• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஸர்வதர்மான் பரித்யஜ்ய - ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி ஸ்பெஷல் !

ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம் ... !!!
ஸ்ரீ எம்பெருமானார் திருஅவதார உத்சவம் ஸ்பெஷல்.
எம்பெருமானார் ஸ்ரீ ராமானுஜர் சாதித்த அந்த பதினெட்டு நிபந்தனைகள்
ஸத்விஷயத்திற்காக ராமானுஜரின் பொறுமையில் ஒரு துளி இருந்தால் இதை படிக்கலாம்.

கண்ணபிரான் கீதையில் அருளிச்செய்த “ஸர்வதர்மான் பரித்யஜ்ய...” எனத் தொடங்கும் சரம ஸ்லோகத்தின் பொருளை அறிவதற்காகத் திருக்கோட்டியூர் நம்பி என்னும் ஆசார்யரை நாடி, திருவரங்கத்திலிருந்து திருக்கோட்டியூருக்கு நடைபயணமாகச் சென்றார் பகவத் ராமானுஜர்.
திருக்கோட்டியூரில் நம்பியின் திருமாளிகை இருக்கும் இடத்தை விசாரித்து அறிந்த ராமானுஜர், அங்கிருந்து திருமாளிகையை நோக்கித் தாம் வைக்கும் ஒவ்வோர் அடிக்கும் ஒருமுறை நமஸ்காரம் செய்தபடியே நடக்கலானார்.

நம்பியின் திருமாளிகையை அடைந்து உள்ளே சென்று நம்பியை நமஸ்கரித்து, மிகுந்த பணிவுடன் சரம ஸ்லோகத்தின் பொருளை தனக்கு உபதேசித்து அருளவேண்டும் என்று பிரார்த்தித்தார்.

“ஸம்ஸார பீஜம் தொலைத்து வாரும்! (உலகியல் விஷயங்களில் உள்ள பற்றையெல்லாம் விட்டுவிட்டு வாரும்), பின் உபதேசிக்கிறோம்!” என்று சொல்லி ராமானுஜரைத் திரும்ப அனுப்பினார்

திருக்கோட்டியூர் நம்பி. திருவரங்கத்துக்குத் திரும்பிய ராமானுஜர், தம்மைத் தாமே சுயபரிசோதனை செய்து பார்த்து, தனக்கு உலகியல் ஆசைகள் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டார். இரண்டாம் முறை சென்று நம்பியைச் சேவித்தார்.
“அஹங்கார - மமகாரம் (நான், எனது என்னும் எண்ணங்கள்) தவிர்த்து வாரும், பின் உபதேசிக்கிறோம்!” என்றார் நம்பி. திருவரங்கத்துக்குத் திரும்பி, மீண்டும் தம்மைத் தாமே பரீட்சித்துப் பார்த்து, நான், எனது என்னும் எண்ணங்கள் தமக்கில்லை என்றுணர்ந்து மூன்றாம் முறை சென்றார் ராமானுஜர்.

“ஆத்மஞானம் கிடைத்தபின் வாரும்!” என்றார் நம்பி. மீண்டும் தம்மைத் தாமே சுயபரிசோதனை செய்து, அந்தத் தகுதியும் தமக்குண்டு என்றுணர்ந்தவாறே, நான்காம் முறை நம்பியை நாடிச் சென்றார் ராமானுஜர். இம்முறை, “தேஹாபிமானம் தொலைத்து வாரும்!” என்றார் நம்பி. சரீரத்தில் தமக்கு நோக்கு இல்லை, ஆத்மாவில் தான் நோக்கு என்பதை உறுதிசெய்து கொண்டு ஐந்தாம் முறை நம்பியிடம் சென்றார்.

“கைவல்ய மோஹம் (ஆத்மா இறைவனை அனுபவிக்காமல் தன்னைத் தானே அனுபவித்து இன்புறுதலில் விருப்பம் கொள்ளுதல்) தொலைத்து வாரும்!” என்றார் நம்பி. தமக்கு என்றுமே இறைவனை அனுபவிப்பதைத் தவிர மற்றொன்றில் எண்ணமில்லை என்றுணர்ந்து கொண்டு ஆறாம் முறை சென்றார் ராமானுஜர்.

