• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Sri Andal Thiruppavai in Tamil

திருப்பாவை (1).....!!!

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்* நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்!* சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!*
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்**
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்*
நாராயணனே நமக்கே பறை தருவான்*
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

ஸ்ரீஆண்டாள் திருப்பாவை(1)

செல்வம் நிறைந்துள்ள
திருவாய்ப்பாடியில்
கைங்கர்ய ஸம்பத்தையும் இளம் பருவத்தையும் உடைய பெண்காள் !
விலக்ஷணமான பூஷணங்களை அணிந்துள்ளவர்களே !
(மாதங்களிற் சிறந்த) மார்கழி மாஸமும் பூர்ண சந்திரோதயத்தையுடைய (சுக்கில பக்ஷத்திய) நல்லநாளும் (நமக்கு வாய்த்து நின்றன.)
கூர்மை பொருந்திய வேலாயுதத்தை உடையவனும்
(கண்ணபிரானுக்குத் தீங்கு செய்யவரும் நீச ஜந்துக்கள் பக்கலிலும் சீறிக் கொடுமைத் தொழிலைப் புரிபவனுமான
நந்தகோபனுக்கு பிள்ளையாய்ப் பிறந்தவனும், அழகு நிறைந்த கண்களை உடையளான
யசோதைப்பிராட்டிக்கு
சிங்கக்குட்டி போலிருப்பவனும்,
காளமேகத்தோடொத்த திருமேனியையும்
செந்தாமரைப் பூப்போன்ற திருக்கண்களையும்
ஸூர்யனையும் சந்திரனையும் போன்ற திருமுகத்தை உடையனுமான
ஸ்ரீமந் நாராயணன் தானே (‘அவனால் பேறு’ என்றிருக்கிற) நமக்கே பறையை
கொடுக்குமவனாயிற் நின்றான், ஆதலால், இவ்வுலகத்தவர்கள்
கொண்டாடும்படி
(இந்நோன்பிலே)ஊன்றி
நீராட வர விருப்பமுடையீர்களே !
வாருங்கள் ஏல் ஓர் எம்பாவாய் !

ஆயர் சிறுமிகள் “நாம் நோன்பு நோற்பதற்கீடாக நமக்கு இங்ஙனே விலக்ஷணமானதொரு காலம் நேர்பட்டபடி என் !” என்று காலத்தைக் கொண்டாடி மார்கழி நீராட்டத்தில் விருப்பமுடைய பெண்களை விளிக்குமாறு கூறுவது, இப்பாட்டு.

பகவத் கீதையில் கண்ணபிரான் “மாஸங்கள் அனைத்தினுள்ளும் மார்கழி மாதமாகிறேன் நான்” என்று இம்மாதத்திற்குள்ள வீறுபாடு தோற்ற அருளிச் செய்தமையால் அம்மாதம் வாய்க்கப் பெற்றவர்கள் அதனைக் கொண்டாடாதிருக்க வல்லரல்லரே. இராமபிரானை முடிசூட்டப் பாரித்து முயன்றபோழ்து வஸந்தருதுவில் முதன்மையான மாதம் தன்னடையே நேர்பட, அதனை அங்குக் கொண்டாடினாற்போல், இவர்களும் நோன்பு நோற்கமுயலத் தன்னடையே வாய்த்த மார்கழி மாதத்தை நினைந்து நெஞ்சு கனிகின்றனர்.

நற்காரியங்கள் செய்ய விரும்பினார்க்குச் சாஸ்திரங்களில் விதிக்கபட்ட சுக்லபக்ஷமும் இவர்கட்கு நினைவின்றி வாய்த்தபடியால், அதனையும் கொண்டாடுகின்றனர் மதி நிறைந்த நன்னாள் என்று. ஒருவரை ஒருவர் முகங்கண்டு அநுபவித்தற்கும், எல்லாருங் கூடிச் சென்று கண்ணபிரானை உணர்த்துவதற்கும் பாங்காக நிலா நேர்பட்டமையால் மகிழ்ச்சி மிக்கது. இவர்கள் கண்ணபிரானோடு ஸம்ச்லேஷிப்பதற்கு ஊரார் விரோதிகளயிருக்கும் காலத்தில் “நந்தகோபாலன் கடைத்தலைக்கே நள்ளிருட்கண் என்னை உய்த்திடுமின்” என்று நள்ளிருளை வேண்டுவர்கள்; இப்போது அங்ஙனன்றி க்ருஷ்ண ஸம்ச்லேஷத்திற்கு ஊராரே இசைந்து நின்றமையால் இருளை வெறுத்து நிலவைக்கொண்டாடுகின்றனரென்க.

1608097060639.png
 
திருப்பாவை(21).....!!!

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிப்ப* மாற்றாதே பால் சொரியும் வள்ளற் பெரும் பசுக்கள்*
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்* ஊற்றம் உடையாய் பெரியாய்* உலகினில் -
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்* மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்*
ஆற்றாது வந்து உன் அடிபணியுமா போலே* போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து ஏலோர் எம்பாவாய்.

ஸ்ரீஆண்டாள் 🔹 திருப்பாவை(21)

இதற்கு முந்தைய ‘முப்பத்து மூவர்’ பாசுரத்தில், பகவானையும் பிராட்டியையும் சேர்த்தே பாடி எழுப்பினார்கள். இந்த பாசுரத்தில் பிராட்டியும் எழுந்திருந்து வந்து இவர்களோடு சேர்ந்து கொண்டு பகவானை எழுப்புவதாகச் சொல்வர். வேறு விதமாக இந்த பாசுரத்திலும் பகவானையும் பிராட்டியையும் சேர்த்தே பாடுவதாகவும் சொல்வர். எப்படியாயினும் இவர்கள் பகவான் க்ருஷ்ணனை கண் முன்னே கண்டு அனுபவித்து பாடுவது இந்த பாசுரத்தை உள்ளார்ந்து அனுசந்தித்தால் புரியும்.

ஏற்ற கலங்கள் – எத்தனை குடங்கள், பாத்திரங்கள் வெவ்வேறு அளவில் எடுத்து வைத்து பால் கறந்தாலும், எதிர்பொங்கி மீதளிப்ப என்று அவை எல்லாம் நிரம்பி வழிகின்ற அளவில், மாற்றாதே பால் சொரியும், ஏமாற்றாமல் பாலை சொரிகின்ற வள்ளல் பெரும் பசுக்கள், நிறைய உடையவரான நந்தகோபரின் மகனே! என்கிறாள். பகவான், பக்தியில் இவன் சிறியவன், இவன் புதியவன், இவன் பலகாலம் பக்தி செய்தவன் என்றெல்லாம் வித்தியாசம் பார்க்காமல் யார் கொண்டாலும் குறைவின்றி உள்ளத்தில் நிறைந்து விடுகிறான். அதோடு மட்டும் அல்ல, அவனையே நினைக்காதவர்களையும் அவன் ரக்ஷிக்கிறான். அதனால் இவ்வளவு என்று எண்ணிச் சொல்ல முடியாத வள்ளன்மை அவனுக்கு. அதற்கு பசுக்களை உதாரணமாக சொல்கிறாள். உன் வீட்டு பசுக்களுக்கே இந்த குணம் உண்டே. அதோடு இந்த பசுக்களுக்கெல்லாம் சொந்தக்காரரின் மகன், எங்களில் ஒருவனல்லவா நீ என்று அவனது விபவ அவதார மாயையில் மூழ்கி திளைத்து மகிழ்ந்து போகிறாள் ஆண்டாள். எங்களோடு உனக்கிருக்கும் சம்பந்தத்தை மறந்து போய்விட்டாயா! என்கிறாள்.

அடுத்த வரியிலேயே அந்த அவதார மாயையை மீறி அவன் அருளாலே இவர்களுக்கு ஸ்வரூப ஞானம் ஏற்படுகிறது. அடுத்து ஆச்சர்யப்பட்டு சொல்கிறார்கள், “ஊற்றம் உடையாய்!” – சிறிதளவும் அயராது, தயங்காது ஊற்றமாய் உலக வியாபாரத்தை கவனிக்கிறாய்! ஜீவன்களையும் படைத்து, அவற்றைக் காத்து, அவற்றுக்கு புலன்களையும் இன்பத்தையும் படைத்து என்று இதில் தான் உனக்கு எத்தனை உற்சாகம்? என்று ஆச்சரியப்படுகிறாள். அவனது இந்த ஊக்கத்தை பூர்வாசார்யர்கள் இப்படி சொல்கிறார்கள் ‘ஆஸ்ரித விஷயத்தில் பண்ணின ப்ரதிக்ஞையை மஹாராஜருள்ளிட்டாரும் விட வேணுமென்னிலும் விடாதே முடிய நின்று தலைக்கட்டுகை’ என்று விபீஷண சரணாகதியில் சுக்ரீவன் முதலானவர்கள் எதிர்த்தாலும் ரக்ஷித்தே தீருவேன் என்று ஊக்கக் குறைவில்லாமல் ரக்ஷணத்தை செய்தானே என்று ஆச்சரியப் படுகிறார்கள்.

பெரியாய்! – வேதத்தை நினைக்கிறாள் ஆண்டாள். வேதங்கள் அனந்தம் – எண்ணி அடங்கமுடியாதது. அவனும் அனந்தன். வேதம் அனாதி – ஆதி அந்தம் இன்றி எப்போது தோன்றியது என்று சொல்ல முடியாதது. – அவனும் அப்படித்தான். அப்படி அவனது சுவாசமாக இருக்கிற வேதத்துக்கும் பெரியவனாக இருப்பவனே! என்கிறாள். இதற்கு பூர்வாசார்யர்கள் பகவானின் பெரிய தன்மையும் அதற்கேற்ற அவன் சுலபத்தன்மையையும் சேர்த்து பலவாறாக சொல்வர், “அந்த ப்ரதிக்ஞா சம்ரக்ஷணத்தளவின்றியேயிருக்கும் பலமென்றுமாம்!”, “ஆஸ்ரித விஷயத்தில் எல்லாஞ் செய்தாலும் ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்றிருக்கை என்றுமாம்!”, “தன் பேறாயிருக்கை என்றுமாம்!”, “தன் பெருமைக்கு ஈடாக ரக்ஷிக்குமவன் என்றுமாம்” என்று பலவாறாக அவன் பெரிய தன்மையை, அதே நேரத்தில் எளிமையை சொல்கிறார்கள்.

உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! – ‘பர வியூஹ அந்தர்யாமி தஸைகள் போலன்றிக்கே, சேதன ஜனங்கள் மத்யத்தில் தோற்றமாய் நின்ற’ என்று பூர்வாசார்யர்கள் சொல்கிறார்கள். வேதத்தைவிட பெரியவனான உன்னை, ஏதோ ஒரு புத்தகத்திலிருந்து தெரிந்து கொண்டோம், யாரோ சொன்னார்கள் கேட்டோம் என்று இல்லாமல் இங்கே எங்கள் மத்தியில் வந்து தோன்றினாயே! என்று அவன் செளலப்யத்தை – எளிய தன்மையை எண்ணி ஆச்சர்யப் படுகிறாள். ‘சுடரே’ என்ற பதத்துக்கு பூர்வாசார்யர்கள் மிகவும் உகந்து ‘ஸம்ஸாரிகளைப் போலே பிறக்கப் பிறக்க கறையேறுகையன்றிக்கே, சாணையிலிட்ட மாணிக்கம் போலே ஒளிவிடா நிற்கை’ என்றார்கள். ஜீவர்கள் பூமியில் பிறந்து பிறந்து கறையேறிப்போய் இருக்கிறோம். ப்ரக்ருதியின் மாயையில் மூழ்கி இருக்கிறோம். ஆனால் அவன் எத்தனை தடவை வந்து பிறந்தாலும் மாயையில் சிக்குவதில்லை.

