தேய்ந்து குழப்பமான விஸ்வரூபத்துடன் எதிரொலிக்க, திங்கட் கிழமைகளில் ’தாயின் மணிக்கொடி’ பார்த்து---

"இந்தக் கொடியைப் பத்தியா, ஒரு நாள்கூட அது பட்டொளி வீசிப் பறக்க மாட்டேங்கறது!" என்று அனு கேலி செய்வாள்---

கூட்டம் கலைந்து கலர்கலர் வரிசைகளாகப் பிரிந்து வகுப்பறைகளுக்குச் செல்லும்.

வனும் அனுவும் வசந்தியும் எப்போதும் முதல் வரிசையில் அமர்வது வழக்கம். மாணவ, மாணவியர் தனித்தனி வரிசைகள் அமைந்த தூண்களாகத் தரையில் அமர, முதல் வரிசையில் மற்ற நண்பர்களுடன் அவன் இடப்புறம் அனு வசந்தியுடன், எல்லோரும் தங்கள் எதிரில் புத்தகப் பையுடன் பழைய, காலி ஜியோமெட்ரி பாக்ஸ் கலகலக்க (அதில் சிலேட்டுக் குச்சிகள், சிறு துணி மற்றும் ஒரு இன்ஜெக்*ஷன் பாட்டிலில் கலர்த் தண்ணீர்) உட்கார்ந்து, ஆசிரியர் நடத்தும் பாடத்தை மனமிருந்தால் கவனித்துக்கொண்டும், அவர் கரும்பலகையில் எழுதத் திரும்பும்போது தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டும், அல்லது பின்னால் திரும்பி அந்த எதிர்வகுப்பு வாத்தியார் தன் ஜிப்பாவில் கைவிட்டு பெரிய புகையிலைக் கற்றையை எடுத்துப் பிய்த்து வாயில் அடக்கிக்கொள்வதைப் பார்த்துக்கொண்டும், அடுத்த அறையில் முதல் வகுப்புக் குழந்தைகள் உரக்க கோரஸ் பாடும் வாய்ப்பாடு மற்றும் நர்சரி ரைம்களைக் கேட்டுக்கொண்டும் நாட்களை ஓட்டியபோது நடந்த சில இனிய நிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக நினைவுக்கு வந்தன.

ஒரு நாள் ஆசிரியர் தமிழ்ப் பாடத்தின் இடையில் திடீரென "காக்கைக்குத் தன் குஞ்சு..." என்று கூறிவிட்டு முதல் பையனைப் பார்த்து அந்தப் பழமொழியைப் பூர்த்தி செய்யுமாறு கேட்க அவன் விழித்தான்.

அடுத்து அமர்ந்திருந்த மூன்று பையன்களும் விழிக்க, ஆசிரியர், "ராஜா" என்றார்.

அவனுக்குக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலிருந்தது.
"..."

"அனு?"
"..."

"வசந்தி?"
"..."

மூவரும் மௌனமாக நிற்க, ஆசிரியர், "வேறு யார்க்காவது தெரியுமா?" என்றார்.

பின்னால் இருந்து "பொன் குஞ்சு!" என்ற கரகப்பான குரல் வர மூவரும் திரும்பிப் பார்த்தனர்.

ஒரு சாதாரணப் பையன் சரியாகச் சொல்லிவிட்டானே என்ற வியப்பு அவனை ஆட்கொள்ள, வசந்தியும் அவன் எண்ணத்தைப் பிரதிபலிப்பது அவள் முகத்தில் தெரிய, அனுவோ திடீரெனச் சிரித்துவிட்டாள்!

அப்போதுதான் அந்தப் பழமொழிக்கும் அதைச் சரியாகச் சொன்ன பையனுக்கும் இடையே இருந்த உருவ ஒற்றுமையை உணர்ந்த வகுப்பு முழுவதும் கொல்லென்று சிரித்துவிட, ஆசிரியருக்கு வந்த கோபத்தில் விடை தெரியாது நின்ற ஒவ்வொருவரையும் பிரம்பால் விளாசிவிட்டார்!

அனுவை அடிக்காதீங்க சார், பாவம்! எனக்கு வேணும்னா இன்னொரு அடி கொடுத்திடுங்க!

அவன் மனத்தின் மௌனக் குரல் ஆசிரியருக்குக் கேட்கவில்லை. அடி வாங்கிய அனுவோ மிகச் சிவந்துவிட்ட கையுடனும், குழப்பம் நிறைந்த முகத்துடனும், இன்னமும் புன்னகை பாக்கியிருந்த கண்களுடனும் நின்ற காட்சி இப்போதும் நினைவில் பளிச்சிட்டது...

சில நாட்கள் ஒரு மணி நேர மதிய உணவு இடைவேளைக்குப் பின் பள்ளிக்கூடம் போகும்போது அனு கிளம்புவதற்கு நேரமாகிவிடவே அவனும் வசந்தியும் முன்னால் செல்ல, சிறிது நேரத்தில் பின்னால் அனுவின் குரல் கேட்கும்.

"ராஜா...ஆ! வசந்தீ!...கொஞ்சம் நில்லுங்களேன், இதோ நானும் வந்துட்டேன்!"

அவர்கள் வேணுமென்றே காலகளை எட்டிப்போட, அனுவின் குரல் பெரிதாகி, ஹவாய் செருப்பு சரசரக்க, தோளில் ஆடும் பையில் ஜியோமெட்ரி பாக்ஸ் கலகலக்க, ’பான்ட்ஸ் பௌடர்’ தென்றல் சூழ்ந்துகொள்ள, அவள் மூச்சிரைக்க ஓடிவந்து அவன் தோளைப் பற்றிக்கொள்ளுவாள்!

அப்போதெல்லாம் ’இவள் என்னைவிடக் கொஞ்சம் உயரமாக இருக்கிறாளே!’ என்ற எண்ணம் அவனை வாட்டும்! எப்படியாவது தான் அனுவைவிட உயரமாகிவிட வேண்டும் என்ற உறுதியும் ஏக்கமும் மனசை ஆக்கிரமித்துக்கொள்ளும்.

"வசந்தி, நான் சின்ன வயசில கண்ணுக்கு மையிட்டுக்கவே மாட்டேன்னு பிடிவாதம் பிடிப்பேனாம்! அம்மா எவ்ளோ தாஜா பண்ணினாலும் கேட்க மாட்டேன். எங்கம்மா என்ன செய்வா தெரியுமா? என்னை சினிமாவுக்குக் கூட்டிண்டு போறேன்னு சொல்லி மையிட்டு விட்டுடுவா!"

"ராஜா, இந்த டிரஸ் எப்படி இருக்கு? எங்கப்பா வாங்கிக் கொடுத்தது. உனக்குப் பிடிச்சிருக்கா? எனக்கு எங்கப்பான்னா ரொம்பப் பிடிக்கும்! உனக்கு?"

"எனக்கும் எங்கப்பாவைப் பிடிக்கும், அனு..."

மனம் குழந்தை மாதிரி பழைய நிகழ்ச்சிகளையும் உரையாடல்களையும் வாஞ்சையுடன் நினைவு கூர்ந்தது...

"ஒரு குதிரையின் விலை ரூபாய் 200 வீதம் பத்துக் குதிரைகள் வாங்கி, அவற்றை ஒன்று ருபாய் 250 வீதம் விற்றால் அடையும் லாபம் என்ன?"

"IS THIS A BOOK"
NO, IT IS NOT.
IS THIS A BOX?
YES, IT IS..."


அனுவின் மனக் கணக்குகளையும் ’டிக்டேஷன்’களையும் உண்மையான அக்கறையுடன் அவனும் வசந்தியும் போட்டி போட்டுக்கொண்டு செய்வது வழக்கம்.

ப்புறம் அந்தக் குட்டை வாத்தியார்!

கறுப்பாக, அவனைவிடக் கொஞ்சமே உயரமாக, கொஞ்சம் பருமனாக, கைகளையும் கால்களையும் ஆட்டிக்கொண்டு அவர் சமூகப் பாடம் நடத்தியதை நினைக்கும்போது அவனுக்குப் பின்னைய நாட்களில் தான் படித்த தமிழ்வாணனின் ’கத்திரிக்காய்’ பாத்திரம் நினைவுக்கு வரும்.

குட்டை வாத்தியார் அவரைவிட உயரமான பையன்கள் முதுகில் அடிக்கும்போது உள்ளங்கையால் மெத்தென்று அடிக்கிற மாதிரி இருக்கும். அவ்வளவு பிஞ்சு விரல்கள் அவருக்கு! வழக்கமாகக் கோபத்துடன் காணப்பட்டாலும் அவர்கள்மேல் அவருக்கு ஒரு பாசம். அவரைப்போய் அந்த மாதிரிக் கிண்டல் பண்ணியிருக்கக் கூடாதுதான்.

ஒரு நாள் அவர் கண்களை உருட்டியபடியே வகுப்பை ஒருதரம் பார்த்துவிட்டு பெஞ்ச் மேல் ஏறிக் கரும்பலகையில் எழுதியபோதுதான் அவனுக்கு அவரது உண்மையான உயரம் கண்ணில் பட்டது. உடனே அனுவிடம்,

"அனு, உனக்கு ஒரு ரைம் தெரியுமா?" என்றான்.

"என்ன?"

"அதான், அந்த ’ட்விங்க்கிள் ட்விங்க்கிள்’."

சொன்னாள்.

"அப்படியில்லை, இங்க பார்,

Twinkle, twinkle, little Sir,
How I wonder what you are!
Up, on the bench you look so high,
Mounted like Christmas pie!"


உடனே அவள் கலகலவென்று சிரித்துவிட, அவன் வயிற்றைப் பயம் கவ்வ, நல்லவேளையாக ஆசிரியர் திரும்பிப் பார்க்காமலேயே, "அனு, வரவர நீ ரொம்பச் சிரிக்கறே" என்று அன்புடன் கடிந்துகொள்ள, அவள் ’கோஷிஷ் சினிமா ஜெயாபாதுரி’ போல் வாயை அகலத் திறந்து காற்றை உள்ளிழுத்து பலூனாக்கி உள்ளங்கையால் மூடி மெதுவாகக் காற்றை வெளியில்விட்டு அழகு காட்ட, வசந்தி அவர்கள் இருவரையும் தொடையில் கிள்ள மௌனமாயினர்.

தினமும் கடைசி பீரியட் விளையாட்டு. ஒரே இரைச்சலும் புழுதியுமாக பள்ளிக்கூடமே இரண்டுபட்டுவிடும். அனுவுக்கும் அவனுக்கும் இந்த விளையாட்டுகளில் அவ்வளவு ஈடுபாடு இருந்ததில்லை. இதனால் அவர்கள் இருவரும் வகுப்பில் உட்கார்ந்து படித்துக்கொண்டும், பேசிக்கொண்டும் கடைசிப் பீரியட்டைப் போக்குவது வழக்கம். அப்போதுதான் வீட்டுக்குப் போகும்போது தலை கலையாமல், உடை அழுக்காகாமல் இருக்கும்.

ஒரு நாள் அனு என்ன நினைத்தாளோ, மேசையின் பின்னால் நின்றுகொண்டு, முழங்கைகளை ஊன்றிக்கொண்டு கன்னத்தில் முட்டுக் கொடுத்தபடியே அவனை விளித்துப் பாடத் தொடங்கிவிட்டாள்!

"சம்மதமா, ஆஆ? நானுன் கூட வர சம்மதமா?
சரிசமமாக நிழல்போலே நான் கூடவர, சம்மதமா?"


அவனுக்குக் கொஞ்சம் வெட்கமாகிவிட்டது!

*** *** ***
 
Last edited:
5

கன்னிப் பருவத்தில் அந்நாள்---என்றன்
காதில் விழுந்த திசைமொழி யெல்லாம்
என்னென்ன வோபெயர ருண்டு---பின்னர்
யாவும் அழிவுற் றிறந்தன கண்டீர்!
---மஹாகவி பாரதியார், தமிழ் தாய்!


ள்ளிக்கூடம் முடியும்போது மீண்டும் ஒரு ப்ரேயர்:

வாழிய செந்தமிழ்! வாழகநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!


என்று சீனியர் மாணவ மாணவியர் நான்குபேர் முன்னின்று பாட, மற்றவர்கள் எதிரொலிக்கும்போது, அவர்களுக்குத் தாமும் அதுபோல் பாடும் நாள் எப்போது வரும் என்றிருக்கும்.

ஒவ்வொரு நாளும் சாயங்காலம் எப்போது வரும் என்று எதிர்பார்க்கத் தோன்றும். செருப்புகளைத் திண்ணையில் விசிறிவிட்டு, புத்தகப் பைகளை நடையிலேயே போட்டுவிட்டு, கிடுகிடுவென்று புழக்கடைப் பக்கம் ஓடித் தயாராக இறைத்து வைத்திருந்த தண்ணீரில் அவசரம் அவசரமாகக் காலலம்பிவிட்டு, "அம்மா, திங்கம்மா!" என்று கூவியபடியே அடுக்களைக்கு ஓடிவந்து முறுக்கோ, கடலையோ, சுண்டலோ, கொடுப்பதைப் பரக்கப் பரக்க வாயில் அடைத்துக்கொண்டு அவனும் அனுவும் வசந்தியும் விளையாடத் திண்ணைக்கு வரும்போது பின்னால் அம்மாவின் குரல் கேட்கும்.

"வசந்தி, அனு, ராஜா! எல்லோரும் வந்து காப்பி குடிச்சிட்டுப் போங்கோ?"

"அனு-ராஜா!"...

அம்மாவின் வாயில் தினமும் ஒலிக்கும் அந்தப் பெயர் இணைப்பு எப்போது சாஸ்வதமாகும்? இதைப் பற்றி அனு என்ன நினைப்பாளோ? அந்த "சம்மதமா!..." உண்மையில் அவள் மனத்தின் எதிரொலிதானோ? அவன் இப்படியெல்லாம் நினைப்பதை யாரிடம் சொல்வது? சொன்னால்தான் புரிந்துகொள்வார்களா?

Was it calf love?

இப்போது நினைத்துப் பார்க்கையில் இல்லை என்றுதான் தோன்றியது. ஆனால் இப்போதும் அவனால் தன் இளமை நாட்களின் முதிர்ந்த எண்ணங்களைப் பகுத்தறிய முடியவில்லை. காதல் என்றால் என்னவென்று தெரிந்திராத நாட்களில் அவன் அனுவைக் காதலித்துக் கொண்டிருந்தான்.

