• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

சேரகுலவல்லி நாச்சியார் நம்பெருமாள் சேர்த்தி

இன்று(13/05/19) சித்திரை வளர்பிறை,நவமி-ஸ்ரீராமபிரான் அவதார திருநாள்.இன்று தான் ஸ்ரீரங்கம் பெரிய கோவிலில் ஸ்ரீராம நவமி கொண்டாடப் படுகிறது.(மற்ற திவ்ய தேசங்களிலும்கோவில்களிலும் பங்குனி மாதத்திலேயே கொண்டாடப் படுகிறது)

இன்றைய சேர்த்தி ஸேவையில் அரங்கனும் சேரகுலவல்லித் தாயாரும்......!!!

அரங்கனோடு அற்புதமாகச் சேர்ந்தவர்கள் பெரிய பிராட்டியார் ஸ்ரீரங்கநாயகித் தாயார்,உறையூர் கமலவல்லித் தாயார், சேரகுலவல்லி நாச்சியார்,பூமிப்பிராட்டி ஆண்டாள், துலுக்கநாச்சியார் மற்றும் திருப்பாணாழ்வார் ஆகியோர்.

குலசேகராழ்வார்-சேரகுலவல்லி நாச்சியார்

ஸ்ரீராமபிரான் ஒருவரையே சதா சிந்தனையில் நிறுத்தி அரசாட்சி செய்தவர் குலசேகர ஆழ்வார் .இவர் இராமபிரானி ன் ஜன்ம நட்சத்திரமான ‘புனர்வசு’ அன்று அவதரித்தவர். இவரது இராமபக்தி அளவற்றது. இராமாயணம் கேட்கும் போதெல்லாம் நெகிழ்ந்து விடுவார்.சில கட்டங்களில் மெய்ம்மறந்து,கொதித்தெழுந்து தன் சேனைகளுடன், இராவண சேனையுடன் யுத்தம் செய்யப் புறப்பட்டிருக்கின்றார். இத்தனைக்கும் இவருக்கு ‘திடவ்ரதன்’ என்று பெயர்.. மாமன்னன்..! சோழ, பாண்டிய அரசுகள் மீது படையெடுத்து அவர்களை ஓட ஓட விரட்டியிருக்கின்றார்.
‘இராம” என்னும் நாமம் இவரை மெய்மறக்கச் செய்தது. அனைத்தையும் மறந்து, அவர் ஒருவரை மட்டுமே சிந்தையில் நிறுத்துபவர்கள் நெகிழத்தான் செய்வார்கள். இவர்கள் அந்தந்த அனுபவங்களோடு சிந்தையில் கலந்தவர்கள். இவரது அளவற்ற ஈடுபாட்டினால் இவரது பாசுரங்கள் ‘பெருமாள் திருமொழி’ என்றே அழைக்கப்படுகின்றது.

இராமன் மீது இவ்வளவு அன்பு கொண்டவர்க்கு இராமன் ஆராதித்த அரங்கன் மீது எவ்வளவு ஆசையிருக்கும்! மற்ற ஆழ்வார்க்கு இல்லாத ‘பெருமாள்’ என்னும் பேரினைப் பெற்றவர் இந்த குலசேகரப் பெருமாள்! இவர் பாடிய முதல் பாசுரமே அரங்கன் மீது தான்!

”இருளரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தியணிபணம் ஆயிரங்களார்ந்த -
அரவரச பெருஞ்சோதி அனந்தனென்னும்
அணிவிளங்கும் உயர்வெள்ளையணையை மேவி -
திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர் பொன்னி
திரைக்கையால் அடிவருடப் பள்ளிகொள்ளும் -
கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண்டு என்
கண்ணினைகள் என்று கொலோகளிக்கும் நாளே?”

(மிகவும் தெளிந்து விளங்கும் நீரினையுடையகாவிரியானது, தனது அலைகள் என்ற கைகளால் இதமாகத் திருவடிகளைப் பிடித்து விடும்படி தழுவி ஓடும் இடமான திருவரங்கம் என்னும் பெரிய நகரத்தில், இருளானது சிதறி ஓடும்படி, ஓளி வீசும்,மாணிக்கக் கற்கள் பொருத்தியுள்ள நெற்றி யினையும், மிகவும் நேர்த்தியான ஆயிரம் படங்கள் கொண்டு நாகங்களுக்கு அரசன் என்னும் மிகுதியான கம்பீரத்தையுடைய ஆதிசேஷனாகிய அழகுள்ள வெண்மைநிற படுக்கையில் கண்வளர்கின்ற நீல ரத்னக்கல் போன்ற பெரியபெருமாளை, என்னுடைய கண்கள் குளிர்ந்து வணங்கி நான் மகிழ்வுறும் நாளானது எந்நாளோ?)
என்றவாறு அரங்கனை நினைத்து ஏங்குகிறார். அரங்கனை அடைவதற்கு இந்த ஏக்கம் மிக முக்யம். இந்த தாபம்/பாரிப்பு இருந்தால் போதும்–பெருமாள் அழைத்துக் கொள்வார்.

