• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Different forms of Lord Ganesha and it's specialty

praveen

Life is a dream
Staff member
உருவாய் அருவாய் திருவாய் விளங்குபவன் இறைவன். அனைத்துயிர்களிலும் அவனே குடிகொண்டுள்ளான். எனவே அவனது திருக்கோலங்களை எண்ணுவது சாத்தியமற்றது. இருந்தபோதும் மனிதன் இறைவனை மூர்த்தங்களில் வடித்து வணங்குவதில் பெரிதும் நிறைவடைகிறான்.

அந்த விதத்தில் விநாயகரும், அஷ்ட(8) கணபதி, ஷோடச கணபதி, 21 கணபதி, 51 கணபதி, 108 கணபதி என பல கோலங்களில் வழிபடப்படுகிறார். இத்தகைய சில ஆலயங்கள் குறித்துக் காண்போம்.

விநாயகரின் 32 வடிவங்கள்:
1. பால கணபதி,
2. தருண கணபதி,
3. பக்தி கணபதி,
4. வீர கணபதி,
5. சக்தி கணபதி,
6. துவிஜ கணபதி,
7. சித்தி கணபதி,
8. உச்சிஷ்ட கணபதி,
9. விக்ன கணபதி,
10. க்ஷிப்ர கணபதி,
11. ஹேரம்ப கணபதி,
12. லட்சுமி கணபதி,
13. மகா கணபதி,
14. விஜய கணபதி,
15. நிருத்த கணபதி,
16. ஊர்த்துவ கணபதி,
17. ஏகாட்சர கணபதி,
18. வர கணபதி,
19. த்ரயக்ஷர கணபதி,
20. சிப்ரப்ரசாத கணபதி,
21. ஹரித்ரா கணபதி,
22. ஏகதந்த கணபதி,
23. சிருஷ்டி கணபதி,
24. உத்தண்ட கணபதி,
25. ருணமோசன கணபதி,
26. துண்டி கணபதி,
27. துவிமுக கணபதி,
28. மும்முக கணபதி,
29. சிங்க கணபதி,
30. யோக கணபதி,
31. துர்க்கா கணபதி,
32. சங்கடஹர கணபதி....

இந்த 32 வடிவங்களில், முக்கியமானவர் ருண மோசன கணபதி. இவரின் மற்றொரு பெயர், ரண மோசனர் அல்லது ரிண மோசனர். நான்கு கரங்களுடன் வெள்ளை நிறத்தினைக் கொண்ட இவரைத் தொழுது வர, கடன் தொல்லைகளிலிருந்தும், இதர துன்பங்களிலிருந்தும் நம்மைக் காத்தருள்வார்.

(1) பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்: -

விநாயகருக்குரிய மிகப்பெரிய குடைவறைக்கோயில் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயில். 1600 ஆண்டுகள் பழமையான இக்கோயில் மகேந்திர பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. இங்கு விநாயகர் சதுர்த்தியன்று 18படி அளவில் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டை நைவேத்யம் செய்யப்படுகிறது. விநாயகருக்கு தேர்த்திருவிழா நடைபெறும் ஒருசில இடங்களில் பிள்ளையார்பட்டியும் ஒன்று. விநாயகருக்கும், சண்டிகேசுவரருக்குமாக இரண்டு தேர்கள் இழுக்கப்படும். கற்பகவிநாயகரின் கையில் சிவலிங்கம் உள்ளது. தியானநிலையில் இவர் வீற்றிருக்கிறார்.

திறக்கும் நேரம்: காலை 6 - 12, மாலை 4 -இரவு 8 மணி வரை...
இருப்பிடம்: மதுரையில் இருந்து 70 கி.மீ,


(2) திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார்:-

திருச்சி என்றாலே மலைக்கோட்டை தான். இந்தக்கோட்டை 6ம் நூற்றாண்டைச்சேர்ந்த குணபரன் என்ற மகேந்திர பல்லவர் ஆட்சியில் கட்டப்பட்டதாக தகவல் உள்ளது. உயரம் 275 அடி. மலைக்கோயிலுக்கு செல்ல 417 படிக்கட்டுகள் உள்ளன. மலை உச்சி மேல் அமைந்துள்ள விநாயகரை உச்சிப்பிள்ளையார் என்கின்றனர். ராமாயண காலத்தில் விபீஷணனுக்காக மலை மேல் இந்த விநாயகர் அமர்ந்ததாக புராணங்கள் கூறுகிறது.

திறக்கும் நேரம்: காலை 6- இரவு 8 மணி வரை...


(03) உடுமலைப்பேட்டை பிரசன்ன விநாயகர் கோயில்:-

சக்கர வடிவில் ஊரைக்காக்கும் அரணாக மலைஉடுமலைப்பேட்டை பிரசன்ன விநாயகர் கோயில்: சக்கர வடிவில் ஊரைக்காக்கும் அரணாக மலை அமைந்திருந்ததால் சக்கரகிரி என்றும், அம்மலையில் உடும்புகள் நிறைந்து காணப்பட்டதால் உடும்புமலை என்றும் அழைக்கப்பட்ட இவ்வூர், பின் உடுமலைப்பேட்டை என்றானது. இங்குள்ள பிரசன்ன விநாயகர் கோயிலில் காசிவிஸ்வநாதர், பிரம்மன், சவுரிராஜப்பெருமாள் ஆகிய மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கின்றனர். இத்தல விநாயகர் ஆறடி உயரத்தில், ராஜகம்பீர கோலத்தில், ஏகதள விமானத்தின் கீழ் அமர்ந்துள்ளார். மூஷிக வாகனம் பெரிய அளவில் உள்ளது. முன் மண்டபத்தின் மேற்கூரையில் 12 ராசிகளைக் குறிக்கும் சிற்பம் பொறிக்கப்பட்டுள்ளது. தேவ விருட்சங்களான வன்னி, வில்வம், அரசு ஆகியன இங்குள்ளன. கிருத்திகையில் வெள்ளித்தேரில் விநாயகர் ஊர்வலமாக வருவது சிறப்பு.