“விஷயாந்தரப் பற்றறுத்து வாரும்!” என்றார் நம்பி. இறைவனைத் தவிர்த்த மற்ற விஷயங்களில் தமக்கு என்றுமே பற்றில்லை என்பதை ஊர்ஜிதப் படுத்திக் கொண்டு ஏழாம் முறை நம்பியிடம் சென்றார் ராமானுஜர். “பகவத் விஷயத்தில் ருசி கொண்டு வாரும்!” என்றார் நம்பி. இறைவனிடத்தில் தமக்கு அளவில்லாத ருசியும் ஈடுபாடும் இருப்பதை உணர்ந்து கொண்டு, எட்டாம் முறையாகத் திருக்கோட்டியூருக்கு எழுந்தருளினார் ராமானுஜர்.

“ராக த்வேஷங்கள் (விருப்பு - வெறுப்புகள்) தொலைத்து வாரும்!” என்றார் நம்பி. சொந்த விருப்பு - வெறுப்புகள் என்றுமே தமக்கில்லை என்பதை உறுதி செய்து கொண்டபின் ஒன்பதாம் முறையாகத் திருக்கோட்டியூரை நோக்கி நடந்தார் ராமானுஜர்.
“பாரதந்த்ரிய உணர்வு (இறைவனின் எண்ணப்படி நான் இருப்பேன் என்னும் உணர்வு) பெற்று வாரும்!” என்றருளிச் செய்தார் நம்பி. தம்மைத் தாமே மீண்டும் சுயபரிசோதனை செய்து பார்த்து, அந்தத் தகுதியும் தமக்கு இருப்பதை உணர்ந்து, பத்தாம் முறையாக நம்பியை நாடிச் சென்றார் ராமானுஜர்.

“ஸ்ரீவைஷ்ணவத்வம் கைவந்து வாரும்!” என்று சொல்லி ராமானுஜரைத் திரும்ப அனுப்பினார் நம்பி. ஒரு வைணவனுக்குரிய பண்புகள் யாவும் தமக்கு அமையப் பெற்றிருக்கின்றமையை உணர்ந்த ராமானுஜர், பதினொன்றாம் முறை நம்பியைச் சென்று பற்றினார்.

“ஸாத்விக பரிக்ரஹம் (நன்மக்களின் அபிமானம்) பெற்று வாரும்!” என்றார் நம்பி. “நல்லார் பரவும் இராமானுசன்” என்ற பாசுரத்துக்கேற்ப, ஸாத்விக பரிக்ரஹமும் தமக்கிருப்பதை உணர்ந்து கொண்டு, பன்னிரண்டாம் முறை யாகத் திருக்கோட்டியூருக்கு எழுந்தருளினார்.

“பாகவத பரிக்ரஹம் (இறையடியார்களின் அபிமானம்) பெற்று வாரும்!” என்று நம்பி சொல்ல, அது தமக்கு இருக்கிறதா என்று சுயபரிசோதனை செய்து, அந்தத் தகுதியும் இருக்கிறது என்பதை உறுதி செய்து கொண்டு பின் பதின்மூன்றாம் முறையாக நம்பியை நாடினார் நம் ராமானுஜர்.

“பகவத் பரிக்ரஹம் (இறைவனின் அங்கீகாரம்) பெற்று வாரும்!” என்றார் நம்பி. எம்பெருமானே “நம் இராமானுசன்” என்று கூறி ராமானுஜரை ஏற்கெனவே அங்கீகரித்துள்ளமையால், அந்தத் தகுதியும் தமக்கிருப்பதை உணர்ந்து, பதினான்காம் முறை தம் நடைபயணத்தை மேற்கொண்டார்.

