Temple where Hanuman is seen crushing Sani Bhagawan under his foot

சனி பகவானை தன் காலால் நசுக்கும் அனுமன் கோவில் பற்றி தெரியுமா?

சீதையை ராவணன் கடத்தி சென்றதால் ஸ்ரீ ராமன், ராவணன் மீது போர் தொடுத்த கதை நாம் அறிந்ததே. அந்த போரின் ஒரு கட்டத்தில் லட்சுமணன் மயங்கி கீழே விழுந்துவிட அவர் உயிரை காப்பாற்ற சஞ்சீவி மூலிகை தேவைப்படுகிறது. அப்போது ஜாம்பவானின் ஆலோசனை படி அனுமன் சஞ்சீவி மூலிகையை கொண்டுவர புறப்படுகிறார்.

இதை தடுக்கும் முயற்சியில் ராவணன் தரப்பினர் ஈடுபடுகின்றனர். நவகிரகங்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்த இராவணன், சுக்ராச்சாரியாரின் ஆலோசனை படி சனியின் துணை கொண்டு அனுமனை தடுக்கும் முயற்சியில் இறங்குகிறார்.

சஞ்சீவி மூலிகையை பறிக்க சென்ற அனுமனோ அதை கண்டறிய சிரமப்படுகிறார் ஆகையால் சஞ்சீவி மலையையே பெயர்த்து எடுத்துக்கொண்டு விரைந்து வருகிறார். வரும் வழியில் சனி பகவான் அவரை மடக்குகிறார். அனுமன் எவ்வளவு சொல்லியும் சனிபகவான் கேட்பதாக தெரியவில்லை. உடனே அனுமன் தன்னுடைய முழு பலம் கொண்டு சனியை தன் காலால் நசுக்குகிறார்.

வலி தாங்க முடியாத சனி பகவான் தன்னை விட்டு விடும்படி கெஞ்சுகிறார். ஆனால் அனுமன் அவரை விடுவதாக இல்லை. உடனே ராம நாமத்தை ஜபிக்க துவங்குகிறார் சனி பகவான். பிறகு அனுமன் அவரை விடுவிக்கிறார். அப்போது ராம நாமத்தை கூறி யாரெல்லாம் என்னை வழிபடுகிறார்களோ அவர்களையும் நீ தொந்தரவு செய்ய கூடாது என்ற வாக்குறுதியையும் சனி பகவானிடம் இருந்து அனுமன் பெறுகிறார். ராமாயணம் குறித்து செவிவழியாக பரவி வரும் ஒரு கதை இது.
இந்த கதையில் வரும் சம்பவதை மெய்ப்பிக்கும் வகையில், வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள பெரிய ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் தன்னுடைய காலால் சனி பகவானை அழுத்துவது போன்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். இந்த ஆலயத்திற்கு வந்து ஆஞ்சநேயரை வழிபட்டால் சனி தோஷம் நீங்கும் என்பது சுற்றுவட்டார மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

1638328818541.png
 
Back
Top