விசிஷ்டாத்வைத சித்தாந்தப்படி, ஒவ்வொரு உடலினுள்ளும் ஜீவாத்மாவும், பரமாத்மாவும் இருக்கிறது. இதில் ஜீவாத்மா எல்லா சுக துக்கங்களையும் அனுபவிக்க, பரமாத்மா அந்தர்யாமியாய் இருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறது. இந்த பாவ புண்ணியங்கள், சுக துக்கங்கள் அந்த பரமாத்மாவை தீண்டுவதில்லை. அதனால் அது அப்பழுக்கில்லாத சோதி, சுடர் என்று ஆண்டாள் சொல்கிறாள். அதோடு, ஏற்கனவே வையத்து வாழ்வீர்காள் பாசுரத்தில் பார்த்தபடி, அவன் சுடர் விட்டு ஒளிர்வது இந்த உலகில் தானே – இங்கேதானே அவன் பெருமைகள் சுடர்விட்டு ஒளிரும் என்று சொல்வதாகவும் கொள்ளலாம். துயிலெழாய்! – நீ இந்த உன் தன்மைகளையெல்லாம் தெரிந்தும், நாங்கள் ஏற்ற கலங்களாக இருப்பது தெரிந்தும் நீ இன்னும் உறங்கலாமா!

மாற்றார் உனக்கு வலி தொலைந்து – ஆஸ்ரிதர்களையும், அவர்களது விரோதிகளையும் நினைத்துப் பார்த்து சொல்கிறாள் ஆண்டாள். பகவானுக்கு எதிரிகள் யாரும் இல்லை, அவனது பக்தர்களுக்கு விரோதியை தனக்கும் விரோதியாகவே கொள்கிறான். இங்கே ஆண்டாள், பக்தனுக்கும் விரோதிக்கும் சில விதங்களில் ஒற்றுமை சொல்கிறாள்.

பக்தனும் உன்னை நினைத்து தன் முயற்சி, வலிமை, தன் சாமர்த்யம் இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று அகங்கார மமகாரங்களை தொலைத்து விடுகிறான். விரோதியோ, ஹிரண்ய கசிபு, ராவணன் என்று உனக்கெதிரே நின்று தன் வலிமைகள் அனைத்தையும் தொலைத்து பகவானின் குணங்கள் தோன்ற செய்த புண்ணியத்துக்கு அவனிடமே வந்து சேர்ந்துவிடுகிறார்கள். பக்தர்களும், அவர்கள் விரோதிகளும் கூட, தம் வலிமை எல்லாம் தொலைத்து, தங்கள் நாடு, பொருள், பலம் எல்லாம் தொலைத்து உன் வாசலில் வந்து இப்பேர்ப்பட்டவனை நமக்கு சமம் என்று எண்ணினோமே என்று ஆற்றாமை தோன்ற உன் அடிபணிகிறார்கள்.

அப்படி ‘போற்றியாம் வந்தோம் புகழ்ந்து’ என்று உன்னை நாங்கள் போற்றி புகழ்ந்து வந்தோம், உன் சத்ருக்கள் உன்னை எதிர்த்து உன் வீரத்துக்கு தோற்று உன்னிடம் வந்து அடைந்தார்கள். உன் பக்தர்கள் உன் குணத்துக்கு, உன் பெருமைக்கு தோற்று உன்னிடம் வந்து சேர்ந்தார்கள். எங்களை இந்த கோஷ்டியில் எதாவது ஒன்றில் சேர்த்தாவது ரக்ஷிக்கக் கூடதா! யாம் போற்றி வந்தோம் என்று பகவானுக்கே பல்லாண்டு சொல்லி போற்றிய பெரியாழ்வாரை ஆண்டாள் நினைத்து அதைப்போலே
‘ஆற்றாமை இருந்தவிடத்தில் இருக்க வொட்டாமையாலே வந்தோம்’ என்று சொல்கிறாள்.

1609819733426.png
 
திருப்பாவை(22).....!!!

அங்கண் மா ஞாலத்து அரசர்* அபிமான- பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே*
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்* கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப் போலே*
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ* திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்*
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்* எங்கள்மேல் சாபம் இழிந்து ஏலோர் எம்பாவாய்.

ஸ்ரீஆண்டாள் 🔹 திருப்பாவை(22)

ஆண்டாள் இந்த பாசுரத்தில் தன் சரணாகதியையும், தன் சேஷத்வ தன்மையையும், தான் பகவானிடம் வேண்டுவது என்ன என்பதையும் விண்ணப்பம் செய்கிறாள். இதற்கு முந்தைய பாசுரத்தில் ‘மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண் ஆற்றாது வந்து அடிபணியுமா போலே” என்பதன் தொடர்ச்சியாக, இந்த பாசுரத்திலும் அந்த ஆச்சர்யத்தை தொடர்ந்து சொல்கிறாள். துரியோதனன், அர்ஜுனன் என்று ஞாலத்து பெரிய அரசர்கள் முதற்கொண்டு, கணக்கற்ற அரசர்களும், சக்ரவர்த்திகளும் தங்கள் ஸ்வபிமானத்தை – தன் சொத்து, தன் நாடு, தம்மக்கள், தன் உடல், தன் ஆன்மா என்று தன்னையே அபிமானித்து வந்தவர்கள் அந்த அபிமானம் பங்கமுற உன் கட்டிற்கால் கீழே வந்து சங்கம் – கூட்டம் போட்டிருப்பது போலே நாங்கள் வந்து நிற்கிறோம் என்கிறாள்.

அந்த ராஜர்களெல்லாம் வருவதற்கும் நாங்கள் வருவதற்கும் வாசி இருக்கிறது. அவர்கள் வேறு வழியின்றி உன்னிடம் வந்து நின்றார்கள். நாங்கள் எங்கள் வழியே நீதான் – உன் கைங்கர்யமே நாங்கள் வேண்டுவது என்று வந்து நிற்கிறோம். இதை பூர்வாசார்யர் இப்படி சொல்கிறார்: “அனாதிகாலம் பண்ணிப் போந்த தேஹாத்மாபிமானத்தை விட்டு தேஹாத்பரனான ஆத்மாவின் பக்கல் ஸ்வாதந்த்ரியத்தையும் விட்டு அனன்யப் ப்ரயோஜனராய் வந்தோம் என்றுமாம்!”. இப்படி சரணாகதி செய்து இவர்கள் நிற்கையில் அவன் செய்ய வேண்டுவது என்ன என்றும் சொல்கிறார்கள்.

சிறிய மணியினுடைய வாயைப்போல், தனது மொட்டு சிறிது மலர்ந்ததாய் உள்ள தாமரையைப் போலே எங்கள் மேல் உன் பார்வை படாதா என்கிறார்கள். கரியவாகி புடை பறந்து செவ்வரியோடி நீண்ட அப்பெரியவாய கண்கள்’ என்று திருப்பாணாழ்வார் அனுபவித்தது போல், இங்கே தாமரையை உதாரணம் காட்டி உன் சிவந்த கண்கள் திறக்க வேண்டும் என்று வேண்டுகிறார்கள். அப்படி விழிக்கும் போதும் முதல் பார்வை எங்கள் மேல் படவேண்டும்.

அங்கணிரண்டுங் கொண்டெங்கள் மேல் நோக்குதியேல் – அப்படி நீ எங்கள் மேல் உன் பார்வை செலுத்தினால், எங்கள் மேல்சாபம் இழிந்து – எங்களுக்கு இன்னும் மிச்சமிருக்கிற சம்சார பாவங்கள் தொலையும். “விஷ ஹாரியானவன் பார்க்க விடிந் தீருமாபோலே, அவன் நோக்காலே, சம்ஸாரமாகிற விஷந்தீரும்” என்கிறார் பூர்வாசார்யர். இவர்களுக்கேது சாபம் – அவனை பிரிந்திருப்பதே சாபம் – அந்த சாபம் நீங்கி உன்னுடன் நாங்கள் சேர உன் கடாக்ஷம் தேவை என்று இரைஞ்சுகிறார்கள்.

இந்த ஜீவன் தன்னது என்று எண்ணிக்கொண்டிருக்கும் மாயை விலகி, அவனிடம் அனன்யார்ஹ சேஷத்வமாக சேர்ந்து, அவன் கருணையாலே கடாக்ஷத்தாலே, தான் சேர்த்த கர்ம பலன்களை விலக்கி அவனிடம் சாயுஜ்யம் அடைவதையே இந்த பாசுரம் சொல்கிறது. நந்தகோபர், யசோதை போன்றவர்களை ஆசார்யர்களாக கொண்ட இவர்களுக்கு அவர்கள் மூலம் சாலோக்யம் கிட்டிற்று. பின் பிராட்டியை அண்டி அவளிடம் சரணாகதி செய்ததால் இவர்களுக்கு அவனிடம் சாமீப்யம் கிட்டிற்று. இவர்கள் பிராட்டியை முன்னிட்டுக் கொண்டு அவனை நெருங்கி தம் அபிமானத்தை எல்லாம் விட்டு அனன்ய சரணமாக அடையவும் அவன் சாரூப்யம் இவர்களுக்கு கிட்டிற்று. அவனுடனே இருக்க சாயுஜ்யத்தை இங்கே அவனிடமே யாசிக்கிறார்கள். இப்படியாக ப்ரபத்தி மார்க்கத்தையும், அதன் வெவ்வேறு நிலைகளையும், அதனை அடையும் உபாயங்களையும் ஆண்டாள் அழகாக நமக்கு எடுத்து வைக்கிறாள்.

அடுத்த பாசுரத்தில் க்ருஷ்ணன் விழித்தெழ அவனிடம் பேசவே ஆரம்பித்து விடுகிறார்கள!

1609907220521.png
 
திருப்பாவை(23).....!!!

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்* சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து*
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி* மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்*
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா* உன்- கோயில் நின்று இங்ஙனே போந்தருளி* கோப்பு உடைய-
சீரிய சிங்காசனத்து இருந்து* யாம் வந்த - காரியம் ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய்.

ஸ்ரீஆண்டாள் 🔹 திருப்பாவை(23)

இதற்கு முந்தைய ‘அங்கண் மாஞாலத்தரசர்’ பாசுரத்தில், ஆண்டாள் இதர பாகவத பெண்பிள்ளைகளோடு, பிராட்டியை முன் வைத்து, பகவானை நெருங்கி உன் சிவந்த கண்களை சிறிது சிறிதாக திறந்து எங்கள் மேல் உன் கடாக்ஷத்தை – கடைக்கண் பார்வையை செலுத்த வேண்டும் என்று கேட்க, பகவான் எழுந்திருக்கிறான். இந்த பாசுரத்தில் அவன் எழுந்திருக்கும் அழகை, தன் பெடையொடு குகையிலே படுத்திருக்கும் சிங்கம் எழுந்து வருவதை உபமானமாகச் சொல்லி ரசிக்கிறார்கள்.

