• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

என்றென்றும் அன்புடன் - thodarkathai - anamika -

Status
Not open for further replies.
அத்தியாயம் - 6
********************


டிராவல் ஏஜென்சியின் அலுவலகம்.


பணத்தை செலுத்தி விமான பயணச் சீட்டை பெற்றுக் கொள்ளுமாறு அங்கே கூறவும், நிதிலா சங்கடமாய் உணர்ந்தாள்.


"கேன் யூ டேக் திஸ் ஜுவல்ஸ், ப்ளீஸ்?"


பணிவாய் கேட்டு, நிதிலா கவுண்டரில் நகைகளை வைத்ததும், அந்த அமெரிக்கப் பெண்மணி பதறி எழுந்து விட்டாள்.


"நோ,நோ, வீ டோண்ட் டேக் ஆர்டிகில்ஸ். யூ ஹாவ் டு பே இன் கேஷ்!"


அவள் குரல் உயரத் தொடங்கவும், பக்கத்து அறையில் இருந்த ஒருவர் வந்தார்.


"வாட்ஸ் த ப்ராப்ளம் கேதி?" என கேட்டுக் கொண்டே வந்தவர், நிதிலாவைப் பார்த்ததும்,


"என்னம்மா? என்ன விஷயம்?"


என்று தமிழில் கேட்டார்.


நிதிலா காதில் அவருடைய தமிழ் நிஜமாகவே தேனாய் பாய்ந்தது.


"நீங்க ?"


"என் பேர் கிருஷ்ணசாமி; இங்கே கே.சாமி. இங்க தான் வேலை பண்றேன். உனக்கு என்ன கஷ்டம், சொல்லும்மா?"


பரிவாக கேட்டார் சாமி.


"ஸார், என் ஹஸ்பெண்ட் நடத்தை சரியில்லை, ஸார்! அவருக்குத் தெரியாம நான் இந்தியா போறேன். டிக்கெட் பணத்துல குறையுது. இந்த நகையை வைச்சுக்கிட்டு நீங்க தான் எனக்கு ஹெல்ப் பண்ணனும், சார்."


"இரும்மா; ஆபிஸ் ரூல்ஸ்னு ஒண்னு இருக்கு, நாங்க நகையை வாங்கிக்கிட்டு டிக்கெட் கொடுக்க முடியாது, ஆனா...உன்னைப் பார்த்தாலும் பாவமா இருக்கு, நம்ம ஊர்ப் பொண்ணு இங்கே வந்து கஷ்டப்படறே,...ம்ம்ம்ம்.."


அவர் யோசித்தார்.


உற்றார், உறவினர், தாய்நாடு - எல்லாவற்றையும் விட்டு கணவனோடு வரும் பெண்களில் சிலர் இப்படி ஏமாற்றப்பட்டு, கொடுமைப்படுத்தப்படுவது அவருக்கும் தெரியும். பாவம், இப்படிப்பட்ட ஒரு பெண்ணுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்தே ஆக வேண்டும்!


"வேணும்னா ஒண்ணு செய்யறேன்மா, உன் டிக்கெட்டுக்கு நான் பணம் கட்டிடறேன், நீ ஊருக்குப் போய் அப்புறம் எனக்கு அதை அனுப்பிடு."


அவர் சொல்லி முடிப்பதற்குள் நிதிலா தன் வளையல்கள், செயின்,நெக்லெஸ் எல்லாவற்றையும் அவரிடம் கொடுத்தாள்.


"என்னம்மா இது?"


"சார், முன்பின் தெரியாத என்னை நம்பி இந்த அளவு உதவி பண்ண தயாரா இருக்கீங்க. டிக்கெட்டுக்கு பதிலா இந்த நகையை வைச்சுக்குங்க, சார்"


"என்னம்மா இது? நான் என்ன கொள்ளைக்காரனா? இந்த நெக்லெஸ் நான் கட்டப் போற பணத்துக்கு சரியா இருக்கும், இதை மட்டும் எடுத்துக்கறேன், அதுவும் நீ இவ்ளோ வற்புறுத்தரதுனால, மத்த நகையெல்லாம் பத்திரமா உள்ளே வைம்மா..." என்று நிதிலாவிடம் மற்ற நகைகளை திருப்பிக் கொடுத்தார்.


