• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II



[h=3]The God Particle - Wikipedia[/h]https://en.wikipedia.org/wiki/The_God_Particle



The God Particle or God particle may refer to: Higgs boson, a particle in physics sometimes referred to as the God's Particle. The God Particle: If the Universe Is the Answer, What Is the Question?, a book by Leon M. Lederman and Dick Teresi. The God Particle (EP), an EP by Shpongle.








 
8(2) சிவானந்தக் கூத்து

8(2) சிவானந்தக் கூத்து
சிவானந்தத்தை விளைவிக்கும் கூத்து இது!

#2724 to #2727


#2724. தான் அந்தம் இல்லாத ரூபன்

தான்அந்தம் இல்லாச் சதானந்த சத்திமேல்
தேன்உந்தும் ஆனந்த மாநடம் கண்டீர்
ஞானம் கடந்து நடஞ்செய்யும் நம்பிக்கு அங்கு
ஆனந்தக் கூத்தாட ஆடரங்கு ஆனதே.

தான் அந்தமில்லாதவள் சதா ஆனந்தத்தில் விளங்கும் சக்தி தேவி. தேன்சுவை சிந்தும் ஆனந்த மாநடனம் ஆடும் சிவசக்தியர் இருவரையும் காணீர்! அவர்களைக் கண்டபின்னர் ஞானம் கடந்து நடனம் ஆடும் சிவ பிரானுக்கு ஆடல் அரங்கு ஆகி விடுவீர்கள் நீங்களும்!

#2725. ஆனந்தக் கூத்து உகந்தான்

ஆனந்தம் ஆடரங்கு ஆனந்தம் பாடல்கள்
ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாச்சியம்
ஆனந்தம் ஆக அகில சராசரம்
ஆனந்தம் ஆனந்தக் கூத்துஉகந் தானுக்கே.


சிவனின் ஆடலரங்கு ஆனந்த மயமானது; அவன் ஆடலின் பாடல்கள் ஆனந்த மயமானவை; அவன் ஆடலின் இசை ஆனந்த மயமானது; அவன் ஆடலின் வாத்திய இசை ஆனந்த மயமானது; சிருட்டிகள் அனைத்தும் ஆனந்த மயமானவை; ஆனந்த நடனம் ஆடும் ஈசனும் ஆனந்த மயமானவன்.

#2726. சிவானந்த நடனம்

ஒளியாம் பரமாம் உளதாம் பரமும்
அளியார் சிவகாமி யாகும் சமயக்
களியார் பரமும் கருதுறை யந்தக்
தெளிவாம் சிவானந்த நட்டத்தின் சித்தியே.


சிவானந்த நடனத்தின் பயன் யாது?

அறிவுப் பேரொளியாகிய சிவபரமும், தத்துவங்களை விட்டு விட்ட ஆன்மபரமும், உயிர்களுக்கு அன்பைப் பொழிந்து இன்பம் தரும் சக்தியாகி பரமும், ஆன்மாவின் கருத்தில் உறைகின்ற பேரின்பத்தில் எல்லையே சிவானந்த நடனத்தின் உண்மைப் பயன் ஆகும்.

#2727. தேன்மொழி பாகனின் திருநடனம்

ஆன நடம்ஐந்து அகள சகளத்தர்
ஆன நடமாடி ஐங்கரு மத்தாக
ஆன தொழில்அரு ளால்ஐந் தொழில்செய்தே
தேன்மொழி பாகன் திருநட மாடுமே.


வடிவம் அற்ற சிவபெருமான் ஏன் வடிவம் எடுத்துக் கொண்டு நடனம் ஆடுகிறான்? சிவன் புரியும் இந்த நடனங்கள் ஐந்து வகைப்படும். அவை செயய்யும் தொழில்கள் ஐந்து வகைப்படும். தேன்மொழி பேசும் தேவியைத் தன் உடலின் ஒரு பாகமாகக் கொண்டுள்ள பிரான் இந்த ஐந்தொழில்களை இயற்றுவதற்கே ஐந்து வகை நடனம் ஆடுகிறான்.





 
#2728 to #2731

#2728. ஐங்கருமம் இயற்றுபவன்

பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகாண்ட
மூதாண்ட முத்தாண்ட மோகாண்ட தேகாண்ட
தாகாண்ட ஐங்கரு மாத்தாண்ட தற்பரத்து
ஏகாந்த மாம்பிர மாண்டத்த என்பவே.


ஒன்பது வகையான அண்டங்கள் ஈசன் படைப்பில் உள்ளன. அவை முறையே

1). ஐம்பூதங்களின் கலப்பால் உண்டாகிய அண்டம்;
2). வேறு வகையான பூதங்களின் கலப்பால் உருவாகிய அண்டம்;
3). வினைகளுக்கு ஏற்ப சீவன்கள் போகங்களை அனுபவிக்கும் அண்டம்;
4). யோக சாதனைகளுக்கு ஏற்ப யோகியர் சென்று அடையும் அண்டம்;
5). புனர் சிருட்டியின் போது சீவர்கள் சென்று பிறக்கும் அண்டம்;
6). முக்தி அடைந்தவர்களின் அண்டம்;
7). உயிர் பிரிந்த பின்பும் கொண்ட ஆசைகளைத் துறக்காதவர்களின் அண்டம்;
8). பூத உடலுடன் சீவர்கள் வாழ்கின்ற அண்டம்;
9). விருப்பங்கள் மிகுந்தவர்கள் வாழ்கின்ற அண்டம்.

பிரம்மாண்டத்தில் உள்ள இந்த ஒன்பது அண்டங்களிலும் ஐந்தொழில்களைத் தன் விருப்பம் போல இயற்றுபவன் ஏகாந்தத்தில் இருக்கும் தற்பரன் ஆகிய சிவன்.


#2729. ஞான ஆனந்தக் கூத்து!


வேதங்கள் ஆட மிகுஆ கமம் ஆடக்
கீதங்கள் ஆடக் கிளர்அண்டம் ஏழாடப்
பூதங்கள் ஆடப் புவனம் முழுதாட
நாதம்கொண் டாடினான் ஞானாந்தக் கூத்தே.


வேதங்களில் உள்ள அறிவு ஆடிட; ஆகமங்களில் உள்ள அறிவு ஆடிட; கீதங்களின் அறிவு ஆடிட; ஆதாரச் சக்கரங்கள் ஏழில் விளையும் அறிவும் ஆடிட; ஐம்பூதங்களின் அறிவு ஆடிட; அனைத்து புவனங்களின் அறிவும் ஆடிட; ஞானத்தை அளிக்கின்ற ஞான ஆனந்தக் கூத்தினை நாத சக்தியுடன் கூடி ஈசன் ஆடினான்.


#2730. ஆடும் சித்தன் சிவன்!


பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன்ஐந்தில்
வேதங்கள் ஐந்தின் மிகும்ஆ கமந்தன்னில்
ஓதும் கலைகாலம் ஊழியுடன் அண்டப்
போதங்கள் ஐந்தில் புணர்ந்தாடும் சித்தனே.


ஐந்து பூதங்களிலும்; ஐம் பொறிகளிலும்; ஐம் புலன்களிலும்; ஐந்து வேதங்களிலும்; எண்ணிக்கையில் மிகுந்த ஆகமங்களிலும்; ஐந்து கலைகளிலும்; பல காலத்திலும், பல ஊழிகளிலும்; பல வேறு அண்டங்களில் உள்ள ஐந்து வகை அறிவிலும்; இரண்டறக் கலந்து சித்த மூர்த்தியாகிய சிவன் நடனம் ஆடுகிறான்.


#2731. ஈசன் ஆட ஆடும் சராசரம்


தேவர் சுரர்நரர் சித்தர்வித் தியாதரர்
மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள்
தாபதர் சத்தர் சமயஞ் சராசரம்
யாவையும் ஆடிடும் எம்மிறை யாடவே.


தேவர்கள், சுரர்கள், நரர்கள், சித்தர்கள்; வித்தியாதரர்கள்; மும் மூர்த்திகள், முப்பத்து முக்கோடி தேவர்கள்; தவம் செய்பவர்கள், ஏழு பெரும் தவ முனிவர்கள், அசையும் உயிர்கள், அசையாத பொருட்கள் எனப் படைப்பில் இருக்கும் அத்தனையும் இறைவன் நடனம் ஆடும் இடங்கள் ஆகும்.



 
8(3). சுந்தரக் கூத்து

8(3). சுந்தரக் கூத்து
சீவனின் அண்ட கோசத்தினுள் உமை அம்மை கண்டு ரசிக்கும்படி சிவன் புரியும் நடனம்


#2732 to #2734

#2732. உமை காணக் கூத்து உகந்தான்

அண்டங்கள் ஏழினிக்கு அப்புறத்து அப்பால்
உண்டென்ற சத்தி சதாசிவத்து உச்சிமேல்
கண்டம் கரியான் கருணை திருவுருக்
கொண்டுஅங்கு உமைகாணக் கூத்துஉகந் தானே.

அண்டங்களில் ஏழினுக்கும் அப்பால்; சக்தி, சதாசிவனின் உறைவிடத்துக்கும் மேலே; கரிய கழுத்தினை உடைய; கருணையே திருவுருவாகக் கொண்ட ஈசன் அன்னை

உமை கண்டு மகிழும்படிக் கூத்துப் புரிந்திட உகந்தான்.

#2733. மன்னவனின் பல்வேறு நடனங்கள்

கொடிகொட்டி பாண்டுரங் கோடுசங் காரம்
நடம் எட்டோடு ஐந்துஆறு நாடியுள் நாடும்
திடம்உற்று எழும்தேவ தாருவும் தில்லை
வடம் உற்ற மாவனம் மன்னவன் தானே.

மன்னவன் ஆடும் கூத்தின் வகைகள் :
கொடுகொட்டிக் கூத்து:அனைத்துத் தத்துவங்களையும் அழித்துவிட்டு ஆடும் கூத்து
பாண்டரங்கம் : திரிபுரங்களை எரித்தபோது உண்டாகிய சாம்பலை உடலில் அணிந்து கொண்டு ஆடும் கூத்து
கொடு: நான்முகனின் தலையைக் கிள்ளிய போது ஆடிய கூத்து
நடம் எட்டு: அட்ட மூர்த்தத்தில் ஆடுகின்ற கூத்து
நடம் ஐந்து: நிவிர்த்தி முதலிய ஐந்து கலைகளில் ஆடும் கூத்து
ஆறு : உடலின் ஆறு ஆதாரங்களில் ஆடும் கூத்து
தேவதாருவனம்: தாருகாவன முனிவர்கள் ஆணவத்தை அழிக்க ஆடிய கூத்து.
தில்லைவனம்: அறியாமை என்னும் தில்லைவனத்தை அழிக்க மனம் என்னும் தாமரை மலரில் ஆடிய கூத்து
வடமாவனம் : திரு ஆலங்காட்டு என்ற மூலாதாரத்தில் ஆடிய கூத்து.

#2734. பரன் நடம் ஆடுவான்

பரமாண்டத்து ஊடே பராசத்தி பாதம்
பரமாண்டத்து ஊடே படரொளி ஈசன்
பரமாண்டத்து ஊடே படர்தரு நாதம்
பரமாண்டத்து ஊடே பரன்நடம் ஆடுமே.


பரமாண்டத்தின் உச்சியில் உள்ளன பராசக்தியின் திருப்பாதங்கள்.
பரமாண்டத்தின் உச்சியில் படரும் ஒளியில் இறைவன் இருக்கின்றான்.
பரமாண்டத்தின் உச்சியில் படரும் ஒளியில் உள்ளது நாதம்.
பரமாண்டத்தின் உச்சியில் படரும் ஒளியில் விளங்கும் நாதத்தில் பரன் நடனம் ஆடுகின்றான்.
 
#2735 to #2738

#2735. போதல், புகுதல் இல்லை!

அங்குசம் என்ன எழுமார்க்கம் போதத்தில்
தங்கிய தொந்தி எனும்தாள ஒத்தினில்
சங்கரன் மூலநா டிக்குள் தரித்தாடல்
பொங்கிய காலம் புகும்போகல் இல்லையே.


யானையை அடக்குவதற்கு ஒரு சிறிய அங்குசம் போதுமானது. சீவனின் அறிவில் தோம் தீம் என்ற தாளத்துக்கு ஏற்பச் சிவன் சுழுமுனையில் நடனம் புரிவான். அப்போது சீவனின் மனம் வெளியே செல்வதை விட்டு விட்டு அங்குசத்திற்கு அடங்கிய யானையைப் போல அடங்கிவிடும்.

#2736. ஞானத்துள் ஆடி முடிக்கும் நாதன்

ஆன்நந்தி யாடிபின் நவக் கூத்தாடிக்
கான்நந்தி யாடிக் கருத்தில் தரித்தாடி
மூனச் சுழுனையுள் ஆடி முடிவில்லா
ஞானத்துள் ஆடி முடித்தான் என் நாதனே.