என்ன காதல், என்ன பாசம் அது!
மாடப் புறாக்களைப் போல
மென்மையாக, வெள்ளை உள்ளத்துடன் கூடி,


[’இட்டதோர் தாமரைப்பூ இதழ் விரிந்திருத்தல் போலே..’ என்று நாலாம் வகுப்பில் படித்த பாரதிதாசன் கவிதை இப்போது நினைவில் நெருடியது.]

தெள்ளிய நீரோடை போலப் பரவி,
குழப்பமே இல்லாமல் கணீரென்று
தனியாக
நீண்ட தூரம் ஒலிக்கும் கோவில் மணிபோல
உரிமை கொண்டாடி,

மெல்லிய சுருள்களாகக்
காற்றில் கலைந்து
பரந்து மறைந்து
மணம் பரப்பும்
ஊதுவத்திப் புகை போல
நிர்மலமான உள்ளத்துடன்
வாஞ்சையுடன் உறவாடி,

சின்னச் சின்ன விஷயங்களில்
மனதைப் பறிகொடுத்துக் கொண்டு,
அந்த எளிய, இனிய நாட்களை
இப்போதும் அசை போட்டுக்கொண்டு
கண்கள் சூனியத்தில் நிலைத்திருக்க,
அப்பாவின் கடிதம் மடியில் படபடக்க...


வ்வொரு மாலையும் வெய்யில் தாழும் வரை திண்ணையில் ’நாலு சோவி’ ஆட்டம்.

’முக்கை’ விழும் வரை ஆடலாம். அல்லது அடி தவறும் வரை. ’நாலு’ விழுந்தால் ஏகப்பட்ட போட்டி. ’ஒட்டு’ விழுந்தால் வேண்டுமென்றே அனு ஒரு சோழியால் மற்றொன்றை அடித்து, தள்ளித் தள்ளிப் போடுவாள்!

அல்லது ’அஞ்சு கல்லாட்டம்’. "எப்படி ராஜா நீ இந்தப் மகளிர் விளையாட்டை இவ்ளோ நல்லா விளயாடறே!" என்று தினமும் அனு அதிசயிப்பாள்.

சூரியன் எதிர் வீட்டின் மொட்டை மாடிக்குப் பின்னால் மறந்ததும் ’கல்லா மண்ணா’, அல்லது ’நொண்டி’. [’வெயிட்டீஸ்! அனு, கால் தரையில படுது!’], அல்லது ஓட்டப் பந்தயம் (அவள் உயரம் காரணமாக அதில் எப்போதும் அனுதான் முதலில் வருவாள்).

விளயாட்டு முடிந்ததும் மறுபடியும் கைகால் அலம்பிக்கொண்டு சிரத்தையாக விபூதி இட்டுக்கொண்டு...

அனுவின் பொன்னிற நெற்றியின் நடுவில்
சாயங்காலத்துச் சூரியன் போல
அழகிய, வட்டமான
சிவப்புச் சாந்து.
அதன்மேல் ஒட்டினாற்போல்
சின்ன மேகமாக விபூதி...


கோவிலுக்குப் போய் நெய்விளக்கு ஏற்றி, தீபாராதனை பார்த்துவிட்டு, ஒரு கையில் விபூதியும் ஒரு கையில் குங்குமமும் ஈரமாகக் கொண்டுவந்து அம்மா, அம்மாவுடன் பேசிக்கொண்டிருக்கும் அடுத்தாத்து மாமிக்குக் கொடுத்துவிட்டு, மாமி கிளம்பிப் போனதும் மறுபடியும் ஸ்வாமி படங்கள் முன் உட்கார்ந்துகொண்டு அம்மா பாட எல்லோரும் இனிமையாகத் திருப்பிச் சொல்ல, ’கஜானனம் பூத கணாதி ஸேவிதம்’, ’வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள்’ முதல் (செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில்) ’மகிஷாசுர மர்த்தினி’ வரை ஸ்தோத்திரங்கள், ஸ்லோகங்கள்...

அப்புறம் ’போய்ட்றேன் மாமி! போய்ட்றேன் ராஜா! போய்ட்றேன் வசந்தி!’ என்று அனுவின் ஓட்டம், அவள் வீட்டுக்கு. அதன்பின் சாப்பாடு, வீட்டுப் பாடம், ஒன்பது மணிக்கெல்லாம் தூக்கம்!
 
Last edited:
விடுமுறை நாட்கள் வந்தால் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஊரிலிருந்து வசந்தியின் சகோதரர்கள் முரளியும், சந்துருவும், அவன் பெரியப்பா பேரன் கண்ணனும், வசந்தியின் அக்கா பானுவும் கட்டாயம் வந்துவிடுவார்கள். எல்லோருக்கும் அவனை மிகவும் பிடிக்கும். காலையில் இருந்து விளையாட்டுக்கள்! பொழுது போவதே தெரியாது.

காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார்கள். உமிக்கரி அல்லது ’கோபால் பல்பொடி’யைக் கைநிறைய எடுத்துக்கொண்டு (பெரியவர்களுக்கு மட்டும் ’பயோரியா’ பல்பொடி. இவர்கள் பல்பொடியை வீணாக்குவதால் அப்பா கொஞ்ச நாளில் சின்னச் சின்ன பொட்டலங்கள் போட்டுவிடுவார்!) புழக்கடைப் பக்கம் பல்தேய்க்கப் போகும்போது முனுசாமி பால் கறந்துகொண்டிருப்பான். பக்கத்தில் கன்றுக்குட்டி ஆவலுடன் காத்திருக்கும், இவர்களைக் குவளைக் கண்களால் நோக்கியபடி.

ஜில்லென்ற நீரில் முகம் கழுவிக்கொண்டு, முனுசாமி பால்குவளையைக் கொண்டுபோய்க் கொடுக்கும்போது ஒரு தடவை எல்லோரும் கிணற்றில் எட்டிப் பார்த்துவிட்டு (சமயத்தில் பானு பார்த்துவிட, கோபித்துக்கொள்ளுவாள்), அம்மா காப்பி குடிக்க அழைப்பதற்குள் தோட்டத்தை ஒரு வலம் வருவார்கள்.

தோட்டத்தில் நுழைந்ததும் முதல் வேலை அன்று புதிதாய் மலர்ந்துகொண்டிருக்கும் பூக்களைக் கண்டுபிடித்து எண்ணுவது. பூக்களை அப்பா தினமும் பூஜைக்குப் பயன்படுத்துவதால் அவர்கள் கையால் அவற்றைத் தொடாமல், வலது கையின் நான்கு விரல்களை மூடிக்கொண்டு கட்டை விரலால் சுட்டுவார்கள்!

"வசந்தி இங்க பார், செம்பருத்தி இலைகளுக்கு இடுக்கில ஒரு ரோஜாப்பூ!"

"ராஜா இங்க ஒண்ணு!"

"அப்பா எவ்ளோ பூ! நான் இன்னிக்குத் தலையில் நிறைய வெச்சுக்கலாம்."

"நான்கூட நேரு மாதிரி சட்டையில ஒண்ணு சொருகிக்குவேன்!"

"காதுல வேணும்னாலும் வெச்சிக்கோயேன், யார் வேண்டான்னா?"

"ஏய், சந்துரு, டேபிள்ரோஸை மோந்து பார்க்காதே, உள்ள பூநாகம் இருக்கும்!"

"அப்புறம் இங்கே பார், மொத்தம் பதினெட்டு செம்பருத்திப் பூ இன்னைக்கு!"

"ஏய் யாரும் தப்பித்தவறி பூக்களைத் தொட்டுடக் கூடாது. குளிச்சப்புறம் மடியா பெரியப்பாக்கு பூஜை பண்ணப் பறிச்சுக் கொடுக்கலாம்."

அடுத்தது, தினமும் கொஞ்சம் இலைவிரியும் வாழைக் குருத்துகள். நீர் முத்துக்கள் தங்கி இருக்கும் இளம்பச்சை இலைக் குழல்களுக்குள் எட்டிப் பார்ப்பதில் தனி மகிழ்ச்சி.

முதல் உள்ள வாழை அவனுடையது. அடுத்தது அனுவுடையது. அப்புறம் வசந்தி.

"சொன்னா சொன்னதுதான், அப்புறம் மாத்தக்கூடாது", என்பாள் அனு.

"ராஜா, அனுவோட வாழை பாரேன், எவ்ளோ பெரிய எலை விட்டிருக்கு!"

"’டாப்’ இல்ல! அனு வந்ததும் காட்டணும்."

"சந்தோஷம் தலை கொள்ளாது அவளுக்கு."

அனு வந்ததும் ஒரு இனிய சர்ச்சை ஆரம்பமாகும்.

"பத்தியா, நான் சொன்னேல்ல, என்னோட வாழைதான் ஜெயிக்கும்னு!"

"அதெல்லாம் கிடையாது. இன்னும் ரெண்டு மூணு நாள்ல பாரு."

"நடக்கவே நடக்காது!"

"பார்க்கலாமா?"

"ம்...பார்க்கலாம்."

இன்றும் அந்த மூன்று வாழைகள் அவன் வீட்டுத் தோட்டத்தில் வாழையடி வாழையாகத் தழைத்திருப்பதை நினைக்கும்போது பெருமையாக இருந்தாலும், கண்கள் கனத்தன. அனுதான் இல்லை!

ப்புறம் அந்தப் பயிர்க்குழிகளில் ஒவ்வொருவரும் போட்ட விதைகள்...

மூன்று நாட்களில் முளைத்து, இலைவிட்டு, முதலில் சின்னதாகக் கொடிவிட்டு, கொடி கம்புகளிலும் கயிறுகளிலும் பற்றிக்கொண்டு, பந்தலில் படர்ந்து, பரந்து, சூரிய ஒளி தரையில் பொற் செதில்களாகப் பட அடர்ந்து, திடீரென ஒருநாள் ’குப்’பென்று பூத்து...

காலையில் பார்க்கும்போது புடலையின் மென்மையான, சிறிய பூக்களின் வெண் சிரிப்பு. அவரையின் வயலட்-பிங்க் விழிப்பு. மாலையில் பீர்க்கம் பூக்களின் மஞ்சள் வனப்பு. மூக்கைத் துளைக்கும் அந்த வாசனியே தனி!

காய்ப் பூக்கள் வாடிப் பிஞ்சுகளாகி இலைகளில் ஒளிந்துகொண்டு பெரிதாகி, புடலையாய் இருந்தால் நுனியில் கயிறுகட்டிக் கற்கள் தாங்கி, ஒருநாள் எல்லோரும் காய்களை வேட்டையாடி, அப்படியும் சில காய்கள் அலையும் கைகளுக்குத் தப்பி நெற்றாகிப் பிளக்கப்பட்டு விதைகள் அடுத்த சீசனுக்காகப் பரணில் அஞ்சறைப் பெட்டிகளில் பத்திரப் படுத்தப்பட்டு...

தோட்டத்தில் பூசணிக்கென்றே தனிப் பகுதி. காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு அலைவதுபோல் அப்படியொரு வேகமான வளர்ச்சி!

தரையில்தான் அப்படி என்றால் வேலியில் கூடவா? பற்றிக்கொள்ள ஒரு சின்ன, உறுதியான கொழுகொம்பு கிடைத்தால் போதும், கிடுகிடுவென்று மேலே மேலே படர்ந்துவிடும்.

அப்புறம் சாமர்த்தியமாக அந்தக் கொடியை அதன் சுருள் கம்பிகள் அறுகாமல் வளைத்து திசைதிருப்பிட வேண்டும். கொஞ்சம் அலட்சியமாக இருந்தால் மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிடும்!

மார்கழி வந்தால் போதும். ஒவ்வொரு நாள் காலையும் தோட்டம் கொள்ளாமல் பூக்கள்! அக்கம் பக்கத்து வீடுகளுக்குக் கொடுத்து மாளாது. அனுவும் வசந்தியும் முதல்நாள் இரவே அம்மாவின் கவனிப்பில் திட்டமிட்டு வரைந்து பார்த்து, மறுநாள் காலை ஒருவருக்கொருவர் சளைக்காமல் போட்டி போட்டுக்கொண்டு நடுக்கும் குளிரில் சீக்கிரமே எழுந்து வாசலில் விஸ்தாரமாகப் போடும் கோலங்களில் கற்றை கற்றியாக இந்தப் பூசணிப் பூக்கள் சாண உருண்டைகளில் ’ஜம்’மென்று அமர்ந்திருக்கும்!

எவ்வளவு பூக்கள் பூத்தாலும் அவற்றில் கணிசமாகக் காய்ப்பூக்கள் இருந்தாலும் காய்ப்பதே தெரியாது. திடீரென்று ஒருநாள் எல்லோர்க்கும் ஞானோதயம் உண்டாகி, காலையில் சீக்கிரமே எழுந்து, பனித்துளி படர்ந்து ’டால்’ அடிக்கும் ராட்சச இலைகளின் கம்பளிப்புழு முட்களைப் பொருட்படுத்தாமல் பரபரவென்று விலக்கித் தேடும்போது, சிந்துபாத் கதைகளில் வரும் பெரிய பெரிய முட்டைகள் போல, கைகொள்ளாமல் பசுமை வரிகளுடன் அழகழகான காய்கள்!

அனுவின் பாஷையில் சொல்வதானால் ’குண்டுக்காய்கள்!’

அனுவுக்கு ’குண்டுக்காய்’ என்றால் ரொம்பப் பிடிக்கும். தினமும் பரங்கிக்காய் கூட்டு, சாம்பார் என்றாலும் அவள் ரெடி. பாவம், அவள் வீட்டில் என்னவோ பூசணி சரியாகவே வந்ததில்லை. வந்தாலும் காய்த்ததில்லை. இதனால் பூசணிக்காய் சீசனில் அம்மா வாரம் மூன்று, நான்கு காய்கள் அனு வீட்டுக்கு அனுப்பிவிடுவாள். சமயத்தில் அனுவே அவற்றை ஆசையுடன் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு போவாள்!

"பாவம் மாமி நீங்க! எல்லாக் காயும் நானே எடுத்துண்டு போயிடறேன். ராஜா, உங்களுக்கெல்லாம் இருக்கா?"

அனுவுக்குப் பிடித்த விஷயங்களில் அவனுக்குப் பிடிக்காதது இந்தப் பரங்கிக்காய் மட்டுமே. இருந்தாலும் அவளுக்காகக் கொஞ்சம் சாப்பிட்டு வைப்பான், பிடிக்காது என்று சொல்ல மனம் இல்லாமல்.