கேதி அவர்கள் பேசிக் கொள்வது புரியாமல் பார்க்க, சாமி இரண்டே வரிகளில் கூறினார்.


"ஷி இஸ் இன் சம் டெரிபிள் பிராப்ளம்; ஷி வாண்ட்ஸ் டு கோ டு இண்டியா இம்மிடியட்லி."


நிதிலா ஏதோ கஷ்டத்தில் இருக்கிறாள் என்பதை கேதி ஊகித்திருந்தாள். சாமி விஷயம் சொன்னதும் நிதிலா அருகில் வந்து,


"டோண்ட் வொர்ரி, மேம். எவ்ரிதிங் வில் பீ ஆல்ரைட்! மே த லார்ட் பீ வித் யூ!"


என்று அவள் கை பிடித்து ஆறுதல் சொல்லவும், நிதிலாவிற்கு கண்கள் பனித்தன.


முன்பின் தெரியாத தனக்கு அன்புடன் ஆறுதல் சொன்ன கேதி மற்றும் கடவுள் போல வந்து உதவிய சாமியிடம் நன்றியோடு விடை பெற்றுக் கொண்டு கிளப்பினாள்.


விமானம் பறந்து கொண்டிருந்தது.


கண்களை மூடிக் கொண்டு சீட்டில் சாய்ந்திருந்த நிதிலாவின் மனதில் எண்ணங்கள் அலை அலையாய் எழும்பிக் கொண்டிருந்தன.


போன முறை செய்த பயணத்திற்கும், இதற்கும் தான் எவ்வுளவு வித்தியாசம்?


புதிய வாழ்வின் எதிர்பார்ப்பில், புதிய துணை ஏற்பட்ட மகிழ்ச்சிப் பயணம் அது. கவலைகள் ஏதுமின்றி,முதல் விமானப் பயணம் தரும் கிளர்ச்சியும், சிலிர்ப்பும் நிறைந்த அனுபவமாக அன்றைய பயணம் இருந்தது.


ஆனால் இன்றைக்கோ....?


மண வாழ்க்கையைத் தொடங்கி ஒரு வருடம் கூட ஆகாத நிலையில், அதை பாதியில் நிறுத்தி விட்டு, கணவன் தந்த நோயோடு, கவலையோடு செல்லும் அவல நிலை. இனி என்ன செய்வது?


பெற்றோரிடத்தில் இந்த துயரச் செய்தியை எப்படிக் கூறுவது? ஊரும், உறவும் விழி விரியப் பார்த்திருக்க, பிரம்மாண்டமாய் திருமணம் முடித்து விமானம் ஏறிய அன்பு மகள், இப்படி பட்ட மரமாய் ஒற்றையில் திரும்பக் கூடும் என்று அவர்கள் கனவில் கூட எண்ணி இருப்பார்களா?


ஊரும், உறவும், சுற்றமும் கேட்கப் போகும் கேள்விகளை எப்படிச் சமாளிக்கப் போகிறோம்?


கடைசியாக ஒரு முடிவு மட்டும் அவளால் எடுக்க முடிந்தது.


"திருச்சிக்குப் போக வேண்டாம்" என்பதே அந்த முடிவு.


திரும்பிய பக்கமெல்லாம் உறவினரும், நண்பர்களும் திருச்சியில் நிறைந்திருந்தனர். எப்படியும் ஒரு மாதத்திற்குள் எல்லா விஷயமும் ஊரில் பரவி விடும். அதன் பின் வருவோர்,போவோர் எல்லாம் அவள் காயங்களை கீறிக் கொண்டே இருக்கும் நிலை தான் மிஞ்சும்.


