• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Rama Ekadashi

ரமா ஏகாதசியின், பெருமைகளைப் பற்றி பிரம்ம - வைவர்த்த புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. மகாராஜா யுதிஸ்டிரர் கூறினார். ஓ! ஜனார்தனா! ஐப்பசி மாத தேய்ப்பிறையில் (அக்டோபர்/ நவம்பர்) தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயரையும் அதன் சிறப்பையும் எனக்கு விளக்குங்கள். பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். ஓ! மன்னர்களில் சிங்கம் போன்றவனே! இந்த ஏகாதசியின் பெயர் ரமா ஏகாதசி. இது ஒருவரின் எல்லா பாவ விளைவுகளையும் அழித்துவிடும். இந்த புனிதமான ஏகாதசியின் பெருமைகளைக் கேள்.

பழங்காலத்தில் முசுகுண்டா என்று ஒரு புகழ்பெற்ற மன்னர் இருந்தார். அவர் சுவர்கலோக மன்னனான இந்திரனின் நண்பன். அவர் யமராஜா. வருணா, குபேரா மற்றும் விபிஷணா போன்ற மகான்களிடத்தில் நட்பு வைத்திருந்தார். இந்த மன்னர் மிகவும் வாய்மையுள்ளவர் மற்றும் அவர் எப்பொழுதும் பகவான் விஷ்ணுவின் பக்தித் தொண்டில் இணைந்திருந்தார். அவர் தன் இராஜ்ஜியத்தை சரியான விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆண்டு வந்தார்.

நாளடைவில் முசுகுண்டா ஒரு மகளைப் பெற்றார். அவர் சந்திரபாகா என்ற ஒரு நதியின் பெயரை சூடப்பட்டாள். சந்திரசேனா என்பவரின் மகனான சோபனா என்ற அழகிய வரனுடன் சந்திரபாகாவிற்கு திருமணம் நடைபெற்றது. ஒரு நாள் ஏகாதசியன்று சோபனா தன் மாமனார் வீட்டிற்கு வந்தார். சந்திரபாகா மிக வருத்தத்துடன் புலம்பினாள். ஓ! எனது பகவானே! இப்பொழுது என்ன நடக்கவிருக்கிறது. என் கணவர் மிகவும் பலவீனமானவர் மற்றும் அவரால் பசியைப் பொறுத்துக் கொள்ள இயலாது. ஆனால் என் தந்தையோ மிகவும் கண்டிப்பானவர். ஏகாதசிக்கு முன்தினம் என் தந்தை தன் சேவகரை அனுப்பி ஏகாதசியன்று யாரும் உணவு உட்கொள்ளக்கூடாது. என்ற செய்தியை பிரகடனம் செய்வார்.


இந்த வழக்கத்தைப் பற்றி கேட்ட சோபனா, தன் அன்பான மனைவியிடம் கூறினார். ஓ! பிரியமானவளே! இப்பொழுது நான் என்ன செய்வேன்? மன்னரின் கட்டளையை மீறாமல் என்னை எப்படி காத்துக் கொள்வேன்? சந்திரபாகா பதிலளித்தாள். ஓ! எனது எஜமானே! என் தந்தையின் இராஜ்ஜியத்தில் உள்ள யானைகள். குதிரைகள் மற்றும் இதர விலங்குகளையும் உணவு உட்கொள்ள அனுமதிப்பதில்லை. அப்படியிருக்க மனிதர்களைப் பற்றி என்ன கூறுவது? ஓ! எனது மரியாதைக்குறிய எஜமானே! இன்று நீங்கள் உணவு ஏற்றுக்கொண்டேயாக வேண்டும் எனில் நீங்கள் உமது வீட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும். ஆகையால் நன்கு யோசித்து ஒரு முடிவிற்கு வரவும்.

மனைவியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட சோபனா கூறினார். நீ கூறியனைத்தும் சரியே. என் விதிப்படி என்ன நடக்க விருக்கிறதோ அது நிச்சயமாக நடந்தே தீரும். ஆகையால் நான் இந்த ஏகாதசியை அனுஷ்டிக்க விரும்புகிறேன். இவ்வாறு கருதிய சோபனா, இந்த புனிதமான ஏகாதசியை அனுஷ்டிக்க முடிவு செய்தார். ஆனால் பசியும், தாகமும் அவரை வெற்றி கொண்டன. சூரியன் அஸ்தமித்தவுடன் அனைத்து வைணவர்களுக்கும் புண்ணிய புருஷர்களும் மிக்க மகிழ்ச்சியடைந்தனர்.

