• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

பழமொழி விளக்கம்

Status
Not open for further replies.
101. பழமொழி: தேளுக்கும் மணியம் கொடுத்தால் ஜாம ஜாமத்துக்குக் கொட்டும்.
பொருள்: தேள் போன்ற கொடியவர்களுக்கு அதிகாரம் கொடுத்தால் அவர்கள் அதை துஷ்பிரயோகம் செய்வார்கள்.

விளக்கம்: ஒரு ஊரின் தலையாய அதிகாரிக்கு மணியக்காரர் என்று பெயர். மணியம் என்பது ஊர், கோயில் முதலியவற்றில் மேல்விசாரணை செய்வதாகும்.

*****

102. பழமொழி: ஊர் இளக்காரம் வண்ணானுக்குத் தெரியும்.
பொருள்: ஊர் மக்களின் அந்தரங்க அவலங்கள் எல்லாம் வண்ணானுக்குத் தெரிந்துவிடும்.

விளக்கம்: ஊர் மக்களுடைய துணிகளை வண்ணான் வெளுப்பதால் அந்தத் துணிகளில் உள்ள அழுக்கு, கறை போன்றவற்றின் மூலம் வண்ணான் ஊர் மக்களின் அந்தரங்க வாழ்வில் உள்ள குறைகள் பற்றித் தெரிந்துகொள்கிறான். இன்று இதே நிலையில் நம் வீட்டு வேலைக்காரி இருக்கிறாள்!

*****

103. பழமொழி: அண்ணாமலையாருக்கு அறுபத்துநாலு பூசை, ஆண்டிகளுக்கு எழுபத்துநாலு பூசை.
பொருள்: அண்ணாமலையாருக்குச் செய்யும் விரிவான பூசையின் 64 உபசாரங்களைத் தரிசனம் செய்வதற்கு பூசாரிக்கு 74 உபசாரங்கள் செய்து அவர் தயவைப் பெற வேண்டும்.

விளக்கம்: சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி இடம் கொடுக்கவேண்டும் என்று இதுபோன்று இன்னொரு பழமொழி வழக்கில் உள்ளது.

*****

104. பழமொழி: அதிகாரி வீட்டுக் கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம்.
பொருள்: அதிகாரியின் வீட்டில் உள்ள ஒரு சிறு துரும்பும் குடியானவன் போன்ற எளியவர்களை ஆட்டிவைக்கும்.

விளக்கம்: ஒரு பழமொழியின் வசீகரம் அதில் உள்ள செய்தியை அழுத்தமாக, வியப்பூட்டும் உவம-உருவகங்களைப் பயன்படுத்திச் சொல்வதில் இருக்கிறது. கோழிமுட்டையை அதிகாரி வீட்டு அடிமட்ட வேலைக்காரனுக்கும் அம்மியைக் குடியானவன் வீட்டு தினசரி வாழ்வுக்கான முக்கியப் பொருளுக்கும் உவமை கூறியது மெச்சத்தக்கது. ஒரு அதிகாரியின் வேலையாட்கள் தம் யஜமானரின் அதிகாரம் தமக்கே உள்ளதுபோலக் காட்டிக்கொண்டு எளியோரை வதைக்கும் வழக்கம் பழமொழியில் அழகாகச் சுட்டப்படுகிறது.

*****

105. பழமொழி: வாத்தியாரை மெச்சின பிள்ளை இல்லை.
பொருள்: எந்தக் குழந்தையும் தன் ஆசிரியரை எப்போதும் புகழ்ந்து பேசுவதில்லை.

விளக்கம்: வாத்தியார் பிள்ளையை மெச்சுவது உண்டு. ஆனால் பிள்ளைக்கு வாத்தியார்மேல் எதாவது குறை இருக்கும். அதுபோல எந்த வேலைக்காரனுக்கும் தன் யஜமானர்மேல் குறை இருக்கும்.

*****

106. பழமொழி: ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி?
பொருள்: ஊரில் உள்ள யாசகர்களில் மிகவும் குறைவாக கவனிக்கப்படுகிறவன் பிள்ளையார் கோவிலில் உட்கார்ந்திருக்கும் ஆண்டி.

விளக்கம்: ஊரின் பெரிய, புகழ்பெற்ற கோவில்களின் வாசலில் யாசகத்துக்காகக் காத்திருக்கும் ஆண்டிகளைப்போல் ஊரின் ஒரு மூலையில் உள்ள ஆற்றங்கரைப் பிள்ளையார் கோவிலில் தங்கியிருக்கும் ஆண்டி கவனிக்கப்படுவானா?

*****

107. பழமொழி: ஒருகூடை கல்லும் தெய்வமானால் கும்பிடுகிறது எந்தக் கல்லை?
பொருள்: கூடையில் உள்ள ஒவ்வொரு கல்லுக்கும் ஒரு தெய்வாம்சம் கூறப்படுமானால் எந்தக் கல்லைத்தான் வணங்குவது? (எல்லாக் கல்லையும் திருப்தியுடன் வணங்குவது இலயாத காரியமாக இருக்கும்போது).

விளக்கம்: எல்லோரும் இந்னாட்டு மன்னர் ஆனால் யார்தான் சேவகம் செய்வது? ஒரு பெரிய குடும்பத்தில் ஆளாளுக்கு அதிகாரம் பண்ணும்போது அந்தக் குடும்பத்துக்கு ஊழியம் செய்யும் வேலைக்காரனின் பாடு இவ்வாறு ஆகிவிடும்.

*****

108. பழமொழி: ஈரைப் பேனாக்கிப் பேனைப் பெருமாள் ஆக்குகிறான்.
பொருள்: ஒரு சிறிய விஷயத்தைக் கண் காது மூக்கு வைத்துப் பெரிதாக்கி அதையும் ஒரு கதையாக்கிக் கூறுதல்.

விளக்கம்: ஈர் என்பது பேனின் முட்டையானதால் இந்த இரண்டுக்கும் சம்பந்தம் உள்ளது. ஆனால் பேனுக்கும் பெருமாளுக்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை இப்படி இருக்கலாமோ? ஒரு புள்ளி அளவுள்ள ஈர் என்ற பேன் முட்டையானது அது பொரிந்தால் கண் வாய் உடல் காலுள்ள பேன் ஆகிறது. அந்தப் பேனையும் பெரிதாக்கினாள் (உதாரணமாக ஒரு நுண்நோக்கியால் பார்த்தால்) அது பெருமாளின் அவதாரம் போலத் தோன்றுமோ என்னவோ? வேறு விளக்கம் தெரிந்தவர் கூறலாம்.

*****

109. பழமொழி: கரும்பை விரும்ப விரும்ப வேம்பு.
பொருள்: ஒரு இனிய பொருளை மேலும் மேலும் விரும்பி உபயோகிக்கும்போது அது திகட்டிவிடுகிறது.

விளக்கம்: இது போன்ற பிற பழமொழிகள்:
பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
சேரச் சேரச் செடியும் பகை.
நித்தம் போனால் முற்றம் சலிக்கும்.
படுக்கப் படுக்கப் பாயும் பகை.

*****

110. பழமொழி: வைத்தியன் பிள்ளை நோவு தீராது, வாத்தியார் பிள்ளைக்குப் படிப்பு வராது.
பொருள்: ஒரு மருத்துவரின் குழந்தையின் உடல்நலக்குறைவு அவ்வளவு எளிதில் குணமாகாது. அதுபோல ஒரு ஆசிரியரின் குழந்தை அவ்வளவு நன்றாகப் படிக்காது.

விளக்கம்: ஏன் இவ்விதம்? வைத்தியர், வாத்தியார் இருவருமே தம் குழந்தையின் பால் உள்ள பரிவில் விரைவில் குணமாக/முன்னுக்கு வர, வெகுவாக மருந்து/கல்வி ஊட்டுவதால்.

*****
 
அந்தப் பேனையும் பெரிதாக்கினாள் (உதாரணமாக ஒரு நுண்நோக்கியால் பார்த்தால்) அது பெருமாளின் அவதாரம் போலத் தோன்றுமோ என்னவோ? வேறு விளக்கம் தெரிந்தவர் கூறலாம்.
நுண் நோக்கியில், பேன் பெருமாளாக மாற வாய்ப்பு உள்ளது!

இதோ, நான் எடுத்த ஒரு புகைப்படத்தில் வலதுபுறம் கீழே ஓரத்தில் இருக்கும் வண்டைப் பாருங்கள்.

அது பிள்ளையார் போல இல்லை?

018%2520MUSEUM%2520OF%2520HISTORY.jpg
 
பழமொழி: வைத்தியன் பிள்ளை நோவு தீராது, வாத்தியார் பிள்ளைக்குப் படிப்பு வராது.
'வாத்தியார் பிள்ளை மக்கு; வைத்தியர் பிள்ளை சீக்கு!' - என்று சொல்லக் கேட்டுள்ளேன்.
 
பழமொழி: வைத்தியன் பிள்ளை நோவு தீராது, வாத்தியார் பிள்ளைக்குப் படிப்பு வராது.

That teacher's son may be quite brilliant and peforming very well; but since his father is a teacher, his father would be setting a very high standard for him, sometimes unrealistic standard. When the youngster failed to acheive that high standard, his father would be telling others " my son is not good enough in studies" and others would actually believe that son as an under acheiver.

This proverb reminds me a very sad incident back in 1970s. That teacher put a very high standard on his son. His son was above average acheiver; but not the school topper. His father always put him through torture. Not because of his father, but inspite of his father this boy scored decent marks in school finals. It was not enough for his father. Verbal torture continued( I have witnessed it). Eventually that boy comitted suicide in Pondicherry.
 
110. பழமொழி: வைத்தியன் பிள்ளை நோவு தீராது, வாத்தியார் பிள்ளைக்குப் படிப்பு வராது.
.......... விளக்கம்: ஏன் இவ்விதம்? வைத்தியர், வாத்தியார் இருவருமே தம் குழந்தையின் பால் உள்ள பரிவில் விரைவில் குணமாக/முன்னுக்கு வர, வெகுவாக மருந்து/கல்வி ஊட்டுவதால். ...
ஒருவேளை, ஒரு துறையில் தேர்ச்சி பெற்ற வைத்தியர், தன் பிள்ளைகளின் எல்லா வித நோய்களுக்கும்

தானே மருந்து கொடுப்பதால் அல்லது மாதிரி மருந்துகளைத் தந்து சோதனை செய்வதால் இருக்குமோ? :sick:


என் தந்தை ஒரு General Medical Practitioner. வைத்தியரின் பிள்ளைகள் இப்படித்தான் சொல்லுவர் என்பார்:

'Dad! Please don't treat us with sample medicines!' எத்தனை உண்மையான சொற்கள்! :)
 
111. தமிழில் ’அளவு’ என்ற பொருள்பற்றிச் சில பழமொழிகள் உள்ளன. அவை பெரும்பாலும் தரத்தைவிட அளவையே நாடும் மனிதர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

பழமொழி: இத்தனை அத்தனையானால் அத்தனை எத்தனையாகும்?
பொருள்: இப்போது உள்ளது நீ விரும்பும் அளவானால் நீ விரும்பும் அளவு எத்தனை?