காயங்களைக் கீறி விட இரத்தம் பெருகுவது போல நிதிலாவின் மனம் இன்னும் பலவீனமாகவே இருந்தது. எந்த நிமிடமும் கண்ணீர் அணை உடைந்து பெருகும் வெள்ளமாய் வரக் காத்திருந்தது.


இந்த நிலையில் திருச்சிக்கு செல்வதில் அர்த்தமே இல்லை. காயம் ஆறிய பிறகு சென்றால் தான், தன்னால் பிறரை எதிர் கொள்ள முடியும். இந்த முடிவில் மட்டும் நிதிலா உறுதியாய் இருந்தாள்.


விமானம் சென்னையில் இறங்கியது.


விமான நிலைய சோதனைகள் முடிந்து, காத்திருந்த டாக்ஸிகளைப் புறக்கணித்து, எதிரில் இருந்த ரயில் நிலையத்தை அடைந்தாள்.


அவளுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பெண் "எக்மோர் ரெண்டு" என்று கேட்டு டிக்கெட் வாங்கினாள்.
நிதிலா தனக்கும் ஒரு எக்மோர் டிக்கெட் கேட்டு வாங்கிக் கொண்டாள். ரயில் ஆடி, ஆடி மெல்ல செல்லத் துவங்கியது.


நிதிலாவின் மனதில் சடாரென்று அந்த எண்ணம் தோன்றியது. 'எப்படியும் கருவைக் கலைக்க வேண்டும். வாழ்க்கைத் துணையும் இல்லாமல், மழலை இனிமையும் இல்லாமல் எதற்கு இந்த வாழ்க்கை வாழ வேண்டும்? இப்படியே ஓடும் வண்டியில் இருந்து குதித்து விடலாமா?'


அதற்குள் ஒரு ஸ்டேஷன் வந்து விட, ரயில் நின்றது. மறுபடி புறப்படும் போது, நிதிலா எழுந்து வாசற் பக்கம் விரைந்தாள். அங்கே ஒரு குருட்டுப் பிச்சைக்காரன் இவர்கள் பெட்டிக்குள் ஏற முயற்சித்துக் கொண்டிருந்தான்.


சில வினாடி இடைவெளியில் கீழே தண்டவாளத்தில் தவறி விழ இருந்த அவனை நிதிலா கை பிடித்து இழுத்து பெட்டிக்குள் வர வைத்து விட்டாள்.


உத்தேசமாய் அவள் இருந்த திசையை அனுமானித்து அவன் கை கூப்பி வாழ்த்தினான்:


"என் உயிரைக் காப்பாத்தின மகராசி! நீங்க நூறு வருஷம் நல்லா இருக்கணும்மா..!"


அந்த வாழ்த்தைக் கேட்ட நிலையில் நிதிலா தன் தற்கொலை எண்ணத்தையும் மறந்து அப்படியே சற்று நேரம் திகைத்து நின்று விட்டாள்.


விரக்தியும், சிரிப்பும் அவள் உள்ளத்தில் ஒன்றாய் எழுந்தன.


எழும்பூர் பெயர்ப பலகை வந்து வட, வண்டியில் இருந்து இறங்கினாள். அதே நேரம், "ஹலோ மிஸஸ். நிதிலா!" என்று ஒரு குரல் அவளை அழைத்தது.


(தொடரும்......)
 
Dear Friends,

"Pookalil bethamenna" a short story written by me is published in vallamai e-magazine dec 10 issue. Those interested, pls read and share your views.

Thanks
anamika
 
அனாமிகாவுக்கு,

உங்கள் இந்தக்கதை நன்றாக இருக்கிறது. சற்றும் மிகைப்படுத்தாமல், இது இப்படி நடக்கக்கூடும் என்று நம்பும்படியான விஷயங்களை மட்டுமே எழுதுவதால் நன்றாகவே அமைந்துவிடுகிறது. எந்த இடத்திலும் தங்களது அறிவுத்திறனையோ அதன் ஆழத்தையோ காட்ட முயலாமல் எழுதியிருப்பதும் நன்றாக இருக்கிறது. நீங்கள் முன்வந்து நிற்காமல் உங்களது கதையின் பாத்திரங்களே முன்னிற்பது உங்கள் திறமையை காட்டுகிறது.வாழ்த்துக்கள்.
 