திறக்கும் நேரம்: காலை 6 - 12, மாலை 4.30 மணி வரை....
இரவு 9. இருப்பிடம்: உடுமலைப்பேட்டை நகரின்மத்தியில் கோயில் அமைந்துள்ளது.


(04) தஞ்சாவூர் வெள்ளை விநாயகர் கோயில்:-

தஞ்சாவூரிலுள்ள வல்லப விநாயகர் கோயில் பேச்சுவழக்கில் வெள்ளை விநாயகர் கோயில் எனப்படுகிறது. வல்லபை என்பவள், ஒரு சாபத்தால் அரக்கியாக மாறி, முனிவர்களையும் தேவர்களையும் அச்சுறுத்தி வந்தாள். அனைவரும் சிவனிடம் முறையிட்டனர். மனித உடலும், மிருகமுகமும் கொண்ட ஒருவரால் தான் தன் சாபம் நீங்கும் என்று அவளுக்கு சாபவிமோசனம் அளிக்கப்பட்டது. அவள் பல அசுரக்குழந்தைகளைப் பெற்றுத் தள்ளினாள். விநாயகர் அவளை அடக்கி மடியில் இருத்திக்கொண்டார். அவளது கோரிக்கைக்குஇணங்க வல்லப விநாயகர் என்ற பெயரும் பெற்றார்.

இந்தக் கோயிலில் விநாயகருக்குள் (மூலவர்) வல்லபா தேவி இல்லாவிட்டாலும், அவருக்குள் ஐக்கியமாகி, அரூபமாகக் காட்சி தருவதாக ஐதீகம். ஆனால், உற்சவ விநாயகர் வல்லபை சகிதமாகக் காட்சி தருவது சிறப்பு.

இருப்பிடம்: தஞ்சாவூர் கீழவாசல்.
திறக்கும் நேரம்: காலை 6 -10, மாலை 5 - இரவு 8 மணி வரை....


(05) சேலம் ராஜகணபதி:

400 ஆண்டுகளுக்கு முன் ஸ்தாபனம் செய்யப்பட்டது சேலம் ராஜகணபதி கோயில். கலியுகக் கண்கண்ட தெய்வமாக ராஜகணபதி விளங்கியதால் மன்னர் காலத்தில் சிறப்பு பெற்றது. ராஜகணபதியை வழிபடும் பக்தர்களுக்கு மக்கள் செல்வம் கிடைக்கும். பொருட்செல்வம் சேரும். தீராத நோய் தீரும். இவர் தினமும் ராஜ அலங்காரத்தில் தரிசனம் தருவதால் ராஜ கணபதி என அழைக்கப்படுகிறார்.

திறக்கும் நேரம்: காலை 6 - 11, மாலை 4 - இரவு8 மணி வரை...
இருப்பிடம்: சேலம் நகரின் மையத்தில் முதல் அக்ரஹாரம், தேரடி சந்திப்பில் உள்ளது.

(06) லிங்க வடிவில் 11 விநாயகர் கோயில்:-

வேலூர் சேண்பாக்கம் செல்வவிநாயகர் கோயிலில், விநாயகர் 11 சுயம்பு மூர்த்திகளாக (சிற்பியால் செதுக்கப்படாமல் தானாக தோன்றியது) அருள்பாலிக்கிறார். ஆதிசங்கரருக்கு சுயம்புமூர்த்தி தரிசனம் செய்வதில் மிகவும் விருப்பம். இங்கு 11 சுயம்பு மூர்த்திகள் இருப்பதை அறிந்து வந்தார். 11 சுயம்புமூர்த்திகளும் லிங்க வடிவில் இருப்பதைக் கண்டார். பின் தன் ஞான திருஷ்டியால் அனைத்து லிங்கங்களும் விநாயகரே என்பதை அறிந்தார். சுயம்பு மூர்த்திகளுக்கு எதிரில் ஈசான்ய மூலையில் ஸ்ரீசக்ரம்பிரதிஷ்டை செய்தார். ஆதிசங்கரரின் வழிபாடு செய்ததில் இருந்து, இந்த கோயிலின் பழமையும் சிறப்பும் விளங்குகிறது. ஸ்ரீசக்ரத்தின் அருகே நவக்கிரக மேடை அமைத்துள்ளனர். இதிலிருக்கும் சனிபகவான் தனக்கு அதிபதியான விநாயகரை பார்த்திருப்பது தனி சிறப்பு. பொதுவாக விநாயகரின் எதிரே மூஷிக வாகனம் இருப்பதே இயல்பு. ஆனால், செல்வவிநாயகர் எதிரில் யானை வாகனம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

திறக்கும் நேரம்: காலை 6 - 11.30, மாலை 4.30 - இரவு 8 மணி வரை....
இருப்பிடம்:- வேலூரில் இருந்து பெங்களூரு செல்லும் வழியில் 3 கி.மீ., தூரத்தில் சேண்பாக்கம். பஸ் எண் 3.