சீவன்களின் அறியாமையைப் போக்க விரும்பிய சிவன் நடனம் ஆடினான். சீவன்களின் அறியாமை நீங்கிச் சீவர்கள் அறிவு பெற்ற பின்பு, உயிர்களிடம் ஒன்பது வகையாகப் பொருந்தி ஆடினான். மூன்று நாடிகளும் பொருந்தும் சுழுமுனையில் நின்று ஆடினான். எல்லையற்ற சிவஞானத்தில் நின்று ஆடினான். சிவன் எனக்குள் புகுந்து என் உயிர் அறிவைக் கெடுத்து அருள் செய்தான்.

#2737. தொல் நடனம் ஆடுவான்

சத்திகள் ஐந்தும் சிவபேதம் தான்ஐந்தும்
முத்திகள் எட்டும் முதலாம் பதம் எட்டும்
சித்திகள் எட்டும் சிவபதம் தான்எட்டும்
சுத்திகள் எட்டுஈசன் தொல்நடம் ஆடுமே

சிவன் நடனம் செய்யும் இடங்கள்:
பிராமி, வைணவி, ரௌத்திரி, காளி, மனோன்மனி என்னும் சக்திகள் ஐவர்;
நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன் என்ற ஐந்து சிவபேதங்கள்;
மூர்த்திகள் எண்மர் லயம் அடையும் எட்டு இடங்கள்; அணிமா முதலிய எட்டுச் சித்திகளின் நிலைகள்; சிவ பாதங்களின் எட்டு நிலைகள்; சுத்தி கர்மங்கள் எட்டு என்ற இவற்றுள் சிவன் நடனம் புரிகின்றான்.

#2738. நந்தி அடிக்கீழ் அடங்குமே.

மேகங்கள் ஏழும் விரிகடல் தீவேழும்
தேகங்கள் ஏழும் சிவபாற் கரன்ஏழும்
தாகங்கள் ஏழும் சாந்திகள் ஏழும்
ஆகின்ற நந்தி அடிக்கீழ் அடங்குமே.

சிவபிரானின் திருவடிகளுக்குக் கீழே அடங்கி இருப்பவை இவை:-

1. மேகங்கள் ஏழு:
ஆவர்த்தம், புட்கலம், சங்காரம், ஆசவனம், நீர்க்காரி, சொற்காரி, சிலாவருடம்

2. கடல்கள் ஏழு:-
உப்புக்கடல், கரும்புச் சாற்றுக்கடல், மதுக்கடல், நெய்க்கடல், தயிர்க்கடல், பாற்கடல், தூய நீர்க்கடல்

3. தீவுகள் ஏழு:-
நாவலந்தீவு, இறலித் தீவு, குசத்தீவு, கிரௌஞ்சத் தீவு, இளவந்தீவு, தெங்கத் தீவு, புட்கரத் தீவு

4. உயிரினங்கள் ஏழு:-
தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம்

5. சிவ பேதங்கள் ஏழு:-
நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன், நாதம், விந்து

6. ஏழு நாக்குக்களை உடைய அக்கினி.

7. சாந்திகள் ஏழு:-
ஐந்து இந்திரியங்கள் + மனம் + புத்தி
 
8(4). பொற்பதிக் கூத்து

8 (4) பொற்பதிக் கூத்து
பொன் ஒளி வீசுவது பொன்னம்பலம்.
தலையின் மீது பொன்னொளியில் விளங்குவது பொற்பதிக் கூத்து.


#2739 to #2743

#2739. தனி நடம் செய்வான் தற்பரன்

தெற்கு வடக்குக் கிழக்குமேற்கு உச்சியில்
அற்புத மானதோர் அஞ்சு முகத்திலும்
ஒப்பில்பே ரின்பத்து உபய உபயத்துள்
தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே
.


சிவனின் ஐந்து முகங்கள்: தெற்கே உள்ள முகம் அகோரம்; வடக்கில் உள்ளது வாமதேவம்; கிழக்கில் உள்ளது தத்புருடம்; மேற்கில் உள்ளது சத்தியோசாதம்; உச்சியில் உள்ள முகம் ஈசானம். இந்த அற்புதமான ஐந்து முகங்களிலும், உருவம், அருவம், உருவருவம் என்னும் ஒன்பது பேதங்களிலும் பொருந்தி, ஒப்பற்ற நடனம் செய்கின்றான் சிவபெருமான்.


#2740. சிவனடியார் என்பவர் யார்?


அடியார் அரனடி ஆனந்தம் கண்டோர்
அடியார் ஆனவர் அத்தருள் உற்றோர்
அடிஆர் பவரே அடியவர் ஆமால்
அடியார்பொன் அம்பலத்து ஆடல்கண்டாரே.


சிவானந்தத்தைத் தமக்குள் அனுபவித்தவர்; சிவபெருமானிடத்தில் அடங்கி அங்கே நிலைத்து இருப்பவர்; சிவன் திருவடிகளின் இன்பத்தில் திளைத்து இருப்பவர்; பொன்னம்பலத்தில் சிவநடனம் கண்டு களித்தவர் என்ற இவர்களே மெய்யான சிவனடியார்கள்.


#2741. நடம் செய்யும் நந்தி ஒரு ஞானக் கூத்தன்


அடங்காத என்னை அடக்கி அடிவைத்து
இடம்காண் பரானநத்தத் தேஎன்னை இட்டு
நடந்தான் செயும்நந்தி நன்ஞானக் கூத்தன்
படம்தான்செய்து உள்ளுள் படிந்திருந் தானே.


ஐம்பொறிகளின் வசப்பட்டு அடங்காமல் திரிந்த என் மனத்தில் தன் திருவடிகளைப் பதித்து சிவன் என்னை அடக்கினான். என் சீவனின் சக்தியைப் பெருக்கி ஒளிரச் செய்தான். என்னைப் பேரின்பத்தில் ஆழ்த்தினான். நன்மை தரும் ஞானக் கூத்தினை ஆடுகின்ற ஈசன் என்னை ஓர் அசையாத ஓவியம் போல ஆக்கி விட்டான். என் உள்ளத்தில் நிலை பெற்று விளங்கினான்


#2742. கூத்தனை என் அன்பில் வைத்தேன்

உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனைச்
செம்பொன் திருமன்றுள் சேவகக் கூத்தனைச்
சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை

இன்புற நாடிஎன் அன்பில்வைத் தேனே.


வானில் நடனம் செய்பவன் சிவன்; உத்தமர்கள் உள்ளங்களில் நடனம் செய்பவன் சிவன்; பொன்னம்பலத்தில் நடனம் செய்பவன் சிவன்; சீவனுக்குத் துணையாக உள்ள சேவகன் சிவன்; சீவர்களுடன் இணைபிரியாத உறவு கொள்பவன் சிவன்; தற்பரம் என்ற உயரிய பொருள் ஆனவன் சிவன்; இன்பம் பெற வேண்டி அவனை நான் என் அன்பில் பொதிந்து வைத்தேன்.


#2743. ஆரும் அறியா ஆணிப் பொற்கூத்தன்


மாணிக்கக் கூத்தனை வண்தில்லைக் கூத்தனைப்
பூணுற்ற மன்றுள் புரிசடைக் கூத்தனைச்
சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனை
ஆணிப்பொற் கூத்தனை யாருரைப் பாரே.


சிவந்த ஒளி மணடலத்தில் ஆடுபவன் சிவன்; தில்லையில் நடனம் புரிபவன் சிவன்; ஒளிவீசும் மன்றத்தில் நடம் புரியும் விரிசடையோன் அவன்; துவாதசாந்த ஒளியில் நடம் புரிபவன் சிவன்; சிவானந்தத்தில் ஆடுபவன் சிவன்; மாற்றுக் குறையாத பொன் வண்ணமேனியனை யாரால் உணர்ந்து கொள்ள முடியும்? யாரால் பிறருக்கு உரைக்க முடியும்?

 
#2744 to #2748

#2744. மெய்யன்பரின் மெய்ப்பாடுகள்!

விம்மும் வெருவும் விழும்எழும் மெய்சோரும்
தம்மையும் தாமறி யார்கள் சதுர்கெடும்
செம்மை சிறந்த திருஅம் பலக்கூத்துள்
அம்மலர்ப் பொற்பாதத்து அன்புவைப் பார்கட்கே.


செம்மை சிறந்த திரு அம்பலத்தில் நடம் செய்யும் சிவபெருமானின் பொற்றாமரைப் பாதங்களின் மேல் மாறாத அன்பு கொண்டுள்ள மெய்யடியார்களின் மெய்ப்பாடுகள் இவை. அவர்கள் கொண்ட தாளாத காதலால் அவர்கள் நெஞ்சம் விம்மும்; மகிழ்ச்சி பெருகும்; தொடர்ந்து அச்சம் தோன்றும்; பக்தி மேலீட்டால் மெய் சோர்ந்து விழுவார்; பிறகு எழுவார்; உடல் தளர்ந்து ஐம் பொறிகளும் தம் அறிவு மறைந்தால் நினைவை இழக்கும். சீவனின் செயல் திறமும் குறைந்து விடும்.


#2745. ஆனந்தம் அடையும் நாட்டம் அதிகரிக்கும்


தேட்டறும் சிந்தை திகைப்பறும் பிண்டத்துள்
வாட்டறும் கால்புந்தி யாகி வரும்புலன்
ஓட்டறும் ஆசை அறும்உளத்து ஆனந்த
நாட்ட முறுக்குறும் நாடகங் காணவே.


திரு அம்பலத்தில் சிவானந்தம் தரும் சிவநடனம் கண்டவரின் நிலை என்ன ஆகும் ?
வெளி உலகத்தில் சென்று எதையாவது தேட வேண்டும் என்று எண்ணம் அறவே விலகிவிடும்! சிந்தை வேறு வேறு பொருட்களைச் சீர்தூக்கி நோக்கும் செயலைத் துறந்து விடும். உடல் நினைவு இல்லாமல் போகும்! உடல் தளர்ச்சி தெரியாது! மூச்சு பிரம்மப் புழையை நோக்கிப் பாயும். எனவே அந்த உணர்வின் அறிவு மட்டும் செம்மையாக இருக்கும். ஐம்புலன்களின் அறிவு அழிந்து சீவனின் ஆசைகள் அறுந்து விடும். உள்ளத்தில் ஆனந்தம் பெருக்கு எடுக்கும். மேலும் மேலும் சிவானந்தத்தைச் சுவைக்கும் ஆர்வம் மட்டும் முதிர்ச்சி அடையும்.


#2746. அம்பலத்தும் அரன் ஆடுவான்


காளியோடு ஆடிக் கனகா சலத்துஆடிக்
கூளியோடு ஆடிக் குவலயத் தேஆடி
நீடிய நீர்தீகால் நீள்வான் இடையாடி
நாளுற அம்பலத் தேயாடும் நாதனே.


சிவன் காளியோடு நடனம் ஆடினான்; கனகாசலம் ஆகிய துவாதசாந்தப் பெருவெளியிலும் சிவன் நடனம் ஆடினான்; பேய்களுடன் சிவன் நடனம் ஆடினான்; பூமியில் சிவன் நடனம் ஆடினான்; நீரிலும், தீயிலும், காற்றிலும், வானத்திலும் சிவன் நடனம் ஆடினான். சீவர்கள் நெடுநாள் வாழ்வதற்குச் சிவன் அம்பலத்திலும் நடனம் ஆடுவான்.


#2747. இவை இரண்டும் சிவபூமி

மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
கூரும்இவ் வானின் இலங்கைக் குறியுறும்
சாரும் திலைவனத் தண்மா மலயத்தூடு

ஏறும் கழுமுனை இவைசிவ பூமியே.


உடலில் உள்ள சகசிரதளம் ஆகும் உடலில் உள்ள மேருமலை. இடைகலை, பிங்கலை, நடு நாடியாகிய சுழுமுனை, இவை மூன்றும் உடலின் தொடர்பு இல்லாமல் இங்கு விளங்கும். இடைநாடியும், பிங்கலையும் இதயம் என்னும் தில்லை வனத்தை வளைத்து மேலே சென்று சகசிரதளம் என்னும் மேருமலை உச்சியை அடைந்து அங்கு சுழுமுனையுடன் விளங்கும். எனவே இதயம், சகசிரதளம் இவை இரண்டும் சிவன் நடனம் புரியும் சிவபூமியாகின்றன.

#2748. பாதி மதியோன் பயிலும் அம்பலம்

பூதல மேருப் புறத்தான தெக்கணம்
ஓதும் இடைபிங் கலைஒண் சுழுமுனையாம்
பாதி மதியோன் பயில்திரு அம்பலம்

ஏதமில் பூதாண்டத்து எல்லையின் ஈறே.

இடைக்கலை பூதலம் ஆகும். சுழுமுனை மேருமலை ஆகும். பிங்கலை தெக்கணம் ஆகும். இந்தச் சுழுமுனை நாடியைத் தன் அம்பலமாகக் கொண்டு பாதிமதி அணிந்த பரன் நடனம் புரிகின்றான். பூத அண்டத்தின் எல்லையும் இதுவே ஆகும்.


