• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2395 to #2399

#2395. தவமிக்கு உணர்ந்தவர் தத்துவத்தாரே

சிவனைப் பரமனுள் சீவனுள் காட்டும்
அவமற்ற வேதாந்த சித்தாந்தம் ஆனால்
நவமுற்று அவத்தையில் ஞானம் சிவமாம்
தவமிக்கு உணர்ந்தவர் தத்துவத் தாரே

குற்றமற்ற வேதாந்தமும், சித்தாந்தமும் செப்புவது இது:
தத்துவங்களைப் பற்றாமல் பரமாக விளங்கும் ஆன்மாவின் உள்ளேயும் வெளியிலும் உறைகின்றது சிவன். ஆன்மாவின் துரியாதீத நிலையில் உதிக்கும் ஞானமே சிவம் ஆம். இந்தச் சிவஞானத்தை உணர்ந்து கொண்டவர் சிறந்த தத்துவ அறிவு கொண்டவர் ஆவர்.

#2396. சிவ சாயுச்சியம்

தத்துவம் ஆகும் சகள அகளங்கள்
தத்துவ மாம்விந்து நாதம் சதாசிவம்
தத்துவ மாகும் சீவன் தன் தற்பரம்
தத்துவ மாம்சிவ சாயுச் சியமே

உருவம் உடையனவாகவும், உருவம் அற்றவைகளாகவும் உள்ளன ஆன்மாவின் முப்பத்தாறு தத்துவங்கள். விந்து, நாதம், சதாசிவம் இவைகளும் தத்துவங்களே. ஆன்மாவின் நாதாந்த நிலையில் உள்ளது தற்பரம் என்னும் மெய்ப்பொருள். இதனை அடைவதே சிவசாயுச்சியம் என்னும் உயர்ந்த முக்தி நிலை ஆகும்.

#2397. பெரியோருக்கு இரண்டும் அபேதமே

வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன்நூல்
ஓதும் பொதுவும் சிறப்பும்என்று உள்ளன
நாதன் உரையவை நாடில் இரண்டந்தம்
பேதமது என்பர் பெரியோர்க்கு அபேதமே

வேதங்களும், ஆகமங்களும் இறைவன் அருளியவை என்பது முற்றிலும் உண்மை. வேதம் பொதுவானதாக உள்ளது. ஆகமம் சிறப்பானதாக உள்ளது. அவற்றின் முடிவுகள் வேறு வேறு என்று சிலர் மொழிவர். ஆனால் தத்துவத்தை உணர்ந்த பெரியோருக்கு அவற்றில் எந்த வித பேதமும் காணப்படாது

#2398. உள்ளம் பூரிக்கும் ஆனந்தம்

பராநந்தி மன்னும் சிவானந்தம் எல்லாம்
பரானந்தம் மேல்மூன்றும் பாழுறா ஆனந்தம்
விராமுத்தி ரானந்தம் மெய்நடன ஆனந்தம்
பொராநின்ற உள்ளமே பூரிப்பி யாமே

பரம் என்னும் நிலையை அடைந்துவிட்ட ஆன்மா அனுபவிக்கும் உயரிய ஆனந்தம் எல்லாம் சிவானந்தம் ஆகும். பாழாகிய மாயையில் பொருந்தாத ஆன்மா பெறும் ஆனந்தம்; பொருத்தமான சாம்பவி, கேசரி முதலிய முத்திரைகளால் விளையும் ஆனந்தம்; சிவ நடனத்தைத் தனக்குள்ளே கண்டு களிப்பதால் உண்டாகும் ஆனந்தம்; இவை அனைத்துமே ஆன்மாவை இன்பக் களிப்பில் ஆழ்த்துகின்ற சிவானந்தமே.

#2399. சிவன் என்னும் பஞ்சாந்தகன்

ஆகுங் கலாந்தம் இரண்டந்த நாதாந்தம்
ஆகும் பொழுதிற் கலைஐந்தாம் ஆதலில்
ஆகும் அரனேபஞ் சாந்தகன் ஆம் என்ற
ஆகும் மறைஆ கமம்மொழிந் தான்அன்றே?

கலாந்தம், நாதாந்தம் என்னும் இரண்டும் மாறுபட்ட அந்தங்கள். கலாந்தம் என்பது மேதை முதலிய சோடச கலைகளையும், நிவிர்த்தி முதலிய ஐந்து கலைகளையும் பற்றியது. நாதாந்தம் பிரணவத்தின் ஐந்து உறுப்புகளைப் பற்றியது. சிவனே பிரணவமாகப் பொருந்தி அவற்றை ஒன்றாக்குகி விடுகின்றான். ஐந்து வேறுபட்ட உறுப்புக்களை ( அ + உ + ம் + விந்து + நாதம்) முடிவுக்கு கொணர்ந்து, பிரணவமாக ஒன்றாக்குவதால் சிவன் ‘பஞ்சாந்தகன்’ என்று வேதங்களிலும், ஆகமங்களிலும் பேசப்படுகின்றான்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2400 to #2404

#2400. மன்றாடி பாதம் மருவலும் ஆமே.

அன்றாகும் என்னாதுஐ வகைஅந்தம் தன்னை
ஒன்றான வேதாந்த சித்தாந்தம் உள்ளிட்டு
நின்றால் யோகாந்தம் நேர்படும் நேர்பட்டால்
மன்றாடி பாதம் மருவலும் ஆமே.

கலாந்தத்தை எதிர்நோக்கி விருதே காலத்தைக் கழிக்க வேண்டா. வேதாந்த, சித்தாந்தங்கள் நெறியில் நிற்க. அவை உம்மை யோகாந்தத்துக்குக் கொண்டு செல்லும். அங்கே யோகத்தின் முடிவாகிய சமாதி நிலையில் மன்றில் ஆடும் மதியணி நாதனின் திருவடிகளை அடையலாம்.

#2401. சீவன் சிவம் ஆகிவிடும்

அனாதி சீவன்ஐம் மலமற்றுஅப் பாலாய்
அனாதி அடக்கித் தனைக்கண்டு அரனாய்த்
தனாதி மலம்கெடத் தத்துவா தீதம்
வினாவுநீர் பாலாதல் வேதாந்த உண்மையே.

அநாதியாகிய சீவன் அரன் திருவடிகளை பொருந்தும் போது அதன் ஐந்து மலங்களும் அழிந்து போகும்; ஆன்மாவின் அனாதியாகிய சுட்டறிவு
மறைந்து விடும், தன் உண்மைநிலை ஆன்மா அறிந்து கொள்ளும், சிவவடிவம் பெறும். ஆன்மாவின் ஆதிமலம் ஆகிய ஆணவம் அழிந்தவுடன், அனைத்துத் தத்துவங்களையும் கடந்த ஆன்மா பாலுடன் சேர்ந்த நீரும் பாலாவது போலச் சிவத்துடன் சேர்ந்த சீவனும் சிவன் ஆகிவிடும்.

#2402. வேதாந்த சித்தாந்தம் ஆகும்

உயிரைப் பரனை உயிர்சிவன் தன்னை
அயர்வற்று அறிதொந் தத்தசி அதனால்
செயலற்று அறிவாகி யும்சென்று அடங்கி
அயர்வற்ற வேதாந்த சித்தாந்தம் ஆமே

உம் உயிரை அறிமின்; நம் பரனை அறிமின்; நம் சிவனை அறிமின்; ‘நான் அதுவாக ஆனேன்’ என்ற வாக்கியத்தின் பொருளை அறிமின்; சுட்டறிவு அழிந்து பேரறிவுடன் ஒன்றி அடங்கி இருப்பதே அயர்வு இல்லாத வேதாந்த சித்தாந்தம் என்று அறிமின்.

#2403. மறை ஆய் பொருள் ஆகமம் ஆம்

மன்னிய சோகமாம் மாமறை யாளர்தம்
சென்னிய தான சிவயோகமாம் ஈதென்ன
அன்னது சித்தாந்த மாமறை யாய்பொருள்
துன்னிய ஆகம நூலெனத் தோன்றுமே.

ஸோஹம் (ஸ: + அஹம் )” அவன் நான்!” என்ற பாவனை மறையாளர்கள் பின்பற்றும் சீரிய சிவயோகம். சித்தாந்தம் சாதகனைப் பாவனை செய்யும்படிச் சொல்வதும் இதுவே ஆகும். வேதங்கள் ஆராய்ந்த விழுப் பொருளைக் கூறுவது ஆகமம் என்பது இதனால் நன்கு விளங்கும்.

#2404. வேதமே வேதாந்த, சித்தாந்தமானது

முதலாகும் வேத முழுதுஆ கமம்அகப்
பதியான ஈசன் பகர்ந்தது இரண்டு
முதிதான வேதம் முறைமுறை யால்அமர்ந்து
அதிகாதி வேதாந்த சித்தாந்தம் ஆகவே

காலத்தால் முற்பட்டவை வேதங்கள். முழுமையானவை ஆகமங்கள். இவை இரண்டுமே ஆன்மாக்களின் தலைவன் ஆகிய அரன் அருளியவை. வேதமே மெல்ல மெல்ல உருமாறி வேதாந்தமாகவும், சித்தாந்தமாகவும் இரு வேறு அந்தங்களாக ஆனது.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

16. பசு, பதி, பாசம்

பதி, பசு, பாசம் இவற்றின் தொடர்பு.

பதி = இறைவன் = சிவன்

பசு = உயிர் = சீவன்

பாசம் = தளை = பந்தம்

#2405 to #2409

#2405. பதி பசுவில் பதியில் பிறப்பறும்

அறிவுஅறிவு என்ற அறிவும் அனாதி
அறிவுக்கு அறிவாம் பதியும் அனாதி
அறிவினைக் கட்டிய பாசம் அனாதி
அறிவு பதியில் பிறப்பறுந் தானே

அறிவு என்று கூறப்படும் ஆன்மா (பசு) மிகவும் பழமையானது.
ஆன்மாவின் தலைவன் ஆன சிவன் (பதி) மிகவும் பழமை ஆனவன்.
ஆன்மவைப் பிணித்துள்ள பாசம் (தளைகள்) மிகவும் பழமையானவை.
பதி பசுவிடம் விளங்குமானால் பாசம் அகன்று விடும்.
பிறவிப் பிணி தொலைந்து விடும்.

#2406. பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.

பசுப்பல கோடி பிரமன் முதலாய்ப்
பசுக்களைக் கட்டிய பாசம்மூன் றுண்டு
பசுத்தன்மை நீக்கிஅப் பாசம் அறுத்தால்
பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.

பிரம்மன் முதலான பசுக்கள் பல கோடி உண்டு. அந்தப் பசுக்களைக் கட்டியுள்ள பாசங்கள் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று. பாசத்தை அறுத்து விட்டுப் பசுத் தன்மையை நீக்கினால் அந்தப் பசுக்கள் பதியாகிய தலைவனைப் விடாமல் பற்றி நிற்கும்.

தெய்வங்களும் அவர்களின் மலங்களும்

சதாசிவன் ………..ஆணவம் மட்டும்
மகேசுரன்………….ஆணவம் + திரோதாயீ
உருத்திரன்………..ஆணவம் + திரோதாயீ + கன்மம்
திருமால்………….ஆணவம் + திரோதாயீ + கன்மம் + மாயை
நான்முகன் ……….ஆணவம் + திரோதாயீ + கன்மம்+ மாயை + மாயேயம்.