வாசம் இல்லாமலே வண்ண பூ பூக்கலாம்..

வாசல் இல்லாமலே காற்று வந்தாடலாம்...

நேசம் இல்லாத வாழ்வில் பாசம் உண்டாகுமோ..?


Tvk
 
அனாமிகாவுக்கு,

உங்கள் இந்தக்கதை நன்றாக இருக்கிறது. சற்றும் மிகைப்படுத்தாமல், இது இப்படி நடக்கக்கூடும் என்று நம்பும்படியான விஷயங்களை மட்டுமே எழுதுவதால் நன்றாகவே அமைந்துவிடுகிறது. எந்த இடத்திலும் தங்களது அறிவுத்திறனையோ அதன் ஆழத்தையோ காட்ட முயலாமல் எழுதியிருப்பதும் நன்றாக இருக்கிறது. நீங்கள் முன்வந்து நிற்காமல் உங்களது கதையின் பாத்திரங்களே முன்னிற்பது உங்கள் திறமையை காட்டுகிறது.வாழ்த்துக்கள்.

தங்களின் விரிவான பாராட்டுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்!


நான் எழுதிய மேலும் சில கதைகளும் இங்கு வெளியாகி உள்ளன.


யாதும் ஊரே - நாவல்
உறவுகள் தொடர்கதை - நாவல்
யமுனா - குறுநாவல்


கவிதைப் பூக்கள் - கவிதைகள்
ஹைகூ கவிதைகள்


அர்ச்சனைப் பாக்கள் - கடவுள் பாடல்கள்


கதை கதையாம் - சிறுகதைகள்


லைப்ரரி - நூல்களின் விமர்சனம்


படித்து மகிழ்ந்து தங்கள் கருத்துக்களை அனுப்புங்கள்!


அன்புடன்
அனாமிகா




tamil ebooks preview - emagaz.in
 
Dear Anamika,

I will make time to read them and get back with my comments. Thank you for providing the link.
Cheers.
 
அத்தியாயம் - 6
**********************


"ஹலோ, நீங்க நிதிலா தானே?"


மறுபடியும் அந்த நபர் கேட்க, நிதிலா தலையசைத்தாள். ஆனால் அவர் யாரென்று தெரியவில்லை.


"நீங்க யாருன்னு..?"


"ஐ'ம் சிவராம், நர்மதாவோட ஹஸ்பெண்ட்!"


"உங்களைப் பார்த்ததுலே ரொம்ப சந்தோஷம், ஆமாம், நர்மதா எப்படி இருக்கா?"


நிதிலா படபடவென்று கேள்விகள் கேட்டாள்.


"கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க. நீங்களே நேர்ல வந்து உங்க ஃப்ரெண்ட் எப்படி இருக்கானு பார்த்துச் சொல்லுங்களேன்."


இந்த சூழலிலா முதன்முதல் நர்மதாவின் வீட்டுக்குப் போக வேண்டும்?


நிதிலா தயங்க,


"நான் மட்டும் தனியா வீட்டுக்குப் போய் உங்களைப் பார்த்தேன்னு சொன்னா, நர்மதா எனக்கு பனிஷ்மெண்ட் கொடுத்துடுவா. அப்புறம் உங்க இஷ்டம்."


நிதிலா நர்மதா வீட்டுக்குச் செல்ல ஒப்புக் கொண்டாள்.


"இங்க ஒரு ஃப்ரெண்டை அனுப்பி வைக்க வந்தேன்.பார்க்கிங்ல கார் இருக்கு, வாங்க போகலாம்"


சிவராம் கலகலப்பான பேர்வழி; நர்மதாவைப் போன்ற டைப்; நர்மதா ரொம்ப கொடுத்து வைத்தவள் என்று நிதிலா மகிழ்ந்தாள்.


