• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மேலும் சில கதைகள்

Status
Not open for further replies.

saidevo

Active member
மேலும் சில கதைகள்

எங்கள் குடும்பத்தில் நான் மற்றும் (இப்போது அமரர்களாக இருக்கும்) என் தம்பி, அம்மா, அப்பா எல்லோருமே எழுத்தாளர்கள்! அப்பாவும் அம்மாவும் ஐம்பது-அறுபதுகளில் ஓரளவுக்குப் பிரபலமான எழுத்தாளர்கள். தம்பி பின்னர் அவர்கள் வாரிசென உருவானான். இவர்களது பிரசுரமான கதைகளைப் பார்க்கும் போது நான் ’கம்பன் வீட்டுக் கட்டுத் தறி’தான். வேடிக்கை என்னவென்றால் நான் இவர்கள் எழுதிய கதைகளைப் பெரும்பாலும் படிக்கவில்லை. இப்போது என் எழுத்து சூடு பிடிக்கும் போது பழைய அச்சுப் பிரதிகளில் என் கைவசம் இருக்கும் அவர்களது கதைகளை இப்போது படிக்க ஆரம்பித்து ஒரு வலைப்பூவில் பதிந்து வருகிறேன். கீழே வருவது ’மறதி’ பற்றி என் தந்தை 1954-ஆம் ஆண்டில் எழுதிய சிறுகதை.

*****
 
சிறுகதை, 15 Jul 1954
விசித்திர ஜன்மங்கள்: மறதி மன்னர்கள்
எச். குருமூர்த்தி


"ன்ன சாமி ஜட்கா கூலி கொடுக்காமல் இப்படி மணிக்கணக்காய் காக்க வைக்கிறீங்களே!"

ஜட்காவிலிருந்து இறங்கி உள்ளேபோன மனிதர் ஒரு ஈஸிச்சேரில் சாவதானமாகச் சாய்ந்தவாறு "டேய் அம்பி! வாசல்லே யாருன்னு பாருடா!" என்றார்.

அம்பி போய்ப்பார்த்துவிட்டு, "ஜட்கா வண்டிக்காரன் அப்பா! வண்டிச்சத்தம் கொடுக்கவில்லையாம் நீ" என்றான்.

"ஏதுடா சத்தம்?"

"அது தானப்பா! நீ இப்போ ஆஸ்பத்திரிக்குப் போய்வந்தாயே வண்டியில்!"

"ஆஸ்பத்திரியா?"

"நம்ம கிரிஜாவுக்குப் பிரசவமாயிருக்கோன்னோ! அவளைப் பார்க்கப் போனாயே அப்பா!"

"கிரிஜாவா! எப்போ போனா ஆஸ்பத்திரிக்கு!"

பாவம்! தப்பு அவர்மீது இல்லை. ஞாபகசக்தி அணுவளவும் இல்லாத அவர் மூளை, ஹைட்ரஜன் குண்டு வெடித்து எழுப்பும் புகைபோல் குழம்பிக் கிடக்கிறது!

கடைசியில் அந்த மறதி ஆசாமி வண்டிக்காரனிடம், "போய்யா! உன் வண்டியில் நான் ஏறவில்லை!" என்று சாதித்தும் விடுகிறார்!

"ஹூம்! என் குதிரைக்கு இருக்கும் ஞாபகம்கூட இல்லையே உனக்கு", என்று ஜட்காவாலா சபித்துக்கொண்டே போகிறான்.

ப்படி தன்னையே மறந்து கண்டபடி உளறும் பிரகிருதிகள் நம்மிடையே நூற்றுக்கணக்கில் உலவுகிறார்கள்.

வெளியில் புறப்படும்போது வாசல் கதவைப் பூட்டாமல் திறந்துபோட்டுச் செல்லும் ஜன்மங்கள், அவசரமாக ஆபீஸுக்கு ஒரு காலில் மட்டும் செருப்பை மாட்டிக்கொண்டு போகும் பிரகிருதிகள், ஏன், ஏதோ ஞாபகத்தில் ஆபீஸுக்குப் போகிறோம் என்று நினைத்துக்கொண்டு பஸ் ஸ்டாப் வரை நடந்துசென்று கவனப் பிசகாய் வீட்டுக்குப்போகும் பஸ்ஸில் ஏறி பிரிக்காத டிபன் பொட்டலம், கனத்த ப்ளாஸ்க் இத்யாதியில் பிரசன்னமாகி சகதர்மிணியை திகைக்கவைக்கும் மறதி மன்னர்கள், இப்படி எத்தனையோ பேர்வழிகளை நாம் தினசரி சந்திக்கிறோம்!

"ஐயையோ! குழம்புக்கு உப்புபோட மறந்துவிட்டேன் போலிருக்கு ஏன்னா! காமல்பற எப்படி சாப்பிட்டேள்" என்று கேட்டாள் பக்கத்து வீட்டுக்கார மனைவி.

"இல்லையே! நீ உப்புபோட மறக்கவில்லை! நீ கொடுத்தனுப்பிய ப்ளாஸ்க் காப்பியில் இருந்ததே உப்பு!" என்றார் அவள் கணவர்!

இதைவிட விசித்திரமான தம்பதிகளை ஒரு தரம் நான் சந்திக்க நேரிட்டது.

"ஏன்னா! காலம்பற உங்களிடம் காபிப்பொடி வாங்க 10-ரூபாய் நோட்டைக் கொடுத்துவிட்டேன் போலிருக்கிறது, ஐந்து ரூபாய் நோட்டுக்குப் பதில்!" என்றாள் மனைவி.

"நாசமாய்ப் போச்சு! அது ஒரு ரூபாயாக்கும்னு நினைத்து அப்படியே ஆபீஸில் ஒருவனுக்கு அவசரமாக கைமாற்றுக் கடன் கொடுத்தேன். நீ ஏதோ பொடின்னு சொன்ன ஞாபகம் மட்டும் இருந்தது. கையிலிருந்த சில்லறைக்கு சீக்காய் பொடி வாங்கிவந்தேன்" என்றார் கணவர்.

மனைவி தலையில் அடித்துக்கொண்டாள்! எப்படி இந்த மறதி தம்பதிகள்!

ழுத்தாளர் ஒருவர் பாவம்! கற்பனையைவிட மறதி அசாத்தியம் அவருக்கு! சகஸ்ரநாமங்களைப் பெற்ற கதாபாத்திரங்களைத் தம் கதையில் சிருஷ்டித்து கதையின் ஆரம்பத்தையே முடிவாக மாற்றிக்கொண்டிருக்கும்போது அவர் மேஜைமேல் காபியை வைத்துவிட்டுச்சென்றாள் மனைவி. எழுத்தாளர் தம் பேனாக் கட்டையை காபி டம்ளரில் முக்கி முக்கி ஒரு விதமாய் கதையை முடித்த சந்தோஷத்தில் ’மடக்’கென்று மை புட்டியிலிருந்த மையை குடித்தாரே பார்க்கணும், காபியாக்கும்னு!

நாய்க்குட்டியை இழுத்துக்கொண்டு கையில் தொப்பியுடன் ஒருவர் பீச்சுக்கு வந்தார். காற்று வாங்கினார். நாய் சங்கிலியை அவிழ்த்துக்கொண்டு குதித்து விளையாடியது. அந்த வேகத்தில் யதேச்சையாக சங்கிலியின் கொக்கி அவர் மடியிலிருந்த தொப்பியின் தோல் பட்டையில் மாட்டிக்கொண்டது. வீட்டுக்கு எழுந்து போகையில் அவரைக் கண்டு சிரிக்காத பேர்களே இல்லை. ஆம், அந்த மறதி மன்னர் நாயைத் தூக்கித் தலைமீது வைத்துக்கொண்டு தொப்பியை சங்கிலியால் இழுத்தவாறு நடந்து சென்றார்!

இப்படி எத்தனையோ மறதி வீரர்களை நாம் காணலாம். இவர்களுடன் பழகும்போது சற்று உஷாராகத்தான் இருக்கவேண்டும். ஆனால் தைரியமாக ரூ.5, 10 கடன் வாங்கலாம் இவர்களிடம் என்றுமட்டும் கோட்டை கட்டாதீர்கள்! எனென்றால் யாருக்காவது கடன் கொடுத்துவிட்டு கடன் வாங்கியது நீங்கள்தான் என்று வாதாடி கோர்ட்டு டிகிரி வாங்கவும் மறக்க மாட்டார்கள் இம்மறதி மன்னர்கள்!

*** *** ***
 
காகிதப் பாலங்கள்
சாவி, 15 Oct 1980
காகிதப் பாலங்கள்
ஜி.எச்.எஸ். மணியன்


"லெட்டர் எழுதிட்டு இருக்கேம்மா, இதோ வந்துட்டேன்..."

"ஏண்டி, கௌசல்யா, போனவாரம்தானே ஒங்க அப்பா வந்துட்டுப் போனார். வெறுமனே அதுக்குள்ள என்ன லெட்டர்? என்ன... நாங்கள் சௌக்யம், நீங்கள் சௌக்யமான்னுதானே...!"

"ஆமாம்மா, எங்க அண்ணாக்கு லெட்டர் எழுதி ரொம்ப நாளாச்சு; மன்னி வேற ரெண்டு லெட்டர் போட்டுட்டா..."

"ரெண்டு லெட்டரா?... வொண்ணுதானே காண்பிச்சே?"

"நேத்திக்கு ஒரு கார்டு வந்ததேம்மா. மிக்ஸி வாங்கிருக்கான்னுகூட எழுதலே?"

"யாருக்கு ஞாபகம் இருக்கு அதெல்லாம்? ஒங்காத்துலே இருக்கறவா வாரம் பத்து லெட்டர் எழுதறா. என்னமோ நீ இங்கே முள்ளுமேலே இருக்கறதா நெனைப்பு அவங்களுக்கு."

முள்ளின் மேலே இருப்பது பரவாயில்லே... அன்றைக்கு அப்படித்தான்... கடைத்தெருவுக்குப்போனபோது அவளைப் பார்த்தாள். உம்மிடியார்ஸுக்குப் பக்கத்தில் என்று ஞாபகம். உடம்பின் முக்கால் பகுதியை துணி வெறுமனே விட்டிருந்தது. முள்-படுக்கையில் படுத்திருந்தாள். கண்களில் வெற்றுப் பார்வை. செம்மண் சடைக் கொத்துக்கள். அவள் பக்கத்தில் ஒரு அலுமினியக் குவளை. பழக்கப்படுத்தியே வேதனையை அடக்கிக் கொண்டிருப்பாள் என்று பட்டது.

இங்கு மனசுதான் ரணமாக்கப்பட்டது. வார்த்தை முட்களாய்... இதுவும் கொஞ்ச நாட்களில் பழக்கமாகி விடும்.

"எழுதி முடிச்சுட்டியாடி கௌசல்யா?" என்றபடியே ஹாலுக்குள் வந்தாள் அவள் ’அம்மா’... அதாவது, அவளோட அவரின் அம்மா. அவள் இப்படிக் கேட்டதற்கு லெட்டரைப் படித்துக் காட்டேன் என்று அர்த்தம்...

"கவர்ல எழுதறயா?... கவர் எதுக்கு? ஒரு கார்டுல ரெண்டு வரி எழுதிப்போட்டா பத்தாது? உன் போஸ்டேஜுக்கே மாசா மாசம் தனியா பணம் ஒதுக்கணும் போலிருக்கு. வந்து நீ லெட்டர் எழுதிட்டு இருக்கே... இல்லாட்ட கதை எழுதறேன்னு பேப்பரை வேஸ்ட் பண்ணிண்டிருக்கே!"

கௌசல்யாவின் விழிக்கடைகளில் நீர் முத்துக்கள் தென்பட்டன. "படிக்கறேம்மா, கேக்கறேளா?"

"ம்...ம்... பாபுக்கு ரெடியா கரைச்சு வச்சிருக்கியா?"

"ரெடியா இருக்கும்மா! அது எழுந்திருக்க நாழியாகும். ம்... அன்புள்ள அண்ணாவுக்கு கௌசல்யா அநேக நமஸ்காரம். அப்பா நலமாக வந்து சேர்ந்திருப்பா (எழுதியிருந்தது: அப்பா விவரமெல்லாம் சொல்லியிருப்பார். அவரிடம் சரியாகவே பேச முடியவில்லை.) இங்கு நாங்கள் எல்லோரும் சௌக்யம். பாபு... ம்... சமர்த்தாக இருக்கிறது. ஒண்ணு ரெண்டு வார்த்தை பேசுகிறது. (படிக்காமல் விட்டது: பாபு வரவர முரண்டு பிடிக்கிறது. இந்த வயசிலேயே இத்தனை பிடிவாதம். இவரை அப்படியே உரிச்சு வெச்சிருக்கு.) நிற்க, இவருக்கு ஆபீஸில் ஜாஸ்தி வேலை. எக்ஸாஸ்டட் ஆக வருகிறார். அட்வான்ஸஸ் செக்க்ஷன் பார்க்கிறார். சீ.ஏ.ஐ.ஐ.பி.யில்..." என்று ஆரம்பிததுமே,

"அதெல்லாம் எதுக்கு எழுதறே? அவன் பெயிலாயிட்டான்னு அப்படியே உங்க வீட்டுக்கு ஒப்பிக்கணுமாக்கும்?"

"..."

"சரி சரி, படி! மணி பன்னெண்டாகப் போறது."

"அக்கௌண்டன்ஸி பாஸ் பண்ணிவிட்டார். அறுபத்தெட்டு மார்க்... ம்... இவருக்கு ப்ரமோஷன் கிடைக்கலாம். (படிக்காமல் விட்டது: அக்கௌண்டன்ஸியை ஜுரத்தோடுபோய் கடனுக்கேன்னு எழுதினார். அவுட்!) நான் நேற்று ஒரு கதை எழுதி முடித்தேன்..."

"அதை நல்லா எழுது."

"ஜன்னலைப் பார்த்துண்டே உக்காந்துண்டிருக்கேன். கதை எழுதி பேப்பரை வேஸ்ட் பண்ணிண்டிருக்கேன்னு..."

"உருப்படியா வேற என்ன பண்றே? இந்த லட்சணத்துலே அப்பா உனக்கு ஒரு வேலை ஏற்பாடு பண்ணனும்னு நாயா அலையறார்... அப்பறம் என்ன எழுதி இருக்கே?"

"இன்னும் அனுப்பவில்லை. அனு எப்படியிருக்கிறாள்? (அவளுக்காவது இந்தமாதிரி பிடுங்கல்கள் இல்லாத... உடனே வேறமாதிரி பிடுங்கல்கள்னு ஜோக் அடிக்காதே.) ஜாதகம் ஏதாவது வந்ததா? சூரியநாராயணின் ஜாதகம் அப்பாவிடம் வாங்கிக்கொள். அடிக்கடி லெட்டர் போடு. (இந்த லெட்டர் ஒண்ணுதான் நமக்கு எல்லாம் ஒரு பாலமா இருக்கு. அது வழியாத்தான் நான் அங்கே வரமுடியும், புரிந்ததா?) அன்புள்ள உன் தங்கை கௌசல்யா ராமச்சந்திரன். பி.கு. மன்னிக்கு என் ரிகார்ட்ஸ்."

"அவ்வளவுதானா? ஒண்ணு மாத்திரம் சொல்லணும். நீ எழுதற கதையெல்லாம் உன் லெட்டரைவிட சின்னதாத்தான் இருக்கு... கட்டாயமா!"

"பக்கத்து லெட்டர் பாக்ஸ்ல இதைப் போட்டுட்டு வந்துடறேம்மா!"

"இருக்கட்டும். அதை அப்படியே அலமாரிலே வை. உங்க அண்ணாவுக்கு, அப்பாகூட ரெண்டு வரி எழுதணும்னு சொன்னார். ஏதோ அந்த ரெண்டாயிரத்தை இப்பவே தந்துடறேன்னு உன் அண்ணா வீராப்புப் பேசினான்? அப்பா எழுதினவுடனே போஸ்ட் பண்ணிக்கலாம்."

கௌசல்யாவுக்கு இருட்டிக்கொண்டது. லெட்டரில் தான் படிக்காமல் விட்ட வரிகள், மாற்றிப் படித்த வரிகள்... சமாளித்துக்கொண்டு,

"அப்பாவுக்கு நகச்சுத்தி மாதிரி இருக்குன்னாரே... அவர் சொல்லட்டும், நானே எழுதிடறேன்."

"சரி சரி..." என்று மாமியார் தலயைச் சாய்த்துக்கொண்டார்.

கௌசல்யா ஜன்னல் விளிம்பில் உட்கார்ந்துகொண்டு, தான் நேற்று எழுதி முடித்திருந்த கதையைத் திரும்பப் படிக்க ஆரம்பித்தாள்.

இந்தக் கதை எழுதுவதுமட்டும் இல்லாவிட்டால் வாழ்க்கை எப்படியிருக்கும் எந்று யோசித்துப் பார்த்தாள்.

"பேப்பரை வேஸ்ட் பண்ணிக்கிட்டு" என்று மாமியார் இரைந்தது மூளைக்குள் குதித்துக்கொண்டிருந்தது. இருக்கலாம். ஆனால் இந்தக் கதை எழுதறதுதான் அவளுக்கும், ஒரு புது உலகத்திற்குமிடையே பாலம் போட்டுத் தருகிறது.

அது ஒரு புது உலகங்கூட இல்லை. அது ஒரு அழகான ரோஜாத் தோட்டம்! சின்ன ரோஜாத் தோட்டம்! கற்பனை ரோஜாத் தோட்டந்தான்!

"ஏ கௌசல்யா! ஆரம்பிச்சுட்டியா, ஜன்னலைப் பார்த்துண்டு ஒக்காந்திருக்கிறதை! போஸ்ட்மேன் எதையோ விட்டெறிஞ்சுட்டுப் போனான். என்னன்னு பாரு...!"

போஸ்ட்மேன் விட்டெறிந்ததைப் பார்த்தவுடனே... எல்லா நமைச்சல்களையும் மீறிக்கொண்டு சந்தோஷம் குமிழியிட்டது!

’இந்த வாரம்’ பத்திரிகை அவளுக்கு வந்திருந்தது, அவளுடைய முதல் கதை பிரசுரமாகி!

"அம்மா, அம்மா... இதைப் பாருங்களேன். என் கதை வந்திருக்கு! அ..ப்..பா! பகவான் என்னை ஏமாத்தலே..." பத்திரிகையை மார்போடு அணைத்துக்கொண்டாள்.

"என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கோம்மா! அப்பாகிட்டே காட்டணும்! சாயங்காலம் அவர்கிட்ட காட்டணும்!"

மறுபடியும் கதவு தட்டப்பட்டது. இந்தத் தடவை, "அம்மா, மணியார்டர்"---போஸ்ட்மேன்.

"யாருக்கு மணியார்டர் போஸ்ட்மேன்? அவருக்குன்னா ஆதரைசேஷன் இருக்கு."

"மணியார்டர் உங்களுக்குத்தாம்மா! நீங்க கதையெல்லாம் எழுதுவீங்களா? ஒரு செவண்டிஃபைவ் ருபிஸ் வந்திருக்கும்மா, ’இந்த வாரம்’ பத்திரிகையிலிருந்து."

சந்தோஷம் பிரவாகமெடுத்தது. கைவிரல்கள் லேசாக நடுங்கின. தாழ்ப்பாளைப் பிடித்துக்கொண்டாள்.

"இந்தாங்கம்மா. எனக்கு ரொம்ப சந்தோஷம்மா... நான் லெட்டர்ஸ் போடற லொகாலிட்டிலே ஒரு எழுத்தாளர் அம்மா இருக்காங்கன்னா எனக்கு சந்தோஷம் இல்லீங்களா? வரேம்மா... நெறைய எழுதிக்கிட்டே இருங்க."

’ஆகட்டும்’ பாணியில் தலையாட்டத்தான் முடிந்தது.

"அங்கே யாருகூட அரட்டை கௌசல்யா?"

"அம்மா! இதோ பாருங்கம்மா, இப்ப பிரசுரமாச்சுல்லே கதை, அதுக்கு சன்மானம் அனுப்பிச்சிருக்காம்மா... எழுபத்தஞ்சு ரூபா!"

’அம்மா’ எழுந்து உட்கார்ந்துகொண்டாள்.

"என்னோட மொதல் கதைம்மா இது, நமஸ்காரம் பண்ணிக்கறேன்..."

கௌசல்யா குனிந்து பின்னல் தரையில் புரள, கால் கட்டை விரல் சொடக்கிடச் சேவித்தாள்.

"பணம் கொடுப்பாளா இதுக்கெல்லாம்? அப்பன்னா நீ நெறைய எழுதலாமே! இப்படி ஜன்னலைப் பார்த்துண்டு ஒக்காந்திருக்கற நேரத்துக்கு... பாபு வேற தூங்கிண்டிருக்கு... எவ்ளோ இது?"

"எழுபத்தஞ்சு ரூபாம்மா!"

கௌசல்யா நிமிர்ந்து மாமியாரைப் பார்த்தாள்.

அவளுக்கும், தனக்கும் உள்ள உறவில் புதிதாக ஒரு பாலம் தென்பட்டது.

அதுவும் காகிதப் பாலம்தான்!

*** *** ***
 
கூட்டுக் குடும்பம்
ரமணி, 11/04/2013

இளம் இந்திய ஆடவரும் பெண்டிரும் திரைகடலோடித் திரவியம் தேடி வாழ்வில் எல்லாவித சுதந்திரங்களையும் அனுபவித்துப் பார்க்க முற்படும் தற்காலத்தின் சமூகப் பரிணாம வளர்ச்சியில் இனிவரும் நாட்களில் பெண்ணியமும் ஆணியமும் ஒன்றுடன் ஒன்று மோதிப் போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்ததில் விளைந்த குட்டிக்கதை இது.

ஆறு வயதுச் சிறுவன் அகிலேஷ்: அக்கா, நீ மட்டும் அப்பாவை ஏன் டாடின்னு கூப்பிடறே? நாமட்டும் ஏன் அப்பான்னு கூப்பிடனும்? அப்பா வேற டாடி வேறயாக்கா? ரெண்டும் ஒரே மீனிங்தான்னு என் ஃப்ரெண்ட் அரவிந்த் சொல்றானே?

எட்டு வயதுச் சிறுமி மதுமிதா: ஆமாம் அகில் கண்ணா! ஒவ்வொரு ஸன்டேயும் என்னை வந்து கூட்டிட்டு போவாரே, ப்ரகாஷ் அங்கிள், அவர்தான் எனக்கு அப்பா. உங்கப்பா சூர்யா வந்து உனக்கு அப்பா, எனக்கு டாடி, ஸிம்பிள்!

அகிலேஷ்: அப்போ உங்கப்பாவை நான் டாடின்னு கூப்பிடலாமா? நம்ம ரெண்டு பேர்க்கும் ஒரே அம்மா, ஆனா அப்பா டாடி வேற வேறயா?

மதுமிதா: எனக்கும் உனக்கும் ஒரே அம்மாதான். ஆனா எனக்கு இன்னொரு மம்மி இருக்கா. அவளுக்கு ஒரு குட்டிப் பாப்பாவும் இருக்கு, தீபக்ங்கற பேர்ல, தெரியுமா? ஸோ, எனக்கு ரெண்டு தம்பிங்க இருக்காங்க.

அகிலேஷ்: ஏன்க்கா எனக்கு மட்டும் மம்மி இல்லை? அம்மா வந்ததும் கேக்கப் போறேன், எனக்கும் ஒரு மம்மி வேணும்.

மதுமிதா: ஷ்..ஷ்! சத்தம் போட்டுப் பேசாதே, பாட்டி எழுந்திடப் போறா! உனக்கு ஒரு ரகசியம் சொல்றேன், ஆனா நீ அதைப் பத்தி யார்ட்டயும், மெய்ன்னா அம்மா டாடிட்ட வாய்தவறிக் கூடக் கேட்டுறக் கூடாது, ப்ராமிஸ்?

அகிலேஷ்: ப்ராமிஸ்க்கா! என்ன ரகசியம் சொல்லேன்.

மதுமிதா: கூடிய சீக்கிரம் உனக்கும் ஒரு மம்மி வரப் போறா!

அகிலேஷ்: ஹை, எப்படிக்கா?

மதுமிதா: அம்மாவும் உங்கப்பாவும் இப்பல்லாம் அடிக்கடி சண்டை போட்டுக்கறா பத்தியா? அதனாலா, டாடி வேற கல்யாணம் பண்ணிக்கப் போறார். ஸோ, உனக்கு ஒரு மம்மி கிடைப்பா. ஆனா, நீ இதுபத்தி மூச்சு விடக்கூடாது.

அகிலேஷ் (கொஞ்சம் யோசித்து): ஏன்க்கா நம்ப அம்மா அப்பா டாடிலாம் அடிக்கடி சண்டை போட்டுக்கறா? நம்ப அம்மாவும் உங்க அப்பாவும் பிரிஞ்சதனாலதானே நீ இங்கேயும் அங்கேயுமா இருக்க வேண்டியிருக்கு. எனக்கும் ஸன்டேஸ்ல போர் அடிக்கிது. அட்லீஸ்ட் நாம சில்ட்ரன்லாம் ஒண்ணா ஒரு இடத்தில இருந்தா எவ்ளோ லவ்லியா இருக்கும்!