#2407. குன்றில் இட்ட விளக்கது வாமே.

கிடக்கின்ற வாறே கிளர்பயன் மூன்று
நடக்கின்ற ஞானத்தை நாடோ றும் நோக்கித்
தொடக்குஒன்றும் இன்றித் தொழுமின் தொழுதால்
குடக்குன்றில் இட்ட விளக்கது வாமே.

பாசத்தால் கட்டுண்டபோதும் பசுக்கள் காமியத்தோடு செய்யும் சரியை, கிரியை யோகம் என்பவற்றால் அவைகள் சாலோகம், சாமீபம், சாரூபம் என்ற மூன்று விதப் பயன்களை அடைய முடியும். இவற்றின் முடிவாகிய ஞானம் பெறுவதற்கு நாள் தோறும் பற்று இல்லாமல் தியானம் செய்யுங்கள். அப்போது குடத்தில் உள்ள விளக்கை எடுத்துக் குன்றின் மேல் வைத்தது போன்ற சிறந்த ஞானத்தை அடைவீர்கள்.

#2408. வாசம் செய் பாசத்துள் சிக்குண்ட சீவன்

பாசம்செய் தானைப் படர்சடை நந்தியை
நேசம்செய்து ஆங்கே நினைப்பர் நினைத்தாலும்
கூசம் செய்து உன்னிக் குறிக்கொள்வது எவ்வண்ணம்
வாசம்செய் பாசத்துள் வைக்கின்ற வாறே

விரிசடையுடைய சிவன் என்னும் தலைவனே சீவனுடன் பாசத்தைப் பொருந்தி உள்ளவன். ஞானியர் அவனிடம் நேசம் கொண்டு அவனையே எப்போதும் சிந்தையில் எண்ணுவர். அங்ஙனம் நினைத்துத் தியானத்தில் மூழ்குபவர் மீண்டும் எங்கனம் பாசத்தை எண்ணிப் பார்க்க முடியும்?பண்டு தொட்டு சீவனை வாசனையாகத் தொடர்ந்து வந்துள்ள பாசத்தில் சீவனை மீண்டும் விடுவது எங்கனம்?

#2409. நனவில் அதீதத்துள் தோன்றுமே.

விட்ட விடம்ஏறா வாறுபோல் வேறாகி
விட்ட பசுபாசம் மெய்கண்டோ ன் மேவுறான்
சுட்டிய கேவலம் காணும் சகலத்தைச்
சுட்டு நனவில் அதீதத்துள் தோன்றுமே.

மந்திரத்தால் நீக்கப் பட்ட விடம் கடிபட்டவனின் உடலில் மீண்டும் ஏறாது. அது போன்றே மெய்யறிவு பெற்றுப் பசுத் தன்மையையும் பாசத் தன்மையையும் நீக்கிவிட்ட ஒருவன் மீண்டும் அவற்றோடு பொருந்த மாட்டான். கேவல அவத்தையிலும், சகல அவத்தையிலும் தன்னைப் பிணித்திருந்த பாசத் தளைகளை அவன் சுட்டெரிடத்து விட்டு விழிப்பு நிலையின் துரியாதீதத்தை அடைவான்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2410 to #2414

#2410. நந்தி அளித்த பசுபாச நீக்கம்

நாடும் பதியுடன் நற்பசு பாசமும்
நீடுமாம் நித்தன் நிலையறி வார்இல்லை
நீடிய நித்தம் பசுபாச நீக்கமும்
நாடிய சைவர்க்கு நந்தி அளித்ததே.

நாம் நாடுகின்ற பதியாகிய சிவன் நித்தியன். அது போன்றே சீவனின் பசுத்தன்மையும் பாசத்தன்மையும் நித்தியமானவை. நித்தியமான சிவனின் உண்மையான மேன்மையை அறிந்தவரெவருமில்லை. தன்னை நாடும் அன்பர்களின் பசுத் தன்மையையும் பாசத் தன்மையையும் நேசத்துடன் நீக்குவது ஈசனின் அருட்பார்வையே ஆகும்.

#2411. ஆய பதி அருட் சிவலிங்கம்

ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்
ஆய பசுவும் அடலே றெனநிற்கும்
ஆய பலிபீடம் ஆகுநற் பாசமாம்
ஆய அரனிலை ஆய்ந்துகொள் வார்கட்கே.

அருட்சிவ லிங்கம் என்பது ஆலயத்தின் மூலத் தானத்தில் இருக்கும் சிவ லிங்கம் ஆம். அங்கு நிற்கும் வலிய இடபம் பசு என்னும் சீவன் ஆகும். அங்குள்ள பலி பீடமே பாசம் ஆகும். இந்த உண்மை சிவாலயத்தை ஆராய்ந்து நோக்கினால் நன்கு தெளிவாகும்.

#2412. பதி, பசு, பாசம் பயில நில்லாவே.

பதிபசு பாசம் பயில்வியா நித்தம்
பதிபசு பாசம் பகர்வோர்க்கு ஆறாக்கிப்
பதிபசு பாசத்தைப் பற்றற நீக்கும்
பதிபசு பாசம் பயில நிலாவே.

பதியாகிய சிவன் நமக்கு நித்தமும் பசு, பாசம் பற்றிப் பயில்விக்கின்றான்.
பதியாகிய சிவன் பசு, பாசம் பற்றி ஆராய்பவர்களுக்கு வழி காட்டுகின்றான்.
பதியாகிய சிவன் பாசத் தன்மையையும், பசுத் தன்மையையும் கெடுப்பான்.
பதியாகிய சிவனைத் தியானித்தால் பசுத் தன்மையும், பாசத் தன்மையும் நில்லாவே.

#2413. வைத்தனன் சுத்த சைவத்திலே.

பதியும் பசுவொடு பாசமும் மேலைக்
கதியும் பசுபாச நீக்கமும் காட்டி
மதிதந்த ஆனந்த மாநந்தி காணும்
துதிதந்து வைத்தனன் சுத்தசை வத்திலே.

பதியாகிய சிவனையும், பசுவாகிய சீவனையும், பாசமாகிய சீவனின் மலங்களையும், சீவன் அடைய வேண்டிய மேலான முக்தி நிலையினையும், பசுத்தன்மை பாசத் தன்மைகளை நீக்கும் வழியினையும், நாம் அறியும் வண்ணம் சுத்த சைவ நூல்களிலே அமைத்துத் தந்தான் மதியணியும் ஆனந்த மாநந்திப் பெருமான்.

#2414. பதி படைப்பான் அங்கு அவற்றையே

அறிந்தணு மூன்றுமே யாங்கணும் ஆகும்
அறிந்தணு மூன்றுமே யாங்கணும் ஆக
அறிந்த அனாதி வியாத்தனும் ஆவன்
அறிந்த பதிபடைப் பான்அங்கு அவற்றையே.

அறிவு செறிந்த சீவர்கள் மூவகைப் படுவர். அவர்கள் விஞ்ஞானகலர், பிரளயாகலார், சகலர் எனப்படுவர். இத்தகைய சீவன்கள் உலகம் முழுவதும் நிறைந்துள்ளனர். அவர்களில் ஈசன் நிறைந்துள்ளான். சீவன்களின் பக்குவத்தை அறிந்த சிவன் அவற்றின் தகுதிக்கு ஏற்ப அவற்றைப் படைக்கின்றான்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2415 to #2419

#2415. படைப்பின் ஆதி இதுவே

படைப்புஆதி யாவது பரம்சிவம் சத்தி
இடைப்பால் உயிர்கட்கு அடைத்துஇவை தூங்கல்
படைப்பாதி சூக்கத்தைத் தற்பரன் செய்யப்
படைப்பாதி தூய மலம்அப் பரத்திலே.

படைப்பின் ஆதியில், பரம்பொருள் சிவசக்தியரைச் சீவனுடன் பொருத்தி விடும். அதைக் கேவல உறக்கத்தில் ஆழ்த்தும். சீவனின் சூக்குமதில் மாயை கலந்து அதனை எழுப்பி விடும். அதன் பின்பு சுத்த மாயை சீவனுடன் மலங்களைக் கலந்து விடும்.

#2416. ஐங்கருமம் செய்வோன் ஈசானன்

ஆகிய சூக்கத்தை அவ்விந்து நாதமும்
ஆகிய சத்தி சிவபர மேம்ஐந்தால்
ஆகிய சூக்கத்தில் ஐங்கரு மம்செய்வோன்
ஆகிய தூயஈ சானனும் ஆமே.

இந்த நுண்மையான உடலில் ஈசானன்; அருவத்தில் உள்ள விந்து, நாதம், சக்தி, சிவம், பரம் என்பவற்றின் மூலம் சூக்குமமாகிய ஐந்து தொழில்களை செய்கின்றான். ஐந்து தொழில்கள்: படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், துடைத்தல்.

#2417. படைப்போன் அரனே!

மேவும் பரசிவம் மேற்சத்தி நாதமும்
மேவும் பரவிந்து ஐம்முகன் வேறுஈசன்
மேவும் உருத்திரன் மால்வேதா மேதினி
ஆகும் படிபடைப் போன்அர னாமே.

மேவும் பரசிவம், சக்தி, நாதம், பரவிந்து, ஐந்து முகங்களை உடைய சதாசிவன், மகேசன், உருத்திரன், திருமால், பிரம்மன் என்று ஒன்பது நிலைகள் விளங்கும்படிப் படைப்பவன் அரன் ஆகிய சிவனே!

#2418. அரன் ஆற்றும் ஐந்தொழில்கள்

படைப்பும் அளிப்பும் பயில்இளைப் பாற்றும்
துடைப்பும் மறைப்பும்முன் தோன்ற அருளும்
சடத்தை விடுத்த அருளும் சகலத்து
அடைத்த அனாதியை ஐந்தென லாமே.

படைத்தல், காத்தல், இளைப்பாறும் பொருட்டு அழித்தல், மறைத்தல், துடைத்தல் என்னும் ஐந்தொழில்கள் செய்வதோடு நின்றுவிடாமல் சிவன் ஆன்மா வாழும் போதும் அருளுகின்றான். ஆன்மா உடலைத் துறந்த பின்பும் அருளுகின்றான். அநாதியாகிய சிவபிரான் சகல நிலையில் இருக்கும் ஆன்மாவுக்கு இவை அனைத்தையும் செய்கின்றான்.

#2419. பதியால் பசு பாசம் விடும்

ஆறாறு குண்டலி தன்னின் அகத்திட்டு
வேறாகு மாயையில் முப்பால் மிகுத்திட்டுஅங்கு
ஈறாம் கருவி இவற்றால் வகுத்திட்டு
வேறாம் பதிபசு பாசம்வீ டாகுமே.

சிவபெருமான் முப்பத்தாறு தத்துவங்களுக்கும் குண்டலினி சக்தியுடன் தொடர்பை ஏற்படுத்தினான். ஆன்மாவிலிருந்து வேறாகிய மாயையில் சிவத்துவம், வித்தியா தத்துவம், ஆன்ம தத்துவம் என்ற மூன்று பகுதிகளை பொருத்தினான். ஆன்ம தத்துவத்தில் ஆன்மாவுக்குத் தேவையான கருவிகளைப் பொருத்தினான். இந்தப் பதியின் பாதங்களை பற்றிக் கொள்ளும் பசு அதைப் பிணித்திருந்த பாசத்திலிருந்து மீளும்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2415 to #2419

#2415. படைப்பின் ஆதி இதுவே

படைப்புஆதி யாவது பரம்சிவம் சத்தி
இடைப்பால் உயிர்கட்கு அடைத்துஇவை தூங்கல்
படைப்பாதி சூக்கத்தைத் தற்பரன் செய்யப்
படைப்பாதி தூய மலம்அப் பரத்திலே.

