• Introducing TamilBrahmins.com Classifieds - Connect, Engage, and Transact within our Community!
    A dedicated platform for the Tamil Brahmin community to connect and transact. Find matches, explore real estate, discover jobs, access education, connect with services, and engage in community events. Join us as we empower and foster growth within our community through our vibrant Classifieds.
    Learn More
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பெரிய ஆழ்வார்

கருவிலே திருவுடையவர்கள் என்று சிலரைச் சொல்லும்போது அந்தச் சிலர் ஆழ்வார்கள் தான் என்பதில் துளியும் சந்தேகம் வேண்டாம். அவர்கள் தமிழை வளர்த்தவர்கள். தமிழ் மொழியைத் தேன் மொழியாக்கி படிப்போர்க்கு அதன் சுவையை ஊட்டியவர்கள். பாக்களை இயற்றி ”மாலை”யாக்கி அதால் திருமாலைப் போற்றி மகிழ்ந்து அம்மகிழ்ச்சியில் பூவில் வண்டு தேனில் அமிழ்ந்தவாறு, தம்மையே ஆழ்ந்த பக்தியில் இழந்தவர்கள் ஆழ்வார்கள்.

ஆழ்வார்கள் இப்படியென்றால் அவர்களுள் பெரியவர் என்று ஒருவரை மற்றவர்கள் கொண்டாடும் பெரியாழ்வார் என்று போற்றப்பட்ட விஷ்ணுசித்தரைப் பற்றி நான் சில தெரிந்த விஷயங்களையே மீண்டும் சொல்லி ஞாபகம் தான் படுத்த முடியும்.

நம்மாழ்வார் 16 ஆண்டுகள் கல்வி ஏதும் கல்லாது மாலருளால் செந்தமிழ் செய்தவர்!
பெரியாழ்வார் என்கிற விஷ்ணுசித்தர் வேதக்கல்வியே இன்றி விஷ்ணுவின் பால் வைத்த சித்தத்தாலேயே வேத வேதாந்த உபநிஷதங்களை விளக்கி திருமாலே பரம்பொருள் என்று உணர்த்தியவர்.

பொருள் என்றால் நாம் அறிவது ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரிந்த வஸ்து. ஒன்றிலிருந்து மற்றொன்றாக உருவாவது. உலகின் எல்லா வஸ்துக்களிலும் பெரும் பொருள் எது தெரியுமா? அவை உருவாகக் காரணமான பரம் பொருள். அதுவே விஷ்ணு. எல்லா ஆத்மாக்களின் ஒட்டு மொத்த கூட்டுச் சேர்க்கையான பரமாத்மா. இத்தகைய பரமாத்மா விஷ்ணுவின் கல்யாண குணங்களான சாகரத்தில் ஆழங்கால் பதித்தவர்கள் ஆழ்வார்கள்.

விஷ்ணுவை ஒரு மனித உருவாக பாவித்தால் அந்த முழு அவயவமும் நம்மாழ்வார்.
பூதத்தாழ்வார் திருமுடி.
பொய்கை ஆழ்வார் கண்கள்.
பெரியாழ்வார் தான் முகம்.
திருமழிசையாழ்வார் கழுத்து.
குலசேகரரும் திருப்பாணாழ்வாரும் இரு கைகள்.
தொண்டரடிப் பொடியாழ்வார் மார்பு.
திருமங்கை ஆழ்வார் தொப்புள்.
மதுரகவி ஆழ்வார் திருவடி.
ஆண்டாள்?? — ஜீவனாகத்தான் இருக்கவேண்டும்.

இத்தனை ஆழ்வார்கள் இயற்றிய கொஞ்சு தமிழ் தேமதுரத்தமிழ் பாசுரங்களை மொத்தமாகச் சேர்த்து நாதமுனிகள் அளித்தது தான் நாலாயிர திவ்யப் பிரபந்தம். இப்போது புரிகிறதா ஏன் அதில் உயிரோட்டம் உள்ளது என்று?