 
8(5). பொற்றில்லைக் கூத்து

8(5). பொற்றில்லைக் கூத்து
ஆறு ஆதாரங்களிலும் உள்ள ஒளிகள் ஒன்றாக இணைந்து நெற்றிக்கு நேரே விளங்கும் பொன் ஒளியில் சிவன் ஆடும் கூத்து



#2749 to #2751

#2749. பரஞ்சோதியின் கூத்து

அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப்
பண்டைஆ காசங்கள் ஐந்தும் பதியாகத்
தெண்டினில் சத்தி திருஅம் பலமாகக்
கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.


மூலாதாரம் முதலாக சகசிரதளம் வரையில் உள்ள ஏழு அண்டங்களும் (ஆதாரச் சக்கரங்களும்) சிவன் ஆடும் அழகிய பொன்னம்பலம் ஆகும். ஐவகை வானங்கள்
( மண்ணில் ஆகாயம், நீரில் ஆகாயம், நெருப்பில் ஆகாயம், காற்றில் ஆகாயம், வெளியில் ஆகாயம் ) என்பவை சிவபிரான் நடிக்கும் இடம் ஆகும். அக்கினியில் விளங்கும் குண்டலினி சக்தியே சிவன் நடம் புரியும் திருவம்பலம் ஆகும். இங்கனம் சோதி வடிவாகிய சிவபிரான் மிகுந்த விருப்பத்துடன் தன் கூத்தைப் புரிகின்றான்

#2750. நிரானந்த நிருத்தியம் புரிவான் பரன்

குரானந்த ரேகையாய்க் கூர்ந்த குணமாம்
சிரானந்தம் பூரித்துத் தென்திசை சேர்ந்து
புரானந்த போகனாய்ப் பூவையும் தானும்
நிரானந்த மாகி நிருத்தஞ் செய் தானே.


குரு உணர்த்திய இன்பயமான திங்கள் மண்டல ஒளி ஆவான் சிவன். நன்மை தரும் ஆனந்தத்தைப் பெருக்குவான் சிவன். திங்கள் கலையில் திகழ்கின்ற சிவன் கதிரவக் கலையை அடைந்து அங்கு சக்தியுடன் இணைந்து இருந்து நித்திய இன்பத்தைத் தரும் அற்புதக் கூத்தை ஆடி அருளுகின்றான்.

#2751. நாதமோடு ஆடினான் நந்திப் பிரான்

ஆதி பரன்ஆட அங்கைக் கனலாட
ஓதும் சடையாட உன்மத்த முற்றாடப்
பாதி மதியாடப் பாரண்ட மீதாட
நாதமோடு ஆடினான் நாதாந்த நட்டமே.


சிவன் தன் அற்புத நடனம் புரிகையில் சுழுமுனையில் திங்கள் மண்டல ஒளி அசைந்தது! புகழ்ந்து பேசப்படும் ஒளிக்கற்றைகள் ஆகிய சடைகள் ஆடின! உன்மத்தர்கள் ஆகிய சீவர்கள் தம் செயல் இழந்து தாமும் ஆடினர். பாதிமதி சக்தி தேவியின் நீல ஒளியுடன் ஆடியது! உடல் தத்துவத்துக்கு அப்படிப்பட்ட வான அணுக்கள் தாமும் ஆடின. நாதாந்தத்தை அடைவிக்கும் கூத்தைத் தன் நாத சக்தியால் ஆடினான் நந்தி எம்பிரான்.

 
#2752 to #2756

#2752. மோன ஞான அந்தம்

கும்பிட அம்பலத்து ஆடிய கோன்நடம்
அம்பரன் ஆடும் அகிலாண்ட நட்டமாம்
செம்பொருள் ஆகும் சிவலோகம் சேர்ந்துற்றால்
உம்பரம் மோன ஞானந்தத்தில் உண்மையே.


அடியவர் தன்னை வணங்கி உய்யுமாறு அரன் அவரவர் சிதாகாசத்தில் தனிநடம் புரிகின்றான். இது சிவபிரான் அண்டங்களில் ஆடும் நடனம் ஆகும். இதுவே செம்பொருள் ஆகிய சிவனை அறிந்து கொள்ளும் உண்மை நிலை ஆகும். சீவன் இந்த நிலையில் பொருந்திவிட்டால் உயரிய மோனம் கைக்கூடும். அதனால் தூய ஞானம் கைக்கூடும். இதுவே சீவன் அடைய வேண்டிய உண்மைப்பேறு ஆகும்.

#2753. பரனின் இரு பாதங்கள்

மேதினி மூவேழ் மிகும்அண்டம் ஓரேழு
சாதக மாகும் சமயங்கள் நூற்றெட்டு
நாதமொடு அந்தம் நடானந்தம் நாற்பதம்
பாதியோடு ஆடிடும் பரன்இரு பாதமே.


நடனம் ஆடும் இறைவனது இரு திருப் பாதங்கள் அனைத்தையும் இயக்குகின்றன. வெளியே புறவுலகில் அமைந்துள்ள மூவேழு இருபத்தொன்று அண்டங்களையும், அவற்றிலும் உயரிய உடலில் உள்ள ஏழு ஆதாரச் சக்கரங்களையும், இவற்றைக்குச் சாதகமாக அமைந்துள்ள நூற்றெட்டு சமயங்களையும், இவற்றின் நான்கு பகுதிகள் ஆகிய நாதம், நாதாந்தம், நடனம், நடனாந்தம் என்பவற்றையும் ஆட்டுவிப்பது சிவசக்தியர் புரியும் திருநடனமே!

#2754. பரமாம் பரமே பரன்!

இடைபிங் கலைஇம வானோடு இலங்கை
நடுநின்ற மேரு நடுவாம் சுழுமுனை
கடவும் திலைவனம் கைகண்ட மூலம்
படர்பொன்றி என்னும் பரமாம் பரமே



சீவனின் தலையின் இடதுபுறம் பனிப் படலம் போன்று விளங்கும் இமயம் இடைகலை ஆகும். பிங்கலை தலையின் வலப்பக்கம் ஒரு தீவு போல விளங்குவது. நடுவே உள்ள சுழுமுனை பரவெளி ஆகிய மேருமலை ஆகும். இவற்றின் வேர் தில்லைவனம் என்னும் சீவனின் இதயப்பகுதி ஆகும். இவற்றில் ஊடே பரவி மேலே செல்பவன் பரன் என்னும் சிவபெருமான் ஆவான்.

#2755. தென்திசை வையகம் தூயது!

ஈறான கன்னி குமரியே காவிரி
வேறாம் நவதீர்த்தம் மிக்குள்ள வெற்புஏழுள்
பேறான வேதா கமமே பிறத்தலான்
மாறாத தென்திசை வையகம் சுத்தமே.


பாரத நாட்டில் தெற்கு கோடியில் உள்ள கன்னியாகுமாரி, தென் பகுதியில் பாயும் காவேரி நதி, மேலும் இவற்றிலும் வேறான ஒன்பது புண்ணிய தீர்த்தங்கள், புகழ் வாய்ந்த ஏழு மலைகள் போன்ற இடங்களில் தோன்றுவன வேதங்களும், ஆகமங்களும். இதனால் பூமியின் தென் பகுதி மிகவும் தூய்மை வாய்ந்தது எனலாம்.

#2756. தேவாதி தேவர் பிரான் சிவன்

நாதத்தினில் ஆடி நாற்பதத் தேயாடி
வேதத்தில் ஆடித் தழல் அந்தம் மீதாடி
போதத்தில் ஆடி புவனம் முழுதாடும்
தீதற்ற தேவாதி தேவர் பிரானே.


தீமையில்லாத தூய சிவபிரான் நாதத் தொனியில் ஆடுவான்; சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு பதங்களிலும் நின்று ஆடுவான்; சிவன் வேதத்தில் நின்று ஆடுவான்; அக்கினிக் கலையின் மீது நின்று ஆடுவான்; சிவன் சீவனின் அறிவில் நின்று ஆடுவான்; புவனங்கள் அனைத்திலும் பொருந்தி ஆடுவான் சிவன்.

 
#2757 to #2761

#2757. கூத்தப் பிரான் ஆவான் சிவபிரான்

தேவரோடு ஆடித் திருஅம்பலத்து ஆடி
மூவரோடு ஆடி முனிசனத் தோடு ஆடிப்
பாவினுள் ஆடிப் பராசத் தியில் ஆடிக்
கோவினுள் ஆடிடும் கூத்தப் பிரானே.

கூத்தப் பிரான் ஆகிய சிவபிரான் தேவர்களின் அறிவில் நின்று ஆடுவான்; திரு அம்பலத்தில் நின்று ஆடுவான்; மும்மூர்த்திகள் ஆகிய நான்முகன், திருமால், உருத்திரன் என்பவர்களிடன் நின்று ஆடுவான் ; தவ முனிவர்களிடம் நின்று ஆடுவான்; பாவினுள் நின்று ஆடுவான்; பராசக்தியிடம் நின்று ஆடுவான்; ஆன்மாக்களின் அறிவில் நின்று நடனம் ஆடுவான்.

#2758. அரன் ஆறு முகத்தில் அதிபதி

ஆறு முகத்தில் அதிபதி நான்என்றும்
கூறு சமயக் குருபரன் நானென்றும்
தேறினர் தெற்குத் திருஅம்ப லத்துளே
வேறின்றி அண்ணல் விளங்கிநின் றானே
.

“இறைவனிடம் ஆற்றுப் படுத்தும் ஆறு வழிகளும் நானே! சமயங்கள் புகழும் குருபரனும் நானே!” என்று கூறும் சிவனைத் தன் ஆன்ம வடிவாகத் தன் தலையின் தென்புறத்தில் உள்ள வானவெளியில் சாதகன் அறிந்து கொண்டான். இந்த உண்மையை அறிந்து கொண்டவர்களிடம் இருந்து என்றும் வேறுபடாமல் ஒன்றாகக் கலந்து விளங்குகின்றான் சிவபெருமான்.

#2759. தானே வந்து அருள்வான் தயாபரன்!

அம்பலம் ஆடரங் காக அதன்மீதே
எம்பரன் ஆடும் இருதாளின் ஈரொளி
உம்பர மாம்ஐந்து நாதத்து ரேகையுள்
தம்பத மாய்நின்று தான்வந் தருளுமே.


அம்பலம் அரனின் ஆடல் அரங்கு ஆகும். அதன் மேல் எம் பரன் சிவபிரான் திரு நடனம் புரிவான். அவன் இரு திருவடிகளின் ஒளி அணுக்களின் கூட்டமே வானம் ஆகும். அந்த வானத்தில் அகர, உகர, மகர, விந்து, நாதங்கள் பொருத்தியுள்ள திங்கள் கலை பொருந்தி விளங்கும். அந்தத் திங்கள் கலையில் சிவபிரான் நிலையாகப் பொருந்திச் சீவனுக்கு ஒளியாக அருள் புரிவான்.

#2760. ஐயன் கூத்து ஐயங்களைப் போக்கும்!

ஆடிய காலும் அதிற்சிலம்பு ஓசையும்
பாடிய பாட்டும் பலவான நட்டமும்
கூடிய கோலம் குருபரன் கொண்டாடத்
தேடியு ளேகண்டு தீர்ந்தற்ற வாறே.

தூக்கிய இடது திருவடியும், அதில் பிறக்கும் காற்சிலம்பின் ஒலியும், அங்கு இசைக்கப்படும் பாட்டும், பலவகையான அழகிய நடன அசைவுகளும், இவை அனைத்தும் கூடி ஒன்றாகத் தோன்றிய அழகிய கோலத்தைக் கண்ட நான் என் உள்ளத்தில் மண்டியிருந்த இருந்த ஐயங்கள் அகலக் கண்டேன்.

#2761. எங்கணும் கூத்து உகந்தான்

இருதயம் தன்னில் எழுந்த பிராணன்
கரசர ணாதி கலக்கும் படியே
அரதன மன்றினில் மாணிக்கக் கூத்தன்
குரவனயாய் எங்கணும் கூத்துகந் தானே.


இதயத்தில் இருந்து மேலே எழுந்த பிராணன், உடல் முழுவதும் நன்றாகக் கலந்து விளங்கும்படி, மூலாதாரத்தில் செவ்வொளி வீசும் அக்கினியாக விளங்கும் பிரான், விரிந்து பரந்த தன் ஒளி வடிவால் சீவனின் உடலிலும் விளங்கினான். சீவனின் உடலைக் கடந்தும் விளங்கினான்.
 
8(6). அற்புதக் கூத்து
சொற்களுக்கு அப்பாற்பட்ட இன்பத்தை அளிப்பது ஈசனின் அற்புதக் கூத்து


#2762 #2767

#2762. திரிபுரை உமையவள்

குருவுரு வன்றிக் குனிக்கும் உருவம்
அருவுரு வாவது அந்த அருவே
திரிபுரை யாகித் திகழ்தரு வாளும்
உருவரு வாகும் உமையவள் தானே


குருவுருவில் இருக்கும் ஒருவுருவம் அருவுருவான சிவத்தின் உருவம். சிவத்தின் அருவுருவம் ஆவாள் அன்னை பராசக்தியும். எனவே திரிபுரையாகத் திகழும் உமை அன்னையே உருவாகவும், அருவாகவும் விளங்குவாள்!