இங்கே சிங்கத்தை சொன்னது யாதவ சிம்ஹமான க்ருஷ்ணன், தன் பராபி பவந சாமர்த்தியம் தோற்ற, வீரம் வெளிப்பட எழுவதை சிறப்பாக எடுத்துரைக்கிறது. மாரி – மழை பெய்கிறது – அதுவும் பனியே மழைபோல் பெய்யும் மார்கழிக்காலம் – ஆண்டாள் முன்னமே ஒரு பாட்டில் – பனித்தலை வீழ என்று சொன்னபடி பனிவிழும் மார்கழியாம். முழைஞ்சில் என்பது குகை. அப்படி குளிர் நடுக்குகிற, பனி – மழை போல் பெய்து கொண்டிருக்கிற மார்கழி மாத காலத்தில், தன் குகையில் – மன்னிக் கிடந்துறங்கும் – சோம்பலை அள்ளி பூசிக்கொண்டு தன் பெடையொடு அணுஅளவும் விலகாமல் படுத்துத் தூங்குகிறதாம் சிங்கம்.

அது மழைக்காலம் முடிந்த நிமித்தங்கள் கண்டு, அறிவுற்று – அதுவரை அசையாமல் இருந்தது – திடீரென்று உயிர் வந்ததுபோல் அசைந்து, தீவிழித்து – உறங்கிய பின் பார்க்கிற முதல் பார்வையாகையால் சிறிது சிவந்து விழித்த விழிகள் – வேரிமயிர் பொங்க – ஜாத்யுசித பரிமளம் என்கிற விலங்கு ஜாதிக்குரிய மணம் கமழ – தனது வாசனையுள்ள பிடரி மயிர்களை உதறி, வெப்பாடும் பேர்ந்து உதறி மூரி நிமிர்ந்து – உடம்பில் இன்னமும் ஒட்டியிருக்கும் சோம்பலை உதறுகிறதாம். முன்னங்கால்களை நீட்டி உடம்பை எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளவு இழுத்து, பின் பின்னங்கால்களை நீட்டி மறுபடியும் உடம்பை இழுத்து சோம்பலை உதறுகிறதாம். பிறகு முழங்கி – கர்ஜித்து புறப்பட்டு போதருமா போலே வேட்டையாடக் கிளம்பும் சிங்கத்தைப்போலே என்று சொல்லவும் பகவான், நான் என்ன சிங்கம் மாதிரி கருணை இல்லாமலா இருக்கிறேன் என்று பார்க்க, சிங்கம் உன் காம்பீர்யத்துக்கு மட்டுமே உதாரணம் – உன் செளகுமாரத்தன்மை எங்களுக்கு தெரியாதா? பூவைப்பூவண்ணா! என்கிறாள்.

இப்படி படுக்கையறையிலேயே இருக்காமல், உன் கோயிலில் இங்ஙனே போந்தருளி – இங்கே ஸபா மண்டபத்துக்கு வந்து, கோப்புடைய சீரிய சிங்காதனத்தில் இருந்து, நாங்கள் வந்த காரியத்தைக் கேட்கவேண்டும் என்று சொல்கிறாள் ஆண்டாள். அவனது சிம்மாசனம், ‘தர்ம ஜ்ஞானாதிகளாலும், அதர்ம ஜ்ஞானாதிகளாலும் கோப்புடைய ஸிம்ஹாசனம் என்றுமாம்’ என்றார்கள் பூர்வாசார்யர்கள். இப்படி தர்மம், அதர்மம், ஜ்ஞானம், அஜ்ஞானம் என்று எல்லாவற்றையுமே சட்டம் கட்டி, சிம்மாசனம் அமைத்து அதில் அமர்ந்தவன் என்று அவன் சாமர்த்தியத்தை சொல்கிறார்கள்.

இத்தனை நேரம் பள்ளி எழுப்பப் பாடியவர்கள், அது ஏன் எழுந்து சபா மண்டபத்துக்கு வரச் சொல்கிறார்கள்? பூர்வாசார்யர் சொல்கிறார், “நடையிலே ரிஷபத்தினுடைய வீறும், மத்தகஜத்தினுடைய மதிப்பும், புலியினுடைய சிவிட்கும், ஸிம்ஹத்தினுடைய பராபிபவந சாமர்த்தியமும் தோற்றியிருக்கை’ என்று. இப்படி ரிஷப கதி, கஜ கதி என்று பலவிதங்களில் அவன் நடையழகை காண ஆசைப்பட்டு சொல்கிறார்கள். அத்துடன் திருப்பாவை மொத்தமுமே ஸ்ரீரங்கநாதனை நினைத்து பாடியது தானே! (ஆண்டாள் அரங்கற்கு பன்னு திருப்பாவை…). அப்படி அரிதுயில் கொண்டே இருக்கிற ஸ்ரீரங்க நாதன் எழுந்து வந்தால் அந்த சேவை எப்படி இருக்கும் என்று ஆச்சர்யப்பட்டு சொல்கிறார்கள்.

நாங்கள் இதற்கு முன்னமே எழுந்திருந்து பலகாலும் உன் பேர்பாடி, ஒவ்வொரு பாகவதர்களாக எழுப்பி, உன் வாயில் காப்போர்களை அண்டி அனுமதி பெற்று, நந்த கோபர், யசோதை ஆகியோர்களை எழுப்பி, உன் பிராட்டியை எழுப்பி நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உன்னை வந்து சேர்ந்திருக்கிறோம்! ப்ரபத்தி என்பது எல்லாம் அவன் அருள் என்று சும்மாக் கிடைப்பதல்ல, அதன் அளவில் அதுவும் ஒரு போராட்டமே! என்று குறிப்பால் உணர்த்துகிறாள். இப்படி நாங்கள் கஷ்டப்பட்டு உன்னை அடைந்திருக்கிறோம். இப்படி நாங்கள் கஷ்டப்பட நீயன்றோ காரணம்! ஆகையால் இப்படி நாங்கள் வந்ததை நீ ஆராய்ந்து, அறிவுற்று பார்த்தால், அருளுவாய் என்று சொல்கிறாள். இன்னும் இவர்கள் தாம் வந்த காரியத்தை சொல்லவில்லை. அதை சிற்றஞ் சிறுகாலே பாட்டில் வைத்தார்கள். இங்கே எழுந்து வந்து நாங்கள் வந்த காரியத்தை ஆராய வேண்டும் என்று ப்ரார்திக்கிறார்கள்.

1609985094014.png
 
1610100543821.png


திருப்பாவை(24).....!!!

அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி* சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி*
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி* கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி* குன்று குடையா எடுத்தாய் குணம் போற்றி* வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி*
என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்* இன்று யாம் வந்தோம் இரங்கு ஏலோர் எம்பாவாய்.

ஸ்ரீஆண்டாள் 🔹 திருப்பாவை(24)

அன்றும் இன்றும் என்றென்றும் என்று முக்காலத்தையும் ஒரு பாசுரத்தில் ஆண்டாள் அடக்கி விட்டாள். இதற்கு முந்தைய பாசுரத்தில் சீரிய சிங்காதனத்தில் அமர்ந்து யாம் வந்த காரியத்தை ஆராயவேண்டும் என்று கேட்ட ஆண்டாள், அதன் படியே பகவான் படுக்கையறையினின்று எழுந்து வந்து சபா மண்டபத்துக்கு நடக்கவும், அவன் நடையழகை ரசித்து அனுபவிக்கிறாள். பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையாயிற்றே இவள்! அதனால் அவரது பல்லாண்டு பாசுரத்தையும் விஞ்சி நிற்கும் தன்மையாய் இங்கே பகவானுக்கு மங்களாசாசனம் செய்கிறாள்!

அதென்னவோ ஆண்டாளுக்கு இந்த த்ரிவிக்ரமாவதாரத்தின் மீது ஒரு அதீத ப்ரேமை. திருப்பாவையை ஆரம்பிக்கும் போதும் ஓங்கி உலகளந்த உத்தமன் என்றாள். நடுவில் பதினேழாம் பாசுரத்தில், அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே! என்றாள். இங்கே அன்றிவ்வுலகம் அளந்தாய் என்று த்ரிவிக்ரமனை மூன்று முறை அனுசந்தித்திருக்கிறாள்.

அன்று மஹாபலியை அடக்க மூன்று உலகத்தையும் ஈரடிகளால் அளந்தாய். நடந்த கால்கள் நொந்தனவோ எனும்படியாக அந்த பாதங்கள் காடுமேடுகளெல்லாம், துஷ்டர்கள் சிஷ்டர்கள் மீதெல்லாம் படர உலகளந்தாயே! அந்த திருப்பாதங்கள் போற்றி! ஆஸ்ரித விரோதிகளான ராவணாதிகளை அவர்கள் இடத்திற்கே சென்று ஜெயித்தாயே ! உன் திறல் போற்றி! அசுரன் சகடத்தில் ஆவேசித்த போது, சகடத்தை பொன்ற உதைத்தாயே! ‘தாயுங்கூட உதவாத தஸையிலே அனாயாஸேன திருவடிகளாலே ஸகடாசுரனை அழித்த புகழ்!’ என்று பூர்வாசார்யர்கள் போற்றுகிறார்கள்.

வத்ஸாசுரன், கபித்தாசுரன் எனும் இரு அரக்கர்கள் கன்றுக்குட்டியாகவும், விளா மரமாகவும் வந்து நிற்க, கன்றையே கோலாகக்கொண்டு விளாமரத்தை அடித்து இரண்டு அரக்கர்களையும் முடித்தான். மாரீசனைப்போல் உயிர்பிழைத்துப் போக விடாமல் வருகிற அரக்கர்களையெல்லாம் மிச்சம் வைக்காமல் அழித்தான். ஆனால் இவர்களுக்கோ வயிறுபிடிக்கிறது – கவலையுறுகிறார்கள். ‘ஸத்ருவையிட்டு ஸத்ருவையெரிந்தால் ஸங்கேதித்து வந்து இருவருமொக்க மேல்விழுந்தார்களாகில் என் செய்யக்கடவோம்’ என்று பதைத்தார்களாம். இந்த அரக்கர்களை அழித்த வ்ருத்தாந்தத்தை ஆசார்யர்கள் இப்படி அனுபவிக்கிறார்கள், கன்றை பிடித்துக் கொண்டு தானும் சுழன்று கன்றை வெகுவேகமாக விட்டெறிந்தானாம் – அப்போது ஒரு காலை குஞ்சித்த பாதமாக தூக்கியபடியால் சிவந்த பாதங்கள் கண்ணில் பட, கழல் போற்றி என்றார்கள்.

அடுத்து அவன் குண விசேஷத்தை சொல்கிறார்கள். இந்த்ர பூஜையை க்ருஷ்ணனுக்கு செய்தது பிடிக்காத இந்திரன், ‘கையோயுந்தனையும் வர்ஷிக்க’ என்றபடி விடாது மழை பொழிவிக்க, கண்ணன் கோவர்த்தன கிரியை குடையாக பிடித்து கோபாலர்களை காத்தான். ஆஸ்ரிதர்களுக்குள் விரோதமேற்பட்ட காலத்தில், தனது ஆந்ருஸம்ஸய குணம் வெளிப்பட (பெருந்தன்மையுடனான கருணை), இந்த்ரனை அழிக்கப்புகாமல் பொறுத்தான். அந்த குணம் போற்றி என்று பாடுகிறார்கள்.