படைப்பின் ஆதியில், பரம்பொருள் சிவசக்தியரைச் சீவனுடன் பொருத்தி விடும். அதைக் க் கேவல உறக்கத்தில் ஆழ்த்தும். சீவனின் சூக்குமதில் மாயை கலந்து அதனை எழுப்பி விடும். அதன் பின்பு சுத்த மாயை சீவனுடன் மலங்களைக் கலந்து விடும்.

#2416. ஐங்கருமம் செய்வோன் ஈசானன்

ஆகிய சூக்கத்தை அவ்விந்து நாதமும்
ஆகிய சத்தி சிவபர மேம்ஐந்தால்
ஆகிய சூக்கத்தில் ஐங்கரு மம்செய்வோன்
ஆகிய தூயஈ சானனும் ஆமே.

இந்த நுண்மையான உடலில் ஈசானன்; அருவத்தில் உள்ள விந்து, நாதம், சக்தி, சிவம், பரம் என்பவற்றின் மூலம் சூக்குமமாகிய ஐந்து தொழில்களை செய்கின்றான். ஐந்து தொழில்கள்: படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், துடைத்தல்.

#2417. படைப்போன் அரனே!

மேவும் பரசிவம் மேற்சத்தி நாதமும்
மேவும் பரவிந்து ஐம்முகன் வேறுஈசன்
மேவும் உருத்திரன் மால்வேதா மேதினி
ஆகும் படிபடைப் போன்அர னாமே.

மேவும் பரசிவம், சக்தி, நாதம், பரவிந்து, ஐந்து முகங்களை உடைய சதாசிவன், மகேசன், உருத்திரன், திருமால், பிரம்மன் என்று ஒன்பது நிலைகள் விளங்கும்படிப் படைப்பவன் அரன் ஆகிய சிவனே!

#2418. அரன் ஆற்றும் ஐந்தொழில்கள்

படைப்பும் அளிப்பும் பயில்இளைப் பாற்றும்
துடைப்பும் மறைப்பும்முன் தோன்ற அருளும்
சடத்தை விடுத்த அருளும் சகலத்து
அடைத்த அனாதியை ஐந்தென லாமே.

படைத்தல், காத்தல், இளைப்பாறும் பொருட்டு அழித்தல், மறைத்தல், துடைத்தல் என்னும் ஐந்தொழில்கள் செய்வதோடு நின்றுவிடாமல் சிவன் ஆன்மா வாழும் போதும் அருளுகின்றான். ஆன்மா உடலைத் துறந்த பின்பும் அருளுகின்றான். அநாதியாகிய சிவபிரான் சகல நிலையில் இருக்கும் ஆன்மாவுக்கு இவை அனைத்தையும் செய்கின்றான்.

#2419. பதியால் பசு பாசம் விடும்

ஆறாறு குண்டலி தன்னின் அகத்திட்டு
வேறாகு மாயையில் முப்பால் மிகுத்திட்டுஅங்கு
ஈறாம் கருவி இவற்றால் வகுத்திட்டு
வேறாம் பதிபசு பாசம்வீ டாகுமே.

சிவபெருமான் முப்பத்தாறு தத்துவங்களுக்கும் குண்டலினி சக்தியுடன் தொடர்பை ஏற்படுத்தினான். ஆன்மாவிலிருந்து வேறாகிய மாயையில் சிவத்துவம், வித்தியா தத்துவம், ஆன்ம தத்துவம் என்ற மூன்று பகுதிகளை பொருத்தினான். ஆன்ம தத்துவத்தில் ஆன்மாவுக்குத் தேவையான கருவிகளைப் பொருத்தினான். இந்தப் பதியின் பாதங்களை பற்றிக் கொள்ளும் பசு அதைப் பிணித்திருந்த பாசத்திலிருந்து மீளும்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2420 to #2424

#2420. ‘நான்’ என்னும் நற்பாசம் நண்ணும்

வீட்கும் பதிபசு பாசமும் மீதுற
ஆட்கும் இருவினை ஆங்குஅவற் றால் உணர்ந்து
தாட்கு நரசு சுவர்க்கத்தில் தானிட்டு
நாட்குற நான்தங்கு நற்பாசம் நண்ணுமே.

பதியாகிய சிவன் பசுவாகிய ஆன்மாவைப் பாசத்தில் கொண்டு வீழ்த்தும். ஆன்மாவுக்குப் பந்தங்களில் விருப்பம் உண்டாகச் செய்யும். ஆன்மாவை இருவினைளைப் புரியத் தூண்டும். அந்த வினைப் பயன்களாக ஆன்மா பெறுகின்ற பாவம் புண்ணியம் இவற்றைக் கழிக்க ஆன்மாவை நரகம் சுவர்க்கம் இவற்றில் செலுத்தும். இறுதியில் ஆன்மாவிடம் ‘நான்’ என்னும் ஆணவம் மட்டுமே மிகுந்து இருக்கும்.

#2421. அண்ணல் அடிசேர் உபாயம்

நண்ணிய பாசத்தில் நான்எனல் ஆணவம்
பண்ணிய மாயையில் ஊட்டல் பரிந்தனன்
கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள்
அண்ணல் அடிசேர் உபாயமது ஆகுமே.

ஆன்மாவுடன் பொருந்தியுள்ள பாசத்தால் ஆன்மா தன் கருவிகளுடன் கூடி இருந்து அவற்றையே தான் என்று எண்ணுவது ஆணவம். ஆன்மாவை மாயையுடன் பொருத்தி வைத்துள்ளான் சிவன். ஆன்மா அறிவு பெறும் போது ஆணவத்தின் வலிமை குறையும். சிவன் பேரருள் ஆன்மாவை அவன் அடிகளில் கொண்டு சேர்க்கும்.

#2422. மோகம் அறச் சுத்தன் ஆக்கும்

ஆகும் உபாயமே யன்றி அழுக்கற்று
மோசு மறச்சுத்தன் ஆதற்கு மூலமே
ஆகும் அறுவை அழுக்கேற்றி ஏற்றல்போல்
ஆகுவ தெல்லாம் அருட்பாச மாகுமே.

அத்தன் அருள் அவன் அடிகளை சென்று அடையும் ஓர் உபாயம் மட்டும் அல்ல. அவன் அருள் ஆன்மாவின் ஆணவத்தையும் ஆசைகளை அறவே அழிக்கின்றது. ஆன்மாவைத் தூய்மையாக்குகின்றது. அழுக்கு உவர் மண்ணைச் சேர்த்து அழுக்குத் துணிகளைத் துவைத்து வெளுக்கச் செய்வது போன்றே ஆன்மாவுடன் ஈசன் பாசத்தைச் சேர்ப்பது அதனைப் பற்றியுள்ள பாசத்தை அகற்றுவதற்கே ஆகும்.

#2423. பாசம் பயிலப் பதிபசு வாகுமே

பாசம் பயிலுயிர் தானே பரன்முதல்
பாசம் பயிலுயிர் தானே பசுவென்ப
பாசம் பயிலப் பதிபர மாதலால்
பாசம் பயிலப் பதிபசு வாகுமே

பதியின் மீது பாசம் கொண்ட ஆன்மா பரம் என்ற நிலையை அடைகின்றது. பசுவின் மீது பாசம் கொண்ட ஆன்மா உலகை இயலில் ஆழ்கின்றது. பதி பாசத்தில் நிலையாக நின்று பரம் ஆகும் பசு (ஆன்மா) இறுதியில் பசுபதியாகவே ஆகி விடுகின்றது.

#2424. தம்மை அடைந்து நின்றாரே.

அத்தத்தில் உத்தரம் கேட்ட அருந்தவர்
அத்தத்தில் உத்தர மாகும் அருள்மேனி
அத்தத்தி னாலே அணையப் பிடித்தலும்
அத்தத்தில் தம்மை அடைந்து நின்றாரே.

சனகர், சனந்தனர், சனத்குமாரர், சனாதனர் என்ற அருந்தவ முனிவர்கள் தட்சிணா மூர்த்தியிடம் வேதத்தின் பொருளை வினவினர். பெருமான் சுட்டு விரலுடன் கட்டைவிரலைச் சேர்த்து ஞான முத்திரையினால் வேதப் பொருளை உணர்த்தினார். அருந்தவ முனிவர்கள் அண்ணலின் காலடிகளை அணையப்பற்றி வேதப் பொருளை உணர்ந்து கொண்டு தம் உண்மை வடிவில் ஒளியுடன் நின்றனர்.

கட்டை விரல் => சிவன்
சுட்டு விரல் => ஆன்மா
மற்ற மூன்று விரல்கள் => ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்கள்.
ஆன்மா மும்மலங்களை விலக்கிச் சிவனுடன் இணைந்தால் அப்போது தூய ஞானம் விளையும்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

17. அடி தலை அறியும் திறன் கூறல்
திருவடிகளைத் தலையில் உணரும் திறனைக் கூறுவது

#2425 to #2427

#2425. ஞானத்தைக் காட்ட வீடாகுமே

காலும் தலையும் அறியார் கலதிகள்
கால்அந்தச் சத்தி அருள்என்பர் காரணம்
பாலொன்று ஞானமே பண்பார் தலைஉயிர்
கால்அந்த ஞானத்தைக் காட்டவீ டாகுமே

வீணர்கள் “கால் எது? தலை எது?” என்று உண்மையை அறியார். ‘கால்’ என்பது குண்டலினி சக்தி. மூலாதாரத்தில் விளங்கும் குண்டலினி சக்தி அன்னை சக்தியின் அருள் ஆகும். தலை என்பது ஒளி வீசுகின்ற ஞானத்தின் உறைவிடம். மூலாதாரத்தில் உள்ள குண்டனிலி சக்தி சுழுமுனை வழியாகத் தலை உச்சியை அடைந்து அங்கு நாதத்தை உதிக்கச் செய்து ஞானம் ஆகிய சிவனைக் காட்டினால் ஆன்மா வீடுபேறு அடையும்.

#2426. தலை உச்சியில்; மூலம் அடியில்!

தலைஅடி யாவது அறியார் காயத்தில்
தலைஅடி உச்சியில் உள்ளது மூலம்
தலைஅடி யான அறிவை அறிந்தோர்
தலைஅடி யாகவே தான்இருந் தாரே.

உடலில் ‘அடி’ எனப்படும் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தி, தலைக்குச் சென்று அங்கு பொருந்துவதை அறிவிலிகள் அறியார். தலை உள்ளது உச்சியில். மூலம் உள்ளது அடியில். மூலத்தில் உள்ள குண்டலினி சக்தி தலையைச் சென்று அடைவதை அறிந்து கொண்டவர் ஞானியர். அவர்கள் பேரறிவு படைத்தவர்கள்.

#2427. நந்தி தாள் இணை என் தலைமிசை ஆனதே

நின்றான் நிலமுழுது அண்டமும் மேலுற
வன்தாள் அசுரர் அமரரும் உய்ந்திடப்
பின்தான் உலகம் படைத்தவன் பேர்நந்தி
தன்தாள் இணைஎன் தலைமிசை ஆனதே.

