• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

குருவே சரணம்..

OM SRI GURUBHYO NAMAH

கேட்டுப் படித்துக் கிட்டியதைக் கொண்டே புதியதோர் அமைப்பு செய்ய இயலும் என்பர்.

ஆம்! பெரியவா எனும் கருணா சமுத்திரத்தை பற்பல மஹானுபாவர்கள் நாம் உணரத் தகுந்தவகையிலே ஸ்மரணை செய்ய எழுதாத எழுத்தா என்ன...?!!

அப்படியானதொரு நந்தவனத்தினூடே நடக்கையிலே ஆங்காங்கே சிதறிக் கிடந்த பூக்களைக் கொண்டு மாலை தொடுத்து இஷ்ட தேவதைக்குச் சாற்றி மகிழ்வதாகவே ஒவ்வொரு தினமும் அடியேனின் மனம் கருதும். ஒவ்வொரு நாளும் சின்னதையே திரும்பச் சொன்னாலும், சொல்ல விழும் வார்த்தைகள் ஐயன் அருள்வதல்லவோ... எனவே தானோ பலருக்கு அது புதிய புதிய சுகந்தனை தந்துவருகிறது போலும்!

1570327569089.png


குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை.

பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம்.

நமஸ்காரங்களுடன்
வெங்கி அடியேன்

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
Last edited:
OM SRI GURUBHYO NAMAH

Experiences with Maha Periyava: A Little Girl offered Water to MahaSwamigal!

Many years ago, Sri Maha Periyava was on His way to have darshan of Sri Nandeeswarar at Parangimalai, St Thomas Mount in Madras. Enroute He had darshan of Trisulanathar and Tripurasundari and then rested for a while under a fig tree (as He always walked, whatever be the distance).

He felt thirsty and so called out for one of His shishyas. But, since they were resting at a distance, no one heard it. Then, there appeared a Little Girl with water in a 'sombu' (a small vessel) and offered it to Him. He drank it and when He wanted to return the sombu, She was not be seen around any where. He asked every one, but no one had even seen Her.

Then He sat in meditation for a while and realised that the Girl was none other than Ambal herself. He called the village head and other people and told them to dig the place where He sat.They found the vigraha (idol) of Balambika and Chandikeshwari there!

He told them to install the vigrahas and thus came about the present day Sri Vidya Raja Rajeswari temple at Nehru Nagar, Pazhavanthangal, Nanganallur, Chennai!

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP

HARA HARA SANKARA JAYA JAYA SANKAR
 
OM SRI GURUBHYO NAMAH

"என்ன பாண்டுரங்க தரிசனம் ஸ்பெஷலா ஆச்சா?"

(மகாபெரியவா சிரிச்சுண்டே கேட்க அப்போதான் அந்த பக்தருக்கு மகாபெரியவாளோட லீலைதான் அதுன்னு புரிஞ்சுது.)

(நடமாடும் தெய்வத்தோட திருவிளையாடல்)

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

நன்றி-குமுதம் பக்தி(ஓரு பகுதி)

1982-அல்லது 1983- சதாரா மஹாகாவ்ல முகாம்.

ஒரு நாள் அங்கே மகாபெரியவாளை தரிசிக்க வந்திருந்த பக்தர்கள் வரிசையில் நின்னுண்டு இருந்தது ஒரு குடும்பம். அவாளோட முகத்தைப் பார்த்தாலே அந்த ஊர்க்காரா இல்லைங்கறது அப்பட்டமா தெரிஞ்சுது. எல்லாரும் அமைதியா வரிசையில நின்னுண்டு இருக்கறச்சே, அந்தக் குடும்பத் தலைவரோட முகத்துல லேசான படபடப்பும்,சீக்கிரமா மகாபெரியவாளை தரிசிச்சுட்டு புறப்பட்டா தேவலைங்கற மாதிரியான ஒரு அவசரமும் தெரிஞ்சுது

வரிசையில அந்த ஊர் சுத்துவட்டாரத்துல இருந்தவா, வேறவேற ஊர்கள்ல இருந்து வந்தவாள்னு பலரும் கலந்து இருந்ததால், ஒருத்தருக்கு ஒருத்தர் அறிமுகம் இல்லாதவாளாகவே இருந்தா. அதனால, மத்தவாளைப் பத்தி யோசிக்காம அவா அவாகூட வந்தவாளோட மட்டும் பேசிண்டும்,ஹரஹர சங்கரன்னு சொல்லிண்டும் இருந்தா.

கூட்டம் நகர்ந்து நகர்ந்து அந்த பக்தர் குடும்பம் மகாபெரியவாளை தரிசிக்கற முறை வந்தது.

மகாபெரியவாளை சாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணினார், அந்தக் குடும்பத் தலைவர்.

"பெரியவா..! அப்படின்னு ஏதோ சொல்ல வாயைத் திறந்தவர் என்ன நினைச்சாரோ, எதுவும் பேசாம பிரசாதத்துக்கு கையை நீட்டினார்.

"ஏதோ சொல்லவந்தியே என்ன?" கேட்டார் பரமாசார்யா.

"ஓண்ணுமில்லை பெரியவா!"..இப்பவும் தயங்கினார் அவர்.

"ஏதுவுமில்லைன்னு சொல்றே,ஆனா ஒன்னோட முகத்துல ஏதோ ஒரு குறை தெரியறதே.யாரையோ பார்க்கணும்னு நினைச்சு பார்க்க முடியாதோன்னு ஏமாத்தம் வந்துட்ட மாதிரி தோண்றதே!"

மகாபெரியவா கேட்டதும், அதுக்குமேலே உண்மையை மறைக்க முடியாம விஷயத்தை சொல்ல ஆரம்பிச்சார் அவர்.

"பெரியவா நாங்க சென்னைலேர்ந்து வந்திருக்கோம்.இங்கே சுத்துவட்டாரத்துல இருக்கற க்ஷேத்ரத்துக்கெல்லாம் போகறதா ப்ளான். எங்க திட்டப்படி அடுத்ததா, பண்டரிபுரம்போய் பாண்டுரங்கனை தரிசிக்கலாம்னு இருந்தோம். ஆனா இங்கேயே இவ்வளவு நேரம் ஆயிடுத்து. எனக்கு லீவு நாளன்னைக்கு வரைக்கும் தான் இருக்கு. அதனால அங்கே போறதுக்கு சாத்தியப்படாதுன்னு தோணித்து. அதான்...!"

"ஓ .என்னை தரிசிக்க வந்து தாமதமானாதால அங்கே போகமுடியாமப் போயிடுத்துன்னு கொறைப்பட்டுக்கறயா?"

ஆசார்யா கேட்க அதிர்ந்து போனார் அந்த பக்தர்.

"மன்னிக்கணும் பெரியவா...நான் அப்படியெல்லாம் நினைக்கலை. உங்களை தரிசனம் பண்ணினது சாட்சாத் மகேஸ்வரனயே பார்த்ததுக்கு சமம். பண்டரிநாதரைப் பார்க்க நேரம் இல்லைங்கறது ஏக்கம் அவ்வளவுதான்!" என்றார்.

"நீ ஒண்ணு பண்ணு. நாளைக்குக் கார்த்தால சீக்கிரமா பண்டரிபுரத்துக்குப் போ. ஒம் மனசுபோல தரிசனம் கிடைக்கும். பண்டரிநாதரைப் பார்த்துட்டே ஊருக்குப் பொறப்படு. எல்லாம் சரியா இருக்கும். என்ன புரியறதா?" சொன்ன மகாபெரியவா கல்கண்டு,குங்கும பிரசாதம் குடுத்து அவரை ஆசிர்வதிச்சு அனுப்பினார்.

மகாபெரியவாளே உத்தரவு தந்துட்டார்ங்கற சந்தோஷத்தோட மறுநாள் கார்த்தால பண்டரிபுரத்துக்குப் போன அந்த பக்தருக்கு அங்கே இருந்த கூட்டத்தைப் பார்த்ததும் ஒரே அதிர்ச்சி. கிட்டத்தட்ட ரெண்டு கிலோமீட்டருக்கு பக்தர்கள் க்யூ,அவ்வளவு கார்த்தாலேயே நின்னுண்டு இருந்தது

'போச்சு' இந்த வரிசையில போய் பாண்டுரங்கனைப் பார்க்கணும்னா குறைஞ்சது நாலைஞ்சு மணி நேரமாவது ஆகிடும். அதுக்கப்புறம் இன்னிக்கு எங்கே புறப்படறது? இப்படியெல்லாம் மனசுக்குள் எண்ணம் ஓட ஆரம்பிச்சுது அந்த பக்தருக்கு, இருந்தாலும் மகாபெரியவா சொல்லி இருக்கார். அதனால என்னதான் ஆகறதுன்னு பார்க்கலாம்!' அப்படின்னு நினைச்சு வரிசையில் போய் நின்னுண்டார்.

ஒரு பத்து நிமிஷம் வரிசை நகர்ந்திருக்கும். அதுக்குள்ளே பலப்பல எண்ணங்கள் அந்த பக்தரோட மனசுக்குள்ளே..அந்த சமயத்துல கோயில் பண்டா ஒருத்தர் அந்த பக்கமா வந்தார். அந்த பக்தரையும் அவர் குடும்பத்தையும் ஒருதரம் ஏற இறங்கப் பார்த்தார்..

"விட்டோபா தர்ஷன் ஜல்தி ஜானாக்யா" (விட்டோபாவை சீக்கிரம் தரிசனம் பண்ணணுமா?) அப்படின்னு இந்தியிலே கேட்டார்.

அவர் கேட்டதோட அர்த்தம் புரியாம இவர் விழிக்க,ஜாடையா கேட்டிருக்கார் அந்த பாண்டா. ஏதோ புரிஞ்சவரா அந்த பக்தர், "ஆமாம்!"ங்கற மாதிரி தலையை ஆட்டினார்.

அடுத்த நிமிஷம் நடந்ததுதான் ஆச்சரியம். கூட்டத்துல இருந்து நகர்ந்து வேற ஒரு வழியா தன்கூட வரச்சொல்லி அந்த பக்தரையும் அவர் குடும்பத்தையும் கூட்டிண்டு போனார் அந்தப் பாண்டா.

விவரம் எதுவுமே புரியாம அவர் பின்னால நடந்த அந்த பக்தர்,அடுத்த அஞ்சாவது நிமிஷம் பாண்டுரங்கர் சன்னதி முன்னால நின்னார்.

பாண்டுரங்கனோட பரம பவித்ரமான தரிசனத்தை கண்குளிரப் பார்த்த பக்தர், இது எப்படி இந்த அதிசயம் நடந்துதுன்னு புரியாம திகைத்தார். பக்தர் கூட்டம் வேகமா நகர்ந்துண்டே இருக்கும்படி அங்கே இருந்த சிலர் சொல்லிண்டு இருக்க, இவாளை மட்டும் யாரும் எதுவும் சொல்லலை.

பத்து நிமிஷத்துக்கும் மேலா ஆனந்தமா தரிசனம் பண்ணினார். தன்னை அதுவரைக்கும் உள்ளே கூட்டிண்டு வந்த பண்டாவுக்கு நன்றி சொல்லிட்டு வெளியே வந்தார்.

ஊருக்குத் திரும்பற வரைக்கும் யோசிச்சும், அந்த பாண்டா எப்படி,யார் சொல்லி வந்து தன் குடும்பத்தை மட்டும் அழைச்சுண்டுபோய் ஸ்பெஷல் தரிசனம் செய்து வைச்சார்ங்கறது அந்தப் பக்தருக்கு புரியவே இல்லை.

மகாபெரியவா ஸ்ரீமடத்துக்குத் திரும்பின அப்புறம், ஒருநாள் அவரை தரிசிக்க வந்த அந்த பக்தர்கிட்டே ,"என்ன பாண்டுரங்க தரிசனம் ஸ்பெஷலா ஆச்சா?" அப்படின்னு மகாபெரியவா சிரிச்சுண்டே கேட்க அப்போதான் அந்த பக்தருக்கு மகாபெரியவாளோட லீலைதான் அதுன்னு புரிஞ்சுது.

கண்ணுல ஜலம் பெருக்கெடுக்க,"ஓங்க ஆசிர்வாதத்துல நல்லபடியா நடந்தது பெரியவா" தழுதழுக்கச் சொன்ன பக்தர், பிரசாதம் வாங்கிண்டு நகர்ந்தார்.

அப்புறம்,மஹாகாவ்ல மகாபெரியவா நடத்தின லீலையை இங்கே உள்ளவாகிட்டே அவர் சொல்ல, நடமாடும் தெய்வத்தோட அந்த திருவிளையாடலை நினைச்சு சிலிர்த்துப்போனா எல்லாரும்.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP

HARA HARA SANKARA JAYA JAYA SANKAR
 
OM SRI GURUBHYO NAMAH


சாப்பாடு (போஜனம்) பத்தி காஞ்சி பெரியவர் - அருமையான விளக்கம். இத படிங்க மொதல்ல


கல்யாணம், மத்த விசேஷம், சாதாரணமாக வீடுகளில் போஜனம் எப்படி சாப்பிடுறோம்?'' என்று பெரியவா கேட்டார்.

வாழை இலைலே எல்லா அயிட்டம் வச்சதும் போஜனம் சாப்பிடறோம் ''

அது சரி எல்லாரும் போஜனம் பண்றச்சே எதை எதை எந்த ஆர்டர்ல எடுத்துக்குவேள்"

''ஓ அதை கேக்கறேளா பெரியவா. மொதல்ல சாம்பார், அடுத்தது ரசம், அப்புறம் பாயசம்,
பட்சணம்,கடைசியா மோர்" அங்கே இருந்த பலர் சேர்ந்து சொன்னா.

"ஏன் இப்படி ஒரு ஆர்டர் வைச்சிருக்கா தெரியுமோ?" மகாபெரியவா இப்படி ஒரு கேள்வி கேட்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. மௌனமாக இருந்தார்கள். தெரியும் அவரே பதில் சொல்வார் என்று.

இலையை போட்டவுடனே வாழ்க்கை பசுமையாஇருக்கேன்னு அதுல மயங்கிடாதேன்னு தண்ணியதெளிக்கிறா அப்பறம் பாயசம் அதுக்கு எதிரில பச்சடி எதுக்கு வைக்கிறா தெரியுமா பாயசத்தால பிறந்தஸ்ரீ ராமனையும் தயிர்வெண்ணைப்பிரியனான ஸ்ரீகிருஷ்ணனையும் சாப்பிடும்போது நிணைக்கனும் என்பதற்காகத்தான்

"மொதல்ல குழம்பு.இதுல, 'தான்' இருக்கு. தான் என்பது வெண்டக்கா, சுண்டக்கா, பூசணி, பரங்கி, கத்திரி, முருங்கைக்கா ஏதோ ஏதோ இருக்குமே அது தான் '' தான் '' என்பது இல்லையா. நாம எல்லாம் பொறந்து வெவரம் தெரிஞ்சதுமே ''தான் '' என்கிற அகங்காரம் மனசுல வந்துடறது. அதனால் நாம ''குழம்பி'' ப் போயிடறோம்.அந்தத் ''தானை'' கொஞ்சமா தீர்த்துட்டு, அடுத்த கட்டத்துக்குப் போறோம்.

அப்போ ''தான்'' இல்லாததால் ஒரு தெளிவு வந்துடறது இல்லையா. அதாவது ''ரச'' மான மன நிலை.அதுதான் ரசம். ''தான்'' இல்லாம தெளிவா இருக்கற மனசுல ''ரச'' மான எண்ணம் வருது.

அது வந்ததும் எல்லாமே இனிப்பா பாயசமாகவும், பட்சணமாகவும் ஆயிடறது..

கடோசியா மோர். மோர் என்கிறது என்ன எப்படி கிடைக்கிறது?

பால்லேர்ந்து தயிர் கிடைக்கறது. அதுலேர்ந்து வெண்ணெய் எடுக்கறா. அதைக் காய்ச்சி நெய்வர்றது. இதெல்லாம் எடுத்தப்புறம் மிஞ்சி இருக்கிறது மோர். அதாவது மோர்லேர்ந்து எதையும் பிரிச்சு எடுக்க முடியாது.

அதாவது மோருக்கு அடுத்த பிறவி இல்லை.

இந்த போஜன ஸம்ப்ரதாயத்திலிருந்து என்ன புரியறது?

நாமளும் அகங்காரத்தைவிட்டு மனசு தெளிஞ்சு ரசமா வாழ்க்கையை அனுபவிச்சு,யாருக்கும் எந்த உபத்ரவமும் பண்ணாம எல்லாருக்கும் இனிமையாக வாழ்ந்து கடேசில பரமாத்மாவோட கலந்துட்டா. அதுக்கு அப்புறம் எதுவுமே இல்லை. அதாவது 'நோ மோர்!"

சாதரணமான மக்களுக்கும் இந்த அடிப்படை விஷயம் போய்ச் சேரணும். ஒவ்வொரு நாளும் போஜனம் பண்ணறச்சே ஒரு நிமிஷமானும் இதை நினைச்சுப் பார்த்து எல்லாரும் பகவானோட திருவடியைப் பற்றிக்கணும். அப்படிங்கற உயர்வான எண்ணத்துலதான் நாம தினமும் அனுசரிக்கற போஜன முறையையே நம்ம வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்தற மாதிரிதான் அமைச்சிருக்கா!" சொல்லி முடிச்சார்.

ஸ்ரீமகாபெரியவா. ??????

Source: https://www.facebook.com/pg/இந்து-தர்மம்-201387876713057/posts/

நன்றி: இந்து தர்மம்

HARA HARA SANKARA JAYA JAYA SANKAR
 
OM SRI GURUBHYO NAMAH

"தள்ளாடிய பலகை!"

(சுவாமி காய்ச்சலால் அவதிப்படும் விபரத்தை பணியாளர்கள் எடுத்துச் சொல்லியும், வெளிநாட்டவர் ஒருவர் செல்ல மனமில்லாமல் அங்கேயே நின்றார்)
( தனக்கிருந்த குளிர் காய்ச்சலை பலகைக்கு மாற்றி ய மகா பெரியவா)
நன்றி-தினமலர் ஏப்ரல்-2013

1956ல் கும்பகோணம் மகாமக விழாவிற்கு காஞ்சிப்பெரியவர் வந்திருந்தார். உடல் நலக்குறைவு காரணமாக விழாவில் பங்கேற்கவில்லை. பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பதையும் தவிர்த்தார்
.
அன்று, வெளிநாட்டவர் ஒருவர் சுவாமியைத் தரிசிக்க வந்திருந்தார். சுவாமி காய்ச்சலால் அவதிப்படும் விபரத்தை பணியாளர்கள் எடுத்துச் சொல்லியும், அவர் செல்ல மனமில்லாமல் அங்கேயே நின்றார். இதுபற்றி, பணியாளர் ஒருவர் சுவாமியிடம் தெரிவித்தார்.

