• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஸ்ரீமத்பகவத்கீதை அத்தியாயம் - 4

ஸ்ரீமத்பகவத்கீதை அத்தியாயம்-4

4.1 ஸ்ரீகிருஷ்ணர் சொன்னது
நான் விவஸ்வானுக்கு இந்த அழிவில்லாத யோகத்தை உபதேசித்தேன். விவஸ்வான் மனுவுக்கு உபதேசித்தார். மனு, இஷ்வாகுவுக்கு உபதேசித்தார்
-
4.2 அர்ஜுனா, இவ்வாறு பரம்பரையாக வந்துள்ள இந்த யோகத்தை ராஜரிஷிகள்(ராஜாவாக இருந்து ரிஷிகளானவர்கள்) அறிந்திருந்தார்கள். இவ்வுலகில் அந்த யோகமானது நெடுங்காலமாகிவிட்டதால் மறக்கப்பட்டுவிட்டது.
-
4.3 என்னுடைய பக்தனாகவும் தோழனாகவும் இருக்கிறாய் என்பதால் இந்த பழைய யோகமானது இன்று என்னால் உனக்கு சொல்லப்பட்டது. ஏனெனில் இது மேலானது. அனைவராலும் புரிந்துகொள்ள முடியாதது
-
4.4 அர்ஜுனன் சொன்னது. உம்முடைய பிறப்பு பிந்தியது. விவஸ்வானுடைய பிறப்பு முந்தியது. நீங்கள் ஆதியில் இந்த யோகத்தை உரைத்தேன் என்கிறீரே. இதை எப்படி புரிந்துகொள்வது?
-
4.5 ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னது, அர்ஜுனா, எனக்கும் உனக்கும் பல பிறவிகள் கடந்துபோய்விட்டன. நான் அவைகள் எல்லாவற்றையும் அறிகிறேன். நீ அறியமாட்டாய்
-
4.6 பிறப்பு அற்றவனாக இருந்தாலும் , தோற்றத்திற்கு அப்பாற்பட்டவனாக இருந்தாலும் , ஈஸ்வரனாக (உயிர்களை ஆள்பவனாக) இருந்தாலும், என் பிரகிருதியை வசப்படுத்திக்கொண்டு, என் மாயையினால் அவதரிக்கிறேன்.(பிரகிருதி என்பது சாங்கிய தத்துவத்தில் புரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தத்துவம்)
-
4.7 பரதவம்சத்தில் பிறந்தவனே, எப்பொழுதெல்லாம் தர்மத்திற்கு வீழ்ச்சியும், அதர்மத்திற்கு எழுச்சியும் உண்டாகிறதோ, அப்பொழுதெல்லாம் நான் என்னை பிறப்பித்துக்கொள்கிறேன்
-
4.8 நல்லோரை பாதுகாக்கவும், தீயோரை அழிக்கவும், தர்மத்தை நிலைநாட்டுவதற்கும், யுகந்தோறும் அவதரிக்கிறேன்
-
4.9 அர்ஜுனா, யார் என்னுடைய இந்த திவ்யமான பிறப்பையும் செயலையும் உள்ளபடி அறிகிறானோ, அவன் உடலைவிட்டு மறுபடியும் பிறப்பை அடைவதில்லை. என்னை அடைகிறான்.
