• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பராங்குச நாயகி !

சிறந்த நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்தவர் நம்மாழ்வார். அவற்றின் சாரத்தைதான் அவர் தன்னுடைய நூல்களில் தந்தார் என்பார்கள். அவரை ‘வேதம் தமிழ் தந்த மாறன்’ என்று அழைப்பது அதனால்தான். நம்மாழ்வாரின் அந்த நான்கு ஒப்பற்ற நூல்கள்: திருவிருத்தம் (100 பாசுரங்கள்) திருவாசிரியம் (7 பாசுரங்கள்) பெரிய திருவந்தாதி (87 பாசுரங்கள்) திருவாய்மொழி (1102 பாசுரங்கள்) மொத்தம்: 1296 பாசுரங்கள். ‘பரன்’ ஆகிய இறைவனைத் தன்னுடைய அன்பு என்கிற அங்குசத்தால் கட்டியவர் மாறன். ஆகவே, அவரைப் ‘பராங்குசன்’ என்பார்கள். திருமால் மீது அன்புகொண்ட பெண்ணாகத் தன்னை எண்ணிக்கொண்டு பல அருமையான பாடல்களைப் பாடியதால் ‘பராங்குச நாயகி’ என்றும் குறிப்பிடுவார்கள்.

என் திருமகள் சேர் மார்வனே! என்னும் என்னுடை ஆவியே என்னும்,

நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நிலமகள் கேள்வனே! என்னும்,

அன்று உருவேழும் தழுவி நீ கொண்ட ஆய்மகள் அன்பனே! என்னும்,

தென் திருவரங்கம் கோயில் கொண்டானே! தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே!

— திருவாய்மொழி

இது திருவரங்கத்து நம்பெருமாள்மேல், பராங்குச நாயகி பாவத்தில், காதலும், பக்தியும், பேரன்பும் பிரவாகமாகப் பொங்கும்,
நம்மாழ்வார்அருளிய திருப்பாசுரம் .

“கோயில்” என்றாலே அரங்க அண்ணல் அரவணையில் பள்ளி கொண்டிருக்கும் திருவரங்கத்தையே குறிக்கும். அத்திருத்தலமே முதல் திவ்விய தேசமாகக் கொண்டாடப்படுகிறதும் கூட. அதனால் தான் என்னவோ, பன்னிரு ஆழ்வார்கள் அரங்கன் மேல் பாடிய பாசுரங்கள் அனைத்தும், அத்தனை அழகு தமிழில், தேனில் ஊறிய பலாச்சுளைக்கு நிகராக இனிக்கும்.

ஒரு தாய் அல்லது தோழி அரங்கன் மேல் பித்தாக இருக்கும் பெண்ணைப் பற்றிப் பேசுவதாக இப்பாசுரம் அமைந்துள்ளது. அதாவது ஆழ்வார் பராங்குச நாயகி என்ற பெண்ணின் நிலையிலிருந்து இதை அருளியிருக்கிறார். ஒரு பெண்ணுக்குத் தானே இன்னொரு பெண்ணின் துன்பம் இயல்பாகப் புரியும்!

இப்பாசுரத்தின் பல செய்திகளையும் சுவைகளையும் உள் வாங்கி அனுபவிக்க வேண்டும். முதல் வரியிலேயே ஆழ்வார், “இலக்குமியான ஸ்ரீதேவியை வலமார்பில் தரித்தவனான நீயே எனது உயிர்” என்கிறார். அதாவது, ”பரமாத்வான நீ, ஸ்ரீமன் நாராயணனாக, தம்பதி சமேதராக, என்னைஅருள் பாலிக்க வேணும்” என்பதாகக் கொள்ளலாம். இன்னொன்று, திருமகளை முன்னிறுத்தி, திருவடி நிழல் பற்றலுக்கான (பரமபதம்) பிராட்டியின் பரிந்துரையை (வைணவத்தில் இதை புருஷகாரம் என்பர்) ஆழ்வார் உறுதி செய்கிறார் எனலாம்.