வெளிநாட்டவரை தன்னிடம் அழைத்து வரும்படி பெரியவர் கட்டளையிட்டார். ஒரு பலகையில் அமர்ந்திருந்த பெரியவரைக் கண்ட வெளிநாட்டவர் பணிவுடன் வணங்கினார். அப்போது, தான் அமர்ந்திருந்த பலகையைச் சற்று தள்ளி வைத்த பெரியவர், அவரின் கேள்விகளுக்கு பதிலளிக்க தொடங்கினார். அப்போது அந்த பலகை இப்படியும் அப்படியுமாக தள்ளாடியது

.அதை வியப்புடன் பார்த்த வெளிநாட்டவர், “”இதென்ன அதிசயம்! பலகை எப்படி தானாக ஆடுகிறது?” என்று கேட்டார்.

தனக்கிருந்த குளிர் காய்ச்சலை பலகைக்கு மாற்றியிருப்பதால், அது தள்ளாடுவதாக பெரியவர் தெரிவித்தார். அவரிடம் பேசி முடித்தபின், மீண்டும் பெரியவர் பலகை மீது அமர்ந்தார். மீண்டும் பெரியவரை காய்ச்சல் தொற்றிக் கொண்டது.
வெளிநாட்டவர் வியப்புடன் அங்கிருந்து புறப்பட்டார்

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP

HARA HARA SANKARA JAYA JAYA SANKAR
 
OM SRI GURUBHYO NAMAH

கருணாமூர்த்தியான பெரியவா, தன் மீது நம்பிக்கையோடு நடந்து வந்த அந்த குழந்தையைக் கைவிடுவாரா என்ன!"

(பக்தரின் குழந்தைக்கு (விநாயகராமின்) கைது உத்தரவு போட்ட அமைச்சரின் பதவி பறி போன சம்பவம்)

சொன்னவர்-எஸ்.கணேச சர்மா

புத்தகம்-கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர்

மறு தட்டச்சு-வரகூரான் நாராயணன்

விநாயகராமின் பிள்ளை செல்வகணேஷ் டெல்லியில்ஒரு கச்சேரிக்குக் கஞ்சிரா வாசித்தார்.

செய்தித்தாள்களெல்லாம் அவரைப் பாராட்டி எழுதின. அச்சமயம் சுற்றுப்புறச் சூழல் அமைச்சருக்கு, செல்வகணபதியின் கஞ்சிரா உடும்புத் தோலால்ஆனது என்று தெரியவர, பிராணிகளைப் பாதுகாப்பதில்குறியாக இருந்த அந்த அமைச்சர் .,'உடனே அவரை கைது செய்யுங்கள்!' என்று உத்தரவு இட்டுவிட்டார்.

விநாயகராம் வீட்டில் ஒரே அமர்க்களம். பிள்ளை எங்கோ கச்சேரிக்குப் போயிருந்த சமயம். கஞ்சிராக்கள் காலம் காலமாக இப்படித்தான் தயாரிக்கப்பட்டு வருகின்றன. உடனடியாக வக்கீலை அணுகவும் நேரமில்லை.

உடனே, பெரியவாளை நினைத்து அழுது, 'நான் நடந்தே காஞ்சிபுரம் வருகிறேன்...காப்பாத்து'என்று வேண்டிக்கொண்டு .,அவ்வாறே காஞ்சிபுரம் வரை நடந்து சென்றார்.

தேநீர் பருக ஓரிடத்தில் நின்றார். அங்கே இருந்த ரேடியோ, சுற்றுப்புறச் சூழல் அமைச்சராக இருந்தவருக்கு பதவி பறிபோன செய்தியைச் சொன்னது.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP

HARA HARA SANKARA JAYA JAYA SANKAR
 
OM SRI GURUBHYO NAMAH

'ஓம் ப்ரஹ்ம ஜயாயை நம V/s 'ஓம் ப்ரஹ்ம ஜாயாயை நம'

(பெரியவா பண்ணிய சரஸ்வதி பூஜை)

(ப்ரஹ்ம ஜயாயை நம: என்றால், பிரம்மாவை ஜயித்தவளுக்கு நமஸ்காரம் என்று அர்த்தம். ப்ரஹ்ம ஜாயாயை நம: என்று,ஒரு 'கால்' போட்டுச் சொன்னால், பிரம்மாவின் பத்னிக்கு நமஸ்காரம் என்று பொருள்) ( இயந்திர கதியில் பூஜைகளைச் செய்வதில்லை பெரியவா)

(நவராத்திரி ஸ்பெஷல் போஸ்ட் -07-10-2019)
சொன்னவர்; பிரும்மஸ்ரீ ராமகிருஷ்ண தீக்ஷிதர்
......................ஸ்ரீமடம் வித்வான்,காஞ்சிபுரம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன், நவராத்திரி நிறைவில் ஸ்ரீ சரஸ்வதி பூஜை தினம்.

மகாப் பெரியவாள், வழக்கமான ஸ்ரீ சந்த்ரமௌலீஸ்வரர் பூஜையை முடித்தபின்,தனியாக சரஸ்வதி பூஜை செய்ய ஆரம்பித்திருந்தார்கள்.

ஒரு வைதிகர், பூஜா கல்ப புஸ்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு படித்துக்கொண்டு வந்தார்.

வரிசையாக சங்கல்பம் - ஆவாஹனம் - பிராணப் பிரதிஷ்டை - அங்கபூஜை முடிந்து, சரஸ்வதி அஷ்டோத்திரம் சொல்ல ஆரம்பித்தார்.

ஒவ்வொரு 'நம;'வுக்கும், ஒவ்வொரு புஷ்பத்தை எடுத்து அருச்சித்துக் கொண்டிருந்தார்கள் பெரியவா.

'ஓம் ப்ரஹ்ம ஜயாயை நம:' என்று வைதிகர் படித்தார்.

மகாஸ்வாமிகள் கையில் எடுத்த புஷ்பம் சரஸ்வதியின் சரணங்களை அடையாமல் அப்படியே சுவாமிகளின் கையில் அந்தரத்தில் நின்றது.

அஷ்டோத்திரம் சொல்லிக் கொண்டிருந்தவர் மறுபடியும், 'ஓம் ப்ரஹ்ம ஜயாயை நம:' என்றார்.

புஷ்பம் கையிலிருந்து புறப்படவில்லை.

திரும்பத் திரும்ப, அந்த நாமவளியை அவ்வாறே அவர் சொல்ல, பெரியவா, புஷ்பத்துடன் உயரத் தூக்கிய கையுடன்,சித்திரம் போல், அசையாமல் நிற்க...எல்லோருக்கும் கவலை உண்டாகிவிட்டது.

"என்ன தவறு நடந்துவிட்டது, இங்கே?" என்று புரியாமல் தத்தளித்தார்கள்.

விஷயம் பெரிய மானேஜர் விசுவநாத அய்யர் செவிவரை போய்விட்டது. அவர் பூஜை மண்டபத்துக்கு வந்தார்.

"மறுபடியும் படியுங்கோ..."

வைதிகர், மறுபடியும், 'ஓம் ப்ரஹ்ம ஜயாயை நம:' என்று சொல்ல, புஷ்பம் பெரியவா விரல் நுனியிலேயே நிற்க.....

நல்ல காலமாக பக்கத்திலிருந்த வேறொரு வித்வான், 'ஓம் ப்ரஹ்ம ஜாயாயை நம:'ன்று திருத்திச் சொன்னவுடன் பெரியவா கையிலிருந்த புஷ்பம் கலைமகளின் திருவடியை அடைந்தது!

இந்த இரண்டு நாமங்களில் அப்படி என்ன பெரிய வித்தியாசம் என்று தோன்றலாம்.

ப்ரஹ்ம ஜயாயை நம: என்றால், பிரம்மாவை ஜயித்தவளுக்கு நமஸ்காரம் என்று அர்த்தம். ப்ரஹ்ம ஜாயாயை நம: என்று,ஒரு'கால்' போட்டுச் சொன்னால், பிரம்மாவின் பத்னிக்கு நமஸ்காரம் என்று பொருள்.

பெரியவா இயந்திர கதியில் பூஜைகளைச் செய்வதில்லை என்பதற்கு இது ஒரு நிதர்சனமான உதாரணம். முழுமனத்தையும் பூஜையில் செலுத்தி, பொருள் உணர்ந்து பூஜை செய்கிறார்கள் என்பதற்குச் சான்று.

ப்ரஹ்ம ஜயாவோ,ஜாயாவோ - எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும்.

ஆனால் பெரியவாளை, "ஓம் சரஸ்வதீஜயாய நம" என்று நாம் சரணாகதி பண்ணிவிட்டால் வித்தைகள் எல்லாம் வரும்தானே?

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP

HARA HARA SANKARA JAYA JAYA SANKAR
 
OM SRI GURUBHYO NAMAH

" அம்பாளுக்கு உரிய ஆராதனையை நீ முழுமையா கத்துண்டு இருக்கே …"

"பெரியவா வைத்த டெஸ்ட்"

கட்டுரையாளர்- பி.ராமகிருஷ்ணன்,
குமுதம் பக்தி-2014

எத்தனை எத்தனையோ மகான்கள் இந்த பாரதத்துல பிறந்திருக்காங்க. அவங்களை தெய்வத்துக்கு சமமா வணக்கவும் செய்யறாங்க.

ஆனா, வாழும் காலத்துலயே நடமாடும் தெய்வம்னு சொல்லப்பட்ட, போற்றப்பட்ட, கடவுளுக்கு சமமாகவே கருதப்பட்டவர், மகா பெரியவாதான்.

அவர் சந்திரமௌலீஸ்வரருக்கும் காமாட்சிக்கும் பூஜை செய்யறது, தெய்வமே தெய்வத்துக்கு பூஜை செய்யற மாதிரி இருக்கும். பக்தி மணம் கமழ பரமாசார்யா செய்யற ஆராதனையைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் விடாதவங்க இல்லைன்னே சொல்லிடலாம்.

அந்த மகான், தான் ஆராதனைகள் செய்யறப்ப மட்டுமல்லாமல், தெய்வத்துக்கு யாரெல்லாம் பூஜை, புனஸ்காரங்கள் செய்யறாங்களோ அவங்க எல்லாருமே சிரத்தையாகம், பழமையான வழிபாட்டு முறைகளை கொஞ்சமும் மாற்றாமலும் செய்யணும்கறதுல உறுதியா இருந்தார். அதுவும் புராணப் பெருமை உடைய புராதனக் கோயில்கள்ல உரிய ஆகம முறையில் கொஞ்சம்கூட மாற்றம் செய்யக்கூடாதுங்கறதுதான் மகா பெரியவாளோட கட்டளை!

காஞ்சி மடத்தோட ரொம்ப நெருக்கின தொடர்பு உடையவர் ஸ்தானிகம் காமகோடி சாஸ்திரிகள். அவர் மகன் ஸ்தானிகம் சுரேஷ் சாஸ்திரிகள் சொன்ன அற்புதமான சம்பவம் ஒண்ணு, பூஜையை எப்படிப் பண்ணணும்னு மகாபெரியவா சொல்லியிருக்காங்கறதை எல்லாரும் தெரிஞ்சுக்க உதவக் கூடியது.

ஸ்தானிகம் காமகோடி சாஸ்திரிகளோட அப்பா, ஸ்தானிகம் வெங்கடராம சாஸ்திரிகள். அவர் தன்னோட மகன், ஸ்ரீவித்யா ஆராதனையை முழுமையா கத்துக்கணும்னு ஆசைப்பட்டார். அதனால, நெடிமுடி சுப்ரமணிய சாஸ்திரிகள் கிட்டே சேர்ந்து கத்துக்கச் சொன்னார். குஹானந்த மண்டலியை ஸ்தாபிதம் செய்தவர் சுப்ரமணிய சாஸ்திரிகள். அவரை சுருக்கமா “சார்’னு தான் கூப்பிடுவாங்க. இன்றைக்கும் அவர் எழுதிய ஸ்ரீவித்யா பாஷ்யம்தான், ஸ்ரீவித்யா பூஜைக்கான முழுமையான வழிகாட்டி நூலாக இருக்கு.

காமகோடி சாஸ்திரிகள், தன்கிட்டே ஸ்ரீவித்யா பூஜை முறைகளை முழுமையா கத்துக் கொண்ட பிறகு சுப்ரமண்ய சாஸ்திரிகள் ஒரு கடிதம் எழுதிக்குடுத்து, இதை மகாபெரியவா கிட்டே காட்டுன்னு சொன்னார். அந்தக் கடிதத்தை எடுத்துக்கிட்டு, காமகோடி சாஸ்திரிகளை பரமாசார்யாள்கிட்டே கூட்டிக் கொண்டுபோனார் அவர் அப்பா.

அந்த சமயம், ராமநாதபுரத்துல இளையாத்தங்குடியில் தங்கியிருந்தார், மகா பெரியவா. கடிதத்தை படிச்சுட்டு காமகோடி சாஸ்திரிகளை ஒரு நிமிஷம் உற்றுப்பார்த்த பெரியவா, “ஒரு நல்ல நாள்ல காமாட்சி அம்மனுக்கு பூஜை பண்ண ஆரம்பிச்சுடு’ அப்படின்னு சொல்லி ஆசிர்வதிச்சார்.

அப்படியே தொடங்கி, காமாட்சியம்மனுக்கு தினமும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்ய ஆரம்பிச்சார், காமகோடி சாஸ்திரிகள். பெரியவா காஞ்சிபுரத்துல இருக்கற நாட்கள்ல அம்பாளோட பூஜை பிரசாதத்தை எடுத்துக் கொண்டு போய் அவருக்குத் தருவாங்க.

காஞ்சி காமாட்சி அம்மன் கோயில்ல பௌர்ணமி தினங்கள்ல விசேஷ பூஜை நடக்கும் இரவு ஒன்பதரை மணிக்குத் தொடங்கப்படற அந்த பூஜை, நள்ளிரவு வரை நடக்கும். அதுல முக்கியமான விஷயம் என்னன்னா, அந்த ஆராதனையை யாரும் பார்க்க முடியாதுங்கறதுதான்.

சுமார் ஒன்பது மணி வாக்குல அந்த வழிபாட்டுல பங்கெடுத்துக்கற பக்தர்கள்கிட்ட சங்கல்பம் செய்துடுவாங்க. அதன்பிறகு கர்ப்பகிருஹத்தை சாத்திட்டு அர்ச்சகர்கள் மட்டும் உள்ளே இருந்து அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வாங்க.

காமகோடி சாஸ்திரிகள் அம்மனை ஆராதிக்க ஆரம்பிச்ச பிறகு ஒரு பௌர்ணமி பூஜைக்கு வந்தார், ஆசார்யார். பக்தர்கிட்டே சங்கல்பம் எல்லாம் முடிஞ்சதும், பூஜை பண்றதுக்காக கருவறையை சாத்தினாங்க. பரமாச்சார்யார், மூலஸ்தானத்துக்கு உள்ளேயே ஒரு மணையில அமர்ந்து எல்லா ஆராதனைகளையும் முழுமையா பார்த்தார். பூஜைகள் முடிஞ்சதும் பிரசாதம் வாங்கிக் கொண்டு புறப்பட்ட பெரியவா காமகோடி சாஸ்திரிகள்கிட்டே, “நாளைக்கு கொஞ்சம் மட்த்துக்கு வந்துட்டுப் போ’ன்னு சொல்லிட்டுபோனார்.

மறுநாள் மடத்துக்குப் போனார், சாஸ்திரி. அவர்கிட்டே பெரியவா “இந்த பௌர்ணமி பூஜையை ஏன் இப்படி நடுராத்திரியில யாரும் பார்க்காதபடி பண்ணணும்? பகல்லயே செய்யலாமே?’ அப்படின்னு கேட்டார்.

அதுக்கு காமகோடி சாஸ்திரிகள், “பெரியவா, உங்களுக்குத் தெரியாததில்லை. வேத, புராண முறைப்படி நடக்கற நவாவரணபூஜை இது. காலம்காலமா காமாட்சியம்மன் கோயில்ல இந்த நேரத்துலதான் பூஜை நடத்தறது வழக்கமா இருக்கு. இதை மாத்தி பகல்ல பண்ணணும்னா, பெரியவா நீங்கதான் உத்தரவு போடணும்’னு சொன்னார்.

புன்னகை செஞ்ச பெரியவா, “அப்படியெல்லாம் செய்யக்கூடாது. பூஜை முறைகள்ல சாஸ்திர சம்பிரதாயத்தை எதுக்காகவும் மாத்தக்கூடாது’ன்னு சொல்லிட்டு, இன்னொரு கேள்வியைக் கேட்டார்.

“ராத்திரியில செய்ய வேண்டிய பூஜை இதுன்னு சொல்றியே, ஆனா இதையே வசந்த நவராத்ரி, சாரதா நவராத்ரி சமயங்கள்ல மட்டும் பகல்ல செய்யறது ஏன்?’

பரமா சார்யா இப்படிக் கேட்டதும் எல்லாருக்கும் ஆச்சர்யம். ஏன் இப்படிக் கேட்கறார்? அவருக்குத் தெரியாத என்ன விவரத்தை சாஸ்திரிகள் சொல்லப் போறார்?னு எல்லாரும் கவனமா பார்த்தாங்க.

சாஸ்திரி விளக்கங்களை ஸ்ரீவித்யா உபாசனைல உள்ள பூஜா விதிகளைச் சொன்ன சாஸ்திரிகள், அந்த முறைப்படிதான் நவாவரண பூஜை செய்யப்படுதுன்னு சொல்ல, சில ஸ்லோகங்களையும் அதுக்க விளக்கமா சொன்னார்.