மதுமிதா: கவலைப் படாதே அகில் கண்ணா. நான் அதுக்கு ஒரு ப்ளான் வெச்சிருக்கேன். அது சரியா வரலேன்னா Plan-B-யும் யோசிச்சு வெச்சிருக்கேன். கூடிய சீக்கிரம் பாரேன், நான் பெரியவங்க எல்லோரையும் ஃபோர்ஸ் பண்ணி நாம எல்லாரும் சேர்ந்து ஒரு வீக்-என்ட் பிக்னிக் போகப்போறோம். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா முதல்ல நாம சில்ட்ரென் லெவல்ல ஒண்ணுசேரப் போறோம்.

தொலைபேசி மணி அடிக்க, பாட்டி விழித்துக் கொள்கிறாள். குழந்தைகள் வாயை மூடிக்கொண்டு தங்கள் ஹோம்-வர்க்கைத் தொடர்கின்றனர்.

*****
 
மேலுள்ள குட்டிக்கதையானது மேற்கத்திய கலாசாரத்தில் எப்படி பூதாகாரமாகப் பரிமாணம் எடுக்கக்கூடும் என்று கோடிட்டுக் காட்டி ஆங்கிலத்தில் வந்த ஒரு நகைச்சுவையின் தமிழாக்கம்:

ஏற்பட்ட திருமணமும் காதல் திருமணமும்:
ஒரு கலாசார அதிர்ச்சி


இரண்டு மனிதர்கள், ஒருவர் இந்தியர், மற்றொருவர் அமெரிக்கர் ஒரு பாரில் பக்கத்தில் அமர்ந்து குடித்துக்கொண்டிருந்தார்கள்.

இந்தியர் அமெரிக்கரிடம் சொன்னார்: "என் பெற்றோர்கள் என்னைக் கல்யாணம் செய்துகொள்ளும்படி கட்டாயப் படுத்துகிறார்கள். குடும்பப் பாங்கான ஒரு கிராமப் பெண்ணாம். நான் அவளை ஒரு முறை கூடப் பார்த்ததில்லை!

"நாங்கள் இதை ’அரேஞ்ட் மேரேஜ்’ என்று சொல்வோம். நான் காதலிக்காத ஒரு பெண்ணை மணந்துகொள்ள எனக்கு விருப்பம் இல்லை. இதை நான் அவர்களிடம் வெளிப்படியாகச் சொல்லிவிட்டதால் குடும்பத்தில் ஏகப்பட்ட குழப்பம்..."

அமெரிக்கர் சொன்னார்: "’லவ் மேரேஜ்’ பற்றியா நீங்கள் பேசுகிறீர்கள்? என் கதையைக் கேளுங்கள்...

"மூன்று வருடங்கள் டேட்டிங் பண்ணி நான் ஒரு விதவையைக் கல்யாணம் செய்துகொண்டேன். அவளுக்குக் கல்யாண வயதில் ஒரு மகள் இருந்தாள்... இரண்டு வருடம் கழித்து என் அப்பா என் வளர்ப்பு மகளான அவளைக் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டார். இதனால் என் தந்தை எனக்கு மருமகன் ஆகிவிட, நான் என் தந்தையின் மாமனார் ஆனேன்! என் மகள் இப்போது என் அன்னையாகி, என் மனைவியே எனக்குப் பாட்டியானாள்!

"எனக்கு ஒரு மகன் பிறந்தபோது உறவின் குழப்பங்கள் விசுவரூபம் எடுத்தன. என் மகன் என் தந்தையின் சகோதரன், எனவே எனக்கு அவன் அங்க்கிள் ஆனான்! என் தந்தைக்கும் ஒரு மகன் பிறந்தபோது இன்னும் மோசமானது. இப்போது என் தந்தையின் மகன், அதாவது என் சகோதரன் எனக்குப் பேரன்! இப்படியெல்லாம் எங்கள் குடும்பத்தில் இருக்கும்போது நீ உன் குடும்பத்தில் குழப்பம் என்று சொல்வது வேடிக்கை!"

*****
 
முதல் பக்கத்திலேயே முடியும் கதைகள்
ஜி.எச்.எஸ்.மணியன்
இதயம் பேசுகிறது, 27/07/1980


வெறும் எஸ்.எஸ்.எல்.சி.யோடு படிப்பை நிறுத்திக்கொண்டது தப்பாகப் பட்டது. அதற்கு மேலும் படிக்காதது ஒரு விதத்தில் சரி என்றும் பட்டது. படித்துதான் என்னத்தை சாதித்து விட்டான்?

"அம்மா, போய்ட்டு வரேன்..."

"ஜாக்கிரதையாப் போய்ட்டு வாடா.. பாத்து...நன்னா பண்ணிட்டுவா..."

அம்மாவின் டேப்-ரெகார்டட் வசனங்கள்...ஏதோ டெஸ்டிமோனியலை மறந்துவிட்டதாகப் பட்டது. அவசரம் அவசரமாக அலமாரியைக் குடைந்துகொண்டிருந்தான். அந்த அலமாரியின் நான்கு தட்டுகளில் ஒரு தட்டில், அதுவும் கீழ்த்தட்டில் ஒரு பாதிதான் அவனுக்குப் பாத்யதையான ஒரே இடம். அதுவும் இப்போதைக்கு...

சிவராமன் அலமாரியைக் குடைந்து துவம்சம் பண்ணிக் கொண்டிருக்கும் போதே, இன்னொரு,

"அம்மா, போய்ட்டு வரேன்..." எழுந்தது.

"டீ சாரு, மறக்காம மாமாக்கு போன் பண்ணுடி..."

"ப்ச்... பார்க்கலாம்... ஒண்ணும் ப்ராமிஸ் பண்ண முடியாது. லைன் கெடைச்சா பண்ணறேன். பத்மாக்கு வேற பண்ணனும். ஏதோ புதுசா ஸாரி வாங்கிக்கோன்னு சொன்னா... டீடெல்ஸ் கேக்கணும். டேஞ்சூர் லைனே கஷ்டமாருக்கு."

"அப்படியே மாமாக்கும் பண்ணும்மா, சமத்து, என் ராஜாத்தி!"

"சரிசரி அனத்தாதே.. ஹார்லிஸைக் கொண்டா. நாழியாச்சு. என்னோட புது ஸாரிக்கு... ஃபால்ஸ் அடிச்சாச்சா? நேத்திக்கே சொன்னேனே?"

அம்மா சமையற்கட்டுக்கு அவசரமாக ஓடிப்போய் ப்ளாஸ்க்கை எடுத்துவந்து சாருவின் கூடையில் வைத்தாள். கதகதப்பாக ஹார்லிக்ஸ்... இது போன உடனே குடிக்க. அப்புறம் எக்ஸ்சேஞ்சில் தனியாக காப்பி வரவழைத்துக் கொள்வாள்.

"டேய் சிவா! இன்னிக்கு என் ஃப்ரென்ட்ஸ் ரெண்டு பேரு வருவா. வீட்டைக் கொஞ்சம் ஒழிச்சு வைடா. அப்படியே ஈவ்னிங் ஸாரி ஃபால்ஸ் வாங்கிண்டு வந்துடுடா. கலரெல்லாம் அம்மாகிட்டே சொல்லிருக்கேன். வரப்ப, அப்ஸராலேருந்து க்யூடெக்ஸ்... என்ன?"

"டீ, அவனுக்கு இன்னிக்கு ஏதோ இண்டர்வ்யூடீ. நேரம் கிடைக்காது, பாவம்."

"ஆமா, பெரிய்ய இண்டர்வ்யூ..." தோள்பட்டையில் முகத்தை இடித்துவிட்டு, ஹைஹீல்ஸை மாட்டிக்கொண்டு, மாமா வாங்கிக்கொடுத்த சிங்கப்பூர் குடையை விரித்துக்கொண்டு சாரு கிளம்பினாள்.

அவனுக்குப் பின்னாள் மூன்று வருஷங்கள் கழித்துப் பிறந்தவள்...

போன வருஷம் ஏதோ எஸ்.எஸ்.எல்.ஸி.யில் ஓஹோன்னு மார்க் வாங்கிட்ட புண்யத்துல டெலிபோன் ஆபரேட்டராக உத்தியோகம் கிடைத்துவிட்டது. வேலைக்குப் போய் அகங்காரத்தைத்தான் நெறைய சம்பாதிக்கிறாள்.

"சாரு, சாரு... மாறக்காம மாமாக்கு போன் பண்ணும்மா, சமத்துல்லே..." -- அம்மா தெருவரை ’சமத்துல்லே’ பல்லவியைப் பாடிக்கொண்டு வந்தாள். எல்லாம் ஓசி ’கால்’ தானே! காஷ்மீர்லேந்து கன்யாகுமரி வரைக்கும் போன் பண்ண முடியுங்கற ஜம்பம் வேறு!... அதுதான் அம்மாவுக்கு சாருவின் மேல் அத்தனை கரிசனம். ஓசி ’கால்’ உபயம். வாரா வாராம் பம்பாயில் இருக்கும் மாமாவுக்கு போன்... மாமாவும் குழைந்து குழைந்து பேசுவார்... என்ன அப்படிப் பேசிடப் போறார்!... சிவா இன்னும் ஆத்துலதான் உட்கார்ந்துண்டு இருக்கானா? வேறு என்ன பேசப் போறார்?

மதுரைச் சித்திக்கு... மெட்ராஸ்லே பெரியம்மா பொண்ணுக்கு. இல்லாட்ட இருக்கவே இருக்கா ஃப்ரெண்ட்ஸ்...

பேன்ட் லேசாக ஈரமாக இருந்தது உறுத்திக்கொண்டே இருந்தது.

எல்லாம் காய்ந்துவிடும். இப்போ அடிக்கற வெயில்லே, அப்படியே நனைச்ச பேன்ட் போட்டுண்டு போனாக்கூட சீக்கிரமே காய்ஞ்சு போயிடும்.

"அம்மா, நான் வரேம்மா..."

"சரி, பார்த்துப் பண்ணிட்டு வா..."

’நான்தான் ஒரு ஏழெட்டு தரமாவது அறுந்து ஹிட் பண்ணிட்டேனே... எனக்கு ரெஸ்ட் கொடுத்தா என்னவாம்’ என்று முகத்தில் அறைந்தாற் போலக் கேட்கும் செருப்பு!

பன்னிரண்டாம் நம்பர் வீட்டுப் பெண் எதிர்ப்பட்டாள். ஈரக் கூந்தலை முடிந்திருந்தாள். பட்டுப் புடவை ’ஸ்விஷ்.. ஸ்விஷ்..’ என்றது. ஸ்டேட் பேங்க்கில் உத்தியோகம். ஏதோ எல்லாமே பெண்களுக்குத்தான் உத்தியோகம் தருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பது போலப் பட்டது அவனுக்கு.

"சரிசரி நீ பாத்துப் போய்ட்டுவா..." என்று சொல்லிவிட்டு, "ஏண்டீ, ஒங்காத்து கல்பனா குளிச்சிண்டிருக்காளா?" என்று யாரையோ ஆதங்கமாக விசாரித்துக்கொண்டிருந்த அவள் மாமியார் சட்டென்று சிவராமனைப் பார்த்துவிட்டு,

"ஏண்டா சிவா... இன்டர்வ்யூவா? பார்த்து நன்னா பண்ணிட்டுவா... எங்காத்து வனஜா ஒனக்குப் பின்னாடிதான் படிப்பை முடிச்சா... இப்ப ஆபீஸரா இருக்கா. ஏன், ஒங்காத்லேயே சாரு இல்லையா? என்னமோடாப்பா..." என்று அங்கலாய்த்தாள்.


முனிசிபாலிடி ப்யூன் ஒருவன் வந்து அவர்களை அழைத்து விட்டுப் போனான். ’அல்லாரும் மொதல்ல ஹெட்கிளார்க்கைப் பார்த்துட்டுப் போகணும்’ என்ற உத்திரவோடு.

இந்த வேலை தனக்கு எப்படியாவது கிடைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். உத்தியோகம் ஏதோ வெளியில் சொல்லிக்கொள்ளும்படி இருக்காது. என்ன பெரிய உத்தியோகம்? ஒவ்வொரு தெருவிலும் உள்ள பெயர்ப் பலகைகளில் உள்ள ஜாதிப் பெயர்களை ’சுவடே தெரியாமல்’ அழித்துவிட்டு மொட்டையாக எழுத வேண்டும்! ஜாதி ஒழிப்புக்காகப் போராடிய ஒரு பெரியவரின் பிறந்தநாள் விழாவை அந்த முனிசிபாலிடி விமரிசையாகக் கொண்டாடிக் கொண்டிருந்தது.

ஹெட்கிளார்க் வந்திருந்தவர்களின் ’எஸ்.எஸ்.எல்.சி.’ புத்தகங்களை வாங்கிப் பார்த்தார். அதோடு சரி. சிவராமன் அவரிடம் ’டெஸ்டிமோனியல்ஸ், ப்ரீவியஸ் எக்ஸ்பீரியன்ஸ் சர்ட்டிபிகேட்’ என்று கதம்பமாக நீட்டினான்.

ஒரு மணி நேரத்தில் செலக்ட் ஆனவர்களின் பெயர்களை டைப் பண்ணி ஒட்டினார்கள்.

"என்ன ஹெட்கிளார்க் ஸார்... நா நல்லாத்தானே பண்ணியிருந்தேன். என் பேரு லிஸ்ட்லே காணுமே?"

"சிவராமன், உன்னோட ’எஸ்.எஸ்.எல்.சி.’ புக்கைப் பிரிச்சுப் பாரு. அதுலேதான் கோளாறு எல்லாம்..."

’ஒண்ணுமே புரியலை ஸார்’, என்ற பாணியில் ஹெட்கிளார்க்கைப் பார்த்தான்.

அவரும் விடாமல், "அட யாருப்பா, விவரந் தெரியாத பிள்ளையா இருக்கே... எஸ்.எஸ்.எல்.சி. புக்கோட மொதப் பக்கத்தை நல்லா பாரு..."

எல்லாக் கதைகளும் முதல் பக்கத்தில்தான் ஆரம்பிக்கின்றன.

சில கதைகள் முதல் பக்கத்திலேயே முடிந்து விடுகின்றன. வாழ்க்கையும் அப்படித்தான் போலிருக்கிறது.

*** *** ***
 
Dear Shri Saidevo,

I have at last succeeded in catching up with your prodogious Tamil contributions. The above story by Shri G.H.S. Maniyan is really a very true to life story. I like it very much. Thank you.
 
namaste shrI Sangom.

(Late) GHS Manian is my younger brother. He wrote twenty or more short stories that were published in almost all leading Tamizh magazines of his time and in KaNaiyAzhi. I think I do have a flair for writing fiction and poetry in Tamizh, which I have rediscovered of late, but what the authors usually call it--பிரசவ வேதனை--in bringing forth a short story is so true in my case that I desist from indulging in it seriously, except for short short stories. With sufficient fluency I should like to develop my poetry skills for writing spiritual poems. In case you are interested in hardcore traditional Tamizh poetry, you might find this Google Group interesting:
https://groups.google.com/forum/#!forum/santhavasantham

Glad to hear from you after a very long time. I am happy that you liked my brother's short story.

Regards,
ramaNi


Dear Shri Saidevo,

I have at last succeeded in catching up with your prodogious Tamil contributions. The above story by Shri G.H.S. Maniyan is really a very true to life story. I like it very much. Thank you.
 
மேலும் சில கதைகள்

வாழ வைத்தவள்
உமா குருமூர்த்தி
(1.9.1954)


1950-களில் வெளிவந்த ஜனரஞ்சகமான குடும்பச் சிறுகதைகள் பல இன்றைய சூழலில் 'சென்டிமென்டல்'-ஆகத் தோன்றலாம். ஆயினும் அந்நாட்களில் அவை வாசகர்களிடையே புகழ்பெற்றிருந்தன.

மறைந்த என் அன்னையார் எழுதி 1.9.1954 இதழில் (பத்திரிகையின் பெயர் தெரியவில்லை) வெளிவந்ததொரு சிறுகதையின் அச்சு நகலை அலகிட்டு கணினிப் படக்கோப்புகளாக இங்குத் தரவேற்றம் செய்துள்ளேன். வாசகர்களின் பின்னூட்டங்களை இந்த இழையிலேயே பதியலாம்.

--ரமணி, 16/04/2013

*****

ug-vAzha vaithtavaL-01.jpg

ug-vAzha vaithtavaL-02.jpg

ug-vAzha vaithtavaL-03.jpg

ug-vAzha vaithtavaL-04.jpg

ug-vAzha vaithtavaL-05.jpg
 
Last edited:
மேலும் சில கதைகள்

வாழ வைத்தவள்
உமா குருமூர்த்தி
(1.9.1954)


1950-களில் வெளிவந்த ஜனரஞ்சகமான குடும்பச் சிறுகதைகள் பல இன்றைய சூழலில் 'சென்டிமென்டல்'-ஆகத் தோன்றலாம். ஆயினும் அந்நாட்களில் அவை வாசகர்களிடையே புகழ்பெற்றிருந்தன.

மறைந்த என் அன்னையார் எழுதி 1.9.1954 இதழில் (பத்திரிகையின் பெயர் தெரியவில்லை) வெளிவந்ததொரு சிறுகதையின் அச்சு நகலை அலகிட்டு கணினிப் படக்கோப்புகளாக இங்குத் தரவேற்றம் செய்துள்ளேன். வாசகர்களின் பின்னூட்டங்களை இந்த இழையிலேயே பதியலாம்.

--ரமணி, 16/04/2013

*****

Dear Shri Saideo,

Your family is literally talented, it looks. It should therefore be not difficult for you to write even a novel, let alone short story. My suggestion to you is to write a full-fledged novel depicting 3 or 4 generations of a tabra family and giving graphic details of the lifestyle, priorities, value systems etc., which time had brought out in the tabra life.

May be, you can publish your draft chapters in TBF; competent people like Smt. VR and RR and others will give suggestions for improvement, I am sure. Why not make the first step? Also, I am confident that your mother's blessings will be with you.
 
namaste shrI Sangom.

I am happy with your encouragement. I have so far written five (now seven) short stories, one novelette and one novel in Tamizh, all of which I have published here in this thread:
http://www.tamilbrahmins.com/litera...991-2993-3021-2970-3007-2965-2995-3021-a.html

As for the novels, except for shrI su.Raju and Manohar, no other member gave a feedback for the novels, although the thread had over 2700 hits. As for the plot of three generations, Sivasankari has written a novel called பாலங்கள் dealing with three generations of Tamizh brahmin families. I certainly do not have the experience to match hers, but then my novel is a nostalgia about the old culture that prevailed amongst us in the agrahArams.

I would be happy if you can peruse my stories in the above thread, specially the novel and give me your feedback, but you might take your time to go about it.

Regards,
ramaNi


Dear Shri Saideo,

Your family is literally talented, it looks. It should therefore be not difficult for you to write even a novel, let alone short story. My suggestion to you is to write a full-fledged novel depicting 3 or 4 generations of a tabra family and giving graphic details of the lifestyle, priorities, value systems etc., which time had brought out in the tabra life.

May be, you can publish your draft chapters in TBF; competent people like Smt. VR and RR and others will give suggestions for improvement, I am sure. Why not make the first step? Also, I am confident that your mother's blessings will be with you.
 
சார்பு எழுத்துகள்
சிறுகதை
ரமணி, 19/05/2013


மணிவண்ணன் சொல்வது:

ம்பத்தைந்து வயதைக் கடந்த ஒரு பேரிளம் பெண்ணும் மேலும் இரண்டு வயது தாண்டிய ஒரு மூத்தோனும் ஒருவரிடம் ஒருவர் மனம் பற்றுவதற்கு என்ன காரணம் என்று பலமுறை நாங்கள் இருவரும் யோசித்துப் பார்த்திருக்கிறோம். திருமணம் செய்துகொண்டு சேர்ந்து வாழ நினைக்கும் இந்த மனப்பற்று காதலாலோ காமத்தாலோ அல்ல என்பது மட்டும் எங்கள் இருவருக்கும் நன்கு புரிந்தது. பின் எதனால் இந்தப் பற்று? சொல்கிறேன்.

திருச்சி பெரிய கடைத்தெருவில் அரசுடமையாக்கப்பட்ட ஒரு வங்கியின் கிளை இருந்தது. ஒருநாள் அங்கு நான் என் பெயரில் புதியதொரு சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்காகச் சென்றேன். அப்போது ஹேமாவைக் கவுன்டரில் பார்த்தபோது அவள் நெற்றியில் இருந்த ’ஸ்டிக்கர்’ பொட்டின் நிறம் கருப்பு என்பதைக் கவனிக்கவில்லை. பத்தே நிமிடங்களில் என் தனிநபர் விவரங்களை விசாரித்துப் படிவங்களைக் கணினியில் பூர்த்திசெய்து கையெழுத்துகள் பெற்றுக் கொண்டு நான் கொடுத்த ஐந்தாயிரம் ரூபாயை முதலாகக் கொண்டு கணக்கைத் துவக்கி செக் புத்தகத்துடன் பாஸ் புத்தகத்தை என் கையில் கொடுத்தாள்.

அவள் தன் பணியில் ஈடுபட்டிருந்த போது கவனிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பேரிளம்பருவ வயது அவள் முகத்தில் கண்களில் காதோரத் தலைநரைப்பில் தெரிந்தாலும் அந்த விகற்பங்களை மீறி ஒரு கம்பீரமான, புகை படிந்த அழகு அவளிடம் இருந்தது. பணியின் புன்னகை முகத்துக்கு அணிசெய்த போதிலும் கண்களில் ஓர் இனம் புரியாத சோகம். அதற்கு அவள்தன் கணவனை இழந்த வருத்தமோ அல்லது கைம்பெண் வாழ்க்கையின் தனிமையோ சுமையோ காரணமாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

ஒவ்வொரு முறையும் நான் வங்கிக்குச் சென்ற போது அவள் எனக்கு முன்னுரிமை தந்து உதவியது என்னை யோசிக்க வைத்தது. நானும் வாழ்க்கையில் துணையை இழந்தவன் என்பதால் ஏற்பட்ட பரிவு இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன். நான் குடியிருந்த அதே கீழாண்டார் வீதியில் அவளது சொந்த வீடு இருந்ததுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

ஒரு நாள் அவளைக் கேட்டேவிட்டேன்: "ஐந்தாறு பேர் காத்திருக்கும் போது எனக்கு முன்னுரிமை தருவது சரியா?"

நான் தாழ்ந்த குரலில் பேசியும் கேட்டுவிடக் காத்திருந்தவர்களில் இருவர் ஒரே குரலில் முன்மொழிந்தார்கள்: "நீங்க ஒங்க வேலையை முடிச்சுக்கங்க ஐயா. கல்லூரிக்கு நேரமாய்டுமில்ல?"

"நீங்கள் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியர்களின் தலைவர் என்பதால் உங்களைப் பல பேருக்குத் தெரியும். யாராயிருந்தாலும் ஓர் ஆசிரியருக்கு முன்னுரிமை தந்து சேவை செய்வதை ஆட்சேபிக்க மாட்டார்கள் என்று கண்டீர்கள் அல்லவா?"

புன்னகையுடன் நான் அவள் பதிலை ஏற்ற போதிலும் அதுமட்டும் காரணமல்ல என்று என் உள்மனம் கூறியது. அல்லது இது என் கற்பனைதானோ என்றும் ஓர் எண்ணம் உதித்தது.

ருநாள் மாலை தன்னிகழ்வாக நாங்கள் இருவரும் வீடு செல்லும் வழியில் கீழாண்டார் வீதியில் சேர்ந்து நடந்தோம். அப்போது ஹேமாவைப் பற்றி மேல்விவரங்கள் தெரிந்துகொண்டேன். அதே வங்கியின் மண்டல அலுவலகத்தின் கணிணிப் பிரிவில் அதிகாரியாகப் பணியாற்றிய அவள் கணவன் நான்கு வருடங்கள் முன்பு எந்த உடல்நலக் குறைவுமில்லாமல் இயற்கையாக ஒரு நாள் உயிர்நீத்தபோது அவள் ஒரே மகன் கார்த்திக் ’கம்ப்யூட்டர் எஞ்சினீர்ங் கோர்ஸ்’ கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்தானாம். இப்போது அவன் சென்னையில் கடந்த மூன்று வருடங்களாக ஒரு பிரபல ’ஐ.டி. கம்பெனி’யில் ’ஸாஃப்ட்வேர் எஞ்சினியர்’-ஆக இருக்கிறானாம். இன்னும் ஒரு வருடத்தில் அவன் ஒரு மூன்று வருட ஒப்பந்தத்தின் பேரில் அமெரிக்காவில் வேலைசெய்ய வேண்டியிருக்குமாம்.

