கையேந்தி பவன்கள்-3
அந்தக்காலத்தில் என் கொள்ளுப்பாட்டி நிறைய ஸ்நாக்ஸ், அதாவது தின்பண்டங்கள, செய்வார்கள். அதிலே பலவற்றின் பேரே எனக்கு மறந்து போய்விட்டது. எந்தப் பண்டிகையாக இருந்தாலும் அந்தப்பண்டிகைக்கான பலகார சிலபஸ்படி செய்வார்கள்..
வினாயக சதுர்த்தி என்றால் சொல்லவே வேண்டாம் கொழுக்கட்டை,
கோகுலாஷ்டமி என்றால் உப்புச்சீடை, வெல்லச்சீடை, தவிர முறுக்கு, தேன்குழல் போன்ற இதர பல ஸ்நாக்ஸும் செய்வார்கள்.
கிருஷ்ணனுக்கு பால் சமாசாரம் பிடிக்கும் என்பதால் பால்கோவா செய்யும் பழக்கமும் உண்டு.
தீபாவளி வந்தால் அதன் ஸ்நாக்ஸ் சிலபஸ் அன்லிமிடெட். சிறுவர்கள் பட்டாசு, மத்தாப்பு விஷயத்தில் தீபாவளி வருவதற்கு பதினைந்து நாட்களுக்கு முன்பே பிஸியாகி விடுவார்கள்.. எனவே வீட்டில் பெண்கள் அவர்கள் தொந்திரவு இல்லாமல் வகை, வகையான பட்சணங்கள் செய்வார்கள். தீபாவளி விடியற்காலையில் எண்ணை ஸ்நானம் செய்து விட்டு ஒரு தட்டு நிறைய ஸ்வீட்ஸையும், காரத்தையும் மொக்கினால், வயத்துக்கோளாறு வராமல் என்ன செய்யும்? எனவே அதிலிருந்து தப்ப அதற்கு முறிவாக தீபாவளி லேகியம் ஒன்றையும் தருவார்கள். அதுவும் பட்சணங்கள் போலவே மணம், குணம், சுவை நிறைந்ததாக இருக்கும்.
பொங்கலின்போது சக்கரைப் பொங்கலும், பல்லிருப்பவர்களுக்குக் கரும்பும். அவ்வளவுதான். வேறு தின்பண்டங்கள் இல்லை.
திருவாதிரைக்குக்களி.
காரடையான் *நோம்புக்கு உப்பு அடை, தித்திப்பு அடை .
இப்படி பண்டிகைக்கு ஏற்றாற்போல் தின்பண்டங்கள் கிடைக்கும். அவை பண்டிகை முடிந்த பின்பும் ஒரு பத்துப் பதினைந்து நாட்களுக்கு வரும்.* அந்த பண்டிகை சீசன் முடிந்த பிறகு இம்மாதிரி தின்பண்டங்களை சாப்பிட அடுத்த சீசன் வரையிலும் காத்திருக்க வேண்டும்.
ஆனால் இன்றோ அவ்வாறு இல்லை . எல்லா நாட்களிலும், எல்லா திக், மற்றும் தின் பண்டங்களும் வருடம் பூராவும் கிராண்ட ஸ்வீட்ஸ், அடையார் ஆனந்த பவன் போன்ற பெரிய கடைகளிலும், வீதிக்கு வீதி பிள்ளையார் கோவிலுக்குப்போட்டியாக வந்துவிட்ட ஸ்னாக்ஸ் கடைகளிலும் எந்நேரமும் கிடைக்கிற படியால், விசேஷ நாட்களுக்கு மவுசு போய்விட்டது. அதனாலே பண்டிகைகளினால் ஏற்பட்ட எதிர்பார்ப்பு குறைந்து இன்று சிறுவர்களும், சிறுமியர்களும், இளைஞர்களும், இளைஞிகளும் பண்டிகைகளை முன்போல் அவ்வளவு ஆர்வத்துடன் கொண்டாடுவதில்லை.