இப்போதும் சிலநாள் அம்மா அவன் தட்டில் பரங்கிக்காய் கூட்டை முகத்தில் கொஞ்சம்கூடச் சலனமில்லாமல் பரிமாறும்போது தண்ணீர் நுழைந்த காகிதக் கப்பலாக மனம் கனத்து சமயத்தில் கண்களில் நீர் மல்கிவிடும்.

அம்மா அனுவை அறவே மறந்துவிட்டாள்!

*** *** ***
 
6

போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்து போனதனால்
நானுமோர் கனவோ?--இந்த ஞாலம் பொய்தானோ?
---மஹாகவி பாரதியார், ’உலகத்தை நோக்கி வினவுதல்’


"ங்கடா போய்ட்டீங்க எல்லோரும்? காப்பி ஆறிப்போயிண்டிருக்கு!"

அம்மா-பானுவின் கூட்டழைப்பில் ஒவ்வொருவரும் தோட்டத்திலிருந்து ஓடிவந்து மளமளவென்று காப்பி குடித்துவிட்டுத் திண்ணையில் புத்தகப் பையுடன் உட்காரும்போது கூடத்துச் சுவர்க் கடிகாரம் ஏழடிக்கும்.

அதன்பின் சளசளவென்ற சந்தைக்கடை இரைச்சலில் மலயமான் திருமுடிக் காரி ரூபாய் 200 வீதம் குதிரை வாங்கி, விற்று, லாபமடைந்து, காற்றுக்கு எடையுண்டு என்று நிரூபிக்கத் தராசில் பலூனை நிறுத்துப் பார்த்து, பாத்திகள் அமைத்து நீர் பாய்ச்சி, வலையில் சிக்கிய சிங்கத்தை விடுவித்து, பாய்மரக் கப்பல் புயலில் சிக்கி ஆளரவமற்ற தீவில் ராபின்சன் க்ரூசோவுடன் ஒதுங்கிக் கோடுகளில் நாட்களைக் கணக்கிடும்போது, அவன் மட்டும் கண்கள் மடியில் உள்ள புத்தகத்தில் நிலைத்திருக்க, மனம் அனுவை நினைத்து அவளின் அன்றைய வருகையை எதிபார்த்துக் காத்திருக்க, மணி எட்டடித்ததும் ஒவ்வொருவராக பானுவின் அழைப்பில் எல்லாவற்றையும் மூட்டை கட்டிவைத்துவிட்டுக் குளிக்கப்போக, ஒன்பது மணிக்கெல்லாம் டிஃபன் ரெடி.

அம்மாவும் பானும்வும் ஒருவர் மாற்றி ஒருவர் சளைக்காமல் சுடச்சுட வார்த்துப்போட அவனும் வசந்தியும் சந்துருவும் முரளியும் கண்ணனும் முழுமூச்சுடன் தோசையை ஒருகை பார்க்க---

எல்லோருக்கும் முதல் தோசைக்கு உறியிலிருந்து தேன்பாகு. அடுத்தது மிளகாய்ப் பொடியுடன் இரண்டு. அப்புறம் ஒன்று கெட்டித் தயிருடன்.

காரம் முடிந்த கையோடு அவர்களின் வால்ட் டிஸ்னி உலகம் இயங்கத் தொடங்கிவிடும். இதற்குள் அனுவும் குளித்து சாப்பிட்டுவிட்டு கைகால் முகம் எல்லாம் மஞ்சள் மணக்க, "நானும் ஆட்டத்துக்கு வருவேன், இல்லேன்னா ஆட்டத்தைக் கலைப்பேன்!" என்ற பிடிவாதத்துடன் அவர்களோடு சேர்ந்துகொள்ளுவாள்.

பழைய தபால் கார்டுகளை நீளவாட்டில் ஒழுங்காக மடித்து கூடத்திலிருந்து திண்ணை வரை இரண்டு வரிசைகள் ரயில் பெட்டிகளாகப் பொறுமையுடன் நிறுத்திவைத்து (இன்ஜினுக்கு ஒரு கலர் கார்டு), "சென்னை செல்லும் தூத்துக்குடி எக்ஸ்ப்ரஸ் இன்னும் சில வினாடிகளில் புறப்படும்" என்று கையைக் குவித்து அறிவித்துவிட்டு, இரண்டு ரயில் வரிசைகளை ஒன்றுக்கொன்று போட்டியாக (சமயத்தில் எதிரும் புதிருமாக) விடத் தீர்மானித்து, முதல் கார்டை அனு மருதாணியால் சிவந்த தன் ஆள்காட்டி விரலால் மெல்லத் தொட, ’ஸ்...ஃபட்...ஃபட்’ என்ற மென்மையான ஒலியுடன் கார்டுகள் தலைவணங்கிப் படிகள் மீது தவழ்ந்தும் கிளைகளாகப் பிரிந்தும் அழகாகச் சாய்ந்து வரிசையாக விழுவதற்கு என்ன வேண்டுமானாலும் தரலாம்!

சமயத்தில் காற்றில் ரயில் தானே கிளம்பிவிடும்! அல்லது படிகளில் நின்று சண்டித்தனம் செய்யும். அல்லது பானு வாசலுக்கு வரும்போது அவள் தாவணியின் சலசலப்பில் தலைகீழாகப் புறப்பட்டுவிட, அவள் வசமாக வாங்கிக் கட்டிக்கொள்ளுவாள்!

கார்டுகளை வைத்து வீடு கட்டுவது, கூழாங்கற்களை ஒளித்து வைத்துவிட்டு தேடச் சொல்லுவது, தாயக்கட்டம், பரமபத சோபான படம்---

"ஏய், இந்த விளையாட்டுல யாரும் பாதியில எழுந்து போகக்கூடாது. போனா, ஸ்வாமி கோவிச்சிப்பார்னு எங்க பாட்டி சொல்லுவா!" என்று அனு ஒவ்வொரு தடவை அறிவித்தாலும் ஒரு முறைகூட அவர்கள் அதை முழுவதும் விளையாடியதாக நினைவில்லை!

அப்புறம் ஆடுபுலி ஆட்டம், கேரம் போர்டு, ’புளிய முத்துகளை’ வைத்துக்கொண்டு சில்லாக்கு அல்லது ஒற்றையா-ரெட்டையா, தீப்பெட்டிப் படக் கரன்சியில் நாலு கோலி, சிகரெட் அட்டைகளில் ஒத்த தீப்பெட்டிப் படங்களை ஒட்டி ஒரு எளிய ரம்மி---இப்படி எத்தனை எத்தனை ஆட்டங்கள்!

இதற்குள் மதியம் சாப்பாட்டுக்கு நேரமாகிவிட, தட்டு வைக்கும்வரை ’சினிமாப் பெயர்’. சரியான நடுப்பகல் வெய்யிலில் அனு விடைபெற்றுக் கொள்ளுவாள்.

சாப்பாடு முடிந்து கடைசிவரை சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் மேல் ’நீதான் கட்டக்கடைசி!’ என்று கைமழை தூறிவிட்டு, அப்பா ஒரு ’பின்னி பிளாங்கெட்’டை விரித்துப்போட, ஒவ்வொருவரும் கையில் ’பஞ்சதந்திரக் கதைகள்’, ’பீர்பால் கதைகள்’ அல்லது ’அம்புலிமாமா’ சகிதம் படுத்துக்கொண்டு, அப்பாவின் கண்டிப்பில் தூங்குவதுபோல் பாவனை செய்துவிட்டு அவர் தூங்கியதும் ஒவ்வொருவராக நழுவி விளையாடப் போக, முனுசாமி பால் கறக்க வந்துவிடுவான்.

ப்படித்தான் ஒரு மாலை முரளி பால்கறக்கும் ஆசையில் பசுவின் மடியில் கைவைக்க, அது பின்னங்காலால் உதைவிட, வலது தொடையில் வெள்ளை சிராய்ப்புடன் கீழே விழுந்த முரளி கேவத்தொடங்க, அப்பா எழுந்துவிடப் போகிறாரே என்ற பயத்தில் அவனும் வசந்தியும் மொட்டை மாடிக்கு ஓடி, அங்கு உலர்த்தியிருந்த கருவடாங்களில் ஒன்றிரண்டு கொண்டுவந்து கொடுத்து முரளியை சமாதானப் படுத்தினார்கள்.

சில நாட்கள் திடீரென்று அப்பா வந்துவிடுவார்!

"நீங்கள்லாம் என்ன பண்ணிண்டிருக்கேள் இங்க? யாருமே தூங்கலையா?"

"தூங்கி எழுந்தாச்சு பெரியப்பா. இப்பதான் காப்பி குடிச்சிட்டு விளையாட வந்தோம்."

"அப்படியா? சரி. வெயிலில் அலையாம விளையாடுங்கோ."

"ஆட்டும் பெரியப்பா!"

அப்பா அவனை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு உள்ளே சென்றுவிட, அடிக்கடி இதுமாதிரி பார்க்கும் அவர் பார்வையின் பொருள் அனுமதியா, மறுப்பா, கோபமா என்று புரியாமல் அவன் குழம்பி நிற்க, கொஞ்ச நேரத்தில் அனுவும், பானுவும் கூட அவர்கள் விளையாட்டில் கலந்துகொள்ள, எல்லாம் மறந்து மனசு லேசாகிவிடும்.

மூன்று மணி வெய்யிலில் வீட்டில் வலதுபக்கம் காம்பௌன்ட் சுவர்வரை படர்ந்திருக்கும் காட்டுச் செடிகளும் கொடிகளும் நிறைந்த புதர்களில் அவர்கள் பட்டுப் பூச்சிகளைப் பின்தொடர்ந்து அலைந்து, ’தட்டான்’களைப் பிடித்து அவற்றை சிறுசிறு கற்களைத் தூக்கவைத்து மகிழ்ந்து, வாலில் நூல் கட்டிப் பறக்கவிட்டு, காட்டுப் பூக்களைப் பறித்துத் தேனுறிஞ்சி, சில பூக்களின் தலையைச் சுண்டிவிட்டு, ’பட்டாஸ்’ காய்களைத் தண்ணிர் தெளித்து வெடிக்கச் செய்து, ஆமணக்கு விதைகளைச் சேகரித்து (’கணக்கு பிணக்கு ஆமணக்கு’ என்பாள் அனு), அதன் மிருதுவான பூக்களில் மயங்கி, கறையான் புற்றுகளை உடைத்து, தட்டைக்குச்சிக் கட்டுகளை அவிழ்த்து மூங்கில் விற்களில் அவற்றைப் போட்டி போட்டுக்கொண்டு அம்புகளாக வானில் எய்து (அந்த அம்புகள் மேலே செல்லும்போது சின்னதாகி மீண்டும் பழைய நிலைக்கு வந்து விழுவது பார்க்க வியப்பாக இருக்கும்), நன்றாகக் காய்ந்த குச்சிகளைத் தோலுரித்து தக்கை வண்டிகளும் பொம்மைகளும் செய்து விளையாடி, ஓணான்களை வேட்டியாட முயன்று, வானில் பறக்கும் கொக்குகளையும் கருடன்களையும் பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கொண்டு, கை நகங்களை நகங்களால் தட்டி உரசிவிட்டு, அந்த நகங்களில் அப்போதுதான் கண்ணில்படும் வெள்ளைப் புள்ளைகளை அதிர்ஷ்டத்தின் சின்னங்களாக நினைத்துக்கொண்டு...

பானு இருக்கும்போது அவர்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு ’கண்ணாமூச்சி’.

அனைவரும் ’சாட்-பூட்-த்ரீ’ போட்டதும் அவள், "தானா பேனா தந்திரிப் பேனா ஒனக்கொரு பழம் எனக்கொரு பழம் கொண்டோடியா!" என்று ’தாச்சி’யின் கண்களைப் பொத்தியபடி மூன்று தடவை உரக்கக் கூவிவிட்டு, "விட்டுட்டேன்... விட்டுட்டேன்... விட்டுட்டேன்!" என்று கண்களைத் திறந்துவிட, கண்களைப் பொத்திக்கொண்டவன் கம்பீரமாக நடந்து ஒவ்வொருவராகத் தேடத் தொடங்க---

"அந்தோ, பச்சைப் பாவாடை செம்பருத்திச் செடிக்குப் பின்னால! வசந்தி வெளிய வா!"

பானுவுக்கு அனுவிடம் கொஞ்சம் தாராள மனசு. அவள் கண்களைப் பொத்திக்கொண்டாலும் சரி, ஒளிந்துகொண்டாலும் சரி, அவளுக்கு பானுவிடமிருந்து நிச்சயம் ஒன்றிரண்டு கண்ஜாடைகள் கிடைத்துவிடும். இதனால் அனுவை ’அவுட்’டாக்குவது ரொம்பக் கஷ்டம். எப்படியாவது கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ஓடிவந்து பானுவைத் தொட்டுவிடுவாள். அப்படியே அவுட்டாகி கண்களைப் பொத்திக்கொண்டாலும் எல்லோரையும் கண்டுபிடிப்பது அவளுக்கு கஷ்டமாக இருக்காது.

’கண்ணாமூச்சி’ என்றதும் அவன் சமீபத்தில் படித்த அனிதா தாஸின் 'Games in a Twilight' சிறுகதை ஞாபகம் வந்தது. இப்படித்தான் அந்தக் கதையில் ஒரு சிறுவன் கதவின் சின்ன இடுக்கு வழியே நுழைந்து ஒரு பழைய ’ஷெட்’டில் ஒளிந்துகொண்டு தவம் கிடக்க, மற்ற குழந்தைகள் அவனை அறவே மறந்து வேறு விளையாட்டுகளுக்குச் சென்றுவிட, அவனுக்கு மிகவும் ஏமாற்றமாகப் போய்விடுகிறது. கதையின் அழகிய வருணனைகளும் அந்த feel of wordsஸும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தன.

