40b. சிவலோகம் காட்டியது.
“பெருமானே! அடியவர் சூழ நீவீர்
திருக்காட்சி தந்தருள வேண்டும்;
சிவலோகத்தில் இருப்பதைப்போலவே
இகலோகத்திலும் ஒரு முறையேனும்!”
பக்திக்கு எளியவனான பிரான் அவன்
பக்திக்கு மெச்சி திருவருள் புரிந்தான்;
ஐயனின் உள்ளக் கிடக்கையை அறிந்து
மெய்யாகவே இறங்கியது சிவலோகம்.
எங்கும் வீசியது தெய்வப் பேரொளி !
மங்கலம் பொங்கித் ததும்பியது எங்கும்;
நந்தி தேவனிடம் சொன்னார் சிவபிரான்,
“இந்த உலகை இவருக்குக் காட்டி அருள்க!”
கற்பனையைக் கடந்து விட்ட ஒரு
அற்புதமான உலகம் சிவலோகம்!
மந்த மாருதம் தொட்டுத் தழுவியது,
சிந்தையைக் கவரும் கற்பூர மணம்!
தேவ கானம் என்றால் என்ன என்று
தேவர்களின் கானம் தெரிவித்தது;
இணைந்து இசைத்த இசைக்கருவிகள்
இன்னிசை விருந்தைப் பரிமாறின.
கமலப்பூ உதித்த பிரமனின் லோகம்,
கமலப்பூ அமர்ந்த வாணியின் உலகம்,
கமலக் கண்ணன் திருமால் உலகம்,
கமலவாசினி அலைமகளின் இடம்.
ஏகாதச ருத்திரர்களின் நகரங்கள்,
ஏவாமல் காவல் செய் திக்பாலர்கள்,
ஏக போகனான இந்திரனின் உலகம்,
ஏற்றதுடன் காட்டினார் நந்திதேவர்.
சிவலோகத்திலேயே வசிக்கும்
சிவ சாரூப்யர்கள், சிவ பக்தர்கள்,
சிவபதம் அடைந்த மன்னர்கள்,
சிவனடியார்க்கு உதவிய சீலர்கள்!
வேதங்களும், ஆகமங்களும் நின்று
துதிபாடின மனித உருவில் அங்கே;
தும்புரு, நாரதர் இன்னிசை யாழுடன்,
ரம்பை ஊர்வசியின் நடன விருந்து!
ஆனைமுகன், ஆறுமுகன், வீர பத்திரன்,
ஆணைகள் நிறைவேற்றக் காத்திருக்க,
அரி, அயன், அஷ்ட திக்பாலகர்களுடன்,
மரியாதையாக நின்றான் இந்திரன்.
சோமசுந்தரர் அரியணையில் அமர,
உமா மகேஸ்வரி புன்னகை சிந்த,
“ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!”
ஜெபித்தது அடியார்களின் குழாம்.
மெய் சிலிர்த்து, நாக் குழறி, தள்ளாடி,
மெய்ப்புளகம் அடைந்தான் வரகுணன்;
தன் மயமான பாண்டியனின் கண்களின்
முன்னே இருந்த சிவலோகம் மறைந்தது.
கண்முன் கண்டான் மதுரைக் கோவிலை!
கண் நிறைந்த அம்மையை, நம் அப்பனை!
“கொலை பாதகனின் பழியைத் துடைக்க
அருளலைகளை அனுப்பிய இறைவனே!
நாயேனுக்கும் அளித்தாய் உன்னருள்!
தீயேனின் பாவங்களைக் களைந்தாய்!”
இகலோகத்திலேயே சிவலோகம் காட்டியவன்,
‘பூலோக சிவலோகம்’ ஆக்கினான் மதுரையை!
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.