-
4.10 ஆசை, அச்சம், குரோதம் நீங்கியவனாய் என்மயமாய் , என்னை அடைக்கலம் புகுந்தவர்களாய், புனிதர்களாய், பலர் என் இயல்பை அடைந்தார்கள்
-
4.11 யார் என்னை எப்படி அழிபடுகிறார்களோ,அவர்களுக்கு நான் அப்படியே(அவர்கள் விரும்பியபடியே) இருக்கிறேன். பார்த்தா மனிதர்கள் எல்லா இடங்களிலும் என்னுடைய மார்க்கத்தையே(எல்லா மார்க்கமும் இறைவனுடையது) பின்பற்றுகிறார்கள்
-
4.12 கர்மங்களுடைய பலனை விரும்புபவர்கள் இங்கே தேவதைகளை(ஒளியுடலில் வாழும் முன்னோர்கள்) வணங்குகிறார்கள். ஏனென்றால் இவ்வுலகில் கர்மபலன் விரைவில் கிடைக்கிறது
-
4.13 குணம் மற்றும் செய்யும் தொழிலை பொறுத்து நான்கு வர்ணங்கள்(பிராமணன்,சத்திரியன்,வைசியன்,சூத்திரன்) என்னால் படைக்கப்பட்டது. அதற்கு நான் கர்த்தா (நானே உருவாக்கினேன்) எனினும், என்னை படைப்பை கடந்தவன்(பிரம்மம்) என்றும் கர்த்தா அல்ல(உருவாக்கியவன் நான் அல்ல) என்றும் அறிந்துகொள்.
-
4.14 கர்மங்கள் என்னை தொடுவதில்லை. எனக்கு கர்மபலனில் ஆசை இல்லை. யார் என்னை இப்படி அறிகிறானோ(கிருஷ்ணரை உள்ளபடி அறிபவன்) அவன் கர்ங்களினால் பந்தப்படுவதில்லை
-
4.15 இங்ஙனம் அறிந்து, முற்காலத்து முக்தர்களால் கர்மம் செய்யப்பட்டது. ஆகையால் நீயும் முன்னோர்களால் முற்காலத்தில் செய்யப்பட்ட கர்மத்தை செய்.
-
4.16 கர்மம் எது, செய்யக்கூடாத கர்மம் எது என்றும், இன்னும் இதுகுறித்து ஞானிகள்கூட குழப்பமடைகிறார்கள். எதை அறிந்து கேடுகளிலிருந்து விடுபடுகிறாயோ அந்த கர்மத்தை உனக்கு சொல்கிறேன்.
-
4.17 ஏனென்றால் கர்மத்தைப்பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும், விலக்கப்பட்ட கர்மத்தைப்பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். செய்யக்கூடாத கர்மத்தைப்பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். கர்மத்தின்போக்கை அறிவது கடினம்
-
4.18 யார் செய்யவேண்டிய கர்மத்தில், செய்யக்கூடாத கர்மத்தையும், செய்யக்கூடாத கர்மத்தில் செய்யவேண்டிய கர்மத்தையும் (நன்மையில் தீமையையும், தீமையில் நன்மையையும்) காண்கிறானோ அவன், மனிதர்களுள் புத்திமான். அவன் யுக்தன் ஏற்கனவே எல்லா கர்மங்களையும் செய்தவன்.
-
4.19 யாருடைய சகல கர்மங்களும் ஆசையும், விருப்பமும் அற்றதாக இருக்குமோ, யாருடைய கர்மங்கள் ஞானத்தீயால் எரிக்கப்பட்டனவோ, அவனை பண்டிதன் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.
-
4.20 கர்மபலனில் ஆசையை துறந்து, எப்பொழுதும் திருத்தியுடன், எதையும் சாராமல், கர்மத்தில் ஈடுபட்டிருந்தாலும், அவன் எதையும் செய்பவன் அல்ல
-
4.21 ஆசையற்றவன், மனதையும் உடலையும் அடக்கியவன், பொருட்களையெல்லாம் துறந்தவன், வெறும் உடலைக்கொண்டு செயல்புரிபவன் பாபத்தை அடைவதில்லை.