சூரியன் மறைந்ததும் எல்லோரும் திண்ணையின் முன்னால் உள்ள புல்வெளியில் அமர்ந்துகொண்டு, தரை முழுவதும் இறைந்துள்ள வாடிய பூவரசம் பூக்களைப் பொறுக்கி இதழ்களைப் பிய்த்துவிட்டு ’கூஜா’ செய்து (பானு அதில் எக்ஸ்பர்ட்), பூவரசம் இலைகளில் ஊதல்கள் செய்து போட்டி போட்டுக்கொண்டு ஊதி, மஞ்சள், வெள்ளை, சிவப்பு என்று வாசல் ’கேட்’வரை அழகாகப் பூத்திருக்கும் அந்தி மந்தாரைப் பூக்களைப் பார்த்து வியந்து, வாடிய பூக்களை விலக்கி நன்றாகக் கறுத்த விதைகளை சேகரித்து மனம் போன போக்கில் பூமியில் ஊன்றி, மீதம் இருப்பவற்றை தீப்பெட்டிகளில் பத்திரப்படுத்தி, வாடாமல்லிப் பூக்களில் வெளுத்தவற்றைப் பிய்த்துத் தோட்டம் எங்கும் தூவி (சில நாட்களில் அவை பசுமை எறும்புக் கூட்டங்களாக முளைத்துவிடும்), இருட்டத் தொடங்கியதும் வீட்டுக்குள் நுழைவார்கள்.

விளக்கு வைத்ததும் ஸ்லோகங்கள் சொல்லிவிட்டு சீக்கிரமே சாப்பிட்டுவிட்டு

"அனு, நீயும் எல்லோரோடையும் உட்கார்."

"இல்லை பானுக்கா, நான் எங்காத்துக்குப் போய் சாப்டுட்டு வந்துடறேன்."

"உங்க பாட்டி திட்டுவான்னு பயமா?"

"நான் சொல்லிக்கறேண்டி உங்க பாட்டிகிட்ட!"

"வேண்டாம் பானுக்கா".

"அப்ப நீ கதை கேட்க வரலையா?"

"இங்க சாப்டாத்தான் கதை."

"சமர்த்தா ராஜா பக்கத்தில உட்கார்ந்துக்கோ பார்க்கலாம்."

பானு சாப்பிடும்வரை பேருக்கென்று பாடம் படித்துவிட்டு, இரவு ஒன்பது மணி வரை பானு அளக்கும் கதைகளை மெய்மறந்து கேட்டுவிட்டுக் கொட்டாவியுடன் அனு விடைபெற்றுக்கொள்ள படுக்கச் செல்வார்கள்.
 
Dear Saidevo Sir,

am completely mesmerised by the description of games played and the atmosphere created in this posting (87) My thoughts drift back to my younger days in my village. So wonderfully written. Eagerly waiting for the next one. Cheers.
 
namaste shrI Manoharkumar.

I am really happy that you like the description and narration of this novel immensely. Most of us would have had the type of life I am describing, during our school and college days. It is said that every man and woman has a novel to write about their personal life experiences. The trick is to practise expressing them in words and style, portraying your characters not out of anyone--or you--personally but through a combination of traits of some people attributed to a single character. If there is interest, I may probably describe some techniques that I learned, quoting how I have employed them in my fictional works, although it has the risk of someone calling it 'svaya pratApam'.

Please continue to give your feedback on the plus and minus points.



Dear Saidevo Sir,

am completely mesmerised by the description of games played and the atmosphere created in this posting (87) My thoughts drift back to my younger days in my village. So wonderfully written. Eagerly waiting for the next one. Cheers.
 
Saidevo sir, Your story Manai Matchi is very outstanding. It reflects the inner love and affection. Your expertise in 3 languages are made known. I also love kasatta and its price at Rs. 5/- (en naavil neer ootrugiradhu). But one thing is that can one person will be so lazy for days together. Atleast he should take care of water, coffee and some biscuits - the minimum thing for survival.
 
namaste shrI Ramanathan.

You have been lavish in your appreciation of my works, be it poetry or fiction. Thank you. You are right about the young husband being so lazy for days together that he does not even ensure drinking water for him at home! Certain exaggerations are allowed for a writer of poetry and fiction, right? Thank you again.
 
ப்புறம் அந்த ஆற்றங்கரைப் பள்ளிக்கூடம்.

’ப’ வடிவில் அமைந்து பெரியபெரிய வகுப்பறைகளுடன், பெரிய தாழ்வாரத்துடன் புத்தம்புதுக் கட்டடம். ஐந்தாம் வகுப்பு முழுவதும் இனிமேல் இங்குதான் என்று அறிவித்தபோது மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது.

அவன் பள்ளிக்கூட நாட்களின் சிறந்த நேரங்கள் இந்தப் பள்ளியில்தான் கழிந்தன. அவனும் அனுவும் வசந்தியும் போட்டியுடன் படித்து அனைத்துப் பாடங்களிலும் மாறி மாறி முதல் மார்க் வாங்கி---

எப்படியும் முதல் ’ராங்க்’ அவனுக்கே. சமயத்தில் அனுவோ வசந்தியோ அதைப் பறித்து விடுவதுண்டு. வழக்கமாக ராஜா-அனு-வசந்தி என்று வரும் முதல் மூன்று இடங்கள் எப்போதாவது ராஜா-வசந்தி-அனு என்று மாறிவிட அனு தன்னைத்தானே தலையில் குட்டிக்கொள்ளுவாள்!

மூன்று பேரிலும் அனுவின் கையெழுத்து மிக அழகாக இருக்கும். சீரிய கோடுகளையும் வளைவுகளையும் கொண்டு குண்டுகுண்டான எழுத்துக்களில் எழுதியிருக்கும் அவள் நோட்டுப் புத்தகங்களை இரவல் வாங்கிப் படிப்பது ஒரு தனி ஆனந்தம். அனுவின் எழுத்துகளின் ஒரு தனித்தன்மை, எல்லோரும் ’கி, தி’ என்று சாதரணமாக எழுதும்போது அவள் மட்டும்
ki-ti.jpg
என்று குற்றியலிகரங்களைத் தலைச் சுழியுடன் கலையழகோடு எழுதுவாள்.

சின்ன வயதில் பண்படுத்தப்பட்டு, பள்ளி-கல்லூரி நாட்களில் அழகுடன் எழுதும் வழக்கமுடைய பலர் நாளடைவில் தம் கையெழுத்து தேய்ந்து கிறுக்கத் தொடங்கிவிடுகின்றனர். எப்போதும் ஒரே மாதிரி சீராக, அழகாக, குண்டுகுண்டாக எழுதுபவர்கள் நூற்றுக்குப் பத்து பேர்தான் இருப்பார்கள் என்று தோன்றியது.

அனுவின் கையெழுத்துகூட அவள் கல்லூரி நாட்களில் எவ்வளவு மாறிவிட்டது! என்னதான் அந்தப் பெண்மையின் நளினம் இருந்தாலும் அனுவின் கடிதத்தில் இருந்த எழுத்துகள் அவள் எழுதினவையே என்று அடையாளம் தெரிந்துகொள்வது சிரமமாக இருந்தது.

னுவின் கடிதம் நினைவுக்கு வர, மனத்தை சோகம் பாரமாக அழுத்தியது. அவனை அவள் எவ்வளவு தூரம் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டாள் என்பதை நினைக்கும்போது உலகமே இருண்டுவிட்டது போலிருந்தது.

ஒருநிமிடம், இரண்டு நிமிடம் என்று
நேரம் ஊர்ந்த போதும்
வாசலே வராத குகைக்குள்
ரயிலில் போய்க்கொண் டிருப்பது மாதிரி.

திடீரெனச் சக்கரங்களில் ஏதோ நெருடத்
தறிகெட்டு ஓடித் தடம்புரண்டு
பெட்டிகள் ஒன்றுக் கொன்று
’தொலைநோக்கி’ யாக
மடிந்து சுருங்கிக்
கூரையில் இடித்து
வழியே இல்லாது அடைத்துக் கொண்டு
வெளியுலகத் தொடர்புகள் முற்றிலும் அறுந்து
லண்டனில் ஏற்பட்ட அந்தப்
பாதாள ரயிலின் விபத்து மாதிரி...


அன்று அனுவின் கடிதம், இன்று அப்பாவின்.
அவனது விருப்பத்துக் கெதிராக வாழ்வின் அத்தியாயங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் திடுமென முடிந்துவிடுகின்றன.

எப்படி இருந்தாலும் அவனால் அப்பாவின் சொல்லை மீற முடியாது. மீறிதான் என்ன செய்வது? பாதையே தெரியாத பயணத்தில் வழித்துணையே வேண்டாம் என்றால் எப்படி?

ஆனாலும் அவனால் அனுவை
எப்படி மறக்க முடியும்?
அவளை மறப்பது என்பது
அவன்தன் பெயரை மறப்பது மாதிரி.


(ஈ ஒன்று தன் பெயர் மறந்த கதைப் பாட்டு சம்பந்தம் இல்லாமல் நினைவில் பளிச்சிட்டு மறைந்தது.)

வாழ்க்கையில் அவனுக்குக் கிடைத்த முதல் தோழி அனு. அவளைமட்டும் சந்தித்திராவிட்டால் அவனுடைய இளமை நாட்கள் இவ்வளவு தூரம் இனிமையாக இருந்திருக்க முடியாது.

அனுவைத் தவிர வேறு யாரும் அவன் மனதை, நினைவுகளை, கனவுகளை இவ்வளவு தூரம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்க முடியாது. அசுர வேகத்தில் போய்க்கொண்டிருக்கும் இந்த வைகை எக்ஸ்ப்ரஸின் ஆரவாரமான சூழ்நிலையில் புலன்கள் விழித்திருக்க, மனம் மட்டும் அடிக்கடி சின்னத் தூக்கம் போட்டு, புரஃபசர் மித்ராவின் அழைப்பில், மெஸ்மெரிசத்தில் அந்தப் பழைய நாட்களை மீண்டும் ஒருமுறை வாழ்ந்துகொண்டிருக்க முடியாது.

காலவோட்டத்தின் மணலில் பதிந்த அனுவின் காலடிச் சுவடுகளைப் பின்பற்றி அலைந்து தேடிக் கொண்டிருக்க முடியாது.

அப்படித் தேடும்போது அந்தக் காலடிச் சுவடுகள் உருமாறிச் சிதைந்து, மெல்ல மெல்ல மறைந்து, அந்த ’லாரன்ஸ் ஆஃப் அரேபியா’ சினிமாவில் வரும் காட்சிபோல் மணல் காற்றின் உக்கிரத்தில் அவனிடம் இருந்து அவள் பிரிக்கப்பட்டு மறைந்தே போக,

அவளது தோழமையில் வாழ்ந்த
நாட்கள் நினைவு களாகி
நினைவுகள் கனவு களாகி
சங்கிலித் தொடர்போல் நீண்ட கனவுகள்
ஒவ்வொரு வளையமாக உள்ளத்தின்
ஆழமான இடுக்கில் சென்று மறைய
கடைசி வளையத்தைப் பிடித்துக்கொண்டு
அவன்தொங்கிக் கொண்டிருக்க,
கீழே அதல பாதாளம்...


*** *** ***
 
7

பழமை பழமை என்று பாவனை பேசலின்றிப்
பழமை இருந்த நிலை!---கிளியே!
பாமர ரேதறி வார்?
---மஹாகவி பாரதியார், நடிப்புச் சுதேசிகள்


னுவின் தோழமையில் அவன் செலவிட்ட நாட்கள் சிவப்பு-ஆம்பர்-பச்சைக் குறிகளாக அவன் பிள்ளைப் பருவத்தைப் பாதித்திருக்க, மனம் அந்த நாட்களை, நிகழ்ச்சிகளை மீண்டும் ஒருமுறை நினைவுகூர்ந்து, டயரியின் பக்கங்களில் தன் பயணத்தைத் தொடர்ந்தது.

ஆற்றங்கரைப் பள்ளிக்கூட நாட்களின் மகிழ்ச்சியான நேரங்களைப் பற்றிப் பக்கம் பக்கமாக வருணிக்கப்பட்டிருந்த வரிகளில் கண்கள் ஓடியபோது---

வசந்தியுடன் பேசிக்கொண்டு இருக்கும்போதும் அடிக்கடி அவன் பக்கம் தாவிச் சிரிக்கும் அனுவின் அகலமான கண்கள்,

கரும்பலகையில் எழுதிப் போட்டுவிட்டு வகுப்பின் பின்பக்கம் போய் போண்டா தின்னும் ஆசிரியர்,

மீன்களை பாட்டில் தண்ணீரில் அடைத்து விளையாடும் பையன்கள்,

ஆடிமாத நீர்ப்பெருக்கில் முழங்கால் அளவு நீரில் அவர்கள் பாதத்தின் அடியில் மணல் குறுகுறுக்க, மீன்களின் வருடலில் கால்கள் புல்லரிக்க நின்ற சமயங்கள்,

பள்ளியின் அருகில் இருந்த அனுமார் கோவிலின் சில்லென்ற தரையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த நாட்கள் போன்ற காட்சிகளும் நிகழ்ச்சிகளும் ஒவ்வொன்றாக நினைவில் எரிந்து பரவசமூட்டின.

சாலையில் திடீரென்று சிவப்பு சிக்னல்!

உயர்நிலைப் பள்ளியில் ஆறாவது வகுப்பில் நுழைந்த சில நாட்களில் வசந்திக்கும் அவனுக்கும் அம்மா கொடுத்த ’அட்வைஸ்’ இப்போதும் காதில் ஒலித்தது.

"ஏ வசந்தி! இனிமே பள்ளிக்கூடத்ல நீங்கள்லாம் ஆணும் பொண்ணும் சேர்ந்து விளையாடக் கூடாது. ’ஏ கோவிந்தா!... ஏ கோபாலா!’-ன்னெல்லாம் கத்தி அமர்க்களம் பண்ணாம அடக்கமா இருக்கணும். ஆம்பளைப் பசங்களோட சேர்ந்து விளையாடினா காது அறுந்துபோகும், தெரியுமா?"

"ஒனக்கும்தாண்டா ராஜா! நீயும் இனிமே ’ஏ கோசலை, ஏ லலிதாங்கி!’ன்னு வகுப்பில வெளியில கத்தாம, ஒழுங்கா படிச்சு முன்னுக்கு வர வழியைப் பாக்கணும், புரிஞ்சுதா?"

அம்மாவின் பலமான ’அட்வைஸ்’ ஊரெங்கும் கேட்டதோ என்னவோ இன்று அவர்கள் கிராமத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி உயர்நிலைப் பள்ளிகள்.

அம்மாவின் ’அட்வைஸ்’ அனுவின் காதுக்கு எட்டிவிட இப்போதெல்லாம் அவள் வசந்தியையே அதிகம் சார்ந்திருப்பதாகத் தோன்றியது.

