தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. வான சாஸ்திரப்படி, இந்த நாள் உத்தராயணத்தின் தொடக்கம். இந்து மதத்தின் நம்பிக்கைப்படி தேவலோகத்தின் காலைப்பொழுது. சூரியன் தனது வடக்கு நோக்கிய பயணத்தை தை மாதம் தொடங்குகிறார். தமிழகத்தில், நெல் வயல்களில் மார்கழி மாதம் அறுவடை முடிந்து, உழவர்கள் தானியங்கள், கால்நடைகளுக்குத் தேவையான வைக்கோல் ஆகியவற்றை ஈரம் போகுமாறு உலர்த்தி தயார் செய்யும் காலம். அறுவடை என்பது உழவர்களின் உழைப்பிற்கான பலன் கிடைக்கும் தருணம். மகிழ்ச்சியான சூழலில் சூரியன் மற்றும் கால் நடைகளுக்கு நன்றி சொல்லவும் இந்த பண்டிகை தோன்றியிருக்கலாம். கேரளத்தின் ஓணம் பண்டிகை எப்படி அனைத்துப் பிரிவு மக்களால் கொண்டாடப் படுகிறதோ அவ்வாறே தமிழகத்தில் பொங்கல் பண்டிகை அனைத்துப் பிரிவினராலும் கொண்டாடப் படுகிறது. முக்கியமாக உழவுத்தொழில் அதிகம் செய்யப்படும் மாவட்டங்களில் அதிக உற்சாகத்துடன் இது கொண்டாடப்படுகிறது.
வீடுகளைப் பொறுத்தவரை, மண் பானையில் பசும் பாலை சூடேற்றி, அது பொங்கி வழியும் தருணத்தில், தயாராக வைத்திருக்கும் புது அரிசியை அதில் இட்டு, வடிகட்டிய வெல்லப்பாகு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றை அதில் இட்டு தயார் செய்த பொங்கலை, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், கரும்பு ஆகியவற்றுடன் சூரியனுக்கு நிவேதனம் செய்தபின் அனைவரும் அந்த பொங்கலை சாப்பிடுவர். குதூகலத்துடன் நிகழும் இந்தக் கொண்டாட்டம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, உழவர்களுக்கு புத்தாடை வழங்கி அவர்கள் குடும்பத்தினருடன் நில சுவான்தார்களுடன் கொண்டாடப்பட்டதை நான் தஞ்சாவூர் மாவட்டத்தில் கண்டிருக்கிறேன். மன நிறைவு தரும் விழாக்களில் பொங்கல் பண்டிகை அலாதியானது.
மறுநாள் கால்நடைகளைக் குளிப்பாட்டி, மஞ்சள் குங்குமம் இட்டு, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, மாலை அணிவித்து, பூஜை செய்து பொங்கல் ஊட்டி, ஊர்வலமாக அவற்றை அழைத்து சென்று, திரும்பும்போது, வாயிலில் கற்பூர தீபம் செய்து, உலக்கையை குறுக்காகக் கிடத்தி, அதனை தாண்டி கால்நடைகளை உள்ளே அழைத்து வருவது வழக்கம். மாட்டுப் பொங்கல் கால் நடைகளுக்கு நன்றி சொல்லும் நாள். எங்கள் ஊரில் அன்றைய தினம் விளையாட்டுப்போட்டிகளும் நடைபெறும். வெற்றியாளர்களுக்கு பரிசுகள் குவியும். மொத்தத்தில், பொங்கல் பண்டிகை போல் இனிதாவது ஏதும் இல்லை.