பெரியாழ்வார் கருடன் அம்சமாயினும் பூலோகத்தில் அவதரித்தது வேயர் குலத்தில். பிறந்தது கலியுகத்தில் 46ம் வருஷம் குரோதன வருஷம், ஆனி மாதம் சுக்ல பக்ஷ, ஏகாதசி திதியில், சுவாதி நக்ஷத்ரத்தில் ஒரு வியாழக்கிழமை இந்த ”குரு” நமக்கருளப் பிறந்தவர் என்று கருட வாகன பண்டிதரின் திவ்ய சூரி சரித்ரத்தில் அறிகிறோம். மணவாள மாமுனிகள் ”ஆனி யில் சோதி’ நன்னாளில்” என்கிறார். தந்தை முகுந்தார்யர், தாய் பத்மாவதி. விஷ்ணு சித்தரின் மற்றொரு பெயர் பட்டர் பிரான்.

பெரியாழ்வார் 85 வருஷங்கள் பூமியில் அருள் புரிந்தார் என அறிகிறோம். ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் பற்றிய மற்றொரு நூலான ”திருமுடி அடைவு” என்ற ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அதில் என்ன விஷயம் என்றால் முதலாழ்வார்கள் , நம்மாழ்வார் மற்றும் பெரியாழ்வாரைப் பற்றிய வரலாறு கூறப்பட்டுள்ளது. ஸ்ரீ வைஷ்ணவத்தில் சில ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் பெயர்கள் பெருமை ”நம்” ”எம்” ”பெரிய” என்னும் அடைமொழிகளால் கௌரவிக்கப்பட்டுள்ளது. உபதேச ரத்தினமாலை இதையே ” பரிவாலே வில்லிப்புத்தூர் பட்டர் பிரான் பெற்றான் பெரியாழ்வா ரென்னும் பெயர் ” என்கிறது.

வேய் என்றால் மூங்கில். மூங்கிலை உடையவர் வேயர் . திருவரங்கத்தமுதனார் என்று ஒருவர். அவர் குலத்தை மூங்கிற்குடி என்று ராமானுஜ நூற்றந்தாதி குறிக்கிறது. அந்தக்காலத்தில் பிரம்மச்சரிய ஆஸ்ரமத்திலிருந்து க்ரஹஸ்தாச்ரமம் செல்வோர் கையில் ஒரு மூங்கில் தடியை வைத்துக்கொண்டிருந்தார்கள். வேயர்கள் .

இங்கு ஒரு கதை அவசியமாகிறது. பாண்டிய ராஜா வல்லப தேவனுக்கு இரவில் நகர் சோதனை மாறுவேடத்தில் வருவது வழக்கம். ஒருநாள் வழியில் ஒரு அந்தணனைக் கண்டு நீ யார் எங்கிருந்து வருகிறாய் எங்கே போகிறாய் என்றான். அவன் நான் கங்கை\யில் நீராடி விட்டு வருகிறேன் என்றான்.
”ஒ அப்படிப்பட்ட ஸ்ரேஷ்டரோ நீர் ? எனக்கு ஒரு உபதேசம் சொல்லுமேன்? ”

பிராமணன் ஒரு ஸ்லோகம் சொன்னான் அதன் பொருள் ” மழைக்காலம் 4 மாசம் சுகமாக இருக்கவேண்டுமானால் மற்ற எட்டு மாதங்கள் உழைக்கவேண்டும். இரவில் நன்றாக சுகமாக நித்திரை பெற பகலெல்லாம் பாடுபட்டு உழைக்க வேண்டும். வயசான காலத்தில் டாக்டரிடம் தினம் போகாமல் இருக்க வாலிப வயசிலேயே சுருருப்பாக மிதமான உணவுடன், வியர்க்க சோம்பல் இன்றி உழைக்க வேண்டும். மறுமையில் மோக்ஷம் கிட்ட, இப்பிறவியிலேயே தர்ம காரியங்கள், சத்தியமாக நேர்மையாக நியாயத்தோடு புரிந்து அன்போடு பரமனைப் போற்றி வாழ வேண்டும்.”

