• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

திருப்பதி செல்வோர் அவசியம் தரிசனம் செய்ய வேண்டிய திருத்தலம்

பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் லிங்கமாக காட்சியளிக்கும் சிவன் கோயில் அற்புதங்கள்!

பசுமை போர்த்திய மலைத்தொடரையொட்டி, கண்ணுக்கு எட்டிய தொலைவு பரந்துவிரிந்த வயல்வெளிகளுக்கு மத்தியில் அமைந்திருக்கிறது `குடிமல்லம்' என்னும் சிற்றூர். ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரயில் நிலையத்திலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவிலும், காளஹஸ்தியிலிருந்து சுமார் 35 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது குடிமல்லம். இந்தக் கிராமத்தில் சுவர்ணமுகி ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது அருள்மிகு பரசுராமேஸ்வரர் ஆலயம். இந்தக் கோயிலில் காணப்படும் சிவலிங்க வடிவம்தான் இந்தியாவின் மிகப் பழைமையான லிங்கம் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து. இந்த லிங்கம் கி.மு.2 அல்லது 3-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என்று தொல்லியல் துறையினர் மதிப்பிட்டிருக்கிறார்கள்.தொன்மைச் சிறப்பு மிக்க இந்தத் தலத்தில் சிவபெருமான் மும்மூர்த்திகளும் இணைந்த லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். லிங்கத்தின் அடிப்பாகத்தில் சித்திரசேனன் எனும் யட்சன் காணப்படுகிறான். இவனுக்கு `பிரம்மயட்சன்' என்று பெயர். அவனுக்கு மேலே ஒரு கையில் பரசு மற்றும் மற்றொரு கையில் வேட்டையாடப்பட்டுத் தொங்கும் ஆட்டுக் கிடாவுடன் நின்றுகொண்டிருக்கிறார் சிவபெருமான். கையில் பரசு இருப்பதால் இவர் பரசுராமர் என்றும் அழைக்கப்படுகிறார். நின்ற உருவத்துக்கு மேலே சிவலிங்கத்தின் உருண்டையான ருத்ரபாகம் காணப்படுகிறது. பிரம்மன் யட்ச ரூபத்திலும், விஷ்ணு பரசுராம அவதார வடிவத்திலும், சிவபெருமான் லிங்க வடிவத்திலும் என்று மும்மூர்த்திகளும் ஒருசேர எழுந்தருளி அருள்புரிவது இங்கு மட்டுமே என்று சொல்லப்படுகிறது. பொதுவாக லிங்கத்துக்கு அடியில் ஆவுடையார் அமைந்திருக்கும். ஆனால், இங்கு மட்டும் சதுர வடிவிலான `அர்க்க பீடம்’ அமைந்திருக்கிறது. இந்தக் கோயிலின் மற்றொரு விசேஷம் இதன் கருவறையும் அரை வட்டமாகக் காட்சியளிக்கிறது. அதனால் இது `லிங்க கீர்த்தி விமானம்’ என்று அழைக்கப்படுகிறது.

வேதங்களில் கூறப்படும் உருத்திரன் எனும் வேடனின் வடிவத்தில் சிவபெருமான் அருள்புரிவாதல் `வைதிகலிங்கம்’ என்று இந்தத் தலத்தில் உள்ள சிவபெருமான் வணங்கப்படுகிறார். இந்தத் தலத்தில் எங்கும் கூறப்படாத புராணக் கதை ஒன்றும் வழங்கப்படுகிறது...தந்தையின் கட்டளைப்படி, பரசுராமர் தனது தாயைக் கொன்ற பாவம் தீர இந்தத் தலத்துக்கு வந்து தவமிருந்து சிவபெருமானை வழிபட்டார். அங்குக் காணப்பட்ட அதிசயச் செடியில் தினமும் ஒரு பூ மட்டும்தான் மலரும். பரசுராமர் தினமும் அருகில் பாய்ந்தோடும் சுவர்ணமுகி ஆற்றில் நீராடி அந்த மலரைப் பறித்துக் கொண்டுவந்துதான் சிவபெருமானை வழிபடுவார். அந்த ஒற்றை மலருக்குக் காவலாக சித்திரசேனன் எனும் காவலனையும் நியமித்தார் பரசுராமர். இந்த சித்திரசேனன் சிவபெருமானின் அதிதீவிர பக்தன். ஒருநாள் பரசுராமர் வேட்டைக்குச் சென்றுவிட செடியில் பூ மலர்ந்தது. குறிப்பிட்ட நேரத்துக்குப் பரசுராமர் திரும்பி வராததால் சித்திரசேனன் அந்த மலரைப் பறித்து சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டுவிட்டான். திரும்பி வந்ததும், மலர் பறிக்கப்பட்டிருப்பதைப் பார்த்த பரசுராமருக்குக் கடும் கோபம் வந்தது. உடனே சித்திரசேனனைத் தாக்கினார். இதனால் இருவருக்கும் இடையே போர் ஏற்பட்டது. வெற்றி, தோல்வி இல்லாமல் பல ஆண்டுகள் இது நடைபெற்றது. கடைசியாகச் சிவபெருமான் தோன்றி இருவரையும் சமாதானப்படுத்தி தன்னுள் ஐக்கியமாக்கிக்கொண்டார். அதனால்தான் இந்தத் தலத்தில் சித்திரசேனன், பரசுராமன், லிங்கம் என்று சிவபெருமான் பரசுராமேசுவரராக அருள்புரிகிறார்.