எல்லாவிதமான பட்சணங்களும் கடையில் கிடைக்கும் இந்தக்காலத்திலும் என்னைப்போல ஒரு சிலர் ஒரு ஏக்கத்தோடும், ஏமாற்றத்தோடும்தான் இருக்கிறோம். ஒரு நாள் மோர்களி சாப்பிடவேண்டும் என்ற ஒரு தீராத அற்ப ஆசையின், விளைவாக நான் இந்த சென்னைப் பட்டிணத்தில் அலையாத இடமில்லை. சுற்றாத தெரு இல்லை. பல பேருக்கு அது என்ன வென்றே தெரியாது. என்ன காரணத்தினாலோ எனக்கு மோர்களி பிடித்துப் போய்விட்டது. மாதங்களில் மார்கழி என்பது போல் டிபன்களிலே மோர்களி.
ஒரு நாள் நான் தற்செயலாய் நங்கநல்லூரிலுள்ள ஒரு சிறு ஹோட்டலுக்குப்போய் பாகற்காய்தோசை ஆர்டர் பண்ணினேன். நான் பாகற்காய் தோசை என்று ஒன்றை அது வரையில் கற்பனையில் கூட நினைத்துப் பார்த்தில்லை. இதற்கு முன் டி.டி.கே ரோடில் பல வருடங்களுக்கு முன்பிருந்த ஒரு நடுத்தர தோசா என்ற ஹோட்டலில் 64 வகை தோசைகள் போடுகிறார்கள் என்று கண்டு பிடித்தேன். சாதா தோசை, மசால்தோசை, ரவா தோசை போன்ற ஐடெங்களெல்லாம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் கடுகு தோசை, கொத்தமல்லி தோசை, காரட் தோசை, வெஜிடபிள் தோசை, எள்ளு தோசை, கொள்ளு தோசை என்று தோசையின் மறு பக்கத்தில் ஏதாவது காய்கறியையோ, தானியத்தையோ பதமாக்கிப் போட்டு அதற்கு அந்தப்பெயர்சூட்டி விட்டார்கள். அங்கு கூட நான் இந்த பாகக்காய் தோசையைப் பார்த்ததில்லை. பாகற்காய்கறியை தோசை மீது ஒரு புரட்டுப்புரட்டி மசால்தோசை பாணியில் செர்வ் செய்வதுதான் பாகற்காய்தோசை. எனவே தோசையில் ஏதாவது ஒரு காயையோ, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட காய்கறிகளையோ வேகவைத்து அத்துடன் தேவையான உப்பு, காரம் போன்று சேர்க்க வேண்டியவைகளை சேர்த்து தோசைக்குள் சுருட்டியோ பரப்பியோ வைத்தால் உங்களுக்கு எந்தப் பெயரில் தோசை வேண்டுமோ அதை செய்து கொள்ளலாம் என்ற ரகசியத்தை நான் தெரிந்து கொண்டேன். நம் வீட்டில்கூட இம்மாதிரி செய்து, நம்வீட்டுக்கு வரும் கெஸ்டுகளை பிரமிக்க வைக்கலாம். “உங்களைச்சொல்லிக் குத்தமில்லை. உங்க நாக்கு வர வர நீளம். அதை கொஞ்சம் அடக்கி வெய்யுங்க” ன்னு என் மனைவி சொல்லிட்டா என்ன பண்றதுன்னு பயந்து நான் சொல்றதில்லை.
நான் அந்தப்பாகற்காய்தோசையை சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்த டேபிளில் அமர்ந்திருந்த ஒருவர் மோர்களி கேட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அடடா, ஏமாந்து விட்டோமே என்று மோர்களிக்கு வயிற்றில் இடம் இல்லாததால் அதை சாப்பிடமுடியாமல் அதை சாப்பிட்டுக்கொண்டிருப்பவரை ஒரு ஏக்கத்துடன் பார்த்தபடி ஹோட்டலிலிருந்து வெளியேறினேன்.
