• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

நாகதோஷம் நீக்கும் நாக சதுர்த்தி - வழிபடும் முறைகள், பலன்கள்!

நாகங்களை நாம் தெய்வாம்சம் பொருந்திய உயிர்களாகக் கருதி வழிபடுகிறோம்.

நாக வழிபாடு என்பது வேத காலத்திலிருந்தே இருந்துவரும் முக்கியமான வழிபாடு. நாகத்தை வழிபடுவதற்கு உகந்த நாள் நாக சதுர்த்தி’. நாகத்தை வழிபட்டு நாக தோஷத்திலிருந்து நிவர்த்தி பெறுவதற்கு உகந்த தினம் (18.11.2020) நாக சதுர்த்தி தினமாகும். சதுர்த்தியன்று விரதம் இருந்து, துள்ளுமாவு படைத்து வேண்டிக்கொண்டால் தோஷங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் நடக்கும் என்பது ஐதீகம். கருட பஞ்சமிக்கு முன்பு அமையும் சதுர்த்தி திதி நாளே ‘நாக சதுர்த்தி’ தினமாகும். பொதுவாக, ஆடி மாதம் சதுர்த்தி தினத்தில் தொடங்கும் நாக சதுர்த்தி விரத வழிபாடு அடுத்த வருட ஆனி மாத சதுர்த்தியோடு முடிவடையும். இடைப்பட்ட மாதங்களில் வரும் ஒவ்வொரு சதுர்த்தி தினமும் நாக சதுர்த்தி தினமாகும். அவற்றில் முக்கியமானது சஷ்டி விரதத்தோடு அனுஷ்டிக்கப்படும் ஐப்பசி மாத நாக சதுர்த்தி. இது பற்றி பல்வேறு புராணக் கதைகள் கூறப்படுகின்றன. காஸ்யபருக்கும் கத்ரு என்பவளுக்கும் நாகங்கள் பிறந்தன. அவை வளர்ந்த பிறகு தாய் சொல்லைக் கேட்காமல் தன் போக்கில் நடக்கத் தொடங்கின. அதனால், கோபம் கோண்ட தாயார் கத்ரு, `தாய் சொல்லைக் கேட்காததால் தீயில் விழுந்து இறப்பீர்களாக” என்று சாபம் கொடுத்துவிடுவாள்.

ஜனமேஜயன் மூலம் அந்தச் சாபம் பிற்காலத்தில் நிறைவேறும்.

நாகங்களின் தலைவனாக விளங்கிய ‘தட்சகன்’ எனும் கொடிய நாகம் தீண்டி பரீட்சித் எனும் அரசன் இறந்துவிடுவான்.

தந்தையை இழந்து வாடிய பரீட்சித்தின் மகன் ஜனமேஜயன் தந்தையின் இறப்புக்குக் காரணமாக விளங்கிய பாம்பு இனத்தையே அழிக்க வேண்டும் என்று உறுதி கொண்டு ’சர்ப்பயக்ஞம்’ எனும் வேள்வி செய்வான்.

அந்த வேள்வியில் பாம்புகள் அனைத்தும் ஒவ்வொன்றாக விழுந்து இறக்கும். பாம்புகள் அனைத்தும் அழிவதைக் கண்ட அஸ்தீகர் எனும் முனிவர் ஜனமேஜயனது வேள்வியைத் தடுத்து நிறுத்தி நாகர்களுக்குச் சாப விமோசனம் அளித்து, பாம்பினத்தைக் காப்பார்.

ஆஸ்திக முனிவர் நாகங்களுக்குச் சாப விமோசனம் அளித்ததும் இந்த ‘நாக சதுர்த்தி’ தினத்தில்தான்.

இந்த நாளில் அஷ்ட நாகங்கள் என்று அழைக்கப்படும் வாசுகி, ரட்சகன், காளிங்கன், மணிபத்ரன், ஜராவதன், திருதராஷ்டிரன், கார்கோடகன், தனஞ்சயன் ஆகிய நாகங்களை வணங்க வேண்டும்.

பகவான் அனந்தன் என்னும் நாக வடிவில் உலகத்தைக் காத்துக்கொண்டிருக்கிறார் என்று நம்பப்படுகிறது. அனந்தனுக்குத் துணையாக பாதாள லோகத்தில் தட்சகன், வாசுகி, கார்க்கோடகன் முதலான நாகங்களும் வசிக்கின்றன. அவர்களை வணங்கும் விதத்தில் பாம்புப் புற்றில் துள்ளு மாவு படைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.

இந்தச் சதுர்த்தி விரதத்தைப் பற்றியும், விரதம் மேற்கொண்டால் ஏற்படும் நன்மைகளைப் பற்றியும் விளக்குகிறார் சங்கரன்கோவில் சிவாசார்யர் சிவராஜபட்டர்.