(07) முதுகைக் காட்டி தோப்புக்கரணம் போடுங்க:

உச்சிஷ்ட கணபதியை மூலவராகக் கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய விநாயகர் கோயில் திருநெல்வேலியில் இருக்கிறது. விநாயகப் பெருமானின் 32 வடிவங்களில் ஒன்று உச்சிஷ்ட கணபதி. அவர் பிரம்மச்சாரி என்று ஒரு தகவல் இருக்க, ஒரு பெண்ணை ஆலிங்கனம் செய்தபடி உள்ள கோலம் அபூர்வமானது. இதுவே உச்சிஷ்ட கணபதி வடிவம். இவரை வணங்கினால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.

தல வரலாறு: உச்சிஷ்டகணபதி என்பதற்கு எச்சில் பட்ட விநாயகர் என்பது பொருள். தூய்மையே தெய்வம் என்பது நம் கோட்பாடு. ஒருநாள் குளிக்காவிட்டாலும் வழிபாட்டுக்கு தகுதியற்றவர்களாக நம்மை எண்ணுகிறோம். தீட்டுப்பட்டவர் நம்மைத் தொட்டால் தற்காலிகமாக கெட்டு விட்டதாக நம்மை நாமே புறக்கணிக்கிறோம். தூய்மையாக இருப்பது அவசியம் என்றாலும் அசுசியான பொருட்களைக் கண்டு அருவருப்பது கூடாது. சுத்தம், அசுத்தம் இரண்டையும் கடந்து செல்வதே பக்குவநிலை. பரந்த மனம் ஒருவனிடம் இருந்துவிட்டால் எங்கும் அழுக்கு இல்லை என்பதை உணரலாம். செடிக்கு மாட்டின் சாணம், மனித மலம் என அழுக்கே உணவாகிறது. அதுவே நம்மிடம் விளைபொருளாகத் திரும்பி வருகிறது. இயற்கை முழுவதும் இந்த நிகழ்வைக் காணலாம். அழுக்கை அழுக்காக கருதக் கூடாது என்பதை உச்சிஷ்ட கணபதி நமக்கு உணர்த்துகிறார். உணவு உண்டபின் எச்சில் இலையைத் தூர எறிகிறோம். அதை அழுக்காகப் பார்க்காமல் உச்சிஷ்ட கணபதியே எழுந்தருளியிருப்பதாக எண்ண வேண்டும். அழுக்கையும் இறைவனாகப் பார்க்கும் தகுதியுடையவர்களுக்காக எழுப்பப்பட்டது உச்சிஷ்ட விநாயகர் கோயில்.

(08) யோகாவில் ஆர்வமுள்ளவரா? கோவை யோக விநாயகரை வணங்குங்க:

முழுமுதற்கடவுளான விநாயகர் கோவை குனியமுத்தூரில் யோக நிஷ்டையில் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். யோகா பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் இவரை வணங்கி வரலாம்.

தல வரலாறு: யோக வளம், தியானசக்தி, ஆன்மிக அறிவு ஆகியவற்றைப் பெறவும். நாடு நலம் பெறவும் வேண்டி யோக நிஷ்டை விநாயகரை பிரதிஷ்டை செய்ய இப்பகுதி மக்கள் நினைத்தனர். மகான்களின் அறிவுரைப்படியும், சிற்ப வல்லுனர்களின் யோசனைப்படியும் சிலையை உருவாக்கினர். அமைதியான சூழலில் கோயில் அமைக்கப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் போன்று யோகநிலையில் இவர் காட்சியளிக்கிறார். இளஞ்சூரியனின் நிறத்தோடு, வலது முன்கையில் அட்சமாலையும், பின்கையில் கரும்பும், இடது முன் கையில் யோக தண்டமும், பின் கையில் பாசக்கயிறும் ஏந்தியுள்ளார். தன்னை நாடி வருவோருக்கு அஷ்ட யோகங்களையும் அருள்பாலிப்பவர்.

கோயில் அமைப்பு: நுழைவுவாயிலில் வடக்கு நோக்கி விஷ்ணு துர்க்கை சந்நிதியும், உள்ளே புற்று, ராகு சிலையும் உள்ளது. உட்பிரகாரத்தில் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களை இறைவன் செய்கிறான் என்பதற்கேற்ப, பிரம்மா, விஷ்ணு, தட்சிணாமூர்த்தி கோலத்தில் சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:விநாயகர் சதுர்த்தி, சங்கடஹரசதுர்த்தி, அமாவாசை,பவுர்ணமி, வெள்ளிக்கிழமை ராகுகால பூஜை.

திறக்கும் நேரம்:- காலை 6 -10, (வெள்ளியன்று பகல் 12), மாலை 5.30 - இரவு 8.30 மணி வரை....
இருப்பிடம்: உக்கடத்தில் இருந்து (4.5 கி.மீ) பாலக்காடு சாலை வழியாக சுந்தராபுரம் செல்லும் மினி பஸ்சில் நிர்மலா மாதா பள்ளியில் இறங்கி கோயிலை அடையலாம்.


(09) தலை ஆட்டினா போதும்: சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ளது தலையாட்டி விநாயகர் கோயில்.