“அனன்ய சேஷத்வம் (எம்பெருமான் ஒருவனுக்கே நாம் ஆட்பட்டவர் என்னும் எண்ணம்) கிடைத்தபின் வாரும்!” என்றார் நம்பி. அதுவும் தமக்கிருப்பதை உறுதி செய்து கொண்டு, பதினைந்தாம் முறை சென்றார் ராமானுஜர்.

“அனன்ய ப்ரயோஜனத்வம் (எம்பெருமானை அடைவதே ஒரே குறிக்கோள் என்னும் உறுதி) கிடைத்தபின் வாரும்!” என்றார் நம்பி. மீண்டும் சுயபரிசோதனை செய்த ராமானுஜர், இந்த உறுதியும் தமக்கு இருப்பதை உணர்ந்தபின் பதினாறாம் முறையாக நம்பியிடம் சென்றார்.

“அனன்ய போக்யத்வம் (எம்பெருமானை அனுபவிப்பதே ஆனந்தம் என்னும் எண்ணம்) கிடைத்தபின் வாரும்!” என்றார் நம்பி. அந்த எண்ணமும் தமக்குக் கைவந்திருப்பதை உணர்ந்த ராமானுஜர், பதினேழாம் முறையாக நம்பியை நாடினார்.

“ஆசார்ய அனுக்ரஹம் கிடைத்தபின் வாரும்!” என்றார் நம்பி. ஆசார்யனான திருக்கோட்டியூர் நம்பியின் அனுக்ரஹமும் தமக்குண்டு என்பதை உணர்ந்து, பதினெட்டாம் முறை நம்பியைச் சென்று ஆச்ரயித்தார்.

இம்முறை, “அதிகாரி புருஷரே வாரும்!” என்று கூறி ராமானுஜரை வரவேற்ற திருக்கோட்டியூர் நம்பி, “ஸர்வ தர்மான் பரித்யஜ்ய…” எனத்தொடங்கும் சரம ஸ்லோகத்தின் பொருளை ராமானுஜருக்கு உபதேசித்தார். “ராமானுஜரே! உம்மிடம் இவ்வர்த்தத்தைக் கேட்டு யாரேனும் வந்தால், அவரையும் இவ்வாறு நன்கு பரீட்சித்துப் பார்த்துப் பின்னர் தான் உபதேசிக்க வேண்டும்!” என்று கட்டளையிட்டார் நம்பி. “அப்படியே செய்கிறேன்!” என்று சொல்லி, அவரிடம் விடைபெற்றார் ராமானுஜர்.

திருக்கோட்டியூர் ஸ்ரீஸௌம்யநாராயணப் பெருமாள் கோவில் கோபுரத்தில் ஏறி நின்ற ராமானுஜர், “ஆசை உடையவர் அனைவரும் வாருங்கள்!” என்று அழைத்து, மறைவான இடத்தில் வைத்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரஹஸ்யமான அந்த அர்த்தத்தை வெளியிட்டார். இச்செய்தியைக் கேள்வியுற்ற திருக்கோட்டியூர் நம்பி, அவ்விடத்துக்கு வந்து “ராமானுஜா! குருவின் வாக்கையே மீறிவிட்டாய்! உனக்கு இனி நரகந்தான்!” என்றார்.

அதற்கு ராமானுஜர், “ஸ்வாமி! அடியேன் ஒருவன் நரகம் சென்றாலும் பரவாயில்லை. உங்கள் அருளால் இத்தனை பேரும் மோட்சம் அடையப் போகிறார்களே! அடியேனுக்கு அதுவே போதும்!” என்றருளிச் செய்தார். ராமானுஜரின் உயர்ந்த உள்ளத்தைக் கண்டு வியந்த திருக்கோட்டியூர் நம்பி, “எம்பெருமானாரே!” என்று அவரை அழைத்தார்.
அன்று முதல், எம்பெருமானார் என்ற திருநாமம் ராமானுஜருக்கு ஏற்பட்டது.

நன்றி : -- Dr. உ.வே.வெங்கடேஷ் அவர்களின் கட்டுரை.,
 

Latest ads

Back
Top