வகுப்பிலாவது பையன்களும் பெண்களும் நடுவில் இடம்விட்டுத் தனித் தனி வரிசைகளாக ’டெஸ்க்’களில் அமர்வதால் அவர்கள் அதிகம் பேசிக்கொள்ள வாய்ப்பில்லை என்றாலும் (அப்போதுகூட அனுவின் கண்கள் அடிக்கடி அவன் மேல் விழுந்து புன்னகைக்கும்!), மற்ற நேரங்களில் முன்புபோல் அவர்கள் கலகலப்பாக இருக்கும் சந்தர்ப்பங்கள் மிகக் குறைந்துவிட்டன.

அதுவும் முக்கியமான அந்த மாலை வேளைகளில்.

’இது பையன்கள் விளையாட்டு’, ’இது பெண்கள் விளையாட்டு’ என்ற பாகுபாட்டில் அனுவும் வசந்தியும் மற்ற பெண்களோடு சேர்ந்துகொண்டு பாண்டி, ரிங் டென்னிஸ், ஸ்கிப்பிங் போன்ற விளயாட்டுக்களில் மெய்மறக்கத் தொடங்கிவிட, அவன் திடீரென்று அதிகமாகிவிட்ட தன் நண்பர்களுடன் பம்பரம், கோலி, கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில் பொழுதைப் போக்க வேண்டியதாயிற்று.

மூவரும் தினமும் ஸ்கூல் போகும் வரும் சமயங்கள் தவிர மற்ற வேளைகளில் அனுவின் தோழமை அவனுக்கு அவ்வளவு தூரம் கிடைக்காததில் வருத்தம் இருந்தாலும் கூடவே ஒரு மகிழ்ச்சி, அவள் மற்ற பையன்களோடு பழகும் வாய்ப்பு அதிகம் இல்லை என்பது. தவிர, அனுவும் அவனை மட்டும் நாடியதால் அவளுக்கு இருந்த ஒரே தோழன் என்கிற மகிழ்ச்சி.

ப்போது எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கும்போது அவன் வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களைத் தவறவிட்டதாகப் பட்டது.

இவ்வளவு நாள் பழகியும் அவன் ஒரு தடவை கூட அனுவின் வீட்டுக்குப் போனதில்லை!

அவள் பெற்றோர் யார், எந்த ஊரில் இருக்கிறார்கள், அவள் அப்பாவுக்கு என்ன வேலை என்று தெரிந்துகொள்ள முயன்றதில்லை.

அவள் பாட்டி தாத்தாவை ஒருமுறைகூடப் பார்த்ததில்லை.

அவள் வீடு எப்படி இருக்கும், அனு எந்த நேரத்தில் என்ன செய்கிறாள், எப்படிப் படிக்கிறாள், வசந்தியைப் போல வீட்டுக் காரியங்களை அனாயாசமாகச் செய்கிறாளா, அவள் வீட்டில் அன்று என்ன சமையல் என்றெல்லாம் அறிய ஆவல் கொண்டதில்லை.

அப்பா அம்மாவிடம்---ஏன் வசந்தியிடம் கூட---அனுவைப் பற்றிப் பேசியதில்லை.

அனுமாதிரியே அவனும் அவள் மீது உயிராய் இருந்ததைக் காட்டிக் கொண்டதில்லை.

இவற்றையெல்லாம் செய்திருந்தால் ஒருவேளை அப்பா அம்மாவுக்கு அவன் அன்பின் ஆழம் தெரிந்திருந்து நாளடைவில் அவர்கள் அந்த விஷயத்தை ஆதரித்து இருக்கக்கூடும்.

அப்பாவின் இந்தக் கடிதமும் வேறு விதமாக இருந்திருக்கக்கூடும்...
 
Last edited:
post 91- Sir I am S.Ramanathan. I just felt so and expressed my views. I also faced such situations in life but I will keep minimum things like milkpowder, coffee powder, bread, jam to manage atleast break fast. Atleast one bottle of water to be in the house to quench thrust. Keep continue writing if possible some crime stories or historical stories. Your manner of presentation and description keeps me reading the stories at a stretch.
 
வன் உயர்நிலைப் பள்ளி நாட்களில் இப்போதும் அனுவை நினைத்துக்கொள்ளும்படி செய்த நிகழ்ச்சிகள் இரண்டு. ஒன்று, அந்த ஆண்டு விழா நிகழ்ச்சி. மற்றொன்று, அந்த தீபாவளிக் கோலாட்டம்.

ஒளிபடைத்த கண்ணினாய் வாவாவா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வாவாவா
களிபடைத்த மொழியினாய் வாவாவா
கடுமை கோண்ட தோளினாய் வாவாவா


என்று மதுர கீதமாய் ஏற்ற இறக்கங்களுடன் பானு ’எம்மெஸ்’ஸை எதிரொலிக்க, அனுவும் வசந்தியும் மடிசார் பட்டுப்புடவை சரசரக்க, பல நூறு கண்கள் அவர்கள்மேல் நிலைத்திருக்க, பானுவின் மேற்பார்வையில் பல தடவை பார்த்த ஒத்திகையின் மெருகு அவர்கள் அணிந்திருந்த நகைகளுக்குப் போட்டியாக மினுமினுக்க,

ஒத்திகையின் போது அனு, வசந்தியுடன் ஜோடியாகப் பலமுறை கைகளைக் கும்பிட்டு வணங்க, அவன் ஒவ்வொரு வணக்கத்தின் போதும் அனுவுக்கு எதிராக நின்றுகொண்டு அவள் அவனை வணங்கியதாக நினைத்து மகிழ்ந்தான்!
பானுவின் உழைப்பு அவர்களுடைய ஒவ்வொரு அசைவிலும் பாவத்திலும் பளிச்சிட, கூட்டத்தின் ஒருமித்த கரவொலிகளைப் பெற்று, விழாத்தலைவர் கொடுத்த பரிசுப் பொருட்களைப் பெருமிதத்துடன் சுமந்துகொண்டு முத்துவின் குதிரை வண்டியில் ஏறி வீட்டுக்கு வந்து விடியவிடிய அந்த விழாவைப் பேசித் தீர்த்தது எப்போதும் மறக்க முடியாத நிகழ்ச்சி.

ப்புறம் அந்த தீபாவளிப் பண்டிகை நாட்கள்.

அப்பாவுக்கு அனுவை அறிமுகப்படுத்தி வைக்கும் நாட்கள்.

அதுவரை அவள்மேல் அக்கறை கொண்டிராத அவர் அன்று தானே அனுவைக் கூப்பிட்டு வெடிகள் வெடிக்கக் கற்றுக் கொடுப்பார்.

ஒரு நீளமான கம்பி மத்தாப்புக் கம்பி அல்லது நீண்ட தட்டைக் குச்சியில் செருகப்பட்ட கம்பியில் ஓலைவெடி, யானைவெடி அல்லது ஊசிவெடியைச் செருகி ஒவ்வொருவராகக் கூப்பிட்டுக் கையில் கொடுத்து அப்பா அவர்கள் கையைப் பிடித்துக்கொள்ள, வெடியை அவர்கள் விளக்கில் காட்டிப் பொறி வந்ததும் முகத்தைத் திருப்பிக்கொண்டு கையை முடிந்தவரை தள்ளி நீட்ட, மற்றொரு கையால் காதைப் பொத்துவதற்குள்---’டமால்!’

உறவினர்கள் வீட்டில் யாருக்காவது தலைதீபாவளி என்றால் கேட்கவே வேண்டாம். நிறைய வெடிகளை ஒரு பெரிய தகர டின்னில் போட்டு ஒட்டுமொத்தமாக வெடித்து துவம்சம் செய்துவிடுவார்கள்.

தீபாவளி நாட்களில் தொடர்ந்து ஒரு வாரம் அக்ரஹாரத்தில் பெண்கள் கோலாட்டம் நடைபெறும். இப்போது நினைத்துப் பார்க்கும்போது அது ஒரு அரிய கலை நிகழ்ச்சியாகப் பட்டது.

பள்ளிக் கூடப் பெண்கள் முதல் மடிசார் புடவை கட்டிய மாமிகள் வரை எல்லோரும் ஒன்றாகவும், தனித்தனிக் குழுக்களாகவும், அக்ரஹாரத் தெருக்களில் ஊர்வலம் வந்து, வயது வித்தியாசமின்றிக் கோலடிக்கும் ஓசை தெரு முழுவதும் கேட்கும்.

அந்த நாட்களில் அவனும் சந்துருவும் முரளியும் ’சயன்ஸ்’ வாத்தியார் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு சலிக்காமல் கோலாட்டம் பார்ப்பதுண்டு.

பட்டும் சின்னாள பட்டும்
தினுசு தினுசான உடைகளில்
ஜரிகை வரிகளில் இழைகளில்
கண்ணைப் பறிக்கும் நிறங்களில்
தெருவிளக்கில் மின்னிப் பளிச்சிட

கால்கள் அப்பழுக்கு இல்லாத
வட்டமான பாதையில் நடமிட
வண்ண வண்ண கோல்களைத்
தாங்கிய கைகள் யாவும்
ஆரங் களாகக் குவிந்தும்
தலைகளுக்கு மேலே உயர்ந்தும்
ஒன்றை ஒன்று எதிர்கொண்டும்
ஓயாத ரிதங்களில் சப்திக்க

அந்தத் தாளத்தை உள்ளடக்கி
இனிய குரலொன்று உரக்கக்
கண்ணனின் லீலைகளைப் பாட
எல்லோரும் திரும்பச் சொல்ல...


கோலேன கோலே ஏ
பாலா நீலா லா கோலே
பால பாவன லீல விலோசன
பால ப்ரபஞ்ச கோலே ஏ

சந்தன வனந்தனிலே ஏ -- நாங்கள் பெண்கள்
ஷெண்பக ஒடையிலே
அந்தத் துகிலெடுத்துக் கரம்மேல்கரம் வைத்து
விளையாடும் வேளையிலே ஏ

பசுவா பசுவையா ஆ -- உமக்கு
பணம் கொடுப்பா ருமில்லை
இன்றைக்கு வாவென்று நாளைக்கு வாவென்று
ஏய்க்கிறாரே பசுவே ஏ!

பால் செம்பு கொண்டு ஊ -- நாங்கள் பெண்கள்
பாலென்று கூவையிலே
பாலைத் தாடி என்று க்ருஷ்ணன்
பற்களை உடைத் தாண்டி ஈ!

தயிர்ச் செம்பு கொண்டு ஊ -- நாங்கள் பெண்கள்
தயிரென்று கூவையிலே
தயிரைத் தாடி என்று க்ருஷ்ணன்
தாடையில் அடித் தாண்டி ஈ!

எட்டடிக் குச்சிக் குள்ளே ஏ -- ஸ்வாமி
எத்தனை நாளிருப்பேன்?
மச்சுவீடு கட்டித் தாரும் -- ஸ்வாமி
மலையாளம் போய்வா ரேன்.


இவர்களுக்குச் சரியாக கோலாட்டத்தில் கலந்துகொண்டு ஆர்வத்துடன் பாடி வலம் வரும் அனுவையும் வசந்தியையும் அவர்கள் திண்ணையில் உட்கார்ந்து கதை பேசியபடியே பார்த்து மகிழ்வார்கள். சமயத்தில் முரளியும் சந்துருவும் ’போர்’ என்று நழுவிவிட, அவன் மட்டும் தனியாக உட்கார்ந்துகொண்டு வசந்தியை ஊக்குவிக்கும் பாவனையில் அனுவின் நடவடிக்கைகளைக் கண்கொட்டாமல் பார்த்து மகிழ்வான்.

எல்லோருடனும் சரிக்குச் சரியாக ஆர்வத்துடன் பங்கெடுத்துக்கொண்டு ("பானுக்கா, நான் இன்னிக்கு கோலாட்டத்தில உங்க பக்கத்தில, என்ன?"), பாடல்களை உன்னிப்பாக கவனித்துத் தப்பில்லாமல் பாடி, கோலாட்டக்கலையின் நுணுக்கமான பயிற்சிகளை நளினமாகச் செய்யும் அனுவின் நடவடிக்கைகளை, கூட்டத்தில் அவள் அடிக்கடி காணாமல் போய் வருவதை, அதுவும் அவள் அழைப்பின் பேரில் பார்த்துக்கொண்டிருப்பது எப்படி அலுக்கும்?

திடீரென்று ஒருநாள் அனுவைக் காணவில்லை!

ஆறாம் வகுப்பின் முடிவில் பரீட்சைகளை நன்றாக எழுதிவிட்டு, கடைசி பரீட்சையான ’ட்ராயிங்’ பேப்பரில் அவன் வரைந்த அதே தாஜ்மஹால் படத்தை அவளும் வரைந்துவிட்டு---

"ராஜா, நீ என்ன படம் போட்டே?"

"தாஜ்மஹால். நீ?"

"அட! நானும் அதேதான். அழஹ்ஹா குண்டு குண்டா உருண்டையா போட்டு நல்லா மஞ்சள் கலர் அடிச்சு--நிச்சயம் எழுவதுக்குக் குறையாது. உனக்கு?"

"நானும் மஞ்சள் கலர் அடிச்சு உன்னை மாதிரியே நல்லா வரைஞ்சிருக்கேன் அனு."

"ஹை! ஸேம் பிஞ்ச், நீயும் நானும் ஒண்ணு!"

"உன் வாயில மண்ணு!"

"..."

"என்ன்ன அனு, விளயாட்டுக்குச் சொன்னா கோவிச்சுக்கறே பத்தியா? எங்கே, நம்ம ’ஸோஷல் ஸ்டடீஸ்’ டீச்சர் மாதிரி மூஞ்சிய வெச்சுக்காம சிரி, பார்க்கலாம்!"

’ஸோஷல் ஸ்டடீஸ்’ டீச்சரை நினைத்துக் கண்களில் நீர் வரும்வரை கலகலவென்று வழியெல்லாம் சிரித்துக்கொண்டே வந்தவள்தான்.

அவள் வீடு வந்ததும், "இந்த அடியை மறக்காதே ராஜா!" என்று செல்லமாக அவன் முதுகில் அடித்துவிட்டு ஹவாய் செருப்பு படபடக்க, ஜியொமெட்ரி பாக்ஸ் கலகலக்க ஓடி மறைந்தவள்தான்! கோடை விடுமுறைக்குப் பின் வரவே இல்லை.

கேட்டால் அவள் மதுரையில் ஒரு ’கான்வென்ட் ஸ்கூலில்’ சேர்ந்துவிட்டதாக வசந்தி கூறினாள்.