ராஜா நேராக தனது குரு செல்வநம்பியிடம் போனான். காலில் விழுந்தான். ”குருவே எனக்கு மறுமையில் சுகம்பெற வழி சொல்வீர்” என்று கேட்டான். ” இதற்கு ஆசாரமும் வேதமும் அல்லவோ பிரமாணம். நீ என்ன செய்கிறாய், சமயத்துறையில் சிறந்த அறிஞர்களை வரவழைத்து வேதாந்த சித்தாந்த பர தத்வம் உபதேசிக்கச் செய்து அதனால் பயனடைவாயாக என்று சொன்னார்.

யார் சொல்லும் தத்வ முறை சிறந்ததோ அப்போது, தானே கீழே இருந்கும் வகையில் ஒரு பொற்கிழி ஸ்தம்பத்தில் கட்டப்பட்டது. வேத விற்பன்னர்கள் நாலா பக்கத்திலிருந்தும் வந்தார்கள். திருவரங்கன் அரங்கநாதன் சும்மாவா இருப்பார்.

”விஷ்ணுசித்தா, நீ மதுரைக்குப் போ, பாண்டியனுக்கு அறிவுரை தந்து பொற்கிழியைப் பெற்றுவா”
” சுவாமி நான் வேதநூல்கள் அறிந்து கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெறாதவன் ஆயிற்றே?”
”நான் பார்த்துக் கொள்ள மாட்டேனா. நீ கிளம்பு ”

பெரியாழ்வார் பாண்டியனுக்கு பர தத்வம் கற்பித்தார். ராஜாவும் குரு செல்வ நம்பிகளும் ஆச்சர்யப்பட்டனர். பெரியாழ்வாரின் கடல் மடை திறந்தாற்போல் நிகழ்ந்த வேத வியாக்யானம் அந்த மூங்கில் ஸ்தம்பத்திற்கே புரிந்து அது தானாகவே தலை குனிந்து வணங்கும்போது பெரியாழ்வார் கையில் பொற்கிழி விழுந்தது.

அப்புறம் என்ன? பெரியாழ்வார் நடக்கவில்லை.

ஏன் ? அவரைத்தான் ராஜா பட்டத்து யானைமேல் ஏற்றி நகர் வலம் வரவைத்துவிட்டானே. அவன் தான் பெரியாழ்வாரின் பர த்தத்வ உபதேசத்தால் வைணவனாக மாறிவிட்டானே. பெரியாழ்வாரின் கஜாரோஹணத்தை பார்க்க வந்தவர்கள் ஒருவர் கருடவாகனராக விஷ்ணுவே. அப்போது பெரியாழ்வார் பாடியது தான் திருப்பல்லாண்டு. இனியாவது தினமும் அதைப் படித்து அனுபவிக்கலாமா?

செல்வ நம்பிகள் திருக்கொட்டியூரைச் சேர்ந்த ப்ரோகிதர். அவரைப் பற்றி திருப்பல்லாண்டில் பெரியாழ்வார் சொல்கிறார்: ”அபிமானதுங்கன் செல்வனைப் போல நானும் பழவடியேன் ” (தி.ப. -10)
திருமாலை திருத் துழாய் மலர் மாலைகள் தொடுத்துச் சூட்டி மகிழ்வுறும் பணியினை மேற்கொண்டார் பெரியாழ்வார். ஆழ்வார்களிலேயே திருமாலின் கோயிலில் வாழ விரும்பிய வைணவர் என்ற பெருமை பெற்றவர் இவர் ஒருவர் தான்.

