• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பங்குனி உத்திரம் சேர்த்தி சேவை

பங்குனி உத்திரம் சேர்த்தி சேவை.....!!!
(21.03.2019)

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருத்தலம் வைணவ 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது. இந்தக் கோயிலில் ஆண்டு முழுவதும் ஏதாவது ஒரு வைபவம் நடந்துக் கொண்டேயிருக்கும். ஸ்ரீரங்கத்தில் சேர்த்தி வைபவம் நடைபெறுவது குறித்து ஒரு வரலாறு உண்டு.

இவ்வாலயத்தில் பங்குனி மாதம் நடைபெறும் ஆதி பிரம்மோற்சவம் விபீஷணனால் தொடங்கப்பட்டது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. இதன் ஆறாம் நாள் உற்சவத்தின்போது உறையூரில் அருள்பாலிக்கும் சோழகுல வல்லியான கமலவல்லி நாச்சியார் சந்நிதிக்கு செல்கிறார் நம்பெருமாள். அப்போது புத்தாடை, சந்தனம், திலகம், மாலை அணிந்து புதுமாப்பிள்ளை போல் காட்சி கொடுப்பார். பின்னர் தான் அணிந்த மலர் மாலையை கமலவல்லி நாச்சியாருக்கு அணிவித்து, நாச்சியாரின் மாலையை தான் வாங்கி அணிந்துக் கொள்வார். பின்னர் இருவரும் திருமணக்கோலத்தில் சேவை சாதிப்பார்கள். ஸ்ரீரங்கநாதரான அழகிய மணவாளன், ஒரு பங்குனி மாதத்தில் உறையூர் அருகே வேட்டையாடச் சென்றார். அப்போது அவர் கமலவல்லியைச் சந்தித்தார். ஸ்ரீகமலவல்லியே சோழ மன்னனின் மகளாகப் பிறந்திருந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினர். அண்ணலின் மார்பில் இருக்கும் மஹாலெட்சுமியின் அனுமதியின் பெயரில் தான் உறையூர் நாயகியை மணக்கிறார். புதுமாப்பிள்ளை ஆகிறார்! புது மோதிரம் பளபளக்க காவிரி வழியே ஊர் திரும்பும்போது பழைய மோதிரத்தை ஆற்றில் தொலைத்துவிடுகிறார்.

ஆஹா நம் வீட்டுக்குப் போனால் அரங்கநாயகி எங்கே நான் அணிவித்த மோதிரம், புது மோதிரம் வந்த ஜோரில் பழையதை வீசி எறிந்துவிட்டீர்களா? எனக்கேட்பாளே என்ன செய்வது என தவிக்கிறார் காவிரிக்குப்போய் (அப்போது நீர் நிறைய இருந்திருக்கும்) பல்லக்கில் வரும் அரங்கன், அன்பர்களை எல்லாரையும் மோதிரத்தைத் தேடச் சொல்கிறான்; தானும் தேடுகிறான்.

ஒன்றும் கிடைக்கவில்லை!. இந்தக்காட்சிகள் இன்று அம்மா மண்டபம் காவிரியில் காணக்கிடைக்கும். சல்லடை போட்டு நிஜமாவே சலிப்பார்கள் நீரை இப்போது மணலை சலிக்கிறார்கள்.

தப்பு பண்ணிய கணவர்கள் சகஜமாக செய்யும் அசட்டு வழியை மேற்கொள்ள விழைகிறான். ஆகவே ஓசைப்படாமல் (வழக்கமாய் அரங்கன் வருகிறான் என்றால் வாத்திய இசை ஒலிக்கும்) பல்லக்கில் இருந்தபடியே தாயார் சந்நிதி வாசலுக்கு வருகிறார். அன்னைக்கா தெரியாமல்போகும் அரங்கனின் தந்திரம்? டமால் என வாசற்கதவை சாத்திவிடுகிறாள்.

ரங்கநாயகி தாயாரை சமாதானப்படுத்த ஏதாவது சொல்லிச் சமாளிக்கலாம் என்று எண்ணிய ஸ்ரீரங்கநாதர், காவேரி ஆற்றைக் கடக்கும்போது, நீ அணிவித்த மோதிரம் தவறி விழுந்து விட்டது. அதைத் தேடிக் கண்டெடுக்க காலத்தாமதம் ஆகிவிட்டது எனக் கூறினார். எனினும் தாயாருக்கு கோபம் தணியவில்லை.

