Yogini Ekadesi

விஷ்ணுக்கு உகந்த ஏகாதசிகளில் விரதம் இருந்து வழிபாடு வந்தால் வாழ்வில் வளம் பெறலாம். இப்போது யோகினி ஏகாதசியை பற்றி விரிவாக பார்க்கலாம்.

குபேரன் சிவபூஜை செய்யும்போது, அவனுக்குப் பூக்களைக் கொண்டு வரும் வேலையை ஹேமமாலி என்பவன் செய்து வந்தான். மனைவியிடம் மிகுந்த அன்பு கொண்ட ஹேமமாலி ஒரு நாள், மனைவியுடன் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்ததால், குபேரனின் பூஜைக்குப் பூக்களைக் கொண்டு போகவில்லை.

பூஜையின்போது பூக்கள் இல்லாததைக் கண்ட குபேரன் கோபத்தில் குதித்தான். "தவறு செய்த ஹேமமாலிக்குப் பதினெட்டு விதமான குஷ்ட ரோகங்கள் வரட்டும்" என்று சபித்தான்.

ஹேமமாலியைக் குஷ்ட ரோகம் பீடித்தது. அவன் மனைவி விசாலாட்சி உள்ளம் உடைந்தாள்.
சாபத்தின் விளைவாக ஹேமமாலி அள‌காபுரியை விட்டு உடலெங்கும் வெண்குஷ்ட ரோகம் பீடிக்க அவமானத்துடன் பூவுலகில் வீழ்ந்தான். உண்பதற்கும், குடிப்பதற்கு எதுவும் கிடைக்காத, அடர்ந்த, பயத்தைக் கொடுக்கும் வனாந்தரத்தில் கண் விழித்தான். நெடு நாட்கள் இப்படியே துன்பத்தில் சென்றன. இரவுப் பொழுதிலும் வலியால் உறக்கம் வராமல் அல்லலுற்றான். கோடையின் கடுமையான உஷ்ணத்திலும், பனியின் கடுமையான குளிரிலும் தாங்க வொண்ணா இன்னலுற்றான். இத்தனை துன்பம் அனுபவித்தாலும், சிவபெருமானின் மீதான பக்தி குறையாமல் இடைவிடாது தொழுது வந்தான். அதனால் அவனது புத்தி தடுமாறாமல், செய்யும் காரியத்தில் நிலைத்து இருந்தது. செய்த பாபகர்மத்தினால் விளைந்த சாபத்தின் காரணமாக இன்னலுற்றாலும், சிவபெருமானிடம் கொண்ட பக்தியால், தன் முந்தைய பிறவியை பற்றிய நினைவு மாறாமல் இருந்தது.
இப்படியே பல நாட்கள் அங்குமிங்கும் அலைந்து திரிந்து , மலை, வனாந்தரம், சமவெளி ஆகியவற்றை கடந்து, ஹேமமாலி பிரம்மாண்டமாகப் பரவி நிற்கும் இமாலய பர்வதத்தை அடைந்தான். அங்கு அதிர்ஷ்டவசமாய் அவனுடைய சிவபக்தியின் பலனாக, மஹாதபஸ்வியான ரிஷி மார்க்கண்டேயரின் ஆசிரமத்தைக் கண்டான். ரிஷி மார்க்கண்டேயரை, பிரம்மாவின் பிரதிபிம்பம் என்றே கூறுவர். அவரது ஆசிரமமானது பிரம்மசபை போன்று அழகுற விளங்கியது.
ஆசிரமத்தில் ரிஷி மார்க்கண்டேயர், த‌ன் ஆசனத்தில் மிகவும் பொலிவுடனும், தேஜஸூடனும் மற்றுமொரு பிரம்ம தேவன் போல் அமர்ந்திருக்க, ஹேமமாலி பாவம் செய்த குற்ற உணர்ச்சியால் வெட்கப்பட்டு தூரத்தில் நின்றுகொண்டு, ரிஷிக்கு தன்னுடைய பணிவான வணக்கத்தையும்,வந்தனத்தையும் செலுத்தினான்.

நீ ஆஷாட மாதத்தில் கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசியன்று அதன் விதிமுறைப்படி உபவாசம் இருந்து விரதத்தை கடைபிடித்தால் பகவான் மஹாவிஷ்ணுவின் அருளுக்குப் பாத்திரமாகி உன்னுடைய சாபத்திலிருந்து விடுபடலாம்" என்றார்.
இதைக் கேட்டதும் நன்றி உணர்ச்சியுடன் ரிஷி மார்க்கண்டேயரின் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஸ்கரித்து நன்றியையும், வணக்கத்தை மீண்டும் மீண்டும் சமர்ப்பித்தான் ஹேமமாலி. ரிஷி, தன்னை நமஸ்கரிக்கும் ஹேமமாலியை கைதூக்கி எழுப்பி, அவனுக்கு அருளாசி வழங்கி அனுப்பினார். ஹேமமாலி, விவரிக்க இயலாத ஆனந்தம் ததும்ப ஆசிரமத்திலிருந்து வெளியேறினான்.
ரிஷி மார்க்கண்டேயர் சொல்லியபடி, ஹேமமாலியும் கிருஷ்ணபட்ச ஏகாதசி விரதத்தை அதற்குரிய வழிமுறைகளின்படி கடைபிடித்தான். அதன் பலனாக சாபம் விலகி, தன் அழகான யக்ஷ தோற்றத்தைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், இழந்த அனைத்தையும் மீண்டும் பெற்று வீடு திரும்பி, தன் மனைவியுடன் சந்தோஷமாக வாழலானான்.