#2763. அருள்வழி ஆகும்!

திருவழி யாவது சிற்றம் பலத்தே
குருவடி வுள்ளாக் குனிக்கும் உருவே
உருவரு வாவதும் உற்றுணர்ந் தோர்க்கு
அருள்வழி யாவதும் அவ்வழி தானே.

ஞானத்தை அடைவிக்கும் திருவழி எது?
தலையின் முன் உள்ள வான் மண்டலத்தின் ஒளியின் உள்ளே ஒருவர் தியானிக்கும் வடிவமே அந்தத் திருவழியும் நன்னெறியுமாகும். தியானிக்கும் அந்த உருவம் மறைந்து அருவம் ஆகும். வான் மண்டலத்தின் ஒளியில் பொருந்தி ஞான நெறியில் நடப்பவருக்கு அதுவே அருள் வழியும் ஆகும்.

#2764. அரன் ஆடும் அம்பலம் அதுவே!

நீரும் சிரிசிடைப் பன்னிரண்டு அங்குலம்
ஓடும் உயிர்எழுந்து ஓங்கி உதித்திட
நாடுமின் நாதாந்த நம்பெரு மான்உகந்து
ஆடும் இடந்திரு அம்பலந் தானே.

தலைக்கு மேலே பன்னிரண்டு அங்குல உயரத்தில் இருப்பது துவாதசாந்தப் பெருவெளி. தியானம் செய்து, கீழ்நோக்கிச் செல்லும் ஆன்மாவை மேல் நோக்கிச் செல்ல விடுங்கள். நாதம் ஒடுங்கிய நாதாந்தத்தில் விளங்குபவன் நம் நந்திப் பிரான். அவன் விருப்பத்துடன் நடனம் புரியும் திருவம்பலம் இந்த துவாதசந்தாப் பெருவெளியே ஆகும்.

#2765. ஒளி உருவாகி ஒளிந்து நிற்பான்

வளிமேகம் மின்வில்லு வானகஓசை
தெளிய விசும்பில் திகழ்தரு மாறுபோல்
களிஒளி ஆறும் கலந்துடன் வேறாய்
ஒளியுரு வாகி ஒளித்துநின் றானே.


காற்று, மேகம், மின்னல், வானவில், இடியோசை போன்ற மாறுபாட்டவற்றுக்கு அகண்ட வானம் தன்னில் இடம் அளிக்கின்றது. தான் அவற்றுடன் கலந்து விடாமல் தெளிந்த வானம் ஆகவும் திகழ்கின்றது. இறைவனும் வானத்தைப் போன்றே ஆனந்தத்தைத் தருகின்ற ஆறுஆதாரங்களில் ஒளிரும் ஆறு வகை ஒளியுடன் கலந்து விளங்குவான். அவற்றிலிருந்து வேறுபட்டுத் தனித்தும் விளங்குவான். ஒளி வடிவாகிய அவன் சீவனின் கண்களுக்குப் புலப்படாமல் ஒளிந்து நிற்கின்றான்.

#2766. நடம் செய்யும் நாயகன் நந்தி

தீமுதல் ஐந்தும் திசை எட்டும் கீழ்மேலும்
ஆயும் அறிவினுக்கு அப்புறம் ஆனந்தம்
மாயைமா மாயை கடந்துநின் றார்காண
நாயகன் நின்று நடஞ்செய்யும் ஆறே

எந்தை நந்திப் பிரான் நடனம் செய்யும் முறை இதுவே! ஐம்பெரும் பூதங்களின் ஒளி அணுக்களிலும், எட்டு திசைகளிலும், கீழும் மேலும் ஆகிய மேலும் இரு திசைகளிலும், அறிவைக் கடந்த சிவானந்த நிலை நிலவுகின்றது. தூமாயை, தூவா மாயை என்ற இரண்டையும் கடந்து நிற்பவர்கள் கண்டு களிக்கும்படி நாயகன் நந்தி நடனம் செய்கின்றான்!

#2767. ஞானக் கூத்தனும், ஞானக் கூத்தியும்.

கூத்தன் கலந்திடும் கோல்வளை யாளொடும்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஆனந்தம்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஞானத்துக்
கூத்தனும் கூத்தியும் கூத்ததின் மேலே.

சகசிரதளத்தில் ஞானக் கூத்தன் கோல்வளையாளோடு கலந்து நிற்பான். சீவர்களுக்கு கோதில்லாத ஆனந்தம் தருவான். சாதகர்களின் குற்றமற்ற தூயஞானத்தில் கலந்து நிற்பான். பலவண்ணங்கள் கொண்ட சக்தியும், வெண்ணிற ஒளிகொண்ட கூத்தனும், மேல் நோக்கி நிமிர்ந்த சகசிரதளத்தின் மீது விளங்குவர்.

 
#2768 to #2773

#2768. சிவசக்தியர் ஆடுவது ஏன்?

இடம்கொண்ட சத்தியும் எந்தை பிரானும்
நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன்
படங்கொண்டு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம்
அடங்கலும் தாமாய்நின்று ஆடுகின் றாரே.


உயிர்களை இடமாகக் கொண்ட சிவபெருமானின் இடப்பகுதியைத் தனதாக்கிக் கொண்டவள் சக்தி தேவி. அவளிடம் இருந்து இணை பிரியமால் இருப்பவன் எந்தை சிவன். சிவசக்தியர் என் உயிரின் ஒளியில் கலந்து இருப்பதை நான் கண்டு கொண்டேன். மலங்கள் வந்து திரைபோலச் சீவனின் தூயஅறிவை மறைக்கின்றன. சீவர்களின் மலங்கள் மாறுவதற்காகவே சிவசக்தியர் சீவனுள் ஓர் அற்புத நடனம் புரிகின்றனர்.

#2769. சீவன் சிவனை அடைவதும் ஒரு நடனம்

சத்தி வடிவு சகல ஆனந்தமும்
ஒத்த ஆனந்தம் உமையவள் மேனியாம்
சத்தி வடிவு சகளத்து எழுந்துஇரண்டு
ஒத்த ஆனந்தம் ஒருநட மாமே.

சீவனின் அறிவில் சத்து ஆகவும், சித்து ஆகவும், ஆனந்தம் ஆகவும், இருப்பது சக்தியின் திருமேனியே! சீவர்களின் சகள வடிவமும் சக்திதேவியின் வடிவமே ஆகும். சக்தியின் வடிவம் உயிர்களிடத்தில் விளங்கித் தூய்மை அடைந்த சீவன், சிவனுடன் கலந்து ஆனந்தம் அடைவதும் ஒரு நடனம் ஆகும்.

#2770. சிவனின் இருப்பிடம் சிற்றம்பலம்

நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி
உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம்
பற்றுக்குப் பற்றாய்ப் பரமன் இருந்திடம்
சிற்றம் பலமென்று சேர்ந்துகொண் டேனே.


நெற்றிக்கு முன்னால், புருவத்துக்கு நடுவில் பொருந்தி, சாதனை செய்தால் உள்ளத்தில் உரைக்கும் மந்திரம் ஒளிவடிவாகும். அந்த அறிவாகாயமே சீவனின் பற்றுக்கோடு ஆகிய பரமனின் இருப்பிடம் என்று அறிந்து கொண்டு நான் அங்கு சென்று சிவனுடன் சேர்ந்து கொண்டேன்!

#2771. பரஞ்சோதி கூத்து உகந்தான்

அண்டங்கள் தத்துவ மாகிச் சதாசிவம்
தண்டினில் சாத்தவி சாம்பவி ஆதனம்
தெண்டினில் ஏழும் சிவாசன மாகவே
கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.


எண்ணற்ற அண்டங்கள், அளவற்ற தத்துவங்கள், சதாசிவம், சுழுமுனை, சக்தி தேவி, சாம்பவி தேவி, குண்டலினி சக்தி என்ற இந்த ஏழு இடங்களையும் தன் நடனத்துக்கு உரிய இடமாகக் கொண்டு பரஞ்சோதி ஆகிய பரமன் தன் கூத்தினை உகந்து நிகழ்த்துகின்றான்.

#2772. நெடு மண்டலம்

மன்று நிறைந்த விளக்கொளி மாமலர்
நன்றிது தான்இதழ் நாலொடு நூறவை
சென்றுஅது தான்ஒரு பத்திரு நூறுள
நின்றது தான்நெடு மண்டல மாமே.


சிதாகாசத்தில் உள்ள சகசிரதளத் தாமரை, ஈசன் நடனம் ஆடும் மன்றினை ஒளிவெள்ளத்தால் நிரப்பும். விந்தையான மலர் அந்த ஆயிரம் இதழ்த் தாமரை. மூலாதாரத்தில் நான்கு இதழ்களாக உள்ள குண்டலினி சக்தியே சிரசில் ஆயிரம் இதழ் தாமரையாகின்றது. மேலம் இருநூற்றுப் பத்து உலகங்களிலும் அது நிமிர்ந்து உயர்ந்து ஒரு மண்டலம் ஆகின்றது. இதுவே சிவபெருமான் உள்ளம் உகந்து நடனம் ஆடுவதற்கு ஏற்ற இடம்.

#2773. அரன் நடனம் செய்யும் ஆலயங்கள்

அண்டம் எழுகோடி பிண்டம் எழுகோடி
தெண்டிரை சூழ்ந்த திசைகள் எழுகோடி
எண்டிசை சூழ்ந்த இலிங்கம் எழுகோடி
அண்ட நடஞ்செயும் ஆலயம் தானே.


அண்டங்கள் ஏழு; தேவர்கள், மனிதர்கள், நிலம் வாழ் விலங்குகள், நீர் வாழ்பவை, ஊர்வன, பறப்பன, தாவரங்கள் என்ற பிண்டங்கள் நான்கு; உடலில் உள்ள ஆதாரங்கள் ஏழு; எண் திசைகளில் பொருந்தி விளங்கும் லிங்கங்களும் நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன், விந்து, நாதம் என்ற ஏழு; அண்டங்களுக்கும், பிண்டங்களுக்கும் தலைவன் ஆன சிவபெருமான் இவற்றைத் தான் நடனம் செய்யும் இடங்களாகக் கொண்டுள்ளான்.
 
#2774 to#2779

#2774. முக்கண்களின் மூன்று ஒளி

ஆகாச மாம்உடல் அங்கார் முயலகன்
ஏகாச மாம்திசை எட்டும் திருக்கைகள்
மோகாய முக்கண்கள் மூன்றொளி தானாக
மாகாய மன்றுள் நடஞ்செய்கின் றானே.


எம்பெருமான் சிவன் சீவனின் அறிவுப் பெருவெளியில் நடனம் செய்யும் விதம் இது:

அகண்ட ஆகாயமே ஈசனின் உடல் ஆகும். அந்த ஆகாயத்தில் உள்ள கரிய இருள் அறியாமை ஆகிய முயலகன். விரிந்த மேலாடை போலத் தோன்றும் எட்டு திக்குகள் அவன் கைகள். முக்கண்கள் ஆகும் கதிரவன், நிலவு, அக்கினி. இவ்வண்ணம் ஈசன் ஆகாசப் பெருவெளியில் அற்புத நடனம் செய்கின்றான்.

#2775. அம்பலம் ஆவது அகில சராசரம்

அம்பல மாவது அகில சராசரம்
அம்பல மாவது ஆதிப் பிரானடி
அம்பல மாவது அப்புத்தீ மண்டலம்
அம்பல மாவது அஞ்செழுத் தாமே.

சிவன் கூத்தாடுகின்ற அம்பலங்கள் இவை:


அகில சராசரத்தில் உள்ள இயங்குகின்ற, இயங்காத பொருட்கள் அனைத்தும் அவன் அம்பலம் ஆகும்; ஆதிப் பிரானின் திருவடிகள் அவன் நடனம் ஆடும் அம்பலம் ஆகும்; ஐம்பெரும் பூதங்களும் அவன் ஆடும் அம்பலம் ஆகும். திரு ஐந்தெழுத்து சிவன் ஆடுகின்ற அம்பலம் ஆகும்.

#2776. பாண்டரங்கக் கூத்து

கூடிய திண்முழ வம்குழல் ஓமென்று
ஆடிய மானுடர் ஆதிப் பிரான் என்ன
நாடிய நற்கணம் ஆரம்பல் பூதங்கள்
பாடிய வாறுஒரு பாண்டரங் காமே.


வண்மையான திண்முழவமும், குழலும் “ஓம்! ஓம்!” என்று ஒலிக்கும்; மெய்ஞானியர் அந்த நாதமே எந்தை ஈசன் என்று உணர்ந்து மகிழ்வர். பெருமானைக் காண விரும்பிக் கூட்டம் கூட்டமாக நிற்கும் பூதப் படைகளும், தேவகணங்களும் போற்றி பாடும்படி அமைந்துள்ள கூத்து திரிபுர சங்காரக் கூத்து எனப்படும் பாண்டரங்கக் கூத்து ஆகும்.