விளக்கம்: இந்தப் பழமொழி ஒரு வார்த்தை ஜாலம்போலத் தோன்றினாலும், இதற்கு ஆன்மீக வழியில் பொருள்கூறலாம். இத்தனை என்பது விரல் அளவே உள்ள நம் ஆத்மா. அத்தனை என்பது இதுபோலப் பல ஜீவாத்மாக்கள். இது போன்று விரல் அளவேயுள்ள ஜீவாத்மா பரமாத்மா என்றால் பரமாத்மாவின் அளவு எத்தனை இருக்கும் என்று வியப்பதாகக் கொள்ளலாம்.

இதுபோன்று கீழ்வரும் பழமொழிகளில் முதலாவதுக்கு ஆன்மீக விளக்கம் கூறலாம். மற்றவை மேற்சொன்னவாறு அளவைமட்டுமே விரும்புவோரைக் குறித்தவையே.

விரல் உரல் ஆனால் உரல் என்ன ஆகும்?
கழுதைப் புட்டை கை நிரம்பினால் போதும்.
கொசுவு மூத்திரம் குறுணி. [கொசுவு=கொசு, குறுணி=ஒரு மரக்கால் அளவு]
மலிந்த சரக்கு/பண்டம் கடைத்தெருவுக்கு வரும்.

*****

112. அருமை, அதாவது ஒரு பொருள் கிடைபது அரிதாகிவிட்டதைக் குறித்துச் சில பழமொழிகள். இவை தானே விளங்குவன.

பழமொழிகள்:
அத்திப் பூ கண்டது/பூத்தது போல.
அன்னப்பிடி வெல்லப்பிடி ஆச்சுது.
சோறு வெல்லமாய்ப் போச்சுது.
உத்தியோகம் குதிரைக் கொம்பாயிருக்கிறது.
கார்த்திகைப் பிறை கண்டவன் போல.
காற்றிலே கருப்பிலே கண்டதில்லை/நினைக்கவில்லை.
பிண்டம் பெருங்காயம் அன்னம் கஸ்தூரி.

*****

113. அருமையின்மை, அதாவது ஒரு பொருள் அதிகமாக, எளிதாகக் கிடைப்பது பற்றி:

பழமொழிகள்:
அணிற்பிள்ளைக்கு நுங்கு அரிதோ, ஆண்டிச்சி பிள்ளைக்குச் சோறு அரிதோ? [ஆண்டிச்சி=பிச்சைக்காரி]
இந்தப் பழமொழி சில துறவிகளின் ’வறுமை’ பற்றி அங்கதமாகச் சொல்லப்படுகிறது.

உரல் பஞ்சம் அறியுமோ?
பெரும்பாலும் எல்லா சமையல் பொருள்களும் உரலில் இடிக்கப்/பொடிக்கப் படுகின்றன. வறுமைக் காலத்தில்கூட பொடிக்க எதேனும் இருக்கும்.

கல்யாணத்திலும் பஞ்சமில்லை, களத்திலும் பஞ்சமில்லை.[களம்=நெற்போர்]
கொல்லன் தெருவிலே ஊசி விற்கிறதா?
தீப்பட்ட வீட்டிலே கரிக்கட்டை பஞ்சமா?
வேடனுக்குத் தேன் பஞ்சமா, மூடனுக்கு அடி பஞ்சமா?

*****

114. அனுபவம், அதாவது பட்டறிவு பற்றிச் சில:

பழமொழிகள்:
அப்பன் அருமை செத்தால் தெரியும், உப்பின் அருமை உப்பில்லாதேபோனால் தெரியும்.
காவடிப் பாரம் சுமக்கறவனுக்குத் தெரியும்.
தலைநோவும்/தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.
பட்டால் தெரியும் பார்ப்பானுக்கு, கெட்டால் தெரியும் கோமுட்டிக்கு.
பார்த்தால் தெரியுமா, பட்டால் தெரியுமா வருத்தம்?

*****

115. பழமொழி: இடைச்சன் பிள்ளைக்காரிக்குத் தலைச்சன் பிள்ளைக்காரி மருத்துவம் பார்த்தாற்போல.
பொருள்: ஒரு குழந்தை பெற்றவள் இரண்டாவது பெறும் வேறு ஒருத்திக்கு மருத்துவம் பார்க்க விரும்பினாளாம்.

விளக்கம்: இடைச்சன்=இரண்டாம் பிள்ளை, தலைச்சன்=முதல் பிள்ளை.

*****

116. பழமொழி: தொட்டுக் காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது.
பொருள்: நடைமுறை அனுபவங்களுடன் கற்றுக்கொடுக்கப்படாத கல்வி உடலில் சூடுபோட்டாலும் மனதில் ஏறாது.

விளக்கம்: ஆசிரியர் கல்வி பயிற்றுவிக்கும்போது நடைமுறை உதாரணங்களையும் உலக அனுபவங்களையும் விளக்கிக் காட்டவேண்டும். அப்படி போதிக்கப்படாத கல்வியை உடலில் சூடுபோட்டாலும் அந்த வடுவின் நினைவாக மனதில் ஏற்றமுடியாது.

*****

117. பழமொழி: நேற்று வெட்டின கிணற்றிலே முந்தாநாள் வந்த முதலை போல.
பொருள்: கிணறே நேற்றுதான் வெட்டியது; அப்படியிருக்க அதில் முந்தாநாள் முதலையைப் பார்த்ததாகச் சொல்வது எங்ஙனம்?

விளக்கம்: சமீபத்தில் தெரிந்துகொண்டதை ரொம்பநாள் தெரிந்தவன் போலப் பேசும் ஒருவனிடம் அங்கதமாகக் கூறுவது.

*****

118. பழமொழி: புதிய வண்ணானும் பழைய அம்பட்டனும் தேடு.
பொருள்: வண்ணான் புதியவனாகவும் நாவிதன் பழகியவனாகவும் இருப்பது நல்லது.

விளக்கம்: ஏன் இப்படி? வண்ணானனிடம் இருக்கவேண்டியது உடல் வலிமை; அது புதிய, இளம் வண்ணானிடம் அதிகம் இருக்கும். நாவிதனிடம் இருக்கவேண்டியது (நமக்கு ஏற்றபடி முடிவெட்டும்) திறமை; அது பழகியவனுக்கே கைவரும். இதுபோன்ற இன்னொரு பழமொழி:
வால ஜோசியனும், விருத்த வைத்தியனும் நன்று. (வால=வாலிப, இளம்; விருத்த=வயதான)

*****

119. பழமொழி: அப்பியாசம் கூசா வித்தை.
பொருள்: அனுபவத்தில் விளையும் கல்வியே நம்பிக்கை தரும்.

விளக்கம்: கூசா என்ற சொல்லுக்கு தமிழ் அகராதி கூஜா என்று பொருள் தருகிறது. அப்படியானால் கூசா/கூஜா வித்தை என்பது என்ன? ஆசிரியருக்கு கூஜா தூக்கி அவரைத் தாஜா செய்து அவர் அனுபவங்கள் மூலம் அறிய முயல்வதா? தெரிந்தவர் விளக்கலாம். ’அப்பியாசம் குல விருது’ என்பது இன்னொரு பழமொழி.

*****

120. பழமொழி: எத்தனை வித்தை கற்றாலும் செத்தவனைப் பிழைப்பிக்க அறியான்.
பொருள்: எவ்வளவுதான் கற்றுக்கொண்டாலும், இறந்தவனை உயிர்பிழைக்க வைக்க உதவுமோ அது?

விளக்கம்: அந்நியர் நம்மை ஆண்ட காலத்தில் ஹிந்துக்கள் ஐரோப்பியர்களைக் குறித்துச் சில சமயம் இவ்வாறு கூறி வந்தனர்.

*****
 
121. பழமொழி: பங்காளத்து நாய் சிங்காசனம்மேல் ஏறினது என்று வண்ணான் கழுதை வெள்ளாவிப் பானையில் ஏறினதாம்.
பொருள்: வங்காள நாட்டைச் சேர்ந்த நாய் தன் யஜமானனின் சிம்மாசனத்தில் ஏறியதைப் பார்த்த கழுதை, தானும் அதுபோல் செய்ய நினைத்துத் தன் யஜமானனின் வெள்ளாவிப் பானையில் ஏறியதாம்.

விளக்கம்: வங்காளத்தை ஆண்டவர்கள் நாய் வளர்த்தனர் போலும். தனக்கு ஆகாததைச் செய்து மாட்டிக்கொள்ளக் கூடாது என்பது செய்தி.

*****

122. பழமொழி: அம்பாத்தூர் வேளாண்மை யானை கட்டத் தாள், வானமுட்டும் போர்; ஆறுகொண்டது பாதி, தூறுகொண்டது பாதி.
பொருள்: ஆம்பத்தூரில் அறுவடைக்குப் பின் மிஞ்சும் நெல் தாள்கள் யானையைக் கட்டும் அளவுக்கு வலிமையாம், நெல் போரோ வானம் முட்டும் உயரமாம். இருப்பினும் அங்கு விளைச்சலில் ஆறும் தூறும் பாதிப்பாதி கொண்டுபோய்விட்டனவாம்!

விளக்கம்: பொய் சொன்னது ஏன்? இதுதான் கதை: (வெள்ளையர் ஆட்சியில்?) அம்பத்தூருக்கு வரி வசூல் அதிகாரி வந்தபோது ஊர்த்தலைவர் பழமொழியின் முதல் பாதியைக் கூறினாராம், நல்ல விளச்சல் என்று பொருள்பட. கூடவே அவர் தன் கையை உயர்த்திப் பேசி, விரலில் உள்ள தங்க மோதிரத்தைச் சூசனையாக அதிகாரிக்குக் காட்டினார், வரியைக் குறைத்தால் மோதிரத்தை கையூட்டாகத் தரத் தயார் என்ற சைகையுடன். அதிகாரி மகிழ்ந்து பழமொழியின் இரண்டாவது பாதியைச் சொல்லி அதையே தான் குறித்துக்கொள்வதாகக் கூறினார். அதிகாரிக்குத் தெரியும், தன் கலெக்டருக்குச் சரியான கணக்குக் கட்டுவதைவிட, ஊர் விவசாயிகளைத் திருப்திப்படுத்துவது லாபகரமானது என்று.

*****

123. பழமொழி: உற்றார் தின்றால் புற்றாய் விளையும், ஊரார் தின்றால் பேராய் விளையும்.
பொருள்: உறவினர்களுக்கு உணவிட்டால் வீட்டைச்சுற்றி எறும்புப் புற்றுதான் வளரும். அதுவே ஊரார்குச் சோறிட்டால் அது நமக்கு நல்ல பெயரைத் தரும்.