"படிப்பு முடிஞ்சு காம்பஸ் ப்ளேஸ்மென்ட்லயே அவனுக்கு வேலை கிடச்சது. சென்னைல போஸ்டிங். ரெண்டு மாசம்கூட வீட்ல இருக்க முடியல. வேலைல சேர்ந்து ஒரே வருஷத்ல ஒரு வாட்டி நாலு மாசம் சிங்கப்பூர் போய்ட்டு வந்தான்..."

ஹேமாவின் பெற்றோர்களும் அவள் கணவனின் பெற்றோர்களும் காலப்போக்கில் இயற்கை எய்தியதால் கணவன் இறந்து ஒரே மகனும் சென்னைக்குச் சென்றுவிடத் தனிமையும் துக்கமும் அவளை வாட்டியது. அவள்கூடப் பிறந்த அக்கா அமெரிக்காவில் குடியேறிவிட்டாள். கணவனோ ஒரே மகனாக இருந்ததால் அவளுக்கு நெருங்கிய உறவினர்களே இல்லாமல் போனது.

"என் வேலைதான் எனக்கோர் ஆறுதலா இருந்தது. பாங்க்ல பலபேர் ஒரு குடும்பம் போலப் பழகியது இன்னொரு ஆறுதல். எனக்கோ சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் கிடைக்காது. கிளார்க்காவே முப்பது வருஷம் சர்வீஸ் போட்டாச்சு. இன்னும் மூணு வருஷம் தள்ளினா அடுத்த சம்பள உயர்வு செட்டில்மென்ட்ல பென்ஷன் கணிசமா ஏறும். அதுக்கப்பறம் தேவைப்பட்டா அம்பத்தெட்டு வயசில vrs (விருப்ப ஓய்வு) வாங்கிக்கலாம். இதெல்லாம் கார்த்திக் மனசுக்கு சமாதானமாகலை. மாடியும் கீழுமா இருக்கற இந்தப் பெரிய வீட்ல யார் துணையும் இல்லாம அம்மா தனியே வாழறது அவனுக்கு ரொம்பக் கவலையா இருந்தது."

சிங்கப்பூர் போய்வந்ததும் கார்த்திக் தன் அம்மாவின் மனதைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற முயன்று அவளை மறுமணம் செய்துகொள்ளத் தூண்டினானாம். அநேகமாக அவன் அடுத்த வருட நடுவில் அமெரிக்கா சென்று குறைந்தது மூன்று வருடம் வேலை பார்க்க வேண்டியிருக்குமாம். அதற்குப் பின்தான் அவன் திருமணம் செய்துகொள்ள முடியுமாம். வேலை காரணமாக அம்மா அவனுடன் வந்து இருக்க முடியவில்லையென்றால் மறுமணம் தான் தீர்வு என்று அவன் வாதாடினான். மனைவியை இழந்த ஒரு நல்ல மனிதராகப் பார்த்துத் துணையாக ஏற்றுக்கொண்டால் எந்தப் பிரச்சனையும் வர வாய்ப்பில்லை என்று அவன் கருதினான்.

"மனைவியோ கணவனோ யாராவது ஒருவர் மறைவில் முந்துவது எல்லோர்க்கும் நிகழ்வதுதானே? மீந்திருப்பவர் எல்லோரும் மறுமணம் செய்துகொள்ளவா விழைகிறார்கள்?" என்று லேசாகக் கிண்டினேன், அவள் மனதில் உள்ளது அறியும் வண்ணம்.

"இதேபோல்தான் நானும் அவன்ட்ட வாதாடினேன். இந்தக் காலத்துக் குழந்தைகள் நம்மைவிட புத்திசாலிகள் மட்டுமல்ல, வாழ்க்கையப் பிராக்டிகலா அணுகுபவர்கள். அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா?"

என் மனதில் நம்பிக்கை எழ முகத்தில் வியப்பைத் தேக்கிக் கேட்டேன்: "என்ன சொன்னான்?"

"குழந்தைகள் நலனில் அக்கறையுள்ள பெற்றோர்கள் இம்மாதிரி சமயங்களில் விதிவிலக்காக இருப்பது ஒன்றும் தப்பில்லையே? என்றான்."

"அதற்கு நீங்கள் என்ன சொன்னீர்கள்?"

"நான் தனியா வாழ்வதால் உன் நலனுக்கு என்ன கொறச்சல் கண்ணா?" என்றேன்.

"அதுக்கு என்ன சொன்னான்?"

"’நான் பேச்சிலரா அமெரிக்காவுல குறஞ்சது மூணு வருஷம்--அது எக்ஸ்டென்ட் ஆக வாய்ப்பிருக்கு--என் பர்சனல் லைஃப்ல காலம் தள்ள எவ்வளவு கஷ்டப்படுவேன்னு உனக்கு நல்லாத் தெரியும். எனக்கு பேசிக் குக்கிங் கூட இன்னும் சரியாப் பிடிபடல. நான் அமெரிக்கால இருந்துகிட்டு ஒவ்வொரு நாளும் என் கழுத்தளவு வேலைகளுக் கிடையில நீ ஒண்ணும் ஹெல்த் ப்ராப்ளம் இல்லாம இருக்கயா, ஸேஃபா இருக்கயா, உன் தேவைகளை எதும் விடாது கவனிச்சுக்கறயா, வேளா வேளைக்கு ஒழுங்கா சாப்பிடறயான்னுலாம் கவலைப்படறது என் நலனுக்குக் கொறச்சல் இல்லையாம்மா?’ அப்படீன்னு கேட்டான்.

"’உண்மைதான் கண்ணா. அப்போ ஒண்ணு செய். என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லறதவிட நீ ஒரு கல்யாணம் பண்ணிகிட்டு வெளிநாடு போ. அப்போ உனக்கும் எனக்கும் எந்த ப்ராப்ளமும் இருக்காது’ன்னு நான் சொன்னேன்.

"’இருவத்தஞ்சு வயசுல எனக்கென்னம்மா கல்யாணத்துக்கு அவசரம்? அப்படியே கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அவள் அங்கே தனியா நாள் முழுதும் வீட்ல அடஞ்சு கிடக்கணும். அப்புறம் நான் உங்க ரெண்டு பேரைப் பத்தியும் கவலைப்படணும், இன்னும் நாங்க ரெண்டு பேரும் உன்னைப்பத்திக் கவலைப் படணும். இதெல்லாம் இப்போ தேவையாம்மா?’"

அவளால் அவன் கேள்விகளுக்கு அவனை சமாதானப் படுத்தும் வகையில் பதில் சொல்லி மாளவில்லை. கடைசியாக அவள், "சரி கண்ணா! நீ நினைக்கற மாதிரி, இந்த ஊர்ல, எனக்கோ ஒனக்கோ தெரியவந்து, நமக்குத் தகுந்தவரா, ஒரு துணையிழந்த மனிதர், எனக்குத் துணையா இருக்க முடியும்னு, உனக்கும் எனக்கும் உறுதியாத் தெரிஞ்சா, நீ சொல்ற யோசனையைப் பரிசீலிப்போம்" என்று கூறி விடுப்பில் வந்திருந்த அவனைச் சென்னைக்கு அனுப்பிவைத்தாள்.

"கழுவற மீன்ல நழுவற மீனாச்சே நீ! ரெண்டு வருஷம் ரீஜினல் ஆஃபீஸ் லா டிபார்ட்மென்ட்ல வேலை பார்த்ததனால நல்லா நெளிவுசுளிவோட பேசக் கத்துக்கிட்டே. அப்புறம் உன் இஷ்டம். உனக்கு அதுமாதிரி யாராவது அகப்பட்டா எனக்கும் சம்மதம், அவர் எனக்குத் தெரிஞ்சவரா இருக்கணுங்கற அவசியம் இல்லைன்னு நான் இப்பவே உன்கிட்ட சொல்லிடறேன்" என்று அவன் ஆயாசத்துடன் கூறிவிட்டுச் சென்றானாம்.

மறுமணத்தில் ஹேமாவுக்கு விருப்பம் இல்லாமல் இல்லை என்று கோடிகாட்டிவிட்டாள். இப்போது அவளுக்குத் தகுந்த ’துணையிழந்த துணை’யாக என்னைத் தயார்படுத்திக் கொள்வது என் பொறுப்பாகியது. நாங்கள் இருவரும் ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருந்ததும், இருவருமே இந்த வயதில் சகஜமாக வரும் சர்க்கரை வியாதியோ ரத்த அழுத்த நோயோ வேறு எந்த உபாதையோ இல்லாமல் நல்ல உடல்நிலையில் இருந்ததும் பெரிய ’ப்ளஸ் பாயின்ட்’களாக இருந்தது.

*****
(தொடரும்)
 
(சார்பு எழுத்துகள்: சிறுகதைத் தொடர்ச்சி)
ஹேமா சொல்வது:

புயலடித்து ஓய்ந்து அமைதியாக ஓடிக்கொண்டிருந்த என் வாழ்க்கை ஓடம் இப்போது மறுபடியும் அலைகளில் தத்தளிக்கிறதோ என்று தோன்றியது. அல்லது இந்தப் புது அலைதான் அதைக் கரைசேர்க்குமோ என்றும் ஒரு நம்பிக்கை எழுந்தது.

தமிழ்ப் பேராசிரியர் மணிவண்ணன் போன்று மனதில் எந்த விகல்பமும் இல்லாது பழகும் நல்ல மனிதரைப் பார்ப்பது அரிது. அதுவும் அவரது அறிமுகமும் சமீபகாலப் பழக்கமும் எனக்கு ஒரு கொடுப்பினை என்றே தோன்றுகிறது. துணையிழந்த இவர் துணையிழந்த எனக்கு என் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் கார்த்திக் சொன்ன தகுந்த பாதுகாப்பாக இருக்கமுடியும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் வலுப்பட்டு வருகிறது

இவர் எங்கள் குடும்பத்தில் இணைந்தால் ஏற்படக்கூடிய மாறுதல்கள் பற்றிச் சிந்தித்தேன். என் மகன் கார்த்திக்கும், இப்போது சென்னையில் கடைசி வருடக் கம்ப்யூட்டர் இஞ்சினீரிங் கோர்ஸ் பண்ணும் அவர் மகள் வள்ளிநாயகியும் அண்ணன்-தங்கைகளாவார்கள். எனக்கோர் அம்மா ஸ்தானமும் அவருக்கு அப்பா ஸ்தானமும் கிடைக்கும். அவரோ நானோ எந்த வேற்றுமையும் பாராட்டாது இரண்டு குழந்தைகளையும் நன்கு பார்த்துக்கொள்வோம் என்பது நிச்சயம். நாங்கள் இருவருமே நல்ல உடல்நிலையில் இருந்ததால் அடுத்த ஐந்தாறு வருடத்தில் குழந்தைகள் இருவருக்கும் நல்ல வரனாகப் பார்த்து மணமுடித்து வைக்க முடியும் என்றும் உறுதியான நம்பிக்கை இருந்தது.

இதெல்லாம் இருக்கட்டும். முதலில் எங்கள் இருவரது ஈடுபாடுகளும் வாழ்க்கை பற்றிய கண்ணொட்டமும் எனக்கு அதன்பின் பொதிந்துள்ள ஆன்மீகத் தேடலும் எவ்வளவு தூரம் ஒத்துப் போகும் என்று சிந்திக்கவேண்டும். காதலும் காமமும் இல்லாது மனதால் நெருங்கி சமூகம் அங்கீகரித்த தம்பதியராக, தின வாழ்வில் அன்பில் பிணைந்த நண்பர்களாக இருவரும் வாழப் போகும் வாழ்க்கையில் இவைதானே முக்கியம்?

அவருடன் பழகிய இந்த நாலைந்து மாதப் பழக்கத்தில் இது ஒன்றும் பிரச்சினையாக இருக்காது என்று தோன்றியது. மலைக்கோட்டைப் பிள்ளையார் கோவில் உச்சியில் பரந்திருக்கும் பாறையில் காற்றாட நாங்கள் உட்கார்ந்து பேசியபோதும், மாலை வேளைகளில் காவேரிப் பாலத்தில் நின்றுகொண்டு காற்று வாங்கிக் கதிரவன் மறையும் கோலங்களை வியந்து ரசித்து அந்த இயற்கையின் அழகில் திளைத்தபோதும் அவரைப் பற்றி நிறையத் தெரிந்துகொண்டேன்.

என் கணவர் போலவும் கார்த்திக் போலவும் நெற்றியில் திருநீறு ஒரு கீற்றாகவேனும் அணியாவிட்டாலும் அவருக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு, முருகன் பேரில் உள்ள பற்றால்தான் மகளுக்கு வள்ளிநாயகி என்று பெயரிட்டதாகவும் சொல்லியிருக்கிறார். நாங்கள் கார்த்திக்கை வளர்த்தது போல் அவரும் தன் மகளை சமயம் சார்ந்த இல்லற, நல்லற வழியில் வளர்த்ததால் இன்றைய அவசர, நவீன, கட்டுபாடற்ற வாழ்வின் அலைகள் அவர்களை அதிகம் மாற்ற வாய்ப்பில்லை.

தோளில் தொங்கும் ஜோல்னாப் பையில் புத்தகங்கள், பேனா பென்சில் மற்றும் ஒரு நோட்டுப் புத்தகம். வெள்ளை வேட்டி. வெள்ளை அல்லது சந்தனக் கலர் முழுக்கை--சமயத்தில் அரைக்கை--ஜிப்பா. கோபமே காணாத முகம். திருப்தியும் மகிழ்ச்சியும் குமிழியிடும் கண்ணாடி அணியாத விழிகள். நெற்றியின் அகலமும் இலேசான காலைப் பனிமூட்டம் போல் ஆங்காங்கே நரைத்த தலைமுடியும். நெற்றியில் இல்லாத திருநீறு அவர் மேலுதட்டில் ஒட்டிக்கொண்டது போல இருபுறமும் சரியும் வெள்ளைநரை மீசை. இதை நான் அவரிடம் சொன்னபோது ஒலியுடன் சிரித்து, "உங்கள் கற்பனையின் விற்பனத்தைக் காணும்போது கவிதையும் எழுதவரும் போலிருக்கே?" என்றார்.

"எனக்கு மரபுக் கவிதைகள் படிப்பது பிடிக்கும். பாரதியார் மிகவும் பிடித்த கவிஞர். ரொம்பக் கொஞ்சமா தேவாரமும் திருவாசகமும் கம்பனும் படிச்சிருக்கேன். நீங்கள் கற்றுக்கொடுத்தால் நான் யாப்பிலக்கணம் கற்க ரெடி."

"வேறென்ன உலகியல் சுவைகள் உங்களுக்கு?"

"தொலைக்காட்சியில் பழைய தமிழ் சினிமாக்கள், பாட்டுகளின் ஒளிபரப்பு, விவாதங்கள், ஆன்மீகத் தொகுப்புகள் பார்ப்பேன். தினமும் இரவு பத்துமணி வரை இன்டர்நெட்டில் பெண்களுக்கான மன்றங்களில் இடும் அஞ்சல்களை மேய்வேன். சமயத்தில் நானும் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வேன். இணையத்தில் உள்ள தமிழ்ச் சிறுகதைகளும் நாவல்களும் நிறையப் படிப்பேன். கார்த்திக் நெறைய ஆங்கில, தமிழ்க் கதைகள், சமயத்தில் தமிழ்க் கவிதைகள் படிப்பான். தினமும் என் மாலை வழிபாட்டில் என் தோழி கல்பனா சொல்லித்தந்த சின்னச் சின்ன சமஸ்கிருத ஸ்லோகங்களும், தமிழ் வழிபாட்டுச் செய்யுள்களும் முணுமுணுப்பேன். காலையில் அன்றைய கிழமையும் நாளும் சொல்லும் வண்ணம் தமிழ், சமஸ்கிருத ஸ்தோத்திரப் பாடல்கள் கேட்பேன். அபிராமி அந்தாதியும் கந்த சஷ்டிக் கவசமும் எனக்கு மிகவும் பிடித்த ஸ்தோத்திரப் பாடல்கள்... என்ன, ரொம்ப பயமுறுத்தி விட்டேனா?"

"இதுமாதிரிச் சுவைகள் எனக்கும் உண்டு தாயே! ஆனால் எந்தச் சுவையும் சுமையாகும் அளவுக்கு நான் வைத்துக்கொள்வதில்லை. தமிழ்க் கவிதைகளைப் படிக்கவும், எழுதவும், என் தமிழ் அறிவை விருத்திசெய்வதற்கும், தமிழ் பற்றி ஆராய்வதற்குமே எனக்கு நேரம் போதவில்லை! என் மகளும் நிறைய ஆங்கிலத் தமிழ்க் கதைகள் படிப்பாள். மரபிலும் புதுக்கவிதை பாணியிலும் கொஞ்சம் கவிதையும் எழுதவரும் அவளுக்கு."

"கம்பன் வீட்டுக் கட்டுத்தறியே கவி பாடும்போது மகள் என்றால் கேக்கணுமா?"

"கம்பனுக்கும் எனக்கும் வெகுதூரம் அம்மா. எனக்குப் புதுக்கவிதை பிடிக்காது. ஏதோ மூன்று மரபுக்கவிதைத் தொகுப்புகளையும், சங்ககால நிகழ்ச்சிகளை வைத்து ஒரு சின்னக் கதைப் பாட்டும் பதிப்பித்திருக்கிறேன், அவ்வளவுதான். கவிஞர் என்பதை விடப் புலவர் என்றழைக்கப் படுவதே எனக்கு விருப்பம்."

"புலவர் என்றால் புரவலர் யாரோ?"

"வேறு யார், எங்கள் கல்லூரித் தாய்தான். தனிவாழ்வில் ஒரு புரவலரைத் தேடிக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லலாம்."

ணிவண்ணன் சாரின் மனைவி தன் ஐம்பதாம் வயதில் இரண்டு வருடங்களுக்கு முன்பு காலமான போது அவர் மகளும் சென்னையில் கல்லூரிப் படிப்பை மேற்கொண்டதால் தொடர்ந்து மூன்று வேளையும் ஓட்டலில் சாப்பிடும் நிலைமை ஏற்பட்டு சில மாதங்களிலேயே அவர் மஞ்சள் காமாலை கண்டும் பின் வயிற்றுப் போக்காலும் மிகவும் அவதிப் பட்டாராம். அந்த சமயத்தில்தான் மகள் மிகவும் கவலைக்குள்ளாகி அவரை மறுமணம் செய்துகொள்ளுமாறு கட்டாயப் படுத்தினாளாம். எங்களைப் போலவே அவர் குடும்பமும் ’புலால் மறுத்தல்’ மேற்கொண்ட குடும்பம் என்று தெரிந்துகொண்டேன். பின்னர் அவர் கொஞ்சம் கொஞ்சமாக ஓரளவுக்கு சமையல் செய்யக் கற்றுக்கொண்டாலும், மகள் ’இந்தக் கஷ்டமெல்லாம் உனக்கெதுக்குப்பா, உனக்குத் தமிழ் ஆராய்ச்சிக்கே நேரம் போதவில்லை, அதனால நான் சொல்றபடி பேசாமல் மறுமணம் செய்துகொள்’ என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகிறாளாம்.

"ஏனம்மா, ஒரு தாயற்ற குழந்தை பெரும்பாலும் தனக்கு ஒரு சித்தி வருவது குறித்து அமைதியற்றே இருக்கும். நாளை சித்திக்கொரு குழந்தை பிறந்தால் தன் கதி என்னாகுமோ என்ற கவலை வரும் அல்லவா? நீ எப்படி விதிவிலக்காக இருக்கிறாய்?"

"ஆசையைப் பாரு! எனக்கு வர்ற சித்தி அம்பது வயசத் தாண்டின ஒரு பேரிளம் பெண்ணாக இருக்கணும்னுல நான் நெனைக்கறேன்! அப்பதானே இந்த மாதிரிப் பிரச்சினைகள் இருக்காது?" என்று அவர் மகள் அவரைக் கேலிசெய்தாளாம்.

"நான் மறுமணம் செய்துகொண்டால் நிச்சயமாக அந்த மாதிரியொரு பேரிளம் பெண், அதுவும் கணவணை இழந்து வாழ்பவளைத்தான் ஆலோசிப்பேன் மகளே."

"பின்னே என்ன தயக்கம்?"

"பார்க்கலாம். முருகன் சித்தம் அதுவானால் நடக்கட்டும். நானாக எதுவும் முனையப் போவதில்லை. ஏதேனும் குதிர்ந்தால் அப்போது பார்த்துக்கொள்ளலாம்."

முருகன் சித்தம் அதுவாகி அவன் அன்னை அபிராமியின் சித்தமும் அதுவானால் நடக்கட்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

*****
(தொடரும்)
 
(சார்பு எழுத்துகள்: சிறுகதைத் தொடர்ச்சி)
மணிவண்ணன் ஹேமா சொல்வது:

னங்கள் ஒன்றியபின் இன்னும் ஏன் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு? எனவே, இருவரும் ஒரே மாதிரியான வாசகங்கள் அமைந்த கடிதம் தயாரித்து எங்கள் கைப்பட எழுதி கார்த்திக் வள்ளிநாயகி குழந்தைகளுக்குத் தபாலில் அனுப்புவது என்று தீர்மானித்துக்கொண்டு இப்படியொரு கடிதம் எழுதினோம்:

அன்புள்ள கார்த்திக்/வள்ளி,

இந்தக் கடிதத்தை ஆற அமரப் படித்து மனதில் ஆராய்ந்து பார்த்து முடிவுசெய்து பின் உன் கருத்தைத் தெரிவிக்கவும்.

அபிராமி/முருகன் அருளால் நீ வற்புறுத்தி வருவது போல் நான் மறுமணம் செய்துகொள்ளத் தகுந்த துணையிழந்த ஒருவராக எனக்குத் தோன்றி அவரைப் பற்றிக் கடந்த ஐந்தாறு மாதங்களாக மேல்விவரங்கள் அறிந்துகொண்டதில் உங்கள் எண்ணம் ஈடேறலாம் என்று தெரிகிறது.

அவர் பெயர் மணிவண்ணன். இந்த ஊர்க் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியர்களின் தலைவர். கொஞ்சம் கூட விகல்பமே இல்லாமல் பழகும் நல்ல, அரிய மனிதர். இரண்டு வருடங்களுக்கு முன் மனைவியை இழந்தவர். ஒரே மகள் வள்ளிநாயகி சென்னையில் கம்ப்யூட்டர் எஞ்சினீரிங் கடைசி வருடம் படிக்கிறாள். அவரது அண்ணா, ஆறு வயது மூத்தவர், கனடாவில் தன் மகனுடன் வசிக்கிறார். நம்மை மாதிரியே அவருக்கும் வேறு சொந்தங்கள் இல்லையென்று தெரிகிறது. நீ விழையும் பாதுகாப்புத் துணையாக எனக்கு இவர் அமையலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. நீ இப்போது கல்யாணம் செய்துகொளவதற்கில்லை என்று சொன்னதால்தான் நான் இந்த ஏற்பாட்டுக்கு உடன்படுகிறேன். உன் கருத்தை அறிந்து மேலே போகலாம்.

(அல்லது)

அவர் பெயர் ஹேமா. பெரிய கடைத்தெருவில் அரசு நிறுவன வங்கியொன்றில் மூத்த எழுத்தராக வேலை பார்க்கிறார். அவருடன் அதே வங்கியின் மண்டல அலுவலகத்தில் கணினி அதிகாரியாக வேலை பார்த்துவந்த அவர் கணவன் நான்கு வருடங்கள் முன்பு இயற்கை மரணம் அடைந்தாராம். ஒரே மகன் கார்த்திக் சென்னையில் மூன்று வருடங்களாக மென்பொருள் இயந்திரப் புலவராக வேலை செய்கிறான். அவர் கூடப் பிறந்த அக்கா அமெரிக்காவில் குடியேறிவிட்டாராம். ஹேமா ஓர் அமைதியான, கடவுள் பக்தியுள்ள பேரிளம் பெண். அவர் உனக்குத் தகுந்த சித்தியாக அமையலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. இருபத்தொரு வயது முடிந்தும் உன் திருமணத்திற்கு இப்போது அவசரம் இல்லை என்று நீ சொன்னதால்தான் நான் இந்த ஏற்பாட்டுக்கு உடன்படுகிறேன். உன் கருத்தை அறிந்து மேலே போகலாம்.

இப்படிக்கு
உன்னிடம் மிகவும் பிரியமுள்ள அம்மா/அப்பா

கடித்தை எழுதிவிட்டோமே தவிர அதை உடனே தபாலில் அனுப்புவது வேண்டாம் என்று இருவருக்கும் தோன்றியது. இரண்டு வாரங்கள் போனபின் மீண்டும் ஒருமுறை அதைப் படித்து இறுதி முடிவென உறுதியுடன் தீர்மானித்துப் பின் அனுப்பலாம் என்று தோன்றியது.