பல்லாண்டு ப்ரபந்தத்தில் பெரியாழ்வார், வடிவார் சோதிவலத்துறையும் சுடாராழியும் பல்லாண்டு என்பது வரை சொன்னவர் ஐயகோ! நம் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறதே! என்று முகத்தை திருப்பிக்கொண்டாராம். படைபோர் புக்குமுழங்கும் ‘அப்’பாஞ்சசன்னியமும் பல்லாண்டே! என்றார். முகத்தை திருப்பிக்கொண்டு ‘அந்த’ பாஞ்சசன்னியமும் பல்லாண்டு என்று சொன்ன பக்த சிரோமணி அவர். அவர் மகளான ஆண்டாள், இங்கே அதே பாவத்தில், பகைவரை வென்று கெடுக்கும் வேல் போற்றி!
என்று அவன் ஆயுதத்தை போற்றுகிறாள். அவன் புகழை வேலுக்கும் ஏற்றிச் சொல்கிறாள். கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரனல்லவா! அதனால் இவனும் கூர்வேல் பிடித்த கையன் தான்.

பகவானின் நடையழகை ரசித்தபடி பாடிவந்த ஆண்டாள், முத்தாய்ப்பாக ‘உன் சேவகமே யேத்திப்பறை கொள்வான் வந்தோம் இன்று இரங்கு’ என்று சொல்லி முடிக்கிறாள். இப்படி உன்னை போற்றி பாடுவதையே பரம ப்ரயோஜனமாக கொள்ள வந்தோம், நீ அதற்கு இரங்கி அருளுவாய் என்று கேட்டு முடிக்கிறாள்.
 
திருப்பாவை(25).....!!!

ஒருத்தி மகனாய்ப் பிறந்து* ஓர் இரவில்- ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த* கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்* நெருப்பு என்ன நின்ற நெடுமாலே!,* உன்னை- அருத்தித்து வந்தோம் பறை தருதி யாகில்*
திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி* வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய்.

ஸ்ரீஆண்டாள் 🔹 திருப்பாவை(25)

கண்ணன் ஒரு அதிசய பிறவி! ஆலமாமரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய் ஞாலமேழும் உண்ட மாயன் அவன்! அவன் பிறப்பிலேயே எத்தனை மாயங்கள்! ஆண்டாள் சென்ற ‘அன்றிவ் வுலகம் அளந்தாய்!” பாசுரத்தில் அவன் செய்த அசாத்யமான காரியங்களை போற்றினாள். இந்த பாசுரத்தில், அன்றும் இன்றும் என்றும் வேறெங்கும் நடக்க முடியாததான பகவத் சேஷ்டிதத்தை பாடுகிறாள்.

வேறெந்த தெய்வமாவது இப்படி கொஞ்சமும் அஸூயைப்படாமல், கர்ப்ப வாசம் செய்திருக்கிறார்களா? அதுவும் பன்னிரு திங்கள் கர்ப்ப வாசம் செய்து கண்ணன் பிறந்தான். இப்படி ஒரு தெய்வம் செய்யலாமா என்றால், கர்ம வசத்தாலே ஜீவர்களான நமக்கு கர்ப்ப வாசம் நேருகிறது. க்ருபா வசத்தாலே அவனுக்கு கர்ப்ப வாசம் நேர்ந்தது. ‘நம்முடைய கர்மம் நம்மோடே அவனை ஸஜாதீயனாக்கும்! அவனுடைய க்ருபை நம்மை அவனோடே ஸஜாதீயனாக்கும்!” அதாவது கர்ம வசத்தால் நாம் எடுக்கிற பிறவி அவனை நம்மிடமிருந்து விலக்குகைக்கு காரணமாயிருக்கும். அவன் க்ருபா வசத்தால் எடுக்கிற பிறவி நம்மை அவனிடம் சேர்க்கைக்கு காரணமாயிருக்கும்.

ஒருத்தி மகனாய் பிறந்து – தசரதன் தவம், யாகங்களியற்றி நான்கு புதல்வர்களை பெற்றான். இங்கே தேவகி, வசுதேவர், யசோதை, நந்தகோபர் என்று நால்வர் இயற்றிய தவத்துக்கு ஈடு இணையற்ற ஒரே யாதவ ரத்னமாக கண்ணன் பிறந்தான். வளர்ந்து பெரியவனாகிய பின் தான் ஸ்ரீராமன் பித்ருவாக்ய பரிபாலனம் செய்தான். இங்கே க்ருஷ்ணனோ பிறந்த சில மணிக்குள்ளே, தன் சங்க சக்ராதி அம்ஸங்களை மறைத்துக்கொள்ள தேவகி ப்ரார்த்திக்க உடனே அப்படி தன் அம்சங்களை மறைத்துக்கொண்டு அவள் இட்ட வழக்கை செய்து காட்டினான். என்னே அவள் பெருமை!

ஓரிரவில் ஒருத்தி மகனாய் – அந்தகாரமான, பயங்கரமான அந்த ராத்திரி நினைவுக்கு வருகிறது. சிறைச்சாலையில் பிறந்து, பிறந்த சில மணித்துளிக்குள்ளாகவே, கொடும் இரவில், கொட்டும் மழையில், பெருக்கெடுத்து ஓடும் ஆற்று வெள்ளத்தைக் கடந்து வேறொருத்திக்கு மகனாய் போய் சேர்ந்தானே! என்ன ஆச்சர்யமான சம்பவங்கள்! பூர்வாசார்யர்கள் இதை வேறு விதமாகவும் அனுபவிக்கிறார்கள்.

‘நாய்க்குடலுக்கு நறு நெய் தொங்காதாப்போலெ, கம்ஸாதிகள் தண்மை ஸூதிகாக்ருஹத்திலே ஓரிரா தங்கவொட்டிற்றில்லை என்கை’ என்றார்கள். கம்ஸன் முதலான அரக்கர்களின் சமீபம், தெய்வீகமான இந்த குழந்தையை, ப்ரசவிக்கிற அறையில் ஒரு ராத்திரி கூட தங்க விடவில்லை. உடனே குழந்தையை இடம் மாற்றியாக வேண்டியதாகி விட்டது.

அதோடு, முதலில் சொன்ன ஒருத்தி தேவகி. இப்போது சொல்கிற ஒருத்தி யசோதை. யசோதைக்கு ஈடு இணை உண்டோ! ஈடு இணையற்ற அத்விதீயமானவள் அவள். தேவகி கண்ணனை பிறந்த குழந்தையாக பார்த்தாள். யசோதையோ அவன் வளர்ந்து, அவன் பால லீலைகளையெல்லாம், தொல்லையின்பத்தையெல்லாம் திகட்ட திகட்ட அனுபவித்தவள். அவள் பெருமைக்கு ஈடே இருக்க முடியாது.

தீயவனான கம்சனின் விஷப்பார்வை கண்ணன் மீது பட்டு விடக்கூடாதே, நல்லவர்களான தேவர்களும் இவன் இருக்குமிடம் தெரிந்தால் அவர்களெல்லாம் இவனிடம் ப்ரேமை கொண்டு கூடி வருவர், அதனால் இவனிருப்பது வெளித்தெரிந்து விடுமே என்று யாரும் பார்க்காமல் கண்ணனை நிலவரையில் வைத்து வளர்த்தாளாம் யசோதை. எப்படி நம் மத்தியிலேயே, சேதன அசேதனர்களுக்குள்ளேயே அந்தர்யாமியாய் அவன் இருந்தாலும் மறைந்து இருக்கிறானோ, அதைப்போல் ஆஸ்ரிதர்கள் மத்தியில் பிறந்து வளர்ந்தாலும் அவன் மறைந்தே இருந்தானாம். இது அவனுடைய சங்கல்பம் – அதைத்தவிர வேறு விளக்கங்கள் இல்லை. ஓரிடத்தில் பிறப்பதும், தாயை தவிக்க விட்டு, வேறொரிடத்துக்கு போவதும், உலக கண்களிலிருந்து மறைந்திருப்பதும், பின் வெளிவந்து யுத்தம் செய்வதும் எல்லாம் அவன் சித்தம் – சங்கல்பம்.

இப்படி கண்ணனை நினைக்கும் போதே கம்ஸனையும் நினைக்க வேண்டியிருக்கிறதே! அது அவன் செய்த புண்ணியம்! ஆண்டாள் கம்சனை எண்ணி, ‘தரிக்கிலனாகித் தான் தீங்கு நினைந்த’ என்று கண்ணன் ஆய்ப்பாடியில் இருக்கிறான் என்று தெரிந்தவுடன் ஓரிடத்தில் தன் உடலை தரிக்க முடியவில்லையாம் கம்சனுக்கு. உடலும் தவிக்க, உள்ளமும் தவிக்க தரிக்க முடியாமல் துடித்தானாம்.

அவனுக்கு தங்கையாய் பிறந்த பாவத்துக்கு, தேவகியின் வயிற்றில் பயாக்னியை வைத்தான். கண்ணன் பிறந்து அந்த அக்னியை கம்ஸன் வயிற்றுக்கு மாற்றி விட்டான். என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமல் தனக்கு தானே தீங்கு செய்து கொண்டான். அவன் கண்ணனை அழிக்க வேண்டும் என்கிற கருத்தை பிழையாக்கி, (எண்ணத்தில் மண் விழ வைத்து), தானே எல்லாம் என்று நினைத்து நிர்பயமாக இருந்த அரக்கன் வயிற்றில் பயாக்னியை உண்டு பண்ணி நெருப்பென்ன நின்றான் கண்ணன். சின்ன குழந்தையாய் இருந்தாலும் கம்ஸனுக்கு நெருப்பென்ன நெடுமாலாய் நின்றானாம் கண்ணன்.

நெடுமாலே! ‘பண்டே வ்யாமுக்தனான உன்னை அர்த்திக்கையாலே பிச்சின்மேலே பிச்சேற்ற வந்தோம்!” என்று அவன் மீது இவர்களுக்கும், இவர்கள் மீது அவனுக்கு வியாமோகம் அதிகம். அதனால் உன்னை உன்னிடமிருந்து உன்னையே அருத்தித்து பெற வந்தோம். இப்போது ஆண்டாள் அவன் சங்கல்ப விசேஷத்தை நினைத்து பார்த்து, ‘பறை தருதியாகில்’ என்று எங்களுக்கு பறையை – கைங்கர்ய ப்ராப்தியை தருவதென்று சங்கல்பித்தாயானால், உன் சங்கல்பம் இருந்து நீ கொடுத்தால், வருத்தம் தீர்ந்து மகிழ்வோம் என்கிறாள்.

உன் சங்கல்பம் இருந்தால், நீ எங்களுக்கு கைங்கர்ய ஸ்ரீயை கொடுத்தால், நாங்கள் உன்னையும் உன் பிராட்டியான மஹாலக்ஷ்மியையும் திருத்தக்க செல்வமாக, என்றும் நிலையான செல்வமாக பெற்று, உங்களுக்கு சேவகம் செய்து, இதுகாறும் பிறவிகள் பல எடுத்த வருத்தமும் தீர்ந்து, நித்யமான பரமானந்த நிலையை அடைந்து மகிழ்வோம் என்று சொல்கிறாள்.

1610162586713.png
 
திருப்பாவை(26).....!!!

மாலே! மணிவண்ணா! மார்கழி நீர் ஆடுவான்* மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்*
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன* பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே*
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே* சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே*
கோல விளக்கே கொடியே விதானமே* ஆலின் இலையாய் அருள் ஏலோர் எம்பாவாய்.