#2777. கண்டு சேவித்துக் நற்கதி அடைவர்

அண்டத்தில் தேவர்கள் அப்பாலைத் தேவர்கள்
தெண்டிசை சூழ்புவிக் குள்ளுள்ள தேவர்கள்
புண்டரி கப்பதப் பொன்னம் பலக்கூத்துக்
கண்டுசே வித்துக் கதிபெறு வார்களே.


அண்டத்தில் உள்ள தேவர்கள்; அண்டத்துக்கு வெளியே உள்ள தேவர்கள்; அலைகடல் சூழ்ந்த உலகில் வாழும் தேவர்கள் என்ற அனைவரும் தம் தலையின் மேல் விளங்குகின்ற பொன் அம்பலத்தில் கூத்து நிகழ்த்துகின்ற ஈசனின் தாமரைப் பொற்பாதங்களைக் கண்டு வணங்கி நற்கதி அடைவர்.

#2778. உள்ளத்தில் அமுது ஊறும்!

புளிக்கண்ட வர்க்குப் புனலூறு மாபோல்
களிக்கும் திருக்கூத்துக் கண்டவர்க்கு எல்லாம்
துளிக்கும் அருட் கண்ணீர் சோர்நெஞ் சுருக்கும்
ஒளிக்குள்ஆ னந்தத்து அமுதூறும் உள்ளத்தே
.

புளியைப் பார்த்தவர்களுக்கு வாயில் உமிழ் நீர் ஊறும். அது போலவே சிவானந்தத்தைத் தரும் திருக் கூத்தைத் தம் தலையின் மீது கண்டவர்களுக்கு ஆனந்தக் கண்ணீர் துளிக்கும். அன்பால் உருகி நெஞ்சம் சோர்வடையும். அவர் உள்ளத்தில் விளங்கும் ஒளியாகிய சிவன் இன்பத்தைப் பெருக்குவான்.

#2779. உணர்ந்தவர் உன்மத்தர் ஆவர்!

திண்டாடி வீழ்கை சிவானந்த மாவது
உண்டார்க்கு உணர்வுண்டால் உன்மத்தம் சித்திக்கும்
கொண்டாடு மன்றுள் குனிக்கும் திருக்கூத்துக்
கண்டார் வருங்குணம் கேட்டார்க்கும் ஒக்குமே.


சிவானந்தம் அடைந்தவரின் நிலைப்பாடுகள் இவை:

இறைவன் புரியும் திருநடனத்தைக் கண்டு இவர் திண்டாடித் தடுமாறிக் கீழே விழுவார்; அவர் நோக்குப் புற உலகை விடுத்து அகத்தின் ஒளியில் சென்று பதியும். அதனால் அவர் உன்மத்தர் ஆகித் தன் வசம் இழப்பர்; எல்லோரும் கொண்டாடும் அறிவு ஆகாசத்தில் ஈசன் நேசத்துடன் புரியும் நடனத்தைக் கண்டவர் மெய்ப்பாடுகளும், நாதாந்தத்தில் அவன் பிராணவத் தொனியைக் கேட்டவர்களின் நிலைப்பாடுகளும் ஒத்தவைகள் ஆக அமையும்.

 
#2780 to #2785

#2780. மங்கை ஒரு பாகன் ஆடும் மாநடனம்!

அங்கி தமருகம் அக்குமா லைபாசம்
அங்குசம் சூலம் கபாலம் உடன்ஞானம்
தங்குஉ பயந்தரு நீல மும்உடன்
மங்கையோர் பாகமாய் மாநடம் ஆடுமே.


அக்கினிச் சட்டி, உடுக்கை, உருத்திராட்ச மாலை, பாசக் கயிறு, தோட்டி, முத்தலை வேல் (சூலம்), மண்டையோடு இவற்றைக் கைகளில் ஏந்தியும்; பர ஞானம், அபர ஞானம் இவற்றைத் தருபவளும், நீல நிற ஒளியுடன் விளங்குபவளும் ஆகிய உமையைத் தன் உடலின் இடப்பாகமாகக் கொண்ட சிவன் நடனம் மாட்சிமை மிகுந்த அற்புத ஆடுவான்.

#2781. நந்தி புறம் அகம் நிறைவான்

ஆடல் பதினோர் உறுப்பும் அடைவாகக்
கூடிய பாதம் சிலம்புகைக் கொள்துடி
நீடிய நாதம் பராற்பர நேயத்தே
ஆடிய நந்தி புறம்அகந் தானே.


பாண்டரங்கக் கூத்து ஆடுபவர் உடலின் பதினோரு உறுப்புக்களின் அசைவால் நிகழ்வது. முறைப்படி பதினோரு உறுப்புக்களும் ஆடலில் பொருந்தி இருக்க, கால்களில் சிலம்பும், கைகளில் உடுக்கையும் கொண்டு சிவன் நடனம் செய்வான். அந்த நடனத்தின் ஒலி சீவனை பராத்பரனிடத்தில் கொண்டு செலுத்தும். இங்கனம் சிவபிரான் சீவனுக்கு உள்ளும் புறமும் நிறைந்து நிற்பான்.

#2782. அரன் ஆடும் ஆனந்தக் கூத்து!

ஒன்பதும் ஆட ஒருபதி னாறுஆட
அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடனாட
இன்புறும் ஏழினும் ஏழுஐம்பத் தாறுஆட
அன்பதும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.


சிவபிரானின் ஒன்பது பேதங்கள் நடனம் ஆடிடும்; எட்டுத் திசைகள், அவற்றின் உள் திசைகள் எட்டு எனப் பதினாறு திசைகளும் நடனம் ஆடிடும்; பக்தி நெறிகள் ஆறும் நடனம் ஆடிடும்; இன்பத்தை அளிக்கும் உடலின் ஏழு ஆதாரங்களும் நடனம் ஆடிடும்; ஏழு வகைத் தோற்றங்கள் நடனம் ஆடிடும், ஐம்பத்தாறு தேசங்கள் நடனம் ஆடிடும்; ஐம்பது சக்தியர் எழுத்துக்களின் வடிவம் ஆக இருக்க அவர்களிடமும் ஐயன் ஆனந்தக் கூத்து ஆடுவான்.

ஒன்பது பேதங்கள்:
நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன்,விந்து, நாதம்,சத்தி, சிவன்

பக்தி மார்க்கங்கள் ஆறு:
காணாபத்தியம், கௌமாரம், சாத்தம், சௌரம், வைணவம், சைவம்.


#2783. ஏழிசையில் இசைந்து அரன் ஆடுவான்!

ஏழினில் ஏழாய் இகழ்ந்தெழுந்து ஏழதாய்
ஏழினில் ஒன்றாய் இழிந்துஅமைந்து ஒன்றாகி
ஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரஞ்சோதி
ஏழிசை நாடகத் தேஇசைந் தானே.


ஏழு சுரங்களில் ஏழாகவும்; அந்த ஏழு சுரங்களும் குறுகி விடும் போது அவற்றைக் குறிக்கும் ஏழு எழுத்துக்களாகவும்; அவை ஏழு சுரங்களும் மேலும் மேலும் குறுகி ஒரே ஒலியாக அமைந்து பிராணவமாக விளங்கும் போதும், அவை அனைத்திலும் அரன் விளங்குகின்றான். சன்மார்க்கம் என்னும் நன் நெறியில் விளங்கும் பரஜோதி சிவன் ஏழு இசைகளிலும் இசைந்து தானும் ஆனந்த நடனம் புரிகின்றான்.

#2784. மூன்றெழுத்தால் ஆன பிரணவம்

மூன்றினில் அஞ்சாகி முந்நூற்று அறுபதாய்
மூன்றினில் ஆறாய் முதற்பன்னீர் மூலமாய்
மூன்றின்இலக்கம் முடிவாகி முந்தியே
மூன்றிலும் ஆடினான் மோகாந்தக் கூத்தே.


இறைவன் ஆடும் மோகாந்தக் கூத்து:
கதிரவன், திங்கள், அக்கினி என்ற மூன்று மண்டலங்களிலும் சிவன் ஆடுவான்; திரு ஐந்தெழுத்தின் வடிவமாக சிவன் ஆடுவான்; முந்நூற்று அறுபது கலைகளாகச் சிவன் ஆடுவான். மூன்று மண்டலங்களிலும் உள்ள ஆறு ஆதாரங்களாகச் சிவன் ஆடுவான். நுண்மை, பருமை என்ற பேதங்களால் அமையும் பன்னிரண்டு ஆதாரங்களிலும் சிவன் ஆடுவான். அகரம், உகரம், மகரம் என்ற மூன்று எழுத்துக்கள் ஒன்றாகி அமைந்த பிரணவத்தில் பிரான் விருப்பத்தை உண்டாக்கும் தன் கூத்தினை நிகழ்த்துவான்!

#2785. ஞாலம் கடந்து நின்றான்!

தாமுடி வானவர் தம்முடி மேலுறை
மாமணி ஈசன் மலரடித் தாளினை
வாமணி அன்புடை யார்மனத் துள்ளெழுங்
காமணி ஞாலம் கடந்துநின் றானே.

அழகிய மணிமுடிகளைத் தரித்த வானவர்களின் தலை மேல் தானே ஒரு மாமணியைப் போன்று ஒளிரும் ஈசனின் திருவடிகள் உறைகின்றன. அதே தாமரைத் திருவடிகள் அன்புடையவர்களின் மனதில் அழகுற விளங்குகின்றன. அப்படி விளங்கி வேண்டுபவர்களுக்கு வேண்டுபவற்றை அளிக்கும் ஈசன் வானுலகக் கற்பகத் தருவனை ஒத்தவன். அவன் இந்த ஞாலத்தைக் கடந்து நிற்பவன்.

 
#2786 to #2791

#2786. அரன் ஆடல் கண்டு இன்புறுவர்

புரிந்தஅவன் ஆடில் புவனங்கள் ஆடும்
தெரிந்துஅவன் ஆடும் அளவுஎங்கள் சிந்தை
புரிந்துஅவன் ஆடில்பல்பூதங்கள் ஆடும்
எரிந்தவன் ஆடல்கண்டு இன்புற்ற வாறே.


எல்லாம் அறிந்த சிவன் ஆடினான் என்றால் அனைத்து புவனங்களும் அவனுடன் சேர்ந்து ஆடும். சிந்தையின் சீர்மையை அளந்து அதற்கு ஏற்ப சிவன் நடனம் புரிவான். அவன் நடனம் புரிந்தால் என்றால் பூதங்களும் அவனுடன் நடனம் புரியும். பேரொளியாகத் திகழும் சிவன் நடனத்தைக் கண்டவர்கள் அடையும் இன்பம் அளவற்றது.

#2787. அருட்சக்தி துணை புரிவாள்

ஆதி நடஞ்செய்தான் என்பர்கள் ஆதர்கள்
ஆதி நடஞ்செய்கை யாரும் அறிகிலர்
ஆதி நடமாடல் ஆரும் அறிந்தபின்
ஆதி நடமாட லாம் அருட் சத்தியே.


“ஆதி சிவன் நடனம் செய்தான்!” என்பர் ஆதர்கள். ஆனால் ஆதி சிவன் நடனத்தைக் கண்டவர்கள் எவரும் இலர். ஆதி சிவன் தம் உள்ளத்தில் நடனம் செய்வதை அறிந்து கொண்ட பின்னர், ஆதி சிவன் நடனத்திற்குத் துணை புரிபவள் ஆதி சக்தியே என்ற உண்மையை அவர்கள் அறிந்து கொள்வர்.

#2788. அன்புறு எந்தை ஆடலுற்றான்

ஒன்பதோடு ஒன்பதாம் உற்ற இருபதத்து
அன்புறு கோணம் அதிபதந்து ஆடிடத்
துன்புறு சத்தியுள் தோன்றிநின்று ஆடவே
அன்புறு எந்தை நின்று ஆடலுற் றானே


வியஷ்டி நிலையில் உள்ள சீவனுக்கும் சமஷ்டி நிலையில் உள்ள சிவனுக்கும் ஒன்பது பேதங்கள் உள்ளன. சீவனுள் ஒன்பது நிலைகள் நனவு முதல் துரியாதீதம் வரை அமைந்துள்ளன. சிவன் தன் வடிவில் ஒன்பது பேதங்களை உருவாக்குபவன். தத் பதம், தொம்பதம் என்ற இருபதங்களிலும் இருந்து கொண்டு சீவனுக்கு இன்பத்தை உண்டாக்குவதற்காகவே சிவன் ஆடுகிறான். காம வேட்கையை எழுப்பிச் சீவனுக்குத் துன்பத்தைத் தருகின்ற காளி ஆடிட, சீவர்களுக்கு இன்பத்தைத் தருவதற்குச் சிவன் ஆடுகிறான்.

#2789. அத்தனின் ஆனந்தக் கூத்து

தத்துவம் ஆடச் சதாசிவம் தானாடச்
சித்தமும் ஆடச் சிவசத்தி தானாட
வைத்த சராசரம் ஆட மறையாட
அத்தனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.