எல்லாத்தையும் பொறுமையா கேட்ட ஆசார்யாள், “உன்னை நான் கேட்ட கேள்விகள் எல்லாம், ஸ்ரீ வித்யா உபாசனையை நீ பூரணமா தெரிஞ்சுண்டு இருக்கியா?ன்னு பரிசோதிக்கவும், பழமையான பூஜை முறைகளை யாரும் எதுக்காகவும் மாத்தக்கூடாதுங்கறதை மற்றவங்க தெரிஞ்சுக்கணும்கறதுக்காகவும்தான். அதோட நீ என்னைப் பார்க்க வந்தப்ப ஒரு கடிதம் எடுத்துண்டு வந்தியே, அதுல உனக்கு பரீட்சை வைச்சு பார்க்கும்படி எழுதியிருந்தார், உன் குருநாதர். அதுக்காகத்தான் இப்படிக் கேள்வி கேட்டேன். அம்பாளுக்கு உரிய ஆராதனையை நீ முழுமை கத்துண்டு இருக்கே. உன் குருநாதர்கிட்டேயும் சொல்லிடு!’ன்னு சொல்லி காமகோடி சாஸ்திரிகளை ஆசிர்வதிச்சார்.

அதோட, “ஒரு விக்ரகம் பூஜா விக்ரகமா பிரதிஷ்டை செய்யப்பட்டபிறகு அதுக்கு பூஜை செய்யறவர் எந்தக் காரணத்தாலும் வழிபாட்டு முறைகளையோ, பூஜை நேரத்தையோ மாற்றவே கூடாது. மாற்றம் இல்லாம தொடர்ந்து செய்யறபோது, அந்த விக்ரகத்துல தெய்வ சான்னித்யம் நிறைஞ்சுடும். அதுக்கப்புறம் அந்த விக்ரகத்தை பூஜிக்கறவர், வணங்கற பக்தர்கள்னு எல்லாருக்குமே அந்த தெய்வீக சக்தி பலன்தர ஆரம்பிச்சுடும். அந்த விக்ரகம் இருக்கற தலம் சுபிட்சம் நிறைஞ்சதா மாறிடும்!’ அப்படிங்கற முக்கியமான விஷயத்தையும் எல்லாருக்கும் சொன்னார் ஆசார்யார்

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP

HARA HARA SANKARA JAYA JAYA SANKAR
 
ஸந்த்யா வந்தனத்தின் மஹிமை

1570706452600.png


ஜகத்குரு மகா பெரியவாள் உபதேசித்தது:

ஒருகதை இருக்கிறது. இக்கதை சுமார் 500, 600 வருஷங்களுக்கு முன் நடந்ததாக ஊகிக்க முடிகிறது. சென்னையை சேர்ந்த ஆர்க்கியலாஜிகல் துறை பிரசுரித்திருக்கும் பதிவுகள்..

இந்தக்கதைக்கு ஆதாரங்கள் இருக்கின்றன.

திருவனந்தபுரத்தை ஆண்ட ராஜாக்களில் ஒருவர், எள்ளினால் ஒரு காலபுருஷன் உருவத்தைச் செய்து, அதனுள் ஏராளமான ஐசுவர்யத்தை வைத்து, தானம்செய்யப் போவதாக விளம்பரம் செய்தார்.

அந்த உருவத்திற்குள் இருக்கும் பொருளைக் கருதி, அனேகம் பேர் தானம் வாங்குவதற்காக வந்தார்கள். அந்தக் காலபுருஷன் உருவம் கேட்ட கேள்விகளுக்குத் தக்க பதில் சொல்ல முடியாமல், தானம் வாங்க வந்தவர்களெல்லாம் மரணமுற்றார்கள்.

கன்னடியர் என்ற ஒரு பிராம்மணர் இருந்தார். ஸந்த்யாவந்தன கர்மாவில் வெகு ச்ரத்தை உள்ளவர். சாஸ்திரங்கள் முதலானவற்றில் அவருக்கு அப்யாஸம் கிடையாது. அந்தத் தானத்தை வாங்க அவர் வந்தார்.

அப்போது அந்த காலபுருஷனின் உருவம் மூன்று விரல்களைக் காட்டியது. முடியாது என்றார். பிறகு இரண்டு விரல்களைக் காட்டியது. அதற்கும் முடியாது என்றார். கடைசியாக ஒரு விரலைக் காட்டியது, சரி என்றார்.

தான் ஒன்றும் செய்ய முடியாததைக் கண்டு, கால புருஷன் அந்த உருவத்தினின்றும் மறைந்தான். அந்தத் தானத்தில் அடங்கிய சகல ஐசுவர்யங்களையும் அந்தப் பிராமணர் வாங்கிக்கொண்டார்.

மூன்றுவிரல்கள், மூன்று வேளைகளில் செய்யப்படும் ஸந்த்யா வந்தனத்தின் பலன். இரண்டு விரல்கள், காலை மாலை இரு வேளைகளின் ஸந்த்யாவந்தன பலன். ஒருவிரல், ஒருவேளை, அதாவது மாத்யாந்நிகத்தின் பலன் என்பது காலபுருஷன் உருவம் கேட்ட கேள்விகளின் அர்த்தம்.

ஸந்த்யா வந்தனத்தின் ஒருவேளையின் பலனைக் கொடுத்ததன் மூலமும், ஐசுவர்யத்தைத் தானம் வாங்கியதன் மூலமும் பிராம்மணருக்குப் பாபம் சம்பவித்துவிட்டது.

அந்தப் பாபத்தைப் போக்கிக் கொள்ள வேண்டிய வழியைத் தெரிந்துகொள்ள அகத்திய முனிவர் தவம் செய்துகொண்டிருப்பதாகச் சொல்லப்படும் மலைச்சாரலுக்குச் சென்றார். போகும் முன், தம்மிடமிருந்த தனத்தைப் பாதுகாக்கும்படி, கோவில் பூஜை செய்து வந்த ஒரு குருக்களிடம் ஒப்படைத்தார். எங்கே சென்றாலும் அகத்திய முனிவர் காணப்படவில்லை.

முனிவரைக் காணாமையால், அவர் ஏக்கமுற்றிருக்கும் சமயத்தில், அகத்திய முனிவர் ஓர் கிழ வடிவத்துடன் பிராம்மணர் முன் தோன்றினார். அவரிடத்தில், பிராமணர் இக்கதையைச் சொன்னார். அந்தக் கிழவர், நீ போகின்ற வழியில் ஒரு பசுமாடு உமக்குத் தென்படும்.

அந்த இடத்திலிருந்து நீ ஒரு கால்வாய் வெட்ட ஆரம்பிக்க வேண்டும். பசுமாடு எவ்வளவு தூரம் சென்று நிற்கின்றதோ அவ்வளவு தூரத்திற்குக் கால்வாய் வெட்ட வேண்டும்.

நடுவில் பசுமாடு எந்த இடங்களில் சாணி போட்டுமூத்திரம் பெய்கிறதோ அந்த அந்த இடங்களில், சாணிபோட்ட இடத்தில் மடை அமைக்கவும், மூத்திரம் பெய்யும் இடத்தில் வாய்க்கால் வெட்ட வேண்டும் .இவ்விதம் செய்தால் உமக்கு ஏற்பட்டிருக்கும் பாபம் போய்விடும் என்று கிழவர் சொன்னார்.

கன்னடியர் அவ்விதமே செய்யத் தீர்மானித்துக் கொண்டு, திரவியத்தைத் திரும்ப வாங்குவதற்காக குருக்களிடம் சென்றார்.

குருக்களுக்குப் பிராமணர் கொடுத்த தனத்தின் மீது மோகம் ஏற்பட்டுவிட்டது. அந்தக் காலத்து பவுன் இளம் துவரம் பருப்பை ஒத்திருக்குமாதலால், குருக்கள் பிராமணரிடம் துவரம் பருப்புகளைக் கொடுத்து, “நீர் கொடுத்த திரவியம் இதுதான், எடுத்துக் கொள்ளும்” என்றார்.

குருக்களின் வஞ்சகச் செயலை அறிந்துகொண்ட பிராமணர், “நான் கொடுத்தது இதுவல்ல, நான் கொடுத்ததைக் கொடுங்கள்” என்றுமிகவும் பிரார்த்தித்துக் கேட்டுக்கொண்டார்.

எந்தப்பயனும் ஏற்படவில்லை. ஆகவே, ராஜாவிடம் சென்று முறையிட்டுக் கொண்டார். குருக்களும் தருவிக்கப்பட்டார்.

ஆனால் குருக்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. ஆகவே குருக்கள் பூஜைசெய்யும் லிங்கத்தைக் கட்டிக்கொண்டு பிரமாணம் செய்தால் நான் ஒப்புக் கொள்கிறேன் என்று பிராமணர் கூறினார்.

அவ்விதம் செய்வதாகக் குருக்களும் சம்மதித்துவிட்டார். குருக்கள் ஆபிசாரப் பிரயோகத்தில் தேர்ந்தவரானதால், லிங்கத்திலுள்ள ஸ்வாமியைப் பக்கத்திலுள்ள ஒருமரத்தில் ஆகர்ஷனம் செய்துவிட்டார்.

இதை ஸ்வாமி, பிராமணரின் சொப்பனத்தில் தோன்றி, நடந்ததைச் சொல்லிவிட்டார். பிராமணர் மறுபடியும் ராஜாவிடம் சென்று “குருக்கள் மரத்தைக் கட்டிக்கொண்டு பிராமணர் செய்யும்படிச் செய்ய வேணுமாகக் கேட்டுக்கொண்டார்”. குருக்கள் மறுப்பளித்தார்.

ராஜா விடவில்லை. மரத்தைக் கட்டிக்கொண்டு பிரமாணம் செய்யுமாறு ஆணையிட்டார் ராஜா. குருக்கள் மரத்தைக் கட்டிக்கொண்டு பிரமாணம் செய்தார். உடல் எரிந்து போய்விட்டது.

எரிச்சுக்கட்டி ஸ்வாமி என்பது அந்த ஆலயமூர்த்தியின் பெயர். திருநெல்வேலி ஜில்லாவில் அந்த ஆலயம் இருக்கிறது. பிறகு, பிராமணர் தம் தனத்தை எடுத்துக்கொண்டு கிழவர் சொல்லியபடி பசுமாட்டைக் கண்டு கால்வாய் வெட்டினார்.

"கன்னடியன் கால்வாய்" என்பது அதன் பெயர். திருநெல்வேலி ஜில்லாவில் இருக்கின்றது. அந்தக் கால்வாயின் பிரதேசங்கள் இன்றைக்கும் செழித்திருக்கின்றன. இந்தக் கதையினால் ஸந்த்யாவந்தனத்தின் பெருமை நன்கு விளங்குகிறது.

எனவே ஸந்த்யா வந்தனம் ஒரு கடமை. அதுசெய்வதால் உலக க்ஷேமம் ஏற்படுகின்றது. ச்ரத்தையுடன் செய்தால் மோக்ஷம் லபிக்கின்றது என்பதைத் தெரிந்துகொண்டு, நமது கடமைகளில் ஒன்றாகச் செய்து வரவேண்டும் என்று உங்கள் எல்லோரிடமும் தெரிவிக்கின்றோம்.

Source: https://www.aanmeegam.in/2019/10/sandhyavandanam-mahimai-in-tamil.html

நன்றி: ஆன்மீகம்
 
OM SRI GURUBHYO NAMAH

"கடவுளைப் பார்க்க முடியுமா?'-

(18 வயது பையன் .பெரியவாளிடம்.)

(கடவுளைப் பார்க்க நானும் .ஆர்வமாகத்தான் இருக்கேன். இன்னும் தேடிக் கொண்டிருக்கேன்!" -என்று மேலோட்டமாகச் சொன்ன பெரியவாளின் அற்புத பதில்)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் (114)
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

பதினெட்டு வயதுப் பையன், விவேகானந்தர் போன்ற சில மகான்களின் சரித்திரங்களைப் படித்திருப்பான் போலிருக்கிறது.

'கடவுளைப் பார்க்க முடியுமா?' என்று சுளீரென்று ஒரு கேள்வியைப் பெரியவாளைப் பார்த்துக் கேட்டான்.

'முடியும்' என்ற பதில் வந்தால் 'எங்கே எனக்குக் காட்டுங்கள்' என்று மடக்கி விடலாம் என்றெல்லாம் திட்டம் போட்டுக் கொண்டு வந்திருப்பான் போல் தோன்றியது.

('கடவுளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவருக்கு எத்தனை முகங்கள், கைகள் புடைவையா,வேஷ்டியா?கறுப்பா,சிவப்பா? என்று வரிசையாகக் கேட்டு, பெரியவாளைத் திக்கு முக்காடச் செய்யலாம் என்ற எண்ணமும் இருந்திருக்கக்கூடும்.

வயதுக் கோளாறு! கொஞ்சம் படித்து விட்டு, எல்லாவற்றையும் கரைத்துக் குடித்து விட்டதாக நினைத்துக்கொள்ளும் ஈகோ!

பெரியவாள்.சிரசைத் தூக்கி அவனைப் பார்த்தார்கள்.

"கடவுள் இருக்கிறார்னு மகான்களெல்லாம் சொல்லியிருக்கா. சாஸ்திரம் சொல்றது. இவை இரண்டும் நம்பத்தகுந்தவை என்பதால், நாமும் ஒப்புக் கொள்கிறோம். கடவுளைப் பார்க்க நானும் ஆர்வமாகத்தான் இருக்கேன். இன்னும் தேடிக் கொண்டிருக்கேன்!"

பையனுக்கு வேகம் தணிந்து விட்டது. சுவாமிகள், நான் கடவுளைப் பார்த்திருக்கிறேன்' என்று சொல்லியிருந்தால் அவர்களைக் குடைந்திருக்கலாம் 'ஒப்புக்கொள்கிறோம்' என்று தெள்ளத் தெளிவாகக் கூறி விட்டார்களே? அப்புறம், வாதம் செய்ய என்ன இருக்கிறது?

பெரியவாள் அந்தப் பையனை அருகில் உட்காரச்சொன்னார்கள்.

"உன் மாதிரி புத்திசாலிப் பசங்கள் அந்தக் காலத்திலேயும் இருந்திருப்பார்கள்னு நினைக்கிறேன். நான் கேள்விப்பட்ட ஒரு கதையைச் சொல்றேன். கேட்கிறியா?"--பெரியவாள்.

பையன் அக்கறையில்லாமல் தலையை அசைத்தான்.

அணுக்கத் தொண்டர்களுக்கெல்லாம் உள்ளூர ஆத்திரம்.

உபநிடதங்களில் ஒரு வாக்கியத்தின் ஆழ்பொருளை அறிந்து கொள்வதற்காக, பெரியவாளின் திருமுகத்திலிருந்து விளக்கம் வராதா என்று - அறநூல் விற்பன்னர்கள் தவித்துக் காத்துக் கொண்டிருக்கும் சந்நிதியில், அந்த அஸத்துப் பையனுக்குக் கதை சொல்கிறாரா, கதை!

பெரியவாள் சொல்கிறார் பையனிடம்;

ஒரு முனிவர்கிட்டே, மேதாவியான சிஷ்யன் இருந்தான். ஒருநாள்,'கடவுள் இருக்காரா?'ன்னு ஆசிரியரைக் கேட்டான்.

'இருக்கார்'

"அப்படியானால்,என் கண்ணுக்குத் தென்படலையே'ன்னான்.

"கடவுள் இருப்பதை, அநேக அடயாளங்களால் ஒப்புக் கொள்ளலாமே தவிர, கண்ணாலே பார்க்க முடியாதுன்னார்

."பார்க்க முடியாத பொருளை எப்படி நம்புவது?ன்னான்.

"ஆமாம்..நீ சொல்றது சரிதான்.நீ சிந்திக்கத் தெரிந்த புத்திசாலி நெறையக் கேள்வி கேட்கிறே. நான்,என் குருநாதர் சொன்னதையும், வேத - புராணங்கள் சொன்னதையும் அப்படியே நம்பி ஏத்துண்டுட்டேன்.கண்ணுக்குத் தெரியாத ஒரு பொருளை எப்படி ஒப்புக்கொள்றதுன்னு இப்பதான் எனக்கும் சந்தேகம் வருது.--ஆசிரியர்.

பையன் கொஞ்சம் திமிராக நிமிர்ந்து உட்கார்ந்தான். கடைசியில் சுவாமிகள், கடவுள் இல்லை;இல்லவேயில்லை கட்சியில் சேர்ந்து விடுவார் போலிருக்கிறதே!

பெரியவாள் தொடர்ந்தார்கள்.கதையை

"முனிவர் இருந்த இடம் மரங்கள் அடர்ந்த சோலை. ஒரு பெருங்காற்றில் மரத்தின் கிளைகள் வேகமாக அசைந்தன. ஜில்லுன்னு காத்து. உடம்புக்கு ரொம்ப இதமா இருந்தது. முனிவர், சிஷ்யனைப் பார்த்து, 'அந்த மரக்கிளைகளெல்லாம் ஏன் இப்படி அசுரத்தனமாக அசைகின்றன?" என்று கேட்டார்.

"சுவாமி! இப்போ பெரிய காற்று வீசித்தே அதனாலதான்"

"காற்றா..அப்படீன்னா வீசித்தா..அப்படீன்னா? நீ பார்த்தாயா? அடாடா...எனக்குக் காட்டியிருக்கப்படாதோ? நானும் ரொம்ப நாளா யத்தனம் பண்ணிண்டிருக்கேன், காற்றைப் பார்க்கணும்னு

"நீயோ,காற்று வீசியது என்கிறாய். நானும் அந்த சுகத்தை அனுபவிச்சேன். ஆனால், அது காற்றின் வேலை என்பதை என்னால ஒப்புக் கொள்ள முடியவில்லை. கண்ணால் பார்க்க முடியாத ஒரு பொருள் இருக்கிறது என்று எப்படி ஒப்புக் கொள்வது' என்றாராம் முனிவர்

உடனே,சிஷ்யன் எழுந்து முனிவர் கால்லே விழுந்து, புரிஞ்சுடுத்து'ன்னு சொல்லி கண்ணாலே ஜலம் விட்டானாம்.

அதி நவீன நாகரிகப் பையனும், மகாப் பெரியவா திருவடிகளில் நான்கு முறை நமஸ்காரம் செய்துவிட்டு,கண்களில் நீர் வழிய நின்றான்.

"உன் அகத்திலே ரேடியோ இருக்கோ? எலெக்ட்ரிக் லைட் இருக்கோ? எலெக்ட்ரிக் ஃபேன் இருக்கோ?"--பெரியவா

"இருக்கு"-நாகரிகப் பையன்.