சண்டை துவங்குகிறது! ப்ரணய கலகம் என்று பெயர். தாயார் சார்பாக சில ஊழியர்கள். தலத்தார் என்று பெயர். பெருமாள் சார்பாக சில ஊழியர்கள். தொண்டுக் குலத்தார் என்று பெயர்.தலத்தார் எல்லாம் பெருமாளைத் தடுக்க, குலத்தார் எல்லாரும் தாயாரிடம் கெஞ்சுகிறார்கள். ஒரு கட்டத்தில், பெருமாள் சலித்துப் போய், பின் வாங்குவது போல தளர்ந்து பின்னோக்கி நடக்கிறார்.

சரி, பெருமாள் கிளம்பி விட்டார் என்று நினைத்து, லேசாகக் கதவைத் திறந்து எட்டிப் பார்க்கிறாள் தாயார். உடனே பெருமாள் பின் வைத்த காலை, முன் வைத்து ஒடி வருகிறார்...படார்....உடனே கதவு மீண்டும் மூடிக் கொள்கிறது....இப்படியே மூன்று முறை! ஒரே கலாட்டா தான் !

வடக்குச்சித்திரைவீதி மக்கள் எல்லாரும் வெண்ணை பூக்களை பல்லக்கின் மீது வீசி எறியும் போது கைதட்டுவார்கள். தெற்குசித்திரைவீதி மக்கள் பெரும்பாலும் அரங்கன். கடைசியில் மட்டையடி நடக்கும்!

மிகவும் மெல்லிய வாழை மட்டை...அதை வைத்து ஒரு சாத்து! மட்டையடி உற்சவம் என்பது இதுதான். பல்லக்கின்மீது வாழைமட்டைகள் தொடர்ந்து வீசப்படும். இந்த உற்சவத்தை மட்டையடி உற்சவம் என்றும் சொல்வார்கள். இந்த ஊடலை அறிந்த நம்வாழ்வார்,அவர்களை சமாதானப்படுத்த முயன்றார். பின்னர் ரங்கநாதர் உண்மையை ஒப்புக் கொண்டதால், நம்மாழ்வார் சொற்படி ரங்கநாயகி நாச்சியார், பெருமாளை ஏற்றுக் கொண்டார். இதையொட்டி கொண்டாடப்படும் வைபவத்தை சேர்த்தி என்று போற்றுவர்.

ஆதி பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாளான பங்குனி உத்திரத்தன்று நம்பெருமாள் சித்திரை மாதம் உத்திர வீதிகளில் வலம் வந்து தாயார் சந்நியில் எழுந்தருள்வார். அப்போதுதான் மேற்கண்ட சேர்த்தி வைபவம் பங்குனி உத்திர மண்டபத்தில் நடைபெறும். பிறகு திருமஞ்சனம் முடிந்த பிறகு பெருமாளும் தாயாரும் தம்பதி சமேதராக சேவை சாதிப்பார்கள்.

ஜாதகத்தில் எந்தவிதத்தில் இருதார தோஷம் பெற்றிருந்தாலும் அவர்கள் இந்த சேர்த்தி சேவையில் ஸ்ரீரங்க நாயகி ஸமேத ரங்கநாதரை தரிசித்தால் தோஷம் நிவர்த்தியாகும்.
இருதார யோகம் பெற்றவர்கள் மட்டுமின்றி எந்தவிதத்தில் களத்திர தோஷம் பெற்று திருமணம் அமையாமல் தவிப்பவர்களும் இந்த சுக்கிர ஸ்தலமான ஸ்ரீரங்கத்தில் இன்று சேர்த்தி சேவை தரிசித்தால் களத்திர தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஸர்வ நிச்சயம்.
திருமணம் ஆகாதவர்கள் மட்டுமின்றி திருமணம் ஆனவர்களும் களத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டு கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து நிற்பவர்கள், பிரிய நினைப்பவர்கள் அனைவரும் இந்த சேர்த்தி சேவையை தரிசித்தால் களத்திரதோஷம் நீங்கி மகிழ்சியான வாழ்வு அமையும் என்பது உறுதி.
 

Latest ads

Back
Top