Sri Lakshmi Panchami

ஸ்ரீ லட்சுமி பஞ்சமி

பங்குனி அமாவாசைக்குப் பிறகு வளர்பிறையில் ஐந்தாவது திதியான பஞ்சமியில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலமாக, தொழில் வளம் பெருகும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தின் வறுமை நீங்கும். திருமகளின் இன்னருள் சிறக்கும். இது வெளிப்படையான பலன்கள்.

குடும்பத்தில் குதூகலமும் ஒற்றுமையும் ஓங்குவதும், சுபநிகழ்ச்சிகள் நடப்பதும், வீடு, வாகனம் முதலிய பொருள் சேர்க்கை ஏற்படுவதும் இந்த லட்சுமி விரதத்தால் கிடைக்கக்கூடிய நற்பலன்கள் என்று சாத்திர நூல்கள் பேசுகின்றன.

ஒருவருக்கு திருமகள் அருள் இருக்கின்ற பொழுது அவனுக்கு செல்வமும் பதவியும் பட்டமும் தானே கூடும். அந்தத் திருமகள் அருள் கிடைக்காத பொழுது, அவன் இருளில் தள்ளப்படுவான். மனதில் குழப்பமான எண்ணங்களே நிலவும். எதிலும் தெளிவில்லாமல் இருப்பான். தொட்ட காரியங்கள் துலங்காது.

எனவே திருமகளை வணங்குவது மிக முக்கியம். அதனால்தான் வியாபாரத் தலங்களில் லட்சுமி படம் லட்சுமி எந்திரங்களும் வைத்திருக்கிறார்கள்.

தங்கள் வீட்டின் நிலை வாசலில் மஞ்சள் குங்குமம் வைத்து திருமகளை வரவேற்பதற்காக ஒரு விளக்கு ஏற்றி வைப்பதை முறையாகக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட திருமகளை விரதமிருந்து துதிப்பதுதான் இந்த லட்சுமி பஞ்சமியின் நோக்கம்.

பூஜை அன்று காலையில் எழுந்து, வீட்டைத் தூய்மை செய்து, வீட்டில் உள்ள அனைவரும் நீராடி விட்டு, பூஜை அறையில் ஒரு பலகை வைத்து, அதிலே கோலம் போட்டு, கலசத்தில் திருமகளுக்கான லட்சுமி மந்திரங்களைச் சொல்லி ஆவாகனம் செய்ய வேண்டும்.

“ௐ ஸ்ரீ மகாலட்சுமி ச வித்மஹே
விஷ்ணுபத்ந்யை ச தீமஹி
தந்நோ லட்சுமி, ப்ரசோதயாத்”

- என்ற காயத்திரி மந்திரத்தை தவறில்லாமல் உச்சரித்து, ‘‘இந்த கலசத்தில், மகாலட்சுமி தாயே வந்து அமர வேண்டும்.

எங்கள் எளிய பூஜையை ஏற்றுக்கொண்டு திருப்தி அடைய வேண்டும்’’ என்று மனதார பிரார்த்தனைச் செய்து, தூப, தீப, நைவேத்தியங்களைக் காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

கலசம் வைத்து பூஜிக்க இயலாதவர்கள், அருகிலுள்ள திருக்கோயிலுக்குச் சென்று, மூன்று மண் அகல் விளக்குகளில் பசு நெய் தீபமேற்றி வழிபட்டால், உங்கள் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் பெருகும்.

முடிந்தவர்கள், அன்னதானம் செய்வித்தலும், ரதிதேவி - மன்மத பூஜை செய்வித்தல், மணமானவர்கள் மனமொத்த தம்பதியராய் இத்தரணியில் பரிமளிப்பர்.

இந்நாளில் லட்சுமி ஸ்தோத்திரம் சொல்லி அல்லது கேட்டு வந்தால சகல வித நன்மைகளும் உங்களை வந்தடையப்போவது திண்ணம்.

ஸ்ரீ மஹாலட்சுமி திருவடிகள் சரணம்.


1774229182343.webp
 
Back
Top