நான் மறுநாள் காலையிலேயே நங்கநல்லூர் விட்டுக் கிளம்பிவிட்டபடியால் நான் அதற்குப்பிறகு இன்று வரையில் வேறே எங்கேயும் மோர்க்களியை கண்டேனில்லை. அது ஏன் எந்த கையேந்தி பவன்களிலும் போடுவதில்லை. காரணம் தெரியாது. ஒருவேளை மோர்களி ஃபேன்கள் என்னைத்தவிர வேறு யாரும் கிடையாதோ என்னவோ? ஆராய்ச்சிக்கு இது ஒரு நல்ல சப்ஜெக்ட்.
இதே போல சில ஏக்கங்களும், சந்தேகங்களும் எனக்கு அடிக்கடி வருவதுண்டு.
சில எக்ஸிபிஷன்களில் பொறித்த அப்பளாம் டெல்லி அப்பளாம் என்ற பெயரில் விற்பதுண்டு. அதன் சைஸ் கிட்டத்தட்ட ஒரு அடி விட்டம், அதாவது , டயாமீட்டர். அந்த மாதிரி அப்பளத்திற்கு பெரிய டிமாண்டு இருப்பதை நான் செய்த அப்பள சர்வேயில் கண்டிருக்கிறேன். எனக்கு இப்போது வரும் டௌட் என்னவென்றால் ஏன் இது எக்ஸிபிஷன் தவிர கையேந்தி பவன்களில் பாபுலர் ஆகவில்லை என்பதுதான்.. இதைப்பற்றி மூன்று நாள் ராத்திரி நித்திரை இல்லாமல் ஆராய்ந்தும் எனக்குத் தெளிவான காரணம் தெரியவில்லை.
எல்லா ஹோட்டலிலும் சாப்பாட்டோடு அப்பளமோ, பப்படமோ போடுகிறார்கள் என்பது ஒரு புறம் இருக்க, ஸ்டார் ஹோட்டல்களில் மசாலா பப்பட் என்ற பெயரில் பப்படம் மீது பல வெங்காய, காரட், பீட்ரூட் இன்னும் சில கண்ணினால் கணிக்கமுடியாத அளவுக்கு பொடியாக நறுக்கின காய்கறித்துகள்களை வதக்கிப்போட்டு மொறு மொறு என்று இருக்கவேண்டிய பப்படை மெதுக் மெதுக் என்று செய்து ஒரு ப்ளேட் பப்பட் ( 2) ரூ 50க்கு சப்ளை செய்கிறார்கள்.
கையேந்திபவன்களில் மசாலா இல்லாத பொறித்த ப்ளெயின் பப்படமோ, அப்பளமோ ஏன் விற்கக்கூடாது? . என்னைப்பொறுத்தவரையிலும் பொறித்த அப்பளத்திற்கோ பப்பட்டுக்கோ ரசிகர்கள் ஏராளம் இருப்பார்கள் என்பதால் கையேந்தி பவன்கள் கை அல்லது பை நிறைய சம்பாதிக்க முடியும். இது கஷ்டமான வேலை இல்லை. இதற்கு கொஞ்சம் ஆர்வம் தேவை. அவ்வளவுதான். இன்னும் சொல்லப்போனால் மைக்ரோவேவில் சுட்ட அப்பளத்துடன் கெட்டி பசு நெய் சூப்பர் காம்பினேஷன். நான் இதன் அடிமை. அதற்கு நிரம்ப ரசிகர்கள் இருப்பார்கள் என்பதற்கு நான் காரண்டி.
இதேபோல் வடாம்களில் பல வகை இருக்கின்றன. அரிசி வடாம், ஜவ்வரிசி வடாம், நீள வடாம், இடியாப்ப வடாம், வெங்காய வடாம், இந்த மாதிரி. அவற்றைப்பொறித்து ஒரு 10 கிராம் பாக்கெட் அளவில் கையேந்தி பவன் கணக்குப்படி விற்றால் கொஞ்ச மாதங்களிலேயே கையேந்தி பவன்கள் ஓகோ என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்துவிடும். ஒருவேளை ஜன்னல் வழியாக அவற்றைக் கொடுக்கும்போது அவை பொடியாகிவிடும் என்ற பயமோ? பீச் போன்ற இடங்களில் பஜ்ஜிபோல் இவற்றையும் அவ்வப்போது போட்டு சுடச்சுட விற்கலாம். எண்ணை சமாசாரமாச்சே என்று கவலைப்படுபவர்களா நீங்கள்? பஜ்ஜி, போண்டா போன்ற எண்ணை சமாசாரங்களை கையேந்தி பவனில் சாப்பிடுபவர் இப்படிச் சொல்லலாமா?