இந்த திருக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆறு அடி பள்ளத்தில் கருவறை அமைக்கப்பட்டிருக்கிறது. அர்த்த மண்டபம், மகா மண்டபம் என்ற அமைப்புகளுடன் கோயில் எளிமையாகக் காணப்படுகிறது. பல்லவர்கள் காலத்தில் இந்தக் கோயில் கற்றளியாக மாற்றப்பட்டிருக்கிறது. அதற்கு ஆதாரமாகக் கோயில் கருவறை தூங்கானை வடிவத்தில் (கஜ பிருஷ்டம்) அமைக்கப்பட்டிருக்கிறது. கருவறையைச் சுற்றியிருக்கும் தேவ கோஷ்டங்களில் வரிசையாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா மற்றும் வைஷ்ணவி தேவி ஆகியோரின் சிலைகளும் காணப்படுகின்றன. இந்தக் கோயிலில் அம்மன், ஆனந்தவல்லி என்று அழைக்கப்படுகிறார். தனிச் சந்நிதியில் கிழக்குப் பார்த்து அருள்பாலிக்கிறாள். தனது கரங்களில் அங்குசம், பாசம் தாங்கியும், அபயம், வரத முத்திரைகளுடன் கருணை பெருகும் முகப் பொலிவுடன் அருள் பாலிக்கிறாள். பேரழகு வாய்ந்தவள் இவள். நாள் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கலாம். இவை தவிர்த்துச் திருச்சுற்றில் தனிச்சந்நிதிகளில் வள்ளி மற்றும் தெய்வானையுடன் முருகப் பெருமானும், சூரிய பகவானும் அருள்புரிகிறார்கள்.

இந்தத் தலத்தில் பரசுராமேசுவரர் வழக்கத்துக்கு மாறாக ஆறு அடி பள்ளத்தில் நின்று அருள்புரிகிறார். அதனால்தான் இந்தக் கிராமத்துக்கு `குடிபள்ளம்' என்று பெயர் வந்தது. நாளடைவில் குடிபள்ளம் என்ற பெயர் மருவி `குடிமல்லம்’ என்று ஆகிவிட்டது. தற்போது குடிமல்லம் என்று அழைக்கப்பட்டாலும் கல்வெட்டுகளில் இந்த ஊர் திருவிப்பிரம்பேடு என்றும் பேரம்பேடு என்றும் அழைக்கப்படுகிறது. கல்வெட்டுகளில் இறைவனாரின் பெயர் பரசுராமேசுவரமுடைய நாயனார் என்றும் பரசுராம மகாதேவர் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்.கோயில் இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பல்லவ மன்னர்கள், பாண அரசர்கள், சோழ அரசர்கள் ஆகியோர் இந்தக் கோயிலைப் போற்றி வழிபட்டதற்கான 20 - க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கோயிலில் கிடைத்த சில பழைமையான செங்கற்களைக் கொண்டு இந்தக் கோயில் சாதவாகனர் காலத்தில் செங்கல் தளியாகக் கட்டப்பட்டிருக்கலாம். சாதவாகனர்கள் காலத்தில் செங்கல் தளியாகக் கட்டப்பட்ட இந்தக் கோயில் பல்லவர்கள் காலத்தில் கற்றளியாக மாற்றப்பட்டு, பிற்காலச் சோழர்களின் காலத்தில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கோயிலில் மற்றொரு விசேஷமாக அறுபது ஆண்டுகளுக்கு ஒருமுறை கருவறையில் நீர் ஊறி சிவலிங்கம் நீர்மயமாக மாறிவிடுகிறது. 2005 - ம் ஆண்டு இதுமாதிரி நடந்துள்ளது. அடுத்து 2065 - ம் ஆண்டு இதே மாதிரியான அதிசயம் நிகழும் என்று பக்தர்கள் கூறுகிறார்கள். சிவபெருமான் மும்மூர்த்திகளின் அவதாரமாக அருள்புரிவதால் இந்தத் தலம் `குழந்தைப் பேறு’ வழங்கும் சந்தான பிராப்தித் தலமாகப் போற்றப்படுகிறது. இதற்குச் சாட்சியாகப் பல்வேறு தாய்மார்கள் கோயிலில் உள்ள நெல்லி மரத்தில் சிறிய தொட்டில் கட்டிச் செல்கிறார்கள்.

மும்மூர்த்திகளின் வடிவமாக அருள்புரியும் சிவபெருமானின் பேரருள் பெறுவோம்
 

Latest ads

Back
Top