• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்ஹ கராவலம்ப ஸ்தோத்ரம்

praveen

Life is a dream
Staff member
‘ஸ்ரீலக்ஷ்மி
நரஸிம்ஹ கராவலம்ப"
ஸ்தோத்ரம்

ஸ்ரீமத் பயோநித நிகேதன
சக்ரபாணே

போகீந்த்ரபோக மணிரஞ்ஜித
புண்யமூர்த்தே

யோகீச சாச்வத சரண்ய
பவாப்திபோத

லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி
கராவலம்பம்.

திவ்யமான பாற்கடலில் பள்ளி கொண்ட சக்ரபாணியே! ஆதிசேஷனின் உடல் ஒளிபொருந்திய மணிகளாக ஒளிர அந்த ஒளியின் நிறத்தை மேற்கொண்ட பேரழகுத் திருமேனி கொண்டவரே, கனிந்த முனிவர்களுக்கும், அடைக்கலம் என்று உமை அடைந்த பக்தருக்கும் நிரந்தர சரணாகதி அளிக்க வல்லவர் நீரே அல்லவா! வாழ்க்கை எனும் பெருங்கடலைக் கடக்க பாதுகாப்பான படகாக அருள்புரியும் ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்மனே, என் கரம் பற்றி தூக்கிவிட்டு அருள வேண்டும்.

ப்ரஹ்மேந்த்ரருத்ர மருதர்க
கிரீட கோடி

ஸங்கட்டிதாங்க்ரிகமலாமல
காந்திகாந்த

லக்ஷ்மீ லஸத்குசஸரோருஹ
ராஜஹம்ஸ

லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம
தேஹி கராவலம்பம்.

பிரம்மா, இந்திரன், ருத்ரன், மருதர்கள், சூரியன் ஆகியோர் தம் கிரீடங்கள் தங்கள் பாதம் பட வணங்க விரும்பும் பேரழகுத் தாமரைகளையே திருவடிகளாகக் கொண்ட பெருமாளே! எழில் மிகுந்தவரே, லக்ஷ்மியின் மார்பகங்களாகிய தாமரை மீது உறையும் ராஜ அன்னம் போன்றவரே, ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்ஹனே, என் கரம் பிடித்து என்னை முன்னேற்ற வேண்டுகிறேன்.

ஸம்ஸார தாவதஹனா
குல பீகரோரு

ஜ்வாலாவலீபி ரதிதக்ததனூருஹஸ்ய

த்வத்பாத பத்ம ஸரஸீம்
சரணாககதஸ்ய

லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி
கராவலம்பம்.

வாழ்க்கை என்பது ஒரு பெரிய காட்டுத் தீயாக, பயங்கரமானதாகத் தோன்றி என்னைப் பொசுக்கி, திகைக்க வைத்து, குழப்பத்திலும் ஆழ்த்தியிருக்கிறது. அதிலிருந்து விடுபட குளிர்ச்சி பொருந்திய உமது திருவடியாகிய குளத்தை நான் நாடி வந்துள்ளேன். எனக்கு கை கொடுத்து உதவி, என்னை மேம்படுத்துமாறு வேண்டுகிறேன்.

ஸம்ஸார ஜால பதிதஸ்ய
ஜகத் நிவாஸ

ஸர்வேந்த்ரியார்த்த
படிசாக்ரஜஷோபமஸ்ய

ப்ரோத்கம்பித ப்ரசுரதாலுக
மஸ்தகஸ்ய

லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி
கராவலம்பம்.

அனைத்து உலகையும் ஆளும் உத்தம புருஷரே, ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மா, அனாவசிய புறக் காரணங்களுக்காக, வாழ்க்கை எனும் பெருங் கடலில் தூண்டில் நுனியிலுள்ள இரையைத் தேடி வந்து சிக்கிக்கொண்டு துவளும் மீன் போன்றவனாக நான் தவிக்கிறேன். என் உடலே நடுங்குகிறது. என்னைக் கைப்பற்றி கரை சேர்ப்பாயா பெருமாளே.