பித்ருதோஷம் இருப்பவர்களுக்குக்கூடப் பரிகாரம் செய்து சரிசெய்துவிட முடியும்.

ஆனால், நாக தோஷம் இருப்பவர்களுக்குப் பரிகாரமே கிடையாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதிலும், ஜாதக ரீதியாக இருக்கும் தோஷத்தை விடவும் நாகத்தைத் தாக்குவதன் மூலம் ஏற்படும் தோஷம் அபாயகரமானது.

ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும் நாகம் தொடர்ந்து வரும் என்று கூறுவார்கள்.

இப்படிப்பட்ட தோஷத்திலிருந்து விடுபடுவதற்கு உகந்த வழிபாடு நாக சதுர்த்தி பூஜை மற்றும் விரதம்.

பொதுவாக ராகு, கேது தோஷம் யாருக்கெல்லாம் இருக்கிறதோ, அவர்களின் பார்வையில் அடிக்கடி நாகம் தென்படும்.

நாகதோஷம் இருப்பவர்களுக்கு இந்த நாள் தினம் மிகவும் முக்கியமானது. நாக சதுர்த்தியின்போது நாகத்தைப் பிரதிஷ்டை செய்து புற்றில் மஞ்சள் பொடி வைத்து நாகத்தை வழிபட்டால் தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

நாக தோஷம் இருப்பவர்களுக்குத் தொடர்ந்து திருமணத் தடை ஏற்பட்டுக் கொண்டிருக்கும்.

கணவன் - மனைவி பிரிந்து வாழ்வார்கள், குழந்தை பாக்கியம் இருக்காது. இந்தத் தோஷத்திலிருந்து விடுபடுவதற்கு நாகத்தைப் பிரதிஷ்டை செய்து நாகருக்கு உண்டான வழிபாட்டினை மேற்கொண்டாலே கை மேல் பலன் கிடைக்கும்.

அனைத்துத் தடைகளும் விலகி உடனே திருமணம் நடைபெறும்.

பொதுவாக ஆடி மாதம் சதுர்த்தி தொடங்கி ஆனி மாதம் சதுர்த்தி வரை இடைப்பட்ட அனைத்து சதுர்த்திகளுமே நாகசதுர்த்திதான்.

ஆடி மாதம் தொடங்கும் இந்த சதுர்த்தி ஆனி மாதத்தில் வளர்பிறையில் வரும் நாக சதுர்த்தியோடு பூர்த்தியாகும்.

அதில் முக்கியமானது ஐப்பசி மாதம் சஷ்டி விரதத்தோடு கடைப்பிடிக்கப்படும் நாக சதுர்த்தி.

இந்த நாளில் எங்கெல்லாம் சர்ப்ப தோஷ நிவர்த்தி தலங்கள் இருக்கிறதோ, அங்கெல்லாம் நாகத்துக்கு விரதமிருந்து, பூஜை செய்து வழிபடலாம்.

திருநாகேஸ்வரம், சங்கரன்கோவில் உள்ளிட்ட சர்ப்ப தோஷ நிவர்த்தி தலங்களுக்குச் சென்று நாகத்தை வழிபட வேண்டும்.

தலங்களுக்குச் சென்று நாகத்தை வழிபடுவதோடு மட்டுமல்லாமல் அம்பாளையும், சிவனையும் வணங்கினால் ராகு - கேது, சர்ப்ப தோஷங்கள் என்று அனைத்து விதமான தோஷங்களும் விலகி திருமணம் கைகூடும்.

பிரிந்திருக்கும் கணவன் மனைவி ஒன்று சேருவார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். நாக தோஷமிருப்பவர்கள் ஜாதகத்தைக் கணித்து நாகரத்தினத்தை அணிந்துகொண்டாலும் நல்லது நடக்கும்.”

நாகராஜா காயத்ரி

நாக சதுர்த்தி தினமான இன்று 18.11.2020 நாகர்களின் புராணத்தை படித்து நாகராஜா காயத்ரி மந்திரம் கூறி வழிபட தோஷங்கள் நீங்கும்.

ஓம் சர்பராஜாய வித்மஹே நாகராஜாய தீமஹி தன்னோ னந்தஹ் ப்ரசோதயாத்

என கூறி நாகர்களை வணங்க வேண்டும். சர்பங்களுக்கெல்லாம் தலைவனான நாக ராஜனே உங்களை வணங்குகிறேன். நித்தமும் உங்களை நினைக்கும் இந்த அடியேனுக்கு ஆசி வழங்கி அருள்புரிய வேண்டுகிறேன். என்று வேண்டிக்கொண்டால் ராகு தோஷமும் நாக தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகளும் நீங்கும்.
 

Latest ads

Back
Top