விளக்கம்: அன்னதானத்தின் சிறப்பைப் பற்றிச் சொன்னது.

*****

124. பழமொழி: வாழைப்பழம் கொண்டுபோனவள் வாசலில் இருந்தாள், வாயைக் கொண்டுபோனவள் நடுவீட்டில் இருந்தாள்.
பொருள்: வாழைப்பழங்களை மரியாதை நிமித்தம் வெகுமதியாக வாங்கிக்கொண்டு போன பெண் வாசலில் காத்திருக்க, தன் வாக்கு சாதுரியத்தால் இன்னொரு பெண் உடனே வரவேற்கப்பட்டு வீட்டின் நடுக்கூடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.

விளக்கம்: முகஸ்துதிக்கு மயங்காதவர் உண்டோ?

*****

125. பழமொழி: ஆகாசத்தை வடுப்படாமல் கடிப்பேன் என்கிறான்.
பொருள்: தற்புகழ்ச்சியின் உச்சி இது.

விளக்கம்: இதுபோன்ற பிற பழமொழிகள்: ’வானத்தை வில்லாக வளைப்பேன்’, ’மணலைக் கயிறாகத் திரிப்பேன்’.

*****

126. பழமொழி: துள்ளாதே துள்ளாதே குள்ளா! பக்கத்தில் பள்ளமடா!
பொருள்: குள்ளன் அவனுக்குத் தற்புகழ்ச்சி அதிகம், ரொம்பத் துள்ளினால் பள்ளத்தில் விழுவோம் என்று அறியான்.

விளக்கம்: எப்படிப்பட்ட தற்புகழ்ச்சிக்காரனுக்கும் அவன் சவாலை எதிர்கொள்ள ஒருவன் இருப்பான் என்பது செய்தி.

*****

127. பழமொழி: பொரிமாவை மெச்சினான் பொக்கைவாயன்.
பொருள்: பல்லில்லாதவன் பொரிமாவைச் சாப்பிட்டு ’ஆஹா, இதுபோல் உணவு உண்டோ?’ என்றானாம்.

விளக்கம்: ஒவ்வொருவரும் அவரால் முடிந்தது மற்ற எதையும்விட உயர்ந்தது என்று மெச்சிப் புகழ்வர்.

*****

128. பழமொழி: ஆண்டிக்குக் கொடுக்கிறாயோ, சுரைக் குடுக்கைக்குக் கொடுக்கிறாயோ?
பொருள்: ஆண்டி ஒருவனுக்கு உணவிடும்போது அது அவனுக்காகவா? அல்லது அவன் கையேந்தும் சுரைக் குடுக்கைக்காவா?

விளக்கம்: கொடுப்பதைப் புகழ்ச்சியை எதிர்பாராமல் கொடுக்கவேண்டும் என்பது செய்தி. உணவை ஆண்டியின் சுரைக் குடுக்கையில்தான் இட்டாலும், அவன் முகத்தைப் பார்த்து அதை அவன் மெச்சுகிறானா என்று எதிர் பார்த்தால் கொடுத்ததன் பலன் கிட்டாது.

*****

129. பழமொழி: சங்கிலே விட்டால் தீர்த்தம், மொந்தையிலே விட்டால் தண்ணீர்.
பொருள்: இரண்டுமே தண்ணீர்தான் என்றாலும் இருக்கும் இடத்துக்குத் தக்கவாறு மதிக்கப்படும்.

விளக்கம்: கண்ணதாசனின் திரைப்பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது:
பரமசிவன் கழுத்தில் இருந்து
பாம்பு கேட்டது: கருடா, சௌக்யமா?
யாரும் இருக்கும் இடம் இருந்துகொண்டால்
எல்லாம் சௌக்யமே, கருடன் சொன்னது.

இது போன்ற இன்னொரு பழமொழி: ’வைத்தியன் கோடுத்தால் மருந்து, இல்லாவிட்டால் மண்ணு.’

*****

130. டம்பம், ஆடம்பரம், ஜம்பம் குறித்த சில பழமொழிகள் (பொருள், விளக்கம் தேவையில்லை):
பழமொழிகள்:
அப்பன் சோற்றுக்கு அழுகிறான், பிள்ளை கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான்.
ஆழாக்கு அரிசி, மூவாழாக்குப் பானை, முதலியார் வருகிற வீறாப்பைப் பார்.
ஒய்யாரக் கொண்டையாம், தாழம் பூவாம், உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்.
கறிக்கு இல்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்கவோ?
குடிக்கிறது கூழ், கொப்புளிக்கிறது பன்னீர்.
பெருமை ஒரு முறம், புடைத்து எடுத்தால் ஒன்றுமில்லை.

*****
 
131. பழமொழி: எங்கள் ஆத்துக்காரனும் கச்சேரிக்குப்போய் வந்தான்.
பொருள்: என் கணவனும் நீதி மன்றத்தில் வேலை செய்கிறார்.

விளக்கம்: இவள் கணவர் கோர்ட்டில் ஒரு பியூனாகவோ குமாஸ்தாவாகவோ இருப்பார். அதைப் பட்டும் பாடாமலும் இவள் ஆடம்பரமாகச் சொல்லிக்கொள்கிறாள். இந்தப் பழமொழி இந்நாளில் சங்கீதக் கச்சேரி செய்யும் ’தேங்காய் மூடி பாடகர்’ குறித்தும் சொல்லப்படுகிறது. [கச்சேரி என்ற சொல்லுக்குத் தமிழில் உத்தியோக சாலை என்று பொருள், அது எந்த உத்தியோகாமானாலும்.]

*****

132. பழமொழி: ஜாண் பண்டாரத்துக்கு முழம் விபூதி/தாடி.
பொருள்: குள்ளப் பண்டாரத்தின் விபூதிப்பட்டை/தாடி அவர் உயரத்தைவிட அதிகம் இருப்பதுபோல் தெரிகிறது!

விளக்கம்: தன் நிலைக்குத் தகாத மரியாதையைகளை எதிர்பார்ப்போர்களைக் குறித்துச் சொன்னது.

*****

133. பழமொழி: மடப் பெருமைதான் நீச்சு தண்ணீருக்கு வழியில்லை.
பொருள்: மடத்தின் பெருமை பெரியதுதான், ஆனாலும் அங்கு சோறு-தண்ணீர் கிடைக்காது.

விளக்கம்: நீச்சுத்தண்ணீர் என்பது நீர்+சோறு+தண்ணீர் என்ற சொற்களின் சேர்க்கை. அது நீராகாரத்தைக் குறிக்கும். ’தோப்பு துரவு, நிலம் நீச்சு’ என்று சொல்கிறோம். இங்கு துரவு என்பது மணற்கேணியையும் நீச்சு என்பது நீர் நிறைந்த நெல்வயல்களையும் குறிக்கும்.

*****

134. பழமொழி: வீடு வெறும் வீடு, வேலூர் அதிகாரம்.
பொருள்: வீட்டில் காசுக்கு வழியில்லை, அதிகாரமோ வேலூர் நவாப் போல.

விளக்கம்: வீட்டுச் செலவுகளுக்குக் கொஞ்சம் பணமே கொடுப்பது வழக்கமாக இருக்க, விருந்துணவு கேட்டு அதிகாரம் செய்யும் கணவன் குறித்து மனைவி சொன்னது.

இதுபோன்று அளவுக்கு மீறிய ஆசைகள் குறித்த வேறு சில பழமொழிகள்:

"உள்ள பிள்ளை உரலை நக்கிக்கொண்டிருக்க, மற்றொரு பிள்ளைக்குத் திருப்பதிக்கு நடக்கிறாள்."
"கிடக்கிறது ஓட்டுத்திண்ணை, கனாக் காண்கிறது மச்சுவீடு."
"காவேரி கஞ்சியாய்ப் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கவேண்டும்."
"ஏழாயிரம் பொன்பெற்ற குதிரை இறப்பைப் பிடுங்கையில், குருட்டுக் குதிரை கோதுமை ரொட்டிக்கு வீங்கினதாம்." [இறப்பு=தாழ்வாரக் கூறையின் இடுக்கு]

மனிதனின் வறுமை இறைவனையும் தொற்றிக்கொள்கிறது!
"ஆண்டியே அன்னத்துக்கு அலையச்சே தன் லிங்கம் பால்சோற்றுக்கு அழுகிறது."
"ஆவுடயாரையும் (நந்தி) லிங்கத்தையும் ஆறு கொண்டுபோக, சுற்றுக்கோவில் சுவாமி எல்லாம் சர்க்கரைப் பொங்கலுக்கு அழுததுபோல."
"பெருமாள் புளிச்ச தண்ணீருக்கு அலைகிறார், அனுமார் தத்தியோன்னம் கேட்கிறார்."

*****

135. பழமொழி: பல்லக்குக்கு மேல்மூடி யில்லாதவனுக்கும், காலுக்குச் செருப்பில்லாதவனுக்கும் விசாரம் ஒன்றே.
பொருள்: கவலையும் வருத்தமும் பணக்காரனுக்கும் உண்டு, ஏழைக்கும் உண்டு.

விளக்கம்: பணக்காரன் துணியைப் போர்த்தி பல்லக்கை மூடிக்கொள்ளலாம்; செருப்பில்லாத ஏழை என்ன செய்ய முடியும்? அதாவது, பணக்காரன் தன் மெய்வருத்தம் சரிசெய்துகொள்ளலாம். ஏழைக்கு அது முடியாது.

*****

136. பழமொழி: காலக்ஷேபத்துக்குக் கூலிக்குக் குத்தினாலும், கமுக்கட்டு வெளியே தெரியப் போகாதாம்.
பொருள்: வயிற்றுப் பாட்டுக்காக உரலில் நெல் குத்துவது வேலையானாலும், அந்த ஏழைப்பெண் தன் அக்குள் தெரியுமாறு உடுக்கமாட்டாள்.

விளக்கம்: நெல் குத்தும்போது கைககளைத் தூக்கவேண்டி வரும். இன்றைய கதை வேறு.

*****

137. பழமொழி: கூழ் குடித்தாலும் குட்டாய்க் குடிக்கவேண்டும்.
பொருள்: வறுமையானாலும் வெட்கப்படாமல் தன்னிலையில் மானமரியாதையுடன் இருக்கவேண்டும்.

விளக்கம்: குட்டு என்பதற்கு மானம், மரியாதை என்றொரு பொருள் உண்டு. ’கூழாலும் குளித்துக் குடி, கந்தையானாலும் கசக்கி கட்டு’ என்ற பழமொழியும் இதுபோன்று வறுமையிலும் செயல்களில் மானம் மரியாதை வேண்டும் அறிவுறுத்துகிறது.

*****

138. பழமொழி: பசி வந்தால் பத்தும் பறக்கும்.
பொருள்: பசி வந்திடப் பத்தும் பறந்துபோம் என்றும் இந்தப் பழமொழி வழங்குகிறாது.