அத்தனின் ஆனந்தக் கூத்துடன் நிகழும் அற்புத நடனங்கள் இவை:

அனைத்துத் தத்துவங்களும் அத்தன் உடன் ஆடும்; சதாசிவன் உடன் ஆடுவான்; சித்த மண்டலம் உடன் ஆடும்; சிவசத்தி உடன் ஆடுவாள். அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள் என்ற அத்தனையும் உடன் ஆடும்; வேதங்கள் உடன் ஆடிடும்.

#2790. அருளுருவாகி நின்று ஆடினான்

இருவருங் காண எழில்அம் பலத்தே
உருவோடு அருவோடு ஒருபர ரூபமாய்த்
திருவருள் சத்திக்குள் சித்தன்ஆ னந்தன்
அருளுரு வாகிநின்று ஆடலுற் றானே.


பதஞ்சலி முனிவரும், வியாக்கிரபாதரும் கண்டு மகிழும்படிச் சிவன் ஆடினான். அழகிய அம்பலத்தில் உருவம், அருவம், அருவுருவம் என்ற மூன்றும் ஒரு பரரூபமாகப் பொருந்தச் சிவன் ஆடினான். திருவருள் புரியும் சக்திக்கு உள்ளே ஆனந்த மயமாகவும், அறிவு மயமாகவும் உள்ள சிவன் அருளே உருவாகி ஆனந்த நடனம் ஆடினான்.

#2791. வேதாந்தச் சித்தாந்தத்துள் சிவன் ஆடினான்

சிவமாட சத்தியும் ஆடச் சகத்தில்
அவமாட ஆடாத அம்பரம் ஆட
நவமான தத்துவம் நாதாந்தம் ஆடச்
சிவமாடும் வேதாந்தச் சித்தாந்தத் துள்ளே.


சிவன் ஆட, சக்தியும் ஆட, சகத்தில் அவம் ஆட, அசைவில்லாத வானம் ஆட, உருவம் அருவுருவம் அருவம் என்ற ஒன்பது தத்துவங்களும் ஆட, தத்துவங்களைக் கடந்து விளங்கும் நாதாந்தமும் ஆட, சிவன் வேதாந்தச் சித்தாந்தத்தினுள் நின்று ஆனந்த நடனம் ஆடினான்.
 
#2792 to #2797

#2792. சிவ நடனத்தின் சிறப்புக்கள்

நாதத்தின் அந்தமும் நாற்போத அந்தமும்
வேதத்தின் அந்தமும் மெய்ச்சிவா னந்தமும்
தாதற்ற நல்ல சதாசிவா னந்தத்து
நாதப் பிரமம் சிவநாட மாமே.


நாதத்தின் அந்தம் நாதாந்தம் ஆகும்; அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்குவித அறிவின் அந்தம் போதாந்தம் ஆகும்; வேதங்களின் அந்தம் வேதாந்தம் ஆகும்; சிவன் தரும் ஆனந்தம் சிவானந்தம் ஆகும்; முடிவே இல்லாத சிவானந்தம் சதாசிவானந்தம் ஆகும்; இந்த நிலைகள் அனைத்திலும் சிவநடனம் புரிபவன் நாதப் பிரம்மம் ஆகிய சிவபெருமான்.

#2793. பரன் எங்கும் தானாக ஆடும்!
சிவமாதி ஐவர்திண் டாட்டமும் தீரத்
தவமார் பசுபாசம் ஆங்கே தனித்துத்
தவமாம் பரன்எங்கும் தானாக ஆடும்
தவமாம் சிவானந்தத் தோர் ஞானக் கூத்தே.


சீவர்களைப் பிறவியில் செலுத்தித் திண்டாட வைப்பவர்கள் நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுரன் சதாசிவன் என்னும் ஐவர். இவர்கள் செயல்பாடுகள் முடிந்ததும் சீவனின் பிறவிப்பிணி ஒழியும். தவத்தில் சிறந்த சீவன் தன் பாசத் தளைகளைத் துணிக்கும். தவத்தின் பயனாக அடையாகக் கூடியவன் சிவன். சீவன் தன் தவப்பயனாக எங்கும் நீக்கம் அற நிறைந்து ஆடும் சிவனின் ஞானக் கூத்தைக் கண்டு, அதனால் சிவானந்தம் அடையும்.

#2794. அத்தன் என்னை ஆட்கொண்ட விதம்

கூடிநின் றானொரு காலத்துத் தேவர்கள்
வீடநின் றான்விகிர் தாஎன்னும் நாமத்தைத்
தேடநின் றான்திக ழுஞ்சுடர் மூன்றொளி
ஆடநின் றான்என்னை ஆட்கொண்ட வாறே.


சிவன் என்னை ஆட்கொண்ட விதம் இதுவே! அவன் என்னுடன் பிரிவின்றிக் கூடி நின்றான்; வேறு சில பல சிறு தெய்வங்களின் பிடியிலிருந்து அவன் என்னை மீட்டான்.”விகிர்தா!” என்று நான் விளித்தவுடன் அவன் விருப்புடன் வெளிப்பட்டு நின்றான். கதிரவன், திங்கள், அக்கினி என்ற முச்சுடர்களின் ஒளியும் ஆடுமாறு அவன் முற்றிலுமாக என்னை ஆட்கொண்டான்.

#2795. பேதம் இன்றிப் பின்னிப் பிணைந்தான்

நாதத் துவம்கடந்து ஆதி மறைநம்பி
பூதத் துவத்தே பொலிந்தின்பம் எய்தினர்
நேதத் துவமும் அவற்றோடு நேதியும்
பேதப் படாவண்ணம் பின்னிநின் றானே.


நாதத் தத்துவத்தைக் கடந்து நாதாந்த நிலையில் விளங்குபவன் ஆதிசிவன். இவனே ஆதிமறைகள் போற்றும் நம்பி ஆவான். இவன் சீவனின் சுவாதிட்டான மலரை ஒளிரச் செய்தான். அதனால் சீவன் அங்கே பொருந்தி உலக இன்பங்களை சுவைத்தது. ஆனால் அவனே பிரிக்கப்பட வேண்டிய தத்துவங்களைப் பிரித்தும் வைத்தான். ‘நேதி’ என்று ‘சத்’தை ‘அசத்’திலிருந்து பிரித்து உணர்ந்த சீவனுடன், சிவன் வேறுபாடு இன்றிப் பின்னிப் பிணைந்து நின்றான்.

#2796. ‘தான்’ அந்தமாவது ஆனந்தம்

ஆனந்தம் ஆனந்தம் என்பர் அறிவிலர்
ஆனந்த மாநடம் ஆரும் அறிகிலர்
ஆனந்த மாநடம் ஆரும் அறிந்தபின்
தான் அந்தம் அற்றிடம் ஆனந்த மாமே.


அறிவிலிகள் “ஆனந்தம்! ஆனந்தம்!” என்று எதை எதையோ கூறுவார். மெய்யான ஆனந்தம் தருவது சிவனுடைய பெருமை வாய்ந்த கூத்து என்று இவர் அறிகிலர். ஆனந்தம் தருவது சிவநடனம் என்று அறிந்து கொண்ட பின்னர், சீவனின் ‘தான்’ என்னும் தத்துவங்களின் கூட்டம் அந்தம் அடையும் அந்த இடமே, உண்மையான ஆனந்தம் என்று அவர்கள் அறிந்து கொள்வர்.

#2797. ஐந்தெழுக்கள் பொருந்தும் ஐந்து இடங்கள்

திருந்துநல் சீஎன்று உதறிய கையும்
அருந்தவர் வாஎன்று அணைத்த மலர்க்கையும்
பொருந்த அமைப்பில் ய என்ற பொற்கையும்
திருந்தநல் தீயாகும் திருநிலை மவ்வே.

திருந்திய ‘சி’கரத்தின் நீட்சி ஆகிய ‘சீ’ உடுக்கையை உதறிய கரத்தினை இருப்பிடம் ஆகக் கொண்டது.
அருந்தவத்தினரை “வா” என்று அன்புடன் அழைத்து அணைத்துக் கொள்வது மலர் போன்ற இடக்கையினை இடமாக கொண்டது.
பொருந்திய ‘ய’கரம் அவன் பொற்கரத்தைத் தான் பொருந்தும் இடமாகக் கொள்ளும்.
திருத்துகின்ற ‘ந’கரம் பொருந்தும் இடம் அக்கினியை ஏந்திய இடக் கரம் ஆகும்.
மலத்தை அடக்க முயலகன் மீது பொருந்திய திருவடி ‘ம’கரம் பொருந்து இடம் ஆகும்.

 
#2798 to #2803

#2798. உருவில் ‘சிவாயநம’ என்று ஓதுமின்

மருவும் துடியுடன் மன்னிய வீச்சும்
மருவிய அப்பும் அனலுடன் கையும்
கருவில் மிதித்த கமலப் பதமும்
உருவில் சிவாய நமவென வோதே.


உடுக்கையினை அடிக்கும் வலக்கரத்தையும், வீசிய இடக் கரத்தையும், அபயம் அளிக்கும் வலக் கரத்தையும், அக்கினியை ஏந்திய இடக் கரத்தையும், பிறவிப் பிணியை அறுக்கும் திருவடியினையும், வடிவம் இல்லாத ‘சிவாயநம’வுடன் பொருத்தி அதனைத் துதிப்பீர்கள் நீங்கள்!

#2799. அரன் அடி என்றும் அனுக்கிரகம்

அரன்துடி தோற்றம் அமைத்தல் திதியாம்
அரன் அங்கி தன்னில் அறையிற் சங் காரம்
அரன் உற்று அணைப்பில் அமரும் திரோதாயி
அரனடி என்றும் அனுக்கிரகம் என்னே


தனக்குள் அனைத்துத் தத்துவங்களையும் ஒடுக்கிக் கொண்டு விளங்குபவன் சிவபெருமான். அவன் தன் உடுக்கையின் ஒலியை எழுப்பிப் படைக்கும் தொழிலை நிகழ்த்துகின்றான். தன் அபயக் கரத்தினால் படைப்பினைக் காக்கும் தொழிலைச் செய்கின்றான். தீயை ஏந்திய கரத்தினால் அழிக்கும் செயலைச் செய்கின்றான். ஊன்றிய திருவடியினால் மறைக்கும் தொழிலைச் செய்கின்றான். தூக்கிய திருவடியால் அருளும் செயலைச் செய்கின்றான். ஐந்தொழில்களும் நிகழ்வது அரன் அனுக்கிரகத்தினால் என்று அறிவோம்!

#2800. நாத வடிவாக வேதங்கள் ஒலித்தன

தீத்திரள் சோதி திகழ்ஒளி உள்ஒளி
கூத்தனைக் கண்டஅக் கோமளக் கண்ணினள்
மூர்த்திகள் மூவர் முதல்வன் இடம் செல்லப்
பார்த்தனள் வேதங்கள் பாடின தானே.


தீப் பிழம்பாகவும், சீவ ஒளிக்குள் உள்ள ஒளியாகவும் இருப்பவன் சிவன். அந்த சிவனைக் கண்டாள் சிற்சக்தி தேவி. நான்முகன், திருமால், உருத்திரன் என்ற மூவரும் முறையே மகேசுரன், சதாசிவன், சிவன் என்ற மூவரிடம் சென்று நுண்மையாக அவர்களுள் ஒடுங்குவதைக் கண்டாள். அப்போது சீவனின் தலையின் மீது நாத வடிவாக வேதங்கள் ஒலித்தன.

#2801. சுந்தரக் கூத்தன் சிவன்

நந்தியை எந்தையை ஞானத் தலைவனை
மந்திரம் ஒன்றுள் மருவி அதுகடந்து
அந்தர வானத்தின் அப்புறத்து அப்பர
சுந்தரக் கூத்தனை என்சொல்லு மாறே.


நந்திப் பெருமான் என் தந்தை ஆவான்; அவன் ஞானத் தலைவன்; ‘ஓம்’ என்னும் பிரணவத்தினுள் பொருந்தி விளங்குபவன். அதையும் கடந்து சென்று உடல் பற்று ஒழிந்த வானத்தில் விளங்குகின்ற அழகிய கூத்தன் அவன். சீவனுக்கு இந்த சுந்தரக் கூத்தனைப் பற்றிப் புகழுதல் இயலும்! சீவனுக்கு சிவனைப் பற்றிப் புகலுதல் இயலாது அன்றோ?

#2802. அரன் மேனியில் அணை புகலாம்!

சீய குருநந்தி திருஅம்ப லத்திலே
ஆயுறு மேனியை யாரும் அறிகிலர்
தீயுறு செம்மை வெளுப்பொடும் அத்தன்மை
ஆயுறு மேனி அணைபுக லாமே.


வனவிலங்குகளை அடக்கி ஆளும் சிங்கத்தைப் போலத் தத்துவங்களை அடக்கி ஆள்பவன் சிவபெருமான். திரு அம்பலத்தில் ஆடுபவன் குரு சிவன் ஆவான். அவன் திருமேனி எத்தகையது என்று அறிந்தவர் எவரும் இல்லை. சிவத்தின் நிறம் மூலாதாரத்தில் உள்ள அக்கினியின் சிவப்பு நிறம் ஆகும். அதுவே சிரசின் உச்சியைச் சென்று அடையும் பொழுது வெண்மை நிறம் அடையும். இந்த வேறுபாட்டை அறிந்து கொண்டு, சிவனை ஒளி வடிவாகக் கண்பவர்களுக்குச் சிவனது திருமேனி அடைக்கலம் புகும் இடமாகும்.