"இதெல்லாம் எப்படி வேலை செய்யறது?"--பெரியவா

"எலெக்ட்ரிஸிட்டியாலே...."-பையன்

"அந்த ஸிட்டி'யை நீ பார்த்திருக்கியோ?"--பெரியவா

பையன் திக்குமுக்காடிப் போனான்

.பெரியவா பிரசாதம் கொடுத்து ஆசீர்வதித்து அனுப்பினார்கள்.அருகில் இருந்த எல்லோரும் 'இந்தக் குழந்தைக்கு என்ன அதிருஷ்டம்! பெரியவா எத்தனை நேரம் அவனோட பேசியிருக்கா!' என்று ஆச்சர்யப்பட்டார்கள்.

கடவுள் இருக்கிறார் - இருக்கவே இருக்கிறார்

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP

HARA HARA SANKARA JAYA JAYA SANKAR
 
OM SRI GURUBHYO NAMAH

வைகாசி அனுஷம். காஞ்சி மஹாபெரியவரின் ஜென்ம நக்ஷத்திரம். இதையொட்டி அவர் செய்த அதிஅற்புத நிகழ்ச்சி ஒன்றைக்கேளுங்கள்.

1986ல் ஒரு ஏகாதசி ஞாயிற்றுக்கிழமை. காஞ்சி சங்கர மடத்தில் ஸ்ரீ மஹாபெரியவா பக்தர்களுக்கு தரிஸனம் தந்து கொண்டிருந்தார்.

ஒரு ஓரத்தில், சுமார் ஐந்து வயது குழந்தையுடன் ஒரு பக்தர் அழுதபடியே நின்று கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீ மஹாபெரியவருடன், எப்போதும் கூடவே கைங்கர்யம் செய்துகொண்டிருக்கும், சந்திரமெளலி என்பவரும் திருச்சி. ஸ்ரீ.ஸ்ரீகண்டன் என்பவரும் இருந்தனர்.

ஸ்ரீ மஹாபெரியவா ஸ்ரீகண்டனை அழைத்து, “கையில் குழந்தையுடன் ஒருவர் அழுதுகொண்டிருக்கிறாரே! ஏன் அழுகிறார்? என்று விசாரி” என்றார்கள்.

ஸ்ரீகண்டனும், அவரிடம் சென்று அவரது கவலைக்கான காரணத்தை, ஸ்ரீ மஹா பெரியவா கேட்டு வரச்சொன்ன தகவலைத் தெரிவித்தார்.

“ஐயா, என் கையில் இருப்பது ஐந்து வயது பெண் குழந்தை. உடல்நிலை சரியில்லை. டாக்டரிடம் காண்பித்தேன். குழந்தைக்கு இருதயத்தில் துவாரம் இருக்கிறது. ஆபரேஷன் செய்ய வேண்டும், இருப்பினும் கொஞ்சம் சிரமம் தான் என்றும் அவர் சொல்லி விட்டார். ஆபரேஷனுக்கு தேதியும் குறித்தாயிற்று.

நம் பெரியவாளிடம் குழந்தையைக் காண்பித்து, அவரிடம் சரணாகதி அடைந்து விட்டால், குழந்தை குணமாகி விடும் என நம்பி வந்துள்ளேன். ஒருவேளை என் குழந்தைக்கு ஆபத்து என்றால், ஆபரேஷன் செய்து அது இறப்பதைவிட, பெரியவரின் பாதார விந்தங்களை அது அடையட்டுமே என கருதுகிறேன்” என்றார்.

இந்த விஷயத்தை ஸ்ரீகண்டன் ஸ்ரீ மஹா பெரியவரிடம் தெரிவித்தார்.

ஸ்ரீ மஹா பெரியவா உடனே குழந்தையைக் கொண்டுவரும்படிச் சொன்னார்கள். அதை ஆசீர்வதித்தார்கள்.

அருகிலிருந்த சந்திரமெளலியிடம் ஓர் மாம்பழத்தைக் கொடுத்து, ”இதில் சிறு துண்டை நறுக்கி குழந்தைக்குக் கொடுக்கச்சொல், சரியாகிவிடும். ஆபரேஷன் தேவையிராது” என்று சொல்லி அந்த பக்தரை ஊருக்கு அனுப்பி விட்டார்கள்.

அதன்பின், தன் குழந்தையை டாக்டர் குறிப்பிட்ட நாளில் அழைத்துச் சென்றார் அந்தக்குழந்தையின் தந்தை. டாக்டர்கள் குழந்தையைப் பரிசோதித்தபோது, ஆச்சர்யம் அடைந்தனர்.

”இருதயத்தில் துவாரமா! இந்தக்குழந்தைக்கா!! இல்லையே!!!! ” என்றார்கள்.

“அன்று இருந்த துவாரம் இன்று மறைந்தது எப்படி?” என்று குழந்தையின் தந்தையிடம் கேட்டார்கள். நடந்ததை விளக்கினார் அந்தத்தந்தை.

டாக்டர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். பின், ஸ்ரீ மஹாபெரியவரிடம் வந்து நடந்ததைச்சொல்லி மகிழ்ச்சியுடன் ஆசிபெற்றுச் சென்றார்கள்.;

இதன்பின் 1994ல் மஹாபெரியவா முக்தியடைந்து விட்டார்கள்.

2006ல் ஒரு வெள்ளிக்கிழமையன்று, ஒருவர் ஸ்ரீ மஹாபெரியவரின் அதிஷ்டானத்திற்கு [பிருந்தாவனத்திற்கு] வந்தார்.

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அதிஷ்டானம்
[பிருந்தாவனம்]

அங்கு பூஜை செய்துகொண்டிருந்த சந்திரமெளலியிடம் திருமணப்பத்திரிகை ஒன்றைக்கொடுத்து, ”ஸ்ரீ மஹா பெரியவாளின் அதிஷ்டானத்தில் அதை வைத்து, பிரஸாதம் தாருங்கள்” எனக்கேட்டார்.

சந்திரமெளலியும் அவருக்கு மாம்பழம், துளசி, கற்கண்டு கொடுத்தார், வந்தவர் கண்களில் கண்ணீர்.

“இவர் ஏன் அழுகின்றார்? ஒருவேளை புளிக்கிற மாம்பழத்தைக் கொடுத்து விட்டோம் என நினைத்து வருத்தப்படுகிறாரோ?” என சந்திரமெளலி நினைத்து, அவரிடமே காரணம் கேட்டார்.

“ஸ்வாமி, நினைவிருக்கிறதா? 20 ஆண்டுகளுக்கு முன் உங்களிடம் தான் ஸ்ரீ மஹாபெரியவா, ஒரு மாம்பழத்தைக் கொடுத்து, இருதய நோயால் பாதிக்கப்பட்ட என் மகளுக்குக் கொடுக்கச்சொல்லி குணமாக்கினார்.

அந்தக் குழந்தைக்குத்தான் இப்போது திருமணம். இன்றும் அதே போல மாம்பழத்தை நீங்கள் தருகிறீர்கள். இதை மஹாபெரியவா மீண்டும் உங்கள் மூலம் தரும் பிரஸாதம் என்றே நினைக்கிறேன். குழந்தையை ஆசீர்வதியுங்கள்” என்றார்.

வாழும் தெய்வமான ஸ்ரீ மஹாபெரியவர் நம் அனைவரது மனதிலும் ‘இதயக்கனி’யாக இன்றும் விளங்குகிறார்.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP

HARA HARA SANKARA JAYA JAYA SANKAR
 
OM SRI GURUBHYO NAMAH

குருவே சரணம்",

12.10.2019, Saturday, மஹாபெரியவா, நாங்கள் உங்கள் உபதேசங்களை கேட்பதற்காக காத்து கொண்டு இருக்கிறோம், உங்கள் பாதம் பணிகிறோம், உங்கள் ஆசி எங்களுக்கு வேண்டும்.

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாசிரியர்-கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
கும்பகோணம் மடத்தில் ஸ்ரீசந்த்ரமௌளீஸ்வரர்

பூஜை முடிந்து,பக்தர்களுக்குத் தரிசனம்
கொடுத்துக் கொண்டிருந்தார்கள்,பெரியவா.

ஸ்ரீ மடத்துடன் தொடர்பு உடைய ஒரு
குடியானவர் பரபரப்புடன் வந்து பெரியவா காலில்
விழுந்து,"என் மகனைக் காப்பாத்துங்க,கடவுளே"
என்று கதறினார்.

"என்ன நடந்தது?" என்று,அவரிடம் கேட்கச்
சொன்னார்கள்.

குடியானவருக்கு ஒரே பையன்.அவன் உணவு
சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது,ஒரு பாம்பு
அவன் உடம்பில் ஏறி,அப்பால் போயிருக்கிறது.
பையனுக்கு ஏற்பட்ட பயத்தில் மூர்ச்சை போட்டு
விழுந்திருக்கிறான்.பையனை,பாம்பு கடித்ததா,
இல்லையா? என்பது தெரியவில்லை.பாம்புக்
கடிக்கு மந்திரிக்கும் வழக்கம் உண்டு.ஆனால்
அந்த மந்திரம் தெரிந்தவர் யாரும் அருகில்
இல்லை. என்ன செய்வது?

"சாமி தான் காப்பாத்தணும்.."

பெரியவா விபூதிப் பிரசாதம் வழங்கினார்கள்.
"பையன் நெற்றியிலே பூசு.."

"சரிங்க..."

"வீட்டிலே அரப்புப் பொடி இருக்கா?"

"இருக்கு"-என்று தலையை ஆட்டினார்.

"பையன் உதட்டைப் பிரிச்சு,வாயிலே அரப்புப்
பொடி போட்டு மெதுவா தடவி விடு.பையன்
கசக்கிறதுன்னு துப்பினா,பாம்பு கடிக்கல்லேன்னு
அர்த்தம்; தித்திக்கிறதுன்னு சொன்னா,பாம்பு
கடிச்சிருக்குன்னு அர்த்தம். அதற்கு வைத்யம்
பண்ணணும்.போய் அரப்புக் கொடு..."

குடியானவர் ஓடிப்போய்,பெரியவா சொன்னபடியே
செய்தார்.பையனின் வாயில் அரப்பைப் போட்டதும்

"கசக்குது கசக்கது" என்று துப்பினான்.

அப்பா! பாம்பு கடிக்கல்லே!...

நிலைமை சரியானதும்,அந்தப் பையனையும்
அழைத்துக் கொண்டு தரிசனத்துக்கு
வந்தார்கள் குடியானவ தம்பதிகள்.

"வீட்டிலே,தினமும் நல்லெண்ணை தீபம் ஏற்று"
என்று அந்தப் பெண்ணிடம் பெரியவா கூறினார்கள்.

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP

HARA HARA SANKARA JAYA JAYA SANKAR
 
OM SRI GURUBHYO NAMAH

அபிமானத்தின் அகம்பாவம்"

(பெரியவாளிடம் வறட்டு 'ஈகோ' எடுபடாது. உண்மையிலேயே பெருமைக்குரியவர்களை நிச்சயமாகப் பாராட்டுவார்கள்.ஆனால் ஒன்றரையணா நபர்களின் உயிர் நிலையை லேசாக அசைத்து விடுவார்கள்)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-5
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்

முதிய தம்பதியர் அமெரிக்காவில் பிரபல டாக்டராகப் பணியாற்றும் தம் மகனுடன் பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார்கள்.

தம் மகன் நிறைய படித்திருக்கிறான் என்று மட்டும் சொல்லி நிறுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

"இவன் குழந்தை வைத்தியம்,ஹார்ட் வைத்தியம், கல்லீரல் வைத்தியம், சர்க்கரை நோய், மூளை நோய் வைத்தியம் எல்லாம் படிச்சு, தங்க மெடல்களாக வாங்கிக் குவிச்சிருக்கான்" என்று கொஞ்சம் அகம்பாவம் தொனிக்கக் கூறினார்கள்.

பெரியவாள், அந்தப் பையனைத் தன் அருகில் அழைத்தார் சற்று அலட்டலாகவே அவன் அருகே போனான்.

"எனக்கு ஒரு சந்தேகம்...." - பெரியவாள்.

டாக்டர் பையன் அலட்சியமாகப் பார்த்தான்.

"எனக்கு வயசாயிடுத்து...நான் ரொம்பப் படிக்கவுமில்லே.. அத்தோட சின்ன வயசிலேயே சாமியாராயிட்டேன். நீ ரொம்ப புத்திசாலிங்கறார் உன் அப்பா. பெரீய்ய்ய டாக்டர் உனக்குத் தெரியாத வைத்தியமே கிடையாதாம்...

.."எனக்கு ஒரு சின்ன சந்தேகம். என்னன்னா.... மனுஷன் உடம்பிலே உயிர் என்கிறது எங்கே இருக்கு? உயிர் என்பது எப்படி இருக்கும்?உயிரைப் பார்க்கமுடியுமா? உயிர் போவது-அதாவது செத்துப் போவது-என்பது என்ன? ஒருத்தன் செத்துப் போன பிறகு உயிர் எங்கே போகும்? நீ பெரிய டாக்டர்..ஹார்ட்டையெல்லாம் கிழிச்சிப் பார்த்திருக்கே... அதனாலே... உன்னால்தான் பதில் சொல்ல முடியும்" என்றார் பெரியவாள்.

டாக்டர் பையனுக்கு ஏகக் கலவரம். பெரியவாள் கேட்ட கேள்விகள் அறிவு பூர்வமானவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால், எந்த மெடிக்கல் புத்தகத்திலும் இந்தக் கேள்விகளுக்குப் பதில் இல்லையே!?

பையன், பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தான்.

"பெரியவா என்னை மன்னிக்கணும். நான் ஒரு சாதாரண டாக்டர். அப்பா - அம்மா அபிமானத்தினாலே ரொம்பப் பெருமையா சொல்லிட்டா .வருத்தப்படறேன் பெரியவா,

பெரிய மகான்,உங்களுக்குத்தான் எல்லாம் தெரியும்"என்றான்

பெரியவாள் கையைத் தூக்கி டாக்டர் பையனை ஆசிர்வதித்தார். " நீ நல்ல பையன். நிறைய பேருக்கு வைத்தியம் பண்ணு...க்ஷேமமாயிரு...."

பெரியவாளிடம் வறட்டு 'ஈகோ' எடுபடாது. உண்மையிலேயே பெருமைக்குரியவர்களை நிச்சயமாகப் பாராட்டுவார்கள். ஆனால் ஒன்றரையணா நபர்களின் உயிர் நிலையை லேசாக அசைத்து விடுவார்கள்

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP

HARA HARA SANKARA JAYA JAYA SANKAR
 
OM SRI GURUBHYO NAMAH

"About-ஆ? Nearly-யா?.."

(பேராசிரியர்களுக்கே சில கல்வி நுட்பங்களைக் கற்பித்து அனுப்பின பெரியவா)

சொன்னவர்-எஸ்.வெங்கட்டராமன்

தொகுத்தவர்-கோதண்டராம சர்மா

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

மயிலாடுதுறை கல்லூரியிலிருந்து இரண்டு பேராசிரியர்கள் ஸ்ரீஸ்வாமிகள் தரிசனத்துக்கு வந்தார்கள். ஒருவர்,வணிகவியல் மற்றவர் சம்ஸ்க்ருதம்.

வணிகவியல் பேராசிரியரைப் பார்த்து, "உனக்கு எந்த ஊர்?" என்று கேட்டார் ஸ்ரீஸ்வாமிகள்.

"வால்டேர்..."

"இங்கேருந்து எவ்வளவு தூரம்?"

"About தௌஸண்ட் மைல்ஸ்..."

"About-ஆ? Nearly-யா?.."

பேராசிரியர் திக்குமுக்காடிப் போனார்.சரியாகப் பதில் சொல்லத் தெரியவில்லை.

பெரியவாளே பதில் சொன்னார்,

"எபௌட்-ன்னா, ஏறத்தாழ-ன்னு அர்த்தம்.கொஞ்சம் கூடக் குறைய இருக்கலாம்-என்ற மாதிரி..நியர்லி-ன்னா,கிட்டத்தட்ட-ன்னு அர்த்தம்.ஆயிரம் மைலுக்குக் கீழேன்னு அர்த்தம். அப்படித்தானே?" என்று சொல்லிவிட்டு, வடமொழிப் பேராசிரியரைப் பார்த்தார். "நீ என்ன படிச்சிருக்கே?"

"ஸான்ஸ்க்ரீட் எம்.ஏ.."

"அதாவது,ஸம்ஸ்க்ருதம் பற்றிப் படிச்சிருக்கே! அப்போ,சம்ஸ்க்ருதம் எப்போ படிக்கப் போறே?" வடமொழி வித்வான் திகைத்தார்.

"ஸாஹித்யம்,வ்யாகரணம் என்ற மாதிரி சிரோமணி படிச்சா தான், ஸம்ஸ்க்ருதம் படிச்சதா ஆகும்.ஹிஸ்டரி எம்.ஏ, தமிழ் எம்.ஏ-ன்னா, ஹிஸ்டரியைப் பற்றி, தமிழைப் பற்றி படிச்சதாகத்தானே ஆகும்?..

பேராசிரியர்களுக்கே சில கல்வி நுட்பங்களைக் கற்பித்து அனுப்பினார், ஸ்ரீ ஸ்வாமிகள்

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP

HARA HARA SANKARA JAYA JAYA SANKAR
 
OM SRI GURUBHYO NAMAH

மற்றவர்களுக்காக மட்டுமே வாழ்வதற்காகவே, இறைவன் சில பேர்களைப் படைக்கிறான்!

(
எதிர்பாராத திருப்பங்களினால் நான் அதிர்ந்துபோய்விட்டேன். அதிர்ச்சி காரணமாக, வண்டிக்குள்ளேயே மண்டியிட்ட நிலையில் பிரயாணம் முழுக்க ‘ராமா ராமா’ என்று ஜபிக்கத் தொடங்கினேன். அது ஒன்றுதான் எனக்குத் தெரிந்திருந்த பிரார்த்தனை )

பெரியவா அவர் வாயால் சொன்ன தன் இளமைக்கால பருவம்)

நன்றி: பவன்ஸ் ஜர்னல் & பால ஹனுமான்.


1907-ம் வருடம்
ஆரம்பம். தென்னாற்காடு ஜில்லாவிலுள்ள திண்டிவனத்தில் கிறிஸ்துவ மிஷன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். அதற்கு முந்தின வருடம் எங்கள் டவுனுக்கு வந்திருந்த காமகோடி பீடம் சங்கராச்சாரிய சுவாமிகள், கலவை கிராமத்தில் சித்தி அடைந்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். ஆற்காட்டிலிருந்து 10 மைல் தொலைவிலும் காஞ்சியிலிருந்து 25 மைல் தொலைவிலும் இருப்பது அந்தக் கிராமம்.