ஸ்ரீஆண்டாள் 🔹 திருப்பாவை(26)

பூவைப் பூவண்ணா! நீ சீரிய சிங்காதனத்திருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள்! என்று இவர்கள் கேட்டதற்கேற்ப அவனும் தன் நடையழகைக் காட்டி நடந்து வந்து சிங்காதனத்தில் அமர்ந்து, ‘பெண்களே! நீங்கள் வந்த காரியம் என்ன?’ என்று வினவுகிறான். இந்தப் பாட்டில் நோன்புக்கு தேவையான உபகரணங்களையெல்லாம் அவனிடம் யாசிக்கிறார்கள். அதுவும் மாயனே! நாராயணா! உலகளந்தவனே என்றெல்லாம் கேட்டால் அவன் மேன்மைதான் வெளிப்படுகிறது. அவன் பெரியவன் என்ற எண்ணம் ஏற்பட்டு அஞ்சி வாயில் வார்த்தைகளே வருவதில்லை.

அதனால் மாலே! என்றாள். தன் அத்தனை வியாமோஹத்தையும் – பித்து பிடித்த அன்பத்தனையும் கலந்து மாலே! என்றாள் இந்த ஒற்றைச் சொல்லில் அவன் செளலப்யம் – சுலபத்தன்மை, தோளோடு தோள் நின்று விளையாடிய கண்ணனை உருவகிக்கிறாள். இவர்களுக்கு மட்டுமா பித்து? அவனும் தான் மயங்கிக் கிடக்கிறான். கண்ணன், வந்திருக்கிற இவர்களது மார்பகங்களையும், இடையையும், முக அழகையும் பார்த்துக்கொண்டே மயங்கி நின்று விட்டானாம். அதாவது இவர்களது பக்தியையும், வைராக்கியத்தையும் , ஞானத்தையும் கண்டு அவனே ஒரு கணம் மயங்கி நின்று விட, நாங்கள் வேண்டுவன கேட்டியேல் என்று அவனை உலுக்கி எழுப்புகிறார்கள். எங்களுக்கு எத்தனை உன்னிடம் அன்பிருக்கிறதோ அதை விட பலமடங்கு அன்பை நீ எங்களிடம் வைத்திருக்கிறாய் என்று நாங்கள் தெரிந்து கொண்டோம் என்றாள்.

நாங்கள் வேண்டுவன கேட்டியேல், இந்த உலகமனைத்திலும் சிஷ்டர்களுக்கு ஆறுதலையும், துஷ்டர்களுக்கு பயத்தையும் உண்டு பண்ணக்கூடியதான உன் பாஞ்ச சன்னியம் போன்ற சங்குகள் வேண்டும். பெரிதான பேரிகைகள் வாத்தியங்கள் வேண்டும். பல்லாண்டு இசைக்கக் கூடிய முக்தர்கள் எங்களுக்கு ஆசார்யர்களாக வர வேண்டும். விடியற்காலை ஆதலால் இருள் விலக்க அழகான விளக்குகள் வேண்டும். இன்னும் நோன்புக்கு வந்து கொண்டிருக்கிற பேர்களுக்கு தொலைவிலேயே இடத்தை அடையாளம் சொல்லத்தக்க கொடிகள் வேண்டும். இவற்றையெல்லாம் குடையாகக் காக்க கூடிய மேல்விதானம் வேண்டும் என்று ஒரு பெரிய பட்டியலையே அபெக்ஷிக்கிறார்கள்.

கண்ணன் கேட்டானாம், இதெல்லாம் வேண்டும் என்று உங்களுக்கு எப்படி தெரியும்? இதெல்லாம் மேலையார் செய்வனகள்! எங்களுடைய பூர்வாசார்யர்கள் செய்தபடி எங்களுக்கு தெரியும் என்றார்கள்.
வியாக்கியானத்தில் இந்த இடத்தை அழகாக விளக்கியிருக்கிறார்கள். இவர்கள் கேட்டபடி தன்னுடைய சின்னங்களையெல்லாம் பெருமான் கொடுக்க ஆரம்பித்தானாம்.

என்னிடம் பாஞ்சசன்னியம் ஒன்றுதான் இருக்கிறது, அதன் ப்ரபாவங்களுக்கு ஈடாக இன்னொன்றில்லை, அதை எடுத்துக்கொள்ளுங்கள். நான் உங்களுடன் கூத்தாடின பறை இருக்கிறது அதை எடுத்துக் கொள்ளுங்கள். பல்லாண்டு பாடின விஷ்ணு சித்தரே இருக்கிறார். அந்த பெரிய ஆழ்வாரை ஆசார்யானாக வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு நப்பின்னையே கோல விளக்காக உங்களை காட்டித் தருகிறாள். அவளை எடுத்துக் கொள்ளுங்கள். என் கருடன் ஆரோகணித்த கொடி இருக்கிறது அதை எடுத்துக் கொள்ளுங்கள். விதானத்துக்கு என் அத்தவாளத்தையே (உத்தரீயத்தை) எடுத்துக் கொள்ளுங்கள். இங்கே பூர்வாசார்யர் சொல்கிறார், அவனுடைய விதானம் ஆதிசேஷன் அல்லவா? அதை ஏன் தரவில்லை என்றால், ஆதிசேஷன் பெருமாளே சொன்னாலும் ‘தன்னையொழிய ஓரடியிடமாட்டாதவனாகையாலே!’ என்று அவனை விட்டு விலகமாட்டானாம். அதனால் தன் உத்தரீயத்தையே தருகிறேன் என்றானாம்.

மணிவண்ணா! நீ தருவதாகச் சொல்வதெல்லாம் ஒன்று தானே இருக்கிறது. எங்களுக்கு இதுமாதிரி பலப்பல வேண்டும் என்று இவர்கள் கேட்க, அவன் இல்லாததை எப்படி தருவது என்று திகைக்க, இவர்கள் சொல்கிறார்கள். உன்னிடம் இல்லாதது என்று ஒன்று உண்டா? ஆலினிலையாய்! ஞாலமேழும் உனக்குள் கொண்டு ஆல இலையில் சிறு குழந்தையாக துயில் கொண்டவனாயிற்றே நீ! இருப்பது இல்லாதது எல்லாவற்றையும் கடந்து ‘இல்லாததையும்’, ‘இருப்பதையும்’ உண்டு பண்ணுபவனாயிற்றே நீ, உன் அருளாலே எல்லாம் முடியும் என்று சொல்கிறார்கள்.

இங்கே நோன்பு நோற்பது என்பது பகவானுக்காக பக்தர்கள் செய்யும் கைங்கர்யமே ஆகும். இத்தை பூர்வாசார்யர்கள் சொன்னபடி செய்வது சிஷ்டாசாரம். சங்கங்கள் அவன் ஜெயத்தை சொல்லி இவர்களது அனன்யார்ஹ சேஷத்வத்தை குறிக்கும். பறை பரதந்த்ரீயத்தை குறிக்கும். பல்லாண்டிசைப்போர் சத்சங்கத்தை குறிக்கும். கோல விளக்கு பாகவத சேஷத்வத்தைக் குறிக்கும். விதானம், தன்னாலே தனக்காக எதுவும் இல்லை என்று போக்த்ருத்வ ஞானத்தைக் குறிக்கும். ஈஸ்வரனிடமிருந்து இந்த
ஐஸ்வர்யங்களை எல்லாம் அருள் என்று யாசிக்கிறார்கள்.

1610260854902.png
 
திருப்பாவை(27).....!!!

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா* உன்தன்னைப்- பாடிப் பறைகொண்டு யாம் பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்* சூடகமே தோள்வளையே தோடே செவிப் பூவே*
பாடகமே என்று அனைய பல் கலனும் யாம் அணிவோம்* ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு*
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்* கூடியிருந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய்.

ஸ்ரீஆண்டாள் 🔹 திருப்பாவை(27)

‘பாலன்ன வண்ணத்துன் பாஞ்சசன்னியம் போல்வன.. ஆலினிலையாய் அருள்’ என்று இதற்கு முந்தைய பாசுரத்தில் பகவானிடம் ஸ்வரூப ஸித்தியை ப்ரார்திக்க, அவனும் இவர்களுக்கு தன்னையே போன்றதான ஸ்வரூபத்தை, சாரூப்ய நிலையை அருளுகிறான். இவர்கள் அதைவிட உச்ச நிலையான சாயுஜ்ய நிலையை இந்த பாசுரத்தில் கேட்கிறார்கள். நோன்பின் கடைநிலையை நெருங்கிவிட்ட இவர்கள் அவனிடம் சென்று சேர்வதான கல்யாண நிலையை – ஜீவனும் பரமனும் இணையும் கல்யாணத்தை – எண்ணி மகிழ்ந்து தம்மை தயார் படுத்திக் கொள்கிறார்கள்.

நெய்யுண்ணோம், பாலுண்ணோம் என்று சொன்னவர்கள் மூட நெய் பெய்து முழங்கை வழிவார உன்றன்னைப் பாடிப்பறை கொண்டு கூடியிருந்து உண்போம் என்று நோன்பினால் உன்னை அடைகிறோம் – அதனால் நோன்பின் பூர்த்தியாக உன் ப்ராஸாதங்களை நீ அருளியவற்றை அனுபவிக்கிறோம் என்கிறார்கள்.

கூடாரை வெல்லுஞ் சீர்க் கோவிந்தா! ஆண்டாள் இந்த பாசுரத்தைச் சேர்த்து இனி வரும் இரண்டு பாசுரங்களிலுமாக கோவிந்த நாமத்தை மூன்று முறை அனுசந்திக்கிறாள். கூடாரை என்றால் – இவனை வணங்கமாட்டேன் என்று த்வேஷிக்கிற பேர்களை வெல்லுகிற கோவிந்தா என்கிறாள். அப்படியானால் த்வேஷிக்காத பேர்களிடம் தோற்பான் என்று அர்த்தமாகிறதே என்றார்கள் பூர்வாசார்யர்கள். சரி த்வேஷமும் இல்லை, அத்வேஷமும் இல்லை… அவனை வணங்கவும் இல்லை, இகழவும் இல்லை… இப்படி இருப்பவர்கள் கதி? ஆண்டாள் இந்த பாசுரத்தின் முதல் ஒற்றை வரியில் பற்றியுமே சொல்லி விடுகிறாள்.

கூடாரை என்றால் வெறுக்கிற பேர்வழிகள். வெறுப்பாலேயே சதா அவனைப்பற்றி நினைத்துக் கொண்டிருப்பவர்கள். ஹிரண்யாக்ஷன் – ஹிரண்யகசிபு, ராவணன் – கும்பகர்ணன், சிசுபாலன் – தந்த வக்ரன் என்று வெறுப்பின் மூல முடிச்சாக, ஆணி வேறாக – இதற்கு மேலாக வெறுக்க முடியாது என்ற அசுரேந்த்ரர்களாக, த்வேஷ திலகமாக இருப்பவர்களை தோற்கப்பண்ணுகிறானாம்! அவர்கள் கருத்தைப் பிழைப்பித்து வெல்கிறான்.

கூடாத பேர்களை வெல்லுவான் என்றால், அவனை விரும்பிக் கூடுகிற பேர்களிடம் தோற்றுப்போகிறான் என்றுதானே ஆகிறது. பாண்டவர்கள் சரணாகதி செய்தார்கள். அவர்களுக்காக அவன் இரங்கி வந்து தூதனாக தாஸனாக அவர்களுக்கும் கீழ்நிலையை உகந்து ஏற்றவனல்லவா!