விளக்கம்: பறந்துபோகும் பத்து இவை: மானம், குலம், கல்வி, வண்மை (இங்கிதமான நடத்தை), அறிவுடமை, தானம், முயற்சி, தாணாண்மை (ஊக்கம்), காமம் (ஆசை), பக்தி. (வேறு விளக்கம் இருந்தால் தெரிவிக்கலாம்).

*****

139. பழமொழி: வௌவால் வீட்டுக்கு வௌவால் வந்தால், நீயும் தொங்கு நானும் தொங்கு.
பொருள்: ஒரு வௌவால் மற்றொரு வௌவாலை சந்திக்கும்போது, அதுபோல இதுவும் தொங்கவேண்டும்.

விளக்கம்: ஒரு ஏழை மற்றொரு ஏழையிடம் யாசித்தபோது, இரண்டாவது ஏழை சொன்னது.

*****

140. பழமொழி: உலுத்தன் விருந்துக்கு ஒப்பானது ஒன்றுமில்லை.
பொருள்: கஞசம் தரும் விருந்துக்கு இணையானது இல்லை (அங்கதமாகச் சொன்னது).

விளக்கம்: உலுத்தன் என்றால் உலோபி, கஞ்சன் என்று பொருள். இதுபோன்று இன்னும் சில பழமொழிகள்:
"எச்சில் கையால் காக்கை ஓட்டமாட்டான்."
"எட்டி பழுத்தென்ன, ஈயாதார் வாழ்ந்தென்ன?"
"கட்டாணித்தன்மாய்க் கலியாணம் செய்தான்." [கட்டாணி=உலோபி]
"தானும் இடாள், இட்டவர்களைப் பார்த்தறியாள்."

"விடாக்கண்டன் கொடாக்கண்டன்" அல்லது "விடாக்கெண்டன், கொடாக்கெண்டன்"
[கென்டன் என்றால் மிண்டன் என்றால் வலியவன்; கண்டன் என்றால் வீரன்.]

*****
 
141. பழமொழி: ஆனால் அச்சிலே வார், ஆகாவிட்டால் மிடாவிலே வார்.
பொருள்: சரியாக இருந்தால் அச்சில் கொட்டு, இல்லாவிட்டால் திரும்ப கொதிக்கும் பானையில் கொட்டு.

விளக்கம்: பொற்கொல்லன் தங்கத்தை உருக்கிப் பரிசோதிக்கும்போது மாசற்று இருந்தால் நகை செய்யும் அச்சில் கொட்டுவான். மாசு இருந்தால் மீண்டும் அதைக் கொதிக்கும் பானையில் கொட்டி உருகவைப்பான். ஏதோ ஒரு வழியில் காரியத்தை முடிப்பவர்களைக் குறித்துச் சொன்னது.

*****

142. பழமொழி: இராஜ முகத்துக்கு எலுமிச்சம்பழம்.
பொருள்: ராஜாவுக்கு எலுமிச்சை பழம் கொடுத்தது போல.

விளக்கம்: மகான்களைப் பார்க்கப் போகும்போது அவர்களுக்கு எலுமிச்சம்பழம் தரும் வழக்கம் இருக்கிறது. அதாவது, எலுமிச்சம் பழம் பெரியவர்களின் அறிமுகத்தைப் பெற்றுத்தரும். அதுபோலத் திறமையுள்ளவர்கள் தாம் நினைத்ததை எளிதாக, சிக்கனமாக முடிப்பார்கள் என்பது செய்தி.

*****

143. பழமொழி: தண்ணீரில் அடிபிடிக்கிறது.
பொருள்: தண்ணீரிலும் காலடித் தடங்களைக் கண்டறிவது.

விளக்கம்: மிகவும் சாமர்த்திய மானவன் என்று அறியப்பட்ட ஒருவனைக் குறித்து அங்கதமாகச் சொன்னது.

*****

144. பழமொழி: நீண்டது தச்சன், குறைந்தது கருமான்.
பொருள்: தச்சனுக்கு மரம் நீளமாக இருக்கவேண்டும்; கொல்லனுக்கோ இரும்பு சின்னதாக இருக்கவேண்டும்.

விளக்கம்: தச்சன் மரத்தைத் துண்டங்களாக அறுத்து வேலை செய்பவன். கொல்லனோ இருபைக் காய்ச்சி அடித்து நீளமாக்கி வேலை செய்பவன். எல்லோர்க்கும் ஒன்றுபோல் ஆகாது என்பது செய்தி.

*****

145. பழமொழி: மழைக்கால இருட்டானாலும், மந்தி கொம்பு இழந்து பாயுமா?
பொருள்: மழை மூட்டத்தால் இருட்டாக உள்ளபோதும் குரங்கு தாவும்போது கிளையைப் பற்றாது போகுமா?

விளக்கம்: நீ ஏமாந்து போகலாம் என்றதற்குப் பதிலாக ஒருவன் உரைத்தது.

*****

146. பழமொழி: கெரடி கற்றவன் இடறிவிழுந்தால், அதுவும் ஒரு வரிசை என்பான்.
பொருள்: சிலம்பம் கற்றவன் தன் ஆட்டத்தில் இடறி விழுந்தால் அதுவும் அவன் ஆட்டக்கலையில் ஒரு வகை என்பான்.

விளக்கம்: கரடி என்ற சொல்லின் திரிபு கெரடி. கரடி என்றால் சிலம்பம் என்று ஒரு பொருள் உண்டு. வரிசை என்றால் முறை, ஒழுங்கு, வகை என்று பொருள். வல்லவன் ஒருவன் தன் தவறை ஒப்பாதது குறித்துச் சொன்னது.

*****

147. பழமொழி: சட்டி சுட்டதும், கை விட்டதும்.
பொருள்: ஏண்டா அடுப்பில் இருந்த மண் கலையத்தை இறக்கும்போது கீழே போட்டாய் என்றால், சட்டி சுட்டுவிட்டது என்றதுபோல.

விளக்கம்: ஒரு நொண்டிச் சாக்கைக் குறித்துச் சொன்னது.

*****

148. பழமொழி: பார்க்கக்கொடுத்த பணத்துக்கு வெள்ளிக்கிழமையா?
பொருள்: இந்தப் பணத்தை எண்ணிச் சொல் என்றதற்கு, எண்ணிப் பார்த்துவிட்டு, இன்று வெள்ளிக்கிழமை அதனால் பணத்தைத் திருப்பித்தற இயலாது என்றானாம்.

விளக்கம்: ஒரு பொதுவான நம்பிக்கையைக் காரணம் காட்டி நொண்டிச் சாக்கு சொன்னது.

*****

149. பழமொழி: ரெட்டியாரே ரெட்டியாரே என்றால், கலப்பையை பளிச்சென்று போட்டதுபோல்.
பொருள்: யாரோ யாரையோ ரெட்டியாரே என்று கூப்பிட்டபோது இந்த உழவன் கலப்பையைக் கீழே போட்டுவிட்டு ஓடி வந்தானாம்.

விளக்கம்: ரெட்டியார் என்றது தெலுங்கு தேச உழவர்களை. யாரையோ குறித்து ரெட்டியாரே என்று கூப்பிட்டபோது இவன் தன்னைத்தான் கூப்பிடுவதாகச் சொல்லி, உழுவதை நிறுத்திவிட்டுக் கலப்பையைக் கேழே போட்டுவிட்டு ஓடி வந்தானாம். சிரத்தை இல்லாமல் சோம்பேறியாக வேலையில் இருப்பவர்களைக் குறித்துச் சொன்னது.

*****

150. பழமொழி: இது சொத்தை, அது புளியங்காய்ப்போல்.
பொருள்: இது புழு அரித்துச் சொத்தையாக உள்ளது, அதுவோ புளியங்காய் போலப் புளிப்பாக உள்ளது என்று நிராகரித்தது.

விளக்கம்: எதை எடுத்தாலும் குறை சொல்லுவனைக் குறித்துச் சொன்னது.

*****
 
151. பழமொழி: இந்தப் பூராயத்துக்கு ஒன்றும் குறைச்சலில்லை.
பொருள்: நீ தூண்டித் துருவி ஆராய்வதற்கு ஒன்றும் குறைச்சலில்லை.

விளக்கம்: பூராயம் என்றால் ஆராய்ச்சி, இரகசியும், விசித்திரமானது என்று பொருள். உன் ஆராய்ச்சியில் ஒன்றும் குறைவில்லை, ஆனால் விளைவுகள்தான் ஒன்றும் தெரியவில்லை என்று பொருள்படச் சொன்னது.

*****

152. பழமொழி: ஈர வெங்காயத்திற்கு இருபத்து நாலு புரை எடுக்கிறது.
பொருள்: வெங்காயம் புதிதாக, ஈரமாக இருந்தாலும் அவன் அதிலும் இருபத்து நான்கு தோல்கள் உரித்திடுவான்.

விளக்கம்: மிகவும் கெட்டிக்காரத்தனமாக விமரிசனம் செய்பவர்களைக் குறித்துச் சொன்னது. மரபு வழக்கங்களில் எதையெடுத்தாலும் குறைகாணும் இளைஞர்களைக் குறித்துப் பெரியவர்கள் வழக்கமாகச் சொல்வது.

*****

153. பழமொழி: ஊசி கொள்ளப்போய்த் துலாக் கணக்கு பார்த்ததுபோல.
பொருள்: ஊசி வாங்கச் சென்றவன் அதன் எடையை நிறுத்துக் காட்டச் சொன்னானாம்!

விளக்கம்: அற்ப விஷயங்களைக் கூட சந்தேகத்துடன் ஆராய முனைபவர்களைக் குறித்துச் சொன்னது.

*****

154. பழமொழி: எச்சில் (இலை) எடுக்கச் சொன்னார்களா? எத்தனை பேர் என்று எண்ணச் சொன்னார்களா?
பொருள்: சாப்பிட்டபின்னர் இலகளை எடுக்கச் சொன்னபோது எத்தனை பேர் சாப்பிட்டார்கள் என்று இலைகளை எண்ணினானாம்.

விளக்கம்: தன் வேலைக்குத் தேவையில்லாத விஷயங்களில் ஆர்வம்கொண்டு நேரத்தை விரயம் செய்பவர்களைக் குறித்துச் சொன்னது.

*****

155. பழமொழி: குதிரை நல்லதுதான், சுழி கெட்டது.
பொருள்: குதிரை பார்க்க நலமுடன் இருக்கிறது, ஆனால் அதன் சுழி சரியில்லை.

விளக்கம்: குதிரை வாங்கும்போது அதன் உடம்பில் உள்ள மயிரிச்சுழி போன்ற குறிகள் சொந்தக்காரரின் அதிரிஷ்டத்துக்கு அல்லது துரதிரிஷ்டத்துக்கு அறிகுறி என்ற நம்பிக்கையின் பேரில் ஏற்பட்ட பழமொழி.

*****

156. பழமொழி: புண்ணியத்துக்கு உழுத குண்டையை பல்லைப் பிடித்துப் பதம் பார்த்ததுபோல.
பொருள்: இரவலாகக் கொடுத்த எருதினை அது உழுதுமுடித்தபின் பல்லைப் பார்த்து சோதனை செய்ததுபோல.

