ஸ்ரீரங்கத்து சதங்கை அழகர்

ஸ்ரீரங்கத்து சதங்கை அழகர்

ஸ்ரீரங்கத்து சித்திரை வீதியில் பல வருடங்களுக்கு முன், ஒரு வைணவ பக்தர் வசித்து வந்தார்.


அவருக்கு மிகவும் அதிகமான கிருஷ்ண பக்தி! அவரது இல்லத்தில் ஒரு சிறிய கிருஷ்ண விக்ரஹம் இருந்தது. அதற்கு மிகவும் ஈடுபாட்டோடு அவர் தினமும் அலங்காரம் செய்வது, திருமஞ்சனம் ( அபிஷேகம்) செய்வது, மலர்களைக்கொண்டு பூஜிப்பது, முதலியன செய்து மகிழ்வார் ! அந்த விக்ரஹத்துக்கு " சதங்கை அழகர் " என்று பெயரிட்டு நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போது, "இன்று சதங்கை அழகருக்கு மல்லிகை_மாலை அணிவித்தோம்,
ரோஜா மாலை அணிவித்தோம், பாலபிஷேகம் செய்தோம், தேனபிஷேகம் செய்தோம் ", என்றெல்லாம்
பக்திமேலிடகூறிமகிழ்வார் அந்த பக்தர் !


ஒருமுறை அவர்கள் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி இருந்த ஒரு வீட்டிற்கு, ஊரிலிருந்து உறவினர்கள் வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் நன்கு உறங்கி கொண்டிருக்கும்போது, அவரது கனவில் ஒரு அழகான குழந்தை,
தெய்வீககளையுடன் தோன்றியது ! அவரை பார்த்து அழகாக சிரிக்கவும் செய்தது. அவர் அந்த குழந்தையை அருகே அழைத்து " நீ யார் ?" என்று கேட்க, "சதங்கைஅழகர்" என்று சொல்லி, சிரித்தபடியே ஓடிவிட்டது !


இந்த அற்புத கனவை அவர் மறுநாள் அந்த வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவிக்க, அவர்கள் வியப்புடன் நான்கு வீடுகள் தள்ளி இருந்த அந்த பக்தர் பற்றி சொல்ல, யாவரும் மெய் சிலிர்த்து, அந்த பக்தரிடமே இந்த நிகழ்வை சொன்னார்கள்.


அவரோ கண்களில் நீர் மல்க " ஆஹா ! நான் ஏதோ எனக்கு பிடித்தபெயரைசூட்டி பெருமானை தொழுதால், அதை தாம் ஏற்று கொண்டது மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கும் தெரியபடுத்தியுள்ளார் !! என்ன வாத்சல்யம் என்று உருகினாராம்!!


பொய்கையாழ்வார் தமது முதல் திருவந்தாதியில்,


" தமருகந்ததெவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்தது எப்பேர், மற்று அப்பேர் - தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமயாதிருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம் ! "


என்ற பாசுரத்தில் " தன் அடியார்கள் எந்த பேரால் அழைக்கிறார்களோ
அந்த பேரை இறைவன் ஏற்றுக்கொள்கிறான் ! எந்த உருவத்தில் வழிபடுகிறார்களோ அந்த உருவத்தை
ஏறிட்டுகொள்கிறான் ! பக்தர்கள் எப்படி நினைக்கிறார்களோ
அப்படியே_தோன்றுகிறான் ஆழியானாகிய கண்ணன் !! " என்று கூறியிருப்பது உண்மைதானே !!
 
Back
Top