சரி வெறுக்கவும் இல்லை, விரும்பவும் இல்லை அவர்களுக்கு? என்றால் அதற்குத்தான் கோவிந்தா என்ற பதத்தை ஆண்டாள் ப்ரயோகித்தாள். கோவிந்த: என்ற பதத்திற்கு இப்படி விளக்கம் சொல்கிறார்கள்: கோ என்றால் பசு. பசுதனம் லபதே விந்ததி இதி கோவிந்த: என்றார்கள். பசுக்கள் அவனை எங்களை ரக்ஷிக்க வா.. எங்கள் பின்னால் வா என்று அழைக்கவில்லை. அப்படி வருவதால் நாங்கள் கேட்காமலே வந்தாயே என்று கொண்டாடப் போவதுமில்லை. இப்படி இருக்கிற பசுக்கள் பின்னாடியும் போனானே! அவைகள் கேட்காமலே ரக்ஷித்தானே என்று அந்த அர்த்ததில் ரக்ஷிப்பவன் கோவிந்தன் – வெறுப்பில்லாமல் இருப்பதே போதும் என்று கொண்டிருப்பவன் கோவிந்தன் என்று கோவிந்தா என்ற பதத்தை ஆண்டாள் ப்ரயோகித்தாள்!

அடுத்து சொல்கிறாள், கோவிந்தா! உன்றன்னைப் பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம் நாடு புகழும் பரிசு என்றாள். கோவிந்தா என்று ஒருமுறை சொன்னாலே நாடு புகழும் பரிசு கிடைக்குமாம். இவர்கள் இவனை பாடிப் பறையை – கைங்கர்ய பலப்ராப்தியை சம்மானமாகப் பெற்றதோடு அல்லாமல் அதற்கு மேலாக நாடு புகழும் பரிசு வேண்டும் என்று கேட்கிறார்கள். நாங்கள் பாடியதோடு அல்லாமல் நாடே எங்களை பாடுமாறு ஒரு பரிசு வேண்டும் என்கிறார்கள். சரி அப்படி என்ன வேண்டும் என்று அவன் யோசிக்க ஒரு பெரிய பட்டியலையே கொடுக்கிறார்கள்.

சூடகமே, தோள்வளையே, தோடே, செவிப்பூவே, பாடகமே என்றனைய பல்கலனும் – கேசாதி பாதமாக எல்லா அங்கங்களிலும் அணியும் பல்கலனும் நீ தரவேண்டும். சூடகம் என்னும் கைவளை, தோள்வளை, தோடு, செவிப்பூ என்னும் செவிக்கு மேலே அணிகிற நகை, பாடகம் என்றால் பாதத்தில் அணிகிற கழற்காப்பு என்று இவற்றை தரவேண்டும் என்கிறார்கள். இவர்கள் பரமனை நெருங்கவும், அவனும் இவர்களும் வியாமோஹத்தால் ஒருவரை ஒருவர் அணைக்க, முதலில் ஸ்பர்சிக்கும் அணி கைவளை. அடுத்து அவன் இவர்களை நெஞ்சார, அவனை விட்டு பிரிந்ததால் நலிந்த தோள்களை அணைக்க அங்கே தோள்வளை என்ற நகையை அணிகிறார்கள். தோடு என்ற காதில் அணியும் ஆபரணத்தை அவன் தானே வந்து அணிவிக்க வேண்டும் என்று ஆசைப்படுவனாம். செவிப்பூ என்ற காதணி, அவன் நாசியினால் முகர்ந்து பார்த்து உகப்பனாம். இப்படி இவர்களை ஆலிங்கனம் பண்ணி, விரஹத்தால் இவர்கள் காலை பிடிக்க அங்கே பாடகம் அணிந்தார்கள். இப்படி எல்லா வகையிலும் இதை அவன் ரசிப்பானே… இதை அவன் உகப்பானே என்று எண்ணி எண்ணி அணிகிறார்கள்.

இதற்கு உட்பொருளாக, சூடகம் என்கிற கைவளை இவர்களது பக்திக்கு காப்பு – ரக்ஷை. தோள்வளை என்பது சமாஸ்ரயணம் – தோளில் பதித்த சங்க சக்ர முத்திரைகள் – பாகவதனுக்குரிய திரு இலச்சினைகள். தோடு என்பது திருவஷ்டாக்ஷர மந்திரம். செவிப்பூ என்பது த்வய மந்திரம். பாடகம் என்பது சரம ஸ்லோகத்தைக் குறிக்கும்.

கோவில்களில் அர்ச்சா மூர்த்தியாக பெருமானை சேவிப்பதற்கு ஒரு முறை இருக்கிறது. முதலில் அவன் திருமுகத்தைப்பார்த்து ஓம் நமோ நாராயணாய: என்கிற திருவஷ்டாக்ஷர மந்திரத்தை த்யானிக்க வேண்டும். பிறகு திரு உறையும் மார்பைப் பார்த்து ஸ்ரீமன் நாராயண சரணெள சரணம் ப்ரப்த்யே! ஸ்ரீமதே நாராயணாய நம: என்கிற த்வய மந்திரத்தை அனுசந்திக்க வேண்டும். பிறகு திருப்பாதங்களை தரிசித்து ‘ஸர்வ தர்மான் பரித்யஜ்ய: மாமேகம் சரணம் வ்ரஜ: அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசு ச:’ என்று அவன் நென்னலே வாய்நேர்ந்த சரம ஸ்லோகத்தை ஸ்மரிக்க வேண்டும். இப்படி எல்லாவற்றையும் செய்து, ஸ்ரீவைஷ்ணவனுக்கு ஆபரணங்களாகக் கொண்டு இவற்றை அணிந்து எங்களுடைய ஸ்வாபாவிகமான ஜ்ஞான, பக்தி, வைராக்ய லக்ஷணங்களுடன் உன்னிடம் வருவோம் என்கிறாள் ஆண்டாள்.

ஆடையுடுப்போம் என்று சொல்லும்போது, இவர்கள் இதற்கு முன் ஆடை உடுத்தாமல் இல்லையே என்றால், இப்போது இவர்களுக்கு உயர்ந்த நிலை வந்துவிட அதைக் கொண்டாட, உடுத்து களைந்த நின் பீதகவாடை என்று பெரியாழ்வார் பாடியதுபோல், அவனுடைய ஆடையையும் இவர்கள் எடுத்து அணிகிறார்கள். மேலே சொன்ன அலங்காரங்களுக்கெல்லாம் அடிப்படையாக அவன் இவர்களுக்கு கொடுத்த சேஷத்வ ஞானத்தை ஆடையாக அணிவோம் என்பது உட்பொருள்.

அதன்பின்னே பால்சோறு, மூட நெய்பெய்து முழங்கை வழிவார என்று வ்ரத பூர்த்தியாக, பால் சோறும், முழங்கை வரை வழியும் அளவுக்கு நெய்யுமாக அவனுக்கு சமர்பித்து தாங்களும் அனுபவித்து கூடியிருந்து குளிர்வோம் என்கிறாள். பாலில் சோறு கலந்தார்போல், பாலில் நெய் கலந்தார்போல் என்று ஒன்றோடு ஒன்று கலந்து புதிய நறுசுவையுடன் உண்போம். அவனில் நாமும், நம்மில் அவனுமாக கலந்து கரைந்து, அஹமன்ன என்று நாம் அவனுக்கு உணவாகவும், அஹமன்னாத: என்று நமக்கு அவன் உணவாகவும் உண்டு களித்து – உன்னுடன் நாங்கள் சாயுஜ்ய பதவி அடைந்து நீயும் நாமுமாக கலந்து என்றென்றும் புதியதாக நித்யமாக கூடியிருந்து இன்பத்தை பெறுவோம் என்று ஆண்டாள் முடிக்கிறாள் .

1610341031000.png
 
திருப்பாவை(28).....!!!

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்* அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து* உன்தன்னைப்-
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்* குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா* உன்தன்னோடு-
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது* அறியாத பிள்ளைகளோம் அன்பினால்* உன்தன்னைச்-
சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே* இறைவா நீ தாராய் பறை ஏலோர் எம்பாவாய்.

ஸ்ரீஆண்டாள் 🔹 திருப்பாவை(28)

கோவிந்தா! உன்றன்னைப் பாடிப்பறை கொள்ள வந்தோம் என்று சொன்ன ஆண்டாளிடம், க்ருஷ்ணன் லீலா விநோதனாக விளையாட்டுப் பேச்சு பேசுகிறான். அப்படி நான் உங்களுக்கு நீங்கள் கேட்டதையெல்லாம் அளிக்கிறேன், பதிலுக்கு நீங்கள் என்ன கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று கேட்க ஆண்டாள் தனது ஆகிஞ்சன்ய குணத்தை (கைமுதல் இல்லாமையை) வெளிப்படுத்தி தனது நிலையை விளக்குகிறாள். இந்த பாசுரம் மிக உயர்ந்த அர்த்த செறிவு கொண்டது. வைஷ்ணவத்தில் ரஹஸ்ய த்ரயங்களுள் ரத்னமாக விளங்கும் த்வய மந்திரத்தை இந்த பாசுரத்துடன் சாம்யப் படுத்தி பூர்வாசார்யர்கள், இந்த பாசுரமும், ‘சிற்றம் சிறு காலே’ பாசுரமும் த்வய மந்திரத்தின் இரு பாகங்களை சொல்வதாக அருளியிருக்கிறார்கள்.

கறவைகள் பின்சென்று கானஞ் சேர்ந்துண்போம் என்றால், எங்களிடம் பெரிதாக ஆசார்ய சம்பத்தோ, சத் சங்க ப்ராப்தியோ இல்லை. நாங்கள் கறவைகள், பசுக்கள் பின்னாலே சென்று மாடு மேய்ப்பவர்கள். காட்டில் போய் சேர்ந்து உட்கார்ந்து உண்போம். பிறகு மாலையில் வீட்டுக்கு பசுக்களை ஓட்டி வருவோம். இப்படியே பொழுது போக்கினோம். எங்களுக்கு புண்ணியம் எது பாபம் எது என்று எதுவும் அறியாத பிள்ளைகளோம் என்றாள். சரி நீங்கள் தான் இப்படி, உங்கள் பூர்வர்கள் நல்ல காரியங்கள் ஏதாவது செய்திருக்கிறார்களா என்று கண்ணன் கேட்க, அப்படி எங்கள் குலத்திலேயே வழக்கமில்லை. எங்கள் குலம் அறிவொன்றுமில்லாத ஆய்க்குலம். இப்படியாக புண்ணியமோ, பாபமோ எதுவுமே இல்லை எங்களிடம்.

எங்களிடம் இருப்பதெல்லாம், யாதவ மணியாக நீ வந்து உதிக்கப் பெற்றோமே அந்த பேறு ஒன்றுதான் இருக்கிறது. உன்றன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம். இவர்கள் புறத்தில் பார்க்க ஞான பக்தி யோகங்களெல்லாம் இல்லாதவர்களானாலும் இவர்களுக்கு ஒரு பெரும் சிறப்பு இருக்கிறது. ஸர்வஜ்ஞனான பகவான் ஸஹஜனாக இவர்களுடன் வந்து பிறந்தானே! அந்தப் பேறொன்று போதாதா? அறிவொன்று மில்லாத ஆய்க்குலம் என்று இவர்கள் ஆகிஞ்சன்யத்தை தெரிவித்தாலும், பகவானை உணர்ந்து கொண்டார்கள். அவனது செளலப்ய செளசீல்யாதி குணங்களை புரிந்து கொண்டார்கள். தெய்வத்தை தமக்குள் உணர்ந்தார்கள்.