என் தாய் வழி சகோதரான ஒருவர், சிறிது காலம் ரிக் வேதம் அத்யயனம் செய்தபின், ஆசாரிய சுவாமிகளின் முகாமில் சேர்ந்திருந்தார். அவரை பீடாதிபதியாக ஆக்கியிருந்ததாய்ச் செய்தி வந்தது. என் தாயாரின் ஒரே சகோதரி விதவை, திக்கற்றவள். அவளுடைய ஒரே மகன் அவர். முகாமில் அவளைத் தேற்றுவதற்கு ஒரு ஆத்மாவும் கிடையாது. அந்தச் சமயம், என் தந்தை திண்டிவனம் தாலுகாவில் பள்ளிக்கூட சூபர்வைசராக இருந்து வந்தார்.

திண்டிவனத்திலிருந்து 60 மைல் தூரத்திலிருந்த கலவைக்கு, தமது மாட்டு வண்டியில் குடும்பத்தோடு செல்வதென்று அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால், திருச்சிராப்பள்ளியில் ஒரு கல்வி மாநாடு இருந்ததால், அத்திட்டத்தை அவர் கைவிட வேண்டியதாயிற்று.

மகன் சன்னியாச ஆசிரமத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டது குறித்து, தன் சகோதரியைத் தேற்றும் பொருட்டு என் அம்மா, என்னையும் மற்றக் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கிளம்பினாள். ரயிலில் காஞ்சிபுரம் சென்று, அங்குள்ள சங்கராச்சாரியர் மடத்தில் தங்கினோம். குமார கோஷ்டி தீர்த்தத்தில் என் அன்றாடக் கடன்களை முடித்துக்கொண்டேன். ஆசாரிய பரம குரு சித்தியடைந்த பத்தாம் நாளன்று மகா பூஜை நடத்துவதற்காகச் சாமான்கள் வாங்க வேண்டி, கலவையிலிருந்து சிலர் மடத்து வண்டியில் வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர், பரம்பரையாக வந்த மடத்து மேஸ்திரி, என்னை கூட வருமாறு அழைத்தார். எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்கள் தனியே பின்னால் வர ஒரு வண்டி அமர்த்தப்பட்டது.

பிரயாணத்தின்போது அந்த மேஸ்திரி, நான் திரும்பி வீட்டுக்குப் போக இயலாமல் போகக் கூடுமென்றும், என் எஞ்சிய வாழ்க்கை மடத்திலேயே கழிய வேண்டியிருக்கலாம் என்று, ஜாடையாகக் குறிப்பிட்டார். என் ஒன்றுவிட்ட சகோதரர் மடாதிபதியாகிவிட்டதால், நான் அவருடன் வசிக்க வேண்டுமென, அவர் விரும்புகிறார் போலிருக்கிறது என்று முதலில் எண்ணினேன். அப்போது எனக்கு வயது பதின் மூன்றுதான். எனவே, மடத்தில் அவருக்கு என்ன விதத்தில் உதவியாக இருக்கப் போகிறோம் என்று நினைத்துக்கொண்டேன்.

ஆனால், வண்டி ஓட ஓட மேஸ்திரி பக்குவமாக விஷயத்தை விளக்கினார். பூர்வாசிரமத்தில் என் ஒன்றுவிட்ட சகோதரராக இருந்த ஆசாரிய சுவாமிகளுக்குக் காய்ச்சல் ஏற்பட்டு ஜன்னி கண்டுவிட்டதாம். அதனால்தான் என்னைச் சீக்கிரமாய்க் கலவைக்கு அழைத்துச் செல்வதற்காக, குடும்பத்திலிருந்து என்னைப் பிரித்துத் தனியே கூட்டிச் செல்கிறார்களாம்.

என்னை அழைத்து வருவதற்காகத் திண்டிவனத்துக்கே அவர் போக விருந்ததாயும், அதற்குள் காஞ்சிபுரத்திலேயே என்னைச் சந்தித்துவிட்டதாயும் சொன்னார்.


இந்த எதிர்பாராத திருப்பங்களினால் நான் அதிர்ந்துபோய்விட்டேன். அதிர்ச்சி காரணமாக, வண்டிக்குள்ளேயே மண்டியிட்ட நிலையில் பிரயாணம் முழுக்க ‘ராமா ராமா’ என்று ஜபிக்கத் தொடங்கினேன். அது ஒன்றுதான் எனக்குத் தெரிந்திருந்த பிரார்த்தனை.

என் அம்மாவும் மற்றக் குழந்தைகளும் கொஞ்ச நேரம் கழித்து வந்து சேர்ந்தார்கள். பாவம் என் அம்மா. சகோதரியைத் தேற்றுவற்காகப் புறப்பட்டு வந்தவள், தன்னையே பிறர் தேற்ற வேண்டிய நிலைக்கு ஆளாகியிருந்தாள்.

நானாகத் துறவு பூண்டு சன்னியாச ஆடை அணியவில்லை. கொஞ்ச காலத்துக்கேனும் ஒரு குருவின் கீழே பயிலும் பாக்கியமும் எனக்குக் கிட்டியதில்லை.; சன்னியாசம் ஏற்ற முதல்நாளே ஒரு மாபெரும் சமஸ்தானத்தின் வசதிகளும் பொறுப்புகளும் என்னைச் சூழ்ந்து கொண்டுவிட்டன.

நான் சன்னியாச ஆசிரமம் ஏற்றபோது, தும்முலூர் ராமகிருஷ்ணய்யாவும் அடைப்பாளையம் பசுபதி ஐயரும் கலவையில் இருந்தார்கள். இருவரும் தென்னாற்காடு ஜில்லா கோர்ட்டில் பணியாற்றி வந்தார்கள். என் குருவின் குருவுக்கு அத்தியந்த சீடர்களாக விளங்கியவர்கள் அவர்கள். என் இளமை வாழ்வை உருவாக்குவதில் உதவுவதென்று இருவரும் உறுதியாயிருந்தார்கள் என்று பிற்பாடு தெளிவாய்த் தெரிந்தது.


பசுபதி அடிக்கடி என்னைத் தனியே சந்திப்பார். இடைக்காலத்தில் என்னிடம் என்னென்ன பலவீனத்தைக் கவனித்திருந்தாரோ, அதையெல்லாம் சுட்டிக் காட்டுவார். அவைகளை வெல்லுவதற்குத் தாம் கூறும் யோசனைகளைக் கேட்கும்படி மன்றாடுவார். சில சமயம், அவர் என்னிடம் கடுமையாக நடந்துகொள்ள வேண்டியிருக்கும். அப்போது, சன்னியாச ஆசிரமத்திலிருக்கும் என்னிடம், தாம் செய்யும் அபராதங்களுக்காக, பிற்பாடு பிராயச்சித்தம் செய்து விடுவதாகக் கூறுவார்.வாழ்க்கை எனக்குக் கற்பித்திருப்பது இதைத்தான். ‘மற்றவர்களுக்காக மட்டுமே வாழ்வதற்காகவே, இறைவன் சில பேர்களைப் படைக்கிறான்!

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP

HARA HARA SANKARA JAYA JAYA SANKAR
 
OM SRI GURUBHYO NAMAH

" இ இரடு பட்டகளை ஹத்ர நதி ஓரதல்லி இதாளே, அந்த யங்குஸ்தர்கிட்டே கொடப்பா"

(இந்த இரண்டு வஸ்திரங்களையும் ஆற்றோரம் உட்கார்ந்திருக்கும் பெண்ணிடம் கொடு)...பெரியவா.

(பெண்ணின் மானம் காத்த கலியுக கண்ணனா பெரியவா)

சொன்னவர்;ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்;டிஎஸ்.கோதண்டராம சர்மா
மறு தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

கர்நாடகம் - மகாராஷ்டிரம் எல்லைப் பகுதியில் யாத்திரை செய்து கொண்டிருந்தோம். ராமதுர்க என்ற ஊரின் அருகில்,வெள்ளம் பெருகி ஓடிக்கொண்டிருந்த ஒரு நதியில் ஆனந்தமாக நீராடினோம். பெரியவாள் நதிக்கரையில் கண்களை மூடி உட்கார்ந்து கொண்டு ஜப-அனுஷ்டானங்களை செய்யத் தொடங்கினார்கள்.

அனுஷ்டானம் முடிந்து எழுந்திருந்ததும், தன் அருகிலிருந்த இரண்டு சிஷ்யர்களைக் கூப்பிட்டு, "உங்கள் மேல்துண்டுகளை கீழே போடுங்கள்" என்றார்கள்.

மிகவும் புதுமையான உத்திரவு!

ஆனாலும் நிறைவேற்றப்பட வேண்டிய உத்தரவு.

பெரியவா, சுற்றுமுற்றும் பார்த்தார்கள். மக்கள் நடமாட்டமே இல்லாத அந்தப் பகுதியில் ஒரு சிறுவன் காணப்பட்டான். ஏழெட்டு வயது இருக்கும். பெரியவா அவனை அருகில் அழைத்தார்கள்.

அந்த நதி, மேற்கிலிருந்து கிழக்காக ஓடிக் கொண்டிருந்தது, இருகரைகளையும் தொட்டுக்கொண்டு, அசாத்திய வெள்ளம். சுழித்து சுழித்திக் கொண்டு படு வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.

பெரியவா, அந்தச் சிறுவனிடம் கன்னடத்தில் சொன்னார்கள்;

" இ இரடு பட்டகளை ஹத்ர நதி ஓரதல்லி இதாளே, அந்த யங்குஸ்தர்கிட்டே கொடப்பா"(இந்த இரண்டு வஸ்திரங்களையும் ஆற்றோரம் உட்கார்ந்திருக்கும் பெண்ணிடம் கொடு)

அந்தச் சிறுவன், இரண்டு மேல் துண்டுகளையும் எடுத்துக் கொண்டு, மேற்கு நோக்கிச் சென்று,கழுத்தை மட்டும் வெளியே வைத்துக் கொண்டிருந்த பெண்ணிடம் கொடுத்தான்.

அந்தப் பெண்,அரைமணிக்கு மேலாகவே உடல் முழுவதையும் தண்ணீரில் மறைத்துக்கொண்டு, ஆற்றோரத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்.!

ஆமாம், வெள்ள வேகத்தில்,கட்டியிருந்த ஆடைகள் போயே போய்விட்டன. வெட்கம். எப்படி வெளியே வருவது" எப்படி வீட்டுக்குப் போவது? படிப்பறியா மக்கள்தான் என்றாலும் பண்பாடு மறக்கவில்லையே?

'இந்த சனங்களெல்லாம் எப்பத்தான் போய்த் தொலைவாங்களோ?' என்று ஸ்ரீமடம் சிப்பந்திகளைப் பார்த்து அந்தப் பெண் நொந்து போயிருக்கக் கூடும்.

ஆனால், யாத்திரைக் குழுவினரின் பார்வை, நூறு அடிக்கு அப்பால் செல்லவில்லை; செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.'

இந்த இக்கட்டான சூழ்நிலை பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது? தொலை நோக்கு (அல்லது, தலை நோக்குப்) பார்வை என்பது இது தானோ?

அரண்மனைவாசியான திரௌபதி, கண்ணனைக் கேட்டு பெற்றாள் ஆடை. இந்தக் கிராமவாசிக்கு மகாசுவாமிகள் தானே வழங்கினார் ஆடை.

அந்தப் பெண்,மேல்துண்டுகளை உடம்பில் சுற்றிக்கொண்டு அங்கிருந்தபடியே ஒரு கும்பிடு போட்டு விட்டு, வீட்டை நோக்கி ஓடிப்போனாள்.

யாத்திரை கோஷ்டி நதி ஓரமாகவே கிழக்கு நோக்கி நகர்ந்தது.

ஆற்றில், வெள்ளம் இன்னும் வடியவில்லை

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP

HARA HARA SANKARA JAYA JAYA SANKAR
 
OM SRI GURUBHYO NAMAH


"அச்யுதானந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத்
நஸ்யந்தி ஸகலா ரோகா ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்!"



(தன்னை முன்னிலைப்படுத்தாமல் .சர்வஜாக்கிரதையாக .பெரியவா நிகழ்த்திய ஒரு அதிசயமும், ஒரு ஆச்சர்யமும்) )

சொன்னவர்;ஓர் அணுக்கத் தொண்டர்.
தொகுத்தவர்; டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

.ஐந்தாறு வைணவர்கள் வந்தார்கள் .பளிச்சென்று திருமண் இட்டுக் கொண்டு,வைணவர்களுக்கே உரிய கரை அமைந்த வேட்டிகளைக் கட்டிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களில் ஒருவர் மட்டும் சற்று வித்தியாசமாக இருந்தார்.சிலை மாதிரி நின்றார்.. மற்றவர்கள் பெரியவாளை வணங்கியபோது அவர் மட்டும் எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை.

"இருந்தாற்போலிருந்து இவருக்கு-என் மாமா- உலகத்தில் எதுவுமே ஞாபகமில்லாமற் போய்விட்டது. இரவு-பகல் தெரியாது; தன் வீடு-பிறர் வீடு தெரியாது! டாக்டர்களுக்கே புரியவில்லை. நூறு டெஸ்ட் எடுத்துப் பார்த்தார்கள்; குழம்பிப் போனார்கள்.தூக்க மாத்திரை கொடுத்து அனுப்பிவிட்டார்கள். பல திவ்ய தேசங்களுக்கு அழைத்துக் கொண்டு போனோம். குணசீலம், சோளிங்கர் போனோம். பெரியவா அனுக்ரஹம் பண்ணணும்."

பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் மகாப் பெரியவாள்.

பின் அவர்கள் எல்லோரையும்,

"அச்யுதானந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத்!
..நஸ்யந்தி ஸகலா ரோகா; ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்!!"

என்று விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணக் கிரமத்தில் சொல்லப்படும் ஸ்லோகத்தை நூற்றெட்டு தடவை சொல்லச் சொன்னார்கள்

.பெரியவாளுடைய அடுத்த ஆக்ஞைதான், எல்லோரையும் கலவரப்படுத்தியது. மடத்திலிருந்த வஸ்தாத் போன்ற முரட்டு ஆசாமியை அழைத்து,அந்தக் கிழவர் தலையில் பலமாகக் குட்டச் சொன்னார்கள்.

அவன் அப்படியே செய்தான்.

ஆச்சரியம்! அடுத்த விநாடி அந்தக் கிழவருக்குப் பூரண ஞாபகசக்தி வந்து விட்டது.

"ஏண்டா ரகு, இங்கே எப்போ வந்தோம்? ஏதோ மடம் மாதிரி இருக்கே? எந்த ஊரு?" என்று கேட்கத் தொடங்கினார்.

நடந்தைவைகளை விளக்கமாகச்சொன்னதும் , பய பக்தியுடன் பெரியவாளுக்கு வந்தனம் செய்தார் . அவருடன் வந்தவர்களுக்கெல்லாம் எல்லையில்லாத மகிழ்ச்சி .."எத்தனையோ நாட்களாகப் பட்ட கஷ்டமெல்லாம் பத்தே நிமிடத்தில் முடிவுக்கு வந்துவிட்டது-பெரியவா அனுக்கிரகத்தாலே" என்று நன்றி சொல்லத் தொடங்கினார் மருமான்.

"பெருமாள் அனுக்ரஹத்தாலேன்னு சொல்லுங்கோ... பெருமாள் தரிசன பலன் இப்போ கிடைச்சுது. நீங்க எல்லாரும் அச்யுதன்-ஆனந்தன்-கோவிந்தனை வேண்டிக் கொண்டீர்கள். கைமேல் பலன்...."

எல்லோருக்கும் பிரசாதமாகப் பழங்களும் .,துளசி தளமும் கொடுத்தார்கள் பெரியவாள்.

அணுக்கத் தொண்டர்களுக்குத் தெரியும்- வழக்கம் போல் இந்த நிகழ்ச்சியிலும் .,பெரியவாள் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவில்லை ; பெருமாளைத்தான் முன்னே நிறுத்தினார்கள்


நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP

HARA HARA SANKARA JAYA JAYA SANKAR
 
OM SRI GURUBHYO NAMAH


"எனக்கு ரெண்டே ஆசைங்க- பெரியவாளிடம் தெலுங்கு சிறுவன் புரந்தர கேசவலு"

(பூஜைக்கு வில்வம் தந்த புரந்தரன்); (புரந்தரனுக்கு மோட்சம் தந்த மஹா பெரியவா!)

கட்டுரை ஆசிரியர்-ரமணி அண்ணா-2012 பதிவு

நன்றி-சக்தி விகடன்

.மஹா பெரியவா ஆந்திர மாநிலத்தில் விஜய யாத்திரை மேற்கொண்டிருந்த சமயம். பெரியவா ஓர் ஊரில் இருந்து மற்றோர் ஊருக்குச் செல்லும் வழியில், திடீரென்று மழை பிடித்துக்கொண்டது. மஹானுடன் சென்றவர்கள், ''பெரியவா, மழை பெய்யுது. பல்லக்கிலே ஏறிண்டுங்கோ பெரியவா'' என்றனர். அதற்கு மஹா பெரியவா,' அதெப்படி? இத்தனைபேர் மழையிலே நனைஞ்சுண்டு நடந்து வரும்போது நான் சிவிகையிலா? 'ஹூம் ஹூம் நானும் நடந்தே வரேன்' என பெரியவர் சொல்லி விட்டார்..மேற்கொண்டு நடக்க முடியாதபடி மழை பலத்தது.

அருகில் இருந்த கிராம எல்லையில் ஒரு பழைய சிவன் கோயில் தெரிந்தது. ஸ்வாமிகள் அங்கே தங்கி மழையில் நனைந்த காவி வஸ்திரத்தை மாற்றிக்கொண்டார். ஸ்வாமிகள் அங்கே தங்கி இருக்கும் விஷயம் ஊரில் இருந்தவர்களுக்குத் தெரிந்தது. அனைவரும் ஸ்வாமிகளை பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்று வணங்கினர். அனைவருக்கும் ஆசி வழங்கிவிட்டு ஸ்வாமிகள் தம்முடைய யாத்திரையைத் தொடர்ந்தார் .