பொற்கிழி யில் கிடைத்த தங்க மோகராக்கள் எந்த பேங்கில் சேமித்து வைக்கப்பட்டன தெரியுமா? பெரிய நந்தவனமாக, கண்ணைப் பறிக்கும் மலர்கள் மலிந்து கிடக்கும் மலர் வனமாக. எதற்கு? அத்தனையும் மலர் மாலையாக அன்றன்று அரங்கனின் நீண்ட நெடு மேனியை அலங்கரிக்க.
இந்த துளசி வனத்தில் தான் ஒரு நாள் ஆண்டாள் என்கிற கோதை அவரால் கண்டெடுக்கப்பட்டாள். அவளைப் பற்றி நிறையவே எழுதவேண்டும். ஒரு வரியில் சொல்வதானால் கண்டெடுத்த, வளர்ந்த, அவள், அரங்கன் மேல் காதல் கொண்டு அவனையே அடைந்தாள், பிரிந்தாள் . இதை அவர் ஒரு பாசுரத்தில் ”

”ஒரு மகள் தன்னை உடையேன் உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல் வளர்த்தேன், செங்கண்மால் தான் கொண்டு போனான்…!!” ( பெரி. 3.8.4.)
ரங்க ”மன்னாரை” அடைந்து கோதை தந்தை பெரியாழ்வாரை மன்னாரின் ”மா மனாராக” மாற்றிய பெருமை கொண்டவள்.

நான் சரித்திரம் பக்கம் போகப்போவதில்லை, சரித்திரப் பேராசிரியர் மு. ராகவய்யங்கார் பெரியாழ்வார் காலத்துப் பாண்டியன் மாற வர்மன் என்கிறபோது, கோபிநாத ராவ் ”இல்லவே இல்லை, அவன் ஸ்ரீ வல்லபன் என்று கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகால வித்தியாசத்தைக் காட்டுகிறார். நல்லவேளை பெரியாழ்வார் 1 பெரியாழ்வார் 2 என்று வெள்ளைக்கார ராஜாக்கள் போல நம்பர் ஆழ்வாருக்கு இல்லை.
ஹிந்து சனாதனம் உலகப்புகழ் பெற காரணமாக அதற்கு இதயமாக இருப்பது ராமன் என்றால் ஆத்மாவாக இருப்பது கிருஷ்ணன் எனலாம். இந்த கிருஷ்ணனை சிறு வெண்ணையுண்ட வாயனாக கம கமக்கச் செய்தவர்கள் ஆழ்வார்கள். அவன் இளமையைச் சிறப்பித்தவர் பெரியாழ்வார். ஈடிணையற்றவர். வாழ வைப்பவனையே ”வாழ்க பல்லாண்டு ” என வாழ்த்தியவர்.
பன்னிரண்டு ஒரு வைணவ நம்பர். ஆழ்வார்கள் 12. பெருமாளின் நாமங்கள் 12. திருப்பல்லாண்டின் பாசுரங்கள் 12.
பன்னிரண்டு ஆழ்வார்களில் பெருமாளிடம் ரொம்ப நெருக்கமானவர்கள் பெரியாழ்வாரும் தொண்டரடிப் பொடியாழ்வாரும் தான்.
”பெரிய” (MACRO)ஆழ்வார் இல்லையா. பெருமாளை ”வாழ்த்தி” பல்லாண்டு பாடினார். தொண்டரடி ”பொடி” (MICRO )யாழ்வார் –துயிலெழுப்பினார். ” அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே”. எல்லா ஆழ்வார்களுமே ஒருவரை ஒருவர் மிஞ்சியவராகவே உள்ளனர். பரமனிடம் கொண்ட பரந்த பக்தியை திறந்த மனத்தோடு திறம்பட நினைத்ததை எழுத்தாக்கும் வித்தையில் அவர்களுக்கு இணை அவர்களே. நிறைய பார்க்கப்போகிறோம்.
 

Latest ads

Back
Top
Thank you for visiting TamilBrahmins.com

You seem to have an Ad Blocker on.

We depend on advertising to keep our content free for you. Please consider whitelisting us in your ad blocker so that we can continue to provide the content you have come here to enjoy.

Alternatively, consider upgrading your account to enjoy an ad-free experience along with numerous other benefits. To upgrade your account, please visit the account upgrades page

You can also donate financially if you can. Please Click Here on how you can do that.

I've Disabled AdBlock    No Thanks