விளக்கம்: அன்பாக உதவியவர்களிகளின் உதவியில் குற்றம் கண்டுபிடிப்பவர்களைக் குறித்துச் சொன்னது.

*****

157. பழமொழி: நிழல் நல்லதுதான் முசுறு கெட்டது (அல்லது பொல்லாதது).
பொருள்: நிழலில் நிற்பது நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் செவ்வெறும்புகளின் கடிதான் தாங்கமுடியவில்லை.

விளக்கம்: முசுறு என்பது முசிறு என்ற சொல்லின் பேச்சுவழக்கு. முசிறு என்பது சிவப்பு எறும்பு வகைகள். நிழல் தரும் மரங்கள் அவற்றின் இருப்பிடமாவதால் மரநிழலில் ஒதுங்குபர்களைப் பதம் பார்த்துவிடும்!

*****

158. பழமொழி: முடி வைத்த தலைக்குச் சுழிக் குற்றம் பார்க்கிறதா?
பொருள்: தலையில் முடி சூட்டியபின் அந்தத் தலையில் சுழியை ஆராய முடியுமா?

விளக்கம்: ஒருவரைப் பதவியில் அமர்த்திய பிறகு நொந்துகொண்டு பயனில்லை என்ற பொருளில் சொன்னது.

*****

159. பழமொழி: ஒன்று ஒன்றாய் நூறா? ஒருமிக்க நூறா?
பொருள்: நூறு ஒரு ரூபாய்கள் உள்ள கட்டின் மதிப்பு ரூபாய்களை எண்ணித்தான் தெரியுமா அல்லது பார்த்த உடனேயே தெரியுமா?

விளக்கம்: சிறிது சிறிதாக முயற்சி செய்தே ஒரு புகழ் தரும் செயலைச் செய்ய முடியும் என்பது பொருள்.

*****

160. பழமொழி: ஒற்றைக் காலில் நிற்கிறான்.
பொருள்: விடா முயற்சியுடன் ஒரு கடினமான செயலைச் செய்பவன் குறித்துச் சொன்னது.

விளக்கம்: ஒற்றைக் காலில் என்றது அர்ஜுனன் கையால மலை சென்று சிவனைக் குறித்து ஒற்றைக்காலில் பாசுபத அஸ்திரம் வேண்டித் தவம் செய்ததைக் குறிக்கிறது.

*****
 
161. பழமொழி: மேய்த்தால் கழுதை மேய்ப்பேன், இல்லாதேபோனால் பரதேசம் போவேன்.
பொருள்: எனக்கு மற்ற பிராணிகளை மேய்ப்பது சரிப்படாது, எனவே நான் மேய்க்கவேண்டுமென்றால் கழுதைதான் மேய்ப்பேன். அல்லது என்னை விட்டுவிடு, நான் தீர்த்த யாத்திரை போகிறேன்.

விளக்கம்: வேறு நல்ல வேலைகள் காத்திருக்க, நீச, அற்ப விஷயங்களிலேயே குறியாக இருப்பவனைக் குறித்த பழமொழி.

*****

162. பழமொழி: கடையச்சே வராத வெண்ணெய், குடையச்சே வரப்போகிறதோ?
பொருள்: நன்றாகக் கடைந்தபோது திரளாத வெண்ணெய் லேசாகக் கிண்டும்போது வந்துவிடுமோ?

விளக்கம்: கல்யாணத்துக்கு முன்பு அம்மா அப்பாவை நேசிக்காத பிள்ளை, மணமாகிக் குழந்தைகள் பெற்ற பின்பு நேசிப்பது அரிது.

*****

163. பழமொழி: கோல் ஆட, குரங்கு ஆடும்.
பொருள்: எவ்வளவுதான் கற்றிருந்தாலும் ஆடு என்றால் குரங்கு தானே ஆடாது. கோலைக் காட்டி ஆட்டினால்தான் ஆடும்.

விளக்கம்: ஒழுக்கத்தை வாயால் கற்றுக் கொடுத்தால் போதாது; கையிலும் கண்டிப்புக் காட்டவேண்டும்.

*****

164. பழமொழி: தானாகக் கனியாதது, தடிகொண்டு அடித்தால் கனியுமா?
பொருள்: ஒழுக்கம் விழுப்பம் தந்தாலும் அது ஒருவனுக்குத் தானே வரவேண்டும். வாயிலும் கையிலும் கண்டிப்புக் காண்டினால் வராது.

விளக்கம்: முன்னுள்ள பழமொழிக்கு இந்தப் பழமொழியே முரணாகத் தோன்றுகிறதே? ஒருவனுக்கு இயற்கையிலேயே ஒழுங்காக வரவேண்டும் என்ற எண்ணம் இல்லாதபோது அதைக் கண்டிப்பினால் புகுத்துவது இயலாது என்பது கருத்து. இயற்கையில் ஒழுங்கு இருந்தால் கண்டிப்பால் அது சிறக்கும்.

*****

165. பழமொழி: உங்கள் உறவிலே வேகிறதைவிட, ஒருகட்டு விறகிலே வேகிறது மேல்.
பொருள்: சுற்றமும் நட்பும் தாங்கமுடியாத தொல்லைகள் ஆகும்போது பாதிக்கப்பட்டவன் சொன்னது: உங்கள் உறவைவிட மரண்மே மேல்!

விளக்கம்: மிகுந்த உரிமைகள் எடுத்துக்கொண்டு செலவும் துன்பமும் வைக்கும் சுற்றமும் நட்பும் மரணத்தில் உடல் நெருப்பில் வேகுவதைவிடத் தாளமுடியாதது என்பது கருத்து.

*****

166. பழமொழி: ஒரு அடி அடித்தாலும் பட்டுக்கொள்ளலாம், ஒரு சொல் கேட்க முடியாது.
பொருள்: அவர் அடித்தாலும் பரவாயில்லை, ஏசினால் தாங்கமுடியாது.

விளக்கம்: பட்டுக்கொள்ளலாம் என்ற பிரயோகம் இனிமை. அடி வாங்குதல் இன்று வழக்கில் இருந்தாலும், பணிந்து அடி பட்டுக்கொள்ளுதல் என்பதே சரியாகத் தொன்றுகிறது. வாங்குவதைத் திருப்பிக் கொடுக்க முடியுமோ? அல்லது பெற்றுக் கொள்வது அடி என்றால் அது ஒரு யாசகம் ஆகாதோ?

தீயினாற் சுட்டபுண் ஆறும் ஆறாது
நாவினாற் சுட்ட வடு

என்ற குறளினை பழமொழி நினைவூட்டுகிறது.

*****

167. பழமொழி: காலைச் சுற்றின பாம்பு கடிக்காமல் விடாது.
பொருள்: நச்சரிக்கும் ஒருவன் தான் கேட்பதைப் பெறாமல் விடமாட்டான்.

விளக்கம்: விடக்கண்டானிடாம் கொடாக்கண்டனாக இருப்பது கடினம்!

*****

168. பழமொழி: சாகிற வரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.
பொருள்: வைத்தியன் தன் முயற்சியை ஒருவனது மரணம் வரையில் கைவிடமட்டான்; பஞ்சாங்கம் பார்த்துத் திதி சொல்லும் பிராமணனோ ஒருவன் செத்த பின்னரும் விடமாட்டான்!

விளக்கம்: வைத்தியரின் வருமானம் சாவுடன் முடிந்துவிடுகிறது. நீத்தார் கடன் செய்விக்கும் அந்தணனின் வருவாய் ஒவ்வொரு சாவுக்கும் இவன் வாழ்நாள் முழுவதும் வரும் என்பது சுட்டப் படுகிறது.

*****

169. பழமொழி: கொழுக்கட்டை தின்ற நாய்க்குக் குறுணி மோர் குரு தக்ஷணையா?
பொருள்: ஆண்டவனுக்குப் படைப்பதற்காக வைத்திருந்த கொழுக்கட்டையைக் கவ்விச் சென்ற நாய்க்குக் குறுணியில் மோரும் கொடுத்து குரு தட்சிணை செய்வார்களா?

விளக்கம்: குறுணி என்பது எட்டுப்படி கோண்ட பழைய முகத்தல் அளவை. தண்டனைக்குரிய செயல் செய்த ஒருவனைப் பாராட்டுவது தகுமோ என்பது கருத்து.

இதுபோன்று இன்னும் சில:
செருப்பால் அடித்து, பட்டுப் புடவை கொடுத்தாற்போல.
பாப்பாச்சால அடித்து, பருப்பும் சோறும் போட்டதுபோல. (பாப்பாச்சு = பாப்பாச்சி = செருப்பு)
விளக்குமாற்றால் அடித்து, குதிரையோடு தீவட்டியும் கொடுத்தாற்போல.

*****

170. பழமொழி: கை காய்த்தால் கமுகு (பாக்கு) காய்க்கும்.
பொருள்: கைகள் காய்த்துப் போகும்வரை தண்ணீர் விட்டால்தான் பாக்கு மரங்கள் காய்க்கும்.

விளக்கம்: விடா முயற்சி வெற்றி தருவது மட்டுமல்ல, அந்த விடாமுயற்ச்சிக்கு மிகுந்த உடல்வலிமை, மனவலிமை வேண்டும் என்பது கருத்து.

*****
 
171. பழமொழி: இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம்!
பொருள்: இவ்வளவு ஆரவாரமான வழிபாட்டின் பிரசாதம் வெறும் கூழ்தானா?

விளக்கம்: பசியால் வாடிய சிவனடியார் ஒருவர் ஒரு வைஷ்ணவ கிராமத்தின் வழியே சென்றபோது அங்குள்ள பெருமாள் கோவில் வழிபாட்டின் ஆரவாரத்தைக் கண்டு தானும் திருநாமம் இட்டுக்கொன்று சென்றார், பசியைத் தீர்க்க நல்ல உணவு கிடைக்கும் என்று நினைத்து. ஏமாற்றத்தால் அவர் சொன்ன சொல் இந்தப் பழமொழியாகி, இப்போது ஒன்றுமில்லாததற்கெல்லாம் ஆர்ப்பாட்டமாக இருப்பதைக் கேலி செய்யப் பயன்படுகிறது.

*****

172. பழமொழி: ஒருநாள் கூத்துக்கு மீசை சிரைக்கவா?
பொருள்: ஒருநாளைக்கு மட்டும் போடும் பெண் வேஷத்துக்காக நான் என் மீசையை இழக்கவேண்டுமா?

விளக்கம்: பெண் ஆண்வேடம் போட்டால் மீசை வைத்துக்கொள்வது எளிது. ஆனால் ஆண் பெண்வேடம் போட்டால்? மீசை என்பது தமிழ் நாட்டில் ஆண்மையின் அடையாளம். சின்ன லாபத்துக்காக ஒரு அரிய உடைமையை எப்படி இழப்பது என்பது கேள்வி.