ஸம்ஸார கூட மதிகோர
மகாத மூலம்

ஸம்ப்ராப்யது:கசதஸர்ப
ஸமாகுலஸ்

தீனன்ய தேவ க்ருபயா
பதமாகதஸ்ய

லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி
கராவலம்பம்

மிகவும் ஆழமான, அதி பயங்கரமான உலக வாழ்க்கை என்ற பாழுங்கிணற்றில் வீழ்ந்திருக்கிறேன். என்னை நூற்றுக்கணக்கான துன்பப் பாம்புகள் சூழ்ந்து கொண்டு அச்சுறுத்துகின்றன. நான் உம்மையே நாடி வந்திருக்கிறேன். என்னைக் கை தூக்கி காத்தருள வேண்டும் ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹா..

ஸம்ஸார பீரக கரீந்த்ர
கராபி காத

நிஷ்பீட்யமான வபுஷ:
ஸகலார்திநாச

ப்ராண ப்ரயாண பவபீதி
ஸமாகுலஸ்ய

லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி
கராவலம்பம்.

மதங்கொண்ட கொடிய யானையைப் போன்றது என் வாழ்க்கை அந்த யானையின் துதிக்கையால் அடிபட்டு உடல் நசிந்தவனாக நான் நிற்கிறேன். உயிர் போகும் தருவாய் இது, உலகியல் துன்பமும் மிகுந்திருக்கிறது. என்ன செய்வதென்று புரியாமல் திகைத்துத் தவிக்கும் என்னை, லக்ஷ்மி நரஸிம்ஹரே, நீதான் கை தூக்கிவிட வேண்டும். அனைவரது துன்பத்தையும் போக்கவல்லவரல்லவா நீங்கள்.

ஸம்ஸாரஸர்ப விஷதிக்த
மஹோக்ரதீவ்ர

தம்ஷ்டாக்ர கோடி பரிதஷ்ட
விநஷ்டமூர்தே

நாகாரிவாஹன ஸுதாப்தி
நிவாஸ சௌரே

லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி
கராவலம்பம்.

விஷம் தோய்ந்த கொடிய பல்லைக் கொண்டிருக்கும் வாழ்க்கையென்னும் பாம்பினால் கடிக்கப்பட்டு தவிக்கிறேன். அழியவிருக்கும் சரீரத்தைக் கொண்டிருக்கும் எனக்கு, கருட வாகனரே, அம்ருதக் கடலில் மிதந்து ஆனந்திப்பவரே, லக்ஷ்மி நரஸிம்ஹா, என்னைக் கை கொடுத்து காப்பாற்ற வேண்டும்.

ஸம்ஸாரவ்ருக்ஷ மகபீஜ
மனந்தகர்ம

சாகாயுதம் கரணபத்ர
மனங்கபுஷ்பம்

ஆருஹ்ய து:க பலிநம் பததோ
தயாலோ

லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி
கராவலம்பம்.

வாழ்க்கை என்பது ஒரு மரம், அது பாபங்களை விதையாகக் கொண்டது. கணக்கில்லாத கர்மாக்களாகிய
கிளைகளையும், புறக்கரணங்களாகிய இலைகளையும், காமமாகிய புஷ்பத்தையும், துன்பமாகிய பழங்களையும் கொண்டது.
அதன் மீது ஏறி, தடுமாறி கீழே விழ
இருக்கிறேன். தயாபரனே,
லக்ஷ்மி நரஸிம்ஹா, என் கரம் பற்றி
என்னைக் காக்க வேண்டும்.

ஸம்ஸாரஸாகர விசால
கரால கால

நக்ரக்ரஹ க்ரஸித நிக்ரஹ
விக்ரஹஸ்ய

வ்யக்ரஸ்ய ராக நிசயோர்மி
நிபீடிதஸ்ய

லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி
கராவலம்பம்.