-
4.22 தற்செயலாய் கிடைப்பதில் திருப்தியடைபவன், இருமைகளைக் கடந்தவன், பொறாமையில்லாதவன், வெற்றியிலும் தோல்வியிலும் மனதை நடுநிலையில் வைத்தவன், கர்மம் செய்தாலும் பந்தப்படுவதில்லை
-
4.23 பற்றில்லாதவனுடைய, முக்தனுடைய,ஞானத்தில் உறுதிபெற்ற மனத்தை உடையவனுடைய, யக்ஞத்திற்காக (தன்னிடம் உள்ளதை பலன் கருதாமல் கொடுத்தால் அது யக்ஞம்) கர்மம் செய்பவனுடைய, எல்லா கர்மங்களும் கரைந்துபோகின்றன
-
4.24 அர்ப்பணம் செய்தல் பிரம்மம், ஹவிஸ் (யாக நெருப்பில் இடப்படும் நெய்) முதலியவை பிரம்மம், பிரம்மமாகிய அக்கினியில் பிராமணர்களால் (பிரம்மத்தை உணர்ந்தவர்களால்) கொடுக்கப்படுகிறது. பிரம்மத்தில் நிலைநிறுத்தி செய்யும் கர்மம் செய்யும் அவனால் பிரம்மமே அடையப்படுகிறது.
-
(யக்ஞம் என்பது தன்னிடம் உள்ளதை மற்றவர்களுக்கு பிரதிபலன் கருதாமல் கொடுத்தல்)
-
4.25 சில யோகிகள் தேவதைகளுக்கு யக்ஞத்தை செய்கிறார்கள். இன்னும் சிலர் பிரம்மமாகிய அக்கினியில் ஆத்மாவைக்கொண்டு யக்ஞம் செய்கிறார்கள்
-
4.26 அடக்குதல் என்ற அக்கினியில், காது முதலிய இந்திரியங்களை (ஐந்து இந்திரியங்களையும் அடக்குதல்) ஹோமம் செய்கிறார்கள்.மற்றும் சிலர் சப்தம் முதலிய விஷயங்களை இந்திரியங்கள் என்ற அக்கினியில் ஹோமம் செய்கிறார்கள்
-
4.27 இன்னும் சிலர் ஞான ஒளிவிடுகின்ற மனத்தை, தன்னிடம் அடக்குதல் என்ற யோகத்தீயில் எல்லாவிதமான இந்திரிய கர்மங்களையும் (ஐந்து இந்திரியங்கள் மூலம் நடக்கும் கர்மங்களையும்) பிராண கர்மங்களையும் அஹுதியாக கொடுக்கிறார்கள்.
-
4.28 அப்படியே சிலர் பொருட்களை யக்ஞம் செய்பவர்களாகவும், சிலர் உடலை அடக்கி யக்ஞம் செய்பவர்களாகவும், யோகத்தை யக்ஞம் செய்பவர்களாகவும், தன்னடக்கம் உள்ளவர்கள் சாஸ்திரம் மூலம் கற்ற ஞானம் ஆகியவற்றை யக்ஞமாக செய்கிறார்கள்
-
4.29 அப்படியே மற்றவர்கள் அபானனில் பிராணனையும், பிராணனில் அபானனையும் ஹோமம் செய்கிறார்கள்
பிராண அபான வாயுக்களின் போக்கை தடுத்து பிராணயாமம் செய்வதில் ஈடுபடுகிறார்கள்
(நாசி துவாரம் வழியாக உள்ளே செல்லும் ஆக்சிஜனுக்கு அபானன் என்று பெயர். வெளியே வரும் கார்பன்-டை-ஆக்சைடுக்கு பிராணன் என்று பெயர்)
-
4.30 சிலர் முறையாக உண்பவர்களாய் பிராணனை பிராணனில் ஆஹுதியாக கொடுக்கிறார்கள். யக்ஞத்தை அறிந்த இவர்கள் எல்லோரும் யக்ஞங்களால் பாபம் நீங்கப்பெற்றவர்களாகிறார்கள்
-
