வேண்டிய வரம் தரும் வெங்கட்டாம்பேட்டை வே&

Status
Not open for further replies.
வேண்டிய வரம் தரும் வெங்கட்டாம்பேட்டை வே&

வேண்டிய வரம் தரும் வெங்கட்டாம்பேட்டை வேணுகோபாலசுவாமி!

perumal.jpg



நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும், கிடந்த கோலத்திலும் காட்சி தரும் பெருமாள் கோயிலாகத் திகழ்வது வெங்கட்டாம்பேட்டை வேணுகோபாலசுவாமி திருக்கோயிலாகும். கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடிக்கு வடக்கே 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது இத்திருக்கோயில்.


புராண வரலாறு: வெகுகாலம் முன்பு சடமர்ஷனர் என்ற மகரிஷி வடநாட்டில் தவமிருந்து வந்தார். ஆனால் அப்பகுதியில் போர்ச்சூழலும், அமைதியின்மையும் குடி கொண்டதால் தென்நாட்டுக்குப் பயணமானார். திருக்கோயிலூரில் இயற்கை எழில் சூழ்ந்த வனப்பகுதியில் அமர்ந்து தவம் செய்யத் தொடங்கினார்.


தவத்தால் மகிழ்ந்த எம் பெருமான், தன் பிராட்டியோடு அவருக்குக் காட்சி தந்தார். ""என்ன வரம் வேண்டும்?'' என்று கேட்க, மகிழ்ச்சியடைந்த மகரிஷி, ""தாங்கள் உலகைக் காக்க மேற்கொண்ட அனைத்து அவதாரங்களையும் காட்டி, காட்சி அருள வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார். அதன்படியே காட்சி தந்த எம்பெருமானிடம் இத்தலத்தில், நின்ற கோலத்திலும், கிடந்த கோலத்திலும், நிரந்தரமாய் தங்கியிருந்து அடியார்களுக்கு அருளாசி வழங்க வேண்டுமென வரம் கேட்டார். அதன்படியே வரமளித்த எம்பெருமான் நின்ற கோலத்தில் ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபாலர் மற்றும் கிடந்த கோலத்தில் பாம்பணையில் பள்ளி கொண்ட பெருமாளாகவும் காட்சி தருகின்றார்.


தொன்மைச் சிறப்பு: தமிழகக் கோயில்களின் வரலாற்றை அறிய உதவும் மெக்கன்சி அவர்களின் வரலாற்றுக் குறிப்புகளும், கி.பி. 1464 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட செப்புப் பட்டயமும், புதுச்சேரியை ஆண்ட பிரஞ்சுக்காரர்களின் ஆட்சியில் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரிந்த ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பேடும் இத்தலத்தின் தொன்மையையும், சிறப்பினையும், வரலாற்றினையும் அறிய உதவுகிறது. அவரது நாட்குறிப்பில் இவ்வூர் வெங்கட்டாம் பேட்டை என்று குறிப்பிடப்படுகிறது. செஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த வேங்கடபதி நாயக்கர் காலத்தில் (கி.பி. 1464- 1478) இத்திருக்கோயில் திருப்பணி செய்யப்பட்டு செழிப்புடன் விளங்கியது.


தெலுங்கு மன்னனின் குடும்பத்தைச் சேர்ந்த வெங்கட்டம்மாள் என்ற பெண்மணியின் நினைவாக, இவ்வூர் வெங்கட்டம்மாள்பேட்டை என அழைக்கப்பட்டது. பின்னாளில் இது மருவி, வேங்கட்டாம்பேட்டை என அழைக்கப்படுகிறது.


ஆலய அமைப்பு: ஊரின் கிழக்கே பெரிய மதிற்சுவர்களைக் கொண்டு சுமார் 30,000 சதுர அடியில் சிதிலமடைந்த ஏழு நிலை ராஜகோபுரத்துடன் திருக்கோயில் அமைந்துள்ளது. வாயிலின் முன்பாக கருட மண்டபம் காணப்படுகிறது. கோபுர வாயிலைக் கடந்ததும், பலிபீடம், அதனருகே அபூர்வ கோல கருடாழ்வார் சந்நிதி அமைந்துள்ளது. நின்று கை கட்டி வணங்கி நிற்கும் கோலத்திற்குப் பதிலாக இரண்டு கால்களையும் மடித்து பத்மாசன கோலத்தில் அமர்ந்துள்ளார். கைகள் இரண்டும் வணங்கி நிற்க, இடக்கையில் நாகம் சுற்றி தொடைமீது படமெடுத்து உள்ளது. காதுகளில் பத்ர குண்டலங்களோடு இவர் காட்சி தருகின்றார். இது ஓர் அபூர்வ கோலமாகும்.