வடாமைவிட அந்த வடாம் மாவோட டேஸ்ட் இருக்கே அதற்கு ஈடு இணை கிடையாது. எங்கள் வீட்டிலே அந்தக்காலத்தில் என் அம்மாவும், பாட்டியும் வடாம் பிழிவதில் எக்ஸ்பர்ட்ஸ். பிழிந்த வடாத்தை நன்றாக வெய்யிலில்( அந்தக்காலத்துலேயே நாம் சோலார் எனர்ஜியை எப்படி எல்லாம் பயன் படுத்தி இருக்கிறோம்) காயப்போடுவது வழக்கம். அந்த வடாத்தை காக்கை ,குருவி எங்கள் ஜாதி என்று பாடிய படியே அவை வடாத்தில் தங்கள் மூக்கை, சரி அலகை என்று வைத்துக்கொள்ளுங்களேன், வைக்காமல் காவல் இருக்க வேண்டும். அந்த வேலைக்கு என் அம்மா என்னை மாத்திரம் கூப்பிடமாட்டார்,. ஏனென்றால் என் அம்மாவுக்குத்தெரியும், காக்காய், குருவி வைக்காத மூக்கிற்குப்பதிலாக, அந்த வடாம் ஈரம் காய்வதற்கு முன்பே அதை நான் பதம் பார்த்து விடுவேன் என்று. வானிலை ஆராய்ச்சியாளர்கள் எங்கள் அம்மா வடாம் வைக்கும் நேரத்தை அறிந்துதான் அன்று மழை பெய்யுமா, பெய்யாதா என்று அறிவிப்பார்கள். மழை வரவழைக்க சிலர் கழுத்தளவு நீரில் நின்று கொண்டு அமிர்த வர்ஷினி ராகத்தில் பாட்டுப்பாடுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதற்கு அவசியமே இல்லை. எங்கள் வீட்டில் வத்தல் செய்தால் அதைக்காயவைக்கும் நேரத்தில் நல்ல மழை பெய்யும் என்ற அறிக்கை கொடுத்துவிடலாம். இது சினிமாவின் மெயின் ஸ்டோரியில் ஒரு கிளைக்கதை மாதிரி. எனக்குத்தெரியும் அப்படி வடாம் மாவை யாரும் விற்கமாட்டார்கள் என்று . ஆனால் சபலம் யாரை விட்டது?
இன்னொரு விஷயம். வீட்டுலே இதை எல்லாம் கேட்டா, இப்ப எண்ணை விக்கிற விலையிலே இதெல்லாம் நமக்குக்கட்டுபடியாகாது என்றோ, எண்ணை பதார்த்தம் உடம்புக்கு ஆகாது என்றோ ‘வீடோ’ செய்துவிடுவார்கள் அப்போது ஃபேமிலி குடும்ப ஆண்களுக்கும் கையேந்தி பவன் கைகொடுக்கும். எனக்குத்தெரிஞ்சி கையேந்தி பவன்களுக்கு வர பல ஆண்களும் வீட்டுக்குத்தெரியாம வரவங்கதான் என்பதை அடித்துச்சொல்லமுடியும்
இதை எல்லாம் வீட்டிலேயே சாப்பிடலாமே என்று விஷயம் தெரியாதவர்கள்தான் கேட்பார்கள். இப்ப இப்படி ஏதாவது வெளியிலே கிடைக்காதா என்று பல வீட்டுப் பெண்களே ஏங்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது போலும். ஆனா பெண்கள் யாரும் கையேந்தி பவன்களுக்கு வருவதில்லை. வீட்டுக்காரரையோ, வீட்டுப் பையனோ அனுப்பி அந்த வீதி ஓரத்துலே நின்று கொண்டு வேடிக்கை பார்ப்பார்கள்.