காரில் ஏதேதோ பேசிக் கொண்டே வந்த சிவராம், திடீரென,


"நான் தான் சிவராம்னு சொன்னதும் நம்பிட்டீங்க, சரி, அதை விடுங்க. நான் எப்படி உங்களை கண்டுபிடிச்சேன்னு சொல்லுங்க, பார்க்கலாம்?"


"அட, ஆமாம்! நான் தான் உங்க கல்யாணத்துக்குக் கூட வரலையே, எப்படி என்னை கண்டுபிடிச்சீங்க?"


நிதிலா அதிசயப்பட்டாள்.


"அதான் சிவராம்! என்ன மேட்டர்னா, நீங்க கல்யாணத்துக்கு வரலையே தவிர,எங்க மேரேஜ் ஆன நாள்லேர்ந்து தினம் உங்களைப் பத்தி தான் நர்மதா சொல்வா,நீங்க எடுத்துக்கிட்ட ஃபோட்டோஸ் எல்லாம் நான் பார்த்திருக்கேன்."


நர்மதாவின் வீட்டை அடைந்தார்கள். அழைப்புமணி ஒலித்ததும், வாசலுக்கு வந்த நர்மதா நிதிலாவைப் பார்த்து மகிழ்ச்சியில் திணறினாள்.


"ஏய்ய்... நிதிலா! என்ன சர்ப்ரைஸ்?! எப்ப வந்தே அமெரிக்காலேர்ந்து?"


"மேடம், நான் இங்க தான் இருக்கேன்,என்னை யாருன்னு தெரியுதா?"


சிவராம் குறுக்கிட்டு நடந்தவற்றைக் கூறினான்.


"வாங்க, உள்ளே போய் பேசலாம்"


நர்மதா அனைவருக்கும் டீ கொண்டு வந்தாள். அவர்களை தனிமையில் விட்டு விட்டு சிவராம் மாடிக்குச் சென்று விட்டான்.


"சொல்லு, நர்மதா எப்படி இருக்கே?"


"அதான் நீயே பார்க்கறியே நிதி! அவர் ரொம்ப நல்ல டைப், நான் சந்தோஷமா இருக்கேன், சரி,நீ எப்படி இருக்கே? அமெரிக்கா லைஃப் எப்படி இருக்கு? எப்ப வந்தே? மகேஷ் வந்திருக்காரா?"


நிதிலாவின் கண்கள் பளபளக்கத் தொடங்கின. கண்ணீர் விழியில் ததும்பி நின்றது.


"நான் மட்டும் வந்துட்டேன், நர்மதா, ஒன்ஸ் ஃபார் ஆல்!"


"எ..என்ன சொல்றே நிதி? எனி பிராப்ளம்?"


"என்னோட வாழ்க்கையே இப்ப ப்ராப்ளம், நர்மதா. என்னால மகேஷ் கூட வாழ முடியலை. மார்னிங் ஃப்ளைட்ல தான் அமெரிக்காலேர்ந்து இந்தியா வந்தேன்; திருச்சிக்குப் போகப் பிடிக்கலை. சும்மா எக்மோருக்கு டிக்கெட் வாங்கி, இறங்கினேன். சாகலாம்னு கூட தோணிடுச்சு, நர்மதா..!"


"நிதி....! என்ன பேச்சு இது? இப்படி எல்லாம் பேசாதே, சொல்லிட்டேன்"


"நிஜம் தான் நர்மதா, சாக முயற்சி பண்ணப் பார்த்தேன், என்னமோ ஒரு குருட்டுப் பிச்சைக்காரனுக்கு உதவப் போக, என் மனசு மாறிடுச்சு. எக்மோர்ல இறங்கி என்ன செய்யறது, எங்க போகறதுன்னு தெரியாம நின்னுட்டிருந்தேன், அப்ப தான் உன் ஹஸ்பெண்ட் என்னைப் பார்த்து,இங்க கூட்டிட்டு வந்திட்டார்."


