• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

பட்டினத்தாருடன் 60 வினாடி பேட்டி

Status
Not open for further replies.
பட்டினத்தாருடன் 60 வினாடி பேட்டி

காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே என்று நீங்கள் வளர்த்த பிள்ளையே எழுதி ஒரு ஊசியை வைத்துவிட்டுச் சென்றதாமே?

வாதுற்ற திண்புயர் அண்ணாமலையர் மலர்ப் பதத்தை
போதுற்ற எப்போதும் புகலும் நெஞ்சே? இந்தப் பூதலத்தில்
தீதுற்ற செல்வமென்? தேடிப் புதைத்த திரவியம் என்?
காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே

பெரிய பணக்காரரான நீவீர் இப்படி திடீரென்று வீட்டை விட்டுப் போனால் ரோட்டில் எப்படி வாழ முடியும்?

உடை கோவணம் உண்டு, உறங்கப் புறத் திண்ணை உண்டு உணவு இங்கு
அடை காய் இலை உண்டு, அருந்தத் தண்ணீர் உண்டு, அருந் துணைக்கே
விடை ஏறும் ஈசர் திரு நாமம் உண்டு இந்த மேதினியில்
வட கோடு உயர்ந்தென்ன, தென் கோடு சாய்ந்தென்ன வான் பிறைக்கே?

அப்படியானால் உங்கள் வீடு?

வீடு நமக்குத் திரு ஆலங்காடு, விமலர் தந்த
ஓடு நமக்கு உண்டு வற்றாத பாத்திரம்

உமது தமக்கை உமக்கு விஷ அப்பம் கொடுத்தவுடன் அதை எறிந்தவுடன் வீடே எரிந்து போயிற்றாமே?

தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்

அட, இந்த சொற்களே வீட்டை எரித்து விட்டதா? ஆதி சங்கரர் போலவே நீரும் அம்மா இறந்தவுடன் 10 பாடல்
பாடியே சிதைக்கு தீ மூட்டினீரா?

முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே

இது ஒரு அற்புதமே!! என்ன என்ன பிழைகளுக்கு இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்?
கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்து உருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நின் அஞ் செழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொருத்து அருள்வாய் கச்சி ஏகம்பனே.

அலை பாயும் மனதைக் கட்டுப் படுத்த ஒரு வழி சொல்லுங்களேன்?

ஒன்று என்று இரு; தெய்வம் உண்டு என்று இரு
உயர் செல்வம் எல்லாம் அன்று என்று இரு; பசித்தோர் முகம் பார்
நல் அறமும் நட்பும் நன்று என்று இரு; நடு நீங்காமலே நமக்கு இட்ட படி
என்றுன்றிரு; மனமே உனக்கு உபதேசம் இதே!

சிறுத்தொண்டர், திருநீலகண்ட நாயனார், கண்ணப்பர் போன்று தியாகங்களைச் செய்ய முடியுமா?
வாளால் மகவு அரிந்து ஊட்ட வல்லேன் அல்லன்; மாது சொன்ன
சூளால் இளமை துறக்க வல்லேன் அல்லன்; தொண்டு செய்து
நாள் ஆறில் கண் இடத்து அப்ப வல்லேன் அல்லன்; நான் இனிச் சென்று
ஆள் ஆவது எப்படியோ திருக் காளத்தி அப்பனுக்கே.

கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவார் பற்றி உங்கள் கருத்து என்னவோ?

ஆரூரர் இங்கு இருக்க அவ்வூர் திருநாள் என்று ஊர்கள் தோறும்
உழலுவீர்;--நேரே உளக் குறிப்பை நாடாத ஊமர்காள்! நீவீர்
விளக்கு இருக்க தீ தேடுவீர்

விளக்கு இருக்கும்போது தீயைத் தேடுவார்கள்- அருமையான பழமொழி. அது சரி, அபு என்பவன் தேவதூதனைப் பார்த்து தன் பெயரை மக்களை நேசிப்பவர் பட்டியலில் எழுதச் சொன்னான். உங்கள் வரிகளைப் பார்த்துதான் Abu Ben Adam கவிதை வந்ததோ?
தமர் பெயர் எழுதிய வரி நெடும் புத்தகத்து
என்னையும் எழுத வேண்டுவன் (கோயில் நான் மணி மாலை)

நியமம், நிஷ்டை இவைகள் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

நேமங்கள் நிட்டைகள் வேதங்கள் ஆகம நீதி நெறி
ஓமங்கள் தர்ப்பணம் சந்தி செப மந்திர யோக நிலை
நாமங்கள் சந்தனம் வெண்ணீறு பூசி நலமுடனே
சாமங்கள் தோறும் இவர் செய்யும் பூசைகள் சர்ப்பனையே

சிவவாக்கியர் “நட்ட கால்லைச் சுற்றி நாலு புஷ்பம் போடாதே”
என்கிறாரே. நீங்கள் அவர் சொல்வதை ஆதரிக்கிறீர்களா?

உளியிட்ட கல்லையும் ஒப்பற்ற சாந்தையும் ஊத்தை அறப்
புளியிட்ட செம்பையும் போற்றுகிலேன்

உங்கள் பாடல்களில் பெண்ணாசையை நிறைய கண்டிக்கிறீர்களே.

ஆசாரம் இல்லா அசடருடன் கூடிப்
பாசாங்கு பேசிப் பதி இழந்து கெட்டேனே
குரு மார்க்கம் இல்லா குருடருடன் கூடிக்
கரு மார்க்கத்துள்ளே கருத்தழிந்து கெட்டேனே
ஆலம் அருந்தும் அரன் பெருமை எண்ணாமல்
பாலர் பெண்டிர் மெய் என்று பதி இழந்து கெட்டேனே

நன்றி. உமது பாடல்கள் எல்லாவற்றையும் படிக்க எனக்கு ஆசை.
 
Status
Not open for further replies.
Back
Top