சுமார் எட்டு மைல்கள் சென்றதும் ஒரு கிராமம் வந்தது. அந்த கிராமத்தின் ஜமீன்தார் விஷயம் கேட்டு ஓடிவந்தார். கிராமமே அவரை சூழ்ந்து கொண்டு தங்கள் கிராமத்தில் பெரியவா தங்கி அருள் செய்ய பிரார்த்தித்துக் கொண்டார்கள். பெரியவாளுக்கு என்ன தோன்றியதோ? இங்கு 21 நாள் இருக்கபோறேன் என்று அறிவித்தார். ஊரில் சத்திரம் ரெடி பண்ணப்பட்டது. பக்தர்களுக்காக விறு விறுவென்று கொட்டகையும் போடப்பட்டது.

.மறுநாள் காலையில் பெரியவா ஸ்நானத்துக்குச் சென்றுவிட்டார். அவர் திரும்பியதும் பூஜைக்கு உட்கார்ந்துவிடுவார். ஆனால், பூஜைக்குத் தேவையான வில்வம் எங்குமே கிராமத்தில் எங்குமே கிடைக்கவில்லை. மடத்து காரியதரிசிக்கு ஒரே கவலையாகப் போய்விட்டது. வில்வம் இருந்தால்தான் பூஜை நடக்கும். பூஜை முடிந்தால்தான் பெரியவா பிக்ஷை ஏற்பார். இதில் வேறு பெரியவா 21 நாள் இந்த கிராமத்தில் தங்கப்போவதாகச் சொல்லி இருக்கிறாரே என்ற கவலை வேறு அவருக்கு ஏற்பட்டது. பெரியவா பூஜைப் பொருட்களைப் பார்த்துவிட்டு 'வில்வம் இல்லையா?' என்று கேட்டார். கண்ணில் ஜலம் வழிய காரியஸ்தர் 'பெரியவா, ஜமீன்தார் எல்லா ஆட்களையும் அனுப்பியிருக்கார். வந்துடும்' என்றார். பெரியவா பேசாமல் சத்திரத்துக்கு பின்னால் மாட்டு தொழுவத்தருகில் ஒரு கல் பாறையில் தியானம் பண்ண அமர்ந்துவிட்டார்.

பதினொன்றரை மணியிருக்கும். இன்னும் வில்வம் வரவில்லை. 'சரி இன்று சந்திர மௌலீஸ்வரருக்கு பூஜையோ, பெரியவாளுக்கு பிக்ஷையோ இல்லைபோலிருக்கே. இன்னும் இருபது நாள் வேறு இங்கு இருக்கணுமே' என்று காரியதரிசி பிரமை பிடித்தவர்போல் நின்றுகொண்டு இருந்தார்.

.தியானம் பண்ணிகொண்டிருந்த பெரியவா கண் திறந்தா ஒரு சிறு புன்னகை.. மடத்தில் பூஜா கைங்கர்யம் செய்துவரும் ஒரு பையன் ஓடிவந்தான். தலையிலே ஒரு பெரிய கூடை பச்சை பசேலென்று நிறைய மூணு தள வில்வம்! பெரியவாளுக்கு சந்தோஷம். ''வில்வமே கிடைக்காதுன்னு சொன்னாளே எப்படி கிடைச்சுது??.'யார் இவ்வளவு ஸ்ரத்தையா வில்வதளம் பின்னமாகாமல் பறிச்சிருக்கா?. வில்வம்தான் வந்துடுத்தே பூஜை ஆரம்பிப்போம்'' என்று பெரியவா சொல்லி, சாஸ்த்ரோக்தமா பூஜா நடந்து எல்லாருக்கும் பிரசாதமும் வழங்கி விட்டார். ''யார் வில்வம் கொண்டுவந்தாளோ அவாளை கூப்பிடுங்கோ பிரசாதம் வாங்கிக்கட்டும்'' என்று பெரியவா சொன்னபோது ஸ்ரீ கார்யம் நடுங்கிக்கொண்டே 'பெரியவா, இது யார்கொண்டுவந்ததுன்னே தெரியலே கீழண்டை வாசலிலே மண்டபத்து ஓரத்திலே மறைவா ஒரு திண்ணையிலே இந்தக் கூடை இருந்தது. யார் வச்சதுன்னே தெரியலே.'

'ஒருக்கால் சந்திர மௌலீஸ்வரரே தன்னுடைய பூஜைக்கு எடுத்துண்டு வந்திருக்கலாம்'' என்று பெரியவா சிரிச்சுண்டே சொன்னா. அன்று முழுதும் கோலாகலமா பூஜை, பிரவசனம் எல்லாம் நடந்தது. ஊர் ஜனங்களுக்கு பரம சந்தோஷம். மறுநாள் காலை காரியதரிசி அந்தப் பையனிடம், ''அப்பனே, இன்னிக்கும் மண்டப மூலையில வில்வம் இருக்கா பாரேன்' என்றார். என்ன ஆச்சர்யம்? முந்தின தினம் போலவே அங்கே ஒரு கூடை நிறைய வில்வம் இருந்தது.

வில்வத்தைப் பார்த்த பெரியவா அர்த்தபுஷ்டியுடன் காரியதரிசியைப் பார்த்தார். 'ஆமாம்! பெரியவா இன்னிக்கும் யாரோ கொண்டு வச்ச வில்வக்கூடை தான் இது. “யார் இப்படி ரகசியமா கொண்டு வக்கிறான்னு கண்டுபிடி. நாளைக்கு விடிகாலம்பர முதல்ல நீ கண்காணி. அந்த ஆசாமியை கையோட எங்கிட்ட அழைச்சுண்டு வா''. என்று மகா பெரியவா உத்தரவு பிறப்பித்தார். மறுநாள் அதிகாலையிலயே காரியதரிசி மண்டபத்து ஓரம் மறைந்துகொண்டு வில்வம் யார் கொண்டுவந்து வைக்கிறார்கள் என்று காத்திருந்தபோது எட்டரை மணி சுமாருக்கு ஒரு தெலுங்கு பையன் தலையிலே கட்டு குடுமி அழுக்குவேஷ்டி மூலகச்சம் தலையிலே ஒரு கூடையில் வில்வம் எடுத்துவந்து வழக்கம் போல பந்தக்கால் அருகேவைத்துவிட்டு திரும்பும்போது எதிரே ஸ்ரீ கார்யம் வழி மறித்து நின்றார். பையன் ஸ்ரீ கார்யம் காலில் விழுந்துவணங்கினான்..ஸ்ரீ கார்யம் அரை குறை தெலுங்கிலே 'போய் குளிச்சுட்டு தலையை முடிஞ்சுண்டு நெத்திக்கு ஏதாவது இட்டுண்டு துவைத்த வேஷ்டி வஸ்த்ரத்தொடு, மத்யானம் வா சாமிகிட்டே அழைச்சுண்டு போறேன்''.என்றார். பையன் தலையாட்டிவிட்டு நழுவினான். மூணுமணி சுமாருக்கு வெள்ளை வேஷ்டி நெத்தி பூரா விபூதியும், எண்ணெய் வழிய தலை வாரி குடுமி முடிஞ்சுண்டு பயபக்தியோடு அந்த பையன் மெதுவா உள்ளே நுழைந்தான்.

Contd.../2
 
Contd......

எதையோ தேடிக்கொண்டிருந்த பெரியவா விழிகள் அந்த பையனை பார்த்தவுடன் மலர்ந்தது. நமஸ்காரம் பண்ணி ஓரமா நின்ற பையனை அருகே அழைத்தார்.

'நீ யாரப்பா உன்னோடைய பேர் என்ன?

'புரந்தர கேசவலு''ங்கய்யா.

'தமிழ் பேசறியே எப்படி?'

'அய்யா, எங்கப்பாதாங்க சொல்லி கொடுத்தாங்க. அம்மா ரெண்டு வயசிலேயே போயிட்டாங்க. நாங்கல்லாம் மதுரைபக்கம் உசிலம்பட்டிங்க. அப்பாரு பொழைப்புக்கு இங்க எனக்கு ஆறு வயசு இருக்கும்போது கூட்டியாந்தாரு. ஜமீன்லே மாடு மேக்கற வேலை. பள்ளிக்கூடம் போகலே. அப்பாரு பாட்டுன்னா உயிரையே விட்டுடுவாரு. தியாகராஜ சாமி பாட்டு புரந்தரதாசரு பாட்டு எல்லாம் பாடுவாரு. எனக்கும் சொல்லி குடுத்தாரு. இப்ப இல்லீங்க ரெண்டு வருஷம் முன்னாலே போயிட்டாரு. நான்தான் இப்ப ஜமீன்லே மாடு மேக்கறேன். பன்னண்டு வயசுங்க இப்போ''.

''அது சரி. இந்த ஊர்லே வில்வம் கிடையாதாமே; உனக்கு மட்டும் எப்படி எங்கே கிடைச்சுது?'

'நாலு கல்லு தாண்டி மலை அடிவாரத்துலே மாடு மேய்க்கும்போது ஒருதடவை அப்பாரு ''ஏலே புரந்தரா இதோ அந்தாக்கலே இருக்கு பாரு மூணு இலை மரம் அது தான் வில்வ மரம். சிவன் சாமிக்கு அத போட்டு பூஜைபண்ணுவாங்க. ரொம்ப விசேஷமான இலை'' அப்படின்னு சொன்னாரு.

மூணு நாள் முன்னே .. சாமி மடத்துக்காரங்க கூட இலையைக் காட்டி கேட்டாங்க. மாடு மேய்க்கறவன் கொடுத்தா பூஜை செய்ய வாங்க மாட்டாங்களோ ன்னு தான் யாருக்கும் தெரியாம கூடையிலே தெனமும் கொண்டு வச்சேங்க. சாமி சத்தியமுங்க. மன்னிப்பு கேக்கறேங்க''

மஹா பெரியவா அவனை கண்ணால் பரிபூர்ணமாக பார்த்துக்கொண்டே ''புரந்தரகேசவலு உனக்கு எதுவும் வேணுமா? ஏதாவது ஆசை இருந்தா சொல்லு, மடத்திலேருந்து செய்ய சொல்றேன்'' என்றார்.

'சிவ சிவா!! சாமி எங்கப்பாரு 'ஏலே புரந்தரா எதுக்கும் ஆசை படக்கூடாதுடாம்பாரு. எனக்கு ரெண்டே ஆசைங்க. ஒன்னு இப்போ சொல்றேன் மத்தது சாமி இந்த வூர்லேருந்து போரன்னிக்கு சொல்றேன்'' கண்லே பொலபொலன்னு கண்ணீரோடு அவன் சொன்னதைக் கேட்டு மகாபெரியவா மிக்க பரிவுடன் ''புரந்தரா உன்னுடைய முதல் ஆசையை சொல்லு' என்றார்.

'சாமி எங்கப்பாரு எனக்கு புரந்தரதாசர், தியாகராஜர் பாட்டு எல்லாம் கொஞ்சம் சொல்லி கொடுத்ததை சாமி முன்னாலே நீங்கள் இந்த ஊரிலே இருக்கிறவரை நான் பாடி காட்டி சாமி அதை கேக்கணும்''. மஹா பெரியவா புளகாங்கிதமானார். 'அப்படியே ஆகட்டும்டா. நீ பாடு நான் கேக்கறேன். சந்திர மௌலீஸ்வரர் கிருபை உனக்கு உண்டு. க்ஷேமமா இருப்பே'''. பெரியவா பிரசாதமும் தன் கழுத்திலிருந்து ஒரு துளசி மாலையும் அவனுக்கு கொடுத்து ஆசிர்வதித்தார்.

பெரியவா ஊரில் இருக்கும்வரை தினமும் வில்வமும் புரந்தரன் பாட்டும் பெரியவாளுக்கு கிடைத்தது. அவன்குரல் இனிமையாக இருந்தும் உச்சரிப்பு பிழைகளை அவ்வப்போது பெரியவா திருத்தி அவன் பாட்டில் மகிழ்ந்தார்.

21 ம் நாள் பெரியவா ஊரை விட்டு கிளம்பிட்டா. அனைவருக்கும் ஏக்கம். பிரசாதங்கள் வழங்கி புறப்படும்போதுபெரியவா கண்கள் எதையோ தேடியது. ஓரத்தில் கண்களில் நீரோடு ஒரு கம்பத்தை கட்டிக்கொண்டு புரந்தரன் நின்று கொண்டிருந்தான். அவனை கை காட்டி அருகில் அழைத்து '' புரந்தரா உன்னுடைய இரண்டாவது ஆசையை இன்னிக்கு சொல்றேன்னியே அது என்ன?

'சாமி மாடு மேக்கறச்சே நாங்க பேசிக்குவோம். அப்பாரு சொல்வாரு இத பார்றா புரந்தரா நமக்கு சாமி கிட்டேஒரு ஆசை தான் கேக்கணும். செத்துட்டம்னா மோட்சம் வேணும்னு அது மட்டும் தான் கேக்கனும்பாரு. சாமி எனக்கு மோட்சம் கிடைக்கனும்னு அருள் செய்யுங்க''

மகாபெரியவா அதிர்ந்து போனார். பரப்ரஹ்மம் வாஞ்சையோடு அவனுக்கு அருளிற்று.'' புரந்தரா உரிய காலத்தில் உனக்கு மோட்சம் கிடைக்க நான் சந்திர மௌலீஸ்வரரை வேண்டிக்கறேன். நீ சந்தோஷமா போ'. என்று ஆசிர்வதித்தார். பிறகு ஜமீன்தாரை கூப்பிட்டு இந்த புரந்தரகேசவன் சம்பந்தமா எல்லா விஷயங்களையும் மடத்துக்கு தெரியப்படுதுங்கோ'' என்றார்..பல வருஷங்களுக்கு பிறகு ஒருநாள் மத்யானம் ரெண்டு மணிக்கு பெரியவா திடீரென்று எழுந்து காமாட்சிஅம்மன் கோயில் புஷ்கரணிக்கு சென்று ஸ்நானம் செய்து தியானத்தில் அமர்ந்தார். விட்டு விட்டு ஒருமணிக்கொருதரம் புஷ்கரணியில் ஸ்நானம் ஜபம். ஆறு மணி வரை இது தொடர்ந்தது. ......பெரியவா கரையேறினா.

அப்போ ஏழு மணியிருக்கும் ஒருத்தன் மடத்திலேருந்து வேகமாக சுவாமிகள் கிட்ட வந்தான்.என்ன என்று கண்களால் வினவ ''கர்னூல்லே இருந்து தந்தி. யாரோ ''' புரந்தரகேசவலு சீரியஸ்'' என்று அனுப்பியிருக்கா. யார்னு தெரியலே பெரியவா'' .

காரியதரிசியிடம் பெரியவா சொன்னது இதுதான்:

''அந்த புரந்தர கேசவன் இப்போ இல்ல! சித்த முன்னாடிதான் காலகதி அடஞ்சுட்டான். நா அவா ஊருல போய்த் தங்கியிருந்து கிளம்பற அன்னைக்கு, 'எனக்கு நீங்க மோட்சம் வாங்கி கொடுக்கணும்னு கேட்டான்.' "சந்திரமௌலீஸ்வர ஸ்வாமி கிருபையால உனக்கு அது கிடைக்கும்"னேன். திடீர்னு அவனுக்கு ஏதோ விஷக் காய்ச்சல் ஏற்பட்ருக்கு “”புரந்தர கேசவன் இப்போ இல்லை. விஷ ஜுரத்திலே அவஸ்தைப்பட்டு போய்ட்டு வேறே பிறவி எடுத்துட்டான். அவனுக்கு இன்னும் ஆறு பிறவி இருக்கு. அதுக்கப்பறம் அவன் மோக்ஷம் போகணும்னு சந்திரமௌலிஸ்வறரை பிரார்த்தனை பண்ணி ஆறு பிறவிக்கும் ஸ்நானம் பண்ணி ஜபம் பிரார்த்தனை பண்ணி அந்த நல்ல ஆத்மாவுக்கு என்னுடைய கடமையை செஞ்சுட்டேன்"

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP

HARA HARA SANKARA JAYA JAYA SANKAR
 
OM SRI GURUBHYO NAMAH

"உனக்கு ஏது இவ்வளவு பணம்?"...தன்மேல் நாவிதருக்கு உள்ள பக்தியை வெளிப்படுத்த வேண்டும் என்றே அந்தக் கேள்வியைக் கேட்ட மகாபெரியவா.

( "சாமி..எல்லோரையும் போல உங்களுக்கு என்னால ஏதும் கொண்டுவந்து தரமுடியலையேன்னு, ரொம்ப வருத்தமா இருந்துச்சுங்க.அதனால என்னோட குடிசையை வித்துட்டேங்க.!" -நாவிதரின் பதில்.)

தொகுப்பு-வெ-ஐஸ்வர்யா

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

நன்றி-. குமுதம் லைஃப்

மகா பெரியவா ஆந்திரா பக்கம் பாதயாத்திரை செய்து கொண்டிருந்த சமயம் அது அப்போது ஒருநாள் பௌர்ணமி வந்தது.

சன்யாச தர்மப்படி பௌர்ணமி நாளில் வபனம் (க்ஷவரம் செய்து முடிகளை அகற்றுவது) செய்து கொள்ள வேண்டும். ஆசார்யா யாத்திரை செய்து கொண்டிருந்ததால், தெலுங்கரான நாவிதர் ஒருவரை அதற்காக அழைத்துக் கொண்டு வந்தார்கள்..

ஆந்திராவில் சுற்றுவட்டாரத்திலேயே மகாபெரியவா,மேலும் சில மாதங்கள் யாத்திரை செய்ததால், அடுத்தடுத்த பௌர்ணமி நாட்களிலும் அதே நாவிதர் வந்து வபனம் செய்தார். பிறகு ஒரு கட்டத்தில் அந்த நாவிதர் காஞ்சி மடத்திற்கு அழைத்து வரப்பட்டு,பெரியவா சேவைக்கு அமர்த்தப்பட்டார். ஆரம்பத்தில் மகா

பெரியவாளின் மகத்துவம் எதுவும் அவருக்குத் தெரியாது. யாரோ ஒரு சன்யாசிக்குத்தான் வபனம் செய்கிறோம் என்பதுபோல்தான் அவர் இருந்தார்

ஆனால், நாளாக நாளாக எத்தனை எத்தனையோ ஜன்மாக்களில் செய்த பலனால், மகானைத் தொட்டுத் திருத்தொண்டு செய்யும் பாக்கியம் கிடைத்திருக்கிறது என்று உணர்ந்து கொண்ட அவர், அதனால் பூரண பக்தியோடு வந்து, மிகுந்த சிரத்தையோட பணி செய்தார்.

