• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மார்கழியில் கேட்டை

ஸ்ரீ.தொண்டரடிப்பொடி ஆழ்வார் திரு அவதார திருநக்ஷத்திரம் – மார்கழியில் கேட்டை – இன்று ( 04.01.2019 ).

12 ஆழ்வார்களில் பத்தாம் ஆழ்வாரான ஸ்ரீ.தொண்டரடிப்பொடி ஆழ்வார், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருமண்டங்குடி என்ற ஊரில் அவதரித்தவர். இவரின் இயற்பெயர் ஸ்ரீ.விப்ர நாராயணன்.

ஸ்ரீரங்கத்திலே சயன திருக்கோலத்தில் ஸேவை ஸாதிக்கும் ஸ்ரீ.ரங்கநாதர் , திருமண்டங்குடியிலே நின்ற திருக்கோலத்தில் ஸேவை ஸாதிக்கின்றார். ஆழ்வார் இத் தலத்திற்கு அருகில் அவதரித்தவரானாலும், ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ.ரங்கநாதன் மேல் அளவற்ற ஈடுபாடு கொண்டவர். அதனால் அவரின் பிறப்பு திருமண்டங்குடியில் இருந்தாலும், சிறிது காலத்திற்குப் பிறகு ஸ்ரீரங்கத்திற்கு குடிபெயர்ந்து விட்டார்.

மற்றைய ஆழ்வார்களில் ஸ்ரீ.மதுரகவி ஆழ்வார் , தம் திவ்யப் பிரபந்தமான “ கண்ணிநுன் சிறுத்தாம்பு “ பாசுரங்களில் ஸ்ரீ.நம்மாழ்வாரை பற்றி உரைத்துள்ளாரே தவிர எந்த எம்பெருமான்களைப் பற்றியும் உரைக்கவில்லை. ஏனைய மற்றைய ஆழ்வார்கள் ஸ்ரீரங்கம்,ஸ்ரீ.ரங்கநாதனைப் பற்றியும் மற்ற பல திவ்யதேஸ எம்பெருமான்களைப் பற்றியும் பாசுரங்கள் அருளிச்செய்துள்ளனர்

ஆனால் ஸ்ரீ.தொண்டரடிப்பொடி ஆழ்வார் தாம் இயற்றிய திவ்யப்ரபந்தங்களான “ திருமாலை” யிலும், “ திருப்பள்ளியெழுச்சி” யிலும் ஸ்ரீ.ரங்கநாதனைப் பற்றி மட்டுமே உரைத்துள்ளார். அவர் அருளிச்செய்துள்ள, திருமாலையில் 45 பாசுரங்களிலும், மற்றும் திருப்பள்ளியெழுச்சியில் 10 பாசுரங்களிலும் ஸ்ரீ.ரங்கநாதனின் சிறப்புகளான, அவரின் அருள்கடாக்ஷத்தை எப்படி எல்லாம் பத்தர்களுக்கு அருளியுள்ளார் என்றும் கூறியுள்ளதோடு, ஸ்ரீரங்கநாதனை துயிலெழச் செய்யும் விதமாக அவரைப் பற்றி எடுத்துக் கூறி , “அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே “ என்று திருப்பள்ளி எழுச்சியின் பத்து பாசுரங்களின் ஒவ்வொரு பாசுரத்தின் முடிவிலும் குறிப்பிட்டுள்ளார்.

திருமாலையில் 45 பாசுரங்களிலும் ஸ்ரீ.ரங்கநாதனை பற்றி அருளிச்செய்து பத்தர்களை பரவசமடையச் செய்துள்ளார். அதிலும் குறிப்பாக இரண்டாவது பாசுரத்தில்

“ பச்சை மாமலை போல் மேனி * பவளவாய் கமலச் செங்கண் **
அச்சுதா அமரரேறே * ஆயர்தம் கொழுந்தே என்னும் *
இச்சுவை தவிர யான் போய் * இந்திர லோகம் ஆளும் *
அச்சுவை பெறினும் வேண்டேன் * அரங்கமா நகருளானே * “

என்று ஸ்ரீ.ரங்கநாதனை திருவரங்கத்திலேயே இருந்து கொண்டு ஸேவித்துக் கொண்டிருக்கும், இச்சுவையை மட்டுமே வேண்டுகின்றதாகவும் , இந்திர லோகத்துக்குப் போய் அங்கு ஆளும் அளவுக்கு சுவை இருந்தாலும் வேண்டாம் என்று இப் பாசுரத்திலே அருளியுள்ளார்.

ஸ்ரீ.தொண்டரடிப்பொடி ஆழ்வார், ஸ்ரீரங்கத்திலே மலர்களைப் பூக்கச் செய்ய ஒரு நந்தவனம் அமைத்து, அங்கு வளரும் மலர்களாகிய புஷ்பங்களை ஸ்ரீ.ரங்கநாதனுக்குச் சாற்றிக் கொண்டிருந்தார்.

பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்திலே வாழ்வதுதான் சிறப்பு என்று பல ஆச்சாரியர்களும் விரும்பி , பாரத தேஸத்திலே வேறு எங்கெங்கு பிறந்திருந்தாலும், அவர்களின் வாழ்க்கையின் பெரும் காலத்தை ஸ்ரீரங்கத்திலேயே கழித்து, அங்கேயே பரமபதம் அடைந்து, ஸ்ரீ.ரங்கநாதனின் திருவடி நிழலில் இளைப்பாறிக் கொண்டிருக்கின்றனர்.