4.31 அர்ஜுனா, யக்ஞத்தில் மீதமிருக்கும் (மற்றவர்களுக்கு கொடுத்துபோக மீதியிருப்பதை) அமிர்தத்தை (உணவை) உண்பவர்கள் நித்தியமான பிரம்மத்தை அடைகிறார்கள். யக்ஞம் செய்யாதவர்களுக்கு இவ்வுலகம் இல்லை. மற்ற உலகங்களும் கிடையாது
-
4.32 இப்படி வேதத்தில் பலவிதமான யக்ஞங்கள் விவரிக்கப்பட்டிருக்கிறது. அவையாவும் கர்மத்திலிருந்து உண்டானவை என்று அறிந்து முக்தியடைவாயாக
-
4.33 எதிரிகளை வாட்டுபவனே, பொருட்களைக்கொண்டு செய்யும் யக்ஞத்தைவிட, ஞானத்தை பிறருக்கு கொடுக்கும் யக்ஞம் மேலானது. பார்த்தா, உலகில் உள்ள கர்மம் எல்லாம் ஞானத்தில் முற்றுப்பெறுகிறது
(மற்றவர்களுக்கு பொருட்களை தானம் செய்வதைவிட ஆன்மீகதானம் உயர்வானது)
-
4.34 பணிந்தும், கேட்டும்,பணிவிடைசெய்தும் அந்த ஞானத்தை அறிந்துகொள். தத்துவத்தை அறிந்த ஞானிகள் உனக்கு அந்த ஞானத்தை உபதேசிப்பார்கள்
--
4.35 பாண்டவா, ஞானத்தை அறிந்து மறுபடியும் இப்படி மயக்கமடையமாட்டாய். அப்போது எல்லா உயிர்களையும் உன்னிடத்திலும், அப்படியே என்னிடத்திலும் பார்ப்பாய்
-
4.36 எல்லா பாபிகளைவிடவும் அதிக பாபவம் செய்தவனாக இருந்தாலும், எல்லா பாவங்களையும் ஞானம் என்ற படகினால் கடந்துசெல்
-
4.37 அர்ஜுனா, சுடர்விட்டு எரியும் தீயானது விறகுகளை எப்படி சாம்பலாக்குகிறதோ, அப்படியே ஞானத்தீயானது எல்லா கர்மங்களையும்(பாங்களையும்) சாம்பலாக்குகிறது
-
4.38 இவ்வுலகில் ஞானத்திற்கு ஒப்பானது, தூய்மையானது வேறெதுவும் இல்லை. காலப்போக்கில் யோகத்தில் வெற்றியடைந்தவன், தன் உள்ளத்தில் தானாகவே இருக்கும் அந்த ஞானத்தை அறிகிறான்
-
4.39 முயற்சியுடையவன், மேலானதில்(பிரம்மத்தில்) மனதைவைத்து, இந்திரியங்களை அடக்கி ஞானத்தை பெறுகிறான். ஞானத்தை அடைந்து வெகுவிரைவில் சாந்தி அடைகிறான்
-
4.40 அறிவற்றவன், முயற்சியில்லாதவன் சந்தேகப்படுபவன் அழிவடைகிறான். சந்தேகப்படுபவனுக்கு இந்த உலகமும் இல்லை பரலோகமும் (மேல் உலகம்) இல்லை. சுகமும் இல்லை
-
4.41 அர்ஜுனா, யோகத்தினால் கர்மங்களை துறந்தவன், ஞானத்தினால் சந்தேகங்களை அகற்றியவன், ஆத்ம சொரூபத்தில் (தன்னில்தானாக) நிலைத்திருப்பவனை கர்மங்கள் கட்டுப்படுத்துவதில்லை
-
4.42 ஆகையால் பாரதா, ஹிருதயத்தில் இருக்கின்ற ஆத்மாவைப்பற்றிய சந்தேகம் அஞ்ஞானத்தால் உண்டாகிறது. அதை ஞானவாளினால் வெட்டி யோகத்தை கைக்கொண்டு எழுந்திரு

நான்காம் அத்தியாயம் நிறைவுற்றது
 

Latest ads

Back
Top