• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஸ்ரீ ஆண்டாளின் தமிழ் வேதம் திருப்பாவை பாசுரம் - 20

இப்பாசுரத்திலுள்ள ஒரு நுணுக்கத்தை கவனிக்க வேண்டும், கோதை நாச்சியார், பரமனை 2 தடவை துயிலெழ வேண்டுகிறாள் (கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய் & வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்), அவனைச் சரணடைவதே பிரதானம் என்பதை முன்னிறுத்தி!

கோபியரது உய்வுக்கு புருஷகாரம் செய்யும்படி (பரிந்துரைக்குமாறு) நப்பின்னையிடம் ஆண்டாள் விண்ணப்பிக்கிறாள்!!!

வைணவத்து சம்பிரதாயப்படி திருமகளும் (மற்ற ஜீவாத்மக்களைப் போல) பரமாத்வான நாராயணனைச் சார்ந்தவள் தான் என்றாலும், அவளின்றி பரமன் முழுமை அடைவதில்லை என்ற அழகான தத்துவச் செய்தியை ஆண்டாள் இப்பாசுரத்தில் சொல்கிறாள் ! பிராட்டியின் முன்னிலையில் தான் ஜீவாத்மாக்களுக்கு முக்தி கிடைக்க முடியும்!

இங்கு கோபியர்கள், "முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று" என்று தேவர்களைப் பற்றி ஏன் பேச வேண்டும் ? 'தேவர்களுக்கு, அமுதம் வேண்டும், தேவலோகப் பதவி வேண்டும், பலம் வேண்டும், ஆனால் எங்களுக்கோ உனையன்றி வேறு எதுவும் வேண்டாம்' என்று கோபியர் குறிப்பில் சொல்கின்றனர்.

பாசுர உள்ளுரை:--

முப்பத்து மூவர் - தேவர் கூட்டத்துக்கு தலைவர்கள் 33 பேர், 8 வசுக்கள், 11 ருத்ரர்கள், 12 ஆதித்யர்கள், 2 அஸ்வினி தேவர்கள்

முன் சென்று - தீவினைகள் நோக்கி நாங்கள் செல்வதற்கு முன்பாகவே, இன்னல்கள் ஏற்படுவதற்கு முன்பாகவே

கப்பம் தவிர்க்கும் கலியே - அச்சங்களை விலக்கி அபயமளிக்கும் பரமன்

செப்பமுடையாய் - நேர்மையான சொரூபம் கொண்டவன், வலிமை மிக்கவன்

திறலுடையாய் - எங்கும் நிறைந்த பரம்பொருள், சாதுரியம் மிக்கவன், உலக ரட்சகன்

செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா - அனைவரையும் சமமாக பாவிப்பவனாக இருந்தாலும், அடியவருக்குத் துன்பம் தரும் பகைவர்களின் செருக்கை அழிப்பவன். தீயவர் தன் மீது கொள்ளும் பகைமையைக் கண்டு பரமன் ஒருபோதும் கோபம் கொள்வதில்லை!

விமலன் - இதனுடன் சேர்த்து மொத்தம் 4 சொற்கள் உள்ளன: அமலன், விமலன், நிமலன், நிர்மலன்.

அமலன் - நம் தீவினைகளை அழிப்பவன்
விமலன் - அஞ்ஞானம் நெருங்க முடியாதவன்
நிமலன் - பகைவர்களுக்கு அச்சத்தைத் தருபவன்
நிர்மலன் - தன்னிடம் சரணடைந்தவரின் குறைகளை ஆராயத தன்மை கொண்டவன்!

செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல் - திருமகளின் சௌந்தர்யமான (அனைத்து அழகையும் தன்னுள் கொண்ட) தோற்றத்தைப் போற்றுவதாம்.

நப்பின்னை நங்காய் திருவே - சொல்லிச்சொல்லாத சௌந்தர்யங்கள் எல்லாவற்றிலும் பூர்த்தியானவளே! நங்காய்! அழகு அவளாலே, குணங்கள் அவளாலே, மேன்மை அவளாலே, நீர்மை அவளாலே, அப்படி திருவுக்கு நிகரானவளே! திருவே!

உக்கமும் தட்டொளியும் தந்து - அகங்கார மமகாரங்களை நீக்கி மெய்ஞானத்தை அருளி
இப்போதே எம்மை நீராட்டேலோரெம்பாவாய் - உடனே எங்களுக்கு மோட்ச சித்தியை அருள வேண்டும் என்று அடியவர் கட்டளையிடுகின்றனர்!

"நீராட்ட" என்பது பரமனுடன் ஒன்றறக் கலப்பதையே உள்ளர்த்தமாக கொண்டிருக்கிறது

-------------------------------------------------------------------------------

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில்எழாய்
செப்பம் உடையாய் திறல்உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில்எழாய்

செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில்எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்... !!!
------------------------------------------------------------------------------
 

Latest ads

Back
Top