அப்படி வந்த சமயங்களில் எல்லாம், பக்தர்கள் பலரும் பரமாசார்யாளுக்கு பலப்பல காணிக்கைகளைத் . தருவதைப் பார்த்தார். மகாபெரியவாளுக்கு தானும் ஏதாவது தரவேண்டும் என்ற ஆசை, அவருக்குள் தோன்றி வேகமாக வளரத் தொடங்கியது.

மகா பெரியவாளுக்கு ஏழ்மையான இந்த பக்தர் எதைக் கொண்டு வர முடியும்? காவியேறிய துணியில் நிறைய புற்று மண்ணை மூட்டையாகக் கட்டி,அதையும் மாங்குச்சியையும் (இவை இரண்டும் மகான் உபயோகிப்பவை) ஒவ்வொரு முறையும் எடுத்துவருவார். ஆசார்யா முன் அதை சமர்ப்பித்துவிட்டு, தன் பணியைச் செய்துவிட்டு விடைபெறுவார்

பெரியவா முன் அவர் விரும்பாமலேயே பக்தர்கள் சமர்ப்பிக்கும் பழங்கள், பாதாம், முந்திரி,பிஸ்தா போன்றவை, விலை உயர்ந்த சால்வைகள்,தங்க நாண்யங்கள், இத்யாதி, இத்யாதியான பலப்பல கணிக்கைகளுக்கு இடையே, நாவிதர் சமர்ப்பித்துச் செல்லும் அழுக்கு மூட்டையும் இருக்கும். பக்தியோட அளித்த அதுவே மகாபெரியவாளுக்கு மகத்தான காணிக்கையாகத் தெரியும்.

ஆனால், நாவிதர் அதனை உணரவில்லை. வழக்கம்போல் ஒரு பௌர்ணமியன்று வந்தவர், அன்று புற்றுமண் வைத்து தட்டில்,விலை உயர்ந்த பழங்கள், தேங்காய், திராட்சை என பலப்பல காணிக்கைகளோடு, கொஞ்சம் ரூபாய் நோட்டுக்களையும் வைத்து எடுத்து வந்து சமர்ப்பித்தார்.

வழக்கம்போல்,மடத்து தொண்டர் ஒருவர், அந்த மூங்கில்தட்டை எடுத்துச் சென்று மகான் முன் சமர்ப்பித்தார். இருந்ததை இருந்தவாறே அறியும் மகானுக்கு அது யார் தந்தது என்று தெரியாதா என்ன? இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல், " இன்னிக்கு அந்த தெலுங்கர் வரலையோ?" என்று அறியாதவர் போல கேட்டார்

அவர்தான் கொண்டுவந்து இதை சமர்ப்பித்தார் என்று தொண்டர்கள் சொல்ல, கொஞ்சம் தொலைவில் நின்றிருந்த அந்த நாவிதரைப் பார்த்தார் மகான்."உனக்கு ஏது இவ்வளவு பணம்?"...தன்மேல் அவருக்கு உள்ள பக்தியை வெளிப்படுத்த வேண்டும் என்றே அந்தக் கேள்வியைக் கேட்டார்

"சாமி..எல்லோரையும் போல உங்களுக்கு என்னால ஏதும் கொண்டுவந்து தரமுடியலையேன்னு, ரொம்ப வருத்தமா இருந்துச்சுங்க.அதனால என்னோட குடிசையை வித்துட்டேங்க.!"

"குடிசைன்ன அதுல நீ மட்டும்தான் இருந்தியோ?" மகானின் குரலில் கனிவு தெரிந்தது.

"இல்லீங்க,பொண்டாட்டி,குழந்தைகளோடதான் இருக்கேன்..அவங்களைத் தெருவுல ஒரு மூலையில இருக்கச் சொல்லிட்டு வந்திருக்கேன்க,!"

அவர் சொல்லி முடிக்க, அங்கிருந்த மற்ற பக்தர்களுக்கு, மகாபெரியவா மீது நாவிதர் வைத்திருந்த பரிபூரண பக்தி தெரியவந்தது. அவரது திருப்பணிக்கு நிகராக தாங்கள் எதையுமே செய்ய முடியாது என்று புரிந்து கொண்ட அவர்களின் நெஞ்சம் நெகிழ்ந்து கண்களில் நீர் நிறைந்தது.

குடும்பத்தையே தெருவில் நிறுத்திவிட்டு உடைமைகள் அத்தனையையும் தன் மீது கொண்ட பக்திக்காக சமர்ப்பித்து நிற்கும் நாவிதரின் பக்தி மேன்மையை அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காக மகான் நடத்திய நாடகம்தான், "தெலுங்கர் வரலையா?" என்று அவர் கேட்டது என்பதைப் புரிந்து கொண்ட எல்லோரும், ஜயஜய சங்கர, ஹரஹர சங்கர என்று குரல் எழுப்பினார்கள்.

அடியார்க்கு வீடுபேறு தரவல்ல ஈசனின் அம்சமான மகாபெரியவா, தன்னிடம் பரிபூரண பக்தி கொண்டிருந்த அந்த நாவிதருக்கு நிரந்தரமானதொரு வீட்டைக் கட்டித் தரும்படி உத்தரவிட்டார். அது, கடவுளின் குரலாகவே கேட்டது அந்த நாவிதருக்கு.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP

HARA HARA SANKARA JAYA JAYA SANKAR
 
OM SRI GURUBHYO NAMAH

"அதோ நிற்கிறாளே...ஒரு..மாமி, அவாகிட்டே இந்தப் புடைவையைக்-கொடு!

("தனியே, ரகசியமாக நடந்த அந்தச் சம்பவத்தை எந்த யட்சிணி போய் பெரியவா திருச்செவியில் போட்டது?" என்று ஆச்சர்யப்பட்டுப்போனார், சிஷ்யர்)(ஆமாம் அந்த அம்மையாரும்தான்!)

(பழைய பதிவு-புதிய தலைப்பு)தீபாவளி வார ஸ்பெஷல்

தீபாவளி தினம்,
ஒரு குதிரை வண்டிக்காரன் வந்து பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்துவிட்டுக் கையைப் பிசைந்து கொண்டு நின்றான்.

'என்ன' என்று ஜாடையால் கேட்டார்கள்,பெரியவா.

"வேட்டி..." என்று இழுத்தான்,வண்டிக்காரன்.

பெரியவாள்,பக்கத்திலிருந்த சிஷ்யரிடம், "அவனுக்கு ஒரு வேஷ்டி-துண்டு வாங்கிக்கொடு" என்றார்கள்.

சிஷ்யர் வேஷ்டி-துண்டு கொண்டு வந்து கொடுத்த பின்னர் வண்டிக்காரன் நகரவில்லை.

"சம்சாரத்துக்குப் பொடவை..."

அந்தச் சமயத்தில், புடவை ஏதும் கையிருப்பில் இல்லை.

ஆனால், பெரியவாளோ," அவனுக்கு ஒரு புடைவை கொண்டு வந்து கொடு" என்று சிஷ்யனுக்கு ஆக்ஞையிட்டார்கள்.

சிஷ்யர் பாடு திண்டாட்டமாகப் போய்விட்டது.

பெரியவாள் தரிசனத்துக்காகப் பல பேர் வந்திருந்தார்கள். அவர்களில் ஓர் அம்மாள், தொண்டரின் இக்கட்டைப் புரிந்து கொண்டார். உடனே, சற்றுத் தொலைவில் ஒரு மறைவான இடத்துக்குச் சென்று,தான் கட்டிக் கொண்டிருந்த புதுப் புடைவையைக் களைந்து விட்டு,ஒரு பழைய புடவையைக் கட்டிக்கொண்டு வந்தார்.அந்தப் புதுப் புடைவையையும் சீட்டி ரவிக்கைத் துண்டையும் வண்டிக்காரனிடம் கொடுத்து அனுப்பி விட்டார்.

பெரியவாளுக்கு உடம்பெல்லாம் கண்கள் போலும் . புடவை மாற்று விவகாரம் அவர்களுக்குத் தெரிந்து விட்டது.

சற்றைக்கெல்லாம் ஒரு தம்பதி தரிசனத்துக்கு வந்தார்கள். "பெண்ணுக்குக் கல்யாணம்,..பெரியவா அனுக்ரஹம் பண்ணணும்.."

"கல்யாணப் புடைவைகள், காஞ்சிபுரம் கடைத் தெருவிலே வாங்கினேளா?

""ஆமாம்,..கூறைப் புடைவை, சம்பந்திக்குப் புடைவை, பந்துக்களுக்குப் புடைவைன்னு.. ஏகப்பட்ட புடைவைகள்..."

"பந்துக்களுக்குன்னு வாங்கியிருக்கிற புடைவையிலே ஒரு புடைவையை ஸ்ரீ மடத்துக்குக் கொடுப்பியோ?"

தம்பதிக்கு மகிழ்ச்சி கரை புரண்டது. பெரியவாளே கேட்கிறா..உயர்ந்த புடைவை ஒன்றை பெரியவாள் திரு முன்னிலையில் சமர்ப்பித்தார்கள்.

தொண்டரைக் கூப்பிட்டு, "அதோ நிற்கிறாளே ...ஒரு..மாமி, அவாகிட்டே இந்தப் புடைவையைக் கொடு.....தீபாவளி புதுப் புடைவையை வண்டிக்காரனுக்குக் கொடுத்துட்டு பழசைக் கட்டிண்டு நிற்கிறா...." என்றார்கள்,பெரியவாள்

."தனியே, ரகசியமாக நடந்த அந்தச் சம்பவத்தை எந்த யட்சிணி போய் பெரியவா திருச்செவியில் போட்டது?" என்று ஆச்சர்யப்பட்டுப்போனார், சிஷ்யர்.ஆமாம் அந்த அம்மையாரும்தான்!

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP

HARA HARA SANKARA JAYA JAYA SANKAR
 
OM SRI GURUBHYO NAMAH

"மண்ணாங்கட்டி என்று பெயர் வை"

(கவலைப்படாதே.உங்களுக்கு ஒரு பையன் பிறப்பான்.-தம்பதிகளுக்கு ஆறுதல்கூறி பேர் வைக்கச்சொன்ன-பெரியவா)

(பெரியவாளுடைய சில உத்திரவுகள் ரொம்பவும் வேடிக்கையாக இருக்கும்! + அகச் சுவையும் இருக்கும்) இரண்டு சம்பவங்கள் இன்றைய போஸ்டில்.)

சொன்னவர்; ஓர் அணுக்கத் தொண்டர்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

முப்பத்தைந்து வயதைத் தாண்டாத தம்பதிகள். முகத்தில் சோகம் அப்பிக் கொண்டிருந்தது.

பெரியவாளுக்கு வந்தனம் செய்தார்கள்.

"ஒரே பிள்ளை.....போ..யி..டுத்து..."

இருவரும் கூட்டாக அழுதார்கள்.அழுகை ஓர்
ஆறுதல்.சிறிது நேரத்திற்குப் பின் அழுகை நின்றது.

"இந்தப் பிரபஞ்சத்திலே எதுவும் நம்முடையது இல்லே. பணம் - சொத்து, பிள்ளை - குட்டி,அண்ணன் - தம்பி எதுவுமே சொந்தம் இல்லே.கவலைப்படாதே. உங்களுக்கு ஒரு பையன் பிறப்பான். மண்ணாங்கட்டி என்று பெயர் வை...."

அருகிலிருந்தவர்களுக்கு இதைக் கேட்டதும்,
வாய்விட்டு சிரிக்க வேண்டும் போலிருந்தது.
(ஆனால் சிரிக்கவில்லை)

கொசுறு செய்தி.

ஓர் ஆண்டுக்குப் பிறகு அந்தத் தம்பதிகள்
மண்ணாங்கட்டியுடன் தரிசனத்துக்கு வந்தார்கள்.
..............................................................................................

மரத்தாலான சிறு குடம்,டம்ளர் ,உத்தரிணி,தட்டு, கிண்ணங்கள் கொண்டுவந்து சமர்ப்பித்தார் ஒரு பக்தர்.

பெரியவாள் ஒவ்வொன்றாகக் கையிலெடுத்து
ஆசையுடன் தடவிக் கொடுத்தார்கள்.

பின்னர், குறும்புச் சிரிப்புடன் சொன்னார்கள்.

"இங்கே (ஸ்ரீமடத்தில்) தான் மரப்பாத்திரங்களுக்கு மதிப்பு; குடுமிக்கு மதிப்பு; சந்த்யாவந்தனம் செய்பவர்களுக்கு மதிப்பு...!"

இதை நகைச்சுவை போலச் சொன்னார்களே தவிர,இது லைட்டான விஷயம் அல்ல. பெரியவாளின் அகச் சுவை


நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP

HARA HARA SANKARA JAYA JAYA SANKAR

 
OM SRI GURUBHYO NAMAH

நண்பர்கள் சிலருடன் தீபாவளியை ஒட்டி வேத பாடசாலை மாணவர்களுக்கும் வாத்தியார்களுக்கும் வஸ்திர தானம் செய்தவதற்காகச் சென்றிருந்தேன்.

அப்போது குரோம்பேட்டை சங்கர்லால் ஜெயின் தெருவில் இருக்கும் ஒரு பாடசாலைக்குச் சென்றிருந்தேன். அங்கு சுமார் 50 மாணவர்கள் வேதம் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தற்செயலாக ஒரு வேதக் குழந்தையைப் பார்த்தேன். பால் மணம் மாறாத பருவமோ என்று பிரமிக்க வைத்தது. தன் கல்மிஷம் இல்லாத முகத்துடன் பார்த்தவுடனே அனைவரையும் கவர்ந்து விட்டான் அந்த சுட்டிப் பையன். அவன் பெயர் - கபிலானந்த். வயது 6.

பாடசாலை வாத்தியார் ஸ்ரீ சிவகுமார் மாமாவிடம் கேட்டேன், ‘‘என்ன மாமா... இவ்ளோ சின்னவனா இருக்கானே... இவனோட அப்பாம்மா எங்கே இருக்கா?’’

‘‘இங்கே மெட்ராஸ்ல மாம்பலத்துலதான் இருக்கா?’’ என்றார்.

உடனே, ‘இந்தக் குழந்தை என்ன காரணத்துக்காக இங்கே அனுப்பப்பட்டிருப்பான்?’ என்று எல்லோரும் நினைப்பது போன்ற எண்ணங்களே என் மனதில் ஓடியது.

ஸ்ரீ சிவகுமார் சொன்னார்: ‘‘கபிலானந்தோட அப்பா பிஸினஸ் பண்றார். அவா ஃபேமிலி ரொம்ப நன்னாவே இருக்கு.

இந்தக் குழந்தையோட அப்பா கல்யாணம் ஆன பிறகு ஒரு சங்கல்பம் பண்ணிண்டாராம். ‘எனக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையா பொறந்தா அதை வேதத்துக்குக் கொடுத்துடணும்’னு ஒரு சங்கல்பம் எடுத்துண்டாராம். மகா பெரியவா ஆசைப்படி அவருக்கு மொத குழந்தை ஆணாகவே அமைஞ்சுடுத்து. உடனே வேதத்துக்குக் கொடுத்துட்டார்’’ என்றார் ஸ்ரீ சிவகுமார்.

என்னையும் அறியாமல் என் கண்கள் பனித்து விட்டன.

வேதத்துக்கு என்று குழந்தைகளைக் கொடுப்பவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். மகா பெரியவா பட்ட பாடு வீண் போகவில்லை. வேதம் செழித்துக் கொண்டுதான் இருக்கிறது.

இந்த வேத விருட்சம் நன்றாக வளர, நாமெல்லாம் நீர் ஊற்ற வேண்டும். உரமிட வேண்டும். இவர்களைக் காக்க வேண்டும் என்கிற சங்கல்பம் எடுத்துக் கொண்டாலே போதும்.

தேசத்துக்காக ஒரு மகனைத் தருவதும், வேதத்துக்காக ஒரு குழந்தையைத் தருவதும் - என்னைப் பொறுத்தவரை இரண்டுமே தியாகம்தான்!

நாட்டு எல்லையை பார்டரில் இருந்து கொண்டு ஒரு வீரன் துஷ்டப் படையிடம் இருந்து காப்பாற்றுகிறானே... அதுபோல் ஊருக்குள்ளே இருந்து கொண்டு வேதம் படித்த ஒருவன் துஷ்ட சக்திகளிடம் இருந்து நம்மைக் காப்பாற்றுகிறான்.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH

"குழைஞ்ச சாதம்"

( பக்குவம் வந்தா தானா குழைவு வரும். குழைஞ்சா வாழ்க்கைல எல்லாத்தோடயும் சகஜமா ஒத்துப் போயிடலாம். இது சாதத்துக்கு மட்டுமல்ல. வாழ்க்கையின் சாரத்துக்கும் இதுதான் அடிப்படை...! )

ஸ்ரீமடத்துல மகாபெரியவாளோட பரமேஷ்டி குருக்களோட ஆராதனைகள் வருஷா வருஷம் நடத்தப்படறது வழக்கம்.

அந்த ஆராதனையில கலந்துக்க வேதவித்துக்கள் ,வைதீகர்கள்,பண்டிதர்கள்னு பல நூறு பேர் கலந்துக்குவா. ஆராதனைகள் நடக்கிற நாட்கள்ல அவா எல்லாருக்கும் ஒரே சமயத்துல போஜனம் செய்விக்கறது வழக்கம்.

இந்த வைபவம்னு மட்டுமல்லாம ஸ்ரீமடத்தில் விசேஷ ஆராதனைகள் நடக்கற சமயத்துல எல்லாம் நிறைய பேருக்கு ஒரே சமயத்துல சமைக்க வேண்டியிருக்கும்கறதால அதுக்காகவே விசேஷமா சிலரை அழைக்கறது உண்டு.

இந்த மாதிரி ஸ்ரீமடத்துல வைபவங்கள் ஆராதனைகள் நடக்கற சமயத்துலமெல்லாம் குறிப்பிட்ட ஒரு சமையல்காரரை கட்டாயமா கூப்பிடுவா. ஏன்னா, அவரோட கைப்பக்குவம் அலாதியானது மகாபெரியவாளோட பரம பக்தரான அந்த பரிசாரகர் வேற ஒரு ஊர்ல வேலை பார்த்துண்டு இருந்தாலும், அந்த முதலாளிகிட்டே உத்தரவு வாங்கிண்டு மொத வேலையா மடத்துக்கு வந்து சமையல் கைங்கரியத்தை செய்ய ஆரம்பிச்சுடுவார்.