ஓ! மன்னர்களில் சிங்கம் போன்றவனே! அவர்கள் புனித நாமத்தை ஜெபித்துக் கொண்டும், முழுமுதற் கடவுளை வழிபட்டுக்கொண்டும் இரவு முழுவதும் ஆனந்தமாகக் கழித்தனர். ஆனால் சோபனாவிற்கு அந்த இரவை கழிப்பது மிகவும் கடினமானது. சூரியன் உதிப்பதற்குள் அவர் மரணமடைந்தார். மன்னர் முசுகுண்ட, சோபனாவின் ஈமச்சடங்குளை அரச மரியாதையுடன் நடத்தினர். சோபாவின் உடலை நறுமணம் மிகுந்த சந்தன கட்டைகளால் எரித்தார். தன் தந்தையின் கட்டளைக்கு இணங்கி, சந்திரபாகா தன் கணவனுடன் தன்னை எரித்துக்கொள்ளவில்லை. கணவனின் இறுதி சடங்குகளுக்குப் பிறகு சந்திரபாகா தன் தந்தையுடனேயே தங்கினான்.

ஓ! மன்னா! இதற்கிடையில் ரமா ஏகாதசியை அனுஷ்டித்ததன் பலனாக சோபனா, மந்தார மலை உச்சியில் உள்ள தேவபுரம் என்ற அழகிய நகரின் மன்னரானார். அவர் ஒரு செல்வம் மிகுந்த மாளிகையில் வாழத் தொடங்கினார். அம்மாளிகையின் தூண்கள் பொன்னால் செய்யப்பட்டு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அம்மாளிகையின் சுவர்கள் இரத்தினங்களாலும் படிகங்காலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவள் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட, பொன்னாலான, கிரீடத்தை அணிந்திருந்தார். தன் தலைக்கு மேல் ஒரு அழகிய வெண்ணிற குடை பொருத்தப்பட்டிருந்தது. அவரது காதுகள் தோடுகளாலும் கழுத்து மாலைகளாலும், கைகள் தங்க கடகங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு அலங்கரிக்கப்பட்ட சோபனா அரியாசனத்தில் அமர்ந்திருந்தார். கந்தவர்வர்களும், அப்சராக்களும் எப்பொழுதும் அவருக்கு சேவை செய்து கொண்டிருந்தனர். அவர், சுவர்க்க லோகத்து மன்னனான இந்திரனைப்போல் காட்சியளித்தார்.

ஒருநாள் சோமசர்மா, என்ற ஒரு அந்தணர். தன் தீர்த்த யாத்திரையின் போது சோபனாவின் இராஜ்ஜியத்தை அடைந்தார். அந்த அந்தணர். சோபனாவை முசுகுண்டா மன்னரின் மருமகன் என்பதைக் கருதி. அவரை அணுகினார். அந்தணரைக் கண்டவுடன் சோபனா எழுந்து நின்று கைகூப்பி தன் மரியாதை கலந்த வணக்கங்களை அந்தணருக்குச் சமர்பித்தார். பிறகு சோபனா. அந்தணரிடம் நலம் விசாரித்தார். பின்னர் சோபனா தன் மாமனார் முசுகுண்டா, மனைவி சந்திரபாகா மற்றும் முசுகுண்டாபுரத்து வாசிகளின் நலனைப் பற்றியும் அந்தணரிடம் விசாரித்தார். அனைவருக்கும் நலமாகவும், அமைதியாகவும் இருப்பதாக அந்தணர் மன்னரிடம் தெரிவித்தார்.

பிறகு அந்தணர் மிகுந்த வியப்புடன் கூறினார். மன்னா! இதுபோன்ற அழகான ஒரு நகரை இதுவரை நான் கண்டதில்லை. இதுபோன்ற இராஜ்ஜியத்தை நீர் எப்படி அடைந்தீர்? மன்னர் பதிலளித்தார். ஐப்பசி மாத தேய்பிறையில் தோன்றக்கூடிய ரமா ஏகாதசியை அனுஷ்டித்தன் பலனாக நான் இந்த தற்காலிகமான இராஜ்ஜியத்தைக் பெற்றேன். ஓ! அந்தணர்களின் சிறந்தோரே! இந்த இராஜ்ஜியம் நிரந்தரமாக நிலைத்திருக்க என்ன செய்ய வேண்டும். என்று எனக்கு அறிவுறுத்துங்கள். நான் இந்த ஏகாதசியை நம்பிக்கையின்றி அனுஷ்டித்ததால் தான் நான் இந்த நிலையற்ற இராஜ்ஜியத்தை பெற்றுள்ளேன். என நினைக்கிறேன். இவற்றை முசுகுண்டாவின் அழகிய மகளான சந்திரபாகாவிடம் விளக்கிக் கூறுங்கள். அவளால் இந்த இராஜ்ஜியத்தை நிலையாக்க இயலும் என நினைக்கிறேன்.