வாழ்க்கை எனும் பெருங்கடலில் பயங்கரமான காலம் என்ற முதலையால் பிடிக்கப்பட்டிருக்கிறேன். எப்படியாவது அதனிடமிருந்து தப்பிக்க வேண்டுமே என்று திகைத்து நிற்கிறேன். முதலை தவிர பற்று, பாசம் ஆகிய பேரலைகளாலும் நான் அலைக்கழிக்கப்படுகிறேன். என்னைக் கை கொடுத்து தூக்கிவிட வேண்டும் ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்ஹா.

ஸம்ஸார ஸாகர நிமஜ்ஜந
முஹ்யமானம்

தீனம் விலோகய விபோ
கருணாநிதே மாம்

ப்ரஹ்லாத கேத
பரிஹாரக்ருதாவதார

லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி
கராவலம்பம்.

ஸம்ஸாரமாகிய கடலில் மூழ்கி மயக்கமும் துன்பமும் அடைந்திருக்கிறேன். கருணைக் கடலே, என்னை நீர்தான் காப்பாற்ற வேண்டும். அரியன புரிவதில் வல்லவரே, பிரஹலாதனின் துயரைப் போக்கவே அவதரித்தவரே, லக்ஷ்மி நரஸிம்ஹா, எனக்கு கை கொடுத்து காத்தருள்வீர் ஐயனே.

ஸம்ஸாரகோரகஹநே
சரதோ முராரே

மாரோக்ரபீகர ம்ருக
ப்ரசுரார்திதஸ்ய

ஆர்தஸ்ய மத்ஸர நிதாக
ஸுது:கிதஸ்ய

லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி
கராவலம்பம்.

வாழ்க்கை என்பது கொடியதொரு காடு. அதில் அலைந்து திரிந்து தவிக்கிறேன். காமம் என்ற பயங்கரமான மிருகத்தால் பெருந்துன்பம் அடைந்திருக்கிறேன். அது மட்டுமா பொறாமை, கர்வம் ஆகிய சுடு வெயிலும் என்னை வாட்டி வதைக்கின்றனவே! இவ்வளவு துயரங்களை அனுபவிக்கும் என்னை, லக்ஷ்மி நரஸிம்ஹா,

கைக்கொடுத்து, அரவணைத்து காப்பாய் அப்பா.

பைத்வா கலே யமபடா
பஹு தர்ஜயந்த:

கர்ஷத்தி யத்ர
பவபாசசதைர்யுதம் மாம்:

ஏகாகிநம் பரவசம்
சகிதம் தயாலோ

லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம
தேஹி கராவலம்பம்.

யம தூதர்கள் கயிற்றால் என் கழுத்தைக் கட்டி அதட்டியபடி இழுத்துச் செல்கிறார்கள். ஆனால், ஸம்ஸார பாசங்களோ என்னைப் பின்னோக்கி இழுக்கின்றன. நான் தன்னந்தனியனாக நிற்கிறேன். பிறருக்கு அடிமைப்பட்டும் ஒடுங்கி, நடுங்கி பெருந்துன்பம் அனுபவித்துக்கொண்டும் இருக்கிறேன். லக்ஷ்மி நரஸிம்மரே, தயை நிறைந்தவரே, எனக்குக் கைகொடுத்து காத்தருளுங்கள் பரம்பொருளே.

லக்ஷ்மீபதே கமலநாப
ஸுரேச விஷ்ணோ

யஜ்ஞேச யஜ்ஞ
மதுசூதன விச்வரூப

ப்ரஹ்மண்ய கேசவ
ஜனார்தன வாஸுதேவ

லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம
தேஹி கராவலம்பம்.