*****

173. பழமொழி: கொடுக்கிறது உழக்குப்பால், உதைக்கிறது பல்லுப்போக.
பொருள்: ஒரு உழக்குப் பால் மட்டுமே கொடுக்கும் பசு உதைப்பதென்னவோ பல் உடையும் அளவிற்கு!

விளக்கம்: ஒரு உழக்கு என்பது கால் படி. கொஞ்சமே கூலி கொடுத்து அளவில்லாமல் வேலை வாங்கும் ஒரு கஞ்சத்தனமான யஜமானனக் குறித்து அவன் வேலையாள் சொன்னது.

*****

174. பழமொழி: பட்டும் பாழ், நட்டும் சாவி.
பொருள்: நான் பாடுபட்டதெல்லாம் வீணாயிற்று. நான் நட்ட பயிரும் நெல்மணிகள் திரளாமல் பதராயிற்று.

விளக்கம்: இது ஒரு மிக அழகான பழமொழி. இன்றைய வழக்கில் சொற்களின் வளமான பொருள்களை நாம் இழந்துவிட்டோம். சாவி என்றால் இன்று நமக்குத் திறவுகோல் என்றுதான் தெரியும். நெல்மணிகள் திரண்டு காய்க்காமல் வெறும் வைக்கோலாகவே உள்ல கதிர்களுக்குச் சாவி என்ற பெயர் எத்தனை வளமானது! chaff என்ற ஆங்கிலச் சொல் இதிலிருந்து வந்திருக்கலாம். சாவி என்றால் வண்டியின் அச்சாணி என்று இன்னொரு பொருள் உண்டு.

அதுபோலப் பட்டு, நட்டு என்ற சொற்களைப் பெயர்ச்சொற்களாக இன்று நம் கவிதைகளிலேனும் பயன்படுத்துகிறோமா? பாடுபட்டு, நாற்று நட்டு என்று சொன்னால்தான் நமக்குத் தெரியும். அல்லது பட்டு என்றால் பட்டுத் துணி, நட்டு என்றால் திருகாணி என்றுதான் புரிந்துகொள்வோம். இந்த வினைச் சொற்களைப் பெயர்ச் சொற்களாக நம் உழவர்கள் பயன்படுத்துவதில் எவ்வளவு நயம் பாருங்கள்!

*****

175. பழமொழி: அப்பாசுவாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு, கொட்டுமேளம் கோவிலிலே, வெற்றிலை பாக்கு கடையிலே, சுண்ணாம்பு சூளையிலே.
பொருள்: அப்பாசுவாமியை விட ஒரு கஞ்சனை நீங்கள் பார்த்ததுண்டா?

விளக்கம்: அந்தக் காலத்தில் கல்யாணத்தில் மொய் எழுதும் வழக்கமில்லை போலிருக்கிறது!

*****

176. பழமொழி: இட்டவர்கள், தொட்டவர்கள் கெட்டவர்கள், இப்போது வந்தவர்கள் நல்லவர்கள்.
பொருள்: கொடுத்தவர்கள், உதவியவர்கள் எல்லோரையும் கெட்டவர்கள் என்று ஒதுக்கிவிட்டுப் புதிதாக வேலைக்கு வந்தவர்களை நல்லவர்கள் என்று சொல்லுவது.

விளக்கம்: பழைய வேலையாட்களின் மனக்குறையாக வெளிப்படும் சொற்கள். இடுதல் என்றால் கொடுத்தல். இங்கு வேலை செய்துகொடுப்பது என்று பொருள். தொடுதல் என்றால் தொடங்குதல். இங்கு வேல்களைத் தொடங்கி உதவியவர்கள் என்று பொருள்.

*****

177. பழமொழி: இடித்தவள் புடைத்தவள் இங்கே இருக்க, எட்டிப் பார்த்தவள் கொட்டிக்கொண்டு போனாள்.
பொருள்: நெல்லை இடித்தும் புடைத்தும் அரிசியாக்கிப் பின் சோறாக வடித்துப் போட்டவளாகிய நான் குத்துக்கல்லாக இங்கிருக்க, நான் செய்ததையெல்லாம் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு எல்லாம் கொடுக்கிறான்.

விளக்கம்: ஒரு மாமியாரின் அங்கலாய்ப்பு இது!

*****

178. பழமொழி: ஒரு குருவி இரை எடுக்க, ஒன்பது குருவி வாய் திறக்க.
பொருள்: இரை தேடி வருவது ஒரு தாய்க் குருவிதான். அதற்கு ஒன்பது குஞ்சுகள் வாய் திறக்கின்றன!

விளக்கம்: நிறையக் குழந்தைகள் உள்ள குடும்பத்தின் தந்தை தன் ஊதியத்தால் தனக்கு ஒன்றும் பயனில்லையே என்று நொந்து கூறியது.

*****

179. பழமொழி: கல மாவு இடித்தவள் பாவி, கப்பி இடித்தவள் புண்ணியவதியா?
பொருள்: ஒரு கலம் மாவினை நான் இடித்துச் சலிக்க, அவள் கொஞ்சம் கப்பியை எடுத்து இடித்துவிட்டுப் பேர்வாங்கிக் கொள்கிறாள்.

விளக்கம்: தன் நாத்தனார் குறித்த ஒரு மருமகளின் குறை இது! வீட்டில் கல்யாணம் என்றால் எல்லா வேலைகளையும் செய்வது மருமகளே. ஆனால் மேம்போக்காகத் தளுக்கிவிட்டுத் தன் அம்மாவிடம், அதாவது இவள் மாமியாரிடம் பேர்வாங்கிக் கொள்வதென்னவோ அந்த நாத்திதான்.

*****

180. பழமொழி: உண்பான் தின்பான் பைராகி, குத்துக்கு நிற்பான் வீரமுஷ்டி.
பொருள்: வடநாட்டில் இருந்து வந்த பைராகி சந்நியாசி மேசையில் அமரவைக்கப் பட்டு உணவால் நன்கு உபசரிக்கப் பட்டுத் தின்பான். உணைவைத் தயார்செய்து பரிமாறிய வீரமுஷ்டியாகிய நான் வாங்குவதோ வசவும் உதையும்.

விளக்கம்: பைராகி என்பவன் சிவனை வழிபடும் வடநாட்டுத் துறவி. வீரமுஷ்டி என்பவன் வாள் முதலிய ஆயுதங்கள் தரித்துச் செல்லும் மதவைராக்கியம் மிக்க வீரசைவத் துறவி. ’பைராகி’ என்றதற்கு பதில் ’சிவ பிராமணன்’ என்றும் பழமொழியில் வழக்குள்ளது.

*****
 
181. பழமொழி: உளை (அல்லது சேறு) வழியும், அடை மழையும், பொதி எருதும் தனியுமாய் அலைகிறதுபோல்.
பொருள்: பொதி சுமக்கும் ஓர் எருதுடன் அடை மழையில் கால்கள் இறங்கும் சேறு நிறைந்த சாலையில் செல்வது போன்ற சிரமம் (இதற்குத்தானா)?

விளக்கம்: இந்தப் பழமொழியின் கவிதை தீட்டும் ஓவியம் ஓர் ஆற்புதம்! ஏற்கனவே காலிறங்கும் சேறு நிறைந்த சாலை. மழையோ அடைமழையெனப் பெய்கிறது. இந்த மழையில் அந்தச் சாலை வழியே, தனியே, அதுவும் ஒரு பொதிமாடை இழுத்துக்கொண்டு, இதைவிடச் சிரமம் கிடையாது என்ற அளவுக்கு நடந்து செல்வது போல. எதற்காக இது? இந்தச் சிறு லாபத்திற்காகவா?

*****

182. பழமொழி: எள்ளுதான் எண்ணைக்குக் காய்கிறது. எலிப் புழுக்கை என்னத்துக்கு காய்கிறது?
பொருள்: எண்ணை எடுப்பதற்காக எள்ளை நன்கு வெய்யிலில் காயவைப்பர். எள்ளுபோல உடல்வருத்தி எலிப் புழக்கையும் காய்வது எதற்காக?

விளக்கம்: ஒன்றுக்கும் உதவாதவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்பவர்கள் மத்தியில் உலவுவது எதற்காக? என்பது செய்தி.

*****

183. பழமொழி: ஒண்டிக்காரன் பிழைப்பும் வண்டிக்காரன் பிழைப்பும் ஒன்று.
பொருள்: பிரம்மச்சாரியாகத் தனியாக இருப்பவன் வாழ்க்கை வண்டியோட்டுபவன் ஒருவனது வாழ்க்கை போல.

விளக்கம்: இருவருமே நிலையாக ஒரு இடத்தில் தங்க மாட்டார்கள்.

*****
காரியம் சின்னது, முயற்சி மிகப் பெரியது
ஒரு சின்னக் காரியத்துக்காகப் பெரும் முயற்சி செய்வது பற்றிய பழமொழிகள் (தாமே விளங்குவன):

01. அகாரியத்தில் பகீரதப் பிரயத்தனமா?
02. ஆட்டுக்குட்டிக்கு ஆனையைக் காவு கொடுக்கிறதா?
03. ஆனையை விற்றுப் பூனைக்கு வைத்தியம் பார்க்கிறதா?
04. இரும்புக் கதவை இடித்துத் தவிட்டுக் கொழுக்கட்டை எடுக்கிறதா?
05. ஊர்க்குருவிமேல் ராமபாணம் தொடுக்கறதா?
06. எலிவேட்டைக்குத் தவிலடிப்பா?
07. கீரைத் தண்டு பிடுங்க ஏலேலப் பாட்டா?
08. கோழி அடிக்கிறதுக்குக் குறுந்தடியா?
09. கோழி முடத்துக்குக் கிடா வெட்டிக் காவு கொடுக்கிறதா?
10. சுடு கெண்டைக்கு ஏரியை உடைக்கிறதா?
11. மலையைக் கெல்லி எலியைப் பிடிப்பதா?

*****

சிறிதாக இருப்பனவற்றின் பெரும் பயன்கள்
அற்பமாகத் தோன்றுவதால் அதை அசட்டை பண்ணாதே பற்றிய பழமொழிகள் (தாமே விளங்குவன):

01. அச்சாணி (அல்லது தேராணி/சுள்ளாணி/கடையாணி) இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
02. அருகம் கட்டையும் ஆபத்துக்கு உதவும்.
03. அற்பத் துடைப்பமானாலும் உள்தூசியை அடக்கும்.
04. ஆயிரம் மாகாணி அறுபத்திரண்டரை.
05. ஆனை வேகம் அங்குசத்தினால் அடங்கும்.
06. நீரச் சிந்தினாயோ சீரைச் சிந்தினாயோ?
07. உப்பச் சிந்தினாயோ துப்பைச் சிந்தினாயோ?
08. பல துளி பெரு வெள்ளம்.