அது தவிர பல நடுத்தர வாலிபர்களுக்கு இந்த கையேந்தி பவன்கள்தான் Bachelors paradise. அவங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
இவை எல்லாம் எண்ணை பண்டங்களாக இருப்பதால் பல வயிறு கேசுகள் இதை அவாய்ட் பண்ணலாம். ஆனால் ருசிக்கு அடிமையானவர்கள் தான் மெஜாரிட்டி. அவர்கள் அதைப்பற்றிக்கவலைப்படமாட்டார்கள்.
இதேபோல் படுசுவையான ஒரு ஐடம் குணுக்கு என்று சொல்லப்படும் அடைமாவு பக்கவடா. இதை சரியான பதத்தில் செஞ்சி சாப்பிட்டா அதோடே டேஸ்டு நாக்கை சுழட்டி, சுழட்டி அடிக்கும். அப்புறம் அந்த குணுக்குகளை அது தீருற வரையிலும் சாப்பிடுவதை நிறுத்தவே முடியாது. நிறுத்த ஒரே வழி வயிறு கொடுக்கும் சிக்னல்தால். அதையும் அலட்சியம் செய்தால் ஏதாவது சித்த, ஆயுர்வேத அல்லது அல்லோபதி டாக்டர்களிடம் போய் மருந்தோடு செமத்தையாக திட்டும் வாங்கிக்கொள்ள வேண்டியதுதான். அமிர்தமுமே ஆனாலும் அளவுக்கு மிஞ்சினா விஷம்னு சொல்லும்போது அப்புறம் இதுக்கு மாத்திரம் விதிவிலக்காஎன்ன?
எந்த கையேந்திபவன்கள்லேயும் எனக்குத் தெரிஞ்ச வரையில் வெறும் வறுத்த கடலை, பொரி, பட்டாணி,பொட்டுக்கடலை மிக்சர் கிடைக்கிறது இல்லே. இது உடம்புக்கு ரொம்பவும் ஹெல்தி மாத்திரம் இல்லை. ரொம்பவும் டேஸ்டியாவும் இருக்கும். இன்னும் நிறைய ஐடியா வெச்சிருக்கேன். என்னை மாதிரி நாக்குக்கு அடிமையானவர்களுக்கு ஒரு நல்ல எதிர் காலம் காத்துக்கிட்டு இருக்கு. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று சொல்வார்கள். டேஸ்டான உண்டி கொடுத்தோர் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்தோரே.
என்வீட்டிலே என்மனைவி உயிரோடு இருந்தவரையிலும் இட்லி தோசைன்னு ஒண்ணு பண்ணுவா. அது ஒரு பக்கம் இட்லியாகவும், மறுபக்கம் தோசையாகவும் இருக்கும். இதை நான் கையேந்தி பவன் உட்பட எந்த ஹோட்டல்லேயும் பாத்ததில்லை. அப்படி ஒரு சமாசாரத்தை பலபேர் கேள்விப்பட்டதுகூட கிடையாதுன்னு நான் கேள்விப்பட்டேன். அது இட்லி பிடிக்காதவங்களை இட்லி சாப்பிடவும், தோசை பிடிக்காதவங்களை ( அப்படி யாராவது இருப்பாங்களா தெரியவில்லை) தோசை சாப்பிடவும் வைக்கும்
பாரம்பரிய பண்டங்கள் பலவற்றை மறந்ததோடு. உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய தான்யங்களைப் பயன்படுத்தி தின்பண்டங்கள் செய்யலாம். ராகி களி, ராகி இட்லி, ராகி தோசை, கம்பங்கூழ், கம்பங்களி , கேழ்வரகு தோசைன்னு இப்ப பல டயடீஷியன்ஸ் தான்யங்களுடைய மகத்துவங்களை பக்கம்பக்கமக எழுத, அவை எல்லாம் ரொம்ப பாபுலர் ஆகிக்கொண்டு வருகின்றன. ஆனால் அதில் சோகமான ஒரு விஷயம் என்னவென்றால் இந்தத் தானிய தின்பண்டங்கள்தான் ஒரு காலத்தில் நம் ஊரில் ஏழைகளின் உணவாக இருந்து வந்தது. ஆனால் தற்போது அது மேல்தட்டு மக்களின் உணவாக மாறி ஏழைகளுக்கு எட்டாக் கனியாகவோ, களியாகவோ ஆகிவிட்டது.
