லஸ்ஸி, ஐஸ்கிரீம் அல்லது ஃபலூடா
இயல் இசை வல்லபி - வானவன் மாதேவி
மேல்படிப்புக்காக ஜெர்மனிக்குச் சென்றிருக்கும் குடும்ப மருத்துவரின் மகள் சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தபோது, படிப்பின் பளுவைப் பற்றி அவரிடம் கேட்டேன். ஓய்வெடுக்க முடியாத அளவு பாடத்திட்டங்கள், விடுப்பு எடுக்க இயலாத அளவுக்கு கெடுபிடியான விதிமுறைகள், சமையல் உள்ளிட்ட சொந்தத் தேவைகளைத் தாமே கவனித்துக்கொள்ள வேண்டிய சூழல். இவற்றினிடையே 'சுப்பாராவ் சிறுகதைத் தொகுப்பை உடனே அனுப்பி வை, வாசிக்க வேண்டும்' என்று தந்தைக்குக் கடிதம் எழுதியவர் அவர்.
அலட்டிக்கொள்ளாமல் அவர் சொன்ன பதில்: “நேரத்தை நமக்கானதாக ஆக்கிக்கொண்டால் எல்லாம் சாத்தியம்தான்... என் சக மாணவர் ஒருவர் அங்கே கவிதைப் போட்டிகளில் பரிசு வாங்கிக்கொண்டிருக்கிறார், அதற்கு என்ன சொல்கிறீர்கள்?”
85 வயதைத் தொட்டுக்கொண்டிருக்கும் கல்வியாளர் ச.சீ. இராஜகோபாலன் முக்கிய நாளிதழ்கள், வார-மாதப் பத்திரிகைகள் மட்டுமல்லாமல் இலக்கிய இதழ்கள், வெளிநாட்டிலிருந்து தருவிக்கும் அறிவியல் ஏடுகள் என வாசித்துக்கொண்டும், தமது சொந்தக் கருத்தோட்டங்களை எழுதிக்கொண்டும் இருக்கும்போதே, ஒரு மின்னஞ்சல் விடாது வாசித்து, தக்க பதிலும், எதிர்வினையும் போடத் தவறுவதில்லை. முகநூலிலும் இருக்கிறார் என்று கருதுகிறேன்
புதுக்கோட்டை பிளஸ்-டூ மாணவர் ஷியாம் சுந்தரவேல், தனது பயிற்சித் தேர்வுகளுக்கிடையே தந்தையிடம் கெஞ்சி அனுமதி பெற்று, அவரையும் உடன் அழைத்துக்கொண்டு திருச்சியில் நடைபெற்ற ‘தி இந்து-தமிழ்’ வாசகர் திருவிழாவில் பங்கேற்றுத் திரும்பியிருக்கிறார். படிப்பையும் பார்த்துக்கொள்கிறார்.
-
அசோகமித்திரன் படிக்க வேண்டும்!
தசைச்சிதைவு நோய்க்கு ஆளாகியிருந்தாலும் நம்பிக்கையின் சிகரத்தில் வசிக்கும் சேலம் சகோதரிகள் வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி இருவரும் புத்தகத்தைத் தூக்கி மடியில் வைத்துப் படிக்கச் சிரமங்கள் இருந்தாலும் ஓயாது படிப்பவர்கள். ஜெயமோகனின் வெண் முரசு அத்தியாயங்களைச் சூடாக அன்றன்று மடிக் கணினியில் வாசித்துவருகிறோம் என்கிறார்கள். பெரிதும் பேசப்படும் கவிஞர் இசையின் சமீபத்திய கவிதைத் தொகுப்பையும் படித்தாயிற்று என்கிறார்கள். “எந்த எழுத்தாளரை இன்னமும் வாசிக்கவில்லையே என்று ஏங்குகிறீர்கள்?” என்று கேட்டால், “அசோகமித்திரன்” என்று பதில் வந்தது.
அவசரமாக ஒரு பரிசுப் புத்தகம் தர வேண்டுமே என்று மறைந்த மருத்துவர் மாணிக்கவாசகத்தின் ‘தூங்காமல் தூங்கி’என்ற அற்புதமான நூலின் பிரதியை ஓசைப்படாமல் எனது மாமியாருடைய அலமாரியிலிருந்து களவாடி எடுத்துச் சென்ற அன்று மாலையே அவரிடம் பிடிபட்டுவிட்டேன். இரண்டு தோள்பட்டையிலும் எலும்புத் தேய்வினால் 24 மணி நேரமும் வலியெடுத்து உதறிக்கொண்டிருக்கும் கைகளைப் பொருட்படுத்தாமல் படுத்தவாறே புத்தகங்களை வாசித்துத் தள்ளும் அவரது உள்ளத்துக்கு நெருக்கமான புத்தகம் அது. வேறு பிரதியை வாங்கித் தந்ததும்தான் விட்டார்.
Read more at: ?????, ????????? ?????? ?????? - ?? ?????