நர்மதா அதிர்ந்து போய் நிதிலா பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்தாள்.


"அப்படி என்ன ஆச்சு, நிதி?"


தன் மனத்துள் அடக்கி வைத்திருந்த துக்கத்தை நிதிலா கொட்டத் துவங்கினாள். மகேஷின் குணம் மாறியதையும் தன்னை நடத்திய முறையையும் கூறினாள்.


"என்னால நம்பவே முடியலை, நிதி! மகேஷ் போய் இப்படியெல்லாம் நடந்துக்குவார்னு என்னால கற்பனை கூட செய்ய முடியாது."


"இதையெல்லாம் கூட நான் தாங்கிக்கிட்டேன், நர்மதா! ஆனா...ஆனா.. அவர் எனக்குக் கொடுத்து இருக்கிற பரிசு என்னன்னு தெரியுமா?"


இறுகிய குரலில் இது வரை கூறி வந்த நிதிலா உடைந்து போய் அழுது கொண்டே சொன்னாள்,


"எனக்கு இப்ப மூணு மாசம். எனக்கும் என் குழந்தைக்கும் எய்ட்ஸை கொடுத்திருக்கார், மகேஷ்! அதுவும்...அதுவும்...அவருக்கு எய்ட்ஸ் இருக்குன்னு தெரிஞ்ச பிறகும்..! என்னால... என்னால எப்படி நர்மதா அவர் கூட வாழ முடியும்?"


நர்மதா அப்படியே உறைந்து விட்டாள்....இதெல்லாம் கனவாக இருக்கக் கூடாதா? நிதிலாவிற்கு எய்ட்ஸா? அதுவும் மகேஷிடம் இருந்து?


எதிரில் குமுறி அழுது கொண்டே இருந்த நிதிலாவைப் பார்த்ததும் தான் உண்மை சுட்டது.


நர்மதாவின் கண்களிலும் நீர் பெருக்கெடுத்தது.


நிதிலாவுக்கு ஆறுதல் சொல்லி தேற்ற வேண்டிய அவளே,தன் தோழிக்கு நடந்து விட்ட கொடுமைகளைத் தாங்க முடியாமல் அழுதாள்.


இன்பமான நேரங்கள் நொடிகளாய் ஓடிவிடும். துன்ப நேரங்களோ யுகமாய் நீளும்.


மனதில் பூட்டி வைத்த பாரத்தை கொட்டித் தீர்த்த களைப்பில் நிதிலா, பாரம் ஏற்றிய அதிர்ச்சியோடு நர்மதா - எவ்வுளவு நேரம் கண்ணீரில் ஆறுதல் தேடினரோ, தெரியாது!


தற்செயலாய் கீழே வந்த சிவராம், அழுது வீங்கிய முகத்தோடு நர்மதாவைக் கண்டு திடுக்கிட்டான். நிதிலாவின் முகத்திலும் அதே நிலை!


"என்ன ஆச்சு நிம்மி? எனிதிங் சீரியஸ்?'


கவலையோடு விசாரித்தான். நர்மதாவின் கண்களில் மறுபடி கண்ணீர் ஊற்று.


நிதிலாவின் துயரத்தை சிவராமிடம் சொல்வதா, வேண்டாமா? - நர்மதா தயக்கத்தோடு நிதிலாவைப் பார்த்தாள். நிதிலாவே கூறிவிட்டாள்.


"ஸாரி, என்னோட கஷ்டத்தை எல்லாம் சொல்லி நர்மதாவையும் 'அப்செட்' பண்ணிட்டேன். நௌ, ஐ அம் எ எய்ட்ஸ் பேஷண்ட். அதனால தான் நர்மதா... ஃபீல் பண்றா."