வேணுகோபாலர் சந்நிதி: வேணுகோபால சந்நிதியில் மகாமண்டபத்திற்குள் தெற்குநோக்கி, வைகுந்தவாசனாக அமர்ந்த நிலையில், மேலே ஆதிசேஷன் ஐந்து தலைகளுடன் குடை விரித்து நிற்கின்றார். இது அமர்ந்த நிலைக் கோலமாகும்.


இதனையடுத்து, சடமர்ஷன மகரிஷியின் விருப்பத்திற்கு ஏற்ப, எம்பெருமான் வேணுகோபால சுவாமியாக காட்சி தருகின்றார். சுமார் 6 அடி உயரத்தில் சங்கு சக்கரங்களை இரு கரங்களில் தாங்கி மற்ற இரு கரங்களில் வேய்குழல் பெற்று புல்லாங்குழல் ஊதிட வலக்காலை சற்றே மடித்து உள்ள எம்பெருமானின் பெருவிரல் தரையில் பாவ, நின்ற கோல எம்பெருமானின் எழிற்கோலத்தைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும். எம்பெருமானின் இருபுறமும் ருக்மணி, சத்யபாமா காட்சி தருகின்றனர்.


மூலவரை தரிசித்து தெற்கே திரும்பினால் செங்கமலவல்லி தாயார் சந்நிதி காணப்படுகிறது. பத்மாசன கோலத்தில் இரு கரங்களில் தாமரை மலர்களை ஏந்தியும், மற்ற இரு கரங்களில் அபய முத்திரையுடனும் தாயார் காட்சி தருகின்றார். வடக்கே ஆண்டாள் சந்நிதி அமைந்துள்ளது.


இதன் அருகே, சுமார் 18 அடி நீள பாம்பணையில் ராமபிரான் துயில் கொள்ளும் காட்சி நம்மைப் பரவசப்படுத்துகின்றது. திருவடியில் சீதா பிராட்டியும், வீர ஆஞ்சநேயரும் காட்சி தருகின்றனர். தர்ப்பைப்புல்லில் துயில் கொள்ளும் ராமரின் அபூர்வக்கோலம் திருப்புல்லாணி என்ற திருத்தலத்திலும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது கிடந்த கோலமாகும்.


சூரியனும் சந்திரனும் வணங்கும் ஆலயம்: ஆண்டுதோறும் ஆவணி மாதம் 25 ஆம் நாளிலிருந்து 6 நாள்களும், காலை 6 மணிக்கு சூரியன் தன் ஒளிக்கதிர்களால் மூலவரை வணங்குகின்றார். அதேபோல, புரட்டாசி மாதப் பௌர்ணமிக்கு முன்னும் பின்னும் தலா மூன்று நாள்கள் சந்திரன் தன் ஒளிக்கதிர்களால் செங்கமலவல்லித் தாயாரை வணங்குகின்றார். இது ஓர் அதிசய நிகழ்வாகும்.


ஊஞ்சல் மண்டபம்: கோயிலின் எதிரே ஐம்படி உயர பதினாறு கல் தூண்கள் கொண்ட ஊஞ்சல் மண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டபத்தில் குதிரை வீரர்கள் உருவங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன.


திருக்குளம்: ஊஞ்சல் மண்டபத்தின் எதிரே அழகிய திருக்குளம், சுமார் ஓர் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்குளத்தின் மையப் பகுதியில் ஏழு கிணறுகள் உள்ளதெனக் கூறப்படுகிறது. இக்குளத்தின் கிழக்குக் கரையில் கருடாழ்வார் சந்நிதியும் அதையொட்டி தென் பகுதியில் சமாதி ஒன்று காணப்படுகிறது. இது இத்திருக்கோயிலைக் கட்டி முடித்த சிற்பியின் சமாதி எனக் கூறப்படுகிறது. ஊஞ்சல் மண்டபத்தின் வடகிழக்கில் திருமால் தன் சக்கரத்தை ஏவி உருவாக்கிய சக்கர தீர்த்தம் கிணறு வடிவில் அமைந்துள்ளதாகத் தலவரலாறு கூறுகிறது.


விழாக்கள்: தெலுங்குப் புத்தாண்டான யுகாதி பண்டிகை, கார்த்திகை தீபத்திருவிழா, வைகுண்ட ஏகாதசி, தைத்திருநாள் ஆகியவை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.


தரிசன நேரம்: காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே கோயில் திறந்திருக்கும் என்றாலும், கிராமத்து ஆலயம் என்பதால் மற்ற நேரங்களிலும் எளிதில் தரிசிக்க முடியும். இவ்வாலயம் இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.







??????? ???? ????? ????????????????? ???????????????! - Dinamani - Tamil Daily News
 
Status
Not open for further replies.

Similar threads

Back
Top