*****

வள்ளிநாயகி சொல்வது:

ண்டதும் காதல்’ என்பதெல்லாம் பிதற்றல் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். கார்த்திக்கை சந்திக்கும் வரை!

என் இறுதி செமஸ்டர் தேர்வுக்கான ப்ராஜக்ட் அவர் வேலை பார்க்கும் கம்பெனியில் அதே கிளையில் அவர் வழிகாட்டுதலின் கீழ் எனக்கும் என் அறைத் தோழி வளர்மதிக்கும் கிடைத்தபோது கார்த்திக்கை முதன்முதலில் சந்தித்தேன். எந்தப் ’பந்தாவும்’ இல்லாமல் எளிதாகத் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். தான் அந்தக் கம்பெனியில் மூன்று வருட அனுபவம் உள்ளவர் என்றும் இன்னும் ஒரு வருடத்தில் அமெரிக்கா போக வாய்ப்புண்டு என்றும் சொன்னார். நாங்கள் கடினமாக உழைத்தால் தனக்குத் தெரிந்த ஸாஃட்வேர் எக்ஸ்பர்டீஸ் எல்லாமும் எங்களுக்கு K.T. (knowledge transfer) செய்யத் தயார் என்று கூறினார். இந்தப் ப்ராஜக்ட் நன்றாகச் செய்தால் அவர் கம்பெனியிலே வேலை வாய்ப்பு இருக்கலாம் என்று நம்பிக்கையளித்தார்.

கார்த்திக்கைப் பார்ப்பவர்களுக்கு அவர் உயரம்தான் முதலில் கண்ணில் படும். நானே சராசரிப் பெண்களை விட உயரம் என்றால் அவர் என்னைவிட மூன்றங்குலம் உயரமாக அஞ்சு எட்டு இருப்பார் என்று பட்டது. வழவழவென்று சந்தன நிறத்தோல் (மறைந்த அவர் தந்தை உபயமாம்). அறிவும் ஆர்வமும் இதுபோலச் சுடர்விடும் முகத்தை இப்போதுதான் காண்கிறேன். சுருள்முடியில் ஒரு சுருள் வலதுபக்கம் சரிந்திருப்பது பார்க்க வசீகரம். பட்டுக் கத்தரிப்பது போலப் பேச்சு. அதே சமயம் பாசாங்கு இல்லாத நேரடியான பேச்சு. வேலையில் குறைகளை அன்புடனும் அக்கறையுடனும் எடுத்துச் சொல்லும் பாங்கு.

வளர்மதிக்குச் சென்னையில் ஒரு தோழியர் பட்டாளமே இருந்ததாலும் அவர்களில் சிலர் எங்கள் கம்பெனி இருந்த வளாகத்தில் வேறு கம்பெனிகளில் வேலை பார்த்ததாலும் அவள் பெரும்பாலும் லஞ்ச் அவர்களுடன்தான் எடுத்துக்கொள்வாள். சமயத்தில் என்னுடன் இந்தக் கம்பெனி கேன்டீனில் சாப்பிடுவாள். இப்படி வளர்மதி இல்லாத ஒரு லஞ்ச் அவரில் அவருடன் சேர்ந்து சாப்பிட்டபோது தன்னைப் பற்றிய பர்சனல் விவரங்களைச் சொல்லி என்னைப் பற்றி விசாரித்தார். இருவரும் ஒரு பெற்றோரை இழந்த ஒற்றுமையும், இருவரும் மீதமிருக்கும் தன் பெற்றோரிடம் உயிருக்குயிராய் அன்பு செலுத்துவதும், அந்தப் பெற்றோர்கள் இருக்கும் நிலையில் அவர்களை மறுமணம் செய்துகொள்ளத் தூண்டி வருவதும் எங்கள் வாழ்வில் பொதுவாக இருப்பதைத் தெரிந்துகொண்டோம்.

கம்ப்யூட்டர் ஸாஃப்ட்வேர் அறிவை வளர்த்துக்கொள்வதிலும், வேலையில் கிடுகிடென்று முன்னுக்கு வரவேண்டும் என்ற உத்வேகத்திலும், மற்ற பொழுதுபோக்கு அம்சங்களான ஆங்கிலத் தமிழ் ஃபிக்ஶன், மூவீஸ், மியூசிக், கிரிக்கெட், நல்ல ஹோட்டல்களில் திருப்தியாக டின்னர் சாப்பிடுவது, ஊர் சுற்றுவது, ஷாப்பிங் என்று எல்லா விஷயங்களிலும் எங்கள் சுவைகள் ஒத்திருந்தன.

பேசுவது பழகுவதில் தொடர்ந்தபோது, வீக்-என்ட் நாட்களில் ஹோட்டல்களில் மதியம் சாப்பிடுவதிலும், சினிமாக்கள் செல்வதிலும் இருவரும் சேர்ந்தோம். நாங்கள் இருவரும் சேர்ந்து முதலில் பார்த்த மூவி மயிலை ஐனாக்ஸ் தியேட்டரில் ஜேம்ஸ் பான்டின் ’ஸ்கை ஃபால்’. கையில் பாப்கார்ன், கோலா சகிதம் சில்லிடும் தியேட்டர் ஹாலின் அமைதியில் உட்கார்ந்து பார்த்தபோது, பரபரப்பான அந்த மூவியின் பிரம்மாண்டம் எங்களை அசத்தியது. தியேட்டர்களிலோ கடற்கரையிலோ அல்லது பூங்காக்களிலோ சில்மிஷம் செய்வது என்னைப் போலவே அவருக்கும் பிடிக்காத விஷயம். ’டிஃப்ரெண்டா இருக்கீங்களே!’ என்று அவரைச் சீண்டியபோது ’காதல் என்பது உன்னதமான சமூகம் அமைக்க இயற்கை அளித்துள்ள வரப்பிரசாதம். கிணற்றுத் தண்ணீரை வெள்ளமா கொண்டு போய்விடும்?’ என்றெல்லாம் வசனம் பேசினார். கேரியரில் செட்டில் ஆகும்வரை பர்சனல் லைஃபில் திட்டமிட்டு ’அடக்கி வாசிக்கவேண்டும்’ என்ற அவரது கருத்து எனக்கும் உடன்பாடாக இருந்தது.

பிறகென்ன? இருவரும் கல்யாணம் செய்துகொள்ள நினைப்பதைப் பெற்றோர்க்குத் தெரியப்படுத்த முடிவுசெய்தோம். இஞ்சினியர்ங் கோர்ஸிலும் இந்த ப்ராஜக்டிலும் என் பெர்ஃபாமன்ஸ் பொறுத்து அவர் பரிந்துரைத்து எனக்கு அவர் கம்பனியிலேயே தகுந்த வேலை வாங்கித் தந்து என்னையும் தன்னுடன் அமெரிக்கா அழைத்துச் செல்லமுடியும் என்ற நம்பிக்கையும் திட்டமும் அவர்வசம் இருந்தது.

*****
(தொடரும்)
 
கார்த்திக் சொல்வது:

ள்ளியை முதலில் சந்தித்தபோதே ஐ ஃபெல் இன் லவ் வித் ஹர்! எனக்கேற்ற உயரமும், மாநிறமும், குழந்தை முகமும் அகன்ற விழிகளும் கூர்மையான அறிவும் கொண்டு வளையவந்தாள். வள்ளிநாயகி என்ற பெயர் கொஞ்சம் கர்னாடகமாகத் தோன்றினாலும், கார்த்திக்-வள்ளி என்ற பெயர்ப் பொருத்தத்தை வியந்தேன். ஒத்துப்போன எங்கள் உலகியல் ஈடுபாடுகள் எங்களை மேலும் இணைத்திட, அலுவலக நண்பர்களாக ஆரம்பித்த எங்கள் நட்பில் காதல் மலர்ந்து, கடந்த மூன்று மாதத்தில் நாங்கள் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு வாழ்க்கையில் இணைய முற்பட்டு பெற்றோர் சம்மதம் பெற விழைந்தோம்.

"வள்ளி, ஒண்ணு கவனிச்சயா? நீயும் நானும் தனித்தனியா நம்ப பெற்றோரை மறுமணம் செஞ்சிக்க வறுபுறுத்தினோம். இப்போ நீயும் நானும் வாழ்க்கைல இணைஞ்சா, உங்கப்பா எங்கள் வீட்டு மாடில குடிவந்து நம்ம பெற்றோர் இருவரும் சம்பந்தி முறையில ஒருத்தருக்கொருத்தர் இன்னமும் உதவியாகவும் பாதுகாப்பாவும் இருக்கலாம் இல்லையா?"

"ஸோ, நமக்கு பெற்றோர் சம்மதம் தர்றது பிரச்சனையா இருக்காதுன்னு சொல்றீங்க."

"நிச்சயம் இருக்காது. இதைவிட பெட்டர் ஸொல்யூஷன் அவங்களுக்கு வேறென்ன இருக்கமுடியும்? அந்த வகையில பாக்கறப்ப, உனக்கு ஒருவேளை எங்க கம்பெனில வேலை கிடைக்காட்டாலும் நாம கல்யாணம் செஞ்சிகிட்டு நான் உன்னை அமெரிக்காவுக்கு கூட்டிப் போகலாம். அல்லது உனக்கு சென்னைல நல்ல வேலை கிடைச்சு நீ கொஞ்ச நாள் வேலை பாக்க நெனச்சா, நீ இதே மாதிரி ரூம்ல தங்கிகிட்டு மாசம் ஒரு தடவை பெற்றோரைப் போய்ப் பார்த்து வரலாம் இல்லையா?"

"யு ஆர் ரைட். எல்லாம் நல்லா திட்டம் போட்டுச் செய்யறீங்க. உங்ககிட்ட எனக்குப் பிடிச்ச விஶயங்கள்ல இதுவொண்ணு."

"இதைக் கொஞ்சம் டிராமாடிக்கா செய்வோம். என்ன தெரியுமா? நாம ரெண்டு பேரும் சேர்ந்து நம் பெற்றோருக்குக் கைப்பட ஒரு லெட்டர் எழுதுவோம். என்ன சொல்றே?"

"நல்ல ஐடியா! நம்ப எண்ணத்தை இதைவிட ரத்தினச் சுருக்கமாச் சொல்ல முடியாது! நம்ப ரெண்டு பேர் வீடும் ஒரே தெருவில இருக்கறதால, கூரியர் ஆஃபீஸ்ல சொல்லி ஒரே நாள்ல உங்கம்மா எங்கப்பா ரெண்டு பேர்க்கும் லெட்டர் டெலிவரி செய்யச் சொல்வோம்."

*****

மணிவண்ணன் ஹேமா சொல்வது:

ருவழியாக உறுதியான், இறுதியான முடிவுடன் நாங்கள் எங்கள் கடிதத்தை ஒரு திங்கட்கிழமை யன்று கூரியர் மூலம் அனுப்பத் தீர்மானித்த போது, முந்தைய சனிக்கிழமை ரத்தினச் சுருக்கமான அந்தக் கடிதம் எங்களுக்குக் கிடைத்தது.

அன்புள்ள அம்மா/அத்தை,
மற்றும்
அன்புள்ள அப்பா/மாமா,

இந்தக் கடிதம் உங்களுக்கு மிகவும் அதிகப் பிரசங்கித்தனமாகத் தோன்றுவது இயற்கை. பெற்றோரைக் கேட்காமலேயே உங்கள் குழந்தைகள் வாழ்க்கையில் இணைய முற்படுவதுபோல் தோன்றி ’என்ன அர்ரகன்ஸ், போக்கிரித்தனம்’ என்றெல்லாம் மனதைக் குழப்பிக்கொண்டு கோபமோ கவலையோ படாதீர்கள். இந்தக் கடிதத்தை நாங்கள் சேர்ந்து எழுத முடிவு செய்தது உங்களுக்காகவே! உங்கள் நலன் பற்றிய எங்கள் கவலைக்கொரு தீர்வு கிடைத்த மகிழ்ச்சியை இருவரும் சேர்ந்து உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்காகவே!

நான் என் கடைசி செமஸ்டர் ப்ராஜக்ட் செய்வது கார்த்திக் மென்பொருள் இஞ்சினியராக வேலை பார்க்கும் கம்பெனியில், அதுவும் அவர் வழிகாட்டுதலில் என்ற தற்செயலான நிகழ்வு மூன்று மாதத்துக்கு முன்பு எங்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தியது. அந்த அறிமுகம் நட்பாக வளர்ந்து காதலாக மலர்ந்து நாங்கள் வாழ்க்கையில் இணைய நினைத்து உங்கள் சம்மதத்தைப் பெறவே இந்தக் கடிதத்தை எழுகிறோம். இப்போது பார்க்கும்போது வாழ்க்கையில் எதுவுமே ’ஜஸ்ட் கோயின்சிடன்ஸ்’ இல்லை, நிகழ்வது எல்லாமே ஒரு காரணத்தை முன்னிட்டே என்று படுகிறது.

அம்மா, அப்பா!
இந்த அட்வான்ஸ்ட் வயதில் மறுமணம் செய்துகொள்வது என்பது சுற்றியுள்ளோர்க்கு எவ்வளவு அபத்தமாகப் படும் என்ற மெயின் காரணத்தாலும், ஏற்கனவே இத்தனை வருடங்கள் மணவாழ்வில் ஈடுபட்டுக் குடும்பம் நடத்தி மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு, இயற்கையாக நேர்ந்த ஒரு பிரிவினால் தம் குழந்தையை முன்னிட்டு மீண்டும் மறுமணம் செய்துகொள்வதற்கு உங்களைத் தயார்ப்படுத்திக் கொள்வது எத்தனை சிரமமான, சாத்தியம் இல்லாத அல்லது சாத்தியம் மிகக் குறைந்த விஷயம் என்பதை உணராமலும் நான் உங்களை அதற்குக் கட்டாயப் படுத்தியதை இப்போது நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்த விஷயத்தில் எங்கள் பக்கம் உள்ள தவறைப் பொறுத்தருளி எங்களை மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ஆறு மாதங்களுக்கு முன்பு எங்களுக்கு ஒருவரையொருவர் தெரிய நேர்ந்திருந்தால் உங்களுக்கு எந்தவித மன சஞ்சலமும் இல்லாமல் போயிருக்கும். இப்போதாவது நேர்ந்த இந்தக் கொடுப்பினை மூலம் உங்களை எங்களுக்கு உதவச் சொல்வதற்கு பதிலாக நாங்கள் உங்களுக்கு உதவ ஒரு வாய்ப்பினை அபிராமி முருகன் அருளியது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.

அம்மா, மாமா!
வள்ளியின் தந்தை நாமிருக்கும் கீழாண்டார் தெருவிலேயே குடியிருப்பதாகச் சொன்னாள். நாங்கள் வாழ்வில் இணைவதற்கு நீங்கள் சம்மதித்தால், வள்ளியின் தந்தை நம் வீட்டிலேயே மாடியில் குடிவந்து சம்பந்தி முறையில் நீங்கள் இருவரும் ஒருவருக் கொருவர் உதவியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கலாம், அது மிகவும் இயல்பாகவும் இருக்கும் அல்லவா? நாங்கள் எதிர்காலத்தில் உங்களுடன் இருக்கமுடியும் காலம் வரை இந்த ஏற்பாடு நீடிப்பது இருவருக்கும் சம்மதம்தானே?

அப்பா, அத்தை!
இருவத்தொரு வயது முடிந்து சில மாதங்களே ஆகியிருக்க, தான் உங்களுக்காகத் தான் சீக்கிரம் மணம் செய்துகொள்ள சம்மதிக்கிறேன் என்று நினைக்கவேண்டாம். கார்த்திக்கை உங்களுத் தெரிந்திருந்தால் நான் அவரிடம் என் மனதைப் பறிகொடுத்தது நியாயமே என்று உங்களுக்குப் படும். அதேபோல, கார்த்திக் அம்மாவின் உயிருக்குயிரான மகன் என்பதும் எனக்கு நன்கு தெரியும். ஆகவே நான் உங்கள் பெயரைக் காப்பாற்றி அத்தைக்கு உகந்த மருமகளாக நடந்துகொள்வேன்.

கடைசியாக, எங்கள் காதல் சங்ககாலத் தலவன்-தலைவி போன்ற களவொழுக்கத்தில் பிறந்ததோ, அல்லது இந்நாளைய மேம்போக்கான டேட்டிங் ஈடுபாடுகளில் வளர்ந்ததோ அல்ல. மூன்று மாதப் பழக்கத்தில் நாங்கள் எவ்விதத்திலும் வரம்பு மீறாமல் ஒருவரை யொருவர் புரிந்துகொண்டோம். உங்கள் முழு சம்மதத்துடன்தான் நாங்கள் மணம்செய்து கொள்வோம். நம் குடும்ப மரபில் இதுவும் ஒரு பெற்றோர் ஏற்பாட்டுக் கல்யாணமாகவே நீங்கள் கருதலாம். என்ன, மாப்பிள்ளை பெண்ணைப் பெற்றோர் அறிமுகப்படுத்தும் படலம் மட்டும் இல்லை, அவ்வளவுதான்!

அம்மா, மாமா!

உங்கள் இருவருக்கும் ஒருவரை யொருவர் தெரியாதிருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது ஒரே தெருவில் வசிப்பதால் பார்வையளவில் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. தவிர, அவர்கள் முன்பு பாலக்கரையில் குடியிருந்தபோது நம் வங்கியில்தான் பற்று-வரவு செய்துவந்ததால், இப்போது ஒரு கஸ்டமர் என்ற முறையில் இருவருக்கும் அறிமுகம் இருக்கலாம். எப்படியிருந்தாலும், அம்மாவும் அப்பாவும் இந்தக் கடிதம் மூலம் ஒருவரை யொருவர் சந்தித்து, எல்லாவற்றையும் நன்றாக டிஸ்கஸ் செய்து, எங்கள் விஷயத்திலும் தம் விஷயத்திலும் சேர்ந்து ஒரு நல்ல முடிவெடுத்து எங்களுக்கு பதில் போடுமாறு வணங்கிக் கேட்டுக்கொள்கிறோம். அந்த முடிவு சம்மதமாகவே இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

இப்படிக்கு,
உங்கள் பிரியமுள்ள,
கார்த்திக், வள்ளி

*****
(தொடரும்)
 
மணிவண்ணன் ஹேமா சொல்வது:

குழந்தைகள் கேட்டுக்கொண்டபடி நான் கடிதத்தை எடுத்துக்கொண்டு ஹேமாவின் வீட்டுக்குச் சென்றேன். கடந்த இரண்டு வாரங்களாக நான் அவருக்கு யாப்பிலக்கணம் பயிற்றுவிப்பதால் சனிக்கிழமையான இன்று வகுப்பு நாள் என்பது வசதியாக அமைந்தது. தானும் கடிதத்தைக் கையில் வைத்துக்கொண்டு கதவைத் திறந்துவிட்ட ஹேமா நான் உள்ளே நுழைந்து அமர்ந்ததும் என் எதிரில் அமர்ந்துகொண்டு விக்கி விக்கி அழுதார்!

"என்ன தவறு செய்தோம் மணிவண்ணன் சார்! எப்படி நாம் இதுபோல் ஒரு சாத்தியம் இருப்பதை நினைத்துக்கூடப் பார்க்கவில்லை?" என்றார் கண்ணீர் பெருக்கி.

"நாம் நம் கடிதத்தை அனுப்பியிருந்தால் அது அவர்களுக்கு எவ்வளவு பெரிய இடியாக இருந்திருக்கும் என்று எண்ணிப் பார்க்கவே அச்சமாகவும் கலக்கமாகவும் இருக்கிறது. நான் எழுதிய கடிதம் இதோ. நீங்கள் எழுதியதையும் எடுத்து வாருங்கள். முதல் வேலையாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்துவோம். அந்தக் கனலில் நம் மனச் சஞ்சலங்களும், நமக்கே தெரியாமால் ஏதேனும் சபலம் உள்ளுக்குள் இருந்திருந்தால் அதுவும் எரிந்து சாம்பலாகட்டும்! இன்னொரு விஷயம். நாம் இருவரும் மறுமணம் என்ற பெயரில் இணைய நினத்தோம் என்பது எக்காரணம் கொண்டும் நம் குழந்தைகளுக்குத் தெரிந்துவிடக் கூடாது. நமக்குள் எழுந்த அந்த நினைவும் சாம்பலாக வேண்டும்."

"நிச்சயமாக சார். இதோ அந்தக் கடிதம், என் கைப்பையிலேயே வைத்திருக்கிறேன். நீங்கள் எங்கள் குடும்பத்தில் இணைந்தால் ஏற்படக்கூடிய மாறுதல்கள் பற்றிச் சிந்தித்தேன் சார். கார்த்தி வள்ளிநாயகி அண்ணன் தங்கையாவார்கள் என்ற எண்ணம்தான் எனக்கு முதலில் தோன்றியது. அப்போது கூட எனக்கு அவர்களை வாழ்வில் இணைத்தால் என்ன என்று தோன்றவில்லை, பாவி நான்!"

"எனக்கும் அந்த எண்ணம் மனதில் படவே இல்லையே அம்மா! இத்தனை வயதில் எனக்குள் அப்படியென்ன சபலம் என்று இப்போது குழம்புகிறேன். போகட்டும். நடந்ததும் நடக்க இருந்ததும் பக்க விளைவுகள் இல்லாமல் முடிந்தது முருகன், அபிராமி அருளால்தான் என்று மனதைத் தேற்றிக்கொள்வோம். நாம் சம்பந்திகளாக இணைவது உலகம் ஒப்புவதாகவும், மிகவும் இயல்பாகவும் இருக்கும். அதை எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டான் கார்த்திக்!"

"சிறியவர்கள் விருப்பப்பட்ட பெரியவர்களின் ஏற்பாட்டுக் கல்யாணம்! வள்ளியும் மிக அழகாகச் சொல்லிவிட்டாள்!"

"அப்படியானால் பெண்ணின் தந்தை என்ற முறையில் முதலில் நான் உங்களிடம் கேட்கிறேன்: என் மகள் திருவளர்ச் செல்வி வள்ளிநாயகியை உங்கள் மகன் திருவளர்ச் செல்வன் கார்த்திக் அவர்கள் மணம் செய்துகொள்ள உங்களுக்கு சம்மதம்தானே?"

"அதைவிட வேறென்ன பேறு எங்களுக்கு வேண்டும் மணிவண்ணன் சார்! வள்ளி எனக்கு ஏற்ற மருமகளாக அமைவாள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. கார்த்திக் பரிந்துரைப்பது போல நீங்கள் இருவரும் எங்கள் வீட்டு மாடியிலேயே குடிவந்து விடுங்கள்."

"மாப்பிள்ளை சொல்லை மனைவியில்லாத மாமனார் தட்ட முடியுமா? முருகன் திருவுளப்படி நடக்கட்டும்."

"சரியாக ஆராயாமல் நாம் ஏன் மறுமணம் என்ற இனிஷியேடிவ் எடுக்கத் துணிந்தோம் சார்? அதற்குக் குழந்தைகள் நலன் மட்டும்தான் காரணமா அல்லது அதைவிட நம் சுயநலம் காரணமா என்ற குற்ற உணர்வு மட்டும் என்னை அரித்துக்கொண்டே யிருக்கும் சார். அது அவ்வளவு சீக்கிரம் மறையாது."

"நம் சுயநலம் ஒரு காரணமாக இருக்கலாம் அம்மா! அது போன்ற சஞ்சலங்களையும் சபலங்களையும்தான் நாம் இப்போது எரியிட்டு விட்டோமே! வாழ்வில் நம் உண்மையான நிலையை இப்போதாவது நாம் தெளிவாகப் புரிந்துகொள்வேம்."

"அந்த உண்மையான நிலைமை என்பது என்ன சார்?"

"எப்போது குழந்தைகள் பிறந்தார்களோ அப்போதிருந்தே நாம் குறுகி ஒலிக்கும் சார்பு எழுத்துகள்தான் அம்மா. அவர்கள்தான் உயிரும் மெய்யுமாகிய முதல் எழுத்துகள். குழந்தைகளுக்கு மணப்பருவம் வந்து கல்யாணமானவுடன் அவர்கள் கணவனும் மனைவியுமாகி ஒருவரை யொருவர் சார்ந்து ஒலிக்கும் உயிர்மெய் எழுத்துகளாகிறார்கள். அப்போது அதுவரை கணவன்-மனைவி மற்றும் அப்பா-அம்மா என்ற அதிகாரத்துடன் உயிர்மெய் எழுத்துகளாக முழு மாத்திரையுடன் ஒலித்த பெற்றோர்கள் மாத்திரை குறைந்து குற்றியலுகரமாக, இசையும் பொருளும் நிறைக்கும் அளபெடைகளாக, ஐகார, ஔகாரக் குறுக்கங்களாக ஆகிவிடுவதைப் புரிந்துகொண்டால் கூட்டு வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்காது. அப்படியே இருந்தாலும அவை குறைவாக, எளிதில் மறைவதாக இருக்கும்."