சோபனாவின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்தணர், முசுகுண்டாபுரத்திற்கு திரும்பி வந்த சந்திரபாகாவிடம் அனைத்தையும் விளக்கமாகக் கூறினார். இதைக் கேட்ட சந்திரபாகா மிகவும் மகிழ்ச்சியடைந்து அந்தணரிடம் கூறினான். ஓ! உயர்ந்த அந்தணரே! உங்கள் கூற்று எனக்கு கனவு போல தோன்றுகிறது. அந்தணர் கூறினார். ஓ மகளே! தேவபுரியில் உன் கணவனையும் சூரியனைப் போன்ற ஒளிமயமான அவர் இராஜ்ஜியத்தையும் நான் நேரில் கண்டேன். ஆனால் தன் இராஜ்ஜியம் நிலையற்றதென உன் கணவர் கூறினார். சந்திரபாகா கூறினாள் ஓ! அந்தணரே, என்னை அங்கு அழைத்துச் செல்லுங்கள். நான் என் கணவரை காண மிக்க ஆவலுடன் இருக்கிறேன். என்னுடைய புண்ணியங்களின் பலத்தால் அந்த இராஜ்ஜியத்தை நிலைக்கச் செய்கிறேன். தயவு செய்து எங்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யுங்கள். ஏனெனில், பிரிந்தவர்களை ஒன்று சேர்ப்பதால் ஒருவர் புண்ணியத்தை சேமிப்பார். பின்னர் சோமசர்மா, சந்திரபாகாவை, மந்தார மலை அருகில் உள்ள வாமதேவரன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார். மலர்ந்த முகமுடைய சந்திரபாகாவிடம் முழு கதையையும் கேட்ட வாமதேவா, வேத மந்திரங்களை அவளுக்கு உபதேசித்தார். வாமதேவர் முனிவரிடம் இருந்து மந்திர உபதேசம் பெற்றதாலும் ஏகாதசியை கடைபிடித்ததாலும் சந்திரபாகா ஆன்மீக உடலை பெற்றாள். பிறகு சந்திரபாகா மகிழ்ச்சியுடன் தன் கணவரிடம் சென்றாள்.

தன் மனைவியைக் கண்டவுடனே சோபனா மிகவும் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைந்தார். சந்திரபாகா கூறினாள். ஓ! என் மரியாதைக்குரிய துணைவனே! என் பலன் தரும் வார்த்தைகளைக் கேளுங்கள். நான் என் தந்தையின் இல்லத்தில் எட்டு வயது முதல் ஏகாதசியை சிரத்தையுடன் அனுஷ்டித்து வந்தேன். அதனால் சேமிக்கப்பட்ட புண்ணியத்தால் உமது இராஜ்ஜியம் நிலைத்து பிரளயம் வரை செழிப்புடன் தொடரட்டும். ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தெய்வீக உடலை பெற்ற சந்திரபாகா தன் கணவனுடன் மகிழ்ச்சியாக இருந்தாள். ரமா ஏகாதசியின் பலனாக சோபனாவும் தெய்வீக உடலைப் பெற்று மந்தார மலை உச்சியில் தன் மனைவியுடன் மகிழ்ச்சியுடன் இருந்தார். ஆகையால் ஓ! மன்னா! இந்த ரமா ஏகாதசி விருப்பங்களை நிறைவேற்றும் பசு(அ) சிந்தாமணிகல் போன்றது.

பகவான் கிருஷ்ணர் தொடர்ந்தார். ஓ! மன்னா! மங்களகரமான ரமா ஏகாதசியின் பெருமைகளை உனக்கு விளக்கினேன். இந்த ஏகாதசி விரதத்தை சிரத்தையுடன் அனுஷ்டிப்பவர் சந்தேகமின்றி ஒரு அந்தணரைக் கொல்லும் பாவத்திலிருந்து விடுபடுவார் கருப்பு நிற பசுக்களும் வெண்ணிற பசுக்களும் வெண்ணிற பாலையே கொடுப்பது போல் தேய்பிறை மற்றும் வளர்பிறையில் தோன்றும் இரு ஏகாதசிகளும் அதை அனுஷ்டிப்பவர்களுக்கு முக்தி அளிக்கிறது. இந்த ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி கேட்பவர் தன் எல்லா பாவ விளைவுகளில் இருந்து விடுபட்டு பகவான் விஷ்ணுவின் பரமத்தில் ஆனந்தமாக வாழ்வார்.


31962-4-devi-sayani-ekadashi-vrat-4-july-2017.png
 

Latest ads

Back
Top