#2803. பரனும், பரையும் சக்தியே ஆவாள்!

தானான சத்தியும் தற்பரை யாய்நிற்கும்
தானாம் பரற்கும் உயிர்க்கும் தரும் இச்சை
ஞானாதி பேதம் நடத்தும் நடித்தருள்
ஆனால் அரனடி நேயத்த தாமே.


சிவத்தின் சக்தியே தற்பரை ஆகித் செயல்கள் புரிவாள். சக்தியின் செயல்படாத நிலை பரன் எனப்படும். சக்தியின் செயல்படும் நிலை பரை எனப்படும். சக்தியே சிவனுக்கும், சீவனுக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்துபவள். அவளே சீவர்களிடத்தில் இச்சா சக்தியாகவும், கிரியா சக்தியாகவும், ஞான சக்தியாகவும் விளங்குவாள். சீவனைப் பக்குவப் படுத்துவாள். பக்குவப் படுத்தப்பட்ட சீவன், சக்தியில் அருளால், சிவனிடம் மாறாத அன்பு கொள்ளும். பின்னர் சீவன் சிவனிடம் சென்று அவனோடு ஒன்றி விடும். சீவனும் சிவனாகவே மாறி அறிவு மயம் ஆகிவிடும்.
 
9. ஆகாசப் பேறு
கூத்தன் தரிசனத்துக்குப் பின்னர் பராகாயத்தில்
ஒளியில் திளைத்துச் செயல் அற்று இருத்தல்!

#2804 to #2808

#2804. உள்ளத்துள் ஓம் எனும் ஈசன்

உள்ளத்துள் ஓம்என ஈசன் ஒருவனை
உள்ளத்து ளேயங்கி யாய ஒருவனை
உள்ளத்து ளேநீதி யாய ஒருவனை
உள்ளத்து ளேயுடல் ஆகாய மாமே.


மனமண்டலத்துள் ஓங்காரமாகி நிற்பவன் ஈசன். அவன் அக்கினியைப் போல ஒளிர்பவன். அவன் நீதி மயமானவன். அவனைத் தன்னுள்ளே கொண்டுள்ள மனமண்டலத்தைச் சூழ்ந்துள்ள உடம்பு வானம் ஆகும்.


#2805. அருநிலை யாய்நின்ற ஆதிப் பிரானே.


பெருநில மாய்அண்ட மாய்அண்டத்து அப்பால்
குருநில மாய்நின்ற கொள்கையன் ஈசன்
பெருநில மாய்நின்று தாங்கிய தாளோன்
அருநிலை யாய்நின்ற ஆதிப் பிரானே.


உடல் என்ற பெருநிலமானவன் ஈசன்; உடலைச் சூழ்ந்துள்ள அண்டகோசமும் அவனே. அவற்றுக்கும் அப்பால் ஒளிர்கின்றவனும் அவனே. பெருநிலமாக உருவெடுத்து அனைத்தையும் தாங்குகின்ற அருளுடைய ஆதிசிவனே அருவமாகவும் விளங்குகின்றவன்.


#2806. அண்ட ஒளியும் பிண்ட ஒளியும்


அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன்
பிண்ட ஒளியாய் பிதற்றும் பெருமையை
உண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது
கொண்ட குறியைக் குலைத்தது தானே.


அண்ட ஒளி ஆவான் சிவன்! அண்டங்களைக் கடந்த அகண்ட ஒளியும் ஆவான் சிவன்; சீவ ஒளியுடன் தன் சிவ ஒளியைப் பொறுத்துபவன் சிவன்; சீவன், தான் பெற்றுள்ள உட்கருவிகளின் பெருமையால் பிதற்றும் வீண் பெருமையை விழுங்குபவன் சிவன். அதனால் சீவ உடல் பரமாகாயத்தில் உள்ள ஒளியில் மறையும். சீவ உடல் தன் வடிவத்தை இழந்து தானும் ஒளிமயமாக மாறிவிடும்.


#2807. பரஞ்சுடர் ஜோதி


பயனறு கன்னியர் போகத்தின் உள்ளே
பயனுறும் ஆதி பரஞ்சுடர்ச் சோதி
அயனொடு மால்அறி யாவகை நின்றிட்டு
உயர்நெறி யாய்ஒளி ஒன்றது வாமே


ஓர் ஆண் பெண்களிடம் சிற்றின்பம் அனுபவிக்கும் போது அவனிடம் காமாக்கினி மேலிட்டு விளங்கும். அந்த நிலையில் பரஞ்சோதியாகிய சிவபெருமான் தானும் இன்ப வடிவினனாகத் திகழுவான். சிற்றின்பம் தரும் மகளிரை விடுத்துச் சீவன் சிவனிடம் தாளாத அன்பு கொண்டுவிட்டால், மாலும், அயனும் காண இயலாத வண்ணம் சிவன் மேன்மையான ஒளியாக மாறிச் சீவனின் ஒளியில் கலந்து விடுவான்.


#2808. பிரியாது இருந்தால் பெருங்காலம் வாழ்வு!


அறிவுக்கு அறிவாம் அகண்ட வெளியும்
பிறிவா வலத்தினில் பேரொளி மூன்றும்
அறியாது அடங்கிடும் அத்தன் அடிக்குள்
பிறியாது இருக்கில் பெரும்காலம் ஆமே


சீவனின் அறிவுக்கு காரணம் திங்கள், கதிரவன், அக்கினி என்னும் மூன்று மண்டலங்களை நன்கு விளக்கம் பெறுவது ஆகும். இவை மூன்றும் அடங்கி விட்டால் உடல் அறிவு மறைந்து விடும். சீவ ஒளி சிவ ஒளியுடன் கலந்துவிட்டால் சீவன் தன் உடலில் இருந்து கொண்டே நெடுங்காலம் வாழ இயலும்.


 
9. ஆகாசப் பேறு
கூத்தன் தரிசனத்துக்குப் பின்னர் பராகாயத்தில்
ஒளியில் திளைத்துச் செயல் அற்று இருத்தல்!


#2809 to #2812

#2809. அங்கி வண்ணன் அரன்

ஆகாச வண்ணன் அமரர் குலக்கொழுந்து
ஏகாச மாசுணம் இட்டுஅங்கு இருந்தவன்
ஆகாச வண்ணம் அமர்ந்துநின்று அப்புறம்
ஆகாச மாய்அங்கி வண்ணனும் ஆமே.


அந்தி வானத்தின் வண்ணம் கொண்டவன் சிவன்; அமரர்கள் குலக் கொழுந்து சிவன்; பெரிய பாம்பைத் தன் உடலில் அணிந்தவன்; அவன் வான் மயமாக விளங்குவான்; அறிவுப் பேரொளியாகவும் விளங்குவான். அவனே நெருப்பை போன்ற சிவந்த நிறம் படைத்த நம் சிவபெருமான்.

#2810. வெயில் கொண்டு உள்ளம் வெளியது ஆகும்.

உயிர்க்கின்ற வாறும் உலகமும் ஒக்க
உயிர்க்கின்ற உள்ளொளி சேர்கின்ற போது
குயில்கொண்ட பேதை குலாவி உலாவி
வெயில்கொண்டு என்உள்ளம் வெளியது ஆமே.


உடலில் உயிர்ப்பாக விளங்குவது பிராணசக்தி. உலகின் அசைவுக்கு கரணம் ஆனது சோதி மயமான பிராணசக்தி. இந்த இரண்டு பிராணசக்திகளும் இணையும் பொழுது மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தி சீவனின் உடல் முழுவது பரவுவவாள். நாதத்தை எழுப்புவாள். ஒளியாகச் சீவனின் மனத்தில் பொருந்துவாள். அதனால் சீவனின் நுண்ணுடல் தானே வெளிப்படும்.

#2811. அமுதம் பருகலாம்!

நணுகில் அகல்கிலன் நாதன் உலகத்து
அணுகில் அகன்ற பெரும்பதி நந்தி
நணுகிய மின்னொளி சோதி வெளியைப்
பணியின் அமுதம் பருகலும் ஆமே


சீவன் சிவன் நினைவில் பொருந்தி இருக்கும் போது, சிவன் சீவனை விட்டு அகல்வது இல்லை. சீவன் சிவனை மறந்து உலக விஷயங்களில் ஆழ்ந்துவிட்டால், சிவன் சீவனிடமிருந்துச் சற்று விலகியே நிற்பான். சீவன் சிவனை விட்டு அகலாமல் ஒளிர்கின்ற பரவெளியை அறிந்து கொண்டு அதனை வழிபடுமானால் அது அமுதம் போன்ற சிவானந்தத்தைச் சுவைக்கலாம்.

#2812. செழுஞ் சுடர் சோதி

புறத்துளா காசம் புவனம் உலகம்
அகத்துளா காசம்எம் ஆதி அறிவு
சிவத்துளா காசம் செழுஞ்சுடர் சோதி
சகத்துளா காசம் தானம்ச மாதியே.


புறத்தில் காணப்படும் ஐந்து வானவெளிகள் என்பவை அனைத்து புவனங்களையும் உலகங்களையும் தாங்கி நிற்கும் ஒளியாகும். அகத்துள் காணப்படும் ஆகாசம் என்பது சீவனின் அறிவு. பேரறிவு விளங்குகின்ற வானம் என்பது சிவன் என்னும் செழுஞ்சுடர் சோதியாகும். சகத்திலுள்ள சீவனுக்கு ஆகாயம் என்பது தன் செயல் அற்றுச் சிவ ஒளியில் சீவ ஒளி கலப்பது ஆகும்.








 
10. ஞானோதயம்

“சிவன் வேறு! சீவன் வேறு!” என்ற எண்ணம் மாறிச் சீவனுக்குத்
“தானே சிவன்!” என்ற எண்ணம் வருவது ஞானோதயம் ஆகும்.

குருவிடம் தீட்சை பெற்ற மாணவனுக்கு ஞானோதயம் நன்கு விளங்கும்.

#2813. இரண்டு வகை ஆனந்தம் இவை

மனசந் தியில்கண்ட மனநன வாகும்
கனவுற ஆனந்தம் காண்டல் அதனை
வினவுற ஆனந்தம் மீதொழிவுஎன்ப

இனமுற்றான் நந்தி ஆனந்தம் இரண்டே.

மனம் ஐம்பொறிகளின் உதவியுடன் உலகில் உள்ள விஷயங்களுடன் பொருந்தி இன்பம் துய்ப்பது சாக்கிரம் என்கின்ற நனவு நிலையில் நிகழ்வது ஆகும். பொறிகளின் உதவியின்றிச் சீவன் கனவில் விஷயங்களுடன் பொருந்தும் போது, நனவில் ஏற்படும் ஆனந்தம் போன்றே கனவிலும் ஏற்படும். ஆனால் சீவனின் ஆன்மஅறிவு நீங்கிய நிலையில் உயரிய சிவானந்தம் ஏற்படும். இவ்வாறு சீவர்களுக்குச் சிவன் ஏற்படுத்தியுள்ள ஆனந்தம் இரண்டு வகைகள்: அவை விஷயானந்தம், சிவானந்தம்.

#2814. அரியன், பெரியன், சிவன்!

கரியட்ட கையன் கபாலம்கை யேந்தி
எரியும் இளம்பிறை சூடும்எம் மானை
அரியன் பெரியன் என்று ஆட்பட்டது அல்லால்
கரியன்கொல் சேயன்கொல் காண்கின்றி லேனே.


எம்பெருமான் ஒரு பெரிய, கரிய, கரியின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவன்; கையில் கபாலம் ஏந்தியவன்; ஒளிவீசும் இளம் பிறையை அணிந்தவன்; இத்தகைய மேன்மை வாய்ந்தவனை நான் “அரியவன்! பெரியவன்!” என்று அடிபணிவேனே அல்லாமல், “அவன் கரியனா? சேயனா?” என்று ஆராய்ந்து பார்ப்பது இல்லை.

#2815. நக்கார் கழல்வழி நாடுமின்!

மிக்கார் அமுதுண்ண நஞ்சுண்ட மேலவன்
தக்கார் உரைத்த தவநெறியே சென்று
புக்கால் அருளும் பொன்னுரை ஞானத்தை
நக்கார் சுழல்வழி நாடுமின் நீரே.


கொடிய நஞ்சினை தான் உட்கொண்டவன் சிவன். செருக்கு மிகுந்த வானவர்களுக்குச் சிறந்த அமுதினை வழங்கியவன் சிவன். தகுந்த அறிவு பெற்றுத் தவநெறியில் நின்று, தன்னை அடைந்தவர்களுக்குச் சிவன் பொன் போன்ற தூய ஞானத்தைத் தருபவன்; நாதவழியில் நின்று சாதனை செய்து சிவன் திருவடிகளை அடைவீர்களாகுக!

#2816. விளக்கில் விளக்கை விளக்க வல்லார்

விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
விளக்குடை யான்கழல் மேவலும் ஆமே.