மண்ணும், விண்ணும், உள்ளும், புறமும், இங்கு அங்கு என்னாதபடி எங்கும் கலந்து நிற்பவன் சிவன். எண்ணில்லாத அண்டங்களில் வாழுகின்ற வானவர், தானவர் உய்யும்படி அவன் உலகங்களைப் படைத்தான். நந்தி என்னும் அந்தப் பெருமான் தன் இரு திருவடிகளை என் தலை மீது பதித்தான்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2428 to #2430

#2428. சிந்தையின் உள்ளே எந்தைத் திருவடி

சிந்தையின் உள்ளே எந்தை திருவடி
சிந்தையின் எந்தை திருவடிக் கீழது
எந்தையும் என்னை அறியகி லான்ஆகில்
எந்தையை யானும் அறியகி லேனே.

என் சிந்தையின் உள்ளே எந்தை சிவனின் திருவடிகள் உள்ளன. என் மனமும் அவன் திருவடிகளைப் பற்றியே நிற்கின்றது. என்னை அறிந்து கொண்டு, எந்தை சிவன் எனக்குத் தன்னை உணர்த்தாவிடில், நானும் எந்தை சிவனை அறியாமல் இருந்திருப்பேன்!

#2429. நாயகன் கழலிணைச் சூட்டி நின்றேன்

பன்னாத பாரொளிக்கு அப்புறத்து அப்பால்
என்நா யாகனார் இசைந்தங்கு இருந்திடம்
உன்னா ஒளியும் உரைசெய்யா மந்திரம்
சொன்னான்கழலிணை சூட்டிநின் றேனே.

என் தலைவன் ஆகிய சிவன் விரும்பி உறைகின்ற இடம் சொல்வதற்கு அரிய, ஒளி வீசுகின்ற, ஆறு ஆதாரங்களுக்கு அப்பால் உள்ள பரமாகாயம் ஆகும். எண்ண இயலாத ஞான ஒளியையும், சொல்ல இயலாத பிரணவ மந்திரத்தையும் அவன் எனக்கு உணர்த்தினான். நான் அவன் இருக்கழல்களை என் தலை மேல் சூட்டி நின்றேன்.

#2430. மலர் பதம் ஓதுமின்

பதியது தோற்றும் பதமது வைம்மின்
மதியது செய்து மலர்ப்பதம் ஓதும்
நதிபொதி யும்சடை நாரியோர் பாகன்
கதிசெயும் காலங்கள் கண்டுகொ ளீரே

‘பதி’ என்பதன் பொருள் விளங்கும் இடமாகிய தலை மேல் உங்கள் உள்ளத்தை பதியுங்கள். திங்கள் கலையை விளங்காச் செய்யும் அவன் மலர்ப்பாதங்களை ஓதுங்கள். பொங்கும் கங்கையைத் தன் சடையில் பொதிந்துள்ள மாதொரு பாகன் உங்களுக்கு முத்தியை அளிப்பான். அவனை வழிபடுவதற்கு உகந்த காலத்தைக் கண்டு கொண்டு அவனை வழிபடுங்கள்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2431 to #2434

#2431. சிந்தை பரித்து நின்றான்.

தரித்துநின்றானடி தன்னிட நெஞ்சில்
தரித்து நின்றான் அமராபதி நாதன்
கரித்துநின் றான்கரு தாதவர் சிந்தை
பரித்துநின் றான்அப் பரிபாகத் தானே.

அமராபதிநாதன் தன் திருவடிகளை இடையறாது நெஞ்சில் தரித்து இருப்பவர்களின் உள்ளத்தில் தன் திருவடிகளை நன்கு பதித்து நிற்பான். தன்னை சிந்தையில் கொள்ளாதவர்களை அவன் வெறுத்து அவர்கள் உள்ளத்தில் ஒளிந்து கொண்டு இருப்பான். இங்கனம் ஆன்மாக்களின் பக்குவத்துக்கு ஏற்ப தன் அருளைத் தருபவன் ஆன்மாக்களைப் பரித்து நிற்கும் அந்தப் பரிபாகத்தான்.

#2432. இன்றே சென்று ஈசனை எய்தலும் ஆமே.

ஒன்றுண்டு தாமரை ஒண்மலர் மூன்றுள
தன்தாதை தாளும் இரண்டுள காயத்துள்
நன்றாகக் காய்ச்சிப் பதஞ்செய வல்லார்கட்கு
இன்றேசென்று ஈசனை எய்தலும் ஆமே.

உடலில் சகசிரதளத்தில் உள்ள தாமரை மலரில் நம் தந்தையாகிய சிவன் விளங்குவான். அவனை அங்கே வழிபடுவதற்குத் திங்கள், கதிரவன், அக்கினி என்ற மூன்று கண்கள் உள்ளன. அவனை வழிபடுவதனால் விந்து நாதம் என்னும் அவன் இரு திருவடிகள் விளங்கும். தன் உடலை யோகப் பயிற்சியால் காய்ச்சி பதம் செய்து புடம் இட்டவர்கள் எந்தை சிவனை இன்றே காண இயலும்.

#2433. செம்மை விளம்ப ஒண்ணாது

கால்கொண்டுஎன் சென்னியிற் கட்டறக் கட்டற
மால்கொண்ட நெஞ்சின் மயக்கிற் றுயக்கறப்
பால்கொண்ட என்ணைப் பரன்கொள்ள நாடினான்
மேல்கொண்டென் செம்மை விளம்ப ஒண்ணாதே.

என் சென்னி மீது எந்தை தன் அடிகளை பதிக்கப் பதிக்க என் தளைகள் கட்டறுந்து விட்டன. உலக விஷயங்களில் ஆர்வம் கொண்டு மயக்கம் அடைந்திருந்த என் நெஞ்சத்தின் மயக்கமும் தளர்ச்சியும் நீங்கிவிட்டன. வெண்ணிற ஒளியைப் பற்றிக் கொண்ட என்னை ஆட்கொள்ளச் சிவன் மனம் கனிந்தான். அதனால் நான் அடைந்த மேலான பலன்களை என்னால் செப்பவும் இயலாதே !

#2434. செய்கைக்கு எய்தின செய்யுமே

பெற்ற புதல்வர்போல் பேணிய நாற்றமும்
குற்றமுங் கண்டு குணங்குறை செய்யவோர்
பற்றைய ஈசன் உயிரது பான்மைக்குச்
செற்றமி லாச் செய்கைக்கு எய்தின செய்யுமே.

பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் கொண்டுள்ள தொடர்பை விரும்புவர். அவர்கள் தங்கள் குழந்தைகளின் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் அவர்கள் குணங்களைக் கொண்டாடுவர். இறைவனும் அவ்வண்ணமே ஆன்மாக்களின் பான்மைக்கும் தன்மைக்கும் ஏற்பத் தன் அருளை பொழிவான்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

18. முக்குற்றம்
காமம் , வெகுளி, மயக்கம் என்ற ஆன்மாவின் மூன்று குற்றங்கள்

#2435 & #2436

#2435. மூன்றினுள் பட்டு முடிவார்!

மூன்றுள குற்றம் முழுதும் நலிவன
மான்றுஇருள் தூங்கி மயங்கிக் கிடந்தன
மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார்
மூன்றினுள் பட்டு முடிகின்ற வாறே.

ஆன்மாவிடம் காமம், வெகுளி, மயக்கம் என்ற மூன்று குற்றங்கள் பொருந்தியுள்ள. அவை மிகவும் வலிமை வாய்ந்தவை. அவை ஆன்மாவுக்குத் துன்பத்தைத் தருபவை. இம் மூன்று குற்றங்களின் விளைவாக ஆன்மா தன் உண்மை வடிவை உணராமல், மாயையின் காரியமாகிய அறியாமை என்னும் இருளில் அழுந்தியுள்து . காமம், வெகுளி, மயக்கம் என்ற மூன்று குற்றங்களில் இருந்து விடுதலை அடைந்தவர்கள்; பிறப்பு, இறப்பு என்று மாறி மாறி வரும் பிணியிலிருந்து விடுதலை அடைவர். இந்த மூன்று குற்றங்களை நீக்காதவர்கள் மாயையில் சிக்கித் துன்புறுவார்கள்.

#2436. ஓம் என்ற ஓசையின் உள்ளே உள்ள தாமம்

காமம் வெகுளி மயக்கம் இவைகடிந்து
ஏமம் பிடித்திருந் தேனுக்கு எறிமணி
ஓமெனும் ஓசையின் உள்ளே உறைவதோர்
தாமம் அதனைத் தலைப்பட்ட வாறே.

என்னைப் பிணித்து இருந்த காமம், வெகுளி, மயக்கம் என்ற மூன்று குற்றங்களையும் களைந்துவிட்டு, என்னைப் பாதுகாக்கும் எந்தைத் திருவடிகளை நான் சிக்கெனைப் பிடித்திருந்தேன். மணியோசை போன்ற பிரணவத்தின் உள்ளே உறையும் ஒளியை நான் கண்டு கொண்டேன்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

19. முப்பதம்

மூன்று பதங்கள்:
அவை 'தத்' பதம், 'தொம்' பதம், 'அசி' பதம் என்பவை

#2437 to #2440

#2437. மாளச் சிவமாய் இருக்குமே.

தோன்றிய தொம்பதம் தற்பதம் சூழ்தர
ஏன்ற அசிபதம் இம்மூன்றோடு எய்தினோன்
ஆன்ற பராபர மாகும் பிறப்பற
ஏன்றனன் மாளச் சிவமாய் இருக்குமே.

தொம்பதம் ( த்வம் பதம்) “நீ” என்னும் பதம், அதைச் சுற்றியுள்ள தற்பரம் (தத் பதம்) “அது” என்னும் பதம் இவற்றுடன் அசிபதம் (ஆகின்றாய் ) என்ற பதம் இந்த மூன்றுடனும் நன்றாகப் பொருந்தியவன் பிறவியை நீக்கி அகண்ட சிவம் ஆகி விடுவான். இங்கனம் விடுதலை பெற்றவன் என்றென்றும் அழியாத சிவமாகவே ஆகிவிடுவான்.

#2438. வேதம்சொல் தொம்பதம் மெய்ம்மையே.

போதந் தனையுன்னிப் பூதாதி பேதமும்
ஓதுங் கருவிதொண் ணூறுடன் ஓராறு
பேதமும் நாதாந்தப் பெற்றியில் கைவிட்டு
வேதம்சொல் தொம்பத மாகுதல் மெய்ம்மையே.

போதத்தை அடைய விரும்புங்கள்! பஞ்ச பூதங்களையும், உடலில் உள்ள தொண்ணூற்றாறு கருவி பேதங்களையும் துறந்து விடுங்கள். நாதாந்த நிலையையும் கடந்து மேலே செல்லுங்கள். வேதங்கள் கூறும் “த்வம் பதம்” அங்கு இருப்பது மெய் என்று நீங்கள் உணருவீர்கள்.

#2439. கற்பனையின்றிக் கலந்து நின்றானே.

தற்பதம் என்றும் துவம்பதம் தான்என்றும்
நிற்பது அசியத்துள் நேரிழை யாள்பதம்
சொற்பதத் தாலும் தொடரஒண் ணாச்சிவன்
கற்பனை யின்றிக் கலந்துநின் றானே.