அப்படி சமைக்கறதுக்கு கூலியா எதையும் அவரா கேட்கவும் மாட்டார். மகா பெரியவாளோட திருக்கரத்தால ஆசிர்வாதம் செஞ்சுதரப்படறதை வாங்கிக்கறதும், அவர் சார்புல ஸ்ரீமடத்துல நடக்கற ஆராதனைல கலந்துக்கறவாளுக்கு சமைச்சுப் போடறதுல கிடைக்கற புண்ணியம் ,மன சந்தோஷத்துக்காகவுமே அவர் வருவார். பலகாலமா இப்படியே வந்துண்டு இருந்த அவருக்கு வயசு அதிகரிச்சுது. அதன் காரணமா ஆரம்பத்துல செஞ்ச மாதிரி பரபரன்னு இல்லாம, கொஞ்சம் மெதுவாகத்தான் அவரால சமைக்க முடிஞ்சுது.

பரமாசார்யா அனுகிரஹம் இருக்கற வரைக்கும் நான் வந்து சமைச்சுத் தருவேன்கறதுல உறுதியா இருந்தார். தொடர்ந்து பலவருஷங்களா இப்படிக் கலந்துண்ட அவருக்கு, ஒரு சமயம் மடத்துல பரமேஷ்டி குரு ஆராதனை நடந்த சமயத்துல மடத்தோட காரியதரிசி தகவலே சொல்லலை. அதனால அவருக்கு விஷயமே தெரியலை. அவர் வராமலே அந்த ஆராதனை முடிஞ்சுடுத்து.

அதை தொடர்ந்து மறுவாரமும் பரமேஷ்டி குருக்கள்ல இன்னொரு குருவுக்கு ஆராதனை வந்தது.இந்த நேரத்துல, அங்கே பக்தருக்கு மனசுல ஏதோ தோணியிருக்கு.வழக்கமா வருஷா வருஷம் இந்த சமயத்துலதானே ஆராதனை நடக்கும்.இந்த வருஷம் இன்னும் கூப்டவே இல்லையே. ஒரு வேளை நம்பளுக்கு கடுதாசி எதுவும் போட்டு அது கிடைக்காமப் போயிடுத்தோ என்னவோ தெரியலையே..எதுக்கும் பார்த்துட்டு வருவோம்னு அவராவே புறப்பட்டு வந்துட்டார்.

வந்தவர் இங்கே ஆராதனைக்கான ஏற்பாடுகள் நடந்துண்டு இருக்கறதைப் பார்த்ததும் மளமளன்னு வேலையில இறங்கிட்டார். மடத்து காரியதரிசிக்கு விஷயம் தெரிஞ்சுது. இருந்தாலும் வழக்கமா வர்றவர்ங்கறதால பேசாம இருந்துட்டார்.

அன்னிக்குத்தான் என்னிக்கும் இல்லாம ஒரு விஷயம், அன்னம் சமைக்கறச்சே நடந்தது. பரிசாரகருக்கு வயசாயிட்டதால, சாதத்தை சரியான பக்குவத்துல இறக்கி வடிக்க முடியலை.அதனால கொஞ்சம் குழைஞ்சுடுத்து. ;அடடா இப்படி ஆயிடுத்தே;ன்னு அவர் சங்கடப்பட்டுண்டு இருந்த சமயத்துல சரியா அங்கே வந்தார், மடத்தோட காரியதரிசி.

"இதுக்குதான் இந்த வருஷத்துலேர்ந்து உங்களைக் கூப்ட வேண்டாம்னு நினைச்சேன்.வயசு ஆயிடுத்து இல்லையா? இனிமே நீங்க ஒதுங்கிக்கறதுதான் நல்லது!" கொஞ்சம் அழுத்தமாகவே சொன்னார்.

அவ்வளவுதான் கண்கலங்கிடுத்து அந்த பக்தருக்கு."தப்புதான் கொஞ்சம் அசந்துட்டேன். இதோ இன்னும் கொஞ்ச நேரத்துல அவாள்ளாம் சாப்ட வரதுக்குள்ள பொலபொலன்னு பூமாதிரி சாதம் வடிச்சு வைச்சுடறேன்..!" தழுதழுப்பா சொன்னவர், அதே மாதிரி சீக்கிரமே சாதம் வடிச்சும் வைச்சுட்டார்

ஆச்சு.ஆராதனைக்கு இடையில எல்லாரும் போஜனம் பண்ணற நேரம் வந்தது. வேத வித்துக்கள் கிட்டத்தட்ட நூறு பேருக்கு மேல வந்து பந்தியில உட்கார்ந்தா.எல்லாருக்கும் தலைவாழை இலைபோட்டு காய்கறியெல்லாம் பரிமாறிட்டு, அன்னம் பரிமாறத் தயாரானா மடத்துத் தொண்டர்கள்.அப்போதான் அங்கே ஒரு அதிசயம் நடந்தது. யாருமே எதிர்பார்க்காதபடி திடீர்னு அங்கே வந்தார் மகாபெரியவா

சாப்ட உட்கார்ந்திருந்தவா எல்லாரும் மரியாதைக்காக எழுந்திருக்க முயல, வேண்டாம்னு சைகையாலேயே தடுத்தார் ஆசார்யா. "எல்லாரும் திருப்தியா போஜனம் பண்ணுங்கோ"ன்னு சொன்ன மகாபெரியவா . .எல்லாருக்கும் பரிமாறத் தயாரா அன்னப் பாத்திரத்தை வைச்சுண்ட இருந்த தொண்டரைப் பார்த்தார்

"என்ன இது, பண்டிதாளுக்கு இப்படியா அன்னம் சமைக்கறது? ஒருத்தர் இலைல பரிமாறின சாதத்துல ஒரு பருக்கை மத்தவா இலைல விழறது கூட தப்பாச்சே.கொஞ்சம் குழைஞ்சுன்னா இருக்கணும்?"

சொன்ன மகாபெரியவா,மடத்தின் காரியதரிசியைப் பார்த்தார். "ஏன் நீ வழக்கமா வர்ற பரிசாரகருக்கு சொல்லலையோ?" தெரிஞ்சும் தெரியாதவர் மாதிரி கேட்டார்..

"இல்லை பெரியவா,அவர் பக்குவம் பண்ணின அன்னம் குழைஞ்சுடுத்துன்னு .." என்று முடிக்காமல் இழுத்தார் காரியதரிசி

"ஓஹோ!..அவருக்கு சாதம் வடிக்கற பக்குவம் தெரியாதுன்னு நீ சொல்லிக் குடுத்தியோ?"-மகாபெரியவா கேட்டதுல கொஞ்சம் எள்ளல் தொனிச்சுது.

அப்புறம் என்ன, தொண்டர்கள் உக்ராண அறைக்கு ஓடிப்போய், பக்தர் முதல்ல வடிச்ச குழஞ்ச சாதத்தை எடுத்துண்டு வந்து பரிமாறினா.

"சாதம்னா கொஞ்சம் குழைஞ்சு இருக்கணும் .அப்போதான் அது குழம்பு,ரசம்னு எல்லாத்தோடயும் பூரணமா சேரும்.அதோட இப்படிக் குழைஞ்சு இருந்தாத்தான் வயத்துக்கும் ஹிதம் புரிஞ்சுதா? இதெல்லாம் வழக்கமா பண்றவாளுக்குத் தெரியும்.நீ புதுசா பக்குவம் சொல்ல வேண்டாம்!"

உக்ராண அறையில் ஓரமா நின்னுண்டு இருந்த அந்த வயசான பரிசாரகருக்கு பரமாசார்யா பேசினது எல்லாமும் தெளிவா காதுல விழுந்தது.இப்போ ரெண்டாவது தடவையா அவரோட கண்ணுல ஜலம் நிரம்பித்து. இது ஆனந்தத்தால நிறைஞ்சதுன்னு சொல்லணுமா என்ன?

ஆராதனையெல்லாம் முடிஞ்சு அந்த பக்தர் புறப்படறச்சே மகாபெரியவா விசேஷமா ஒரு சால்வை போத்தச் சொல்லி, கொஞ்சம் கனிகளும் தாராளமான தட்சணையும் குடுத்து ஆசிர்வாதம் பண்ணி அனுப்பினார். அதுக்கு அப்புறமும் பலகாலம் மடத்துக்கு வந்து தொண்டு செஞ்சார் அந்த பக்தர்.

பக்குவம் வந்தா தானா குழைவு வரும். குழைஞ்சா வாழ்க்கைல எல்லாத்தோடயும் சகஜமா ஒத்துப் போயிடலாம். இது சாதத்துக்கு மட்டுமல்ல. வாழ்க்கையின் சாரத்துக்கும் இதுதான் அடிப்படை...!

மகாபெரியவா இந்த அற்புதத்தை நடத்தி சொல்லாமச் சொன்ன இந்தத் தத்துவம் காரியதரிசிக்கு மட்டுமல்லாம அங்கே இருந்த வேதவித்துகள் எல்லாருக்குமே தெளிவா புரிஞ்சுது.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH

சொன்னவர் ஸ்ரீமடம் பாலு &சங்கர பக்த ஜன சபாவின் செயலர் வைத்தியநாதன்

‘அதுவொரு தீபாவளி சமயம்!

எல்லோரும் புடவை, வேஷ்டி எல்லாம் கொண்டு வந்து தேனம்பாக்கத்தில் அவரிடம் கொடுப்பார்கள். அங்கே கிணற்றுக்குப் பக்கத்தில் ஒரு தொட்டி உண்டு. அதில் ஜவுளி வகையறா எல்லாவற்றையும் போட்டு மூடி வைத்துவிடுவோம்…”- மீண்டும் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தில் துவங்கியது பாலுவின் உரையாடல்

.”குண்டு-ன்னு ஒரு பையன்… 18, 19 வயசு இருக்கும். இங்கே எடுபிடி வேலைகள் பார்த்துக்கொண்டிருந்தான் பெரியவாளுக்கு அவன் மேல ரொம்பப் பிரியம். ஒரு நாள் காலம்பர எங்களையெல்லாம் கூப்பிட்டுத் தொட்டியைக் காட்டினார். தொட்டி காலியாக இருந்தது; உள்ளே ஜவுளி எதுவும் இல்லை. எப்படி அத்தனையும் மாயமா மறைஞ்சு போச்சுன்னு எங்களுக்குத் தெரியலை.

மகா பெரியவா எங்களைக் கூப்பிட்டு, நிறைய பட்சணம்லாம் வாங்கிட்டு வரச் சொன்னார். தீபாவளி அன்னிக்கு எண்ணெய் ஸ்நானம் பண்ண எண்ணெய் வேணுமே… அதையும் வாங்கிட்டு வரச் சொன்னார். எங்களுக்கு ஒண்ணுமே புரியலை. பட்சணம், நல்லெண்ணெய் வந்து சேர்ந்தது. பட்டாசு வேணும்னு சொன்னார் பெரியவா. அதுவும் வந்தாச்சு!

எல்லாவற்றையும் வாங்கி வைத்துக்கொண்டு, ‘இங்கே வேலை செய்றானே ஒரு பையன் குண்டுன்னு… அவனுக்கு வெறுமனே வேட்டியும் புடவையும் இருந்தா போறுமா, தீபாவளி கொண்டாட?! அதை மட்டும் வெச்சுண்டு, பாவம் அவன் என்ன செய்வான்? நல்லெண்ணெய், பட்சணம், பட்டாசு எல்லாம் கொண்டு போய்க் கொடுத்துட்டு வாங்கோ… சட்டுனு போங்கோ!’ என்றார் பெரியவா.

அப்புறம்தான் எங்களுக்கு, புடவை- வேஷ்டிகளை எல்லாம் எடுத்துண்டு போனது குண்டுதான்னு தெரிஞ்சுது. ஆனா, பெரியவாளுக்குத் துளிக்கூட அவன் மேல கோபம் வரலை!” என்ற பாலு, சற்று இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்…

“பெரியவாளுக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை… முக்குறுணிக் கொழுக்கட்டை செய்து பிள்ளையாருக்கு நைவேத்தியம் பண்ணனும்னு…” என்றவர், அது பற்றி சொல்ல தொடங்கினார். பாலு

.”மதுரை, திருச்சி, ராமேஸ்வரம்னு சில தலங்களில் முக்குறுணிப் பிள்ளையார் உண்டு. முக்குறுணின்னா… ஆறு படி அளவு. பெரியவா அரிசி அரைச்சுட்டு வரச் சொன்னார். பிரம்மசாரி ராமகிருஷ்ணன்கிட்ட ஐம்பது தேங்காயை உடைச்சு துருவிக் கொண்டுவரும்படி சொன்னார். பூரணம் பண்ணி ஒரே கொழுக் கட்டையா செய்யணும். பெரியவா ஆலோசனைப்படி எட்டு முழ வேட்டியில் கட்டி, வரதராஜ பெருமாள் கோயில்ல இருந்து பெரிய அண்டா கொண்டு வந்தோம். அன்னிக்கு காலைலேர்ந்து சாயங்கால வரைக்கும் கொழுக்கட்டை வெந்தது.சரி… பிள்ளையாருக்கு நைவேத்தியம் பண்ணணுமே. கொழுக்கட்டையை பெரியவா முன்னாடி வைத்ததும்..

.‘தேனம்பாக்கத்துல ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு. அங்க வாசல்படியில் வெச்சுட்டு வந்துடுங்கோ’ன்னார் பெரியவா.

பக்தர்களும் அப்படியே செஞ்சாங்க. அங்க என்னடான்னா… கோயில் வாசல்ல பெரிய மூட்டை கணக்கா இருந்த அண்டாவைப் பார்த்ததும், ஊர் ஜனங்க என்னவோ ஏதோன்னு பதறிட்டாங்க. அப்புறமா, அது பிள்ளையாருக்கான நைவேத்தியம்னு தெரிஞ்சதும், கட்டைப் பிரிச்சிருக்காங்க. உள்ளே பிரமாண்ட கொழுக்கட்டை!எல்லாருமா பிரிச்சு சாப்பிட்டதுக்குப் பிறகு, ‘சாமி, கொழுக்கட்டை நல்லா இருந்தது’ன்னு பெரியவாளை நமஸ்காரம் பண்ணினாங்க. பெரியவாளுக்கோ, பிள்ளையாருக்கு நைவேத்தியம் பண்ணணும்கற ஆசை நிறைவேறியதோட, ஜனங்களுக்கு அந்தக் கொழுக்கட்டையைத் தின்னக் கொடுத்த திருப்தி!” என்ற பாலு,

அடுத்து ஒரு கிரகணத்தன்று நடந்த சம்பவத்தை விவரித்தார். ”அந்த முறை பெரியவாளோட அனுஷ நட்சத்திரத்துலேயே கிரகணம் பிடிச்சது. கிரகணம் விட்டு ஸ்நானம் எல்லாம் முடிஞ்சதும், தானம் செய்ய உட்கார்ந்தார் பெரியவா. நிறைவா பசு மாடு கொடுக்கணும். திருவட்டீசுவரன்பேட்டை வெங்கட்ராமன், பசு மாட்டுக்குப் பதிலா மட்டைத் தேங்காயை எடுத்து வைத்தார். அதாவது, பசு தானம் செய்ய முடியலைன்னா அதுக்கு ப்ரீத்தியாக மட்டைத் தேங்காய் கொடுப்பார்கள். ஆனா, மகா பெரியவா கோவிச்சுக்கிட்டார். ‘என்னை ஏமாத்தப் பார்க்கறியா? மாட்டைக் கொண்டு வான்னா, நல்லதா ஒரு மாட்டைத்தான் கொண்டு வரணும்’னுட்டார்.

அப்புறம், எப்படியோ நல்லதொரு கறவை மாடாகக் கொண்டு வந்து நிறுத்தினாங்க. அதைத் தானம் கொடுத்த பிறகுதான் பெரியவாளுக்குத் திருப்தி! அதேபோன்று பூதானத்துக்கு ப்ரீத்தியா சந்தனக் கட்டை கொடுக்கலாம். ஆனால், அப்போதும் பெரியவா, கூடலூர் கல்யாண சுந்தரமய்யர் கொடுத்த ஒன்றரை ஏக்கர் நிலத்தை வேறு ஒருவருக்கு அப்படியே தானமாகக் கொடுத்துவிட்டார்!விளாப்பாக்கம் என்ற ஊரில் குமரேசன்னு ஒரு பக்தர். அவர் குடும்பத்துல யாரோ பில்லி-சூன்யம் வெச்சுட்டாங்க. குளிச்சு உலர்த்தும் ஈரத்துணியும் தீப்பிடிக்குமாம். அவர் பெண்ணுக்குக் கண்ணைத் திறக்கவே முடியாது. ஜோசியம்லாம் பார்த்தும் பலனில்லை. அவர், தன் பெண்ணை பெரியவாகிட்ட அழைச்சுட்டு வந்தார்.

‘யாரோ என் பெண்ணோட கண்ணைக் கட்டிட்டா! பெரியவாதான் அனுக்கிரகம் பண்ணணும்’னு கதறினார். பெரியவா, அந்தப் பெண்ணோட கண்ணையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தார். அப்புறம், அவளை துர்கை சந்நிதிக்கு அழைச்சுட்டுப் போகச் சொன்னார். அம்பாளுக்கு முன்னாடி நிறுத்தி, கண்ணைத் திறக்கும்படி சொன்னார். என்ன ஆச்சரியம்..! அவளால் கண்ணைத் திறக்க முடிஞ்சுது. கண்ணைத் திறந்ததும், எதிரே துர்கை தரிசனம்… சிலிர்த்துப் போயிட்டா. அவளுக்குப் பார்வை சரியானதோடு, அன்னியிலேர்ந்து வீட்டில் துணிமணிகள் தீப்பற்றி எரிவதும் நின்னு போச்சு!”-

பாலு சொல்லி முடிக்க, அந்தக் கருணைக் கடாட்சங்களை எண்ணி, நம்மையும் அறியாமல் காஞ்சி தெய்வத்தை தொழுது பணிகிறது நம் உள்ளம். நம்முடைய இந்த சிலிர்ப்பை அதிகப்படுத்தியது, சங்கர பக்த ஜன சபாவின் செயலர் வைத்தியநாதன்.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 

Latest ads

Back
Top