"உண்மைதான் சார். இப்போது எனக்கு வாழ்வெனும் யாப்பின் இலக்கணம் புரியத் தொடங்கியிருக்கிறது. வாருங்கள் நம் சம்மதத்தை மறுதபாலில் குழந்தைகளுக்குத் தெரியப்படுத்துவோம். நான் வள்ளி மருமகளுக்கும் நீங்கள் கார்த்திக் மருமகனுக்கும் ஒரே மாதிரியான கடிதம் தயாரித்து எழுவோம். அதுதான் நாம் மேற்கொள்ள நினைத்த அசட்டுத்தனமான முயற்சிக்குப் பிராயச்சித்தம்", என்றார் ஹேமா, வழியும் கண்ணீரைத் துடத்தவண்ணம்.

*** *** ***
(முற்றியது)
 
நாடியது கேட்கின்...
சிறுகதை
ரமணி, 21/05/2013


[இணையத்தில் ஆங்காங்கே மேய்ந்து கிடைத்த விவரங்களுக்குக் கண்-காது-மூக்கு வைத்து எழுதிய கதை இது.--ரமணி]

நான் முத்துவேல். என் நண்பன் மனோகரன். இருவரும் நெருங்கிய நண்பர்கள், அதுதான் ஆச்சரியம்!

ஏனெனில் நான் (மனோகரன் மூடநம்பிக்கைகள் என்று மறுக்கும்) அனைத்து ஆன்மிக விஷயங்களையும் நம்புபவன்: எனக்குக் கோவில் ஸ்தல புராணங்கள், சாயி பாபா போன்ற மகான்கள் நிகழ்த்தும் அதிசயங்கள், பேய்-பிசாசுகள் பிடிப்பது அவற்றை ஓட்டுவது, மந்திரித்து வைத்தியம் செய்வது, மறுபிறவி--இன்னும் எது வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளுங்கள்--போன்ற அனைத்து விஷயங்களும் உண்மை.

மனோகரனுக்கோ ஒரு நியூட்டன், ஒரு ஐன்ஸ்டின், ஒரு ஸ்டீஃபன் ஹாகிங்--இன்னும் யாரை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளுங்கள்--போன்று யாரவது உறுதிப்படுத்தி யிருந்தால்தான் அது உண்மை, அறிவியல், நிச்சயம் நம்பலாம். எல்லாத் துறைகளிலும் பற்பல விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் முரண்பட்டுக் கருத்துக்களைச் சொல்கிறார்களே மனோ, இவற்றில் எதுதான் உண்மை என்று கேட்டால் ஜகா வாங்கிவிடுவான்! காலம் காலமாக நிறுவப்பட்டதாகக் கருதப் பட்ட விஞ்ஞான் உண்மைகள் ஒரு நாள் தூக்கியெறியப் படுவதே விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்பது அவன் கட்சி.

சரி, விஷயத்துக்கு வருகிறேன். நாங்கள் இருவரும் சேர்ந்து வைத்தீஸ்வரன் கோவிலில் நாடி ஜோதிடம் பார்க்க முடிவுசெய்தோம்! பொதுக்காண்டமும் முற்பிறவி பற்றிப் பேசும் சாந்திக்காண்டமும் பார்ப்பதாக முடிவுசெய்துகொண்டோம். எனக்குண்டான பலன்களை அறிந்துகொள்வதில் எனக்கு ஆர்வம் இருந்தது. அவனுக்குச் சொல்லப்படும் பலன்கள் எப்படியாவது பொய், புனைகதை என்று நிரூபிக்கவேண்டும் என்பதில் அவனுக்கு ஆர்வம் இருந்தது. இதற்காக அவன் திரும்பவும் வை.கோவிலுக்கு வரவும் தயாராக இருந்தான்.

ஜோதிடர் எங்கள் கைரேகைகளைப் பதிந்துகொண்டு ஓலைதேடச் சென்றபோது நாங்கள் அதே தெருவில் உள்ள ஒரு சின்ன விடுதியில் இட்டிலி-வடை, தோசை, காப்பி சாப்பிட்டோம். தோசைக்காகக் காத்திருந்தபோது, "முத்து, எப்படிடா கைரேகையை வைத்து ஓலையைத் தேடமுடியும்? அதுவே ஃப்ராட்" என்றான். அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களில் பலர் ஏடு பார்க்க வந்தவர்கள் என்பது வெளிப்படையாகத் தெரிந்ததால் நான் அவனை அடக்கிவிட்டுக் கிசுகிசுத்தேன்: "மனிதர்களின் கைரேகைகளை உன் அறிவியல் முறைப்படி பெர்ம்யுடேஷன்-காம்பினேஷன் போட்டால் வரும் எண் 28531 கோடி, தெரியுமா உனக்கு? இந்த நம்பரை வெச்சு நெட்ல நாடி ஜோதிடம் பக்கங்கள்ல தேடிப்பார்." அவன் ஒன்றும் பதில் சொல்லாவிட்டாலும் அவன் ஆர்வத்தைக் கிளறிவிட்டது தெரிந்தது.

இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்ற உறவில் எங்களுக்குச் சொல்லப்படும் பலன்களை இருவருமே சேர்ந்து கேட்டோம். பழந்தமிழ்ச் செய்யுட்கள் மூலம் எங்கள் பெர்சனல் விவரங்கள் தெரிந்தது "டூ மச், அந்தாள் கில்லாடிதான்" என்றான், அவர் தன் யஜமானர் அழைத்ததாக ஐந்து நிமிடங்கள் அறையை விட்டு வெளியில் சென்றிருந்தபோது. ஒரு ஓலையை எடுத்துப் பார்த்துவிட்டு அதில் இன்றைய தமிழ் எழுத்துகளில் இருக்கும் கிறுக்கல்கள் புரியாமல், "இந்த ஓலை கௌசிகர் எழுதி தமிழ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணினதுன்னு எப்படி நம்ப முடியும்? ரொம்பப் போனா இது முன்னூறு-நானூறு வருஷம் பழமையா இருக்க சான்ஸ் இருக்கு. கார்பன் டேட்டிங்க்கு கொடுத்தாங்கன்னா இவங்க வண்டவாளம் எல்லாம் வெளில வந்திடும்."

பொதுக்காண்டம் முடிந்தது. எங்களைப் பற்றிய பொது விவரங்கள் பெரும்பாலும் சரியாக இருந்தன. ஆனால் எதிர்காலம் பற்றிய நம்பிக்கைகள் அதிகம் இல்லை. பலன்கள் சொல்லும் போது மனோவிடம் ஜோதிடர் திடீரென்று, "நீங்கள் ஒரு நாத்திகரா?" என்று கேட்டு அவனை அசரவைத்தார். "டேய், மைண்ட் ரீடிங்கூட பண்ற கில்லாடிடா ஜோசியர்!" என்றான் பின்னர். "நாங்கூட இதெல்லாம் கத்துக்கிட்டா நல்லா காசு பாக்கலாம் போலிருக்கே!"

சாந்திக் காண்டத்தில் என் முற்பிறவி பற்றி ஜோதிடர் அலசியபோது நல்ல வேளையாக மனோவுக்கு வயிற்றுக்குடைச்சல் ஏற்பட்டுக் கொஞ்ச நேரம் வெளியே சென்றான். முற்பிறவியில் என் பெயர் முத்தண்ணனாம். நான் தஞ்சை சரபோஜி மன்னர் அரண்மனையில் அவருக்கு நெருங்கிய பணியாளனாக வேலை பார்த்தேனாம். பேராசையில் ஒரு நாள் அரண்மனைக் கருவூலத்திலிருந்து ஒரு விலையுயர்ந்த முத்துமாலையைத் திருடி அகப்பட்டுக்கொண்டு சிரச்சேதத்துக்குத் தப்பி நாடு கடத்தப்பட்டுப் பிச்சையெடுத்து வாழ்ந்து நாய்பாடு பட்டேனாம். இன்னும் சில பிறவிகளுக்கு எனக்கு முத்து என்று ஆரம்பிக்கும் பெயர்தான் இருக்குமாம், அந்த முத்துவேல் முருகன் என்னை ஆட்கொள்ளும் வரை. முத்துவேல் என்று பெயர்கொண்ட இந்தப் பிறவியிலும் நான் என் நெருங்கிய நண்பனிடம் இருந்து ஒரு பெரிய கடன்தொகையை வாங்கியிருப்பேனாம். அதனை என்னால் திருப்பித் தரவே முடியாதாம்.

வியர்த்து வெலவெலத்துவிட்டேன். மனோவிடம் நான் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தேன். அத்துடன் என் சொந்தப் பணத்தையும் போட்டு இரண்டு ஐம்பது கிராம் 24 காரட் தங்கச் சிறுகட்டிகள் வாங்கியிருந்தேன், இப்போது ப்ளஸ்-டூ பண்ணும் என் மகளுக்கு அவள் திருமண சமயம் வரும் போது நகைகள் செய்ய. முதல் வேலையாக மனைவியிடம் சொல்லி ஒரு ஐம்பது கிராம் கட்டியில் நகைகள் செய்து, இன்னொரு கட்டியை விற்று (எங்கள் குடும்ப நகைக் கடையில் பாதி பணமாகவும் பாதி நகையாகவும் தருவதற்கு ஒப்புவார்கள்) மனோவின் கடனை அடைத்துவிட வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டேன். ஜோதிடர் இந்த விஷயத்தில் சொன்னது பொய் என்று நிரூபிக்க வேண்டும்.

மனோவின் முற்பிறவி பற்றிச் சொல்லும் போது ஜோதிடர் அப்போது சுதாகர் என்ற பெயரில் காஞ்சி தேசத்தில் வாழ்ந்த அவன் மிகப் பணக்காரனாக இருந்தான் என்றும், சுற்றமும் நட்பும் அடுத்துக் கெடுத்த சதிகளால் பணமெல்லாம் இழந்து கடைசி காலம் வரை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வாழ்ந்ததாகவும், இது அவனை இந்தப் பிறவியில் நாத்திகனாக்கியிருக்கலாம் என்றும் பலன் சொன்னார்.

மனோவின் முற்பிறவிக் காண்டம் பாதியில் நின்றது. ஜோதிடர் தம் செல்ஃபோனில் விவரம் தெரிவிக்க அவரது யஜமானரே அறைக்கு வந்துவிட்டார். "ரொம்ப சாரிங்க. இந்த ஓலைச் சுவடிகள் எங்கள் பரம்பரைச் சொத்தாக இருந்துவந்து தலைமுறை தலைமுறையாகக் குடும்பத்தில் மூத்த பிள்ளை இந்தப் புனிதத் தொழிலை மேற்கொண்டு வந்தோம். இந்தத் தலைமுறையில் என் தம்பிக்கும் இந்தத் தொழிலில் ஆர்வம் தோன்றிவிடவே, நாங்கள் கைவசம் இருந்த சுவடிகளை ஆளுக்குப் பாதியாகப் பங்கிட்டுக் கொண்டோம். அவர் இப்போது சாளுக்கிய தேசத்தில், அதாவது இன்றைய பங்களூரு அருகில், ஏடு பார்த்துப் பலன் சொல்லி வருகிறார். நீங்கள் அங்கே போக முடியுமானால் இதுவரை பார்த்த உங்கள் சுவடிகள் பற்றிய விவரங்களைத் தருகிறேன். மீதமுள்ள முற்பிறவி பற்றிய சாந்திக் காண்டத்தையும் இன்னும் ஏதேனும் காண்டங்கள் பார்க்க விரும்பினால் அவற்றையும் நீங்கள் என் தம்பியிடம் பார்த்துக்கொள்ளலாம். மீதமுள்ள சாந்திக்காண்டத்துக்கு நீங்கள் ஏதும் தனியாக பணம் கட்ட வேண்டியதில்லை."

யஜமானர் தந்த விவரங்களை எடுத்துக்கொண்டு ஊர்போய்ச் சேர்ந்தோம். மனோவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. தனக்குச் சொல்லப்பட்ட பலன்களை நம்புவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் அவன் மீதமுள்ள சாந்திக்காண்டத்தை சாளுக்கிய தேசத்தில் பார்த்துவிடத் தீர்மானித்து, அடுத்த மாதமே இருவரும் இன்டர்-ஸ்டேட் சொகுசுப் பேருந்தில் கிளம்பினோம்.

என்ன சொல்வது? பாதி வழியில் ஒரு லாரி மோதி விபத்தில் எங்கள் பேருந்து சிக்கிக்கொள்ள, என் அருமை நண்பன் மனோ உட்பட இருபது பேர் மாண்டனர். வண்டியிலேயே என் அருகில் உயிர்விட்ட மனோ உரக்கக் கத்திய கடைசி வார்த்தை, "முத்துவேலா!!" என்பதுதான். அவன் அருகில் அமர்ந்திருந்த நான் காயங்களுடன் தப்பினேன்.

மனோவின் கடைசி ஆசையைப் பூர்த்தி செய்யும் எண்ணத்தில் நான் விவரங்களை எடுத்துக்கொண்டு அந்த தம்பி ஜோதிடரிடம் சென்றேன். வெகுநேரம் தேடிவிட்டு அவர் ஒரே ஒரு ஓலையைக் காட்டினார். அதில் இப்படி எழுதியிருந்தது:

சாளுக்கிய தேசச் செலவின் போது
மாளுதல் நிகழும் மனமும் மாறும்.


*** *** ***
 
நாடியது கேட்கின்...
சிறுகதை
ரமணி, 21/05/2013


[இணையத்தில் ஆங்காங்கே மேய்ந்து கிடைத்த விவரங்களுக்குக் கண்-காது-மூக்கு வைத்து எழுதிய கதை இது.--ரமணி]

நான் முத்துவேல். என் நண்பன் மனோகரன். இருவரும் நெருங்கிய நண்பர்கள், அதுதான் ஆச்சரியம்!

ஏனெனில் நான் (மனோகரன் மூடநம்பிக்கைகள் என்று மறுக்கும்) அனைத்து ஆன்மிக விஷயங்களையும் நம்புபவன்: எனக்குக் கோவில் ஸ்தல புராணங்கள், சாயி பாபா போன்ற மகான்கள் நிகழ்த்தும் அதிசயங்கள், பேய்-பிசாசுகள் பிடிப்பது அவற்றை ஓட்டுவது, மந்திரித்து வைத்தியம் செய்வது, மறுபிறவி--இன்னும் எது வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளுங்கள்--போன்ற அனைத்து விஷயங்களும் உண்மை.

மனோகரனுக்கோ ஒரு நியூட்டன், ஒரு ஐன்ஸ்டின், ஒரு ஸ்டீஃபன் ஹாகிங்--இன்னும் யாரை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளுங்கள்--போன்று யாரவது உறுதிப்படுத்தி யிருந்தால்தான் அது உண்மை, அறிவியல், நிச்சயம் நம்பலாம். எல்லாத் துறைகளிலும் பற்பல விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் முரண்பட்டுக் கருத்துக்களைச் சொல்கிறார்களே மனோ, இவற்றில் எதுதான் உண்மை என்று கேட்டால் ஜகா வாங்கிவிடுவான்! காலம் காலமாக நிறுவப்பட்டதாகக் கருதப் பட்ட விஞ்ஞான் உண்மைகள் ஒரு நாள் தூக்கியெறியப் படுவதே விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்பது அவன் கட்சி.

சரி, விஷயத்துக்கு வருகிறேன். நாங்கள் இருவரும் சேர்ந்து வைத்தீஸ்வரன் கோவிலில் நாடி ஜோதிடம் பார்க்க முடிவுசெய்தோம்! பொதுக்காண்டமும் முற்பிறவி பற்றிப் பேசும் சாந்திக்காண்டமும் பார்ப்பதாக முடிவுசெய்துகொண்டோம். எனக்குண்டான பலன்களை அறிந்துகொள்வதில் எனக்கு ஆர்வம் இருந்தது. அவனுக்குச் சொல்லப்படும் பலன்கள் எப்படியாவது பொய், புனைகதை என்று நிரூபிக்கவேண்டும் என்பதில் அவனுக்கு ஆர்வம் இருந்தது. இதற்காக அவன் திரும்பவும் வை.கோவிலுக்கு வரவும் தயாராக இருந்தான்.

ஜோதிடர் எங்கள் கைரேகைகளைப் பதிந்துகொண்டு ஓலைதேடச் சென்றபோது நாங்கள் அதே தெருவில் உள்ள ஒரு சின்ன விடுதியில் இட்டிலி-வடை, தோசை, காப்பி சாப்பிட்டோம். தோசைக்காகக் காத்திருந்தபோது, "முத்து, எப்படிடா கைரேகையை வைத்து ஓலையைத் தேடமுடியும்? அதுவே ஃப்ராட்" என்றான். அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களில் பலர் ஏடு பார்க்க வந்தவர்கள் என்பது வெளிப்படையாகத் தெரிந்ததால் நான் அவனை அடக்கிவிட்டுக் கிசுகிசுத்தேன்: "மனிதர்களின் கைரேகைகளை உன் அறிவியல் முறைப்படி பெர்ம்யுடேஷன்-காம்பினேஷன் போட்டால் வரும் எண் 28531 கோடி, தெரியுமா உனக்கு? இந்த நம்பரை வெச்சு நெட்ல நாடி ஜோதிடம் பக்கங்கள்ல தேடிப்பார்." அவன் ஒன்றும் பதில் சொல்லாவிட்டாலும் அவன் ஆர்வத்தைக் கிளறிவிட்டது தெரிந்தது.

இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்ற உறவில் எங்களுக்குச் சொல்லப்படும் பலன்களை இருவருமே சேர்ந்து கேட்டோம். பழந்தமிழ்ச் செய்யுட்கள் மூலம் எங்கள் பெர்சனல் விவரங்கள் தெரிந்தது "டூ மச், அந்தாள் கில்லாடிதான்" என்றான், அவர் தன் யஜமானர் அழைத்ததாக ஐந்து நிமிடங்கள் அறையை விட்டு வெளியில் சென்றிருந்தபோது. ஒரு ஓலையை எடுத்துப் பார்த்துவிட்டு அதில் இன்றைய தமிழ் எழுத்துகளில் இருக்கும் கிறுக்கல்கள் புரியாமல், "இந்த ஓலை கௌசிகர் எழுதி தமிழ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணினதுன்னு எப்படி நம்ப முடியும்? ரொம்பப் போனா இது முன்னூறு-நானூறு வருஷம் பழமையா இருக்க சான்ஸ் இருக்கு. கார்பன் டேட்டிங்க்கு கொடுத்தாங்கன்னா இவங்க வண்டவாளம் எல்லாம் வெளில வந்திடும்."

பொதுக்காண்டம் முடிந்தது. எங்களைப் பற்றிய பொது விவரங்கள் பெரும்பாலும் சரியாக இருந்தன. ஆனால் எதிர்காலம் பற்றிய நம்பிக்கைகள் அதிகம் இல்லை. பலன்கள் சொல்லும் போது மனோவிடம் ஜோதிடர் திடீரென்று, "நீங்கள் ஒரு நாத்திகரா?" என்று கேட்டு அவனை அசரவைத்தார். "டேய், மைண்ட் ரீடிங்கூட பண்ற கில்லாடிடா ஜோசியர்!" என்றான் பின்னர். "நாங்கூட இதெல்லாம் கத்துக்கிட்டா நல்லா காசு பாக்கலாம் போலிருக்கே!"

சாந்திக் காண்டத்தில் என் முற்பிறவி பற்றி ஜோதிடர் அலசியபோது நல்ல வேளையாக மனோவுக்கு வயிற்றுக்குடைச்சல் ஏற்பட்டுக் கொஞ்ச நேரம் வெளியே சென்றான். முற்பிறவியில் என் பெயர் முத்தண்ணனாம். நான் தஞ்சை சரபோஜி மன்னர் அரண்மனையில் அவருக்கு நெருங்கிய பணியாளனாக வேலை பார்த்தேனாம். பேராசையில் ஒரு நாள் அரண்மனைக் கருவூலத்திலிருந்து ஒரு விலையுயர்ந்த முத்துமாலையைத் திருடி அகப்பட்டுக்கொண்டு சிரச்சேதத்துக்குத் தப்பி நாடு கடத்தப்பட்டுப் பிச்சையெடுத்து வாழ்ந்து நாய்பாடு பட்டேனாம். இன்னும் சில பிறவிகளுக்கு எனக்கு முத்து என்று ஆரம்பிக்கும் பெயர்தான் இருக்குமாம், அந்த முத்துவேல் முருகன் என்னை ஆட்கொள்ளும் வரை. முத்துவேல் என்று பெயர்கொண்ட இந்தப் பிறவியிலும் நான் என் நெருங்கிய நண்பனிடம் இருந்து ஒரு பெரிய கடன்தொகையை வாங்கியிருப்பேனாம். அதனை என்னால் திருப்பித் தரவே முடியாதாம்.

வியர்த்து வெலவெலத்துவிட்டேன். மனோவிடம் நான் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தேன். அத்துடன் என் சொந்தப் பணத்தையும் போட்டு இரண்டு ஐம்பது கிராம் 24 காரட் தங்கச் சிறுகட்டிகள் வாங்கியிருந்தேன், இப்போது ப்ளஸ்-டூ பண்ணும் என் மகளுக்கு அவள் திருமண சமயம் வரும் போது நகைகள் செய்ய. முதல் வேலையாக மனைவியிடம் சொல்லி ஒரு ஐம்பது கிராம் கட்டியில் நகைகள் செய்து, இன்னொரு கட்டியை விற்று (எங்கள் குடும்ப நகைக் கடையில் பாதி பணமாகவும் பாதி நகையாகவும் தருவதற்கு ஒப்புவார்கள்) மனோவின் கடனை அடைத்துவிட வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டேன். ஜோதிடர் இந்த விஷயத்தில் சொன்னது பொய் என்று நிரூபிக்க வேண்டும்.

மனோவின் முற்பிறவி பற்றிச் சொல்லும் போது ஜோதிடர் அப்போது சுதாகர் என்ற பெயரில் காஞ்சி தேசத்தில் வாழ்ந்த அவன் மிகப் பணக்காரனாக இருந்தான் என்றும், சுற்றமும் நட்பும் அடுத்துக் கெடுத்த சதிகளால் பணமெல்லாம் இழந்து கடைசி காலம் வரை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வாழ்ந்ததாகவும், இது அவனை இந்தப் பிறவியில் நாத்திகனாக்கியிருக்கலாம் என்றும் பலன் சொன்னார்.

மனோவின் முற்பிறவிக் காண்டம் பாதியில் நின்றது. ஜோதிடர் தம் செல்ஃபோனில் விவரம் தெரிவிக்க அவரது யஜமானரே அறைக்கு வந்துவிட்டார். "ரொம்ப சாரிங்க. இந்த ஓலைச் சுவடிகள் எங்கள் பரம்பரைச் சொத்தாக இருந்துவந்து தலைமுறை தலைமுறையாகக் குடும்பத்தில் மூத்த பிள்ளை இந்தப் புனிதத் தொழிலை மேற்கொண்டு வந்தோம். இந்தத் தலைமுறையில் என் தம்பிக்கும் இந்தத் தொழிலில் ஆர்வம் தோன்றிவிடவே, நாங்கள் கைவசம் இருந்த சுவடிகளை ஆளுக்குப் பாதியாகப் பங்கிட்டுக் கொண்டோம். அவர் இப்போது சாளுக்கிய தேசத்தில், அதாவது இன்றைய பங்களூரு அருகில், ஏடு பார்த்துப் பலன் சொல்லி வருகிறார். நீங்கள் அங்கே போக முடியுமானால் இதுவரை பார்த்த உங்கள் சுவடிகள் பற்றிய விவரங்களைத் தருகிறேன். மீதமுள்ள முற்பிறவி பற்றிய சாந்திக் காண்டத்தையும் இன்னும் ஏதேனும் காண்டங்கள் பார்க்க விரும்பினால் அவற்றையும் நீங்கள் என் தம்பியிடம் பார்த்துக்கொள்ளலாம். மீதமுள்ள சாந்திக்காண்டத்துக்கு நீங்கள் ஏதும் தனியாக பணம் கட்ட வேண்டியதில்லை."

யஜமானர் தந்த விவரங்களை எடுத்துக்கொண்டு ஊர்போய்ச் சேர்ந்தோம். மனோவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. தனக்குச் சொல்லப்பட்ட பலன்களை நம்புவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் அவன் மீதமுள்ள சாந்திக்காண்டத்தை சாளுக்கிய தேசத்தில் பார்த்துவிடத் தீர்மானித்து, அடுத்த மாதமே இருவரும் இன்டர்-ஸ்டேட் சொகுசுப் பேருந்தில் கிளம்பினோம்.

என்ன சொல்வது? பாதி வழியில் ஒரு லாரி மோதி விபத்தில் எங்கள் பேருந்து சிக்கிக்கொள்ள, என் அருமை நண்பன் மனோ உட்பட இருபது பேர் மாண்டனர். வண்டியிலேயே என் அருகில் உயிர்விட்ட மனோ உரக்கக் கத்திய கடைசி வார்த்தை, "முத்துவேலா!!" என்பதுதான். அவன் அருகில் அமர்ந்திருந்த நான் காயங்களுடன் தப்பினேன்.

