• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ராமநாம மகிமை பற்றிய தகவல்கள்

ராமநாம மகிமை பற்றிய தகவல்கள்

ராமநாமம்நமக்கு சுபிட்சம் தரும், என்பது வேதவாக்கு பாடல்கள் சாஸ்திரம் படித்திருக்காவிட்டாலும் வேதங்கள் தெரிந்திருக்கவிட்டாலும் மந்திர உபதேசங்கள் அறிந்திருக்காவிட்டாலும்


இந்த ‘ராம’ நாமத்தைப் பாராயணம் செய்தாலே போதும். அவனுக்கு
சகலசௌபாக்கியங்களும், சௌகரியங்களும்அடைந்து சந்துஷ்டியாகவும், சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்திடுவான் என்பது
கண்_கூடு. அந்த ராம நாமம் நமக்கு சுபிட்சம் தரும், என்பது வேதவாக்கு.


கம்பர் தன்னுடைய இராமாயணத்தில் ஆரம்ப பலசுருதியாக
“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாபமும் சிதைந்து_தேயுமே
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்றிரண்டெழுத்தினால்”
என்று ஆணித்தரமாகச் சொல்லுவதால் ராம நாம மகிமை நன்குபுரியும்


இதனை ராக மாலிகையாக ‘நாரணன்’ எழுதியது.
“இராமனைநினைவு கொள்வாய்மனமே-அந்த
கோசலை மகனை துதி செய்வாய் தினமே!
சித்திரை நவமியில் புனர்பூசத்தில் பிறந்து
இத்தரை மாந்தர் வாழ்வில் உய்யவே அவதரித்த அந்த”


நாரதர் மற்றும் வால்மீகி மகரிஷி எழுதிய இராமாயண கதை : நாரதர் குருவாக ஒருவேடுவனுக்கு கூறிய உபதேசம் " வேடுவனே! உலகில் ஒன்றும் நிலையில்லை. மனைவி மக்கள், சுற்றம், பொன், பொருள், இந்த உடல் எல்லாம் என்றேனும் ஒரு நாள் அழிந்து விடக்கூடியது. ஆனால் ஒரே ஒரு பொருள் மாத்திரம் அழியாதது, அழிவில்லாதது. அந்தப்பொருளை உனக்கு நான் தருகிறேன். அதை கெட்டியாக உன் மனத்தில் பற்றிக் கொள்.” என்றார்.


“அது என்ன பொருள் சாமி? நீங்க தந்துவிட்டாலோ, சொல்லிவிட்டாலோ, அதை உடும்பாகப் பற்றிக் கொள்கிறேன். அகப்பட்டதைப் பற்றும், உடும்பு போல பத்திரமாகப் பாதுகாப்பேன் மனத்தில்.” என்றான் வேடுவன்.


நாரதர் “உன் காதைக் காட்டு சொல்லுகிறேன்.” என்றார்.


அவர் “ராமா’ என்ற நாமம் மிகச் சிறந்தது. அதைத் திரும்பத் திரும்ப இரவு பகல் பாராமல் நாள்தோறும் சொல்லிக்கொண்டிரு. அதுவே உனக்கு அபயம் அளிக்கும்.” என்றார்.


“ஐயா சாமி! நீங்க சொல்றது ஒன்றும் புரியலையே! இன்னொரு முறை நினைவு கொள்ளும்படியாகச் சொல்லுங்கள்” என்றான். உடன் அவர், “நீ வேடுவன்தானே! அதோ தெரிகிறதே ஒரு மரம் அது என்ன மரம் தெரியுமா?”


“ஓ! தெரியுமே அது மராமரம்.”


“அந்த மராமரத்தின் பெயரையே உச்சரித்துக் கொண்டிரு. அது போதும். உன் முக்திக்கு வழி காட்டும்” என்று சொல்லிச் சென்றுவிட்டார் நாரதர்.