ஸ்ரீ.மணவாள மாமுனிகள் அருளிச் செய்துள்ள உபதேஸரத்னமாலையில் ஸ்ரீ.தொண்டரடிப்பொடி ஆழ்வார் பற்றி அருளிச் செய்துள்ள பாசுரங்களிலே நான்காம் பாசுரத்திலே மற்றைய ஆழ்வார்களுடன் சேர்த்து, ஸ்ரீ.தொண்டரடிப்பொடி ஆழ்வாரை “ அன்பர் தாள் தூளி “ என்று உரைத்துள்ளார். அப்பாசுரம் ,

“ பொய்கையார், பூதத்தார், பேயார் * புகழ் மழிசை
அய்யன் * அருள் மாறன் சேரலர்கோன் * துய்ய பட்ட
நாதன் அன்பர் தாள் தூளி * நற்பாணன் நற்கலியன் *
ஈதிவர் தோற்றத்து அடைவாம் இங்கு “ .



உபதேஸாரத்ன மாலையின் பதினோறாம் பாசுரத்திலே ஸ்ரீ.தொண்டரடிப்பொடி ஆழ்வாரைப் பற்றி அருளிச் செய்துள்ள பாசுரம் :-

“ மன்னிய சீர் மார்கழியில் * கேட்டை இன்று மாநிலத்தீர் *
என்னிதனுக்கு ஏற்றமென்னில் உரைக்கேன் * துன்னு புகழ்
மாமறையோன் தொண்டரடிப் பொடி ஆழ்வார் பிறப்பால் *
நான் மறையோர் கொண்டாடும் நாள் * “

ஸ்ரீ.தொண்டரடிப்பொடி ஆழ்வார் வாழி திருநாமம் :-

“ மண்டங்குடி அதனை வாழ்வித்தான் வாழியே *
மார்கழியில் கேட்டை நாள் வந்துதித்தான் வாழியே *
தெண்டிரை சூழ் அரங்கரையே தெய்வமென்றான் வாழியே *
திருமாலை ஒன்பதஞ்சும் செப்பினான் வாழியே *
பண்டு திருப்பள்ளியெழுச்சி பத்துரைத்தான் வாழியே *
பாவையர்கள் கலவிதனை பழித்த செல்வன் வாழியே *
தொண்டு செய்து துளபத்தால் துலங்கினான் வாழியே *
தொண்டரடிப்பொடி ஆழ்வார் துணைப்பதங்கள் வாழியே * “

ஸ்ரீ.தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருவவதார திருநக்ஷத்திரம் அவர் அவதரித்த திருமண்டங்குடியில் மட்டுமல்லாது, ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி உள்பட பல திவ்ய தேஸங்களில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று திருவல்லிக்கேணியில் ஸ்ரீ.பார்த்தசாரதி ஸ்வாமி திருக்கோயிலில், காலை சுமார் 9.30 மணிக்கு மேல் ஸ்ரீ.பார்த்தசாரதி ஸ்வாமியுடன் , ஸ்ரீ.தொண்டரடிப் பொடியாழ்வாருக்கும் சேர்த்து, மஹா மண்டபத்தில் திருமஞ்சனம் நடைபெரும். பின்னர் திருப்பாவை சாற்றுமுறையாகி, பெருமாள் ஆழ்வாருக்கு ப்ரசாதம் அமுது செய்விக்கப்பட்டு, பத்தர்களுக்கு வினியோகிக்கப்படும்.

மாலை 4.45 மணிக்கு ஸ்ரீ.பார்த்தசாரதி ஸ்வாமியும், ஸ்ரீ.தொண்டரைப்பொடி ஆழ்வாரும் பெரிய மாட வீதி புறப்பாடு கண்டருளுவர். திருவீதியில் இராமாநுச நூற்றந்தாதி அருளிச்செயல் கோஷ்டியாகும். பின்னர் மஹா மண்டபத்திற்கு எழுந்தருளிய பின்னர் , திருப்பல்லாண்டு, திருமாலை அருளிச் செயல் கோஷ்டியாகும். தீர்த்தம் , பிரசாதம் வினியோகமாகும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அடியேன் திருவல்லிக்கேணியில் தொண்டரடிப்படி ஆழ்வார் திருநக்ஷத்திரத்தன்று திருவீதிப் புறப்பாட்டின் போது எடுத்த சில படங்களையும், அரங்கனின் மீது அளவற்ற அபிமானம் கொண்டவராகையால், ஸ்ரீ.நம்பெருமாள், ஸ்ரீ.ரங்கத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ.தொண்டரடிப்பொடி ஆழ்வார் புகைப்படங்களையும் ( கடந்த ஆண்டு அத்யயன உற்சவத்தில் அடியேன் எடுத்தது) பதிவிடுகின்றேன்.

ஸ்ரீ.தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருநக்ஷத்திரத்தினை கொண்டாடும் விதமாக இன்றைய நாள் அமைந்துள்ளது நமக்கு பெரும் பாக்கியமே.
 

Latest ads

Back
Top