மனோவின் கடைசி ஆசையைப் பூர்த்தி செய்யும் எண்ணத்தில் நான் விவரங்களை எடுத்துக்கொண்டு அந்த தம்பி ஜோதிடரிடம் சென்றேன். வெகுநேரம் தேடிவிட்டு அவர் ஒரே ஒரு ஓலையைக் காட்டினார். அதில் இப்படி எழுதியிருந்தது:

சாளுக்கிய தேசச் செலவின் போது
மாளுதல் நிகழும் மனமும் மாறும்.


*** *** ***
 
நாடி ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுக்காக இந்தக் கதையின் முடிவைச் சற்று மாற்றுவோம்:

னோவின் முற்பிறவிக் காண்டம் பாதியில் நின்றது. ஜோதிடர் தம் செல்ஃபோனில் விவரம் தெரிவிக்க அவரது யஜமானரே அறைக்கு வந்துவிட்டார். "ரொம்ப சாரிங்க. இந்த ஓலைச் சுவடிகள் எங்கள் பரம்பரைச் சொத்தாக இருந்துவந்து தலைமுறை தலைமுறையாகக் குடும்பத்தில் மூத்த பிள்ளை இந்தப் புனிதத் தொழிலை மேற்கொண்டு வந்தோம். இந்தத் தலைமுறையில் என் தம்பிக்கும் இந்தத் தொழிலில் ஆர்வம் தோன்றிவிடவே, நாங்கள் கைவசம் இருந்த சுவடிகளை ஆளுக்குப் பாதியாகப் பங்கிட்டுக் கொண்டோம். அவர் இப்போது சாளுக்கிய தேசத்தில், அதாவது இன்றைய பங்களூரு அருகில், ஏடு பார்த்துப் பலன் சொல்லி வருகிறார். நீங்கள் அங்கே போக முடியுமானால் இதுவரை பார்த்த உங்கள் சுவடிகள் பற்றிய விவரங்களைத் தருகிறேன். மீதமுள்ள முற்பிறவி பற்றிய சாந்திக் காண்டத்தையும் இன்னும் ஏதேனும் காண்டங்கள் பார்க்க விரும்பினால் அவற்றையும் நீங்கள் என் தம்பியிடம் பார்த்துக்கொள்ளலாம். மீதமுள்ள சாந்திக்காண்டத்துக்கு நீங்கள் ஏதும் தனியாக பணம் கட்ட வேண்டியதில்லை."

"எனக்கு அந்த மீதிக்காண்டம் நிச்சயமா பாக்கணும். நாங்க அடுத்த வாரமே கிளம்பலாம்னு நினைக்கறோம். அதான் நெறைய இன்டர்-ஸ்டேட் செகுசுப் பேருந்துகள் இருக்கே?"

"அப்ப ஒண்ணு செய்யுங்க. நான் தம்பிட்ட இன்னைக்கே பேசிடறேன். நீங்க ஊருக்குப் போய், டிக்கட் புக் பண்ணிட்டு, எனக்கு உங்க பயணம் பற்றிய தகவல் சொல்லுங்க. தம்பியே ஒரு ஆளை பஸ் ஸ்டாண்டுக்கு அனுப்பி உங்களை ரிசீவ் பண்ணுவார், நீங்க தேடி அலைய வேண்டியதில்லை. இது என் கார்ட். என் செல் நம்பரும், இந்த விலாசமும் இருக்கு."

"ரொம்ப நன்றிங்க. அப்ப நாங்க கிளம்பறோம்" என்று நண்பர்கள் விடைபெற்றுச் சென்றனர்.

அதன்பின், யஜமானர் தன் தம்பியிடம் பலமுறை பேசினார். தம்பியிடம் மனோகரனின் முற்பிறவிக் காண்டம் பற்றிய மீதி ஏடுகள் எதுவும் இல்லையென்று தெரிந்தது. "ரெண்டு நாளா எல்லாத்தையும் தலைகீழாப் புரட்டிப் பாத்துட்டேன் அண்ணே, எதுவும் கிடைக்கலை."

"சான்ஸே இல்லையா! என்கிட்ட எல்லா ஏடுகளும் இருந்தபோது ஒண்ணு கூட இப்படி அரைகுறையா இருக்கலைன்னு எனக்கு நிச்சயமாத் தெரியும். வேற கட்டு எதுலயாவது மாறி இருக்குமா? அல்லது நீ அங்கே ரெண்டு தரம் வீடு மாத்தினியே அப்ப மிஸ் ஆகியிருக்கலாம் இல்ல? அவங்க ரெண்டு பேரும் வர்ற புதன் கிழமை சென்னையிலிருந்து கிளம்பி வராங்கய்யா. இன்னைக்கு சனிக்கிழமை. என்ன செய்யப் போறே?"

"கவலைப் படாதீங்கண்ணே. நான் பாத்துக்கறேன்."

"எது செஞ்சாலும் என்கிட்ட சொல்லிட்டு செய். எதும் வில்லங்கம் வந்து நம்ம குடும்பப் பேருக்குக் களங்கம் வந்துறக் கூடாது."

ந்த புதன் கிழமை பாதி வழியில் ஒரு லாரி மோதி விபத்தில் அவர்கள் பேருந்து சிக்கிக்கொள்ள, மனோகரன் உட்பட இருபது பேர் மாண்டனர். வண்டியிலேயே நண்பன் அருகில் உயிர்விட்ட மனோ உரக்கக் கத்திய கடைசி வார்த்தை, "மூத்துவேலா!" என்பதுதான். அவன் அருகில் அமர்ந்திருந்த முத்துவேல் காயங்களுடன் தப்பினான்.

நண்பர்கள் வந்து சேரவில்லை என்றதும் தம்பி ஜோதிடர் பேருந்து கம்பெனிக்கு அலைபேசி, விபத்து பற்றியும் அதில் மனோகரன் இறந்தது பற்றியும் அவன் நண்பன் முத்துவேல் அருகில் ஓர் அரசு மருத்துவ மனையில் சிசிச்சை பெறுவது பற்றியும் தெரிந்துகொண்டார். முத்துவேலிடம் அலைபேசி துக்கம் விசாரித்து, அவன் அடுத்த பத்து நாட்களில் நண்பனின் கடைசி விருப்பத்தை நிறைவேற்ற அவரைச் சந்திக்க வரப்போவது பற்றித் தெரிந்துகொண்டார்.

"வாங்க தம்பி, என்கிட்ட அந்த மீதி ஏடு இருக்கு, காட்டறேன்."

"அதில என்னங்க எழுதியிருக்கு?"

"அதைப் பத்தி ஃபோன்ல பேசக் கூடாதுங்க. நீங்க நேர்ல வாங்க."

அண்ணனிடம் ஆலோசித்த போது ஒரு ஜாதகரின் மரணம் பற்றி அறிவிக்கும் ஒற்றைச் சுவடிகள் இரண்டு பல வருஷங்கள் முன்பு தாம் பலன் சொல்லிய கட்டில் இருந்ததாகத் தெரிந்தது. "இந்தக் கேஸ்லயும் நிச்சயமா இருக்கணும்யா. நீதான் அதை எங்கயோ மிஸ் பண்ணிட்டே. இப்ப வேற வழியில்லை, பாத்து செய். நம்ம குலதெய்வம் முனீஸ்வரர் நம்மைக் காப்பாத்துவார்."

தம்பி ஜோதிடர் ஒரு பழைய, எதுவும் எழுதப் படாத ஓலை நறுக்கை எடுத்தார். அதில் பின்வருமாறு எழுதினார்:

சாளுக்கிய தேசச் செலவின் போது
மாளுதல் நிகழும் மனமும் மாறும்.


*** *** ***
 
’ஷோகேஸ்’
சிறுகதை
ரமணி, 18/06/2013


[collage, அதாவது படத்திரட்டு என்னும் உத்தியைப் பயன்படுத்தி எழுதிய சிறுகதை.]

து வந்து... எங்க வீட்டு ஷோகேஸ் படம்... படத்த நல்லா, விவரமாப் பாருங்க!... இதவெச்சு ஒரு கதை சொல்லப் போறேன். என்னோட கதை...

img-showcase.jpg

’மதுமிதா’ அப்படீன்னா அர்த்தம் தெரியுமா உங்களுக்கு? அதான் என்னோட பேர். அதுக்கு அர்த்தம்... ம்? எனக்கு எங்க தாத்தா சொல்லிக் குடுத்தாங்க...

ஐய, மதுன்னா நீங்க நெனைக்கற மாதிரி ஒயின் கிடையாது. மதுன்னா தேன்! சுரா-ங்கற வார்த்தைக்குதான் ஒயின்னு அர்த்தம். மிதான்னா filled with, நெறஞ்சு இருக்கறது. ஸோ, மதுமிதான்னா தேன் அல்லது இனிமை நெறஞ்சவள்னு அர்த்தம். "தேன் கலர்ல நீ இருந்ததாலயும், உங்க அம்மா-அப்பா விரும்பினபடி பொறந்த முதல் ஸ்வீட் கர்ள்-ங்கறதாலயும், அவங்க உனக்கு மதுமிதான்னு பேர் வெச்சாங்க", அப்படீன்னு தாத்தா எனக்கு எக்ஸ்ப்ளெய்ன் பண்ணாங்க. எனக்கு ஏதாவது சந்தேகம் வந்தா... நான் எங்க தாத்தாவைத்தான் கேப்பேன். தாத்தாட்ட எதைப் பத்திக் கேள்வி கேட்டாலும் அவங்க பொறுமையா எனக்குப் புரியற மாதிரி விளக்கிச் சொல்லுவாங்க.

எனக்கு ஏழு வயசு. ஒரே பொண்ணு. மூணாங் கிளாஸ். ஃபர்ஸ்ட் ரேங்க். ரேணு ஸெகண்ட், என்னைவிடப் பத்து மார்க் கம்மி! ஆனால் அவள் என்னைவிட உயரம்! நாங்க ரெண்டு பேருமே நிறமா அழகா ஸ்மார்ட்டா இருக்கறதா எங்க அப்பாம்மாக்கு நினைப்பு. ’காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு தானே! கழுதை கூட குட்டியா இருக்கும்போது அழகாத் தானே இருக்கும்!’ அப்படீன்னு நானும் ரேணுவும் எங்களுக்குள்ள பேசிப்போம். ஏன்னா, எங்க கிளாஸ்லயே விமலாதான் ரொம்ப அழகு, நிறம், உயரம் எல்லாம். சுண்டினா ரத்தம் வரும்னு சொல்லுவாங்களே, அந்த நிறம். ஆனா அவள் படிப்புல சுமார்தான். கொஞ்சம் கர்வம்கூட. எங்ககூடல்லாம் அவ்வளவாப் பேசமாட்டா. எங்க கிளாஸை விட, மேல் கிளாஸ் கர்ள்ஸ்-தான் அவளுக்கு ஃப்ரெண்ட்ஸ்.

கல்லா-மண்ணா, கண்ணா மூச்சி, கிளித்தட்டு, பாண்டி, ரிங் டென்னிஸ், கேரம், செஸ், அஞ்சு கல்லாட்டம், சோழியாட்டம், பரமபத சோபான பட விளையாட்டுல ஏணியில ஏறி பாம்புல இறங்கறது, இது மாதிரி விளையாட்டெல்லாம் எனக்கும் ரேணுவுக்கும் ரொம்பப் பிடிக்கும். எங்க தெருவுல இருக்கற மத்த பொண்களோட சேர்ந்து இதெல்லாம் தினம் சாயங்காலம் விளையாடுவோம். ஓடி விளையாட எங்க தெரு அகலமான, பெரிய தெரு. ஒக்காந்து விளையாட எங்க வீட்டுத் திண்ணை பெரிய திண்ணை. அப்புறம் என்ன, ஜாலிதான்!

சாயங்காலம் விளையாடி முடிச்சதும் கோவிலுக்குப் போய்ட்டு வந்து வீட்ல ஸ்வாமி கும்பிட்டு ஸ்லோகம்லாம் சொல்லறது பிடிக்கும். இந்த ஊர் சிவன் கோவில்ல... ம்? விஸ்வநாதர், விசாலாட்சி, கணபதி, முருகன், கருப்பணசாமி, நவக்கிரகம் எல்லாம் ரொம்ப அழஹா இருக்கும். நானும் ரேணுவும் சேர்ந்து பிரகாரம், நவக்கிரகம் சுத்துவோம். பிரகாரம் ஒரு சுத்து, நவக்கிரகம் ஒம்பது.

வீட்ல சாமி வழிபாட்டுக்கு அப்புறம், படிப்பு சாப்பாடெல்லாம் எட்டரை மணிக்குள்ள முடிஞ்சிடும். ஒம்பது மணிக்குத் தாத்தாவோ பாட்டியோ என் பாய்ல உக்காந்து நான் தூங்கற வரைக்கும் கதை சொல்லுவாங்க. காலைல ஆறு மணிக்கெல்லாம் எழுந்திருவேன்.

ராத்திரி சாப்ட்டு முடிஞ்சதும் தாத்தா வர்ற வரைக்கும் டெய்லி சேர் மேல ஏறி நின்னுண்டு... இந்த ஷோகேஸ்ல இருக்கற பொம்மைகள், பொருட்கள் இதெல்லாம் ஒண்ணுவிடாம ஆழ்ந்து பார்ப்பேன். ஒவ்வொண்ணும் எனக்கு ஒரு கதை சொல்லும்! அதை நான் இப்ப உங்களுக்குச் சொல்லப் போறேன். இப்பவும் நான் ஷோகேஸைத்தான் உத்துப் பாத்திண்டிருக்கேன், ஆனால் சேர் மேல நின்னுண்டு இல்லை...

மேலே இடது பக்கத்திலேர்ந்து ஒவ்வொரு ஷெல்ஃபா வருவோம்.

அந்தப் பேய்வீடு கடிகாரம் இருக்கில்ல? அது ஸ்கூல் ஆண்டுவிழாவின் போது ’English poem reciting competition for junior classes’ போட்டில நான் ஃபர்ஸ்ட் வந்ததுக்குத் தந்தாங்க. என்ன போயம் தெரியுமா? வால்டர் டி ல மேரோட 'Silver'... 'Slowly, silently, now the moon'-னு ஆரம்பிக்குமே அந்தப் பாட்டு. அதுல ஒரு முழுநிலா பொழியற இரவுல... மரத்தில இருக்கற பழங்கள்... கென்னல்ல தூங்கற நாய்... புறா... எலி... மீன் ... எல்லாம் எப்படி ஸில்வர் கோட்டிங் பூசிண்ட மாதிரி தெரியறதுன்னு நான் விதவிதமா மாஸ்க் அணிந்து நல்லா நடிச்சுக்காட்டி அந்த போயம் ஒப்பிச்சதால ஃபர்ஸ்ட் ப்ரைஸ்-ஸாம்.

பேய்கள்லாம் இருக்கா தாத்தான்னு கேட்டதுக்கு, பேய், பிசாசு எல்லாம் உண்மைதான்னு தாத்தா சொன்னாங்க. மனசில பெரிய நிறைவேறாத ஆசைகளோ, வெறியோ இருந்து அந்த நினைப்புலயே உயிர் போச்சுன்னா...ம்? அந்த உயிர் பேயா அலையுமாம்! தூக்குத் தண்டனைல சாகறவங்க, தற்கொலை பண்ணிக்கறவங்க, விபத்துல செத்துப் போறவங்க, இவங்கள்லாம் ஆவியா அலைய வாய்ப்பு அதிகமாம். அதனாலதான் ஓவரா, வெறித்தனமா எதுக்கும் ஆசைப்படக் கூடாதுன்னு தாத்தா சொல்லிக் கொடுத்தாங்க.

போன சம்மர் லீவுல, நான் தாத்தாட்ட நெறைய ஆன்மிக விஷயம் கேட்டுத் தெரிஞ்சிண்டேன். என்னாச்சு தெரியுமா... ம்? பக்கத்து ஊர்ல எங்க பெரியம்மா, அதாவது அம்மாவோட அக்கா இருக்கா. அவங்களுக்கு கோமதின்னு ஒரு பொண்ணு இருந்தா. என்னைவிட ரெண்டு வயசு பெரியவ. எனக்கு ரொம்ப ஃப்ரெண்ட் அவள். ஒவ்வொரு சனிக்கிழமை காலையும் தவறாம அவள் அப்பா அவளை எங்களோட விட்டுட்டுப் போயிட்டு, ஞாயிறு சாயங்காலம் பிக்-அப் பண்ணிப்பார். ஆறு மாசத்துக்கு முன்னாடி... ஒரு நாள் அவள் திடீர்னு செத்துப் போயிட்டா! அப்ப நான் ரெண்டு நாளைக்கு விடாம அழுதேன். போன வருஷம் ரேணுவோட தாத்தா தவறிப் போனப்ப நான் போய்ப் பார்த்தேன். அந்தத் தாத்தாவை மட்டும் மூங்கில் ஸ்ட்ரெச்சர்ல க்ரிமேட் பண்ண தூக்கிட்டு போனாங்க, ஆனால் கோமதியை ஒரு மூங்கில் கம்புல தூளி மாதிரி கட்டி அதுல வெச்சுதான் கொண்டு போனாங்க... இது ஏன் தாத்தான்னு கேட்டேன். தாத்தா சொன்னாங்க, குழந்தைகள் போயிடுத்துனா அப்படித்தான் தூக்கிண்டு போவான்னு. குழந்தைகள் பிறக்கற போதும் தூளி, போகற போதும் தூளியான்னு ஜோக் அடிச்சேன்!

செத்ததுக்கப்புறம் என்னாகும் கூடத் தாத்தாட்ட கேட்டிருக்கேன் நான். தாத்தா சொன்னாங்க, நமக்கு முன்னாடி போன நம்ம பெற்றோர்கள், மற்ற உறவினர்கள், நண்பர்கள் இவர்கள்ள ஒருத்தரோ சில பேரோ வந்து வழிகாட்டி போன உயிரை பித்ருலோகத்துக்கு அழைச்சிட்டுப் போவாங்களாம். அங்க கொஞ்ச நாள் இருந்திட்டு, நாம பண்ணின புண்ணிய பலன்களை சொர்க்கத்திலயும், பாவ பலன்களை நாமே உருவாக்கிக்கற நரகத்திலயும் அனுபவிக்கணுமாம். அப்புறம் அந்த பலன்களைப் பொறுத்து நம்ம அடுத்த பிறவி அமையுமாம்.

ரி, இப்ப ஷோகேஸைப் பார்ப்போம். அந்தப் பேய்வீடு கடிகாரம் பக்கத்தில என்ன இருக்குன்னு சரியாத் தெரியலை இல்ல? இதோ ஃஜூம் பண்ணிக் காட்டறேன்.

img-showcase-kitten.jpg

பஞ்சினால பண்ணி, சம்கிலாம் வெச்சு, ஜரிகை மீசை வெச்சு உருவாக்கி... ஒரு மரச் சட்டத்தில உக்காந்திருக்கற ரெண்டு பூனைக் குட்டிகள் தெரியுதா? ரேணு போனமாசம் என் பர்த்டேயின் போது தந்த பரிசு அது. அதுல என்ன எழுதியிருக்கு தெரியுமா? Friend, a simple word, but what a priceless treasure!? ரேணுன்னா ரேணுதான்!

பூனை பக்கத்தில ஒரு ஃபோட்டோ ஸ்டாண்ட். ஆனா அதுல இருக்கற குடும்பம் நாங்க இல்ல. அடுத்து, கீழ்த்தட்டுல இடது ஓரத்தில சாக்லேட் கலர்ல நெறைய செட்டியார் பொம்மைகள் இருக்கில்ல?... அதெல்லாம் நாங்க கொடைக்கானல் போனப்ப வாங்கினது. செட்டியார் பொம்மை வெச்சிண்டா அதிர்ஷ்டம்னு சொல்லுவாங்க. பக்கத்தில சிப்பி, கிளிஞ்சல்னால செஞ்ச குட்டிப்பெண்கள், மயில், எட்ஸட்ரா. இதெல்லாமும் கொடைக்கானல்ல வாங்கினோம்.

லைட் எரிய மாதிரி ஒரு குளோப் தெரியுதா? அது ஆக்சுவலி கண்ணாடில செஞ்ச, சுத்திவிட்டா சுத்தற பூமி. அப்புறம் அந்தக் கண்ணாடி மீன்-கடிகாரம், லேடி-கடிகாரம், கீழே கையாட்டும் தங்கப் பூனை, அந்த ஸ்டஃப் பண்ண கங்காரு இதெல்லாம் எங்க வீட்டு கிரகப் பிரவேச கிஃப்ட்ஸ். யார் தந்தாங்கன்னு ஞாபகம் இல்லை.

ந்த சுத்தற பூமிக்குக் கீழே கண்ணாடிப் பெட்டிக்குள்ள மேகங்களுக்கு நடுவுல ஒரு பெரிய பிங்க் கலர் கோலிக்குண்டு தொங்கறது தெரியுதா? அது எப்படி

img-showcase-hundi.JPG

எந்த சப்போர்ட்டும் இல்லாம அந்தரத்தில் தொங்கிண்டிருக்கு கவனிங்க! அது ஆக்சுவலி ஒரு காசு போடற உண்டியல். எங்க சித்தப்பா என் போன வருஷ பிறந்த நாளைக்கு வாங்கித் தந்தது. அந்த பிங்க் கோலி அந்தரத்தில் தொங்கற இல்யூஷன் எப்படீன்னு நான் கொஞ்சம் கஷ்டப்பட்டுக் கண்டுபிடிச்சேன். ரெண்டு மூணு கண்ணாடித் துண்டுகளை ஆங்கிள்ல வெச்சு உருவாக்கினது அது. சித்தப்பா என்னைப் பாராட்டி ஐஸ்கிரீம் வாங்கித் தந்தாங்க...

சொல்ல விட்டுட்டேனே... அந்த லேடி-கடிகாரம் பக்கத்தில ஆணில தொங்கற டெக்ஸ்ட்-ஐக் கவனிங்க. இந்த ஷோகேஸை பாப்புலேட் பண்ணின போது அப்பா வாங்கினாங்களாம். அதுல என்ன எழுதியிருக்கு தெரியுமா?

Although you'll find our house a mess,
come in, sit down, converse.
It doesn't always look like this...
Some days it's even worse.

ங்க வீட்ல நவராத்திரியின் போது கொலு வெக்கற வழக்கம் இல்லை. ஆனால் ஒம்பது நாளும் சாயங்காலம் சுண்டல் பண்ணுவாங்க. எனக்கு எல்லா சுண்டலும் பிடிக்கும். ரேணு வீட்ல கொலு வெச்சு, டெய்லி சுண்டல் நைவேத்தியம் பண்ணி, அக்கம் பக்கத்தையெல்லாம் கூப்பிட்டு, வர்ற பொண்களைப் பாடச்சொல்லிக் கொண்டாடுவாங்க. நான் கூட பாடியிருக்கேன். ’காட்சி தந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மா!’ பாட்டு. எதுக்கு சொல்ல வரேன்னா, அந்த பெரிய சரஸ்வதி பொம்மையை எங்க வீட்டு கொலுவில வெக்கலாம்னு பாட்டியோட ஃப்ரெண்ட் மாமி ப்ரசன்ட் பண்ணினாங்களாம். இப்போ அது எங்க ஷோகேஸ்ல.

சரஸ்வதி மடியில, வீணைக்குக் கீழே ஒரு பொருள் இருக்கில்ல? அது வந்து...ம்? எங்க தாத்தா பரம்பரை பரம்பரையா வெச்சிண்டு இருக்கற தமிழ் ஓலைச் சுவடி... அப்படீன்னு நான் சொன்னா நீங்க நம்பிடுவீங்க இல்ல? ஆனால் நான் எதுக்கு பொய் சொல்லணும்? அது ஒரு ஓலை விசிறி! ஏதோ ஒரு கல்யாணத்தில முகூர்த்தம் போது எல்லார்க்கும் தந்தாங்க. அதை ஓலைச்சுவடி மாதிரி செட்டப் பண்ணினது நான்தான். நல்லா இருக்கில்ல?

அந்தக் கையாட்டற பூனை பக்கத்தில ஒரு சின்ன டூ-இன்-ஒன் கேசட் ரெகார்டர் இருக்கில்ல, அது நாங்க திண்டுக்கல்ல வாங்கினது. வாலு போச்சு கத்தி வந்ததுங்கற கதை மாதிரி... கேசட் போயி, சீடி வந்தது... சீடி போயி, டீவீடி வந்தது... இப்ப அதுவும் போயி, பென்-ட்ரைவ்-ங்கற மெமரி ஸ்ட்க் வந்ததால... எங்க அப்பாம்மா ஆ..சையா வாங்கிச் சேர்த்த கேசட்லாம் இப்ப யா..ரும் கேக்கறதில்ல. என்னைத் தவிர! நான் மட்டும் சனி-ஞாயிறுல காலைலயும் சாயங்காலமும் ஒரு மணி நேரம் கேப்பேன். எனக்கு சாய்-பஜன்ஸ் பிடிக்கும், பாரதியார் பாட்டு பிடிக்கும், எம்.எஸ்., பாம்பே சிஸ்டர்ஸ், நித்யஶ்ரீ, சுதா ரகுநாதன், இவங்கள்லாம் பாடின பக்திப் பாட்டெல்லாம் அல்மோஸ்ட் நெட்டுரு. வர்ற சம்மர் லீவில என்னைப் பாட்டு கிளாஸ்ல சேர்த்துவிடறேன்னு பாட்டி சொல்லியிருக்காங்க.