மஹாலக்ஷ்மியின் திருக்கணவரே,
கமல நாபி உடையவரே, பேரழகரே, மஹாவிஷ்ணுவே,ஆன்றோர் வளர்க்கும் யக்ஞங்களைப் பாதுகாப்பவரே, யாகமாகியும் நிற்பவரே, மது என்ற அரக்கனை அழித்தவரே, உலகே வடிவானவரே, வேதங்களை நேசிப்பவரே, கேசவா, ஜனார்த்தனா, வாஸுதேவா, லக்ஷ்மி நரஸிம்ஹா,
என்னை கை தூக்கி விடுங்கள்
பரமாத்மாவே.

ஏகேந சக்ரமபரேண
கரேண சங்கம்

அந்யேந ஸிந்து தநயா
மவலம்ப்ய திஷ்டன்

வாமேதரேண வரதாபய
பத்மசிஹ்நம்

லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம
தேஹி கராவலம்பம்.

ஒரு கரத்தால் சக்கரத்தையும், மற்றொரு கரத்தால் சங்கையும், இன்னொரு கரத்தால் லக்ஷ்மியை அரவணைத்தும், வலது கையில் வரத-அபய முத்திரை தாங்கியவாறும் காட்சிதரும் லக்ஷ்மிநரஸிம்ஹா, என்னை ஒருபோதும் கை விட்டுவிடாதீர்கள்.

அந்தஸ்ய மே ஹ்ருதவிவேக
மஹாதனஸ்ய

சோரைர்மஹா பலிபிரிந்த்ரிய
நாமதேயை:

மோஹாந்தகார குஹரே
விநிபாதிதஸ்ய

லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி
கராவலம்பம்.

நான் பார்வையற்றவனாகி விட்டேன்.
மிகுந்த பலம் வாய்ந்த புறக்காரணங்கள்
என்ற திருடர்கள் எனது விவேகம் என்ற
பெரும் செல்வத்தைக் களவாடி விட்டனர். இதுபோதாதென்று மோஹம் என்ற பேரிருள் சூழ்ந்த குகையில் தள்ளப்பட்டும் வேதனைப்படுகிறேன். லக்ஷ்மி நரஸிம்ஹா எனக்கு கைகொடுத்து காப்பாற்றுங்கள்.

ப்ரஹ்லாத நாரத
பராசரபுண்டரீக

வ்யாஸாதி பாகவத
புங்கவ ஹ்ருந்நிவாஸ

பக்தானு ரக்த பரிபாலன
பாரிஜாத

லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம
தேஹி கராவலம்பம்.

பிரஹலாதன், நாரதர், பராசரர்,
புண்டரீகர், வியாஸர் முதலிய பரம
பக்தர்களின் இருதயத்தில் வசிப்பவரே,
பக்தர்களையும், உம்மை நேசிப்பவர்களையும் பாதுகாப்பதில் பேரார்வம் கொண்டவரே, லக்ஷ்மிநரஸிம்ஹா, எனக்கு கை கொடுத்து, பாதுகாப்பு அளிக்க வேண்டுகிறேன்.

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ
சரணாப்ஜ மதுவ்ரதேந

ஸ்தோத்ரம் க்ருதம் சுபகரம்
புவி சங்கரேண

யே தத்படந்தி மனுஜா
ஹரிபகத்தியுக்தா:

தே யாந்தி தத்பதஸரோஹமகண்ட
ரூபம்.

லக்ஷ்மி நரஸிம்மரின் திருவடித்தாளாகிய மலர்களில் மொய்க்கும் தேனியாக
இருக்கும் நானாகிய இந்த சங்கரனால் இயற்றப்பட்ட இந்த மங்களகரமான ஸ்தோத்திரத்தை பக்தியுடன் படிப்பவர் அனைவருமே
ஸ்ரீமந் நாராயணனின்
திருவடித் தாமரையை தொல்லை
எதுவுமின்றி அடைவர்.
 

Latest ads

Back
Top