• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தத்தாத்ரேயர் ஜெயந்தி

தத்தாத்ரேயர் ஜெயந்தி

இன்று தத்தாத்ரேயர் ஜெயந்தி!


ஞானகுரு தத்தாத்ரேயருக்கு 24 குருமார்கள்! எப்படி? - தத்தாத்ரேயர் வரலாறு


நித்ய சஞ்சீவிகளில் ஸ்ரீ தத்தாத்ரேயரும் ஒருவர். பூவுலகில் சகல உயிர்களும் ஞானத்தோடு வாழவேண்டும் என்று எண்ணிய மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்து குருவாக உருவம் பெற்று வந்த அவதாரமே ஸ்ரீ தத்தாத்ரேயர்.


தத்தாத்ரேயர்
அத்ரி முனிவருக்கும், அனுசுயா தேவிக்கும் மகனாக அவதரித்தவர் தத்தாத்ரேயர். மார்கழி மாதம் பெளர்ணமி நாளில், மிருகசீரிட நட்சத்திரத்தில் சிவா, விஷ்ணு, பிரம்மா வடிவம் இணைந்தே இவர் தோன்றினார். இவர் அவதரித்த ஸ்தலம் சுசீந்திரம்.


தாணுமாலயனின் வடிவமே தத்தாத்ரேயர் அம்சம்தான் என்றும் சொல்லப்படுகிறது. பிறந்தது முதலே ஞானவடிவாக விளங்கிய தத்தாத்ரேயர் வேத உபன்யாச ஞானியர்களுக்கு ஸத்குருவாகவும், பிரம்ம யோகியர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்து வந்தார். பரசுராமனால் அழிக்கப்பட்ட கார்த்தவீரியார்ஜுனன் இவரது சீடரே.


காணாமல் அல்லது திருடு போன பொருட்கள் மீண்டும் கிடைக்க இன்றும் கார்த்த வீரியார்ஜுன மந்திரம் என்ற மந்திரத்தை ஜெபிப்பதை கண்டு இருப்பீர்கள். இந்த மந்திரத்தின் பிதாமகர் ஸ்ரீ தத்தாத்ரேயரே. பரசுராமருக்கு இவரே குருவாக இருந்து ஸ்ரீவித்யா உபாசனை உள்ளிட்ட மந்திரங்களைச் சொல்லி தந்தவர்


மனம் போன போக்கில் எந்த வெளிப்புற அடையாளங்களும் இன்றி தூய மனத்தினராய் நிஜமான துறவியாக இருந்தவர் இவர். அவதாரங்களில் 'சிறந்த அவதாரம்' என்று வியாசரால் வணங்கப்பட்டவர். இவரது 'தத்தாத்ரேயர் சாந்தி மந்திரம்' மனஅமைதி உண்டாக, திருஷ்டி, தீவினைகள் விலக ஜெபிக்கப்பட்டு வருகிறது.


ஞானகுருவுக்கெல்லாம் குருவாக விளங்கிய இவருக்கே 24 குருமார்கள் இருந்ததாக இவர் கூறிக்கொண்டதே வியப்பான ஒரு சம்பவம். தங்களது மகிழ்ச்சிக்கு என்ன காரணம் என்று கேட்ட யது மன்னனிடம் விளக்கம் கூறிய தத்தாத்ரேயர் எல்லாவற்றிலும் இருந்து தான் பாடம் கற்றுக்கொள்வதாகவும் அந்த வகையில் அஞ்ஞானம் அழிந்து மகிழ்ச்சி உண்டாவதாகவும் தெரிவித்தார்.


குறிப்பாக 24 குருமார்களிடம் தான் கற்ற பாடமே சிறந்தது என்றார். முதல் குருவான பூமியிடம் பொறுமையைக் கற்றதாகத் தெரிவித்தார். பின்னர் எந்த பேதமும் இன்றி எல்லோரையும் எதிர்கொள்ளும் பக்குவத்தைக் காற்றிடம் கற்றேன் என்று காற்றை இரண்டாவது குருவாகவும் சொன்னார்.