*** *** ***
 
Last edited:
8

பிள்ளைப் பிராயத்திலே -- அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட்டேன்
---மஹாகவி பாரதியார், மூன்று காதல்


தன்பின் நாலைந்து வருடங்கள் கழித்து அனுவைப் பார்த்தபோது அடையாளம் தெரியவில்லை.

வசந்தியைவிட அழகாக, நிறமாக, அவனைவிட இப்போதும் கொஞ்சம் உயரமாக, பளீரென்ற முகத்துடன், பூரித்த வளர்ச்சியுடன், பெண்மையின் முழுமையான பொலிவில் கம்பீரமான தோற்றத்துடன்...

என்ன அழகு அது!

பார்ப்பவர் கண்களைக் கிறங்க அடிப்பதாய், தலையைச் சிலிர்த்துக்கொண்டு, கண்களைக் கசக்கிக்கொண்டு, தன் கண்களையே நம்பமுடியாமல் திரும்பிப் பார்க்கச் செய்வதாய், ’யாரிவள்?’ என்ற கேள்விக்குறியை ஒவ்வொரு தலைக்கு மேலும் உலவவிட்டு, வானில் உலவும் ஒரு தேவலோகப் பெண் போல...

வழக்கம்போல் மாலை பிள்ளையார் கோவிலுக்குப் போய்விட்டு வரும்போது தினமும் அனு வீட்டு வாசலின் வெறுமையையே கண்டு பழகிப் போய்விட்ட அசுவாரஸ்யத்துடன் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு நடந்தவன் கால்களை லகான் போட்டு இழுத்து நிறுத்தியது அந்தக் காட்சி.

கொஞ்ச தூரத்தில் வரும்போதே அவன் அவளைக் கவனித்துவிட்டான். வாசலில் உட்கார்ந்துகொண்டு குழந்தைகள் புழுதியைக் கிளப்பியபடி விளையாடிக் கொண்டிருந்ததை உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

அடுத்த நிமிடம் மனதில் பழைய நினைவுகள் பொங்கித் ததும்ப, நினைவுகளின் அலையடிப்பின் இதயம் படபடவென்று சிறகடித்து காதில் சப்திக்க, அவனை அவள் பார்த்தவுடன் எப்படி நடந்துகொள்ளக் கூடும் என்று மனம் ஆவலுடன் கணிக்க, ஒருவேளை அடையாளம் தெரிந்துகொள்ள மாட்டாளோ என்ற பயம் எட்டிப் பார்க்க, எல்லாவற்றையும் அவளுடன் முழுமூச்சாகப் பேசித் தீர்த்துவிட வேண்டும் என்ற ஆசை உந்த, வேகமாக நடந்துவந்தபோது---

அவனைக் கண்டதும் கண்கள் சூரியகாந்திப் பூப்போல் விரிய முகத்தில் புன்னகை அரும்ப அவள் எழுந்து நின்றபோது பதிலுக்கு அவனால் ஒரு புன்சிரிப்பைத்தான் தர முடிந்தது.

என் அனைத்து எதிர்பார்ப்புகளையும் மீறி நாக்கின் முடிச்சு அவிழ மறுக்க, என்னால் மௌனியாகத்தான் நிற்க முடிந்தது!

என்று டயரியில் எழுதியிருந்ததை இப்போது படிக்கும்போதும் அந்த சோகம் அதே கடுமையுடன் மனதில் விரவியது.

ஷேக்ஸ்பியரின் As You Like It நாடகத்தின் நாயகன் ஆலிவர் அந்த மல்யுத்தப் போட்டியில் வென்றதைப் பாராட்டி இளவரசி ரோஸலின் ஓர் அழகிய முத்துமாலையை அவன் கழுத்தில் அணிவித்தபோது, அவன் வியப்பில் வாய்மூடி மௌனியாக நின்ற நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.

What passion hangs these weights upon my tongue?

அந்த வரிகளைக் கல்லூரியில் தன் வகுப்பில் விளக்கிச் சொல்லும்போது ஓர் அநாமதேய உதாரணமாக அவன் இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடுவது வழக்கம்.

ஆலிவர்-ரோஸலினாவது ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாதவர்கள். ஆனால் அவனும் அனுவும்? அவனால் எப்படித்தான் அன்று அதுபோல் நடந்துகொள்ள முடிந்தது என்று இப்போதும் புரியவில்லை.

’என்ன அனு, சௌக்யமா?’ என்றுகூட ஒரு வார்த்தை கேட்காமல்...

அவன் மௌனத்தைப் பார்த்துத்தானோ என்னவோ அவளும் ஒன்றுமே கேட்காமல்...

"வசந்தி, இன்னைக்கு நான் அனுவைப் பார்த்தேன். அவாத்து வாசல்ல உட்கார்ந்திருந்தா."

"அப்படியா? என்ன சொன்னா?"

"என்னப் பார்த்து சிரிச்சா. நான் ஒண்ணும் கேட்கலை."

ன்று மட்டுமில்லை. அதற்குப் பின் பல நாட்கள் அனுவைக் கடந்து கோவிலுக்கோ கடைக்கோ போகும்போதும் சரி, வரும்போதும் சரி, அவனால் ஒரு வார்த்தைகூடப் பேச முடியவில்லை!

பதநீர் விற்பவன் சுமையைப் போல் ஒரு பக்கம் நினைவுகளும் மற்றொரு பக்கம் மௌனமும் போட்டு அழுத்த, கண்கள் மட்டும் எந்தத் தளைக்கும் கட்டுப்படாமல் அனுவையே பார்த்துக் கொண்டிருக்க நடக்கத்தான் முடிந்தது.

ஓரிரு முறை அவள் அவன் வீட்டிற்கு வந்திருந்தபோது கூட அவளும் வசந்தியும் பேசிக்கொண்டிருந்ததை மாடி ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருக்கத்தான் முடிந்தது.

காற்றாட மாடிக்கு வந்து பேசமாட்டார்களா என்று ஏங்கத்தான் முடிந்தது.

அவன்*இதுவரை அறிந்த பழகிய அனுராதா
கால ஓட்டத்தின் புகைவண்டிப் பயணத்தில்
பின்னால் பின்னால் சென்று மறைந்தே போக

அவளைப் பற்றிய நீங்காத நினைவுகள் மட்டும்
தூரத்தே அடிவானம் ஒட்டினாற் போலத் தெரியும்
பசுமைத் தீவுகள் போலப் பிடிவாதத்துடன் தொடர்ந்துவர

இப்போது பார்க்கும் இந்த ’டீனேஜ்’ அனுகூட
எவ்வளவு நாளைக்கு சாஸ்வதம்
என்ற கேள்வி தலைதூக்க

கொஞ்ச நாளில் அவளும்
வெறும் ரயிலின் சிநேகிதமாக
ஏதோ தெரியாத நிலையத்தில்
அவனறியாமல் இறங்கிச் சென்றுவிட

அப்பாவின் கடிதம்தான் கையில் நிரடியது
உண்மையின் இன்மை யாக
அல்லது இன்மையின் உண்மை யாக.


னுவை அவன் கடைசியாகப் பார்த்தது ஒரு பொம்மலாட்ட நிகழ்ச்சியில். ஶ்ரீராம நவமி உற்சவத்தின் போது என்று ஞாபகம்.

அவள் வீட்டு வாசலில் மேடை அமைத்து, பொம்மலாட்டக் கலையில் பல விருதுகள் பெற்ற வல்லுநர் ஒருவர் ஒரு நீண்ட சொற்பொழிவாற்றிவிட்டு, தொடர்ந்து நாலைந்து நாள் ’வள்ளி திருமணம், அரிச்சந்திர புராணம், மார்க்கண்டேய புராணம்’ போன்ற கதைகளைத் தத்ரூபமாக பொம்மைகளிடையே உலவவிட்டதை ஊரே திரண்டு ரசித்தது.

அந்த நாலைந்து நாட்களும் அவன் சயன்ஸ் வாத்தியார் வீட்டு மொட்டை மாடியில் உட்கார்ந்துகொண்டு அனுவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆசிரியர் பேசுவது காதில் விழாமல், பக்கத்தில் சந்துரு, முரளி இருப்பதை மறந்து, கிழே கூட்டத்தில் பானுவுடன் அமர்ந்திருந்த வசந்தி அடிக்கடி அவனைப் பார்ப்பதைப் பொருட்படுத்தாமல், அவள் வீட்டு வாசல்படியில் சில குழந்தைகளுடன் அமர்ந்தபடி நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்த அனுவின் ஒவ்வொரு முக பாவத்தையும் செயலையும் அவனது கண்கள் ஒன்று விடாமல் மனதில் பதிவுசெய்ய...

எவ்வளவு அழகாக இருக்கிறாள்!

அவள் தோழமைக்காக ஏங்கிய மனம் பலவாறாகக் கணக்குப் போட்டுப் பார்த்தது. எப்படியாவது மறுநாள் அவளோடு பேசி, தோழமையைப் புதுப்பித்து, அவள் எண்ணங்களை அறிந்துகொண்டு, எல்லாவற்றையும் நேர் செய்துகொண்டு, அவளுடைய குடும்பத்தார்க்கு அவனை அறிமுகப் படுத்திக்கொண்டு, முடிந்தால் அவ்வப்போது கடிதம் எழுத வழிவகை செய்துகொண்டு, பழைய நாட்களின் மலர்ச்சியை மீண்டும் மலரச் செய்ய உறுதி எடுத்துக் கொண்டபோது...

மறுநாள் அவள் ஊருக்குப் போய்விட்டாள்.
 
தன்பின் இரண்டு வருடங்களில் அனு அவன் மனமாகிய வானத்தில் புதிதாக முளைத்த தாரகைகளிடையே மெல்ல மெல்லத் தேய்ந்து அவள் முகம் கூடக் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துபோக---

ஆசை முக மறந்து போச்சே---இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம்---எனில்
நினைவு முகமறக்க லாமோ?


கல்லூரியில் பயின்றபோது ஒருநாள் நிலவும் நட்சத்திரங்களும் அறவே மறந்து சுற்றிலும் இருளானபோது அவன் மனம் திடுக்கிட்டு விழித்துக்கொள்ள, பலபலவென்று விடிந்து காதல் வாழ்வின் லட்சியமும் அன்றைய வெறுமையும் பிடிபட, கிறிஸ்து தன் கடைசி சாப்பாட்டில் பயன்படுத்திய அந்தப் புனிதக் கிண்ணத்தைத் தேடும் பக்தனின் உறுதியுடன் அவன் நீண்டதொரு பயணத்துக்கு தன்னைத் தயார்படுத்திக் கொண்டு, முன்னேற்பாடாக பழைய நினைவுகளை எல்லாம் டயரி வடிவில் அழகாகத் தொகுத்து வைத்துக்கொண்டு, பயணத்தின் முதல் கட்டமாக அனுவுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினான்.

என்ன எழுதினான் என்பது சரியாக நினைவில்லை. நகலும் கைவசம் வைத்திருக்கவில்லை. ஆனால் கடிதம் எழுதிய சூழ்நிலையும், பின்னணியாக அமைந்த நம்பிக்கைகளும் தெரிந்தோ தெரியாமலோ புறக்கணிக்கப்பட்டு, வார்த்தைகள் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டு, தேநீர்க் கோப்பையில் உருவான புயல் பெரிதுபடுத்தப்பட்டு, அவனுக்கும் அனுவுக்கும் இடையில் இருந்த ஒரே தொடர்பின் சாயலும்கூட அறுந்துபோன நிகழ்ச்சியைப் படிக்கும்போது கண்கள் பனித்தன.

எப்படி அவனால் அந்த மாதிரி திடீரென்று அனுவுக்கு எழுத முடிந்தது என்று நினைத்துப் பார்க்கவே புதிராகவும் வியப்பாகவும் இருந்தது.

ன்ன இருந்தாலும் ஒரு பெண்ணுக்கு---அதுவும் அவன் குடும்பத்தாலோ அவள் குடும்பத்தாலோ அல்லது இந்த சமூகத்தாலோ அங்கீகரிக்கப்பட்ட உறவு முறைகளுக்கு அப்பாற்பட்டு, பெண் என்ற காரணத்தாலேயே ’ஃப்ரெண்ட்’ என்றுகூட அங்கீகரிக்கப்படாத நிலையில் நிற்கும் ஒரு பெண்ணுக்கு---இப்படியெல்லாம் பகுத்தறியத் தோன்றாமல், விளைவுகளைப் பற்றிக் கொஞ்சம்கூடக் கவலைப்படாமல், அவன் செயலை அனு மட்டும் அங்கீகரித்தால்கூடப் போதும் ஆனால் அவள் சம்மதிப்பாளா என்ற கேள்வி கவலையை எதிரொலிக்க,

கல்லூரி ஹாஸ்டல் அளித்த தனிமை மற்றும் தைரியம், மணியன் எழுதிய மேனாட்டுப் பயணக் கட்டுரைகளின் கவர்ச்சி, அவன் படித்த ஆங்கில நாவல்களில்---குறிப்பாக ஜேன் ஆஸ்டின்---’இன்டெலெக்சுவல் ரொமான்ஸ்’ தோற்றுவித்த கனவுகள், டாக்டர் ஶ்ரீநிவாச சாஸ்த்ரியின் கட்டுரை A Letter from London விவரித்த ஆங்கில வாழ்க்கை முறைகளில் ஈடுபாடு, முக்கியமாகக் கடிதங்களின் அந்தரங்கத்திற்கு அவர்கள் தரும் மதிப்பில் பொறாமை போன்ற உணர்வுகளின் பிண்ணணியில்,

ஜேன் ஆஸ்டினின் Pride and Prejudice நாவலில் எலிசபெத் தனக்கு வரும் கடிதங்களை எவ்வளவு ’பெர்சனல்’-ஆக வைத்துக்கொள்கிறாள்! அவள் பெற்றோர் உட்பட யாருமே அவளுக்கு வரும் கடிதங்களைப் பற்றி ஆர்வம் கொள்வதில்லை. அவளுடன் ஓர் உண்மையான தோழியைப் போல் பழகும் தன் மூத்த சகோதரிக்கும்கூட ஒருசில பகுதிகளைப் படித்துக் காட்டுவதோடு சரி.