பரமனின் மற்றொரு துணைவியான பூமகள் கோபித்துக் கொள்வாளோ என்று அடுத்த வரியில், (பூதேவியை மீட்ட) வராக அவதாரத்தை நினைவு கூர்ந்து, அப்பரந்தாமனை ”நிலமகளின் மணாளனே” என்று புகழ்கிறார்! மூன்றாவது வரியில், ஸ்ரீகிருஷ்ணஅவதார நிகழ்வு வருகிறது. அதிலும், பெண்ணையே முன்னிறுத்துகிறார், பராங்குச ஆழ்வார்.

”ஏழு பெருங்காளைகளைத் தழுவி அடக்கி நப்பின்னையின் கரம் பற்றிய கண்ணபிரானே” என்று உருகுகிறார்! அந்த மாய்மாலன் எருதுகளை அணைத்து (போட்டியின் வென்று) அதனால் நப்பின்னையை அணைக்கும் உரிமை பெற்றான். இந்த நப்பின்னை தான் பரமபத நாயகனின் மூன்றாவது துணைவியான நீளாதேவி. இவள் நீருக்கு ஆதாரமானவள் என்பதால், பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள நாராயணனே இவள் மடியில் தலை வைத்து சயனித்திருப்பதாகச் சொல்வது ஐதீகம்!

###கிருஷ்ண அவதாரத்தில் மட்டுமே, திருமாலின் மூன்று தேவிகளுமே (ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி) இந்த மண்ணுலகில் அவதரித்து எம்பெருமானை மணந்து கொண்டனர். இதுவே கிருஷ்ணாவதாரத்தின் பெருமையும் கூட! சூடிக்கொடுத்த சுடர்கொடியான ஆண்டாள் நாச்சியாரும், திருப்பாவையின் (இராமானுசருக்கு மிகவும் உகந்த) “உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்” என்ற 18 வது பாசுரத்தில் நப்பின்னையை மிகவும் போற்றியிருப்பார்.

“நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்! கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்” என்பதோடு, “பந்தார்விரலி”, “செந்தாமாரைக் கையால்” என்றும் புகழ்ச்சி உண்டு

19வது திருப்பாவைப் பாசுரத்தில் “கொத்தலர் பூங்குழல் நப்பின்னை, மைத்தடங்கண்ணினாய்” என்று புகழ்ச்சி. கண்ணனுக்கு மிகவும் ப்ரியமானவள் நப்பின்னை!###

ஆக, நம்மாழ்வார் ஒரே பாசுரத்தில் பரமனின் 3 தேவிகளையும் ஒருசேரப் புகழ்ந்திருப்பது அவரது நைச்சியத்தை (சாமர்த்தியம்) காட்டுகிறது.

என் திருமகள் சேர் மார்வனே! என்னும்— திருமகளை வலமார்பில் தரித்த மாதவனே என்றும்

என்னுடை ஆவியே என்னும் - என் உயிரே என்றும்

நின் திரு எயிற்றால் இடந்து - (பன்றி வடிவெடுத்து) உனது நீண்ட கோரைப்பல் கொண்டு (நீர்ப்பரப்பை) பிளந்து

நீ கொண்ட நிலமகள் கேள்வனே! என்னும் - நீ மீட்டுக் காத்த பூதேவியின் மணாளனே என்றும்

அன்று உருவேழும் தழுவி நீ கொண்ட - (கிருஷ்ண அவதாரத்தில்) வலிமையான ஏழு எருதுகளை அடக்கியதால் நீ மணம் கொண்ட

ஆய்மகள் அன்பனே! என்னும் -நப்பின்னையின் அன்புக்குரியவனே என்றும் (பலவாறாகப் புலம்புகிறாள்)

தென் திருவரங்கம் கோயில் கொண்டானே! - தெற்கிலுள்ள திருவரங்கத்தில் பள்ளி கொண்ட நாயகனே!

தெளிகிலேன் முடிவு - என்ன நேரும் என்றே எனக்குப் புரியவில்லை

இவள் தனக்கே! - இப்பேதைப் பெண்ணுக்கு!

சரணம் சரணம் ஸ்ரீரங்கா !
திருவடி சரணம் ஸ்ரீரங்கா !
 

Latest ads

Back
Top