பிரம்மத்தோடு ஆன்மாவுக்கு உள்ள ஒற்றுமையைச் சொல்வதால் ஆகாயம் மூன்றாவது குரு என்றும், எதையும் தூய்மையாக்கும் நீர் நான்காவது குரு என்றும் உரைத்தார். அழுக்கே ஆகாத நெருப்பு ஐந்தாவது குரு, நிலையாமையை உணர்த்தும் சந்திரனே ஆறாவது குரு, எல்லா நன்மைகளையும் அளிக்கும் சூரியன் ஏழாவது குரு என்றும் தெரிவித்தார். எல்லையற்ற ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்பதைக் காட்டிய புறாவே எட்டாவது குரு என்றும், கிடைப்பதைக் கொண்டு பிழைக்கும் மலைப்பாம்பு ஒன்பதாவது குரு என்றும், எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் கடலே பத்தாவது குரு என்றும் அறிவித்தார்.


காணும் யாவிலும் ஒரு பாடம் இருப்பதைச் சொன்ன ஸ்ரீ தத்தாத்ரேயர் பதினோராவது குருவாக சபலத்தில் சிக்கி வீழ்ந்த விட்டில் பூச்சியையும், பன்னிரெண்டாவது குருவாக தேனை சேகரித்துச் செத்து மடியும் தேனீயையும், பதிமூன்றாவது குருவாக மோகத்தால் குழியில் சிக்கி கொண்ட யானையையும் ஏற்றதாக சொன்னார். தேனீயின் உழைப்பைச் சுரண்டி வாழ்ந்த வேடன் ஒருவனே பதினான்காவது குரு என்றும், மருண்டு போய் மாட்டிக்கொண்ட மான் ஒன்று பதினைந்தாவது குரு என்றும், தூண்டில் புழுவுக்காக மாட்டிக்கொண்ட மீனே பதினாறாவது குரு என்றும் சொன்னார்.


சிற்றின்பம் எதிலும் சிக்கிக்கொள்ளாமல் பற்றில்லாத வாழ்க்கையை மேற்கொண்டால் மகிழ்ச்சியாக எப்போதும் இருக்கலாம் என்று சொன்ன இவர், மேலும் மனிதர்களை வெறுத்து பரமனிடம் சரண் புகுந்த ஒரு தாசியே பதினேழாவது குரு என்றும், அதிக அளவு உணவுக்கு ஆசைப்பட்ட 'குர்ர' பறவை பதினெட்டாவது குரு என்றும், சூது, மாயம் எதுவும் அறியாத குழந்தைகளே பத்தொன்பதாவது குரு என்றும் சொன்னார்.


நெல் குத்தும் பெண் ஒருத்தியின் அமைதியால், அவளே தனது இருபதாவது குரு என்றும், ஒரே குறிக்கோளை கொண்ட அரசனே தனது இருபத்தி ஒன்றாவது குரு என்றும், எதையுமே சேர்த்து வைத்துக்கொள்ளாத பாம்பே தனது இருபத்தி இரண்டாவது குரு என்றும் சொன்னார்.


நல்ல மாணவன் எங்கிருந்தும், எவரிடம் இருந்து பாடங்களை கற்றுக்கொள்ளலாம் என்று யது மன்னருக்கு உணர வைத்த ஸ்ரீதத்தாத்ரேயர் மேலும் ஈஸ்வர தத்துவத்தை உணர்த்திய ஒரு சிலந்தி தனது இருபத்தி மூன்றாவது குரு என்றும், ஒரே சிந்தனையால் புழுவானது குளவியாகிறது. அதனால் அதுவே சிந்திப்பதைப் போதித்து கொடுத்து தனக்கு இருபத்தி நான்காவது குருவானது என்றும் தெரிவித்தார்.


இந்த 24 குருமார்கள் மட்டுமல்ல, காணும் ஒவ்வொரு ஜீவனிலும் கற்றுக்கொள்ள எத்தனையோ பாடங்கள் இருக்கின்றன என்பதையே இந்த ஞானக்கடவுளின் போதனையில் கற்றுக்கொள்கிறோம். அகந்தை அற்ற மனது எதையும் எங்கேயும் கற்று தெளிந்து நல்ல வாழ்வை மேற்கொள்ளும் என்பதையே ஸ்ரீ தத்தாத்ரேயரின் இந்த குருக்கள் பற்றிய போதனை தெரிவிக்கிறது. எனவே நல்லதை எங்கும் கற்று நலம் பெறுவோம்.


'ஓம் தத்தாத்ரேயாய வித்மஹே
யோகீஸ்வராய தீமஹி
தன்னோ தத்த ப்ரசோதயாத்'
 

Latest ads

Back
Top