இப்ப எல்லாம் கையேந்தி பவனுக்குப்போட்டியா சங்கீத சீசன்லே சபா கச்சேரி நடக்கற மண்டபத்துக்கு ஓட்டலைப்போல சாப்பாட்டுக்கடைகள் வந்து விட்டன. கச்சேரி செய்பவர்கள் இங்கிருந்து வரும் கம கம வாசனையை தங்கள் பாட்டில் கமகம் ஏற்றி எஞ்சாய் பண்ணிப் பாட இது ஒரு நல்ல சான்ஸ். இங்கே சாப்பிடுவதற்கென்றே ஒரு ரசிகர் கூட்டம் இருக்கு. சங்கீதம் இவர்களுக்கு இரண்டாம் பக்ஷம்.. ஆனா இங்கே ரேட்டெல்லாம் கையேந்தி பவன் போல அந்த அளவுக்கு சீப்பா இருக்காது. பல பிரமுகர்கள் வரதுனாலே அதுக்கேத்தபடி இருக்கும். இங்கே இப்ப பல தான்யங்களை உபயோகிச்சி புது மாதிரியான தின்பண்டங்கள் எல்லாம் கிடைக்கிறதா கேள்வி.
குழிப்பணியாரம் என்பது நம் வீடுகளில் காலம் காலமாக இருந்து வந்திருக்கிறது,. இன்றும் அதற்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். எனக்குத் தெரிந்த வரையில் எந்தக் கையேந்தி பவன்லேயும் குழிப்பணியாரம் கிடைப்பதில்லை. கிரான்ட் ஸ்வீட்ஸ், அடையாரில் குழிப்பணியாரத்திக்கென்றே ஒரு தனி செக்ஷன் இருக்கு. அதற்கு நீங்கள் க்யூவில் வெயிட் பண்ணிக் காத்திருந்துதான் வாங்க வேண்டி நேரும்.
இந்தத்தொழிலில் டைவர்சிபிகேஷனுக்கு நிறைய சான்ஸ் உண்டு. ஒரு ஆட்டோ ஓட்டுனர் 1000 விதமான இட்லிகளைத்தயாரித்து ( 64 வகை தோசைகளஐப்போல பீட்ஸா இட்லி வகைகள், வெஜிடபிள் இட்லி வகைகள் என்று அசத்தி) உட்கார்ந்தபடியே நல்ல வருமானம் வரவே அதை பிரதானத் தொழிலாகக் கொண்டு ஆட்டோவை கஸ்டமர்ஸுக்கு செர்விஸ் செய்யப்பயன்படுத்துகிறார். இன்னும் ஒரு சில ஆண்டுகளில் அவர் ஆட்டோ பவன் என்ற ஒரு பெரிய ஸ்டார் ஓட்டல் சொந்தக்காரர் ஆகிவிட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
நீங்கள் பேப்பரில படித்திருப்பஈர்கள் சுயவேலை என்று சொல்லும்போது வட நாட்டில் பக்கவடா விற்று ஒருவர் லட்சாதிபதியாக ஆகி இருக்கிறார் என்று.