ஆன்மா ஒளிமயமானது என்ற உண்மையை குரு முகமாகக் கற்றுத் தெளிய வேண்டும். அந்த நெறியில் நின்று ஆன்ம அறிவைப் பெருக்க வேண்டும். அந்த அறிவின் பேரொளியில் சிவ ஞானத்தைத் தூண்ட வேண்டும். சிவத்தின் அகண்ட ஒளியில் சீவ ஒளியைப் பொருத்த வேண்டும். இதைச் செய்ய வல்லவர்கள் சீவ ஒளியைத் தந்த சிவனடிகளில் பொருந்தி வாழ இயலும்.

 
#2817 to #2820

#2817. தத்துவன் அங்கே தலைப்படும் தானே.

தத்துவம் எங்குண்டு தத்துவன் அங்குண்டு
தத்துவம் எங்கில்லை தத்துவன் அங்கில்லை
தத்துவ ஞானத்தின் தன்மை அறிந்தபின்
தத்துவன் அங்கே தலைப்படுந் தானே.

அறிவு மயமான ஆன்மா, தத்துவங்களுடன் பொருந்தி இருக்கும் போது அந்தத் தத்துவங்கள் ஆன்மாவால் அறியப்படும் பொருட்களாக இருக்கும். எப்போது தத்துவங்கள் அறியப்படுவது இல்லையோ, அப்போது அவற்றை அறியும் ஆன்ம அறிவும் அங்கு இராது.
சீவன் தத்துவ ஞானம் அடைந்து, “தான் உடல் முதலிய அறியப்படும் பொருட்கள் அல்ல! அவற்றை அறிந்து கொள்பவன்!” என்ற உண்மையை உணர்ந்த கொண்ட உடனேயே அந்தச் சீவன் சிவன் ஆகும் தன்மையை அடைந்து விடும்.

#2818. பசும் பொன் திகழும்

விசும்பொன்று தாங்கிய மெய்ஞ்ஞானத் துள்ளே
அசும்பினின்று ஊறியது ஆர்அமுது ஆகும்
பசும்பொன் திகழும் படர்சடை மீதே
குசும்ப மலர்க்கந்தம் கூடிநின் றானே.


வான்மயமான ஒரு பொருள் அனைத்தையும் தாங்கி கொண்டு உள்ளது என்ற உண்மை ஞானத்தைச் சீவன் அடைந்த உடனேயே, சேற்று நிலமாகிய சுவாதிட்டானத்தில் உள்ள தாமரை மலரிலிருந்து, ஒரு சக்தி அந்தச் சீவனின் உடலில் பரவும். அது பொன் நிறம் கொன்டு சீவனின் சிரசில் பரவும். அங்கு பொருந்தி நன்கு ஒளிரும். செந்நிறம் கொண்ட சுவாதிட்டான மலரில் உள்ள சிவ சொரூபமே இங்கனம் விளங்கும்.

#2819. சோதி ஏத்தன்மையால் வேறானது?

முத்தின் வயிரத்தின் முந்நீர்ப் பவளத்தின்
கொத்தும் பசும்பொன்னின்தூவொளி மாணிக்கம்
ஒத்துஉயிர் அண்டத் துள்அமர் சோதியை
எத்தன்மை வேறென்று கூறுசெய் வீரே.


முத்து, வைரம், கடல் நீரில் விளையும் பவளக் கொத்து, பசும் பொன் வீசும் தூய ஒளி, மாணிக்கத்தின் சிவந்த ஒளி இவை அனைத்தும் கலந்து விளங்குபவன் எந்தை சிவன். அண்டத்திலும், பிண்டத்திலும் சோதியாக விளங்கும் சிவனை எந்தத் தன்மையால் சீவனிடம் இருந்து மாறுபட்டவன் என்று கூறுவீர்?

#2820. நான் என்ற நானும் நினைப்பு ஒழிந்தேன்

நான்என்றும் தான்என்றும் நாடினேன் நாடலும்
நான்என்றும் தான்என்றும் இரண்டில்லை என்பது
நான்என்ற ஞான முதல்வனே நல்கினான்
நான்என்று நானும் நினைப்பு ஒழிந்தேனே.


” நான் வேறு சிவன் வேறு!” என்று எண்ணி அவனை நான் நாடினேன். சிவன் “நான் வேறு தான் வேறு அல்ல!” என்று எனக்கு உணர்த்தித் “தானே நான்!” என்ற ஞானத்தை எனக்கு நல்கினான். அப்போது நான் “நான் ஒரு பொருள்!” என்ற எண்ணத்தையும் துறந்து விட்டுச் சிவமயமாக நின்றேன்.

 
#2821 to #2824

#2821. ஞானத்தின் நல்மோனம் நாதாந்த வேதமே.

ஞானத்தின் நன்னெறி நாதாந்த நன்னெறி
ஞானத்தின் நன்னெறி நானென்று அறிவோர்தல்
ஞானத்தின் நல்யோகம் நன்னிலை யேநிற்றல்
ஞானத்தின் நல்மோனம் நாதாந்த வேதமே.


சிவனை அடைவதற்கு உண்டாகிய நன்னெறி என்பது, சிவஞானத்தை அடைந்து, நாதத்தை வசப்படுத்தி, நாதாந்தத்தை அடைவதே ஆகும்.
ஞானத்தின் நன்னெறி என்பது ஆன்மா “தான் அறிவே உருவானவன்!” என்ற உண்மையை அறிந்து கொள்வது.
ஞானத்தில் நல்ல யோகம் என்பது சீவன் தன் சீவ போதத்தைத் துறந்துவிட்டுச் சிவனின் சிவ போதத்தில் திளைத்து நிற்பது ஆகும்.
ஞானத்தினால் பிரணவப் பொருளை அடைவது நாதாந்த வேதம் ஆகும்.

#2822. உய்ய வல்லார் அறிவுள் அறிவாமே.

உய்யவல் லார்கட்கு உயிர்சிவ ஞானமே
உய்யவல் லார்கட்கு உயிர்சிவ தெய்வமே
உய்யவல் லார்கட்கு ஒடுக்கம் பிரணவம்
உய்யவல் லார்அறி வுள்அறி வாமே.


உய்ய விரும்புபவர்களுக்கு உயிர் போல இன்றியமையாதது சிவ ஞானம். உய்ய விரும்புபவர்களுக்கு உயிர் போல இன்றியமையாதது சிவம் ஆகும். உய்ய விரும்புபவர்கள் ஒடுங்கும் இடம் பிரணவம் ஆகும். உய்ய விரும்புபவர்களின் அறிவில் அறிவாக இருப்பது சிவன்.

#2823. சிவன் கண்ணின் மணியொக்கும்

காணவல் லார்க்குஅவன் கண்ணின் மணியொக்கும்
காணவல் லார்க்குக் கடலின் அமுதொக்கும்
பேணவல் லார்க்கப் பிழைப்பிலன் பேர்நந்தி
ஆணவல் லார்க்கே அவன்துணை யாமே.


அருள் வழியில் நடந்து சிவனைக் காணும் வல்லமை படைத்தவர்களுக்கு, அவன் கண்ணின் மணியைப் போன்றவன். சிவனைக் காண வல்லவர்களுக்கு, அவன் கடலில் விளைந்த அமுதினை ஒத்தவன். தன்னை அடைந்தவர்களைத் தவறாமல் காப்பவன் நந்தி எம் பெருமான். தன் மீது மிகுந்த அன்பு கொண்டவர்களுக்கு அவன் என்றும் நல்ல துணையாக நின்று உதவுவான்.

#2824. தேவர் விரும்பும் விழுப்பொருள்

ஓம்என்றும் எழுத் துள்நின்ற ஓசைபோல்
மேல்நின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள்
சேய்நின்ற செஞ்சுடர் எம்பெரு மானடி
ஆய்கின்ற தேவர் அகம்படி யாமே.


“ஓம்” என்ற ஓர் எழுத்து மந்திரம் பிரணவம். இந்த எழுத்திலிருந்து அதன் நாதம் என்றுமே நீங்காமல் அதனுள் உறைந்து இருக்கும். அது போலவே வானவர்கள் விரும்பும் விழுப்பொருள் எது என்று கேட்டால் சீவர்கள் உள்ளத்தை விட்டு நீங்காமல் நிறைந்திருக்கும் சிவம் ஆகும். மனத்தையும், வாக்கையும் கடந்து நிற்கும் அந்த செழும்பொருளின் திருவடிகளை வணங்கி நிற்கின்ற தேவர்கள் நம் உள்ளத்திலும் விளங்குவர்.
 
11. சத்திய ஞானானந்தம்
முத் துரியங்களையும் கடந்த நிலையில் ஞானத்தினால் விளைகின்ற உண்மையான ஆனந்தம்.

#2825 to #2829

#2825. தான் அது ஆகும்!

எப்பாழும் பாழும் யாவுமாய் அன்றாகி
முப்பாழும் கீழுள முப்பாழும் முன்னியே
இப்பாழும் இன்னவாறு என்பதில்லா இன்பத்துத்
தற்பரஞா னானந்தர் தானது வாகுமே.


பிரகிருதி மாயை, தூவா மாயை, தூய மாயை என்னும் மூன்றும் சூனியத்தை அடைந்தபோது ஆன்மா தத்துவங்களில் இருந்து நீங்கிவிடும். நனவு, கனவு, உறக்கம் என்ற மூன்று நிலைகளையும் கடந்து துரியத்தை அடையும். துரிய நிலையும் சூனியம் ஆகும்போது, இன்னது என்று விவரிக்க முடியாத ஓர் ஆனந்த நிலையில் தற்பரன் ஆகிய சிவன் ஆன்மாவில் வந்து பொருந்துவான். அப்போது ஆன்மாவும் சிவம் ஆகிவிடும், ஆனந்தமாகப் பொலிவடையும்.

#2826. செம்பொருள் சீர் நந்தி தானே

தொம்பதம் தற்பதஞ் சொன்ன துரியம்போல்
நம்பிய மூன்றாம் துரியத்து நன்றாகும்
அம்புவி யுன்னா அதிசூக்கம் அப்பாலைச்
செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.


‘தொம்பதம்’ முதல் துரிய நிலையிலும், ‘தத் பதம்’ இரண்டாவது துரிய நிலையிலும், ‘அசி பதம்’ மூன்றாவது துரிய நிலையிலும் அமைந்துள்ளன. இவற்றைக் கடந்த எல்லையே இல்லாத நிலையில் இருப்பவன் செம்பொருள் ஆகிய சீர்மிகுந்த நந்தி ஆவான்.

#2827. சத்திய ஞான ஆனந்த நிலை

மன்னும் சத்தியாதி மணியொளி மாசோயை
அன்னதோடு ஒப்பம் இடல்ஒன்றாம் மாறது
இன்னிய உற்பலம் ஒண்சீர் நிறம்மணம்
பன்னிய சோபை பகர்ஆறும் ஆனதே.

சத்திய ஞான ஆனந்தம் ஈடு இணை அற்றது. அதை ஒளிரும் மணிகளுக்கு ஒப்பிடுவதும் பொருத்தமற்றது. நீலோத்பல மலரும், அதில் பொருந்தியுள்ள தூய்மை, அழகு, வர்ணம், நறுமணம், சோபை போன்றதே சத்திய ஞான ஆனந்த நிலை.

#2828. அனந்தம் ஆகும் சிவானந்தம்!

சத்தி சிவன்பர ஞானமும் சாற்றுங்கால்
உய்த்த அனந்தம் சிவமுயர் ஆனந்தம்
வைத்த சொருபத்த சத்தி வருகுரு
உய்த்த உடல்இவை உற்பலம் போலுமே.


சக்தி, சிவம், ஆனந்தம் இவற்றைப் பற்றி நாம் இவ்வாறு கூறலாம். அனைத்து உயிரினங்களின் தொகுத்த இன்ப நிலையே அனந்தம் இல்லாத சிவானந்தம் ஆகும். அழகிய வடிவை உடைய சக்தியை விட்டுப் பிரியாமல் இருப்பவனே சிவன். இது நீலோத்பல மலரை விட்டு அதன் ஒண்மை, சீர்மை, நிறம், மணம், சோபை, தூய்மை அகலாமல் இருப்பது போன்றதே.

#2829. சத்தியாதி தோன்ற நின்றானே.

உருஉற் பலநிறம் ஒண்மணம் சோபை
தரநிற்ப போல்உயிர் தற்பரன் தன்னில்
மருவச் சிவம்என்ற மாமுப் பதத்தின்
சொரூபத்தின் சத்தியாதி தோன்றநின் றானே.


அழகான நீலோத்பல மலரில் நிறம், ஒண்மை, மணம், சோபை முதலியவை கலந்து இருப்பதை போன்றே, சீவன் சிவனோடு கலந்து விடுவான்! அப்போது சிவன் என்ற சீரிய தத்துவத்தின் சொற்பொருளாக விளங்குகின்ற சிவன் சத்தியம், ஞானம், ஆனந்தம் என்ற மூன்றும் நன்றாக விகசிக்கும்படி நின்றான்.
 

Latest ads

Back
Top