கேசட் ஷெல்ஃப்ல விதவிதமா கேசட் ப்ளேயர்ஸ் பாக்கறீங்கல்ல? அதெல்லாம் இப்ப எது-வும் வொர்க் பண்ணாது. ஆனால் அதுல இருக்கற ரேடியோ வொர்க் பண்ணும். போன வருஷம் தமிழ் நாட்டை நீலம் புயல் தாக்கினபோது, ராத்திரி எட்டு மணிநேரம் கரண்ட் இல்லை. பயங்கரக் காத்து! அப்ப புயல் பத்தி லேட்டஸ்ட் நியூஸ் கேக்க அந்த ரேடியோலாம்தான் உபயயோகமா இருந்தது.

ரி, இப்ப டாப்-ரைட் ஷெல்ஃபுக்கு வருவோம். பெரிசா, கருப்பா, தலைக்கு மேல ஆர்ச்செல்லாம் வெச்சு ஒரு சிலை தெரியுதா? அது சக்தி தேவியோட சிலை. கற்சிலை மாதிரியே இருக்கில்ல! பேப்பர் மாஷ்னால செஞ்சது, லைட் வெயிட். எங்க ஷோகேஸ்லயே எனக்கு ரொம்பவும் பிடிச்சது இந்த சக்தி தேவி சிலைதான். அதோட ஹிஸ்டரி என்ன தெரியுமா? எங்க தாத்தாஆ-பாட்டி கல்யாணம் போது...ம்? தாத்தாவோட அம்மாவோட ஃப்ரெண்டு, ஒரு புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் பெண்மணி... மௌன்ட் ரோடு பூம்புகார் ஷோரூம்-லேர்ந்து வாங்கி, கல்யாணப் பரிசாக் கொடுத்ததுன்னு தாத்தா சொன்னாங்க. தாத்தா அவங்களை ஆன்டின்னுதான் கூப்பிடுவாங்களாம்! அந்த எழுத்தாளர் இப்ப உயிரோடு இல்லை.

img-showcase-shakti.jpg

இந்த சக்தி தேவி சிலையை நல்லா பாருங்க. உச்சீலேர்ந்து ஆரம்பிச்சு சிலை முழுக்க எத்தனை அலங்கார வேலப்பாடு! அவள் முகத்துல எவ்ளோ தேஜஸ், சாந்தி! அவளோட ஷார்ப் நோஸ் எவ்ளோ அழகு! எல்லாத்தையும் விட அவள் புன்னகையாச் சிரிக்கறா பாருங்க, அது அப்படியே மனசை இழுத்துப் பிடிக்கிது இல்ல? ராத்திரி ஒம்பதரை மணிக்கு நான் படுக்க போறதுக்கு முன்னாடி...ம்? தாத்தா கூடத்தில எல்லா லைட்டும் அணைச்சிட்டு... தேவிக்கு முன்னால இருக்கற எல்-யி.டி. டார்ச் விளக்கை என்னைவிட்டுப் போடச் சொல்லுவாங்க. ஜாக்கிரதையா ஷோகேஸ் கண்ணாடியை விலக்கி லைட்டைப் போடுவேன். அந்த ஒளியோட ஃபோகஸ்ல தேவீ அவ்வளவு அற்புதமா, கொள்ளை அழகோட இருப்பா, நீங்க மேல படத்தில பார்க்கற மாதிரி!

நான் ராத்திரி கூடத்தில பாட்டி பக்கத்தில இந்த ஷோகேஸ் கீழதான் தூங்குவேன். தூங்கறதுக்கு முன்னாடி பாட்டி சொல்லிக்கொடுத்த ’ஸர்வ மங்கள மாங்கல்யே’ ஸ்லோகம் மூணுதரம் சொல்லிட்டுதான் தூங்குவேன். சமயத்தில நடு ராத்திரி முழிப்பு வந்ததுன்னா... எதிர் சுவத்தில இருக்கற ஹால் நைட்-லாம்ப் வெளிச்சத்தில சக்திதேவி இன்னும் அழகாத் தெரிவா. காலைல ஆறு மணிக்கு எழுந்ததும் முதல்ல சக்தி தேவியைத்தான் பார்ப்பேன். அப்புறம் பல் தேய்ச்சு ஹார்லிக்ஸ் குடிச்சிட்டு வந்து அவள் முன்னாடி நின்னு பாட்டி சொல்லிக்கொடுத்த அபிராமி அந்தாதி செய்யுள் சொல்வேன்: ’தனம்தரும் கல்விதரும்’னு வருமே, அந்த செய்யுள்.

டுத்து மேல வலதுபக்க ஷெல்ஃப்ல இருக்கற கடவுள் உருவங்கள் பத்திச் சொல்றேன். ஆணில தொங்கற அந்த சூரியன் ஒயிட் மெட்டல்ல பண்ணினது. சிப்பி, கிளிஞ்சல் வேலைப்பாட்டோட ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி கவனிச்சீங்களா? எவ்ளோ அழகு!

img-showcase-gods.jpg

சிவப்பு, பச்சை முக்கோணக் கண்ணாடிச் சில்லுகள் பதிச்ச சட்டத்துக்குள்ள ஒரு வெங்கடாசலபதி இருக்கா? அப்புறம் அந்த பிளாஸ்டிக் பேழைக்குள்ள இன்னொரு வெங்கடாசலபதி இருக்கா? அப்புறம் அந்த குங்குமச் சிமிழ்த் தட்டு... இதெல்லாமும் கிரகப் பிரவேசப் பரிசுகளா வந்தது. அப்புறம் பெரிசும் சிறிசுமா, கலர் கலரா, தங்க நிற வேலைப்பாடுகள் செஞ்ச ஸ்டாண்ட்ல நிக்கற மாதிரி ஐயப்பன், லக்ஷ்மி, பிள்ளையார், முருகன், பெருமாள் படங்கள் இருக்கில்ல? இதெல்லாம் கிரகப் பிரவேசம் போது அப்பாம்மா மத்தவங்களுக்குக் கொடுத்த பரிசுகள்.

ன்னும் ஒண்ணே ஒண்ணு மீதி இருக்கு. கீழ இடதுபக்கம் இருக்கற பிள்ளையார் உருவங்கள்... சட்டத்துக்குள்ள இருக்கற பிள்ளையார்லாம் கிரகப் பிரவேசம் போது பரிசா வந்தது. ஆணியில தொங்கற பிள்ளையார் ஒயிட் மெட்டல்ல செஞ்சது. அந்த குடைக்கீழ் உக்காந்திருக்கறவர், தலையாட்டும்

img-showcase-piLLaiyAr.jpg

மரப் பிள்ளையார், வெள்ளை மார்பிள் பிள்ளையார், அப்புறம் அந்தக் குட்டிக்குட்டிப் பிளாஸ்டிக் பிள்ளையார் பிரதிமைகள்--சிவப்பு, பச்சை, வெள்ளை, நாவல்பழ நிறங்கள்ல இருக்கில்ல, ம்?--இதெல்லாம் போன வருஷம் நாங்க திருச்சி மலைக்கோட்டைப் பிள்ளையார் கோவில் வாசல்ல இருக்கற கடைகள்ல தரிசனம் முடிச்சிட்டு வாங்கினோம். சாயங்காலம் நாலறை மணிக்குக் கீழே இருக்கற மாணிக்க விநாயகரை தரிசனம் பண்ணிட்டு, மலை மேல ஏறினோம். நானூத்துச் சொச்சம் படிகளையும் நான் அப்பாம்மா சொன்னதைக் கேக்காம, ஓடியாடி, மூச்சு வாங்க ஏறினது இன்னும் ஞாபகம் இருக்கு. மேலே போய் அந்த அழகான பிள்ளையாரை தரிசனம் பண்ணி, கற்பூரம் ஒத்தி, விபூதி இட்டுண்டு சுத்தி வர்ற போது, அப்பா என்னைத் தூக்கி வெச்சிண்டு, அந்த ஜன்னல்கள் வழியாத் திருச்சி நகர வீடுகள் குட்டிகுட்டியா தெரியறதைக் காட்டினாங்க. அப்பா, என்ன சுகமான காத்து! அப்புறம் வெளில வந்து கீழ்ப்படிகள் கிட்ட பாறைல உக்காந்து கூல்டிரிங்க் குடிச்சபடியே, இருட்டற வரைக்கும் ரொம்ப நேரம் கதை பேசினோம்...

பிள்ளையார் உருவங்கள் சேர்த்தா ஐஷ்வர்யமாம், அதனால அப்பாவும் அம்மாவும் வீடு வாங்கின புதுசில நெறைய பிள்ளையார் பிரதிமைகள் வாங்கிச் சேர்த்தாங்களாம். இப்ப எல்லாம் ஷோகேஸ்ல தூங்கறது!

தூங்கறதுன்னில்ல, நான் தினம் ஸ்கூலுக்குப் போறதுக்கு முன்ன, ஸ்வாமி அறையில கும்பிட்டப்பறம் ஷோகேஸ்ல இருக்கற எல்லா கடவுள் உருவங்களையும் ஒருதரம் பார்த்துக் கும்பிடுவேன். பிள்ளையார் குட்டிகளுக்கு ஸ்பெஷலா பத்து தோப்புக் கரணம் போடுவேன். அப்புறம் மூச்சு வாங்க ஸ்கூலுக்குக் கிளம்புவேன்! சாயங்காலமும் பத்துத் தோப்புக் கரணம் போடுவேன். நம்ம தோப்புக் கரணம்தான் இப்ப அமெரிக்கால ஸூப்பர் ப்ரெய்ன் யோகாங்கற பேர்ல ப்ராக்டீஸ் பண்றாங்களாம், தாத்தா சொன்னாங்க.

வ்வளவு கதையும் எதுக்கு உங்களுக்குச் சொன்னேன்னு தோணுதா? முதல்லயே ஒரு க்ளூ கொடுத்தேன், கவனிச்சீங்களா தெரியலை: இப்பவும் நான் ஷோகேஸைத்தான் உத்துப் பாத்திண்டிருக்கேன், ஆனால் சேர் மேல நின்னுண்டு இல்லை...

புரியுதா? இப்ப நான் உயிரோட இல்லை. ஹாரி பாட்டர் முதல் சினிமால பசங்கள்லாம் டின்னர் சாப்பிடும்போது ஹவுஸ் கோஸ்ட்-கள் எல்லாம் காத்தில மிதந்துண்டு பறக்குமே, அது மாதிரி நான் இப்ப காத்தில மிதக்கறேன்! காலைல நாலு மணிக்குத் தூக்கத்திலேயே உயிர் போய்ட்டது. ஆறு மணிக்கு நான், தானே வழக்கம்போல எழுந்திருக்காம இருக்கறதை அம்மா அல்லது பாட்டி நோட்டீஸ் பண்ணும்போதுதான் நியூஸ் தெரியும்!

நான் எப்படி என் உடல்லேர்ந்து வெளில வந்தேன், என்னாச்சுங்கறதெல்லாம் எனக்குத் தெரியல. ஏதோ வைரல் ஃபீவர்னு ஒரு வாரம் வீட்ல படுக்கைல இருந்தேன். டாக்டர் தினம் வந்து பரிசோதித்து மாத்திரை கொடுத்து, இதுவரை ரெண்டு ஊசி போட்டார். ஃபீவர் அடுத்த வாரமும் தொடர்ந்தா ஆஸ்பத்திரியில சேர்த்திடலாம்னு அவர் சொன்னபோது பயம்மா இருந்து. எனக்கு ஆஸ்பத்திரியே பிடிக்காது. ஆனால் நேத்து சாயங்காலத்திலேர்ந்து திடீர்னு ஜுரம் குறைஞ்சு நார்மல் மாதிரி இருந்தது. கஞ்சிக்கு பதிலா ரசம் சாதம் சாப்பிட்டேன். அப்புறம் படுக்கைல ஒக்காந்தபடியே ஷோகேஸை நான் ஒருதரம் பார்த்திட்டுச் சீக்கிரமே தூங்கிட்டேன். நடு ராத்திரிக்கு மேல தூக்கத்தில என்ன ஆச்சு தெரியல! ஆனால் இப்ப எனக்கு பயமோ துக்கமோ தெரியல. ஒரு வேளை எல்லாரும் காலைல எழுந்து ஒப்பாரி வெக்கும்போது தெரியுமோ என்னவோ?

தாத்தா சொன்னது ஞாபகம் வரது. போன உயிரை அழைச்சிட்டுப் போக, முன்னாடி போன உற்றார் உறவினர் நண்பர் யாராவது வருவாங்கன்னு தாத்தா சொன்னாங்க. ஆனால் எனக்கு அப்படி யாருமே இல்லையே?... என் அம்மா வழித் தாத்தா-பாட்டி, அப்பா வழித் தாத்தா-பாட்டி, இவங்க நாலு பேரும் எழுபது எண்பது வயசில இன்னமும் விச்சா இருக்கா. அப்பா-அம்மா, மத்த சொந்தக் காரங்க, அப்புறம் ரேணு... இவங்களுக்கெல்லாம் இன்னும் நெறைய டைம் இருக்கு. போன வருஷம் போன ரேணுவோட தாத்தாவுக்கு என்னை அவ்வளவா தெரியாது.

என்னடாது டைலமான்னு ஒரு நிமிஷம் கலங்கிப் போய்ட்டேன். எப்படியும் நான் வணங்கற சக்திதேவீ வழிகாட்டுவான்னு நம்பிக்கை எழுந்தது. கூடவே கோமதி ஞாபகம் வந்ததோ இல்லையோ இதோ அவளே வந்துட்டா என்னைக் கூட்டிட்டு போக! ’கோமதி உன்னை மாதிரி நாளைக்கு என்னையும் தூளில தூக்கிண்டு போவா இல்ல?’ன்னு கேட்டு சிரிக்கறேன். அவள் புரியாம என்னைப் பார்க்க, சுருக்கமா அவள்ட்ட நான் விவரம் சொல்ல, அவளும் என்னோட சேர்ந்து சிரிக்கறா...

அவளோட போறதுக்கு முன்னாடி ஒரு அட்டெம்ப்ட், என் உடலுக்குள்ள நுழையப் பார்க்கறேன். முடியல, ஆனால் எனக்கு ஒண்ணும் வருத்தம் இல்லை. என்னோட கடவுள் ஷோகேஸைப் பிரிஞ்சு போகணுமேன்னு நினைப்பு வந்த உடனேயே புரிஞ்சுண்டு கோமதி சொல்றா: ’மது, கவலைப் படாதே. இந்த ஷோகேஸ்ல இருக்கற ஒவ்வொரு பொருளும் உருவமும் உனக்கு அத்துப்படி இல்லையா? எங்க இருந்தாலும் அதையெல்லாம் நீ எளிதா மனசில பார்க்கலாமே! என்டயர் ஷோகேஸை நீ எளிதா மனசில கிரியேட் பண்ணிக்கலாம்...’ தலையாட்டிவிட்டு, மீண்டும் என் உடலை ஒருமுறை பார்க்கறேன்.

’யெஸ், உடல்தான் பெரும்பாலானான உயிர்களுக்குப் பிரிய முடியாத ஷோகேஸ்,’ என்கிறாள் கோமதி. நான்ங்கற உணர்வைத் தருவது அந்த உடல்தானே? ஒவ்வொரு உயிரும் நான்ங்கற உணர்வை அதோட உடலோடதானே இனம் கண்டுகொள்கிறது? ஆனால் ஜீவன் இல்லாவிட்டால் அந்த ஷோகேஸ்-க்கு மதிப்பு இல்லைதானே?’ தொடர்ந்து, ’நான் என் உடலைப் பிரிந்த போது இப்படித்தான் அவதிப்பட்டேன். உனக்கும் அப்படி இருக்கறது இயற்கைதானே?’ என்கிறாள்.

’இல்லை கோமதி’, என்கிறேன். ’உள்ள இருந்த போதும் சரி, இப்ப வெளில இருக்கும் போதும் சரி, எனக்கென்னவோ இந்த கடவுள் ஷோகேஸை விட உடல் ஷோகேஸ் ஒண்ணும் பெரிசாத் தெரியலை’, என்று சொல்லிவிட்டு அவளுடன் மிதந்து செல்கிறேன்.

*** *** ***
 
இந்தக் கதையைப் படித்துக் கருத்துச் சொல்வதுடன் மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டு இதுபோன்ற அக்கிரமச் செயல்கள் பற்றிய விழிப்புணர்வு உண்டாவதற்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--ரமணி

லைஃபா இது, சை!
சிறுகதை
ரமணி, 24/06/2013


(கலித்துறை)
பணமும் அரசியல் பதவியும் பின்புலமாய்ப் பதுங்கியிருக்கத்
தினவெடுத்த தீமனத்தார் தன்னலம் மட்டும் தாங்குவதால்
தினமும் கண்முன்னே சூழல் கேடுறும் விளைவுகளை
வினவிட முடியாது வெதும்பிடும் மனத்தில் விளைந்தகதை.
--ரமணி


ந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தின் வெளிவாசல் அருகே, தார் சாலையில் தர்ணா ஆரம்பித்தது. ஞாயிற்றுக் கிழமை. காலை பத்து மணி. இரண்டு பேர் அரை டிராயர் அணிந்துகொண்டு வளாகத்தில் நிறுத்தியிருந்த தங்கள் சொகுசுச் சிற்றுந்துகளைக் கழுவித் துடைத்துக் கொண்டிருந்தார்கள்.

குழந்தைகள் முன்னணியில் இருக்க, ஆண்களும் பெண்களுமாக ஏறத்தாழ நாற்பது பேர் அந்த அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆறு வயது முதல் பதினாறு வயது வரை சிறுவர்களும் சிறுமியர்களுமாக இருபது பேர், வகுப்பில் பெருக்கல் வாய்ப்பாடு கோரஸாகச் சொல்லும் குழந்தைகளின் உற்சாகத்துடன், ஒரு மூத்த சிறுமி ஒலித்த கோஷங்களை உரத்த குரலில் திரும்பச் சொன்னார்கள். பெரியவர்களின் குரலும் சேர்ந்து பின்புலத்தில் ஒலித்தது. குழந்தைகளுடன் நின்றுகொண்டு காவியுடையில் கையில் தடியுடனும் தண்ணீர் புட்டியுடனும் ஓர் உயரமான துறவியும் அந்த வாசகங்களுக்குக் குரல் கொடுத்தார். வாசகங்களை அழகாக விளம்பர அட்டைகளில் எழுதியும் உயர்த்திக் காட்டினார்கள்.

கக்கூஸ் நீரை...
கக்கூஸ் நீரை...
(இந்த வாசகத்தை ஒவ்வொரு முறை ஒலிக்கும் போதும் சிறு குழந்தைகள் கெக்கே-பிக்கே என்று ஓட்டைப்பல் தெரியச் சிரித்தது இயற்கையாக இருந்தது.)

கோவில் நிலத்தில்...
கோவில் நிலத்தில்...

தினமும் பாய்ச்சும்...
தினமும் பாய்ச்சும்...

கயவர் கூட்டத்தின்...
கயவர் கூட்டத்தின்...

கொட்டத்தை அடக்கு!
கொட்டத்தை அடக்கு!

பணத்தின் பெயரால்...
பணத்தின் பெயரால்...

பாதகச் செயலுக்கு..
பாதகச் செயலுக்கு..

துணை போகாதே!
துணை போகாதே!

வெளியே கக்கூஸ்...
வெளியே கக்கூஸ்...

உள்ளே கார்கள்...
உள்ளே கார்கள்...

கக்கூஸ்காரர் குடியிருப்பில்!
கக்கூஸ்காரர் குடியிருப்பில்!

மற்றோர் நலனும்...
மற்றோர் நலனும்...

சுற்றுச் சூழலும்...
சுற்றுச் சூழலும்...

வெற்றுப் பேச்சா?
வெற்றுப் பேச்சா?

துறவியும் தன் பங்குக்கு மூன்று வாசகங்களைக் கொடுத்தார்.

பெயரில் பசுமை...
பெயரில் பசுமை...

செயலில் பாதகம்!
செயலில் பாதகம்!

பணமும் செல்வமும்...
பணமும் செல்வமும்...

பாதாளம் பாயலாம்...
பாதாளம் பாயலாம்...

மேலோகம் செல்லாது!
மேலோகம் செல்லாது!

ஆத்தாள் சினந்தால்...
ஆத்தாள் சினந்தால்...

சோத்தில் மண்தான்!
சோத்தில் மண்தான்!

தர்ணா செய்த பெரியவர்கள் செல்ஃபோனில் மற்றத் தெருவாசிகளுக்கும் தகவல் சொன்னதாலும், ஊரின் மேற்கே அமைந்த ஏழை எளியோர் குடியிருப்புத் தெருக்களிலும் இந்த தர்ணா விஷயம் தெரியவர, அவர்கள் வீட்டுவேலை செய்யும் குடும்பங்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுக்க அந்த மகளிரும், இளைஞர்களும் குழந்தைகளும் உற்சாகத்துடன் சேர்ந்துகொள்ள அரை மணி நேரத்தில் கூக்குரல் இடுவோர்களின் எண்ணிக்கை நூறைத் தாண்டியது.

"அய்யா, சாலை மறியல் செஞ்சிரலாங்களா?" என்றார், கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் ஓர் ஏழை இளைஞர்.

"அதெல்லாம் வேண்டாம்", என்றார் துறவி. "இது ஓர் அமைதியான போராட்டம். வளாகத்தில் குடியிருப்போர் அவர்கள் தினமும் செய்வது தெய்வகுற்றம் என்பதை உணர்ந்து இது போன்றதொரு இழிசெயலைக் கைவிடவேண்டும் என்பதே இந்த தர்ணாவின் நோக்கம்."

கூட்டம் பெருகுவதைக் கண்ட வளாகக் குடியிருப்புச் செயலர் அவர்கள் வார்டு கௌன்சிலருக்கு அலைபேச, கௌன்சிலர் இரண்டு காவல்துறை அதிகாரிகளுடன் அடுத்த பதினைந்து நிமிடத்தில் ஸ்தலத்தில் ஆஜரானார்.

கௌன்சிலரும் காவல்துறை அதிகாரிகளும் கூட்டத்தை சமாதானப் படுத்த முயன்று, தர்ணா செய்வோர் குற்றச்சாட்டில் உண்மையிருந்தால் அடுத்த பதினைந்து நாட்களில் தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தது வளாகத் தெருவாசிகளுக்குத் திருப்தியாகவில்லை. கடைசியாக அந்தத் துறவி அதிகாரிகளின் ஒப்புதல் பெற்று உரத்த குரலில் பேசினார்.

"அன்பர்களே! நான் இந்தப் பக்கம் வர நேர்ந்தது, உங்கள் தர்ணாவில் பங்கேற்றது எல்லாம் தற்செயல் என்று நினைத்தேன். அது இறைவன் சித்தமே என்று எனக்கு இப்போது தெரிகின்றது. இப்போது கூட நீங்கள் யார் என்று எனக்கோ நான் யார் என்று உங்களுக்கோ தெரியாது. அதுவும் இறைவன் சித்தமே. இன்று நான் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்யக் கிளம்புகிறேன். நமக்கு முருகன் மீது நம்பிக்கை இருக்கிறது. அவன் ஆத்தாள் மீது நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் பார்த்துக்கொள்வார்கள், கவலை வேண்டாம். அதிகாரிகள் கேட்டுக்கொண்டபடி இப்போது கலைந்து வீடு செல்லுங்கள். ஒன்று மட்டும் நிச்சயம் நடக்கும். இன்று ஞாயிற்றுக் கிழமை. அடுத்த ஞாயிறுக்கடுத்த ஞாயிறோடு பதினைந்து நாள் கெடு முடிகிறது. அதுவரை அதிகாரிகள் தரப்பில் தக்க நடவடிக்கை இல்லாமல் இந்த தெய்வகுற்றம் தொடர்ந்தால், அதன்பின் வரும் செவ்வாய்க் கிழமையன்று ஆத்தாள் தன் ரௌத்திர ரூபத்தைக் காட்டுவாள். இது சத்தியம்."

துறவியின் அருள்வாக்கில் திருப்தியடைந்து கூட்டம் கலைய, அவரும் தன்வழிச் சென்றார். காவல்துறை அதிகாரிகள் நிம்மதியுடன் திரும்ப, குடியிருப்பு வளாகத்தினுள் செயலருடன் ஜாடைகாட்டிச் சிரித்துப் பேசியவாறே கௌன்சிலர் சென்றார்.