அந்த மராமரத்தின் அடியில் சென்று அமர்ந்தான். “மரா மரா” என்று அதையே உச்சரித்தான். அது ‘ராம ராம’ என மாறியது. பசிதாகம், வெயில், குளிர், மழை எல்லாம் மறந்தான். வசந்தங்கள் மாறின. தக்ஷிணாயனம், உத்தராயனம் மாறின. வருஷங்கள் மாறின. கோலங்களும் காலங்களும் மாறின. மரத்தடியில் தவம் செய்து வந்த இடத்தில் புற்றும் வளர்ந்தது. ஒரே ‘ராம’ சப்தம் தவிர வேறு ஒன்றும் கேட்வில்லை. ஒரு நாள் அகோர மழையில் புற்றும் முற்றும் கரைந்தது. புற்றிலிருந்து தவம் செய்த வேடுவன் நரை தோன்ற தாடி மீசையுடன் வெளிவந்தான்.


அங்கு நாரத மகாமுனி தோன்றினார். புற்றிலிருந்து வெளிப்பட்டதால் வான்மீகி என்று அவனுக்குப் பெயர் சூட்டினார். ராம நாமத்தை பற்பல வருடங்கள் தியானமும், தபமும் செய்தவர் வால்மீகி முனிவர். “இன்று முதல் நீவிர் வால்மீகி மகரிஷி ஆவீர்கள். ராம நாமத்தால் இந்தப் பதவியை அடைந்தீர். நீரே ராம காவியத்தை எழுத வேண்டும் என்பதே நாராயணனின் கட்டளை. உமக்கு இராமபிரானின் சரிதங்களும், நிகழ்ச்சிகளும், நிகழ்வுகளும், சம்பவங்களும், கண்முன் காட்சிகளாகத் தோன்றும் அதைப் பார்த்து ரசித்து இராம காவியத்தை வான்மீகி இராமாயணம் என்று இயற்றும்.” என்று நாரதர் அருள்புரிந்தார். அதன்பிறகு வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணத்தைத் தான் இன்றும் நாம் கேட்கிறோம். இதிலிருந்து ராம நாம மந்திரமகிமை புரியும். அந்த இதிகாசத்தை எழுத வைத்ததே ‘ராம மந்திரம்’தான்.


ராம நாமம் மிகச் சிறந்தது என்பதற்கு பாராட்டாக, வியாச மகாபாரதத்தில், ஸ்ரீபீஷ்மர் மரண அம்புப்படுக்கையில் படுத்திருக்கும் பொழுது, ஸ்ரீகிருஷ்ணனும், அர்ச்சுனனும் தர்மரும் காண வந்தார்கள். ஸ்ரீகிருஷ்ணனின் விஸ்வரூப தரிசனத்தைப் பீஷ்மர் கண்டு எல்லையில்லா ஆனந்தத்தில் ஆயிரம் நாராயண விஷ்ணு நாமாக்களை சொல்லி தோத்திரம் செய்தார். அந்த விஷ்ணு சகஸ்ரநாமத்தில் வரும் பலஸ்ருதியாக, சிவன் பார்வதிக்குச் சொல்வது போல் ஒரு ஸ்லோகம் வருகிறது.


“ஸ்ரீராம ராமேதி ரமே ராமே மனோரமே, சகஸ்ரநாம தத்வல்யம் ஸ்ரீராம நாம வரானனே” என்பதாக வருகிறது. ஆயிரம் விஷ்ணு நாமாக்களை உன்னால் சொல்ல முடியாது போனாலும், அதில் வரும் இந்த ‘ராமா’ என்ற நாமத்தை மட்டும் ஜபித்தாலே போதும், அவன் ஆயிரம் விஷ்ணு நாமாக்கள் சொன்ன பலனை அடைகிறான்” என்று கூறுவதால், இந்த ராமநாமம் மகிமை பெற்றது. அப்படி சிவபெருமானே வாக்குறுதி அளிப்பதால் அந்த ‘ராம ராமா’ இன்னும் சிறப்புடையதாகிறது.
இவ்வளவு எளிமையான, இனிமையான லகுவான ராமமந்திரம் வாழ்வைக் கடைத்தேற்ற இருக்கையில் நாம் அதை அனுசரித்து வாழ்வில் வளங்களை பெறுவோம்.
 

Latest ads

Back
Top