அதை சில எதிர் கட்சி அரசியல் தலைவர்கள் கிண்டலடித்திருக்கிறார்கள். இதெல்லாம் வேலையில் சேர்த்தியா என்று. பாவம் அவர்களுக்குத்தெரிந்தது அவ்வளவுதான் இப்படி பக்கவடாவோ, பஜ்ஜியோ போட்டு சுய உழைப்பில் பிழைப்பவர்களை வக்கத்தவர்கள்தான் கேலிசெய்வார்கள். இதுவம் ஒரு நல்ல தொழில்தான். இந்தத் தொழிலுக்கு என்றும் அழிவு கிடையாது. மனிதர்கள் இருக்கும் வரையிலும், அவர்களுக்கு வயிறு என்று ஒன்று இருக்கும் வரையிலும், நாக்கு என்று ஒன்று இருக்கும் வரையிலும்,
இந்த சாப்பாடு சம்பந்தப்பட்ட தொழில்கள் எல்லாம் சாகா வரம் பெற்றவை. சிரஞ்ஜீவத்துவம் வாய்ந்தவை
அப்படி இருப்பதால்தானே சில MBAபடித்தவர்கள்கூட தாங்கள் செய்து வந்த பெரிய தொழிலை விட்டு விட்டு, ஹோட்டல் நடத்த ஆரம்பித்து இருக்கிறார்கள் என்பது தெரியுமா? இந்தக்காலத்தில் B.E படித்து முடித்து வேலை இல்லாமல் திண்டாடுபவர்கள் ஏராளம். பலரும் 5000 அல்லது 6000 ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு மளிகைக்கடையில் குமாஸ்தாவாக வேலை செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். அதே போல M.Sc, PhD படித்து முடித்தவர்கள் எல்லாம் தோட்டி வேலைக்கு அப்ளை செய்கிறார்கள் என்றும் பத்திரிகையில் பார்த்தேன். இவர்களெல்லாம் இவர்கள் படிப்புக்கு செய்த அரைக்கால் செலவில் நான் மேலே குறிப்பிட்ட தின்பண்டங்களை செய்யக் கற்றுக்கொண்டு இருப்பார்களே ஆயின் குறைந்த பட்ச முதலில் ஒரு கையேந்தி பவனை ஆரம்பித்தால் யாருக்கும் அடிமைப் பட அவசியம் இல்லாமல் சுயசம்பாத்தியத்திலேயே ஒரு டீசன்ட்தொகையை மாசாமாசம் சம்பாதிக்க முடியும். இதில் எந்தவிதமான அவமானமும் இல்லை. நானே எனக்கு யஜமான் என்ற தோரணையில் தலை நிமிர்ந்து வாழலாம். படித்தவர்கள் என்றவகையில் இவர்கள் செய்யும் தொழிலில் புதுமையைப்புகுத்தலாம். நன்றாக தொழில் செய்தால் நன்கு வளர்ந்து இவர்கள் மேலும் பத்து இருபது பேருக்கு வேலை தரலாம்.
.
இந்தக் கையேந்தி பவன்களின் அருமையை உணர நீங்கள் பேசலர்களாக இருக்கணும், இல்லை வொய்ஃபாலே அலட்சியம் செய்யப்பட்டவர்களா இருக்கணும் அல்லது நல்ல டேஸ்டுக்காக அலையும் நாக்கு வீங்கி நாராயணனா இருக்கணும்
காலத்தினால் மறக்கப்பட்ட சில தின்பண்டங்களை சாப்பிட வேண்டுமா? மைலாப்பூர் திருவிழா அல்லது தெருவிழாவின்போது எழுப்பப்படும் ஸ்டால்களில் கிடைக்கும். நான் சென்னையில் இருந்தவரை எதையும் தவற விட்டதில்லை. இப்போது அந்த இனிய நாட்களை நினைத்து நாக்கைச் சப்புக்கொட்டியபடி எண்ண அலையில் மிதப்பதில் சந்தோஷம் காண்கிறேன். இன்றைய கையேந்தி பவன்கள் நாளைய உலகளாவிய மகேந்திர பவன்கள் என்பதை உணரவேண்டும்.
இப்ப கையேந்தி பவன்களுக்குப்போட்டியாக டிவிக்களில் பல சேனல்களிலும், சமையல் குறிப்பு, நாள் தவறாமலோ, வாரந்தவறாமலோ வந்து கொண்டு இருக்கிறது. அதனாலே பல பெண்கள் அடுப்படியில் செய்யும் தவறுகள் எல்லாம் புதுப்பெயரில் புது தின்பண்டமாக தினமும் வெளி வந்து கொண்டு இருக்கின்றன. இதற்கு டிவி ரசிகர்கள் பலியாவதற்குமுன்பு அந்த விளக்கம் சொல்லும் பெண்களின் கணவன்மார்கள் பலிகடாவாக (கினி பிக்) ஆகிறார்கள். அவர்களுக்கு நாம்நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம். .