கெட்டி முதலி என்னும் குறுநிலமன்னன் இக்கோயிலை கட்டும் முன்பு விநாயகரிடம் உத்தரவு கேட்டுவிட்டு அதன்பின்பு, பணியைத் துவங்கினான். கோயில் வேலைகள் எல்லாம் முடிந்த பிறகு இவரிடம் வந்து பணிகளை சிறப்பாக முடித்திருக்கிறேனா? என்று கேட்டான். அதற்கு இவர், நன்றாகவே கட்டியிருக்கிறாய்என சொல்லும்விதமாக தனது தலையை ஆட்டினார். எனவே இவருக்கு தலையாட்டி பிள்ளையார் என்ற பெயர் வந்தது. தற்போதும் இவர் தனது தலையை இடப்புறமாக சற்று சாய்த்தபடி இருப்பதை காணலாம். தொழில், கட்டடப்பணிகளைத் தொடங்கும் முன்பு இவரிடம் வேண்டிக் கொண்டால் அச்செயல் முடியும் வரையில் பாதுகாப்பாக இருந்து அதனை சிறப்புற முடித்து தருவார் என்பதால், இவரைக் காவல் கணபதி என்றும் அழைக்கின்றனர்.

திறக்கும் நேரம்: காலை 6 - 12, மாலை 4 - இரவு 8.30 மணி வரை....
இருப்பிடம்: ஆத்தூர் பஸ்ஸ்டாண்டிலிருந்து நடந்து செல்லும் தூரம்.


(10) மொட்டை விநாயகர்:- மதுரையில் உள்ளது மொட்டை விநாயகர் கோயில்.

தனது காவலுக்காக பார்வதி தேவியால் படைக்கப்பட்டவர் கணபதி. பார்வதி தேவியை பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சிவன், கணபதியின் தலையை வெட்டினார். இதை உணர்த்தும் விதமாக இங்குள்ள விநாயகர், தலையில்லாமல் மொட்டை கணபதியாக அருள்பாலிக்கிறார். டாக்டர்கள் சிலர், ஆபரேஷன் செய்யும் முன்பு இவருக்கு தேங்காய் காணிக்கை செலுத்திவிட்டு பணியைத் துவக்குகின்றனர். புதிதாக ஏதேனும் செயலைத்தொடங்கும்போது சீட்டு மூலம் உத்தரவு கேட்கும் முறையும் இங்குள்ளது. வியாபாரிகள் தினமும் கடைதிறக்கும் முன்பு சாவியை இவரிடம் வைத்து பூஜை செய்து விட்டு செல்கின்றனர்.

தரிசன நேரம்: காலை 6 - இரவு 10 மணி வரை...
இருப்பிடம்: மதுரை கீழமாசிவீதி, தேர்நிலை அருகில்.


(12) கும்பகோணம் கரும்பாயிரம் பிள்ளையார்:


வணிகர் ஒருவர்மாட்டு வண்டியில் கரும்புக்கட்டு ஏற்றி வந்தார். அவரிடம் சிறுவன் உருவில் வந்த விநாயகர் கரும்பு கேட்டார். வணிகர் தர மறுத்தார். எனவே கரும்புகளை நாணல் குச்சிகளாக மாற்றி திருவிளையாடல் புரிந்தார். கலங்கி நின்ற வணிகரிடம் தர்மசிந்தனை பற்றி அறிவுறுத்தினார். வணிகர் விநாயகரிடம் மன்னிப்புக்கேட்டார். பின் நாணல் குச்சிகளை மறுபடியும் கரும்பாக மாற்றி அதிசயம் நிகழ்த்தினார். இதன் காரணமாக இவர் கரும்பாயிரம் பிள்ளையார் என அழைக்கப்படுகிறார். கும்பகோணம் நகரத்தின் மூத்த பிள்ளையான இவர் பக்தர்களின் வாழ்வை இனிப்பாக மாற்றிடுவார்.

இருப்பிடம்: கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் அருகில்.
திறக்கும் நேரம்: காலை 5 - 10 , மாலை 3 - இரவு மணி 7 மணி வரை...

(13) புதுச்சேரி மணக்குள விநாயகர்:

அகில இந்திய அளவில் விநாயகர் கோயிலின் விமானம் முழுவதும் தங்கத்தால் வேயப்பட்ட கோயில் இது. விநாயகர் கோயில்களில் வேறு எங்குமே இல்லாத வகையில் பள்ளியறையும் இங்குள்ளது. தினமும் நைவேத்தியம் முடிந்தவுடன் விநாயகர் பள்ளியறைக்கு செல்வார். பள்ளியறைக்கு பாதம் மட்டுமே இருக்கும் உற்சவ விக்ரகம் கொண்டு செல்லப்படுகிறது. விநாயகருக்கு இத்தலத்தில் திருக்கல்யாணம் நடக்கிறது. சித்தி புத்தி அம்மைகள் துணைவியராக உள்ளனர். மூலவரான மணக்குளத்து விநாயகரின் பீடம், கிணறு அல்லது குளத்தின் மீது இருப்பதாகச் சொல்கின்றனர். பீடத்தின் இடப்பக்கம் மூலவருக்கு மிக அருகில் அரை அடி விட்டத்தில் ஒரு ஆழமான குழி செல்லுகிறது. அதில் தீர்த்தம் உள்ளது. இதன் ஆழத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதில் வற்றாதநீர் எப்போதும் உள்ளது.

திறக்கும் நேரம்: காலை 6 - 1, மாலை 4 - இரவு 10 மணி வரை....


(14) காரணம் என்ன தெரியலியே: கோயம்புத்தூர் மாவட்டம் மத்தம் பாளையத்தில் உள்ளது காரணவிநாயகர் கோயில்.