‘தத் பதம்’ என்பதும் ‘த்வம் பதம்’ என்பதும் ஒன்றாகப் பொருந்தும் நிலையே அசி பதம் ஆகும். இதில் இருப்பவள் நேரிழையாள் ஆகிய சக்தி அன்னை. சொற்பதத்தைக் கடந்தவன் சிவபெருமான் என்றாலும் ‘அசி’ பதத்தில் அவன் வெறும் கற்பனையாக இல்லாமல் உண்மையாகவே கலந்து நிற்கின்றான்.

#2440. பால், தேன், அமுதின் கலவை

அணுவும் பரமும் அசிபதத்து ஏய்ந்து
கணுஒன் றிலாத சிவமும் கலந்தால்
இணையறு பால்தேன் அமுதென இன்பத்
துணையது வாயுரை யற்றிடத் தோன்றுமே.

உயிரும், பரமும் பிரிவின்றி ஒன்றாக அசி பதத்தில் பொருந்தும்போது, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத சிவனும் அங்கு வந்து அவற்றுடன் கலந்தால்; அந்த நிலை பாலும் தேனும் அமுதமும் ஒன்றாகக் கலந்து போல உணர்வினைத் தந்து; வாய்ச் சொற்கள் பேசாத உயர்ந்த மௌன நிலையை நிகழ்த்தும்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2441 to #2444

#2441. நம்பிய சீவன் பரன் சிவனாய் நிற்கும்

தொம்பதம் தற்பதம் தோன்றும் அசிபதம்
நம்பிய சீவன் பரன்சிவ னாய்நிற்கும்
அம்பத மேலைச் சொரூபமா வாக்கியம்
செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.

ஆன்மா ‘த்வம்’ பதத்தில் சீவனாகவும், ‘தத் ‘ பதத்தில் பரனாகவும், ‘அசி’ பதத்தில் சிவனாகவும் நிற்கும். இந்த மூன்று பதங்களுக்கு அப்பால் வேத வாக்கியமாகிய ‘தத் த்வம் அசி’ என்பது உள்ளது. செம்பொருளாகிய சிவன் அந்த வாக்கியத்துக்கு ஏற்ப என்னை ஆட்கொண்டு அருளினான்.

#2442. தான்அவன் ஆகுமே

ஐம்பது அறியா தவரும் அவர்சிலர்
உம்பனை நாடி உரைமுப்ப தத்திடைச்
செம்பர மாகிய வாசி செலுத்திடத்
தம்பரயோகமாய்த் தான்அவன் ஆகுமே.

ஐம்பது எழுத்துக்களும் வாக்கு வடிவமாகிய சக்தி தேவியர் என்ற உண்மையைப் பலர் அறியார். சிலர் தேவதேவனை நாடி; ‘தத் த்வம் அசி ‘ என்ற மூன்று பதங்களால் உணர்த்தப்படும் உண்மைப் பொருளிடம் சிந்தையைச் செலுத்தி; பிராணாயாமம் போன்ற யோகப் பயிற்சியின் மூலம் சிவனை அறிந்து கொண்டு அவனுடன் ஒன்றாக இணைவர்.

#2443. நந்தி நனவாதி மூட்டும் அனாதியே.

நந்தி அறிவும் நழுவில் அதீதமாம்
இந்தியும் சத்தாதி விடவிய னாகும்
நந்திய மூன்றுஇரண்டு ஒன்று நலம்ஐந்து
நந்தி நனவாதி மூட்டும் அனாதியே.

நந்தியின் நாத ஒலியை அறியும் ஆன்ம அறிவும் நழுவினால் சாக்கிராதீதம் உண்டாகும். செவி முதலிய ஐம்பொறிகள் சப்தம் முதலிய ஐந்து விஷயங்களை உணரா. மும் மலங்கள், இருவினைகள், ஓர் ஆன்மா , ஐந்து அவத்தைகள் எல்லாம் அகன்று விடும். அப்போது அனாதியான நின்மல சாக்கிர நிலையை நந்தி அருள்வான்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2444. அரிய துரியம் அசிபதம் ஆமே.

பரதுரி யத்து நனவு படியுண்ட
விரிவிற் கனவும் இதன்உப சாந்தத்து
துரிய கழுமுனையும் ஓவும் சிவன்பால்
அரிய துரியம் அசிபதம் ஆமே.

சாக்கிர பரதுரிய நிலைக்கு அப்பால் உள்ளது நின்மலக் கனவு நிலை. அலைகள் அற்ற கடல் போல அமைதியாக இருக்கும். இதுவே உபசாந்தத்துக்கு வழி காட்டுகின்ற பரதுரிய சுழுத்தி நிலை. சிவத்துடன் பொருந்தும் போது அது நின்மல துரியமாகி அசிபதம் ஆகும்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2445 to #2448

#2445. இளங்கொடி நலந் தருமாறே

தோன்றிஎன் உள்ளே சுழன்றுஎழு கின்றதோர்
மூன்று படிமண் டலத்து முதல்வனை
ஏன்றெய்தி இன்புற்று இருந்தே இளங்கொடி
நான்று நலம்செய் நலந்தரு மாறே

என் உடலில் இயற்கையாகவே சுற்றி எழுகின்றன கதிரவன், திங்கள், அக்கினி என்பவற்றின் மூன்று மண்டலங்கள். இவற்றில் அனைத்துக்கும் முதல்வனான சிவன் விளங்குகின்றான். அவனை அடைந்து நான் ஆனந்தத்தில் அமிழ்திருந்தேன். இளங் கொடியாகிய குண்டலினி சக்தியையும் அவள் அருளை பெறுவதற்காக நான் விடாமல் பற்றிக் கொண்டு இருந்தேன்.

#2446. குன்று நிறைந்த குணவிளக்கு ஆமே.

மன்று நிறைந்தது மாபர மாயது
நின்று நிறைந்தது நேர்தரு நந்தியும்
கன்று நினைந்தெழு தாயென வந்தபின்
குன்று நிறைந்த குணவிளக்கு ஆமே.

இறைவன் ஆனந்த நடனமாடும் மன்றம் வான மண்டலம் முழுவதும் பரவி நிறைந்துள்ளது. நந்திப் பெருமானும் நின்று அதை நிறைத்தான். கன்று நினைத்தவுடன் வந்து அன்புடன் பால் தரும் பசு போல அன்பன் நினைந்த உடன்வந்து அருள் பொழிவான் சிவன். சீவன் சிவன் அருளை பெற்ற பின்பு குன்றின் மேல் இட்ட விளக்கென ஒளிரும்.

#2447. பேணும் ஆனந்தம் பெருகவே.

ஆறாறு தத்துவத்து அப்புறத்து அப்பரம்
கூறா உபதேசம் கூறில் சிவபரம்
வேறாய் வெளிப்பட்ட வேதப் பகவனார்
பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே.

ஆறாறு முப்பத்தாறு தத்துவங்களுக்கு அப்பாற்பட்டு விளங்குவது பரம். அது வாய் விட்டுச் சொல்லாமல் மௌன மொழியில் வேதப் பொருளை உபதேசம் செய்தது. சிவபரம் குருவடிவம் தாங்கி வேதப் பொருளை அருளிய அந்த இன்பத்தைப் பெறுங்கள். அதைப் பேணி மேலும் பெருக்கிக் கொள்ளுங்கள்.

#2448. பற்றறப் பற்றில் பரம் பரமாமே.

பற்றறப் பற்றின் பரம்பதி யாவது
பற்றறப் பற்றின் பரனறி வேபரம்
பற்றறப் பற்றினில் பற்றவல் லோர்கட்கே
பற்றறப் பற்றில் பரம்பர மாமே.

உலக வேட்கைகளைத் துறந்து விட்டு அனைத்திற்கும் தலைவனான பதியின் பாதங்களை பற்றுங்கள். அப்போது நீங்களும் பதியின் பதத்தை அடைவீர்கள். உலக வேட்கைகளைத் துறந்து விட்டு அனைத்திற்கும் தலைவனான பதியின் பாதங்களை பற்றுங்கள். அப்போது நீங்களும் பதியின் ஞானத்தை அடைவீர்கள். உலக வேட்கைகளைத் துறந்து விட்டு அனைத்திற்கும் தலைவனான பதியின் பாதங்களை பற்றுங்கள். அப்போது நீங்களும் சிவபதவியை அடைவீர்கள்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2449 to #2451

#2449. பரமாகப் படைப்பது அறிவே.

பரம்பர மான பதிபாசம் பற்றாப்
பரம்பர மாகும் பரஞ்சிவ மேவப்
பரம்பர மான பரசிவா னந்தம்
பரம்பர மாகப் படைப்பது அறிவே.

மேலான சிவபதவியை அடைந்தவர் பாசம் அணுகாத மிகவும் மேலான நிலையை அடைந்தவர் ஆவர். அங்கணம் அவர் சிவனுடன் பொருந்துகையில் உயரிய சிவானந்தம் விளையும். இவ்வாறு ஆன்மாக்களை மேன்மையுறச் செய்வது அறிவின் வடிவமாகிய சிவபெருமான் ஆவான்.

#2450. தனையுற்றுத் தற்பரமாமே.

நனவில் கலாதியாம் நாலொன்று அகன்று
தனியுற்ற கேவலம் தன்னில் தானாகி
நினைவுற்று அகன்ற அதீதத்துள் நேயந்
தனையுற்று இடத்தானே தற்பர மாமே.

நின்மல சாக்கிரத்தில் கலை, வித்தை, அராகம், புருடன், மாயை என்ற ஐந்து தத்துவங்களும் அகன்றுவிடும். கேவல நிலையில் கருவிகளின் அறிவையும் துறந்துவிட்டு ஆன்மா தனித்து நிற்கும். பின்பு ஆன்மா நினைவையும் விட்டு விட்டுத் துரியாதீத நிலையில் நேயப்பொருளான சிவத்தை சார்ந்து நிற்கும். அப்போது ஆன்மா அறிவு வடிவாகித் தற்பரம் என்ற உயர்ந்த நிலையை அடையும்.

#2451. நாடு அகர ஆதியே

தற்கண்ட தூயமும் தன்னில் விசாலமும்
பிற்காணும் தூடணம் தானும் பிறழ்வுற்றுத்
தற்பரன் கால பரமும் கலந்தற்ற
நற்பரா தீதமும் நாடுஅகர ஆதியே.

தன்னைத் தூய்மையாகக் காண்மின்; தன்னை எல்லைகள் அற்ற விரிவான அகண்டமாகக் காண்மின்; ஆன்மா கருவி கரணங்களுடன் கலந்து பொருந்திய நிலையை விட்டு நீங்குமின்; தற்பரமும், கால பரமும் கலந்து இருக்கும் பராதீத நிலை நாடுமின்; அகரத்தை முதலாகக் கொண்ட பிரணவ வடிவான சிவனை நாடுமின்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

21. பர இலட்சணம் = பரை ஒளியின் இயல்பு

#2452 to #2455

#2452. அறிவிலோன்

அதீதத்து ளாகி அகன்றவன் நந்தி
அதீதத்து ளாகி அறிவிலோன் ஆன்மா
மதிபெற் றிருள்விட்ட மன்னுயிர் ஒன்றாம்
பதியிற் பதியும் பரவுயிர் தானே.