கண்ணா, எங்களிடம் நீ குறை என்று பார்க்க ஆரம்பித்தாயானால் அது அளவிலடங்காமல் இன்னமும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இப்படி நீ எங்களை, எங்கள் தகுதியைப்பார்த்து நீ ஏற்றுக் கொள்ள நினைக்காதே! நீ எங்களோடு ஒருவனாக வந்து பிறந்த உனக்கேது குறை! குறைவொன்றுமில்லாத கோவிந்தா! எங்கள் அறியாமை பாதாளம் வரை ஆழமுள்ள பள்ளம் என்றால் அதையும் நிறைக்கக்கூடிய மலையளவு கருணை கொண்ட பர்வதமாகவன்றோ நீ இருக்கிறாய்! அதோடு நாங்கள் எதையாவது வைத்திருந்து அதை விட்டு விட்டு உன்னிடம் வந்தோம், நாங்கள் ஒரு தியாகத்தை செய்தோம், பதிலுக்கு நீ பரிசு கொடுத்தாய் என்று உன் கருணையிலே குறை காண்பதற்கு இடமில்லை. எல்லாமே உன்னுடையது. எங்களிடம் எதுவும் இல்லை. அதனால் உனக்கு அந்த குறையும் வரப்போவதில்லை. உன் கருணைக்கும் எங்கள் அறியாமைக்கும் நேராகிவிட்டது.

அதோடு உனக்கு வேறொரு நிர்பந்தமும் உண்டு – அது எங்களோடு உனக்கு உண்டான சம்பந்தம்! உன்றன்னோடு உறவேல்! நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது! – இனி அந்த உறவை அறுத்துக் கொள்ளவே முடியாது. எங்களை இந்த ஜகத்தில் வந்து பிறக்கப்பண்ணியவனே நீதானே! நீ காரணம்.. நாங்கள் காரியம். இது ஆத்ம சம்பந்தம். ‘நீ எங்கள் கையில் தந்த மூலப்ரமாணத்தில் முதலெழுத்தைப் பார்த்துக் கொள்ளாய்!” என்றார்கள் பூர்வாசார்யர்கள். என்னை ஆஸ்ரயித்தவனை நான் என்று கைவிடாமல் ரக்ஷிக்கிறேன் என்று சத்யம் செய்ததை நினைவு கொள் என்கிறார்கள்.

உன்னை எங்களுக்கு நடுவே பிறக்கப் பெற்ற புண்ணியம் தவிர வேறு எதுவும் இல்லை என்பது நன்றாக தெரிகிறது. ஆனால பாவங்கள்? இமைக்கிற பொழுதில் எண்ண முடியாத அளவுக்கு பாவத்தை சேர்த்துக் கொள்கிற ஜீவன் மனிதன். அப்படி ஏற்படுகிற பாபத்துக்கு அபராத க்ஷமாபனமாக சொல்கிறார்கள். அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னைச் சிறுபேரழைத்தனவும் சீறி அருளாதே! கோவிந்தா என்று கூப்பிட்டது வரைக்கும் நிறைய பாவங்களை செய்திருக்கிறோம். மஹதோ மஹீயனான உன்னை – பெரியவற்றுக்கும் பெரியவனான உன்னை எளிமையாக கோவிந்தா என்று சிறு பேர் கொண்டு அழைத்திருக்கிறோம். அழைத்தனவும் எனும் போது, இம்மாதிரி பலவாறும் குறைவுள்ள மனிதர்களோடு சமப்படுத்தி சிறு பேர் சொல்லி அழைத்திருக்கிறோம். இது அறியாமையாலும், பால்ய வயதினாலும், அன்பினால் ஏற்படுகின்ற சுவாதீனத்தாலும் ஏற்பட்ட பிழைகள், இவற்றைக் கண்டு கோபம் கொள்ளாமல் மன்னித்துவிடு என்று கேட்கிறார்கள்.

அடுத்து, எங்கள் குறைபார்க்காது, குறைகளை மன்னித்து, எங்களை ஏற்று இறைவா! நீ தாராய் பறை! என்றார்கள். இறைவா! என்ற பதத்தில் இவர்களது நைச்ய பாவம் வெளிப்படுகிறது. இதுவரை மாலே! மணிவண்ணா! கோவிந்தா! என்றெல்லாம் பல பெயர்கள் சொன்னவர்கள், இறைவா என்று அவன் இறைமையை சொல்கிறார்கள். நீ பெரியவன், நாங்கள் சிறியவர்கள். நீ காரியமாயிருக்க நாங்கள் காரணமாயிருப்பவர்கள். நாங்கள் சரீரமாயிருக்க நீ சரீரியாய் இருக்கிறாய். நீ இன்றி நாங்கள் இல்லை. உன் உடலில் நாங்கள் ஒரு சிறு பகுதியைப்போல. பாவங்களை தன் கை செய்தது, தன் கால் செய்தது என்று ஒருவன் சொல்லுவனோ! நீ உடமைக்காரன் – ஸ்வாமி! நாங்கள் உன் உடமை – சொத்து! ‘உடமையையிழக்கை உடையவனிழவன்றோ. அன்றி அந்த உடமைக்கிழவன்றே!’ என்றபடி நீ எங்களை இழந்தால் அது உனக்குத்தான் இழப்பே தவிர உன் சொத்தான எங்களுக்கு இழப்பில்லை. ஆதலால், குற்றம் குறைகளை மன்னித்து, பொருட்படுத்தாது, நாங்கள் விரும்புவதை அளித்து எங்களை ஏற்றுக் கொள் என்று கேட்கிறார்கள்.

1610443055003.png
 
திருப்பாவை(29).....!!!

சிற்றஞ் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து* உன்- பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்*
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்திற் பிறந்து* நீ- குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது* இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா* எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும்* உன்தன்னோடு-
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்* மற்றை நம் காமங்கள் மாற்று ஏலோர் எம்பாவாய்.

ஸ்ரீஆண்டாள் 🔹 திருப்பாவை(29)

இது திருப்பாவையின் முத்தாய்ப்பான பாசுரம். இதற்கு அடுத்த பாசுரம் சாற்றுமுறையாக, வாழ்த்துரையாக ஆண்டாள் பாடியது. இந்த பாசுரம் வரை தன்னை ஆய்ப்பாடியைச் சேர்ந்த பெண்பிள்ளையாக எண்ணிக்கொண்டு ஆண்டாள் பாடினாள். அடுத்த பாசுரத்தில் பெரியாழ்வாரின் பெண்ணாக, திருப்பாவை பாசுரங்களை இயற்றிய கவியாக பலஸ்ருதி சொல்லி முடிக்கிறாள். இந்த பாசுரம் பகவத் தாஸ்யம் சொல்லுகிற பாசுரம். பதினைந்தாம் பாசுரமான எல்லே இளங்கிளியே! பாசுரத்தில் பாகவத தாஸ்யம் சொல்லப்பட்டது. இந்த இரண்டு பாசுரங்களையுமே பூர்வாசார்யர்கள் ஆச்சர்யப்பட்டு திருப்பாவையாவது இப்பாட்டிறே! என்று புகழ்ந்தார்கள்.

ரொம்பவும் தத்துவமாகவும், கவித்துவமாகவும் சொல்லி வந்த ஆண்டாள், பகவானை நேரில் பார்த்த பரவசத்தை கடைசி ஐந்து பாசுரங்களில் வெளிப்படுத்துகிறாள். அதிலும் இந்த பாசுரம் முடிந்த முடிவாக தான் விரும்பி வந்தது என்ன என்று உடைத்து சொல்லி அவனுடைய தாஸ்யத்தை தனது பரம புருஷார்த்தமாக கேட்டுக்கொண்ட பாசுரம். அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னைச் சிறுபேரழைத்தனவும் சீறியருளாதே! என்று அபராத க்ஷமாபனம் செய்து தனது முன்வினைகளை சரணாகதியின் மூலம் அழித்தது இதற்கு முந்தைய பாசுரத்தில். அந்த பாசுரத்தில் முக்கியமான வார்த்தைகள் அவை.

அதே போல் இந்த பாசுரத்திலும் இற்றைப் பறைகொள்வான் அன்று! காண், கோவிந்தா, எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு உற்றோமே யாவோம், உனக்கே நாமாட்செய்வோம்! என்று நாங்கள் வெறும் பறை எனும் வாத்தியத்தை பெற்றுப்போக வரவில்லை. அது ஒரு வியாஜமே! நாங்கள் வந்தது உன்னிடம் அடிமையாக இருக்கும் பெரும் பேற்றை பரம புருஷார்த்தமாக பெற்றுப்போகவே! இதை பூர்வாசார்யர்கள், ‘ஸ்ரீ பரதாழ்வானைப் போலே விஸ்லேஷித்திருக்கையன்றிக்கே, இளைய பெருமாளைப் போலே அடிமை செய்ய வேணும்’ என்று தெரிவிக்கிறார்கள். பரதனைப்போலே உன்னை பிரிந்த போது, அன்னம் தண்ணீர் இல்லாது உன் பாதுகையையே நமஸ்கரித்து அதனடிவாரத்திலேயே இருந்து பக்தி பண்ணிக்கொண்டிருந்தபடி. உன்னோடு இருக்கும்போது, இளைய பெருமாளான லக்ஷ்மணனைப்போல் எல்லாவிதமான தாஸ்யங்களையும் குறைவற்று உனது திருப்திக்காகவே செய்தபடி இருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

எற்றைக்கும் என்பது எக்காலத்திலும் என்று ஸ்ரீவைகுண்டத்தில் அருகில் இருந்து செய்யும் தொண்டு. ஏழேழ் பிறவி என்றால், பகவான் பூமிக்கு வந்தாலும் அவனுடனே வந்து இருந்து அவன் கூடவே தொண்டு செய்தல். ஏழேழ் பிறவி என்பது எண்ணிக்கை என்று கொள்ளாமல் எத்தனை முறையானாலும் என்றே கொள்ள வேண்டும். வேறொரு விதமாகப் பார்த்தால், இனி ஒரு வேளை பிறப்பெடுக்க நேர்ந்தால், அப்போதும் உனக்கு தாஸனாகவே இருக்க வேண்டும் என்று கேட்பதாகும். மற்றை நம் காமங்களை மாற்றி உனக்கே ஆட்செய்ய அருளுவாய் என்று கர்ம வாஸனை எங்களை வேறு விஷயங்களில் இழுத்து அமிழ்த்தி விடாமல் அதிலிருந்து விடுதலை அளிக்க வேண்டும் என்று ப்ரார்த்திக்கிறார்கள்.

இப்படி கேட்பதற்கு இந்த பாசுரத்தின் முன் பாதியில் ஒரு உறுதியை வெளிப்படுத்துகிறாள். சிற்றஞ் சிறுகாலே வந்து… என்று இளம் விடியற்காலையில் வந்து எனும்போது, அவனை தேடி அடி எடுத்து வைத்து வந்ததற்கே அவன் ரக்ஷிக்க சங்கல்பித்து விடுவனாம். பின் ‘உன்னை சேவித்து’ என்று அவனை விழுந்து வணங்கிவிட்டால், அதற்கு என்ன தரக்கூடும் என்று திகைத்துப் போவானாம் பகவான். ‘அதுக்கு மேலே ஓரஞ்சலியையும் உண்டறுக்கமாட்டாத உன்னைச் சேவித்து’ என்று பூர்வாசாரயர்கள் சொல்கிறார்கள். ‘உன் பொற்றாமரை அடியே’ என்று ஏகாரமாக இழுத்து சொல்வதால் வேறொருவரையும் நாடாமல் உன் திருவடிகளையே நாடி வந்து சேவித்து உன்னை போற்றி ஸ்தோத்திரம் செய்து, கவன ஈர்ப்பாக ‘பொருள் கேளாய்!’ என்று நாங்கள் வந்த காரியத்தை கேள் என்கிறாள்.

பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து என்று சொல்லும் போது, ‘ரக்ஷ்யமான பசுக்கள் வயிறு நிறைந்தாலல்லாது தாங்களுண்ணாத குலம்’ என்று ஆயர் குலத்துக்கு உள்ள லக்ஷணத்தைப்போல் தம்மிடம் ரக்ஷணத்துக்கு வந்த ஜீவனை ரக்ஷிக்காமல் விடாத நீ, குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது! என்று உறுதியாய் சொல்கிறாள். நீ எங்களை கொள்ளாமல் விடுவது உன் ஸ்வரூபத்துக்கு விரோதமாகும். அதனால் நீ நிச்சயம் எங்களை ரக்ஷிப்பாய் என்று மஹா விஸ்வாசத்தை வெளிப்படுத்துகிறாள்.

நாங்கள் உன்னிடம் சூடகம், பாடகம் என்று என்னென்ன கேட்டாலும் கொடுத்தாய். நாங்கள் அதை மட்டுமே பெற்றுப்போக வரவில்லை. அவைகளெல்லாம் இப்போது நாங்கள் கேட்கப்போவதான மோக்ஷத்துக்கு (நீ உகக்கூடிய) சாதனங்கள். எங்களுக்கு உன்னிடம் ஸ்மரணை ஏற்படுத்துவதும், உன்னை வந்தடைவதற்கு ஏற்ற சாதனத்தைக் கொடுப்பதும், செப்பமுடைய உன் திறலால் எங்கள் சாதகத்திற்கு விரோதமாக இருப்பதை நீக்குவதும், மற்றை நம் காமங்கள் மாற்றுவதும், எங்களோடே அந்தர்யாமியாய் இருந்து தேற்றுவதும் உன் அருளாலே கிடைக்க வேண்டும். சாத்யோபாயங்களும், சித்தோபாயங்களும் எல்லாம் உன்னாலேயே கிடைக்க வேண்டும், நீயே சரணம் என்று சரணாகதி செய்கிறாள் ஆண்டாள்.

1610504669494.png


1610504686719.png


1610504733359.png
 
திருப்பாவை(30).....!!!

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்* திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி*
அங்குப் பறைகொண்ட ஆற்றை* அணி புதுவைப்- பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன* சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே* இங்கு இப் பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்*
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்* எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

ஸ்ரீஆண்டாள் 🔹 திருப்பாவை(30)

வங்க கடல் எனும் மரக்கலங்கள் மிதக்கும் பாற்கடலைக் கடைந்து மா என்கிற லக்ஷ்மியைப் பெற்ற மாதவனை, ஆஸ்ரிதர்களுக்கு ஊறு செய்த அசுரர்களை அழித்த கேசவனை, ஆய்ப்பாடியில் திங்கள் திருமுகத்து சேயிழையார்களான பெண்பிள்ளைகள், அவன் இருக்குமிடத்துக்கே சென்று இரைஞ்சி, அங்கே பறை கொண்டார்கள். பறை எனும் பரம புருஷார்த்தத்தை அவனிடமிருந்தே பெற்றார்கள். இந்த ஆற்றை – பெருஞ்செயலை பிற்காலத்தில் ஆண்டாள் அனுக்கிரிஹித்து, பக்தியால் உணர்ந்து பாடினாள்.

அணி புதுவை – இந்த பூவுலகிற்கே அணியான புதுவை என்கிற ஸ்ரீவில்லி புத்தூரில், பைங்கமல தண் தெரியல் என்று தண்மையான குளிர்ந்த மாலைகளை அணிந்தவராகவும், பட்டர்பிரான் என்று பண்டிதர்களுக்கு தலைவராகவும் பெரியாழ்வார் விளங்குகிறார். அப்பேர்பட்டவருடைய திருமகளான கோதை நமக்கு கொடுத்த பரிசான இந்த சங்கத்தமிழ் மாலையாகிய இந்த முப்பது பாசுரத்தையும் தப்பாமல் உரைப்பவர்களை – தன் இரண்டு தோள்கள் நான்கு தோள்களாகும் படியாக, இரண்டு கை போதாது இந்த ஆஸ்ரிதரை அணைக்க என்று நான்கு கைகளால் பகவான் எடுத்து அணைப்பனாம். அப்படி செங்கண் திருமுகத்து செல்வத் திருமாலால் என்றும் எங்கும் திருவருள் என்று லக்ஷ்மி கடாக்ஷம் பெற்று இன்புறுவர் என்று மங்களா சாசனம் செய்கிறாள்.

‘நற்கன்னுக்கிரங்குந்தேனு தோற்கன்னுக்குமிரங்குமாபோலே…’ என்று வியாக்கியானத்தில் சொன்னபடி, நாம் ஆய்ப்பாடியை சேர்ந்தவர்கள் இல்லாவிட்டாலும், ஆழ்வார் ஆசார்யர்கள் ஆண்டாளைப்போல் இல்லாமல் போனாலும், இந்த திருப்பாவை முப்பதும் தப்பாமல் சொன்னோமானால், நல்ல கன்றைப்போலே, தோல் கன்றுக்குட்டிக்கும் பசு இரங்கி பால் சுரப்பது போல், பகவான் அருளுவன் என்று சொன்னார்கள்.

இந்த பாசுரத்துடன் திருப்பாவை நிறைவுக்கு வருகிறது. இதில் சித்தாந்த விரோதமாகவோ, ஆசார்யர் உபதேச விரோதமாகவோ, பகவத் அபசாரமோ, பாகவத அபசாரமோ, இன்னும் அறியாத வகையில் எதாவது குறைகள் இந்த உரையில் நலிந்தும் வலிந்தும் ஏற்பட்டிருக்குமேயானால், பெரியோர்கள் க்ஷமிக்க வேண்டும் என்று உளமாற சேவித்து கேட்டுக்கொள்கிறேன்.

இந்த மார்கழியில், திருப்பாவையை சொன்னவர்கள், கேட்டவர்கள், படித்தவர்கள், எழுதியவர்கள் என்று எல்லோருக்கும் கோதையின் அருள், அவள் உகந்த செல்வத்திருமால் கண்ணனது அருள் தட்டின்றி கிடைக்கட்டும். வாழ்வில் எல்லா மங்களங்களும் அடைந்து எங்கும் அடியார்கள் ஆசார்யர்கள் தொடர்பும், சத்வ குணமும், ஐஸ்வர்யங்களும், பகவத் கிருபையும் பெற்று இன்புறுவர்.இனிய திருப்பாவை உரை இனிதே நிறைவடைந்தது.

திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே!

திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!

பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே!

ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!

உயரரங்கற்கே கண்ணியுகந்தளித்தாள் வாழியே!

மருவாறும் திருமல்லி வளநாடு வாழியே!

வண்புதுவை நகர்கோதை மலர்பாதங்கள் வாழியே!

ஆண்டாள் திருவடிகளே சரணம்...!

1610555331251.png
 
திருப்பாவை (1).....!!!

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்* நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்!* சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!*
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்**
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்*
நாராயணனே நமக்கே பறை தருவான்*
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

ஸ்ரீஆண்டாள் திருப்பாவை(1)

செல்வம் நிறைந்துள்ள
திருவாய்ப்பாடியில்
கைங்கர்ய ஸம்பத்தையும் இளம் பருவத்தையும் உடைய பெண்காள் !
விலக்ஷணமான பூஷணங்களை அணிந்துள்ளவர்களே !
(மாதங்களிற் சிறந்த) மார்கழி மாஸமும் பூர்ண சந்திரோதயத்தையுடைய (சுக்கில பக்ஷத்திய) நல்லநாளும் (நமக்கு வாய்த்து நின்றன.)
கூர்மை பொருந்திய வேலாயுதத்தை உடையவனும்
(கண்ணபிரானுக்குத் தீங்கு செய்யவரும் நீச ஜந்துக்கள் பக்கலிலும் சீறிக் கொடுமைத் தொழிலைப் புரிபவனுமான
நந்தகோபனுக்கு பிள்ளையாய்ப் பிறந்தவனும், அழகு நிறைந்த கண்களை உடையளான
யசோதைப்பிராட்டிக்கு
சிங்கக்குட்டி போலிருப்பவனும்,
காளமேகத்தோடொத்த திருமேனியையும்
செந்தாமரைப் பூப்போன்ற திருக்கண்களையும்
ஸூர்யனையும் சந்திரனையும் போன்ற திருமுகத்தை உடையனுமான
ஸ்ரீமந் நாராயணன் தானே (‘அவனால் பேறு’ என்றிருக்கிற) நமக்கே பறையை
கொடுக்குமவனாயிற் நின்றான், ஆதலால், இவ்வுலகத்தவர்கள்
கொண்டாடும்படி
(இந்நோன்பிலே)ஊன்றி
நீராட வர விருப்பமுடையீர்களே !
வாருங்கள் ஏல் ஓர் எம்பாவாய் !

ஆயர் சிறுமிகள் “நாம் நோன்பு நோற்பதற்கீடாக நமக்கு இங்ஙனே விலக்ஷணமானதொரு காலம் நேர்பட்டபடி என் !” என்று காலத்தைக் கொண்டாடி மார்கழி நீராட்டத்தில் விருப்பமுடைய பெண்களை விளிக்குமாறு கூறுவது, இப்பாட்டு.

பகவத் கீதையில் கண்ணபிரான் “மாஸங்கள் அனைத்தினுள்ளும் மார்கழி மாதமாகிறேன் நான்” என்று இம்மாதத்திற்குள்ள வீறுபாடு தோற்ற அருளிச் செய்தமையால் அம்மாதம் வாய்க்கப் பெற்றவர்கள் அதனைக் கொண்டாடாதிருக்க வல்லரல்லரே. இராமபிரானை முடிசூட்டப் பாரித்து முயன்றபோழ்து வஸந்தருதுவில் முதன்மையான மாதம் தன்னடையே நேர்பட, அதனை அங்குக் கொண்டாடினாற்போல், இவர்களும் நோன்பு நோற்கமுயலத் தன்னடையே வாய்த்த மார்கழி மாதத்தை நினைந்து நெஞ்சு கனிகின்றனர்.

நற்காரியங்கள் செய்ய விரும்பினார்க்குச் சாஸ்திரங்களில் விதிக்கபட்ட சுக்லபக்ஷமும் இவர்கட்கு நினைவின்றி வாய்த்தபடியால், அதனையும் கொண்டாடுகின்றனர் மதி நிறைந்த நன்னாள் என்று. ஒருவரை ஒருவர் முகங்கண்டு அநுபவித்தற்கும், எல்லாருங் கூடிச் சென்று கண்ணபிரானை உணர்த்துவதற்கும் பாங்காக நிலா நேர்பட்டமையால் மகிழ்ச்சி மிக்கது. இவர்கள் கண்ணபிரானோடு ஸம்ச்லேஷிப்பதற்கு ஊரார் விரோதிகளயிருக்கும் காலத்தில் “நந்தகோபாலன் கடைத்தலைக்கே நள்ளிருட்கண் என்னை உய்த்திடுமின்” என்று நள்ளிருளை வேண்டுவர்கள்; இப்போது அங்ஙனன்றி க்ருஷ்ண ஸம்ச்லேஷத்திற்கு ஊராரே இசைந்து நின்றமையால் இருளை வெறுத்து நிலவைக்கொண்டாடுகின்றனரென்க.

View attachment 11214
What about thiruvempaavai? both go togerher, without exception. gross disciminatory
 

Latest ads

Back
Top