ஏதோ ஒரு காரணத்தால் விநாயகர் இந்த இடத்தில் அமர்ந்ததால் காரண விநாயகர் என அழைக்கப்படுகிறார். கருவறையில் விநாயகரின் அருகில் அவரது தந்தை சிவனின் வாகனமான நந்தி இருப்பது விசேஷ அம்சம். காரண விநாயகரின் சந்நிதி அருகில் அவரது தம்பியான காரண முருகனும், மாமாவான பெருமாளும், ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கின்றனர். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இத்தலத்தில், கால்நடைகளின் விருத்திக்காகவும், நோயற்ற வாழ்க்கை வாழவும் பிரார்த்தனை செய்யப்படுகிறது.

திறக்கும் நேரம்: காலை 8 - மாலை 6 மணி வரை....
இருப்பிடம்: கோயம்புத்தூரில் இருந்து காரமடை சென்று அங்கிருந்து 15 கி.மீ.,
தூரத்தில் மத்தம்பாளையம்.


(15) பொல்லாப் பிள்ளையார்:

அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய தேவாரப் பாடல்களைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி. இவரது தந்தை திருநாரையூர் (கடலூர் மாவட்டம்) சிவன் கோயிலில் உள்ள பிள்ளையாருக்கு தினமும் நைவேத்யம் செய்வார். ஒருமுறை, தந்தை வெளியூர் சென்று விட்டதால், நம்பி கோயிலுக்கு பூஜைக்கு கிளம்பினார். பிள்ளையாருக்கு நைவேத்யம் செய்த பின், அவரைச் சாப்பிடும்படி வற்புறுத்தினார். பிள்ளையாரோ அமைதியாக இருந்தார். மனம் வருந்திய நம்பி, பிள்ளையாரின் மடியில் முட்டி அழுதார். உண்மையான பக்திக்கு மகிழ்ந்த பிள்ளையார் அவர் கொண்டு வந்தசர்க்கரைப் பொங்கலை திருப்தியாகச் சாப்பிட்டார். இந்த தகவலைக் கேள்விப்பட்ட மன்னன் ராஜராஜசோழன் இதை நம்பவில்லை. இருப்பினும், நம்பியின் பேச்சை ஏற்று, பலவகையான பலகாரங்களுடன் கோயிலுக்கு வந்து, பிள்ளையாருக்கு நைவேத்யம் செய்யச் சொன்னான். பிள்ளையார் சாப்பிடவில்லை. உடனே நம்பி பக்தியுடன் அவர் மீது பாடல்களைப் பாடினார். இதுவே இரட்டை மணிமாலை என்று பெயர் பெற்றது. பாடல் கேட்டு மகிழ்ந்த பிள்ளையார், தன் பக்தன் கேலிப்பேச்சுக்கு ஆளாகக் கூடாதே என்பதற்காக நைவேத்யத்தை அனைவர் முன்னிலையிலும் சாப்பிட்டார். இந்த பிள்ளையார் சிலை உளியால் செதுக்கப்படாத சுயம்பு விநாயகர் என்பதால் பொள்ளாப் பிள்ளையார் எனப்பட்டார். பொள்ளா என்றால் செதுக்கப்படாத என்பது பொருள். காலப்போக்கில் இது பொல்லாப்பிள்ளையார் ஆகி விட்டது.

இருப்பிடம்: சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார் கோயில் செல்லும் வழியில் 18 கி.மீ. தூரத்தில், திருநாரையூர் உள்ளது.

(16) ஆதிசங்கரர் வணங்கிய ஆறுமுகமங்கலம்:

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் விநாயகருக்கென தனிக்கோயில் உள்ளது. இவர் ஆயிரத்தெண் விநாயகர் எனப்படுகிறார். விநாயகர் கோயில்களில் கொடிமரம் உள்ள கோயில் இது. தேர்த்திருவிழாவும் நடத்தப்படும். கி.மு. 4ம் நூற்றாண்டில் சோமார வல்லபன் என்ற மன்னன் நர்மதை நதிக்கரையிலிருந்து 1008 அந்தணர்களை வரவழைத்து பெரிய யாகம் நடத்த முடிவெடுத்தான். அதில் ஒருவர் மட்டும் குறைய அந்தணர் வடிவில் ஆயிரத்தெட்டாவது நபராக வந்து யாகத்தை பூர்த்தி செய்தார் விநாயகர். இதன்காரணமாக இந்த விநாயகர் ஆயிரத்தெண் விநாயகர் எனப்படுகிறார். ஆதிசங்கரர் இத்தலத்து விநாயகரை வணங்கிய பின் திருச்செந்தூர் சென்று சுப்ரமண்ய புஜங்க ஸ்தோத்திரம் பாடி தனது வியாதி நீங்கப் பெற்றார்.

திறக்கும் நேரம்: காலை 6 - 11, மாலை 5 முதல் இரவு 8 மணி வரை....
இருப்பிடம்: திருநெல்வேலி புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து 50 கி.மீ. தூரத்தில் ஏரல். அங்கிருந்து 7 கி.மீ., தூரத்தில் ஆறுமுகமங்கலம்.