நின்மல துரியாதீதத்தில் விளங்கும் நந்தி பெருமான் பரந்து நிற்கும் அகண்ட தன்மை கொண்டவன் . அறிவு நிறைந்தவன். ஆனால் ஆன்மா துரியாதீதத்தில் தன் அறிவை இழந்து அறிவில்லாதவனாக இருப்பான். ஆன்மாவின் மதி மண்டலம் முழுமை பெற்றபின்பு, ஆணவமலத்தைத் துறந்துவிட்டு ஆன்மா சிவனுடன் பொருந்தினால், சிவன் அந்த ஆன்மாவில் பதிந்து அதன் அறிவையும் பரப்பையும் பெருக்குவான்.

#2453. பரபோதம் உணர்ந்தவர் புண்ணியத்தோரே.

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பதி
சோதிப் பரஞ்சுடர் தோன்றத்தோன் றாமையின்
நீதிய தாய்நிற்கும் நீடிய அப்பர
போதம் உணர்ந்தவர் புண்ணியத் தோரே.

சிவன் ஆதியும் அந்தமும் இல்லாத அருந்தலைவன். அவன் சோதி வடிவாகிப் பரஞ்சுடர் ஆனவன்! அவன் இங்கு அங்கு என்னாதபடி எங்கும் நிறைந்தவன். நல்லவர்கள் அவனைக் காண வல்லவர்கள். பொல்லாதவர்கள் அவனைக் காண இயலாதவர்கள். நீதிவடிவானவன் சிவன். அந்த சிவனைப்பற்றிய சிவஞானம் வாய்ந்தவர் மிகுந்த புண்ணியர்கள் ஆவர்.

#2454. துரிய வல்லார்க்குத் துரிசில்லை

துரியங் கடங்கு துரியா தீதத்தே
அரிய வியோகங்கொண்டு அம்பலத் தாடும்
பெரிய பிரானைப் பிரணவக் கூபத்தே
துரியவல் லார்க்குத் துரிசில்லை தானே.

சீவன் நின்மலத் துரியத்தில் பரையோகத்தில் ஆழ்ந்துவிடும். ஆணவம் அற்று விளங்கும். அதைக் கடந்து துரியாதீதத்தை அடைந்த ஆன்மா தூய்மை அடையும். பரவெளியில் ஆனந்த நடனம் செய்பவன் சிவன். ஆன்மாவுக்கு வீடுபேறு அளிக்கவல்ல சிவபெருமானின் அற்புத நடனத்தைப் பிரணவத்தினுள் காண இயன்ற ஆன்மாவுக்கு எந்த விதக் குற்றமும் இருக்காது.

#2455. செம்மைச் சிவம் மேருசேர் கொடி அம்மை

செம்மைமுன் னிற்பச் சுவேதம் திரிவபோல்
அம்மெய்ப் பரத்தோடு அணுவன்உள் ளாயிடப்
பொய்மைச் சகமுண்ட போத வெறும்பாழில்
செம்மைச் சிவமேரு சேர்கொடி யாகுமே.

செந்நிறத்துடன் கலந்துவிட்ட வெண்மை நிறம் தன் உண்மைத் தன்மை கெட்டு சிவப்பு நிறம் அடைந்து விடும். அது போன்றே சிவத்துடன் இணையும் சீவன் தன் உண்மைத் தன்மை கெட்டு விடும். தன் முனைப்பை விட்டு விடும். உலகம் ஒரு மாயை என்ற போதம் அடைந்து, அதனுடன் ஒட்டாமல் எட்ட நின்று, எண்ண ஓட்டத்தையும் துறந்துவிட்ட சூனியத்தில், குண்டலினி சக்தி மேருவாகிய துவாதசாந்தத்தில் சிவனுடன் ஒன்றுவாள்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2456 to #2460

#2456. அச்சம் அறுத்தென்னை ஆண்டவன் நந்தியே.

வைச்ச கலாதி வருதத்து வங்கெட
எச்ச இருமாயை வேறாக வேரறுத்து
உச்ச பரசிவ மாம்உண்மை ஒன்றவே
அச்சம் அறுத்தென்னை ஆண்டவன் நந்தியே.

சிவமேருவில் சிவன் சக்தியுடன் பொருந்தும் போது ஆன்மாவின் கலைகள் ஒடுங்கும். சுத்த மாயை, அசுத்த மாயைகளின் பிணைப்பு வேரறுக்கப்படும். துவாதசாந்தம் என்ற தலை உச்சியில் சிவன் விளங்கினான். பிரவிபி பிணி குறித்த என் அச்சத்தைப் போக்கினான். என்னைத் தன் அடிமையாக ஏற்றுக் கொண்டு எனக்கு ஞானத்தை நல்கினான்.

#2457. தன்னை அளித்தான் தற்பர மாகவே.

என்னை அறிய இசைவித்த என்நந்தி
என்னை அறிந்து அறி யாத இடத்துய்த்துப்
பின்னை ஒளியிற் சொரூபம் புறப்பட்டுத்
தன்னை அளித்தான் தற்பர மாகவே.

என் உண்மை சொரூபத்தை எனக்குச் சிவபெருமான் உணர்த்தினான். என்னை நான் அறிந்து கொண்ட பின்னர், நான் இதுவரை அறிந்திராத பரவெளியில் என்னை அறிவுடன் செல்லுமாறு செய்தான். பிரணவ ஒளியில் என் ஆன்ம வடிவம் வேறாக விளங்கியது. எனக்கு அவன் தன்னைத் தந்தான். என்னையும் தற்பரம் ஆக்கினான்.

#2458. தரந்த விசும்பு தாங்கி நின்றானே.

பரந்தும் சுருங்கியும் பார்புனல் வாயு
நிரந்தர வளியொடு ஞாயிறு திங்கள்
அரந்த அரன் நெறி யாயது வாகித்
தரந்த விசும்பொன்று தாங்கிநின் றானே.

பரந்தும் சுருங்கியும் இருக்கும் மண். விண், தீ, நீர், காற்று, கதிரவன், சந்திரன், அகண்ட வானம் இவை அனைத்தையும் சிவன் தான் தனி ஒருவனாகத் தாங்கி நிற்கின்றான்.

#2159. பரையே பரனின் உடல் ஆவாள்

சத்தின் நிலையினில் தானான சத்தியும்
தற்பரை யாய்நிற்கும் தானாம் பரற்கு உடல்
உய்த்தரும் இச்சையில் ஞானாதி பேதமாய்
நித்தம் நடத்தும் நடிக்கும்மா நேயத்தே.

பரன் (சிவன்), பரை (சக்தி) இரன்டும் ஒரே இடத்தில விளங்குபவை. இலயத்தில் பரனாக இருக்கும் சிவன், படைப்பின் போது பரை என்ற நிலையை அடைவான். பரையே பரனுக்கு உடல் ஆவாள். தனு, கரணங்கள், புவனம், போகங்கள், முதலியவற்றைச் சீவர்களுக்கு படைப்பதற்காகச் சக்திதேவி; ஆதி சக்தி, இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என்று பல பேதங்களை தன் மேல் பொருத்திக் கொள்வாள். பரனிடம் பிரியாமல் இருந்து கொண்டு ஐந்தொழில்களையும் இயற்றுபவள் உண்மையில் பரை ஆகிய சக்தி தேவியே.

#2460. பரையில் பரையாகிய விந்து சக்தி

மேலொடு கீழ்பக்கம் மெய்வாய்கண் நாசிகள்
பாலிய விந்து பரையுள் பரையாகக்
கோலிய நான்சகு அவை ஞானம் கொணர் விந்து
சீலமி லாஅணுச் செய்திய தாமே.

விந்து சக்தி பரையில் பரையாக இருந்து கொண்டு, பரவி சீவனின் உடலின் மேலும், கீழும், உடலைச் சூழ்ந்தும் இருக்கும். மெய், வாய், கண், நாசி, செவி போன்றவற்றைக் காப்பது விந்து சக்தி. ஞானம் இல்லாத ஆன்மாவுக்கு அருவமாகிய சிவம், சக்தி, விந்து, நாதம் இவற்றின் ஞானத்தைத் தந்து ஆணவ மலத்தில் கட்டுண்ட ஆன்மாவை உலகில் நடத்தும்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2461 to #2465

#2461. உயிர் உயிர்த்து, உண்டு, உறங்கும்!

வேறாம் அதன்தன்மை போலும்இக் காயத்தில்
ஆறாம் உபாதி அனைத்தாகும் தத்துவம்
பேறாம் பரவொளி தூண்டும் பிரகாசமாய்
ஊறாய் உயிர்த்துண்டு உறங்கிடும் மாயையே.

பரையின் ஒளி வேறு வேறு இயல்புகளை உடையது. அது உடலின் ஆறு ஆதாரங்களில் பொருந்துகின்றது ஆறு விதமான வேறுபாடுகளை அளிக்கின்றது. மாறு பட்ட தத்துவங்களை மாயையால் தொழிற்படுத்துகின்றது. சீவனை உயிர்த்து, உண்டு, உறங்கச் செய்கின்றது. எனினும் இத்தகைய மாயையின் செய்லகளைக் கடந்து சென்று பரஒளியில் பொருந்தி இருப்பதே ஆன்மா அடையத் தகுந்த பெரும் பேறாகும்.

#2462. மற்றது இங்கு ஒப்பில்லை

தற்பரம் மன்னும் தனிமுதல் பேரொளி
சிற்பரம் தானே செகமுண்ணும் போதமும்
தொற்பதம் தீர்பாழில் சுந்தரச் சோதிபக்கு
அப்புறம் மற்றதுஇங்கு ஒப்பில்லை தானே.

தற்பரம் என்ற உயர்ந்த நிலை, நிலை பெற்று இருப்பது ஒப்பில்லாத ஓர் பேரொளியில் ஆகும். அதுவே அனைத்திலும் உயரிய ஞானம் ஆகும். அதுவே தத்துவங்களை அழித்துவிடும் அறிவும் ஆகும். ஆன்மா தன்னுடைய ஆன்ம அறிவு நீங்கி, தன் ஒளி வடிவத்தை உணர்ந்து கொண்டு, தன் சுட்டறிவைத் துறந்து சிவப் பேரொளியில் கலந்து நிற்பதற்கு ஒப்பாக இங்கு வேறு எதுவும் இல்லை அல்லவா?

#2463. அவன் சுத்தன் ஆகான்

பண்டை மறைகள் பரவான் உடலென்னும்
துண்ட மதியோன் துரியாதீ தந்தன்னைக்
கண்டு பரனும்அக் காரணோ பாதிக்கே
மிண்டின் அவன்சுத்தன் ஆகான் வினவிலே.

பண்டைய மறைகள் பகரும் உண்மை இதுவே. முடிவில்லாத வானமே சிவபெருமானின் உடல் ஆகும். பிஞ்சு மதியைச் சூடிய சிவனைத் துரியாதீதத்தில் கண்டு அவனுடன் ஒன்றியவன் பரநிலை அடைவான் . தூய மாயையில் பொருந்திப் பிறவியின் காரணத்தை அழிக்காதவன் தூய்மை அடைய மாட்டான்.

#2464. வெளியாய சத்தி அவன் வடிவாமே.

வெளிகால் கனல்அப்பு மேவுமண் நின்ற
தளியா இயதற் பரங்காண் அவன்தான்
வெளிகால் கனல்அப்பு மேவுமண் நின்ற
வெளியாய சத்தி அவன்வடி வாமே.

