Varalakshmi Vratham

வரலட்சுமி விரதம்

ஆடி மாதத்தில் வரும் மிக முக்கியமான வழிபாட்டு நாட்களில் ஒன்று வரலட்சுமி விரதம். சுமங்கலிப் பெண்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நாளில் மகாலட்சுமியின் மனம் மகிழும் படி வீட்டில் பூஜைகள் செய்து வழிபட்டால் வாழ்வில் மங்களங்கள் நிறையும். மகாலட்சுமியின் அருளால் நினைத்த காரியங்கள் கைகூடும். இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் எந்த நாளில் வருகிறது, இந்த நாளில் எப்படி வழிபட வேண்டும், எந்த முறையில் வழிபட்டால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என்பதை தெரிந்த கொள்ளலாம்.

வரலட்சுமி விரதம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த விரதமாக கருதப்படுகிறது. இது செல்வங்களுக்கு அதிபதியான மகாலட்சுமியை வழிபடுவதற்குரிய ஒரு அற்புதமான நாளாகும். தன்னை வேண்டுவோருக்கு கேட்கும் வரங்களை தரும் லட்சுமி என்பதால் அவளுக்கு வரலட்சுமி என்று பெயர். குடும்ப நலன், கணவரின் ஆயுள், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை, செல்வ வளம், சுபிட்சம், குழந்தைகள் மற்றும் கணவரின் ஆயுள், ஆரோக்கியம், அமைதி ஆகியவற்றுடன் நிறைவாக வாழ்க்கை வேண்டி பெண்கள் இந்த நாளில் விரதம் இருந்து, மகாலட்சுமியை வீட்டிற்கு அழைத்து, பூஜைகள் செய்து வழிபட்டு, மகாலட்சுமியின் அருளையும் ஆசியையும் பெறுவதற்கான நாளாக வரலட்சுமி விரதம் கருதப்படுகிறது. இதை வரலட்சுமி நோன்பு, மாங்கல்ய நோன்பு, சுமங்கலி விரதம் என்பது உள்ளிட்ட பல பெயர்களின் மக்கள் குறிப்பிடுகிறார்கள்.

வரலட்சுமி விரதம் இருந்து வழிபட்டால் அஷ்டலட்சுமிகள் எனப்படும் எட்டு லட்சுமிகளின் அருள் கிடைக்கும். வரலட்சுமி விரதம் இருந்து வழிபட்டால் அஸ்வமேத யாகம் நடத்தியதற்கு இணையான பலன் கிடைக்கும். இந்த நாளில் திருமணமான பெண்கள் மட்டுமின்றி, திருமணம் ஆகாத பெண்களும் நல்ல கணவர் அமைய வேண்டும் என வேண்டிக் கொண்டு நோன்புக் கயிறு கட்டிக் கொண்டு, விரதம் இருந்து மகாலட்சுமியை வழிபடுவார்கள். ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வளர்பிறையில் வரும் கடைசி வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 08ம் தேதி வரலட்சுமி விரதம் கொண்டாடப்பட உள்ளது. அதாவது பெளர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக் கிழமையில் இந்த லட்சுமி பூஜை நடத்தப்பட உள்ளது. அதனால் ஆகஸ்ட் 07ம் தேதியே வீட்டை சுத்தம் செய்து, பூஜைக்கு தேவையான பொருட்களை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். வரலட்சுமி விரதம் அன்று சிலர் கலசம் வைத்து வழிபடும் வழக்கம் வைத்திருப்பார்கள். சிலர் சாதாரணமாக மகாலட்சுமியின் படத்தை வைத்து மட்டும் பூஜை செய்து வழிபடுவார்கள்.

அன்றைய தினம் மகாலட்சுமியை வீட்டிற்கு அழைத்து, மங்கள பொருட்கள் சமர்ப்பித்து, பழங்கள் மற்றும் சர்க்கரை பொங்கல் நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். மகாலட்சுமியின் 108 திருநாமங்களை சொல்லும் லட்சுமி அஷ்டோத்திர சத நாமாவளியை சொல்லியோ அல்லது ஸ்ரீ சுக்தம் பாராயணம் செய்து இந்த நாளில் அம்பிகையை வழிபடுவது சிறப்பு. அதோடு சுமங்கலிகளை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு குங்குமம், மங்கள பொருட்கள், தாம்பூலம் ஆகியவற்றைக் கொடுத்து, வயதில் மூத்த சுமங்கலிகள் கைகளால் நோன்பு கயிறு கட்டிக் கொண்டு, அவர்களிடம் ஆசி பெற வேண்டும்.

வரலட்சுமி விரதம் இருந்தாலும், வீட்டில் வரலட்சுமி பூஜை செய்து வழிபட்டாலும் அந்த வீட்டில் மகாலட்சுமியின் அருள் நிறைந்திருக்கும். வரலட்சுமி பூஜை அன்று வீட்டில் லட்சுமிக்கு குங்குமம், வாசனை மலர்கள் ஆகியவற்றால் அர்ச்சனை செய்து வழிபடுவதும், விளக்கு பூஜை செய்து வழிபடுவதும் சிறப்பு. பொருளாதார சிக்கல்கள், கடன் பிரச்சனைகள் இருந்தாலும் அது நீங்கி விடும். வீட்டில் வழக்கமாக வரலட்சுமி விரதம் இருப்பவர்கள் மட்டுமின்றி, புதிதாக வரலட்சுமி விரதம் இருக்க நினைப்பவர்களும் இந்த விரதத்தத்தை மேற்கொள்ளலாம். இதனால் மகாலட்சுமியின் அருளால் வாழ்க்கையில் மாற்றம் வரும்.
 
Back
Top