(17) இசைக்கலைஞர்களே! இந்த ஏழையை வணங்குங்க:

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாரை வழிபட்டுவிட்டு கிரிவலம் வரும் பக்தர்கள், உச்சிப் பிள்ளையாரையும் சேர்த்து 12 விநாயகர்களைத் தரிசிக்கலாம். இதில் ஏழாவதாகத் திகழும் பிள்ளையார் ஏழாம் பிள்ளையார் என அழைக்கப்பட்டு அது மருவி ஏழைப் பிள்ளையார் என மாறிவிட்டார். தெற்கு நோக்கி அருள்புரிவதால், இவரை வழிபடுபவர்களுக்கு எமபயம் கிடையாது. சப்தஸ்வர தேவதைகளுக்குத் தங்களால்தான் மக்களின் மனதைக் கவரும் இனிமையான இசையை எழுப்ப முடிகிறது என்ற கர்வம் உண்டாயிற்று. ஆணவத்தால் அவை இறைவனைத் துதிப்பதை மறந்தன. இதனைக் கவனித்த கலைவாணி சப்தஸ்வர தேவதைகளை, இனி உங்கள் இசையால் யாரையும் கவர முடியாது. ஸ்வரங்கள் பயனற்றுப் போகட்டும் என்று சபித்துவிட்டாள். அதன்பின் அவை, விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு தங்களது சாபம் நீங்கப்பெற்றன. இந்த விநாயகர் சன்னதியில் இசைக்கலைஞர்கள் வணங்கினால் குரல் வளம் நீடித்திருக்கும் என்பது ஐதீகம்.

திறக்கும் நேரம்: காலை 6 - 10, மாலை 5 - இரவு 8 மணி வரை....
இருப்பிடம்: திருச்சி சிந்தாமணி பஸ் ஸ்டாப்பிலிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் உள்ள வடக்கு ஆண்டார் வீதி.


(18) சூரியன் வழிபட்ட உப்பூர் விநாயகர்:

பாண்டிய மன்னர்கள் காலத்திற்கு பிறகு ராமநாதபுரம் பகுதியை ஆண்ட சேதுபதி மன்னர்கள் அமைத்த உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் வரலாற்று சிறப்பு மிக்கது. இந்தக்கோயிலைக் கட்டியவர் ராமநாதபுரம் மன்னரான பாஸ்கரசேதுபதி ஆவார். விநாயகர் பெருமான் மீது தட்சிணாயன காலங்களில் (ஆடி- மார்கழி) தெற்கு பகுதியிலும், உத்தராயண காலங்களில் (தை-ஆனி) வடக்கு பக்கமாகவும் சூரியஒளி படுகிறது. சூரியன் இங்கே தவம்புரிந்து, சித்தி பெற்று பாவ விமோசனம் பெற்றதால் சூரியபுரி, தவசித்திபுரி, பாவ விமோசனபுரம் ஆகிய பெயர்கள் இந்த ஊருக்கு உள்ளன.

திறக்கும் நேரம்: காலை 6 -11, மாலை 4 - இரவு 8 மணி வரை....
இருப்பிடம்: மதுரை அல்லது ராமநாதபுரத்தில் இருந்து தொண்டி சென்று அங்கிருந்து 15 கி.மீ., சேதுகடற்கரை சாலையில் சென்றால் உப்பூர்.

(19) பிளாக் அன்ட் ஒயிட் விநாயகர்:

ராமநாதபுரம் அக்னி தீர்த்தக்கடலில் நீராடிக் கொண்டிருந்த போது கிடைத்த கல்லை, திருவிதாங்கூர் மன்னர் வீரகேரளவர்மா கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகிலுள்ள கேரளபுரத்தில் ஒரு அரசமரத்தடியில் பிரதிஷ்டை செய்தார். தற்போது ஒன்றரை அடி உயரமுள்ள இந்த விநாயகர், ஆரம்பத்தில் அரை அடி அளவே இருந்ததாகச் சொல்கிறார்கள். இவரை நிறம் மாறும் விநாயகர் என்கின்றனர். தை முதல் ஆனி வரை உத்தராயண காலத்தில் வெள்ளை நிறமாகவும், ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாய காலத்தில் கருப்பு நிறமாகவும் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். வெள்ளை நிறமாக இருக்கும் விநாயகர்திருமேனியில் ஆடி மாத ஆரம்பத்தில் கருப்புப் புள்ளிகள் ஏற்படுகின்றன. தொடர்ந்து சிறிது சிறிதாக நிறம் மாறி முழுமையாகக் கருப்பாகிறது. இந்த அதிசய விநாயகரை ஆய்வு செய்த புவியியல் துறை நிபுணர்கள், திருமேனி (சிலை) உருவாக்கப்பட்ட கல் சந்திர காந்தம் என்னும் அபூர்வ வகையைச் சார்ந்தது என்கிறார்கள்.

திறக்கும் நேரம்: காலை 6 - 10, மாலை 4 - இரவு 7 மணி வரை....
இருப்பிடம்: நாகர்கோவிலிலிருந்து 18 கி.மீ. , தக்கலை மகாதேவர் கோயில் அருகில்.

(20) விழுப்புரம் மாவட்டம் தீவனூரில் உள்ளது நெற்குத்தி லிங்கவடிவ பிள்ளையார் விநாயகர் கோயில்.

ஆடுமேய்க்கும் சிறுவர்கள் நெல் குத்த கல் தேடிய போது, யானைத்தலை வடிவில் ஒரு கல் கிடைத்தது. அது விநாயகரின் உருவம் போல் தெரியவே, அதை விநாயகராகக் கருதி பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தனர். இந்த விநாயகர் லிங்க வடிவில் இருக்கிறார். பால் அபிஷேகம் செய்யும் போது லிங்கத்தில் படிந்திருக்கும் விநாயக வடிவைத் தரிசிக்கலாம். இவர் பொய்யாமொழி விநாயகர் எனவும் அழைக்கப்படுகிறார். விநாயகர் கோயிலுக்கு பின்புறம் ஒன்றோடு ஒன்று இணைந்தபடி, மூன்று விழுதில்லாத ஆலமரங்கள் உள்ளன. இவற்றை பிரம்மா, விஷ்ணு, சிவன் என கூறுகின்றனர். திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இந்த மரங்களைச் சுற்றி வருகின்றனர். இவற்றிற்கு தினமும் பூஜை செய்யப்படுகிறது.