வெளி, வளி, கனல், அப்பு, மண் என்ற பஞ்ச பூதங்கள் இலயமாகும் ஆலயமே துரிய நிலையில் விளங்கும் தற்பரன் ஆகிய சிவபெருமான்.
வெளி, வளி, கனல், அப்பு, மண் என்ற பஞ்ச பூதங்களில் நிறைந்து நின்று, வெளியாகும் சக்தியே அவனது வடிவமாகும்.

#2465. சீரார் தவம் செய்யில் சிவனருள் தானாகும்

மேருவி னோடே விரிகதிர் மண்டலம்
ஆர நினையும் அருந்தவ யோகிக்குச்
சீரார் தவம்செய்யில் சிவனருள் தானாகும்
பேரவும் வேண்டாம் பிறிதில்லை தானே.

உடலின் மேருவாகிய துவாதசாந்தத்தில் விரிகதிர் மண்டலம் உடைய சிவத்துடன் பொருந்துவதை எண்ணித் தவம் செய்யம் சிவயோகிக்கு சிவன் அருள் தானாகவே வந்து பொருந்திவிடும். இந்தச் சீரிய நிலையில் இருந்து அந்தச் சிவயோகி நழுவாமல் இருந்தாலே போதுமானது. சிவன் அருளை நாடுகின்ற சீவர்களுக்கு இதை விடச் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை அல்லவா?
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

22. முத்துரியம்

மூன்று விதத் துரியங்கள் இவை ஆகும்.
சீவ துரியம், பரதுரியம், சிவதுரியம்.

#2466 to #2469

#2466. தொந்தத்தசி (த்வம் தத் அசி)

நனவாதி மூன்றினில் சீவ துரியம்
தனதுஆதி மூன்றினில் பரதுரி யந்தான்
நனவாதி மூன்றி னில்சிவ துரியமாம்
இனதாகும் தொந்தத் தசிபதத் துஈடே.

சீவன், சாக்கிர நிலையின் நனவு, கனவு, உறக்கம் இவற்றைத் தாண்டிய பின்பு அடையும் நிலையே சீவ துரியம் ஆகும்.
பரம், சீவ துரியத்தில் நனைவு, கனவு, உறக்கம் இவற்றைத் தாண்டிய பின்பு அடையும் நிலையே பர துரியம் ஆகும்.
சிவன், பர துரியத்தில் நனைவு, கனவு, உறக்கம் இவற்றைத் தாண்டிய பின்பு அடையும் நிலையே சிவ துரியம் ஆகும்.
இந்த மூன்று நிலைகளிலும் ‘த்வம்’, ‘தத்’, ‘அசி’ என்ற மூன்று நிலைகளையும் ஆன்மா முறையே அடையும்.

#2467. நனவில் துரியம்தன் தொம்பதம்

தானாம் நனவில் துரியம்தன் தொம்பதம்
தானாம் துரியம் நனவாதி தான்மூன்றில்
ஆனாப் பரபதம் அற்றது அருநனா
வானான மேல்மூன்றில் துரியம் அணுகுமே.

‘த்வம் ‘ பதம் என்பது சீவனின் நனவில் பொருந்துகின்ற துரிய நிலை ஆகும். சீவ துரியம் முடிவடையும் இடத்தில் பரதுரியம் தொடங்கும். இது சகல சாக்கிரத்தில் உள்ள துரியத்தில் நிகழும். அந்தப் பரதுரியம் நீங்கிச் சிவதுரியம் நின்மல நனவில் நிகழும். சீவதுரியம், பர துரியம், சிவதுரியங்கள் இங்கனம் ஏற்படும்.

#2468. முந்நான்கு ஈரைந்தாகிவிடும்!

அணுவின் துரியத்து நான்கும துஆகிப்
பணியும் பரதுரி யம்பயில் நான்கும்
தணிவில் பரமாகிச் சாரமுத் துரியக்
கணுவில் இந் நான்கும் கலந்த ஈரைந்தே.

சீவதுரியம், பரதுரியம், சிவதுரியம் என்று மூன்று துரிய நிலைகள் ஒவ்வொன்றிலும் நனவு, கனவு, சுழுத்தி, துரியம் என்று நான்கு வேறு வேறு நிலைகள் அமைந்திருக்கும். எனினும் ஒன்று முடியும் இடத்திலேயே மற்றொன்று தொடங்கிவிடும். அதனால் பன்னிரண்டு நிலைகள் சுருங்கிப் பத்து நிலைகள் ஆகக் குறைந்துவிடும். சீவதுரியம் முடியும் இடத்தில் பரநனவு நிலை தொடங்கும். பரதுரியம் முடியும் இடத்தில் சிவதுரியத்தின் நனவு நிலை தொடங்கி விடும்.

#2469. நேர் அந்தமாக நெறிவழியே செல்!

ஈர்ஐந்து அவத்தை இசைமுத் துரியத்துள்
நேர்அந்த மாகநெறிவழி யேசென்று
பார்அந்த மான பராபத்து ஐக்கியத்து
ஓர்அந்த மாம்இரு பாதியைச் சேர்த்திடே.

சீவ துரியம், பரதுரியம், சிவதுரியம் என்ற மூன்றிலும் இந்தப் பத்து அவத்தைகள் அடங்கி உள்ளன. பராபரனைச் சேர்வதையே சீவனின் குறிக்கோளாகக் கொண்டு, குருவின் உபதேசத்தின்படி முன்னேறு. சீவ துரியத்தையும், பரதுரிய சாக்கிரத்தையும் ஒன்றாகக் கருது. பரதுரிய துரியத்தையும், சிவதுரிய சாக்கிரத்தையும் ஒன்றாகக் கருது. இங்கனம் உன் சாதனையில் தடை இன்றி முன்னேறு! முன்னேறு!
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2470 to #2473

#2470. தொட்டே இருமின் துரிய நிலத்தினை

தொட்டே இருமின் துரிய நிலத்தினை
எட்டாது எனின்நின்று எட்டும் இறைவனைப்
பட்டாங்கு அறிந்திடில் பல் நா உதடுகள்
தட்டாது ஒழிவதோர் தத்துவந் தானே.

துரிய நிலையை அடைந்து அங்கு நீங்காமல் பொருந்தி இருங்கள். துரிய நிலையை உங்களால் அடைய இயலாது போனால், இறைவனைப் பற்றிப் பேசும் ஞான நூல்கள் கூறும் இறைவனைச் சிந்தித்திருங்கள். அது உங்களை வாக்குக்கு அப்பாற்பட்ட உண்மைப் பொருளிடம் தானே கொண்டு சேர்க்கும்.

#2471. நெறியான அன்பர் நிலையறிந் தாரே.

அறிவாய் அசத்தென்னும் ஆறாறு அகன்று
செறிவாய மாயை சிதைத்துஅரு ளாலே
பிறியாத பேரருள் ஆயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலையறிந் தாரே.

அசத்து (பொய்யானவை) ஆகிய ஆறாறு முப்பத்தாறு தத்துவங்களையும் விட்டு விடுங்கள். சித்து (அறிவு) வடிவமாக மாறி விடுங்கள். சுத்த மாயை, அசுத்த மாயை என்ற இரண்டியும் ஈசன் அருளால் சிதைத்து எறிந்து விடுங்கள். பிரிவில்லாத சிவ சக்தியரைப் பொருந்திடும் இயல்பைச் சிவநெறியையில் செல்லும் அன்பர்கள் நன்கு அறிந்திருந்தனர்.

#2472. தத் பதம்

நனவின் நனவாகி நாலாம் துரியம்
தனதுயிர் தெம்பதம் ஆமாறு போல
வினையறு சீவன் நனவாதி யாகத்
தனைய பரதுரி யந்தற் பதமே.

நனவின் நான்காம் நிலை ஆகும் சீவ துரியம். இங்கு சீவன் ‘த்வம்’ பதத்தை அடைகின்றது. இங்கு சீவனின் கன்மங்கள் முடிவடைகின்றன. சாக்கிரதத்தில் உள்ள சீவதுரிய நிலையில் இருந்து முன்னேறி சீவன் பரதுரியத்தை அடைகின்றது. பரதுரியத்தில் உள்ள துரியமே நின்மல சாக்கிரம் என்ற நிலை. இதை முதலாகக் கொண்ட நான்கு நிலைகளில் உள்ள நின்மல துரியத்தை அடைந்து அதையும் கடந்த துரியாதீதத்தில் சீவன் ‘தத்’ பதத்தை அடையும்.

#2473. அம்புலி உன்னா அதி சூக்கம்

தொம்பதம் தற்பதம் சொன்முத் துரியம்போல்
நம்பிய மூன்றாம் துரியத்து நல்நாமம்
அம்புலி யுன்னா அதிசூக்கம் அப்பாலைச்
செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.

‘த்வம்’ பதம், ‘தத்’ பதம் இவற்றைக் கடந்து விட்ட சீவன் சிவதுரியத்தை அடையும். அதில் அமைந்துள்ளது ‘அசி’ பதம். அது அம்புவி எண்ண இயலாத அதி சூக்குமமான பதம். அதற்கும் அப்பால் உள்ளான் அன்பர்களைத் தன்பால் சேர்க்கும் ஈசன் நந்தி எம்பெருமான்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

23. மும் முத்தி

மூன்று வித முக்தி நிலைகள்.
அவை சீவ முக்தி, பரம முக்தி, சிவமுக்தி என்பவை.

#2474 to #2477

#2474. சிவமுத்தி ஆனந்தம்

சீவன்தன் முத்தி அதீதம் பரமுத்தி
ஓயுப சாந்தம் சிவமுத்தி ஆனந்தம்
மூவயின் முச்சொரூப முத்திமுப் பாலதாய்
ஓவுறு தாரத்தில் உள்ளும்நா தாந்தமே.

சீவன் முத்தி துரியாதீதத்தில் நிகழும். உலகம் பொய் என்று அறிந்து கொண்ட சீவன் பிறப்பதற்கான காரணத்தை ஒழித்து விட்டு உலகைத் துறந்து விட்டுத் தனியாக நிற்பது சீவன் முத்தி. பரமுக்தி என்பது தன் செயல் இன்றி ஈசனின் அருள் வழியே நிற்பது. பிறவி எடுக்கும் அவசியமும் இல்லாமல் சிவனின் பொருந்தும் எண்ணமுமில்லாமல் அரிதாகிய உபசாந்தம் என்ற அமைதியான நிலையை அடைவது. சிவ முத்தி என்பது உடலுடன் உள்ள போதே சிவானந்தத்தில் திளைப்பது. உடல் நினைவு மறந்து சிவனுடன் ஒன்றுதல். இந்த மூன்று நிலைகளும் பிரணவத்தின் வழியே விளையும் நாதாந்தத்தின் பயன்கள்.

#2475. சிவனுடன் ஒன்றாதல் முத்தி

ஆவது அறியா உயிர்பிறப் பாலுறும்
ஆவது அறியும் உயிர்அருட் பாலுறும்
ஆவது ஒன்றில்லை அகம்புறத் தென்றுஅகன்று
ஓவு சிவனுடன் ஒன்றாதல் முத்தியே.