அவன் வீட்டில் இப்படி நடக்க முடியுமா?
"யார் லெட்டர்?’
"பாஸ்கர்-பா."
"எந்த பாஸ்கர்?"
"அதாம்பா என் ஃப்ரெண்ட் பாஸ்கர். காலேஜ்ல என்னோட க்ளாஸ்மேட். எனக்கு எழுயிருக்கான்."
"ஏண்டா, அப்பாட்டதான் கொஞ்சம் காமிக்கறது? அப்படி என்ன சிதம்பர ரகசியம் அந்தக் கடுதாசியில?"​

அனுவின் தோழமையைப் புதுப்பித்துக்கொள்ளும் ஆர்வமும் கவலையும் அவசரமும் போட்டு உந்த, அவளை "மை டியர் ஃப்ரெண்ட் அனு" என்று விளித்து, பழைய நாட்களை மீண்டும் அவளுக்கு நினைவூட்ட முயற்சிசெய்து, அவன் அவள்மேல் கொண்டுள்ள பாசத்தையும் நேசத்தையும் உணர்த்த மெக்காலே-ஹன்னாவையும் வேர்ட்ஸ்வொர்த்-டொரதியையும், ஜேன் ஆஸ்டினின் காதலர்களையும் இடம் தெரியாமல் உதாரணம் காட்டி,

அவன் வாழ்க்கையில் கிடைத்த முதல் தோழியான அனுவின் நட்பை மீண்டும் மலரச்செய்து அவள் சம்மதத்துடன் தொடர்ந்து கடிதம் எழுத வழிவகை செய்துகொள்ள வேண்டி,

இந்தமாதிரி கடிதம் எழுதுவது அவள் பெற்றோருக்குப் பிடிக்காது என்று அவள் கருதினால் அவன் கடிதங்களை அவள் மட்டுமே ரகசியமாக வைத்துக்கொள்ளக் கோரி,

அவள் கல்லூரி முகவரிக்கு எழுதிய நீண்ட கடிதத்திற்கு அனுவிடமிருந்து ஒரு நீண்ட பெருமூச்சுதான் பதிலாகக் கிடைத்தது,

ஒரு சின்ன ’இன்லாண்ட் லெட்டர்’ வடிவில்.

*** *** ***

குறிப்பு:
"என்ன இருந்தாலும் ஒரு பெண்ணுக்கு" என்று தொடங்கி "’இன்லாண்ட் லெட்டர்’ வடிவில்" என்பது வரை வருவது நீளமான ஒரே வாக்கியம் என்பதை அறிக. தமிழ் நாவல்களில் இதுதான் மிகவும் நீளமான வாக்கியமாக இருக்கலாம்.

இந்த நீள வாக்கியத்தை நான் ஏற்கனவே இங்கு பதிவு செய்திருக்கிறேன்:
http://www.tamilbrahmins.com/general-discussions/8940-longest-sentence-i-know-2.html#post137627
 
Last edited:
9

மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்!
---மஹாகவி பாரதியார், விடுதலை


ன்புள்ள ராஜா,

உன் விரிவான, நீண்ட கடிதம் கண்டு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தேன். எனக்கென்னவோ நாம் இருவரும் நண்பர்களாக இருப்பதைவிட, சகோதர பாசத்துடன் பழகுவது மேல் என்று தோன்றுகிறது. நீ என்ன நினைக்கிறாய்?

கடிதம் எழுவதற்கு முன் ஒரு தடவைக்கு இரண்டு தடவையாக யோசித்து எழுதவேண்டும். எண்ணங்களுக்கும் எழுத்துகளுக்கும் நடுவில் உள்ள இடைவெளி எப்போதுமே பெரியது. பொல்லாதது.

பழைய நாட்களை நான் மறக்கவில்லை. ஆனால் உன் கடிதத்தில் என்னால் பழைய ராஜாவைப் பார்க்க முடியவில்லை. இப்படி நான் எழுத நேர்வதற்காக என்னை மன்னித்துவிடு. உன் முன்யோசனை இல்லாத கடிதம் என்னை எவ்வளவு தூரம் பாதித்துவிட்டது என்பது உனக்குத் தெரியாது.

எங்கள் கல்லூரியில் ஒரு கெட்ட வழக்கம். மாணவியருக்கு வரும் கடிதங்களை---அவர்கள் ’டே ஸ்காலர்’களாக இருப்பினும்---பிரித்துப் படித்துப் பார்த்துவிட்டுத்தான் அவர்களிடம் கொடுப்பார்கள். அதேபோல் ஹாஸ்டல் மாணவியர் எழுதும் கடிதங்களை ’வார்டன்’ படித்த பின்னரே ’போஸ்ட்’ செய்ய அனுமதிப்பார்கள். இந்த விஷயம் உனக்குத் தெரியாமல் போனது ஆச்சரியம்.

உன் கடிதம் வந்த அன்று நான் ஒருவாரம் உடல்நலிவு காரணமாக ’லீவில்’ இருந்தேன். என் தோழி ஒருத்தி திடீரென்று ஒருநாள் அம்மாவின் முன் பிரிக்கப்பட்ட உன் கடிதத்தைக் கொடுத்தபோது நான் அடைந்த வேதனைக்கு அளவில்லை. இந்நிலையில் எப்படி நான் உன் கடிதத்தை ’ரகசியமாக’ வைத்திருக்க முடியும்?

இந்த ’ரகசியம்’ என்ற பதத்துக்கு எனக்குப் பொருள் புரியவில்லை. அந்த வார்த்தை ஒரு ’டைனமைட்’ என்று உனக்குத் தெரியவில்லையா?

என் அம்மாவிடம் நான் எல்லா விஷயங்களையும் கூறிவிட்டேன். என்னைப் புரியவைக்க எனக்கு வேறுவழி தோன்றவில்லை.

என் மனம் மிக மென்மையானது என்று நீ அறிவாய். அதை ஒரு முள்ளால்---அது பேனா முனையாக இருந்தாலும் கூட---குத்திப் பார்க்க உனக்கு எப்படி மனசு வந்தது?

ஆண்-பேண் நட்பும் தோழமையும் கதைகளில் மட்டுமே சாத்தியம். நடைமுறையில் சமூகம் ஒத்துக்கொள்ளாது. எலிசபெத், ஜேன், எம்மா போன்றோர் ஆங்கில சமூகத்தில் இயற்கையாக உலாவலாம். இங்கெல்லாம் அவர்கள் வெறும் கதைப் பாத்திரங்கள் தான்.

இதையெல்லாம் நான் எழுதும்போது கொஞ்சம் ’சென்டிமென்டல்’ஆகத் தோன்றலாம். ஆனால் நடைமுறையில் பார்க்கும்போது சில உண்மைகளையும் எல்லைகளையும் புரிந்துகொள்ள வேண்டும். புரிந்துகொள்வாய் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

எனவே என் கல்லூரி முகவரிக்கோ, வீட்டு முகவரிக்கோ அல்லது வேறெந்த முகவரிக்கோ மேற்கொண்டு கடிதம் எழுதி வருத்த வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன்.

I do not expect any more letters from you.

அன்புடன்,
அனு

பின்குறிப்பு:
1. இந்தக் கடிதத்தை என் அம்மாவிடம் காட்டிய பின்னரே தபாலில் சேர்க்கிறேன்.
2. உன் கடிதத்தால் நான் வெகுவாகப் பாதிக்கப் பட்டாலும் ’தவறுகள் குற்றங்கள் அல்ல’ என்ற நியதிப்படி நடந்தவற்றை எளிதாக எடுத்துக்கொள்ளக் கோருகிறேன்.
---அனு


ந்த நாள் மாலை.

கல்லூரி ’ஃபிலிம் ஷோ’ கூடப் போகாமல் ஹாஸ்டல் அறைக்கு விரைந்து வந்து தனிமையில் ஆவலுடன் அவன் அனுவின் கடித்தத்தைப் பிரித்தபோது---

அந்த ’நண்பர்களாக இருப்பதைவிட’
என்று எழுதி யிருந்த இடத்தில்
பற்றிக் கொண்ட விழிகளின் தீப்பொறி

அவனொன்றும் செய்ய முடியாமல் பார்த்திருக்க,
சுறுசுறு வென்று வரிகளில் அலைந்து,
நெளிந்து பரவிக் கடைசியாக
’டைனமைட்’ கட்டுகளைத் தொட்டுவிட,

கண்கள் குருடாகும் ஒளியில்,
காது செவிடாகும் ஒலியில்,
அவன்மிக ஆசையுடன் கட்டியிருந்த கோட்டைகள்,
அமைத்திருந்த பாலங்கள் தகர்ந்து விழுந்து
கீழே காட்டாற்று வெள்ளம் அடித்துப் போக,

மனம்மட்டும் இப்போதும் பிடிவா தமாக
எதையும் நம்பிட மறுத்து ஏதோவோர்
நம்பிக்கை இழையின் வலிமையில்
சிலந்திக் கூடுகள் பின்ன முயன்று,
ஜேன்*ஆஸ்டின் நாவல் ’எம்மா’வில் வருகிற
அந்த மிஸ்டர் நைட்லியை நினைத்து---

Whom are you going to dance with?" asked Mr. Knightley.

She hesitated a moment, and then replied, "With you, if you will ask me."

"Will you?" said he, offering his hand.

"Indeed I will. You have shown that you can dance, and you know we are not really so much brother and sister as to make it all improper."

"Brother and sister! No, indeed!"
 
*************************
மார்ச் 10. வெள்ளி
*************************
கல்லூரியில் மாணவியருக்கு வரும் கடிதங்களைப் படிப்பது---அதுவும் ’டே ஸ்காலர்’களைக் கூட நம்பாமல்---சே, இதென்ன காட்டுமிராண்டித் தனமான செயல்! சட்டத்துக்கு விரோதமானது என்றுகூட சொல்லலாம். எப்போதுதான் நம் மகளிர் கல்லூரிகளில் இதுபோன்ற பத்தாம்பசலித் தனமான வழக்கங்கள் ஒழியுமோ? பாரதியும் திரு.வி.க.வும், காந்தியடிகளும் முன்னின்று நடத்திய பெண் விடுதலைப் போராட்டம் வெறும் வாய்ப் பேச்சாகிவிட்டது வருந்தத் தக்கது.

என்று அவன் டயரியில் எழுதியிருந்ததைப் படிக்கும்போது, அப்போது அதைவிட வேறு ஒன்றும் துணிய முடியாமல் இருந்த அவன் இயலாமையைக் குறித்து இப்போதும் மனம் வருந்தினான்.

I do not expect any more letters from you!

அடுத்த சில மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக மனம் ஒரு நிலைக்கு வந்து இலேசாகி உண்மையை எதிர்கொண்டு, தினமும் ஒருமுறையாவது அனுவை நினைத்து அவள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளைப் படிப்பதையும், படித்து அந்த இனிய நினைவுகளில் சிலையாகித் தன்னை மறந்து மகிழ்வதையும் குறைத்துக்கொண்டு, இப்படியெல்லாம் செய்வது இனி சரியல்ல என்ற எண்ணம் வலுப்பெற, அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துவிட முயற்சிக்க, இலக்கியப் படிப்பின் ஈடுபாடுகளில் அனுவின் நினைவுகள் தேய்ந்து, அந்த ’பன்டோரா பாக்ஸ்’ நிரந்தரமாக மூடப்பட்டுவிட, கனவுகள் மட்டும் அவ்வப்போது மனதில் ஆழப் பதிந்துவிட்ட ஆசைகளை வானவில்லிட்டுக் காட்டின.

அவன் கனவுகளில்...

அனு அவனைவிட உயரம் குறைந்து பளீரென்று தோன்றி தினமும் அவன் தோள்களைப் பற்றிக்கொண்டு மிதந்து பள்ளிக்கூடம் போய்ப் படித்து, பழமொழிகளைத் தவறில்லாமல் சொல்லிப் பாராட்டுகள் பெற்று, அவன் அப்பாவும் தன் சுபாவத்தை மாற்றிக்கொண்டு அவளுடன் சகஜமாக உரையாடி---

’அப்பா, இந்தத் தடவையும் அனுதான் ’ஃபர்ஸ்ட் ராங்க்’!’

’அவளுக்கென்னடா ரொம்பத் தங்கமான பொண்ணு, படிக்கறதுக்குக் கேக்கவா வேணும்?’

திடீரென்று ஒருநாள் அவர்களுக் கிடையில் திரை தொங்கப் பேசா மடந்தையாகி, அவளும் வசந்தியும் பேசிக்கொள்வதை அவன் மாடி ஜன்னம் வெழியே ஒட்டுக்கேட்டு---

’ராஜா ஏன் இப்பல்லாம் பேசவே மாட்டேங்கறான் வசந்தி?’

’அவன் ரொம்ப ’ஷை டைப்’ அனு. நீ மட்டும் அவனோட பேசறேயாக்கும்?’

’சீ, நான் எப்படி அவனோடு வலிய போய்ப் பேசறது? உங்காத்ல தப்பா நெனச்சுக்க மாட்டா?’

அப்புறம் ஒருநாள் அவள் கல்லூரி விடுமுறையில் அவன் வீட்டுக்கு வர, அவன் அவளை மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் எதிர்கொண்டு வரவேற்று,

’அம்மாவும் வசந்தியும் கோவிலுக்குப் போயிருக்கா அனு. உக்காந்துக்கோ, இப்ப வந்துடுவா.’

’அப்பா?’

’அப்பா வாக்கிங் போயிருக்கா.’

’அப்ப நான்--’

’ஒரு நிமிஷம் அனு---’

என்ன என்பதுபோல் அவள் பார்க்க, அவன் மூச்சைப் பிடித்துக்கொண்டு தழதழத்த குரலில்,

’ஐ’ம் ஸாரி ஃபார் தட் லெட்டர், அனு. அது உனக்கு அவ்ளோதூரம் ’எம்பாரஸ்ஸிங்’கா ஆய்டும்னு நான் கனவுலகூட நினைக்கல. என்ன மடத்தனம் பண்ணிட்டேன் இல்லே? உன்னோட லெட்டரை என்னால ஜீரணிக்கவே முடியலை அனு. ’இன்ஃபாக்ட்’ உன்னை மறந்துட்டுகூட இருக்கமுடியும் என்னால, உனக்குத் தோழமையில இஷ்டமில்லைங்கற பட்சத்துல. அடே சமயம் உன்னைப்பத்தி யாராவது ஏதாவது சொன்னால் எனக்குப் பொறுக்காது. அந்த மாதிரி ஒரு சந்தர்பத்தை நானே என்னை அறியாமல் உண்டாக்கி உனக்கு அவப்பெயர் வரக் காரணமாய்ட்டேன்னு தெரிஞ்சபோது எனக்கு எம்மேலேயே வெறுப்பாய்டுத்து அனு.

