• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

காட்டுக்குப் போனேனோ பெருமாளைப் போலே!!

காட்டுக்குப் போனேனோ பெருமாளைப் போலே!!

காட்டுக்குப் போனேனோ
பெருமாளைப் போலே!!


கலக்கிய
மாமனத்தனளாய்க்
கைகேயி வரம் வேண்ட,
மலக்கிய
மாமனத்தனனாய்
மன்னவனும் மறாதொழிய,
குலக்குமரா!
காடுறையப் போ! என்று
விடைகொடுப்ப
கானகம் சென்றவன் இராமன்!!


கைகேயி மிகவும் நல்லவள்!
பரதனை விட
இராமன் மீது பேரன்பு கொண்டவள்!!
அந்த நல்ல மனம்
மந்தரையின் பேச்சால்
கலங்கிப் போனது!!
என்ன கேட்கிறோம்
என்பதனையே உணராமல்,
கேட்கிறாள் கைகேயி!
தசரதனும்
கலக்கத்துடன் விடை கொடுக்க
கானகம் புகுந்தான் காகுத்தன்!!


தசரனுக்கு
கைகேயியின் மேல்
கொள்ளைக் காதல்!
கைகேயியுக்கும் அப்படியே!!


தசரத குமாரனை
காடுறைய அனுப்புவதும்,
தன் மகனை
அரசாள வைப்பதுவும்,
அவளுக்கே பிடிக்கவில்லை!!


அந்த கலங்கிய குட்டையில்
மீன் பிடித்தவள் மந்தரை!
என்றோ சிறுவனாய்
இராமன் செய்த பிழைக்கு
இன்று வஞ்சனை தீர்க்கிறாள்!!


கூனி இல்லையேல்
இராமன் கதை இல்லை!
சகுனி இல்லையேல்
கண்ணன் கதை இல்லை!!


இருவரின்
அவதார நோக்கங்களை
அவர்கள் அடைய
பாதை வகுத்தவர்கள் இவர்களே!!


தசரதன் கெஞ்சுகிறான்!
இன்னமும் சில நாழிகைகள்
காலம் பொறுத்திருந்தால்
கைகேயி மனம் மாறியிருப்பாள்!!
கணவன் மீதும்
இராமன் மீதும்
அத்தனை பாசம் அவளுக்கு!!


திருமாலின் அவதாரம்!
மன்னுபுகழ் கோசலை தன்
மணிவயிறு வாய்த்தவன்!
தன் அரண்மணையில்
குலவழியாய் வந்த
அரங்கன் விக்கிரகத்திற்கு முன்
நின்று வேண்டுகிறான்!!
தனக்கு முன்
தானே நிற்கிறான்!!


அரங்கனே!
பாற்கடலில் தோன்றிய பரமனே!!
நின் திருமேனி
நான்முகனால் பூஜிக்கப்பட்டது!!
பிரம்மன் வசமிருந்த
நின்னைப் பெற்ற எங்கள்
முன்னவர் இஷ்வாகு தன்னால்
அயோத்தியில் அமர்ந்தவனே!!


என் தந்தைக்கும்
சிற்றன்னைக்கும் இடையே
வாதப்போர் நடக்கிறது!!
இருவருமே என் மேல்
நிறையப் பாசம் கொண்டவர்கள்!!


என் மேல் உள்ள பாசத்தால்
கைகேயி
வரங்களைத் திரும்பப்
பெறுதல் கூடாது!!
நான் கானகம்
செல்ல வேண்டும்!
முனிவர்களைக் காக்க வேண்டும்!
நல்லவர்களின் ஆசிகளைப்
பெறுதல் வேண்டும்!!
தசமுகனை
இந்த தசரதன் மகன்
சம்ஹாரம் செய்ய வேண்டும்!!
அரங்கனே!
நீயே அருள வேண்டும்!!


கைகேயி மனம் மாறவில்லை!
தசரதன் மூர்ச்சையடைய,
மன்னவன் ஆணையென்று
சிற்றன்னை சொல்ல,
முகம் மலர்ந்தவனாய்,
அரங்கனுக்கு நன்றி சொல்லி,
தன்னவளோடும்
தம்பியோடும்
கானகம் சென்றான் இராமன்!!


எம்பெருமானாரே!
இந்தப் பக்குவம்
எனக்கு இருக்கிறதா?


நாளை மன்னனாகப் போகிறோம்,
இன்று கானகம் போக
உத்தரவு வருகிறதே என்று
மனம் கலங்காமல்,
மகிழ்ந்து சென்றானே இராமன்,
அந்த ஞான விசேஷம்
அடியாளுக்கு இருக்கிறதா?


பாழும் வயிற்றுக்காய்
பஞ்சம் பிழைப்பதற்காய்
வைத்தமாநிதியை விட்டு
வெளியேறுகிறேனே!
என் ஞானம் இவ்வளவுதான்!!


பக்குவம் இல்லாத நான்
எங்கிருந்தால் என்ன?
எம்பெருமானாரே!!
 

Latest ads

Back
Top