ஆழ்வாரின் திருமகள் சேரகுல வல்லி நம்பெருமாளையே ஸ்ரீராமபிரானாக வரித்து ஆழ்ந்த பக்தியில் லயித்திருந்தார்.(ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத் திலும்,நம்பெருமாளை ஸ்ரீராமராகவும், பள்ளி கொண்டிருக்கும் பெரிய பெருமாளை,ஸ்ரீகிருஷ்ணரா
கவும் வழிபடும் வழக்கம் உள்ளது)அரங்கனை அனுதினமும் தரிசித்த குலசேகராழ்வார் கண்கள் மட்டும் பேறு அடையவில்லை. யாரை எண்ணி எண்ணி, அவரும் அவரது மகளான சேரகுலவல்லியும் ஏங்கினார்களோ அவரையே மாப்பிள்ளையாக அடையும் பேறு பெற்றார். அரங்கன் மனமுவந்து ஏற்ற பக்தை இந்த சேரகுலவல்லி!

நம்பெருமாள்-சேரகுலவல்லித் தாயார் சேர்த்தி:

ஸ்ரீராமநவமியன்று இவரை மணந்தார் அரங்கன். இன்று கோயில் ஸ்ரீராமநவமியன்று இருவருக்கும் ஸ்ரீரங்கம் கோவில் அர்ச்சுன மண்டபத்தில் சேர்த்தி! அரையர்கள் பெருமாள் திருமொழி சேவிக்க, அடியார்கள் சூழ்ந்திருக்க, இருவருக்கும் திருமஞ்சனம் நடைபெற்று ஏக ஆசனத்தில் பக்தர்களுக்கு அனுக்ரஹிப்பார்கள்!
சேரகுலவல்லி நாச்சியார் சந்நிதி அர்ச்சுன மண்டபத்தின் வலது(மேற்குப்) புறத்தில் உள்ளது.

நம்பெருமாள் வருடத்தில் மூன்று சேர்த்தி கண்டருள் கிறார். பங்குனி ஆயில்ய நட்சித்திரத்தில் உறையூர் கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி.பங்குனி உத்திரத்தில் பெரியபிராட்டியாருடன் சேர்த்தி. சித்திரை ஸ்ரீராமநவமியில் சேரகுலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி.இதில் தாயார் சந்நிதி, சேர்த்தி மண்டபத்தில் நடக்கும் பெரிய பிராட்டியார் சேர்த்தி யன்று 18 முறை திருமஞ்சனம். பெரும்திரளான பக்தர் கூட்டம்
அலைமோதும்.நீண்ட வரிசை யில் நின்று சென்று ஒரு நிமிடம் சேவிப்பதற்குள் தள்ளி விடுவார்கள்.உறையூர் சேர்த்தியில் திருமஞ்சனம் இல்லை.ஓரளவு கூட்டம் இருக்கும். இன்றைய சேர்த்தியில் திருமஞ்சனம் உண்டு.அதிகக் கூட்டம் இருக்காது.சுமார் 200 பேர் இருப்பார்கள்.மண்டபத்தில் பெருமாள் தாயார் பக்கத்தில் அமர்ந்துதிருமஞ்சனம்,அலங்காரம்,அரையர் சேவை (நன்றாகக் கேட்கலாம்) ஆகியவற்றை நான்கு மணி நேரத்துக்கும் மேலாக நன்றாக அனுபவிக்கலாம்.தீர்த்தம்,சடகோபம்,பிரசாதங்களும் அருளப்படும்.

பெரியபிராட்டியார் சற்றே வயதில் மூத்த உருவத்தில் எழுந்தருளியிருப்பார்.அதற்கேற்ப நம்பெருமாளும் சற்றே மூத்தவர் போல் சேர்த்தியில் சேவை சாதிப்பார்.கமலவல்லி நாச்சியார் இளையவயதில் இருப்பார்.அதற்கேற்ப நம்பெருமாளும் இளைஞராகச்
சேவை சாதிப்பார்.சேரகுல
வல்லிநாச்சியார் மிக இளைய குமரி வயதில்.அதற்கேற்ப நம்பெருமாளும் இளைய வாலிபராக மிடுக்காக இருப்பார்.மூன்று சேர்த்திக ளையும் சேவித்தால்,இந்த அழகை அனுபவிக்கலாம்!!!

 

Latest ads

Back
Top