சின்னத் தீமைகள் பெரிய நன்மையை அழித்துவிடும்
01. அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும்.
02. ஆயிரம் குணம் ஒரு லோபக் குணத்தால் கெடும்.
03. கலப் பாலுக்குத் துளிப் பிரை.
04. காணி ஆசை, கோடி கேடு.
05. நெருப்பு சிறிது என்றால் முந்தானையில் முடியலாமா?

சின்ன வழிகளால் பெரிய இலக்குகளை அடைய முடியுமா?
01. ஆனை வாலைப் பிடித்துக் கரை ஏறலாம், ஆட்டின் வாலைப் பிடித்துக் கரை ஏறலாமா?
02. கப்பல் ஓட்டிப் பட்ட கடன் நொட்டை நூற்றா விடியும்? [நொட்டை=குறை]
03. குள்ளனைக் கொண்டு கடல் ஆழம் பார்க்கிறான்.
04. சீப்பை ஓளித்துவைத்தால் கல்யாணம் நிற்குமா?
05. நரி வாலைக்கொண்டு கடம் ஆழம் பார்க்கிறதுபோல.
06. நாய் குலைத்து நத்தம் பாழாகுமா? [நத்தம்=கிராமம்]
07. மின்மினிப் பூச்சி வெளிச்சத்துக்கு இருள் போகுமா?

*****
 
மண் குதிர் நம்பி ஆற்றில் இறங்கலாமா?
மரம் சும்மாயிருந்தாலும் காற்று விடுமா?
மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும்..., மண் தோடுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்.
மரம் வைத்தவன் த்ண்ணீர் வார்ப்பான்.
மயிரை கட்டி மலையை இழு. வந்தால் மலை போனால் மயிர்
மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேல் விழும்.
மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும்.
மழை விட்டாலும் தூவானம் விடவில்லை.
மனம் போல வாழ்வு.
மண்னுயிரை தன்னுயிர்போல் நினை.
மாரி யல்லது காரியம் இல்லை.
மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்.
வடக்கே கருத்தால் மழை வரும்.
வளத்த பிள்ளை சோறுபோடாவிடிலும் வைத்த பிள்ளை சோறு போடும்
விளையும் பயிர் முளையிலே தெரியும்.
உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
கடல் திடலாகும், திடல் கடலாகும்.
 
184. பழமொழி: கொட்டிக் கொட்டி அளந்தாலும் குறுணி பதக்கு ஆகாது.
பொருள்: ஒரு சின்ன அளவை ஒரே தடவையில் பெரிய அளவை கொண்ட கொள்கலத்தைப் போல அதிக அளவு அளக்க முடியாது.

விளக்கம்: குறுணி என்பது ஒரு மரக்கால் அளவு. பதக்கு, இரண்டு மரக்கால். ஒரே தடவையில் குறுணி நாழியில் பதக்கு நாழியளவு நெல்லினை அளக்கமுடியுமா? கொட்டிக் கொட்டி அளந்தால் முடியுமே என்று தோன்றலாம். அப்படியானால் பழமொழி தப்பா? குறுணியில் கொட்டிக் கொட்டி பதக்கு அளவு அளக்கும்போது பத்க்கால் கொட்டி அளந்தால் எவ்வளவு அளக்கலாம்? எனவே சிறியோர் என்றும் பெரியோர் ஆகார் என்பது செய்தி.

*****

185. பழமொழி: ஆனையை (அல்லது மலையை) முழுங்கின அம்மையாருக்குப் பூனை சுண்டாங்கி.
பொருள்: ஒரு பெரிய செயலை செய்து காட்டியவருக்கு இந்தச் சிறிய செயல் எம்மாத்திரம்?

விளக்கம்: அம்மை என்றால் தாய், பாட்டி. அம்மையார் என்றால் பாட்டிதான். அதாவது, அனுபவத்தில் பழுத்தவர். சுண்டாங்கி என்றால் கறியோடு சேர்க்க அரைத்த சம்பாரம், இன்றைய வழக்கில் மசாலா. அனுபவத்தில் பழுத்து ஆனையையே விழுங்கிக் காட்டிய அம்மையாருக்கு ஒரு பூனையை விழுங்குவது கறியோடு சேர்த்த மசாலாவை உண்பது போலத்தானே?

*****

186. பழமொழி: உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா?
பொருள்: உள்ளூரில் ஒரு சிறு செயல் செய்யத் தெரியாதவன், முன்பின் தெரியாத ஒரு பெரிய ஊருக்குப் போய் அங்கு ஒரு பெரிய செயலை செய்து காட்டுவானா?

விளக்கம்: உடையார்பாளையம் என்பது வன்னியகுல க்ஷத்திரியர்கள் அரசாண்ட ஒரு சமஸ்தானம். உள்ளூரிலேயே சாதாராண மனிதன் என்று கருதப்படுபவன் எப்படி ஒரு சமஸ்தான மக்கள் முன் ஒரு வீரச்செயலை செய்துகாட்ட முடியும் என்பது செய்தி.
வன்னியர் தளம் Vanniar Thalam: உடையாà®°்பாளையம் சமஸ்தானத்து அரண்மனை.

*****

187. பழமொழி: சோற்றில் கிடக்கிற கல்லை எடுக்கமாட்டாதவன் ஞானத்தை எப்படி அறிவான்?
பொருள்: சோறு உண்ணும்போது அதில் உள்ள சிறு கல்லை எடுத்துவிட்டு உண்ண முனையாதவன் எப்படி ஞானம் என்பது என்னவென்று அறியமுடியும்?

விளக்கம்: சோற்றில் உள்ள சின்னக் கல்லுக்கும் ஞானத்துக்கும் என்ன தொடர்பு? சோற்றில் உள்ள கல் நாம் திரும்பத்திரும்ப சந்திக்கும், தவிர்க்கக்கூடிய ஒரு சின்னத்துன்பம். அதை முழுவதும் நீக்கவேண்டுமானால் அதன் மூலமான அரிசியில் நான்றாகக் கற்கள் பொறுக்கியும் அரிசியை நன்கு களைந்தும் சமைக்கவேண்டும். இதற்குச் சோம்பல்பட்டு கல்லைக்கூட நீக்காமல் சோறை முழுங்கும் ஒருவன் எப்படி சோற்றில் கல்போன்று தினசரி வாழிவில் நாம் வரவழைத்துக்கொள்ளும் சிறு சிறு ஒழுக்கக் கேடுகளின் மூலத்தை அறிந்து களைவதால் ஞானம் என்னவென்று தெரிந்துகொள்ள வழிபிறக்கும் என்பதை உணரமுடியும் என்பது செய்தி.

*****

188. பழமொழி: கழுதைக்குப் பரதேசம் குட்டிச்சுவர்.
பொருள்: ஒரு குட்டிச்சுவரின் பக்கத்தில் நாள் முழுதும் நின்றுகொண்டு பொழுது போக்குவது, கழுதைக்குப் புனித யாத்திரை போவது போல.

விளக்கம்: குறுகிய குறிக்கோள்களில் திருப்தி காண்பவர்களைக் குறித்துச் சொன்னது.

*****

189. பழமொழி: வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா?
பொருள்: மற்ற வரவேண்டிய கடன்களைப் பற்றிக் கவலைப்படாமல் திவாலானவன் ஒருவனிடம் கடன் வசூலிப்பதில் வீரம் காட்டும் ஒரு பற்றாளரைக் குறித்துச் சொன்னது. முதலில் வரவேண்டியதை ஒழுங்காக வசூல் செய்துவிட்டுப் பின் வராத கடன்களைப் பற்றி யோசிக்கவேண்டும் என்பது செய்தி.

விளக்கம்: அது என்ன வலக்காட்டு ராமா? வலம் என்றால் வலிமை, கனம், ஆணை. ராமன் என்பது ஒருவனைக் குறிக்கும் பொதுச்சொல். வலம் காட்டும் ராமன் என்பது வலக்காட்டு ராமனாகி யிருக்கலாம். வேறு விளக்கம் தெரிந்தால் எழுதலாம்.

*****

190. பழமொழி: சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி.
பொருள்: முன்பின் பழக்கம் இல்லாதவர்களைக் கூட்டாக வைத்துக் கொண்டால் காரியத்தையே கெடுத்து விடுவார்கள்.

விளக்கம்: இதுதான் பழமொழியின் பொருள் என்பது எப்படி? ஒரு பொருளை மீண்டும் மீண்டும் பயன்படுத்த அது கெட்டுவிடும் என்பதல்லவோ இதன் நேரடி விளக்கம்? அல்லது அமைதி நிலவியபோது ஒருவன் வலுச்சண்டைக்குப் போய் அமைதியைக் கெடுத்தானாம் என்பது இன்னொரு செய்தியாகக் கொள்ளலாம். பின்னால் உள்ள கதையை நோக்கிட விளங்கும்.

ஆண்டி என்பது ஒரு சிவனடியார் பெயர். அவன் காலையில் எழுந்ததும் சேகண்டியை அடித்துச் சங்கினை ஊதிக்கொண்டு உணவுக்காகப் பிச்சை எடுக்கக் கிளம்புவான். இளைப்பாறக் கோவில் திண்ணை அல்லது மடம். இப்படி ஓர் ஆண்டியை இரண்டு திருடர்கள் ஒருநாள் இரவு கூட்டாகச் சேர்த்துக்கொண்டு ஆடு திருடச் சென்றனர். ஆட்டுக்கிடையில்க் கீதாரிகள் என்றும் கீலாரிகள் என்றும் அழைக்கப்படும் இடையர் தலைவர் இருவர் காவல் காத்துக்கொண்டு குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்தனர். இரண்டு திருடர்களும் ஆளுக்கு ஒரு ஆட்டைத் தூக்கித் தோளில் போட்டார்கள். ஆடுகள் ’மே’ என்று கத்த ஒரு திருடன், ’சங்கைப் பிடிடா ஆண்டி’ என்று சொன்னான். அவன் சொன்ன சங்கு ஆட்டின் கழுத்து. ஆண்டி பழக்க தோஷத்தில் தன் சங்கை எடுத்து ஊத, கீலாரிகள் விழித்துக்கொண்டு திருடர்களைப் பிடித்துவிட, ஆண்டி தப்பித்தான்!

பழமொழியின் பின் ஒரு புராணக் கதையும் இருக்கிறது. ’வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி’ பாற்கடலை தேவாசுரர்கள் கடைந்த கதை. ஆண்டி எனும் பெயர் சிவனையும் குறிக்கும். அவர்தான் பிக்ஷாண்டி ஆயிற்றே? வாசுகி கக்கிய நஞ்சை எடுத்து விழுங்க முற்பட்டுப் பார்வதி சிவனின் சங்கைப் பிடிக்க அவர் தன் கழுத்து ஊதி (வீங்கி) நீலகண்டனாகிச் சும்மா கிடந்த தன் சங்கைக் கெடுத்துக் கொண்டார் என்பது பழமொழியின் இன்னொரு குறிப்பு.