*** *** ***
(தொடர்கிறது)
 
மூன்று அடுக்கில் மூன்று கட்டடமாக அந்தக் குடியிருப்பு வளாகம் அமைந்திருந்தது. நிலத்தளத்தில் வீடுகள் இல்லாது வாகனங்கள் நிறுத்த இடங்கள் குறிக்கப்பட்டு, ஒரு சின்ன அலுவலக அறை மற்றும் பராமரிப்பு அறைகள் இருந்தன. ஆறடி அகலமான கான்கிரீட் பாலங்கள் மொட்டை மாடித் தளத்தில் தனிக் கட்டடங்களை இணைத்தன. நடுவில் இருந்த பெரிய கட்டடத்தின் மொட்டை மாடியில் ஷாமியானா போடப்பட்டு வளாகக் குடியிருப்போர் எல்லோரும் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்ற செயலரின் அழைப்பில் தம் குழந்தைகளுடன் கூடியிருந்தனர்.

கூட்டத்தின் நடுவில் ஒரு மேசை போடப்பட்டு அதன்மேல் ஒரு மடிக் கணினியும், கணிணிப் புரொஜக்டரும் இருந்தன. எல்லார்க்கும் எதிரில் சற்றுப் பெரிய, வெள்ளைத் திரை தொங்க, அனைவர் கண்களும் திரையை நோக்கியிருந்தன. புரொஜக்டர் மேசையில் மூன்று கணிணி விற்பன இளைஞர்கள் செயலரின் விரல் அசைவில் திரையில் ஒரு படத்தை ஓடவிடுவதற்குத் தயாராக இருந்தனர்.

"பதினஞ்சு நிமிஷம் ஓடற இந்த யூடியூப் விடியோ லின்க் எனக்கு நேத்து நைட்டு அமெரிக்கால இருக்கற என் மச்சினன் பையன் அவனோட சாட் பண்ணும் போது தந்தான். இது வந்து நம்மளுடைய அபார்ட்மென்ட் பத்தினது. படம் முடிஞ்சதும், லாஸ்ட் ஒன் இயரா செஞ்சிகிட்டிருக்கற ஒரு காரியத்தைப் பத்தி நாம ஒரு முடிவுக்கு வரவேணும். அதுக்காகத்தான் இந்த மீட்டிங்.."

மாலை ஏழுமணி. பாதரசக் குழல் விளக்குகள் நான்கு பக்கமும் மென்மையாக ஒளிவட்டங்கள் பரப்பிக் கொண்டிருக்க, அந்த மெல்லிய இருட்டில் திரையில் படம் பளிச்சென்று தெரிந்தது...

முதலில் அவர்கள் வளாகக் குடியிருப்பு வெளித்தோற்றம். மேலே ’லைஃபா இது, சை!’ என்று தலைப்பு. கட்டடம் பற்றிய படத்தின் முதல் சட்டங்கள் மெதுவாக ஊர்ந்து கொண்டிருக்க, கீழே தமிழ் எழுத்துகள் ஓட, கட்டைக் குரல் ஒன்று விளக்கம் கூறியது.

"மச்சீ, இந்த டைட்டில எங்கேயோ பாத்திருக்கேன்னு சொன்னேல்ல? ’Life of Pi’-னு சமீபத்தில ஒரு இங்க்லிஷ் படம் வந்ததில்ல, அதுலேர்ந்து சுட்ட டைட்டில்டா இது!" என்றான் ஒரு விற்பனன் தன் நண்பனிடம். "ஷ்...!" என்றார் செயலர்.

கடந்த ஒரு வருடமாக அந்தக் குடியிருப்பு வளாகம் செய்துவந்த ’அராஜக, அட்டூழிய, இழிவு’ச் செயல் பற்றிப் படத்தின் முதல் காட்சிகள் விளக்கின...
தொடர்ந்து சில தமிழ்ச் செய்தித் தாள்களில் இது போன்ற அட்டூழியங்களை எதிர்த்து நடந்த தர்ணாக்கள் பற்றிய செய்திகள்...
அதன்பின் அந்தப் பாழ்படும் நிலமும் மாசுபடும் சுற்றுச் சூழலும் பற்றிய காட்சிகள்...

பின்னால் வேலிக்காத்தான் முள்மரங்கள் உயர்ந்தோங்கிக் காடாக வளர்ந்து இருந்தன...
காட்டுக் கொடிகள் ஓங்கி உயர்ந்து அவற்றைச் சுற்றிக்கொண்டு நின்றன...
பயனற்ற தாவரங்களாக இருந்தாலும் எங்கு பார்த்தாலும் கரும் பசுமை அடர்ந்து சூரிய ஒளியை மறைத்திருந்தன...
மரங்களடர்ந்த அந்த இரண்டு ஏக்கர் கோவில் நிலத்தில் ஓர் ஏரி போல மனிதக் கழிவுநீர் தேங்கி யிருந்தது...
அதில் எருமைகளும், கொக்குகளும், காணாக்கோழிகளும் தவளைகளும் படுத்தும் நடந்தும் ஓடியும் தத்தியும் திளைத்தன...
எல்லாக் காட்சிகளும் ஓரளவுக்குத் தெளிவாகப் படமாக்கப் பட்டிருந்தன...

"இது அம்மன் கோவில் நிலம் என்றுதான் பெரும்பாலோர் கருதுகின்றனர்", என்றது குரல். "இல்லை யென்றும் சிலர் சொல்லுகின்றனர். எதுவாயினும் காலி நிலத்தில் மனிதக் கழிவுநீரைப் பாய்ச்சுவது மனித நலனுக்கும் இயற்கைக்கும் சுற்றுச் சூழலுக்கும் எதிரான பெரும் குற்றம்... அதற்குத் துணைபோவது அதனினும் பெரிய குற்றம்... இந்த அராஜகத்துக்கு எதிராக நாம் கடைசியாகச் செய்த தர்ணா இது..."

குரல் நின்றதும் நாம் மேலே பார்த்த தர்ணா திரையில் மெதுவாக ஓடியது. ’பிக்ஸல் எடிட்டிங்’ உத்தியால் முகங்கள் மழுக்கப் பட்டிருந்ததாலும், சமீபத்தில் இந்த வளாகத்தின் முன் நடந்த தர்ணாவில் தெருவாசிகளும் அவர்கள் குழந்தைகளும் சுமார் இருபது பேரே பங்கேற்றனர் என்பதாலும், இந்த தர்ணா வேறெங்கோ வேறெதற்கோ நடந்து இங்கு சேர்க்கப்பட்டதா என்ற ஐயம் எழுந்தது...

தர்ணா முடிந்ததும் குரல் தொடர்ந்தது: "அந்தத் துறவி தன் தீர்க்க தரிசனத்தில் கூறியது போல, பதினைந்து நாட்கள் கெடுவில் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லாததால் அதன்பின் வந்த செவ்வாழ்க்கிழமை யன்று ஆத்தாள் ஆடிய ரௌத்திர தாண்டவத்தை இனிப் பார்ப்போம்..."

’செவ்வாய்க் கிழமை, மாலை மணி நான்கு, ராகு காலம்’ என்ற தலைப்பில் அந்தத் துயரத் தாண்டவம் நிகழ்ந்தது...

வாச்மேன் வெளிக்கதவைத் திறக்க, எல்.கே.ஜி. படிக்கும் பெண் குழந்தையைப் பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு வளாகச் செயலரின் வெள்ளிச்சாம்பல் நிற டொயோட்டாக் கார் உள்ளே நுழைந்தது. வெளிவாசல் அருகில் நின்றிருந்த அவர் மனைவி, கான்வென்ட் பள்ளிப் பேருந்தில் அப்போதுதான் வீடு திரும்பியிருந்த தன் மூத்த, எட்டு வயதுப் பெண் குழந்தையுடன் அவர்களை வரவேற்றாள். எல்லா முகங்களும் மழுப்பப் பட்டிருந்தன. வானம் லேசாக இருண்டிருந்தது...

வாச்மேன் இரும்பு வெளிக்கதவை மூடிவிட்டுத் திரும்பும் போது, செயலர் கார் அப்பிரதட்சிணமாக ஒரு நீண்ட வட்டமடித்துக்கொண்டு அவருக்காக ஒதுக்கப் பட்டிருந்த நிறுத்தப் பகுதியில் நின்றது. அதே வினாடி இரண்டு அசம்பாவிதங்கள் நிகழ்ந்தன...

நடந்துபோய்க் கொண்டிருந்த வாச்மேன் காலடியில் கக்கூஸ் கழிவு நிலவறையை மூடியிருந்த கான்கிரீட் பூச்சில் திடீரென்று விரிசல்கள் தோன்றி உடைந்தன. தடுமாறிச் சமாளித்துக்கொண்ட வாச்மேன், அருகில் இருந்த இன்ஸ்பெக்ஶன் சேம்பர் திறந்துகொள்ளக் கால் இடறி அதனுள் விழுந்து சுகாசனத்தில் அமர நேரிட்டு அதனின்று எழுந்திருக்க முடியவில்லை...

காரை நிறுத்திய செயலர் உட்கார்ந்தபடியே தன் குழந்தை அமர்ந்திருந்த இடப்புறக் கதவைத் திறந்துவிட, குழந்தை அவர் வந்து தன்னைத் தூக்கிக் கொள்வதற்காகக் காத்திருந்தது. கார் சாவியை எடுத்துக்கொண்டு அவர் சுற்றி வருவதற்குள் அந்த இரண்டாவது அசம்பாவிதம் நிகழ்ந்த போது அவர் மனைவியும் மூத்த மகளும் லிஃப்ட் நோக்கிச் சென்றுகொண்டு இருந்தனர்...

திடீரென்று எங்கிருந்தோ கருமேகங்கள் விரைந்துவந்து சூழ்ந்துகொண்டன. பிரளயம் போன்று ஒரு பேய்க்காற்று அடித்து அந்த கழிவுநீர் ஏரியைக் கலக்கியது. அந்த ஊழிக் காற்றின் உக்கிரத்தில் நீரலைகள் மோத, கோவில் நிலம் பக்கம் இருந்த வளாகச் சுற்றுச்சுவரில் அந்தக் கழிவுநீர் வெளியேற்றும் குழாய் இருந்த இடத்தில் விரிசல் கண்டு எட்டடி அகலத்துக்கு உடைந்தது...

கோவில் நிலத்தில் இருந்த மனிதக் கழிவு நீர் ஏரியின் கரை உடைந்ததால் வெள்ளமாகப் பெருக்கெடுத்துக் கழிவுநீர் நுழைய, இவர்கள் வளாகம் அதை ஒரு புனல் போல் உறிஞ்சிக் கொள்ள, கண நேரத்தில் அத்தனை கழிவுநீரும் இவர்கள் வளாக நிலத் தரையில் ஹோவென்ற இரைச்சலுடன் சுழித்து நிறைந்து நீர்மட்டம் உயரத் தொடங்கிக் காருக்குள் கால் வைக்கும் இடமெல்லாம் கழிவுநீர் நுழைந்தது...

"டாடி, ஸ்நேக்!" என்று குழந்தை அலறத் தொடங்க, பாம்புகளும் மீன்களும் நண்டுகளும் தவளைகளும் அடித்துவரப்பட்ட காணாக்கோழிகளுமாக ஒரே களேபரம்! செயலர் அவசரமாகக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஆடுசதையளவு கழிவுநீரில் ஓடினார். அவர் பின்னால் வெள்ளத்தில் அடித்துவரப் பட்ட எருமைக் கன்று ஒன்று அவர் காரின் முன்புறம் ’மடேர்’ என்று மோதிக் கண்விழித்தது. காரின் முன்புறம் மிகவும் நசுங்கித் தலைவிளக்குகள் உடைந்தன...

கால் இடறி விழுந்து எழுந்திருக்க முடியாமல் அமர்ந்திருந்த வாச்மேனைக் கழிவுநீர் வெள்ளம் கழுத்தளவு பற்றியது. அவர் தலைமட்டும் பயத்தில் உறைந்து பார்த்திருக்கக் காதில் குரல் கேட்டது: "எய்தவன் வேறு யாரோ நீ வெறும் அம்பு என்பதால் தண்டனை இம்மட்டில்!..." ’அம்புக்கு இவ்வளவு தண்டனையா?’ என்ற கேள்வி அவர் மனதில் எழுந்தபோது "எய்தது யாராயினும் தைத்தது அம்புதானே?" என்ற குரலில் பதில் வந்தது. ’அம்புக்கு வேறென்ன கதி?’ என்றவர் நினைத்தபோது, ’குறி தவறாத அம்புக்குக் கடைசியில் தூக்கி எறியப்படுவதுதான் விதி’ என்ற பதில் கிடைத்தது...

செயலர் முதல் மாடியில் கோவில் நிலம் பக்கம் இருந்த தன் வீட்டுக்குள் நுழைந்தபோது அவர் மனைவியும் மூத்த மகளும் பயத்தில் கூக்குரலிட்டு அழுது கொண்டிருந்தார்கள். என்னவென்று இவர் படுக்கை அறைக்குச் சென்று பார்த்தபோது, அறை ஜன்னல்களில் கண்ணாடிகள் உடைந்து சிதறியிருந்தன... அறையில் கட்டில் மேல் இருந்த பத்திரிகைகள் பெருங்காற்றில் படபடத்துப் பறந்தன. மேசைமேல் இருந்த அவரது விலையுயர்ந்த மடிக்கணிணி தரையில் விழுந்து நொறுங்கியிருந்தது...

கோவில் நிலம் பக்கம் விழிகள் நிலைத்திருக்க, தூய கான்வென்ட் ஆங்கிலம் பேசும் அவர் மூத்த மகள் திடீரென்று சுத்தத் தமிழில் கத்திய வண்ணம் கதறினாள்.

"அப்பா, அப்பா! அதோ எதிர்ல ஆத்தாள் நின்னுகிட்டு நம்மைக் கோவத்தோட பாக்கறாப்பா! அவள் கண்ணெல்லாம் ரத்தம்! ஆத்தா, தாயே! எங்கப்பா தெரியாம செய்திட்டார்! ப்ளீஸ், டோன்ட் ஹர்ட் அஸ், ப்ளீஸ்!..."

செயலரும் மனைவியும் ஜன்னல் வழியே ஜாக்கிரதையாக எட்டிப் பார்த்தும் அவருக்கோ அவர் மனைவிக்கோ ஆத்தாள் தரிசனம் கிட்டவில்லை. அவர்கள் தலையை உள்ளே இழுத்துக்கொண்ட போது, நீரில் காட்டுக் கொடிகளுடன் மூழ்கியிருந்த ஒரு பெரிய, உயர்ந்த வேலிக்காத்தான் மரம் நாணறுந்த வில் போல் விடுபட்டுக் கால்பந்து அளவில் மனிதக்கழிவொன்று காற்றில் பறந்து வந்து செயலர் படுக்கையறை ஜன்னல் வழியாக உள்நுழைந்து எதிர்ச் சுவரில் அறைந்தது. சுவரில் தெறித்துப் பரவிய கழிவுப் படலத்தில் தமிழில் வார்த்தைகள் தோன்றின.

மும்மலத்தில் ஏற்கனவே முழிபிதுங்கும் பக்தர்களை
உம்மலத்தால் உளையச் செய்ததற்கு தண்டனை!


*** *** ***
(தொடர்கிறது)
 
"ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்’-லாம் ஓரளவுக்கு நல்லாவே இருக்கில்ல மச்சி?" என்றான் கணிணியை இயக்கிய முதல் இளைஞன்.

"படம் எடுத்தவன் யார்னு கண்டுபிடி. அவன் ஏதாவது வெப்ஸைட், பிளாக் வெச்சிருக்கானா பாரு! அதை ஹாக் பண்ணி அவனை நாறடிக்கறேன்!" என்றான் அவன் நண்பன்.

"நம்ம செகரட்ரி கன்னடக்காரர் மச்சி. அவருக்குத் தமிழ் சரியா பேச வராது. நிச்சயமாப் படிக்கத் தெரியாது. சுவத்ல செந்தமிழ்ல எழுதின ஆத்தாளுக்கு அது தெரியலையே?" என்றான் மூன்றாம் இளைஞன்.

"உருவங்கள் கிட்டத்தட்ட ஒண்ணுபோல இருந்தாலும் படத்தில காட்டின ஃபிளாட் எங்களோடது மாதிரி இல்லை", என்றார் செயலர்.

எண்பது வயதுப் பெரியவர் ஒருவர் எழுந்தார். "இதை நாம ஒரு சாதாரண விடியோப் படமாக எடுத்துக்கக் கூடாது. போன வாரம் நம்ம குடியிருப்புக் குழந்தைகள் ரெண்டு பேர்க்கு அம்மை போட்டி ஊருக்கு அனுப்பி வெச்சோம், ஞாபகம் இருக்கில்ல? அதுக்கு என்ன அர்த்தம்னு யோசிக்கணும்..."

"எண்ண பண்ணலாங்கிறீங்க?" என்றார் செயலர். "இதெல்லாம் கப்ஸாதானே? நிஜமா இதுபோல எதுமே நடக்கலையே!"

"இன்னும் வேற என்னய்யா நடக்கணும்? போன வருஷம் இந்தக் காரியத்த ஆரம்பிச்ச போதே நான் எச்சரிச்சேன். அரசியல்வாதிங்களை நம்பிச் செய்யாதீங்கய்யா, அவங்க மலைப்பாம்பு மாதிரி. அந்தப் பாம்புக்காவது ஒரு பக்கம்தான் வாய் இருக்கும். இவனுகளுக்கு உடம்பெல்லாம் வாய்னு! இந்த ஒரு வருஷத்தில அவனுகளுக்கு அழுத பணத்தை வெச்சு வேற நல்ல விதமா இந்தப் பிரச்சினையை முடிச்சிருக்கலாம் இல்ல?"

"அதான் என்ன பண்ணலாம்னு கேட்டேன்", என்றார் செயலர் பொறுமை இழந்து.

"ட்ரீட்மென்ட் ப்ளான்டும் வேண்டாம், ஒரு விளக்கெண்ணையும் வேண்டாம்!" என்றார் பெரியவர், தன் குரலை உயர்த்தி. "நமக்குத்தான் கிரவுண்ட் ஃப்ளோர்ல நெறைய இடம் இருக்கில்ல? பெருசா, ஆழமா, ஒவ்வொரு பிளாக்குக்கும் தனித்தனியா, மூணு செப்டிக் டாங்க் கட்டுவோம். எல்லாரும் செய்யறமாதிரி ரெகுலரா கழிவுநீர் ஊர்தி வெச்சு அதை மூணு மாசமோ ஆறு மாசத்துக் கொருக்காவோ காலி பண்ணி மெய்ன்டேன் பண்ணுவோம்..."

"பெரிசு பெரிசா செப்டிக் டாங்க் கட்டிட்டு அது ரொம்பி வழிஞ்சு இதுமாதிரி ஆச்சுன்னா, தி ஷிட் வில் ஹிட் திஸ் ஃப்ளோர், பெருசு!" என்று அந்த மூன்று இளைஞர்களில் ஒருவன் சொல்ல, கூடியிருந்த மற்ற இளைஞர்கள் ’ஹூ...!’ என்று கேலிக்குரல் எழுப்பி இரைந்து சிரித்தனர்.

"வாய மூடுடா பரதேசி நாயே! வாடகைக்கு குடியிருக்கற உங்களுக்கு இவ்வளவு திமிராடா!" பெரியவருக்கு மூச்சிரைத்தது.

"வெரி ராஞ்சி, திஸ் விடியோ க்ளிப்!" என்றான் வேறொரு இளைஞன். அவன் தந்தை அவனை அடக்கினார். "வாட், கௌபாய்? இது ராஞ்சினா ஒரு வருஷமா நாம செஞ்சது எதில சேத்தி?"

பெரியவர் சொன்னதற்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் கேட்டன. ஆண்களும் பெண்களும் தனித்தனியே உரத்த குரலில் தாங்கள் பார்த்ததை விவாதிக்கத் தொடங்க எழுந்த சந்தைக் கடை இரைச்சல் நடுவே இரண்டு குழந்தைகளின் அழுகுரல் கேட்டது.

குரல்களைக் கைதட்டி அடக்கிய பெரியவர் அமைதியாகத் தொடர்ந்தார்: "என்னோட ஒரே பையன் கல்யாணம் ஆகி அமெரிக்காவில செட்டில் ஆயிட்டான்னு உங்க எல்லார்க்கும் தெரியும். எனக்கு அந்தக் குளிரும் சூழ்நிலையும் ஒத்துக்காம நான் இங்க தனியா ஜீவனம் பண்றேன், எதோ நீங்கள்லாம் கூட இருக்கீங்கன்னு ஒரு தைரியத்தில... என்னோட கடைசிப் பயணச் செலவுக்குன்னு நான் ஒரு லட்ச ரூபாய் சேர்த்து வெச்சிருக்கேன். முதல் கான்ட்ரிபூஷனா அதைத் தர்றேன். வீட்டுக்கு ஒரு லட்சம் போட்டாப் போதும், ஒன் டைம் இன்வென்ஸ்ட்மென்டா. மூனு செப்டிக் டாங்கையும் பெரிசா ஆழமாக் கட்டி அதை ஒரு வருஷம் மெயின்டெய்ன் பண்ணவும் அந்தப் பணம் போதும்."

"இதெல்லாம் இப்பவே தீர்மானம் செய்ய முடியுமாங்க? யோசிச்சுச் செய்யணும்", என்று செயலர் இழுத்தார்.

"யோசிக்கறதுக்கு என்ன இருக்கு?", என்றார் பெரியவர். "அடுத்த வாரம் மறுபடியும் கூடுவோம். அப்ப பிரச்சனையை ஓட்டுக்கு விடுங்க. பெரியவங்க, குழந்தைங்க எல்லாரும் ஒருத்தர் விடாம ஓட்டுப் போடணும். போன வருஷம் அஞ்சு ஓட்டு வித்தியாசத்திலதானே நீங்க ஜெயிச்சு முடிவெடுத்தீங்க? இந்த தடவை நான் எல்லார்ட்டயும் கான்வாஸ் பண்ணி என் பக்கத்தை ஜெயிச்சிக் காட்டறேன்..."

*** *** ***
(தொடர்கிறது)
 
டுத்த இரண்டு நாட்களில் பெரியவர் இயற்கை மரணம் எய்தியதால் அந்தக் கூட்டமோ ஓட்டெடுப்போ நிகழாமல் போனது.

அதன்பின் செயலர் அனுப்பிய ஒரு சுற்றறிக்கையில், கூடிய விரைவில் அவர்கள் பகுதியில் ஏற்கனவே மூன்று வருடங்கள் முன்பு கொள்கையளவில் ஒப்புதல் பெற்ற பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், அது வந்துவிட்டால் இந்தப் பிரச்சனை எல்லோர்க்கும் நன்மையாகத் தீர்ந்துவிடும் என்றும், அதுவரை ஏற்கனவே அதிகாரிகளுடன் ஒப்புதலுடன் செய்துவரும் காரியத்தைத் தொடரலாம் என்றும், இதற்கு ஒப்புதல் அளித்து வீட்டின் சொந்தக்காரர்கள் கையொப்பம் இடுமாறும் கேட்டிருந்தது. மூவர் மட்டுமே இதற்கு ஆட்சேபம் தெரிவித்துக் கையொப்பமிட, இன்றுவரை கோவில் நிலம் என்று நம்பப்படும் இரண்டு ஏக்கர் நிலத்தில் அந்தக் குடியிருப்பு வளாகத்தின் கழிவுநீர் வெளியேற்றப்பட்டு ஏரியாகத் தேங்கியுள்ளதும் அதனால் அக்கம் பக்கம் தனி வீடுகளில் பல ஆண்டுகளாக இவர்களுக்கு முன்பிருந்தே குடியிருக்கும் மற்றத் தெருவாசிகள் அவதிப் படுவதும் தொடர்கிறது...

அந்தக் ’கூடிய விரைவில் பாதாள சாக்கடைத் திட்டம் அமல்’ என்பது வெறும் கண்துடைப்பே, மூன்று வருடமாகக் கிடப்பில் போடப்பட்ட திட்டம் இப்போதைக்குச் செயல்படுத்தப் படாது என்பது ஊர் அறிந்த ரகசியம்.

மாசுபட்ட கோவில்களில் இருந்து தெய்வம் வெளியேறி விடுவதாகவும், கோவில் சிலைகள் வெறும் கற்சிலைகளாகி வழிபாட்டுக்குப் பயன்தராது என்றும் நிலவும் ஐதீகம் போன்று, அவளது நிலச் சொந்தக்கார்கள் யாரும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் ஆத்தாள் அந்த நிலத்திலிருந்தும் அந்தக் கோவிலிலிருந்தும் வெளியேறிவிட்டாள் என்று ஓட்டு எண்ணிக்கையில் குறைந்துள்ள மற்றத் தெருவாசிகள் தங்கள் இயலாமையைப் பேசிக்கொள்வதைத் தவிர அவர்களால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

*** *** ***
(முற்றியது)
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top