சிவராமே கூட ஒரு நொடி திகைத்து தான் போய்விட்டான். வாழ வேண்டிய இந்த இளம் வயதிலா இந்த வியாதி வர வேண்டும்?


"உங்களுக்கு....எப்படி எய்ட்ஸ்?"


அதிர்ச்சி மாறாமல் சிவராம் கேட்க, நர்மதா கோபத்தில் வெடித்தாள்.


"எல்லாம் அந்த மகேஷால வந்தது. மனுஷனாஅவன்? ப்ரூட்!"


நிதிலா நடந்தவற்றை சுருக்கமாக சொல்லி முடித்தாள்.


முழுவதும் கேட்ட பின்,சிவராம் பத்து நிமிடங்கள் மௌனமாக இருந்தான். எத்தனையோ விதமான எய்ட்ஸ் நோயாளிகளை அவன் சந்தித்து இருக்கிறான். ஆனால், தனக்கு நோய் இருப்பது தெரிந்தும், நிதிலாவிடம் மகேஷ் நடந்து கொண்ட கொடுமையான விதம் சிவராம் கண்களில் நீரை வரவழைத்தது. பாடுபட்டு, தன்னையே தேற்றிக் கொண்டவனாய் நிதிலாவிடம் பேச ஆரம்பித்தான்:


"நிதிலா! ஐ'ம் எ டாக்டர். அதோட, எய்ட்ஸ் நோயாளிகள் மறுவாழ்வு கமிட்டியில மெம்பர். நீங்க நடந்ததையே நினைச்சு வருத்தப்படாதீங்க. இனிமே என்ன செய்யலாம்னு தான் நாம யோசிக்கணும். இந்த பேபியை அபார்ட் பண்றது அவசியம். அப்புறம், கவுன்சிலிங் அட்டெண்ட் பண்ணிப் பாருங்க. யூ'ல் ஃபீல் பெட்டர். நர்மதா! நீ தான் அவங்களுக்கு தைரியம் சொல்லணும். நீயே இப்படி அழுதுகிட்டிருந்தா எப்படி?"


நர்மதா கண்களைத் துடைத்துக் கொண்டாள்.


சிவராம் சொன்னது போல், எல்லாவற்றுக்கும் ஏற்பாடுகள் செய்தான். அபார்ஷன் முடிந்து ஒரு வாரம் வரை ஆகியும் டிப்ரெஷனில் இருந்து மீள முடியாமல் நிதிலா குமைந்தாள்.


அவள் நிலையைப் புரிந்து கொண்ட சிவராம் அவளை மறுவாழ்வு கமிட்டியால் அமைக்கப்பட்டு இருந்த ஆதரவு இல்லத்துக்கு அழைத்துச் சென்றான்.


நோயால் பாதிக்கப்பட்டு இருந்த மற்ற பேர்களைக் கண்டதும், அவளுடைய சுயபச்சாதாபம் மறைந்து போனது. "நம்மைப் போல் இவ்வுளவு பேர் கஷ்டப்படுகிறார்கள்" என்ற உண்மை அவளை யோசிக்க வைத்தது. கூடவே எய்ட்ஸ் என்று தெரிந்ததும், சுற்றமும் உறவும் விலக்கி வைத்திருந்த அவர்களைப் போல் இல்லாமல், தனக்கு தோள் கொடுத்து தோழமை காட்டும் நர்மதாவையும், சிவராமையும் நினைந்து, வாழ்வில் நம்பிக்கையும்,தைரியமும் பிறந்தது.


(தொடரும்.......)
 
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி..
அங்கே எனக்கோற் இடம் வேண்டும்..
எனது கைகள் மீட்டும்போது..வீணை அழுகின்றது..
எனது கைகள் தழுவும்போது மலரும் சுடுகின்றது..
என்ன நினைத்து என்னை படைத்தான் இறைவன் என்பவனே..
கண்ணை படைத்து பெண்ணை படைத்த இறைவன் கொடியவனே..


Tv
k
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top