யோகினி ஏகாதசி விரத உபவாசம், எண்பத்தெட்டு ஆயிரம் பிராமணர்களுக்கு போஜனம் செய்வித்த புண்ணியத்தை வழங்கும் சக்தி பெற்றது.
எவரொருவர் இப்புண்ணிய நாளில் விதிமுறைப்படி விஷ்ணு பூஜை செய்து, உபவாச விரதத்தைக் கடைபிடிக்கிறாரோ, அவர் விஷ்ணுவின் அருளால் தங்களுடைய பாபங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று புண்ணிய பக்திமான் ஆவார்.

1625462662417.png
 
Last edited:
ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி ( ஆடி மாதம் 19 ஆம் தேதி) புதன்கிழமை அன்று வருகிற ஏகாதசி யோகினி ஏகாதசி.

ஏகாதசி என்றாலே அது பெருமாளைப் போற்றும் நாள். பெருமாளின் நாமங்களை ஜபம் செய்து போற்ற வேண்டிய தினம். இந்தத் தினத்தின் மகிமைகள் குறித்து ஏகாதசி மகாத்மியம் சொல்கிறது. யார் யோகினி ஏகாதசியின் மகத்துவங்களைக் கேட்கிறார்களோ அவர்கள் யாகங்களில் உயர்ந்த யாகமான அஸ்வமேத யாகத்தைச் செய்த பலனைப் பெறுவார்கள் என்று சொல்கிறது. இத்தனை சிறப்பித்துச் சொல்லப்படும் யோகினி ஏகாதசியின் சிறப்புகளை பிரம்மன் தன் புதல்வரான நாரதருக்குச் சொல்வதாக அமைகிறது.

யோகினி ஏகாதசி விரதம் அளிக்கும் புண்ணியத்தை பிரம்ம தேவர் பட்டியலிடுகிறார். அதில் சூரிய கிரகணத்தன்று குருக்ஷேத்திர பூமியில் ஒருவர் புண்ணிய தீர்த்தமாடினால் கிடைக்கும் பலன்கள் அல்லது அந்த வேளையில் பூமி தானம் செய்தால் ஏற்படும் புண்ணிய பலன்கள் உண்டாகும் என்கிறார்.

புண்டரீகாக்ஷ பெருமாள்

குருக்ஷேத்திரம் என்பது மகாபாரத யுத்தம் நிகழ்ந்த இடம். ஆனாலும் தர்மத்தை பகவான் கிருஷ்ணன் நிலைநாட்டிய புண்ணிய பூமி. அந்தப் புண்ணிய பூமியில் சூரிய கிரகண வேளையில் செய்யும் கிரியைகள் பல மடங்கு புண்ணியம் அருள்பவை என்கின்றன புராணங்கள். மேலும் பூமி தானம் என்பது மிகவும் உயர்ந்த தானமாகப் போற்றப்படுகிறது. நம் வாழ்வும் ஒரு யுத்தக்களம் போன்றதே. அந்த யுத்தக்களத்தில் நாம் கடைப்பிடிக்கும் விரதங்கள் நமக்கு புண்ணிய பலன்களைத் தருவதோடு பகவானின் அனுகிரகத்தையும் பெற்றுத்தரும்.

யோகினி ஏகாதசியின் மகிமைகளை எடுத்துச் சொல்லும் பிரம்ம தேவர் துளசியின் பெருமையையும் கூறியுள்ளார். இந்த ஏகாதசியில் துளசி கொண்டு பகவானைத் துதிக்கக் கிடைக்கும் பலன்களையும் விவரிக்கிறார்.

இந்த ஏகாதசி அன்று ஸ்ரீஹரியை துளசி கொண்டு அர்ச்சித்து வழிபடுபவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து விடுபடுவர். மதிக்க முடியாத தங்கத்தையும் வைர வைடூரியங்களையும் கொண்டு அர்ச்சிப்பதை விட துளசி இலை சமர்ப்பித்து வழிபடுவது மேன்மையுடையது. துளசிச் செடியில் துளசி மாதா வாசம் செய்வதாக ஐதிகம். எனவே, யோகினி ஏகாதசி அன்று துளசிச் செடியை தரிசனம் செய்வதே புண்ணியம் தரும்.

விஷ்ணு சஹஸ்ர நாமத்தை பாராயணம் செய்வது நல்லது.

4.8.2021 ( ஆடி மாதம் 19 ஆம் தேதி)

புதன் கிழமை, ஏகாதசி திதி. முதல் நாள் 3.8.2021 செவ்வாய் கிழையன்று மதியம் 1 மணிக்கு அப்புறம், புதன் அன்று பிற்பகல் 3.18 வரை ஏகாதசி திதி இருக்கிறது. மிருகசீரிஷம் நட்சத்திரம். அங்காரகனுக்கும் , ஶ்ரீ விஷ்ணுவுக்கும் சிறப்பாக அர்ச்சனை செய்து வர நல்லது நடக்கும். குறிப்பாக மிருகசீரிஷம் நட்சத்திர பக்தர்கள், குங்குமத்தில் தாயாருக்கும் சேர்த்து அர்ச்சனை செய்து வர மன சங்கடங்கள் நிவர்த்தி ஆகும். ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது மிக நல்லது. உடம்பு சரியில்லாமல், வேறு காரணங்களால் விரதம் அனுஷ்டிக்க முடியாதவர்கள்

ஶ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமத்தை குறிப்பாக
யோகோ யோக விதாம்‌ நேதா
ப்ரதான புருஷேச்வர: |
நாரஸிம்ஹவபு: ஸ்ரீமான்
கேசவ:புருஷோத்தம:

இந்த ஸ்லோகத்தை 4 முறை சொல்லி வருதல் நல்லது.

நன்றி.
 
Back
Top