திறக்கும் நேரம்: காலை 6 - இரவு 7 மணி வரை....
இருப்பிடம்: திண்டிவனத்திலிருந்து செஞ்சி செல்லும் வழியில்13 கி.மீ. தூரத்தில் தீவனூர்.


(21) கோயம்புத்தூர் ஈச்சனாரி விநாயகர்:

பேரூர் பட்டீஸ்வர சுவாமி கோயிலில் பிரதிஷ்டை செய்ய 5 அடி உயரமும், 3 அடி பருமனும் கொண்ட விநாயகர் விக்ரகத்தை மதுரையில் இருந்து வண்டியில் எடுத்துச் சென்றனர். வழியில் வண்டியின் அச்சு ஒடிந்தது. அதன்பிறகு சிலையை நகர்த்த முடியவில்லை. இதையடுத்து காஞ்சி மகாப்பெரியவர் அருள்வாக்குப்படி இச்சிலை இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவர் ஈச்சனாரி விநாயகர் எனப்பெயர் பெற்றார். இக்கோயிலில் அசுவினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திர நாட்களில் ஒவ்வொருவிதமானஅலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடத்தப்படும். இதை நட்சத்திர அலங்கார பூஜை என்பர்.

திறக்கும் நேரம்: காலை 6 - 11, மாலை 4 - இரவு 8 மணி வரை....
இருப்பிடம்: கோயம்புத்தூர் - பொள்ளாச்சி செல்லும் வழியில் 9கி.மீ., தூரத்தில் ஈச்சனாரி.


(21) நவக்கிரக விநாயகர்:

கும்பகோணம் மடத்துத் தெருவில் உள்ள ஸ்ரீபகவத் விநாயகர் கோயிலில் நவக்கிரக விநாயகர் அருள்கிறார். இவர் சூரியனை நெற்றியிலும், சந்திரனை நாபிக் கமலத்திலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழ்க் கையிலும், வியாழனை சிரசிலும், வெள்ளியை இடது கீழ்க் கையிலும், சனியை வலது மேல் கையிலும், ராகுவை இடது மேல் கையிலும், கேதுவை இடது தொடையிலும் கொண்டு காட்சி தருகிறார். இவரை வழிபட்டால் நவக்கிரக தோஷம் தீரும் என்பர்.
56, 11, 6

(22) காசியைச் சுற்றி ஏழு பிரகாரத்தில் 56 கணபதிகள் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயிலில் ஒரே இடத்தில் சிறு மண்டபத்தின் கீழ் 11 விநாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். நாகப்பட்டினம் கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் கோயிலில் ஒரே மூலஸ்தானத்தில் 6 விநாயகர்கள் அமர்ந்து விநாயகர் சபையாக அருள்பாலிக்கிறார்கள்.

(23) மனிதமுக விநாயகர்:

திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 22 கி.மீ., தூரத்திலுள்ள பூந்தோட்டத்தில் இருந்து பிரிந்து செல்லும் சாலையில் செதலபதி முக்தீஸ்வரர் கோயில் உள்ளது. இங்குள்ள விநாயகர், மனித முகத்துடன் மேற்கு பார்த்துஇங்குள்ள விநாயகர், மனித முகத்துடன் மேற்கு பார்த்து தனிச்சந்நிதியில் இருக்கிறார். பார்வதியின் மூலம் பிறந்த விநாயகர், அவளது சக்திலோகத்திற்குள் சிவனையே அனுமதிக்க மறுத்தார். அப்போது கடும் போர் மூண்டதில் விநாயகரின் மனிதத்தலை துண்டிக்கப்பட்டது. பார்வதி இதனை ஆட்சேபிக்கவே, அவருக்கு யானைத்தலை கொடுத்து உயிர்ப்பித்தார் சிவன். எனவே, இந்த விநாயகரை ஆதி விநாயகர் என்கின்றனர். இவரது சந்நிதியில் மட்டைத்தேங்காய் கட்டி வேண்டினால் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறுவதாக நம்பிக்கை.

(24) செல்வ கணபதி: கோவை பாலக்காடு சாலையில் மரப்பாலம் எனும் இடத்தில் உள்ள தர்மலிங்கேசர் மலையின் அடிவாரத்தில் உள்ள செல்வ விநாயகர் இவர். பதினாறு பேறும் தருபவர் என்பதால் இப்பெயர் வந்ததாகச் சொல்கின்றனர்.

(25) அங்கும் நானே! இங்கும் நானே:

பெங்களூரில் இருந்து 374 கி.மீயில் உள்ள பனவாசி எனும் ஊரில் உள்ள மதுகேஸ்வரர் எனும் சிவாலயத்தில் அர்த்த விநாயகர் என்ற திருநாமத்துடன் விநாயகர் அமைந்துள்ளார். காசிக்கு நிகராக போற்றப்படும் இத்தலத்தில் இருப்பதா, அல்லது காசியில் இருப்பதா என விநாயகருக்கே குழப்பம் வந்துவிட்டதாம். இதனால் தன்னுடைய அம்சத்தை இரண்டாக்கி ஒரு வடிவாக கர்நாடகாவிலும் மீதி வடிவாக காசியிலும் இருப்பதாக கூறுகிறார்கள்.

