தமிழர்களின் தழை உடை-2

Status
Not open for further replies.
தமிழர்களின் தழை உடை-2

bhumika-silk-saree.jpg

Wearing saris: two different styles


( Please read part 1 -first to maintain continuity: London swami )

திருமண காலத்தில் தமிழர்கள் முகத்தை மறைக்கும் ஆடைகளை அணிந்தனர் போலும். அகநானூறு 136ம் பாடலில் விற்றூற்று முதெயினனார் இப்படிக் கூறுகிறார்:
“ கற்பினை உடைய என் உயிர்க்கு உடம்பாக அடுத்தவள் கசங்காத புதிய ஆடையால் உடல் முழுதும் போர்த்தியதால் வேர்வை வந்தது. காற்று வரவேண்டும் என்ற சாக்கில் அவள் முகத்தைப் பார்க்க ஆசை கொண்டு ஆடையைப் பற்றி இழுத்தவுடன் உறையினின்று உருவிய வாளைப் போல அவளது வடிவம் ஆடையினின்று விலகி நின்றது”---இந்த வருணனை முகத்தை மூடும் அளவுக்கு ஆடை (saris?) அணிந்ததைக் காட்டுகிறது.

ஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழியில் கூரைப் புடவை கட்டியது பற்றிப் பாடுகிறார். இப்பொதும் பிராமணப் பெண்கள் தாலி கட்டும் நேரத்தில், சிவப்பு நிறத்தில் உள்ள கூரைப் புடவையை அணிந்தே திருமண மேடைக்கு வருவர். இது போன்ற சிவப்பு நிறப் புடவைகள் மதுரையில் விற்கப்பட்டதாகவும் மாங்குடி மருதனார் கூறுவார்:

“ வெயிற் கதிர் மழுங்கிய படர் கூர் ஞாயிற்றுச்
செக்கரன்ன சிவந்து நுணங் குருவிற்
கண்பொரு புகூஉ மொண்பூங் கலிங்கம்” (மதுரை. 432-3)

மருதம்,முல்லை, குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த பெண்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நடத்தினர் போலும். அவர்கள் மேலாடை அணியவில்லை என்றே தோன்றுகிறது. அது போன்ற இடத்தில்தான் தழை உடைகளை அணிந்திருக்க வேண்டும். மார்பை மாலைகளாலும் சந்தனம் பூசியும் அலங்கரித்துக் கொண்டனர்.

பெண்களின் உள்ளாடை—தமிழனின் கண்டுபிடிப்பு?

1997ம் ஆண்டில் லண்டனில் இருந்து வந்த மேகம் பத்திரிகையில் எழுதிய தொடர் கட்டுரைகளில் ஒன்று ‘பிரா’வைக் கண்டுபிடித்தவன் தமிழன்’ என்று எழுதினேன். பெண்கள் அணியும் இந்த பிரா=brazziere (மார்பகக் கச்சை) மேலை நாடுகளில் பெரிய தொழிலாக வளர்ந்துவிட்டது.

பல நாட்டுப் பெண்களின் பழங்கால ஓவியங்களையும் சிற்பங்களையும் பார்த்தவர்களுக்கு ஒன்று நன்றாகப் புரியும். மார்பக கச்சை அணிந்ததைக் காண முடியாது. ஆனால் எல்லா உலகத் தமிழ் மாநாட்டு மலர்களிலும், வாரப் பத்திரிக்கைகளில் வெளியாகும் வரலாற்றுப் புதினங்களிலும் தமிழ்ப் பெண்களை எப்படி வரைந்திருக்கிறார்கள் என்று பார்த்தால் நான் சொல்லுவது நன்றாக விளங்கும். இது ஒரு மரபைக் கடைப் பிடித்து வரைந்த ஓவியங்களாகும். இப்போது நக்கீரர் கூறிய “உண்பது நாழி, உடுப்பவை இரண்டே” என்பதை மீண்டும் படித்தால் பெண்களின் இந்த உள்ளாடையையும் நினைந்தே அப்படிச் சொன்னார் என்று கருதலாம்.

தமிழ் நாட்டுக் கோவில் சிற்பங்களும் சித்தன்னவாசல் ஓவியங்களும், வட நாட்டில் அஜந்தா ஓவியங்களும் மேலாடை இல்லாமலேயே பெண்களைக் காட்டுகின்றன.
ஆண்கள் பஞ்ச கச்சம் கட்டியதாக சிலர் வாதிடுவர். ஆனால் பழங்கால ஓவியங்களிலோ சிற்பங்களிலோ இதற்கு ஆதாரம் இல்லை. கிராமப்புறங்களில் நிலத்தை உழுவோர் கச்சம் போல் வேட்டி கட்டி உழுவதைக் காணலாம். ஆகவே அரசவை போன்ற இடங்களிலும் கோவில்களிலும் புலவர்களும் மந்திரிகளும் இப்படிப் பஞ்சகச்சம் அணிந்திருக்கக்கூடும். இன்றும் கோவில்களில் பிராமண அர்ச்சகர்கள் இப்படிக் கச்சம் அணிவதைப் பார்க்கிறோம்.
நற்றிணைப் பாடல் 21 (மருதன் இளநாகன்), வீரர்கள் இடுப்பில் கட்டிய கச்சையைக் குறிப்பிடுகிறது. அகம் 376ல் பரணர், ஆட்டநத்தியின் இடுப்பில் கட்டிய கறுப்பு நிறக் கச்சை பற்றிப் பாடுகிறார்.

சிலப்பதிகாரத்தில் உடைகள் பற்றிய குறிப்புகள் அதிகம். ஆனால் அந்தக் காவியம் காட்டும் காட்சிகள் சங்க காலத்துக்குப் பின் வந்தவை ஆகும்.
மரண தண்டனைக் கைதிகளுக்கு சிவப்பு நிற ஆடை அணிந்து தெருக்கள் வழியே கொண்டு சென்றதாக வடமொழி நூல்கள கூறுகின்றன.

Contact [email protected]
 
Status
Not open for further replies.
Back
Top