*****

191. பழமொழி: ஆண்டி மகன் ஆண்டியானால், நேரம் அறிந்து சங்கு ஊதுவான்.
பொருள்: தந்தை தொழிலும் பழக்கமும் மகனுக்கு எளிதில் வரும்.

விளக்கம்: ’குலவிச்சை கல்லாமல் பாகம் படும்’ என்ற பழமொழியும் இக்கருத்தில் அமைந்ததாகும்.

*****

192. பழமொழி: கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்.
பொருள்: ஒரு மஹாகவியின் தாக்கம் அவர் வீட்டில் உள்ள பொருட்களிலும் பயிலும் என்பது செய்தி.

விளக்கம்: ’கம்பன் வீட்டு வெள்ளாட்டியும் கவிபாடும்’ என்பது இப்பழமொழியின் இன்னொரு வழக்கு. வெள்ளாட்டி என்பவள் வீட்டு வேலைகள் செய்யும் வேலைக்காரி.

’கட்டுத் தறி’ என்பது என்ன? தறி என்றால் நெசவு என்பதால் கம்பர், வள்ளுவர் போல நெசவுத் தொழில் செய்துவந்த குலத்தைச் சேர்ந்தவரா? கம்பரின் வரலாற்றைப் பற்றி உள்ள கட்டுக் கதைகளில் அவர் நெசவாளர் என்ற செய்தி இல்லை. சிலர் ’கட்டுத் தறி’ என்றால் பசுமாட்டைக் கட்டும் முளைக்கோல் என்று பொருள் கொள்கின்றனர். எனக்கென்னவோ ’கட்டுத் தறி’ என்றதன் சரியான பொருள் ’தறித்துக் கட்டிவைக்கப்பட்ட ஓலைச் சுவடிகள்’ என்றே படுகிறது. புலவர்கள் வீட்டில் பாட்டெழுத நறுக்கிய ஓலைச் சுவடிகள் இருப்பது வழக்கம்தானே? எனவே, கம்பர் பாட்டால் தாக்குண்டு இன்னும் எழுதப் படாமல் காலியாக உள்ள கட்டுத் தறிகளும்கூட கவிபாடும் என்பதே சரியான விளக்கம் என்று தோன்றுகிறது.

*****

193. பழமொழி: சிதம்பரத்தில் பிறந்த பிள்ளைக்குத் திருவெண்பாவைக் கற்றுக்கொடுக்க வேண்டுமா?
பொருள்: மாணிக்கவாசகர் இயற்றிய திருவெண்பா சிதம்பரம் சிவன் கோவில் அம்பலத்திலும் ஊரிலும் எப்போதும் ஒலித்துக்கொண்டு இருக்கும்போது, ’கற்றலிற் கேட்டலே நன்று’ என்பதற்கேற்ப அந்த ஊரில் பிறந்த குழந்தைகூட எளிதில் திருவெண்பாவை எளிதில் கற்றுக்கொள்ளும் என்பது செய்தி.

விளக்கம்: இன்றைய சிதம்பரத்தில் வெண்பாடுவதை விட வன்பாடுவதே அதிகம் என்பதால், இன்று அங்குப் பிறக்கும் குழந்தைகள் கேள்விஞானத்தில் திருவெண்பா கற்றுக்கொள்வது எங்கே?.

*****
 
194. பழமொழி: எங்கே திருடினாலும் கன்னக்கோல் வைக்க ஒரு இடம் வேண்டும்.
பொருள்: திருடனும் தன்வீட்டில் திருடமாட்டான் என்பது மறை பொருள்.

விளக்கம்: கன்னக்கோல் போட்டுச் சுவரில் துளைசெய்து திருடும் திருடன் தன் கன்னக்கோலை வைக்க ஒரு இடம் அவன் வீடு. எப்படிப்பட்ட தீயவரும் போற்றும் பொருள் உண்டு என்பது செய்தி.

*****

195. பழமொழி: வைத்தால் பிள்ளையார், வழித்து எறிந்தால் சாணி.
பொருள்: என்னால் தான் உனக்கு உருவும் பேரும் என்று ஒரு மனிதன் தன்னை அண்டியிருப்பவனை நோக்கிச் சொன்னது.

விளக்கம்: கடவுள் என்பதே மனிதன் தன் மனதில் ஒரு உருவமும் பெயரும் கொடுத்து உருவாக்கியது; அதனால்தான் அந்த உருவைச் சாணிக்குச் சமமாக இந்தப் பழமொழி வைத்துள்ளது; சாணியை வழித்து எறிவதுபோல் மனதில் இருந்து கடவுளின் உருவையும் பெயரையும் மனிதன் வழித்து எறிந்துவிட்டால் அப்புறம் ஏது கடவுள்? என்று நாத்திகர்கள் இந்தப் பழமொழிக்கு விளக்கம் தரலாம்.

கடவுள் எனும் உண்மை ஒன்றே, அதுவே நாம் ஆத்மா என்பதால் என்றேனும் ஒருநாள் சாதகன் சாணியை வழித்து எறிவதுபோல் நாமரூபத்தை உள்ளத்திலிருந்து வழித்து எறிந்துவிட முடிந்தால்தான் பிறவிலா முக்தி கிட்டும் என்பது போல் ஆன்மிக விளக்கமும் தரப்படலாம்.

பழமொழி குறிக்கும் சாணிப் பிள்ளையார் மார்கழி மாதம் பெண்கள் வீட்டு வாசலில் விரிவாகக் கோலமிட்டு அதன் நடுவில் சாணியைப் பிடித்துவைத்து அதற்கு ஒரு பூசணிப் பூவையும் சூட்டும் வழக்கத்தை. ஒவ்வொரு அதிகாலையும் ஒரு புது சாணிப்பிள்ளையாரை வைக்கும்போது பழைய பிள்ளையாரை எறிந்துவிடத்தானே வேண்டும்?

கோவிலில் இருக்கும் பிள்ளையார் உருவம் தவிர நாம் வீட்டில் பூஜையிலும் பண்டிகைக் காலங்களிலும் பயன்படுத்தும் மஞ்சள் பிள்ளையார், களிமண் பிள்ளையார் போன்று பொதுஜன பிள்ளையார் உருவங்கள் நாம் மறுசுழற்சியில் அப்புறப்படுத்தும் மூலப்பொருளை வைத்தே செய்யப்படுவதைப் பழமொழி சுட்டுகிறது எனலாம்.

*****

196. பழமொழி: எடுப்பார் மழுவை, தடுப்பார் புலியை, கொடுப்பார் அருமை.
பொருள்: அருஞ்செயல் ஆற்றுபவர்கள் உண்டு ஆனால் ஈகைக் குணமுடையோரைக் காணுதல் அரிது.

விளக்கம்: மழு என்பது பழுக்கக் காய்ச்சிய இரும்பு. அதையும் கையால் பிடிப்பவர் உண்டு; புலியைத் தடுப்பார் உண்டு, ஆனால் எல்லோருக்கும் செயலில் எளிதாக உள்ள ஈகைக் குணம் மட்டும் காண்பது முன்சொன்ன அருஞ்செயல் ஆற்றுபவர்களை விட அரிதாக உள்ளது என்பது செய்தி.

*****

197. பழமொழி: உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
பொருள்: உனக்கு உதவி செய்தவரை என்றும் மறவாதே.

விளக்கம்: அது யார் உப்பிட்டவர்? உணவில் உப்பு சேர்த்துச் சமைப்பவரா? உப்பிலாப் பண்டம் குப்பையிலே என்பதனால் இவர் முக்கியத்துவம் பெறுகிறாரா? காஞ்சி பரமாசாரியார் அவர்கள் இந்தப் பழமொழிக்கு அருளிய விளக்கம் கீழே.

"உப்புத்தான் கொஞ்சம் ஏற-இறங்க இருந்தாலும் ஒரே கரிப்பு, அல்லது ஒரே சப்பு. ’உவர்ப்பு’ என்கிறதைப் பேச்சில் ’கரிப்பு’ என்றே சொல்லுகிறோம். இலக்கண சுத்தமான வார்த்தையாக ’உவர்ப்பு’க்குக் ’கார்ப்பு’ என்றும் பெயர் இருக்கிறது. அதுதான் பேச்சு வழக்கில் ’கரிப்பு’ ஆகிவிட்டது. ’உப்புக் கரிக்க’ என்கிறோம். அப்படி, உப்புப் போட்ட வியஞ்ஜனங்களில் அது கொஞ்சம் ஏறினாலும் ஒரே கரிப்பு, கொஞ்சம் குறைந்தாலும் ஒரே சப்பு என்று ஆகிவிடுகிறது. உப்பு ஏறிப் போய்விட்டால் ஒன்றும் பண்ணிக்கொள்ள முடியாது. ஆனால், குறைந்தால் மற்ற ருசிகளைத் தருகிற புளி, மிளகாய் முதலானதை இலையில் கலந்துகொள்ள முடியாமலிருக்கிற மாதிரி இங்கே இல்லை. உப்பு ருசி குறைந்தால் மட்டும் அந்த உப்பையே கொஞ்சம் இலையில் சேர்த்துக் கலந்துகொண்டால் போதும். க்ஷணத்திலே அது கரைந்து ஸரிப் பண்ணிவிடும். நாம் ஆஹாரத்தில் ருசித் தப்பு நேர்ந்தால் மூல வஸ்துவை நேராகச் சேர்த்து, உடனே தப்பை ஸரியாகப் பண்ணிக்கொள்வது இது ஒன்றில்தான். ஆனபடியால் அந்த ஒரு குறைபாட்டை, சாப்பிடுபவர் தங்களிடம் சொல்லி, தாங்கள் பல பேருக்குப் பரிமாறிக் கொண்டிருக்கும்போது அவர்களைக் காக்கவைத்து, அல்லது அவர்களுக்காக பிறத்தியாரைக் காக்கவைத்து, அவர்களுக்குப் போடுவதாக இருக்க வேண்டாமென்று நம்முடைய பூர்வகால முப்பாட்டிப் புத்திசாலி க்ருஹலக்ஷ்மிகள் நினைத்திருக்கிறார்கள். அதனால் சாப்பிடுபவரே உப்புப் போதாத குறையை நிவர்த்தி பண்ணிக்கொள்ள வசதியாக இலையில் மற்ற வ்யஞ்ஜனங்கள் பரிமாறுகிறதற்கு முந்தி முதலிலேயே கொஞ்சம் உப்புப்பொடி வைத்துவிடுவார்கள். அதைக் குறிப்பாக மனஸில் கொண்டுதான் நமக்குச் சாப்பாடு போடுகிறவர்களிடம் என்றென்றும் நன்றியுடன் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறபோது ’உப்பிட்டவர உள்ளளவும் நினை’ என்றார்கள்."
ஆதாரம்: ’சொல்லின் செல்வர் ஶ்ரீ காஞ்சி முனிவர்’, ரா.கணபதி, பக்.264-265.

*****
 
Status
Not open for further replies.
Back
Top