(26) ஈரோடு வரசித்தி விநாயகர்:

தமிழகத்தில் ஆற்றங்கரையில் வீற்றிருக்கும் விநாயகர்களின் எண்ணிக்கை மிக அதிகம். ஆற்றில் நீராடி ஆனை முகனை வணங்கிடும் ஆனந்தமே தனி. உடலும் உள்ளமும் குளிரும் அற்புத அனுபவம் அது.அத்தகைய திருக்கோயில்களுள் ஒன்று, ஈரோடு மாவட்டம் பவானி நதிக்கரையில் உள்ள வரசித்திவிநாயகர் ஆலயம். மிகுந்த வரப்பிரசாதியான இவரை அனுதினமும் ஆராதிக்கும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். சுமார் ஐந்தடி உயரமுள்ள திருமேனியராக கம்பீரமாகக் காட்சிதரும் கணபதியே பார்க்கப் பார்க்க பரவசமும் தடைகள் எல்லாம் அப்போதே நீங்கி விட்ட ஆனந்தமும் ஒரு சேரக் கிடைக்கிறது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பவானி ஆற்றின் கரையில் வீற்றிருக்கிறார் இந்த வரசித்திவிநாயகர்.

(27) கற்பக விநாயகர்:

ஈரோடு ரயில்வே காலனி அருகே கற்பக விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. ஆலய வளாகத்திற்குள்ளே பெரிய அரச மரத்தடியில் ராகு, கேது கூடிய வலம்புரி விநாயகர் எழுந்தருளியுள்ளார். இந்த ஆலய விநாயகர்களை வணங்கினால் புத்திர தோஷம், திருமணத் தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

(28) வெள்ளை விநாயகர்: திருச்சி மாவட்டம் லால்குடியிலிருந்து 3 கி.மீ தொலைவிலும் உள்ளது பூவாளூர் என்ற கிராமம். இங்குள்ள திருமூல சுவாமி ஆலயத்தின் மேற்குத் திருச்சுற்றில் அருள்பாலிக்கிறார் வெள்ளை விநாயகர். பெயருக்கு ஏற்றபடி வெண்மை நிறத்துடன் காட்சி தரும் இவர், வேண்டியவை யாவும் அருள்வதில் வல்லவர்.

(29) அனுக்ஞை விநாயகர்:

தஞ்சை மாவட்டம் பேராவூரணியிலிருந்து 8. கி.மீ தொலைவில் உள்ள மருங்கபள்ளம் என்ற கிராமத்தில் உள்ள மருந்தீஸ்வரர் ஆலயத்தின் மகா மண்டபத்தில் அருள்பாலிக்கிறார், இவர். வேண்டியதை ஈடேற்றுபவர், தடைகளைத் தகர்ப்பவர் என்பதால் வந்த பெயர்,அனுக்ஞை விநாயகர்.

(30) நர்த்தன விநாயகர், ஆதி விநாயகர்:

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது மன்னார்புரம். இங்குள்ளது நர்த்தன விநாயகர் ஆலயம். இந்த ஆலயத்தின் மேற்கு திருச்சுற்றில் அருள்பாலிக்கிறார் ஆதிவிநாயகர். நர்த்தன கணபதியும் ஆதி விநாயகரும் இணைந்து அனைத்து நலமும் வளமும் அருள்வதாகச் சொல்கின்றனர் பக்தர்கள்.

(31) காளி விநாயகர்:

நாகை மாவட்டம் சீர்காழியில் தேர் கீழ வீதியில் தனி ஆலயத்தில் மூலவராக அருள்பாலிக்கிறார் காளி விநாயகர்.

(32) சர்வ சித்தி விநாயகர்:

திருமுல்லைவாயில் சீர்காழி பேருந்து சாலையில் சீர்காழியிலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது வரிசைப்பத்து ஆமப்பள்ளம் என்ற ஊர். இங்குள்ள பழனியாண்டீஸ்வரர் ஆலயத் திருச்சுற்றில் அருள்பாலிக்கிறார் சர்வ சித்தி விநாயகர். கேட்ட வரம் அருளும் சிவமைந்தன் இவர்.

(33) பால விநாயகர்:

திருச்சி- சமயபுரம் நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள பனமங்கலம் என்ற கிராமத்தில் உள்ளது வாரணபுரீஸ்வரர் திருக்கோயில். இக்கோயிலின் திருச்சுற்றில்தான் அருள்பாலிக்கிறார் பால விநாயகர். இவர் குழந்தைகளின் திருஷ்டி தோஷங்களைப் போக்குபவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

(34) நாகர் விநாயகர்:

சீர்காழி- திருமுல்லைவாயில் பேருந்து தடத்தில் சீர்காழியிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள வடகால் என்ற கிராமத்தில் உள்ள தான்தோன்றி முருகன் ஆலய மகா மண்டபத்தில் வலதுபுறம் அமர்ந்துவலதுபுறம் அமர்ந்து அருள்பாலிக்கிறார், நாகர் விநாயகர். தம்மை வணங்குவோர் வாழ்வில் ராகு-கேது கிரக தோஷங்கள் அண்டாது காப்பவர் இவர்.

(35) கல்யாண விநாயகர்:

சீர்காழி புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ள கைவிளாஞ்சேரியில்.


1661830382604.png
 

Latest ads

Back
Top