பிறவிப் பயனை அறியாதவர்கள் உலகில் மீண்டும் பிறவி எடுப்பர். இறைவனை நாடுதல் பிறவிப் பயனென்று அறிந்து கொண்டவர்கள் ஈசன் திருவருளை நாடுவர். உலகையும், தன் கருவிகளையும், கரணங்களையும் துறந்துவிட்டு சிவனுடன் ஒன்றாகப் பொருந்துவதே முத்தி ஆகும்.

#2476. அமலன் தானே வெளிப்படுவான்

சிவமாகி மும்மலம் முக்குணம் செற்றுத்
தவமான மும்முத்தி தத்துவத்து அயிக்கியத்
துவம்ஆ கியநெறி சோகம்என் போர்க்குச்
சிவமாம் அமலன் சிறந்தனன் தானே.

சிவனையே நினைவில் கொண்டு; சிவமாகவே ஆகி; ஆணவம், கன்மம் , மாயை என்ற மூன்று மலங்களையும் அழித்து; தாமச குணம், ராஜச குணம், சத்துவ குணம் என்ற மூன்றையும் துறந்து; “நீ அது ஆகின்றாய்!” என்று மும் முத்தியைப் பெற அறநெறியில் நிற்பவருக்கு; அமலன் ஆகிய சிவன் தானே வெளிப்படுவான்.

#2477. பெத்தம் அறுத்த பெருமானே.

சித்தியும் முத்தியும் திண்சிவ மாகிய
சுத்தியும் முத்தீ தொலைக்கும் சுகானந்த
சத்தியும் மேலைச் சமாதியும் ஆயிடும்
பெத்தம் அறுத்த பெரும்பெரு மானே.

சீவனின் பிறவித் தளைகளைக் களையும் தயாபர! அணிமா முதலிய எண்சித்திகளும், வீடுபேறும் மேலான சிவம் ஆகும். நின்மல துரியாதீதமும், சீவனுக்கு வருகின்ற ( தன்னைப் பற்றிய துன்பம், பிற உயிர்களால் வரும் துன்பம், தெய்வத்தால் வரும் துன்பம்) என்ற மூன்று பெருந் துன்பங்களையும் நீக்கும் சிவானந்தமே சீவனுக்கு மேலான சமாதி நிலை ஆகும்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

24. முச் சொரூபம்

24. முச் சொரூபம்

மூன்று சொரூபங்கள்:

அவை சீவ சொரூபம், பர சொரூபம், சிவ சொரூபம் என்பவை

#2478 to #2480

#2478. பரன் உண்மை செய்யுமே

ஏறிய வாறே மலம்ஐந் திடைஅடைந்து
ஆறிய ஞானச் சிவோகம் அடைந்திட்டு
வேறும் எனமுச் சொரூபத்து வீடுற்று அங்கு
ஈறதில் பண்டைப் பரன்உண்மை செய்யுமே.

சாதகன் சாதனையில் முன்னேறும் போது ஆன்மாவைப் பிணித்துள்ள ஐந்து மலங்களைக் களைய வேண்டும்; ஞானத்தால் நிரம்பிய சோஹம் என்ற பாவணையைப் பெற வேண்டும்;மூன்று வித ஸ்வரூப முத்தியை அடையவேண்டும்; இறுதியில் பரசிவன் பரம் பொருளின் உண்மையில் அந்த சீவனையும் நிலை பெறச் செய்வான்.

#2479. காயக் கணக்கு அறும்!

மூன்றுள மாளிகை மூவர் இருப்பிடம்
மூன்றினில் முப்பத் தாறும் உதிப்புள
மூன்றினின் உள்ளே முளைத்தெழும் சோதியைக்
காண்டலும் காயக் கணக்கற்ற வாறே.

பிரகிருதி மாயை, தூ மாயை, தூவா மாயை என்று மூன்று மாய மாளிகைகள் உள்ளன. இவற்றில் சகலர், பிரளயாகலர், விஞ்சஞானகலர் என்ற மூவகை மனிதர்கள் வாழ்கின்றார்கள். இந்த மூன்று மாயைகளில் முப்பத்தாறு தத்துவங்கள் தோன்றும். இந்த மூன்று மண்டலங்களில் தோன்றி எழுகின்ற ஆன்மப் பேரொளியைக் காணும்போதே இனிப் பிறவி எடுக்க வேண்டிய உடலின் கணக்கு முடியும்.

#2480. ஈசன் பெருமையை யாரறிவார்?

உலகம் புடைபெயர்ந்து ஊழியம் போன
நிலவு சுடரொளி மூன்றும் ஒன்றாய
பலவும் பரிசொடு பான்மையுள் ஈசன்
அளவும் பெருமையும் ஆரறி வாரே.

உலகம் தோன்றுவதும் பின்பு உலகம் ஊழியில் அழிவதும் பல முறை நிகழ்ந்து விட்டன. ஊழியின் முடிவில் சீவன் பரனுடனும், பரன் சிவனுடனும் ஒன்றி விடும் !இந்த மூன்றுக்கும் ஆராய்ந்து அறியும் தன்மையைத் தரும் சிவனின் பெருமையையும் அளவையும் யாரோ கூற வல்லவர்?
 
#2481 to #2484

#2481. உருவாய், அருவாய், குருவாய், வருவான்!

பெருவாய் முதலெண்ணும் பேதமே பேதித்து
அருவாய் உருவாய் அருவுரு வாகிக்
குருவாய் வரும்சத்தி கோன்உயிர்ப் பன்மை
உருவாய் உடனிருந்து ஒன்றாய்அன் றாமே.

பெருமை உடைய சிவன், பேதங்களை பேதித்துத் தானே, அருவமாகவும், அருவுருவமாகவும் , உருவமாகவும், குருவாகவும், சக்தியின் தலைவனாகவும் பலவாறு தோன்றுகிறான், சீவர்களுள் இவன் இருந்த போதிலும் அவைகளால் அறியப் படாதவனாகவும் இருக்கின்றான்.

#2482. நந்தி பாதம் பற்றாமே

மணிஒளி சோபை இலக்கணம் வாய்த்து
மணிஎன வாய்நின்ற வாறுஅது போலத்
தணிமுச் சொருபாதி சத்தியாதி சாரப்
பணிவித்த பேர்நந்தி பாதம்பற்றாயே.

ஒளியற்ற வெண்பளிங்கு மாணிக்கமணியின் சிவந்த ஒளியைப் பெற்றுத் தானே ஒரு மாணிக்கம் என்பது போல ஒளிரும். அதே போலத் தணிந்த இயல்பு உடைய ஆன்மா சீவ சொரூபம், பரசொரூபம, சிவ சொரூபம் பொருந்திய போ து அவைகளாகவே மாறிவிடும். இப்படி ஓர் அறிய செயலைச் செய்த சிவன் சேவடிகளை பற்றி நிற்போம்.

#2483. அல் அறு அனுபூதி பெறுவீர்

கல்லொளி மாநிறம் சோபை கதிர்தட்ட
நல்ல மணியொன்றின் நாடிஒண் முப்பதும்
சொல்லறும் முப்பாழில் சொல்லறு பேருரைத்து
அல்அறும் முத்திராந் தத்துஅனு பூதியே.

வெண்பளிங்கைப்போன்ற ஆன்மா, மாணிக்கம் போன்ற சிவனின் சிவந்த ஒளிபெற்றுத் தானும் ஒளிரும். சிவனை நாடி அவன் முத்தியின் முப்பதங்களை அடையுங்கள். சொல்லால் கூற முடியாத வெளியில், பிரணவத்தை மெளனமாகச் சிந்தித்து, ஞான முத்திரையின் முடிவில் பெறுகின்ற அனுபூதியில், அறியாமை இருள் நீங்கப் பெற்றுப் பிறவிப் பிணியை ஒழியுங்கள்.

#2484. அடைத்திருக்கும் வாசலைத் திறவீர்!

உடந்தசெந் தாமரை உள்ளுறு சோதி
நடந்தசெந் தாமரை நாதம் தகைந்தால்
அடைந்த பயோதரி அட்டி அடைத்தஅவ்
விடம்தரு வாசலை மேல்திற வீரே.

ஆயிரம் இதழ்த் தாமரையில் விளங்கும் தூய பேரொளி சிவன். மூலாதாரத்தில் இருந்து மேல் நோக்கிச் செல்லுகின்ற குண்டலினி சக்திக்கு, தலை உச்சியில் தோன்றும் நாதம் வசப்பட்டால், அங்கு பொருந்தி இருக்கும் அமுதேஸ்வரி வெளிப்படுவதற்கு, அங்கு முன்பு அடைந்திருந்த வாசலைத் திறந்து விடுவீரே.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

25. முக்கரணம்
முக்கரணங்கள் = மூன்று கரணங்கள்
மனம், வாக்கு, காயம் என்னும் மூன்று கரணங்கள்.

#2485 to #2487

#2485. சிவன், பரன், சீவன் மூவரும் ஒருவரே!

இடனொரு மூன்றில் இயைந்த ஒருவன்
கடன் உறும் அவ்வுரு வேறெனக்காணும்
திடமது போலச் சிவபர சீவர்
உடனுரை பேதமும் ஒன்றென லாமே.

ஆன்மாவுக்குப் பருவுடல், நுண்ணுடல், காரண உடல் என்ற மூன்று உள்ளன. இந்த மூன்றுடன் ஆன்மா பொருந்திய போதும் ஆன்மா ஒன்றே!
அது போன்றே சீவன், பரன், சிவன் என்ற வேறுபட்டுத் தோன்றும் மூன்று நிலைகளும் ஒரே சீவனுக்கு உரியவை என்று அறிவீர்!

#2486. தெளியத் தெளியும் சிவபதம் தானே.

ஒளியைஒளிசெய்து ஓம்என்று எழுப்பி
வளியை வளிசெய்து வாய்த்திட வாங்கி
வெளியை வெளிசெய்து மேலெழ வைத்துத்
தெளியத் தெளியும் சிவபதம் தானே.

ஒளியுடைய உங்கள் கண் பார்வையை வெளியுலக ஒளியுடன் பொருத்தி அதை மேலும் ஒளி பெறச் செய்யுங்கள்! பிரணவ தியானத்தால் மூலாதாரத்தில் உள்ள கனலை எழுப்புங்கள். அது திங்கட் கலை, கதிரவக் கலையுடன் சுழுமுனையில் பொருந்துமாறு செய்யுங்கள். தலைக்கு மேலே உள்ள வெளியில் பொருந்தித் தியானம் செய்தால் சிவபதம் வந்து பொருந்தும்.

#2487. மனோன்மணியும், உன்மனியும்

முக்கர ணங்களின் மூர்ச்சைதீர்த்து ஆவதுஅக்
கைக்கா ரணம் என்னத் தந்தனன் காண்நந்தி
மிக்க மனோன்மணி வேறே தனித்துஏக
ஒக்குமது உன்மணி ஓதுஉள் சமாதியே.

மனம், வாக்கு, காயம் என்ற முக்கருவிகளின் மூர்ச்சையைத் தீர்ப்பவன் சிவன். அவை சோர்வடையாமல் எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் திறமையைத் தந்தவன் சிவன். சதாசிவ சக்தியாகிய மனோன்மணி கவிழ்ந்த சகசிர தளத்தில் நெற்றி, தலை இவற்றின் இடையே இருக்கும், மேலே நிமிர்ந்து விரிந்த சகசிர தளத்தில் உன்மனிக் கலையில் சமாதி நிலை பொருந்தும்.
 

Latest ads

Back
Top