’ஆனால் அது நான் தெரியாம செஞ்சிட்ட தப்புங்கறதைக்கூட ’எக்ஸ்ப்ளைன்’ பண்ணமுடியாமப் பண்ணிட்டையே அனு, அதுதான் எனக்கு வருத்தம். மெல்லவும் முடியாம, விழுங்கவும் முடியாம, என்ன அவஸ்தை தெரியுமா? நல்லவேளை, இப்பவாவது உன்னைப் பார்க்கற சந்தர்ப்பம் கிடைச்சது. ப்ளீஸ், என்னை மன்னிச்சிடு அனு!’...

கடைசியாக அந்தக் கனவில் ஒருநாள் அவள் அவனுக்கு ஒரு ’இன்விடேஷன்’கூட அனுப்பாமல் கல்யாணம் செய்துகொள்ள, நாதஸ்வர ஓசையில் அவன் விழித்துக்கொண்டு கனவுதானே என்று கொஞ்சம் ஆறுதல் அடைந்தும், மனம் அந்த சாத்தியத்தை எடைபோட்டுப் பார்க்க, ’ஆல் இன் த கேம்’ என்ற சந்நியாச பாவத்துடன் பெருமூச்சு விட்டுக்கொண்டு ஓய்ந்துபோனான்.

*** *** ***
 
10

அன்பெனும் பெருவெள்ளம் இழுக்குமேல்
அதனை யாவர் பிழைத்திட வல்லரே?
---மஹாகவி பாரதியார், சுயசரிதை 6


னுவைப் பற்றி எழுதியிருந்த கடைசி வரிகளில் கண்கள் ஓடியபோது எழுந்த ஆழ்ந்த பெருமூச்சு திடீரென்று வெளியே ஏற்பட்ட ஆரவாரத்தில் அடங்கிப் போயிற்று.

தலையைத் திருப்பி வெளியே பார்த்தவன் கண்களில் பளிச்சிட்டு மறைந்தது திண்டிவனம் ரயில்நிலையம்.

அவனது சிந்தனைகளைக் கலைத்துக்கொண்டு அடுத்த ’கம்பார்ட்மென்ட்’இலிருந்து அந்தக் குரல் மீண்டும் ஒலித்தது.

"எப்போ டாடி திருச்சி வரும்?"

"இன்னும் விழுப்புரமே தாண்டலையே கண்ணா. சாயங்காலம் ஏழு, ஏழறைக்கெல்லாம் நாம்ப திருச்சில இருக்கலாம்."

"இப்ப போச்சே அது என்ன ஸ்டேஷன்?"

"அது திண்டிவனம். அடுத்தது விழுப்புரம். அப்புறம், திருச்சி!"

மறுபடியும் அந்தத் திரைப்படம் Close Encounters of the Third Kind நினைவைப் பற்றிக்கொண்டது.

அடையாளம் கூறமுடியாத விண்வெளி வஸ்துக்கள் ஒரு நாள் இரவில் திடீரென்று விஜயம் செய்ய, அவற்றின் மின்காந்த ஈர்ப்பின் பாதிப்பில் அந்த வீட்டில் பாட்டரியில் இயங்கும் விளயாட்டுப் பொம்மைகள் தானே இயங்கத் தொடங்க, டி.வி. தானே ’ஆன்’ ஆகி ஒளிர்ந்திட, சமயலறையில் ’காஸ் ஸ்டவ்’ தானே எரிந்துகொண்டு முட்டைகள் தாமே பொரிந்துகொள்ள, இந்த நிகழ்ச்சிகளினால் பெரிதும் கவரப்பட்டுக் குதூகலிக்கும் அந்த சிறுவன் வீட்டைவிட்டு வெளியில் வந்து சிரித்தபடியே தோட்டத்தில் அங்கும் இங்கும் ஓடிட, விழித்துக்கொண்ட அவன் தாயின் குரல் இனம் புரியாத பயமும் நடுக்கமும் கவலையும் கொண்டு, பையனைக் காணாது எதிரொலிக்க...

சின்ன வயது முதல் அவனுக்குப் பிடித்தமான ’சப்ஜெக்ட்’களில் ஒன்று ’அஸ்ட்ரானமி’. அதன் ஆரம்ப பாடங்களை அவன் தன் அப்பாவிடமிருந்துதான் தெரிந்துகொண்டான். ஒருநாள் இரவு அப்பாவுடன் மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு நட்சத்திரங்களை வெறித்துக்கொண்டிருந்தபோது கேட்ட பாடம் இன்னமும் நினைவில் நின்றது.

"எவ்ளோ தூரம்ப்பா நாம்ப இந்த வானத்தில மேலே போக முடியும்? ஒரு நிலையில மோதிக்க மாட்டோம்?"

"நீ நினக்கறாப்பல இந்த வானம் ஒரு பெரிய ’பெட்ஷீட்’ மாதிரி பூமியை மூடிக்கொண்டு இருக்கலைடா ராஜா. வானங்கறது ஒரு அகண்ட பெருவெளி. வெறும் வெட்டவெளி. அதுக்கு திசைகள் கிடையாது. அந்தப் பெருவெளியில் தொங்கிண்டிருக்கற லட்சோப லட்சம் கோளங்கள்ல பூமியும் ஒண்ணு. பூமி தவிர, செவ்வாய், புதன், சுக்கிரன், வியாழன், சனின்னு பல கிரகங்கள் சூரியனைச் சுத்தி வரது. இந்த அமைக்குப் பெயர் சூரியக் குடும்பம். இதுபோல பல குடும்பங்கள் வான வெளியில இருக்கு. ஒவ்வொண்ணுக்கும் இடையில பலகோடி மைல்கள் தூரமிருக்கு. அதோ தெரியறதே சந்திரன், அது இங்கிருந்து ரெண்டரை லட்சம் மைல் தூரத்தில இருக்கு. அது பக்கத்துல அம்மாவோட முந்தானையைப் பிடிச்சுண்டு அலையற குழந்தை மாதிரி அலையறது பாரு, ஒரு நட்சத்திரம், அது உண்மையில பலகோடி மைல் தள்ளி இருக்கு. இதெல்லாம் தெரிஞ்சுக்கணும்னா நாளைக்கு நான் உனக்கு ஒரு புத்தகம் தரேன். உக்காந்து படிச்சுப்பார்."

அப்பாவின் புத்தகம் அவனுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. அதில் பார்த்த ராக்கெட் வகைகளும், சூரியக்குடும்ப கிரகங்களின் அழகிய, பெரிய புகைப் படங்களும் விவரங்களும் அவன் ஆவலைத் தூண்ட, விண்வெளி விஞ்ஞானம் பற்றி தமிழில் வந்திருந்த புத்தகங்களை அந்த கிராமத்தில் சின்ன நூலகத்தில் தேடிப்பிடித்து படிக்கத் தொடங்கினான்.

’பறக்கும் பாச்சா’, ’ஆர்வி’யின் ’காலக் கப்பல்’ போன்ற கதைகளில் ஆரம்பித்த ஆர்வம், கல்லூரி நாட்களில் ஒவ்வொரு மாலையும் நூலகத்தில் அமர்ந்து ஜாய்ஸின் ’தி எக்ஸ்பான்டிங் யுனிவர்ஸ்’, எச்.ஜி.வெல்ஸ் நாவல்கள் ’டைம் மெஷின்’, ’வார் ஆஃப் த வர்ல்ட்ஸ்’ போன்ற புத்தகங்களில் வளர்ந்து, அமெரிக்காவின் வெற்றிகரமான நிலாப் பயண முயற்சிகளில் மனம் மகிழ்ந்து---MAN WALKS ON THE MOON என்று எவ்வளவு பெரிய எழுத்துகளில் அந்த செய்தியை ’இந்தியன் எக்ஸ்ப்ரஸ்’ வெளியிட்டது!---தானும் தும்பா ISRO-வில் சேர்ந்து விண்வெளி விஞ்ஞானியாக வேண்டும் என்று கனவு காண வைத்துக் கடைசியில் இலக்கிய ஈடுபாடுகளின் பலத்த போட்டியில் இப்போது ’சயன்ஸ் ஃபிக்*ஷன்’இல் வந்துநின்றது.

காற்றில் படபடத்த அப்பாவின் கடிதமும், டைரியின் தாள்களும் அவன் நினைவுகளை ஒருமைப்படுத்த, விட்ட இடத்திலிருந்து மறுபடியும் படிக்கத் தொடங்கினான்.


கொஞ்சம்கூட எதிர்பார்த்திராத விதத்தில் அவன் ஜெயந்தியை சந்தித்த நிகழ்ச்சியைக் கண்கள் படிக்க மனம் விரித்தது.

"ராஜா, ஒரு சின்ன காரியம் பண்ணேன்."

"என்னப்பா?"

"அந்தக் கோடியாத்துல புதுசாக் குடிவந்திருக்காரே ஒரு கணக்கு வாத்தியார், தெரியுமா?"

"தெரியாதுப்பா."

"பரவாயில்லை. நீ என்ன பண்றே, இந்த ’நோட்புக்’கை எடுத்துண்டு போய், கோடி வீட்டு வாத்தியார்---அதாண்டா பிள்ளையார் கோவிலுக்கு இடது பக்கம் ரெண்டாவது வீடு--கிருஷ்ணமூர்த்திட்ட கொடுத்திடு. அவர் ரெண்டு மூணு கணக்குகளைப் போட்டுத் தரச் சொன்னார். எல்லாத்தையும் இந்த நோட்டுல விவரமாக் குறிச்சிருக்கேன்னு சொல்லு அவர்ட்ட, என்ன?"

"சரிப்பா."

"சாப்டயோன்னோ?"

"ஆச்சுப்பா."

"சரி, பாத்துப் போய்ட்டு வா. லைட்கூட இல்லை. தெருவுல நாயெல்லாம் இருக்கும்."

"அவாத்துல ஒண்ணும் இருக்காதே?"

வாசல் அழிக்கதவைத் தட்டியதும் திண்ணை விளக்கைப் போட்டுக்கொண்டு ஓர் அழகான பெண் வந்து உள் மரக்கதவைத் திறந்தாள். பின் திண்ணையை அன்ன நடையில் கடந்துவந்து வாசல் அழிக்கதவின் பூட்டைத் திறந்தாள். பன்னிரண்டு வயசிருக்கும். வசந்தியைப் போலவே நல்ல நிறம். வட்ட முகம். அகன்ற கருவிழிகள். புறாவின் அலகுபோல் சிறிய, கொஞ்சம் கூர்மையான மூக்கின் வலதுபுறம் எடுப்பான சிவப்புக்கல் மூக்குத்தி. குட்டையான இரட்டைப் பின்னல்களில் ஒன்று முன்புறம் சரிய அதைப் பின்னால் தள்ளிவிட்டுக்கொண்டே அவனைப் பார்த்து விழித்தாள்.

அவனுக்கும் சில விநாடிகள் பேச வரவில்லை! கடைசியில் "அப்பா இல்லை?" என்றான்.

அனு மாதிரி அழகா, நிறமா இல்லாட்டாலும் இவளும் தன்வழியில் அழகுதான். என்ன ’ப்ரைட் ஐஸ்’!

மெல்லத் தலையசைத்து, "அப்பா, உங்களைப் பார்க்க யாரோ வந்துர்க்கா!" என்று கூவிக்கொண்டே உள்ளே சென்றாள்.

"யாரூ?" என்று வினவிக்கொண்டு வந்தவருக்கு நாற்பத்தைந்து வயதிருக்கும். கொஞ்சம் பருத்த குட்டையான சரீரம். பனியனில் வழிந்த கைகளில் விபூதிப் பட்டைகள் அழிந்து காணப்பட்டன. கருகரு என்று வளர்ந்திருந்த முடிகளை இறுக்கிப் பிடித்தாற்போல் ஒரு கையில் ’ஸ்ட்ராப் வாட்ச்’. மற்றொன்றில் காசிக் கயிறு.

"மகாதேவய்யர் ஸன்னா? உள்ளே வாப்பா. எப்படிப் படிக்கறே?"

"நன்னாப் படிக்கறேன், சார்."

அவர் பின்னால் வாசல் கதவு நிலையைப் பிடித்துக்கொண்டு அவள் நின்றிருந்தாள்.

"பரீட்சைலாம் நன்னா எழுதியிருக்கயா?"

அந்தக் கண்கள்!

"ஓ எஸ்! நன்னா எழுதியிருக்கேன்."

கலகலப்பான தோற்றம். அதே சமயம் அமைதியும் அடக்கமும் இழைகின்றன!

"உட்கார்ந்துக்கோ. என்ன விஷயம் சொல்லு."

அவள் அவனையே பார்த்துக்கொண்டிருக்க, இவன் வசதியாகத் திண்ணையில் உட்கார்ந்து அவருடன் பேசிக்கொண்டே அவர் அறியாமல் கண்களை அவரைத் தாண்டி ஓடவிட்டான்.

"அப்பா அனுப்ச்சா. நீங்க கேட்டிருந்த கணக்கெல்லாம் இந்த நோட்டுல விவரமா போட்டுக்காராம். கொடுத்திடச் சொன்னா."

"அப்படியா? ரொம்ப ’தாங்க்ஸ்’னு சொல்லு. இந்தா, இந்தப் புஸ்தகத்தை அவரண்ட கொடுத்துவிடு."

புத்தகத்தை எடுக்க அவர் உள்ளே சென்றதும் மெல்லச் சிரிக்க முயன்று தோற்றான்.

நல்ல வேளை, என்னைவிட உயரம் கம்மி! வயசு நிச்சயம் மூணு வருஷமாவது சின்னவளாய் இருப்பாள்னு நினைக்கிறேன். டெய்லி இந்தப் பக்கமாப் போறேன், ஒரு தடவைகூட இவளைப் பார்க்கலயே?

வார்த்தைகள் எழும்பாமல் ’ஒம் பேரென்ன?’ என்று ஓரிரு முறை வாயசைத்த போது அவர் வந்துவிட்டார். ஒன்றும் கண்டுகொள்ளவில்லை. அல்லது காட்டிக்கொள்ளவில்லை. நல்லவர்!

"இந்த ரெண்டு புஸ்தகமும் அப்பாட்ட குடுத்திடு. ரொம்பத் ’தாங்க்ஸ்’னு சொல்லு."

"போய்ட்றேன் சார்!"

போய்ட்றேன் பெண்ணே, இல்ல கண்ணே!
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top