• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

நவநீத க்ருஷ்ணன்

‘நவநீதம்’ என்றால் புதுசாக எடுத்தது என்று அர்த்தம். ‘நவ’-புதுசாக; ‘நீதம்’- எடுக்கப்பட்டது. புத்தம் புதுசாகக் கார்த்தால வேளையில் பசும் பாலில் உறை குத்தி ஸாயங்காலமே அந்தத் தயிரைச் சிலுப்பி எடுக்கிற வெண்ணெய்தான் நவநீதம். முதல் நாள் ராத்ரி உறைகுத்தி மறுநாள் வெண்ணெய் எடுக்கிறது ‘பழம் பற்று’ என்கிற மாதிரிதான். ரா வேளையில் ஸூர்யனுடைய பரிசுத்தி செய்கிற வெளிச்சம் இல்லாததாலேயே ராத் தங்கின பண்டம் அவ்வளவு ச்லாக்யமில்லை என்பது.

நாமெல்லாம் பசுக்கள். நம் மனஸு வெள்ளை வெளேரென்று பாலாக இருக்கணும். அப்போதுதான் கன்னங்கரேலென்று இருக்கிறதால் கிருஷ்ணன் என்றே பேர் வைத்துக்கொண்டவன் நம்மிடம் வருவான். அது வெறுப்பைத் தருகிற கறுப்பு அல்ல; மோஹத்தை உண்டாக்குகிற மேகத்தின் கறுப்பு. கனச்யாம், கனச்யாம் என்கிற போது ‘கன’ என்றால் ‘மேகம்’ என்றே அர்த்தம். ‘கார்வண்ணன்’ என்று சொல்வார்கள். மேகம் எத்தனைக்கெத்தனை கறுப்போ அத்தனைக்கத்தனை அதிக ஜலத்தைக் கொட்டும். அந்த ஜலம் கறுப்பாகவா இருக்கிறது? இப்படிப் பரம ப்ரேம தாரையைப் பிரவாஹமாகக் கொட்டுகிறவனே கிருஷ்ணன். அடர்ந்த மேகத்திலிருந்தே மஹா ஜ்யோதிஸ்ஸான மின்னல்கள் தோன்றுகிற மாதிரி, ஞானப் பிரகாசம் பளிச்சுப் பளிச்சென்று வெட்ட கீதாசாரியனாக இருக்கிறான் அந்தக் கொண்டல் வண்ணன். இப்படியே அவன் வெளியிலே கபடும் சூதும் மாயமுமாகத் தெரிந்தாலும் நாம் மனஸைப் பால் வெளுப்பாக்கிக் கொண்டால் பரம சுத்தமான ப்ரேமையோடு நம்மைப் பாலிக்க, கோபாலனாக வருவான்.

அப்படியே அந்தப் பாலை எடுத்துக் குடிப்பதில்லை அவன். அது தயிராகி அதிலிருந்து புத்தம் புது வெண்ணெய் எடுத்தாகணும். அந்த நவநீதத்தை உண்ணத்தான் வருவான்; அதுவும் திருட்டுத்தனமாக!

பக்தி தாபத்திலே வெள்ளை மனஸைக் காய்ச்சினால் அது பொங்கும். அப்புறம் இந்த உணர்ச்சி வேகம் அடங்க அதைக் கொஞ்சம் ஆற்றி சாந்தத்தை உறை குத்தணும். பால் ஓடுகிறதுபோல, ஆடுகிறதுபோலத் தயிர் ஓடுவதில்லை, ஆடுவதில்லை. அப்படியே கெட்டியாக, சாந்தமாக இருந்து விடுகிறது. அவனுக்கு சாந்தமும் வேணும்; லீலையின் சலனமும் வேண்டும். அப்போதுதான் முடிவிலே சாந்தத்திலேயே எல்லா சலனமும் அடங்கியிருப்பதும், அத்தனை சலனத்துக்கும் அடிப்படையாக சாந்தமே இருந்து கொண்டிருப்பதும் தெரியும். உபநிஷத்தே “ச்யாமாத் சபளம் சபளாத் ச்யாமம்” என்று இரண்டையும் சேர்த்துச் சொல்கிறது*1.

அதனால் ஓடாமல் ஆடாமல் சாந்தமாக இருக்கிற தயிரைப் போட்டுக் கடை கடை என்று கடைய வேண்டியிருக்கிறது. ஹ்ருதயப் பானைக்குள் இருக்கிற தயிரில் ஸத்யத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை (இதை ஞான விசாரம், ஆத்ம விசாரம் என்பார்கள்) மத்தாகப் போட்டு, ஒருமுக சிந்தனை என்ற கயிற்றால் கடைந்தால் பூர்ணத்வம் என்ற வெண்ணெய் வரும். அதைத் துளிக்கூடப் பழசாகவிடாமல், அது நவநீதமாக இருக்கிறபோதே வந்து எடுத்துக்கொண்டு விடுவான். பூர்ணத்வம் இந்த நம்முடைய சரீரப் பானைக்குள் எப்படி இருக்க முடியும்? அதனால் பூர்ணனான அவனிடமே போய்விடும். தனியாக நாம் என்று இல்லாமல் அவனுக்குள் அவனாகவே போய்விடுவோம் என்று அர்த்தம்.
 

Latest ads

Back
Top